Thursday, April 23, 2009

வாசிப்பனுபவம் (இடைநிலைக்கல்வி)

என்னுடைய ஆரம்பக்கல்வி அனுபவங்களைப் பற்றி முன்பே சொல்லி விட்டேன். அதிலிருந்தே என்னைப் பற்றி புரிந்திருக்கும். மன திடம் உள்ளவர்கள் மட்டுமே தொடரவும்.

சிந்துபாத் படிக்க ஆரம்பித்தவுடனே, படக்கதைகளின் மீதான ஆர்வம் தொடக்கி விட்டது. எனவே அடுத்த கட்டமாக 'ராணி காமிக்ஸ்' படிக்க ஆரம்பித்தேன். அப்போது அது இரண்டு ரூபாய். மாதமிரு முறை. அதுவும் யாராவது நாமக்கல் போனால்தான் கிடைக்கும். எனவே, எப்படியாவது நான்கு ரூபாயை தேற்றி, யாரையாவது வாங்கி வர சொல்வேன். அதை அப்படியே ரொடேஷனில் விட்டு 'அம்புலி மாமா' வாங்கி படிப்போம். ராணி காமிக்ஸில் ஒரு இதழ் விட்டு ஒரு இதழ் 'மாயாவியின்' கதை வரும். அதுதான் விரும்பிப் படிப்போம்.

லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் படித்தாலும், எனக்கு அவ்வளவாக பிடிக்காது. ஏனோ தெரியவில்லை. [ஆனாலும் டயானா சூப்பருங்க.. எனக்கு ரொம்ப நாளா அப்ப இருந்த சந்தேகம் என்னன்னா, மாயாவி டயானாவும், சார்லஸ் டயானாவும் ஒண்ணா வேறயா? ஒரு வேளை, சார்லஸ்தான் மாயாவியா?.. பாத்தா அப்படி தெரியலியே?. காமிக்ஸ்லயும் முகத்த காமிக்கல.. ஒரு வேளை அப்படி இருக்குமோ]

என் அம்மாவிற்கு காமிக்ஸ் படிப்பது பிடிக்காது. அவர்கள் நாமக்கல் போகும்போது வாங்கி வரச் சொன்னால் மதிக்கவே மாட்டார்கள். ஒரு கட்டத்தில் தொந்தரவு தாங்க முடியாமல், 'கோகுலம்' வாங்கி தந்தார்கள். அதன் பின் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள், மாதம் தவறாமல் கோகுலத்தின் வாசகனாக இருந்தேன். கோகுலம் கோடை இதழில் வரும் லேபில்கள்தான் என் பாட புத்தகங்களை அலங்கரிக்கும். நடுநடுவே 'அம்புலிமாமா' வேறு. விக்கிரமாதித்யனும் பேசிக்கொண்டேதான் இருக்கிறான். வேதாளமும் முருங்கை மரத்திற்கு தாவிக்கொண்டுதான் உள்ளது. அதிலுள்ள ஓவியங்களும் அருமையாக இருக்கும்.

இவையெல்லாம் 'சைடில்' போய்க்கொண்டிருந்தபோது, ஊரில் ஒரு பகுதி நேர நூலகம் ஆரம்பித்தார்கள். மாலை ஐந்து முதல் ஏழு வரை. என் அம்மாதான் நூலகர். இங்கே திரைக்கதையில் சிறு திருப்பம். நாந்தான் அம்மா. என் அம்மா ஒ. பன்னீர் செல்வம். அங்கே நூலகத்தில், 'மலரும் மாலையும், குழந்தைகளுக்கு நீதிக்கதைகள், 101 நீதிக்கதைகள், மரியாதை ராமன், முல்லா, தெனாலி ராமன் மற்றும் பீர்பால் கதைகள், தலைவர்களின் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்' என்று படித்து தீர்த்தேன். இது போன்ற புத்தகங்கள் அலமாரியில் எங்கு இருக்குமென்று எனக்கு மட்டுமே தெரியும்.

நூலகம் இரண்டு வருடங்கள் மட்டுமே (நான் ஏழாவது முடிக்கும் வரை) இருந்தது. அதன் பின், முழு நேர நூலகம் கட்டப் போவதாக சொல்லி, இதை மூடி விட்டார்கள். எனக்குதான் ரொம்ப கஷ்டமாக போய் விட்டது. இந்த காலகட்டங்களில் புத்தகமின்றி ஒரு வேளை கூட சோறு இறங்காது. ஏனென்றால் நிறைய புத்தகங்கள். எல்லாவற்றையும் படிக்க வேண்டுமென்ற வெறி. சாப்பாடு கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கும் மேல் சாப்பிடுவேன். அதுவும் புத்தகம் படித்துக்கொண்டுதான். வீட்டில் என் மீது வன்முறை கட்டவிழ்த்து விடும்போதுதான், புத்தகத்தை சற்றே நகர்த்தி விட்டு சாப்பிட்டு முடிப்பேன்.

நூலகத்தை மூடியபின், புத்தகங்களின் வரவு குறைந்து விட்டதால், கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்து விட்டது. எதையாவது படித்துக்கொண்டே இருக்க வேண்டும். எனவே, அடுத்த கட்ட நடவடிக்கையாக, ஊரில் யார யார் எது போன்ற புத்தகங்கள் வாங்குகிறார்கள்/படிக்கிறார்கள் என்ற தகவலை திரட்டினோம். அப்போதுதான் ஊரில் உலாவும் சில முக்கிய புத்தகங்கள் பற்றி தகவல் தெரிந்தது. அவை!?!?

ஒன்னுமில்லீங்க.. நான் சொன்னது க்ரைம் நாவல், சூப்பர் நாவல், பாக்கெட் நாவல் போன்றவைதான். எட்டாவதில்தான் அவற்றின் அறிமுகமே கிடைத்தது. அப்போது என் அண்ணன் (பெரியம்மா பையன்) பதினொன்றாவது நாமக்கல்லில் சேர்ந்திருந்தான். அங்கே பழைய புத்தக கடைகளிலிருந்து பாதி விலைக்கு நாவல்களை வாங்கி வருவான். ஒரு கட்டத்தில் வாடகைக்கு வாங்கியே படிக்க ஆரம்பித்து விட்டோம். [அந்த கடையில் பாதி விலைக்கு வாங்கி, படித்த பின், மீண்டும் மூன்றில் ஒரு பாதி விலைக்கு அங்கேயே விற்போம். பின், டீல் பேசி, வாடகை ஆக்கி விட்டோம்].

ராஜேஷ் குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேந்திர குமார் (ஙே!), இந்திரா சௌந்திரராஜன், பால குமாரன் என்று பெரும்படையே எங்களை ஆக்கிரமித்தது. கிட்டத்தட்ட இதே வரிசைதான் எங்களின் விருப்பமும். இப்படியாக எனது புத்தக அனுபவம், இடைநிலைக்கல்வி (எட்டாவது) வரை தொடந்தது.

"நீ என்ன கருமத்த படிச்சா எங்களுக்கென்ன, முடிஞ்சா அதப் பத்தி நீ என்ன நெனச்ச/நெனக்கிறேன்னு சொல்லுடா" அப்டின்னு நீங்க நெனக்கிறது தெரியுது.. வரும்.. அதுவும் வரும்..

Sunday, April 19, 2009

வாசிப்பனுபவம் (ஆரம்பக்கல்வி)

சுவாசிப்பு போல வாசிப்பு என்பதும் எனது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத செயல். எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் அதேதான். இந்த அனுபவங்களை ஒரே பதிவில் இட முடியாது என்பதாலும், பின்னால் பல பதிவுகள் இட வேண்டும் என்பதாலும் சில பல பாகங்களாக இடுகிறேன்.

அந்த காலத்தில்(?), என்னை LKG, UKG படிக்க வைக்க வேண்டுமென்று என் வீட்டில் ஆசைப்பட்டனர். பிற்காலத்தில் எப்படியும் PG பண்ண மாட்டேன் என்று அப்போதே தெரியுமோ என்னவோ. ஆனால் எங்கள் ஊரில் அப்போது அந்தளவு வசதி இல்லாததால், அங்கன்வாடியில்தான் (எங்களூரில் பால்வாடி என்று பெயர்) சேர்ந்தேன். வீட்டிலிருந்து பத்தடி தள்ளித்தான் அது. அங்கே அணில், ஆடு என்று சித்திரம் மூலம் படிப்பு தொடங்கியது. வீட்டிலும் அ, ஆ, என படிப்பு தொடங்கியது.

அங்கன்வாடி முடிந்ததும், அடுத்து பத்தடி தள்ளியிருந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆரம்பக் கல்வி தொடங்கியது. இரண்டாவது முடியும்போது ஓரளவு எழுத்துக்கள் தெரிய ஆரம்பித்தவுடனே, எனது திறமையை யாருக்காவது காண்பிக்க வேண்டுமென்று தோன்றியது. அப்போது (இப்போதும்) எங்கள் பெட்டிக் கடைக்கு தினத்தந்திதான் வாங்குவோம். அதில் நம் கண்ணை உடனே கவர்வது 'கன்னித் தீவுதான்'. தினமும் அதை படித்து படித்து என் அம்மாவிடம் சொல்வதுதான் என் பணி. யோசித்துப் பார்க்கும்போது, பொறுமை என்பதை அம்மாவிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என தோன்றுகிறது.

கன்னித்தீவு அதன் பின் நான் ஊரில் இருந்த தொடர்ந்து இருந்தவரை (கல்லூரியில் சேரும் நாள் வரை.. கிட்டத்தட்ட பதினொரு வருடங்கள்) தவற விட்டதேயில்லை. எங்கேயாவது ஊருக்கு போனால் கூட, வந்து ஊரில் இல்லாத நாட்களில் வந்த செய்தித்தாள்களை எடுத்து படிப்பேன். நான் செல்லும் ஊரில் தினத்தந்தி வந்தாலும், எங்கள் கடையில் படித்தால்தான் எனக்கு சந்தோஷம். நானே அதன் பின் கதையை தொடர முடியும் என்று நம்பிக்கை வந்து விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

முதலில் கப்பல் பயணம். கப்பல் கவிழ வேண்டும். கடலுக்குள் ஒரு ஆபத்து.. அங்கே ஒரு இளவரசியை காப்பாற்ற வேண்டும். அவளை தாய் நாட்டில் சேர்த்து விட்டு, லைலா சிறியவளான கதை சொல்ல வேண்டும். மீண்டும் ஒரு கப்பலை வாங்கி, பயணத்தை தொடர வேண்டும். சில சமயம் இளவரசன் வர வேண்டும். முக்கியமான விஷயம், அடிக்கடி 'அப்போது' என்று தொடரும் போட வேண்டும்.

இது தவிர தினத்தந்தியில் கவர்ந்தது, 'சிரிப்பு' மற்றும் 'ஆண்டியார் பாடுகிறார்'. ரொம்ப நாளாக, எனக்கு புரியாத விஷயமாக இருந்தது, 'இந்த படத்திற்கு வசனம் தேவையில்லை.' இது என்னடா சிரிப்பு, அடிக்கடி வேறு வேறு படங்களுடன் வருகிறதே? புரிய வெகு நாளாயிற்று.

'இங்கு வெளியான இரண்டு சிரிப்பிற்கும் ரூ. 15 பரிசு. இங்கே படைப்பு இடம் பெற, 15 பைசா அஞ்சலட்டையில் இந்தியன் இங்கினால் வரைந்து அனுப்பவும்.' நானும் இங்க்கை சட்டையில் கொட்டி, வீட்டில் உதை வாங்கியதுதான் மிச்சம்.

ஆண்டியார் பாடுகிறார்.. 'ஒளியும் ஒலியும்' நிகழ்ச்சியில் வந்த பாடலின் வரிகள் வந்தால், உரு தட்டிக்கொண்டு போய், திறமையைக் காண்பிப்பேன்.

அப்போதெல்லாம், தொலைக்காட்சியில் வரும் (அட, நம்ம தூர்தர்ஷன் தாங்க) வாராந்திர தொடர்களின் கதையும், ஞாயிறு போடும் திரைப்படங்களின் கதையும் அன்றைய இதழில் வரும். அதையும், படித்து விட்டு போய், "டேய், இன்னைக்கு என்ன ஆகும் தெரியுமா?" என்று சொல்வேன். அப்போது எங்கள் வீட்டில் தொலைகாட்சி இல்லை. எனவே, ஏதாவது நண்பன் வீட்டில், அவர்களுடன் சேர்ந்துதான் பார்ப்பேன். அப்போது "பாத்தியா.. நாந்தான் அப்பவே சொன்னேன்ல" என்பேன். [இதைப் பற்றி பின்னால் ஒரு தனி பதிவே இடுகிறேன்.]

இவை தவிர, நான் மற்றபடி படிப்பது, கொலை, கொள்ளை பற்றிய செய்திகள்தான். (நாங்கெல்லாம் அப்பவே ஊர்ல பெரிய ரவுடிங்க..). அவற்றை என் சொந்த சரக்கோடு, பள்ளியில் கதை கட்டுவதுதான் அப்போதைய குலத் தொழிலே. [அப்போது ஊரிலேயே, எங்கள் கடைக்கு மட்டும்தான் செய்தித்தாள் வரும். எனவே, என் நண்பர்களுக்கு நான் சொல்வதுதான். மற்ற யாரும் அங்கே வந்து படிக்க மாட்டார்கள். அவர்கள் வீட்டில் யாரும் பார்த்தால் உதைதான். "ஒழுங்கா மொதல்ல பாடத்த படி.. அப்புறமா இத பாக்கலாம்.."].

இப்படியாக, என் ஆரம்பக் கல்வியின் பெரும்பகுதி சிரிப்பு, சிந்துபாத், ஆண்டியார், கொலை, கொள்ளை என்று தினத்தந்தியுடன் வளர்ந்தது. உயர்நிலைக் கல்வி அடுத்த பதிவில்....