Saturday, August 29, 2015

எங்கடா பொணத்த காணோம்: Sleuth (1972), Diabolique (1955)

சில படங்களைப் பார்க்கும்போது, "எப்படிடா இப்படியெல்லாம் யோசிக்கிறாங்க, ஒரு வேளை இவனுங்க இந்த மாதிரி எதுவும் செஞ்சிருப்பாங்களோ" என்று தோணும். பல வருடங்களுக்கு முன் இப்படி எல்லாம் எடுத்திருப்பதுதான், எனக்கு ஆச்சரியமாக உள்ளது. நீங்கள் நிறைய உலகப்படங்கள் பார்க்கும் வழக்கம் உடையவராக இருந்தால், ஓரளவு இரு படங்களின் முடிவையும் கணிக்க முடியும். ஓரளவுதான், அதுவும் முதல் படத்திற்குதான்

Diabolique (1955):

ஒரு உறைவிடப் பள்ளியின் தலைமை முரட்டு தலைமை ஆசிரியர், அது அவரது மாமனாரின் பள்ளி, மனைவியும் ஆசிரியை, உடல் நலம் சரி இல்லாதவர். இன்னும் 2 ஆசிரியர்களும், இன்னொரு ஆசிரியையும் உள்ளனர். அந்த ஆசிரியைதான் துணைவி. இருவரையும் பாடாய்ப் படுத்துவதால் மனைவி, துணைவி இருவரும் சேர்ந்து அந்த தலைமை ஆசிரியரைக் கொலை செய்ய திட்டமிடுகின்றனர். ஒரு விடுமுறை நாளில், பக்காவாக திட்டமிட்டு, கொலையும் செய்து, பள்ளியில் உள்ள நீச்சல் குளத்தில் பிணத்தைத் தள்ளி விடுகின்றனர். குடி போதையில் தடுமாறி விழுந்தது போல இருக்கும் என நம்புகின்றனர்.

பிணம் வெளியே வருமென பார்த்தால் வரவில்லை. சரி என இன்னொரு திட்டம் போட்டு, நீச்சல் குளத்தில் உள்ள நீரை வெளியேற்றிப் பார்த்தால், பிணத்தைக் காணோம். இரண்டு பேரும் பீதியிலேயே அலைய, பள்ளியில் தலைமை ஆசிரியரைப் பார்த்ததாக ஒரு மாணவர் வேறு சொல்ல, நமக்கும் சேர்த்து தலை சுற்றுகிறது. பயத்தில் துணைவியோ ஊரை விட்டே ஓடுகிறார். இந்த நிலையில் எங்கே அனாதை பிணம் கிடைத்தாலும், மனைவி அங்கே சென்று பார்க்க, ஒரு ஓய்வு பெற்ற காவல் அதிகாரி, "நான் உன் புருஷனைக் கண்டு புடிக்கிறேன்" என்று உள்ளே வருகிறார். அவராவது பிணத்தைக் கண்டு பிடித்தாரா என்பதுதான் கதை.

Sleuth (1955):

ஒரு வயதான துப்பறியும் எழுத்தாளர், அவரது இளம் மனைவி. இல்லறமோ சரியில்லை. அவருக்கு ஒரு ரகசிய காதலி. மனைவிக்கு ஒரு காதலன். அந்த காதலன், அந்த வித்தியாசமான எழுத்தாளரை சந்திக்க, வினோதமான அவரது வீட்டிற்கு வருகிறான். அவர் விவாக ரத்து கொடுத்தால், அவரது மனைவியை மணந்து கொள்ளலாம் என பேச வருகிறான். அவரோ, "நான் விவாக ரத்து கொடுத்தால், நிறைய பணம் ஜீவனாம்சமாக கொடுக்க வேண்டும். அப்புறம் நான் என்ன செய்ய" என்கிறார். அது மட்டுமில்லாமல், அவளொரு ஆடம்பரப் பிரியை, உன்னால் அந்த யானையைக் கட்டி தீனி போட முடியாது என்கிறார். பின் அவரே ஒரு வழி சொல்லுகிறார்.

அவரது வீட்டில் உள்ள நகைகளை அவனைக் கொள்ளையடிக்க சொல்கிறார். தடயமில்லாமல் செய்யவும் அவரே வழி சொல்கிறார். "நகை உனக்கு, இன்ஸ்யுரன்ஸ் பணம் எனக்கு" என்கிறார். எல்லாம் முடியும் நேரத்தில், அவன் நெத்தியில் துப்பாக்கி வைத்து "ஏண்டா, நீ பாட்டுக்கு வருவ, என் பொண்டாட்டிய கூட்டிட்டு போவ, நான் வேடிக்கை பாக்கணுமா" என்கிறார். இதுவரை நான் நினைத்தபடிதான் படம் போனது.

அதன் பிறகு, காணாமல் போன அந்த காதலனைப் பற்றி விசாரிக்கிறேன் என ஒரு காவல்துறை அதிகாரி வருகிறார். கிடுக்குப் பிடி போட்டு கேட்கும் கேள்வியில், எழுத்தாளர் மாட்டுகிறார். "சரி, நீ அவன கொன்னுட்ட, பொணம் எங்க?" என்று கேட்கிறார். அதன் பின் என்ன என்பதும், மாறி மாறி வரும் திருப்பங்களும் படம் பார்த்தால் தெரியும். படம் முழுக்க ஒரே வீட்டுக்குள்தான். படம் முழுதும் ஒரே ஆளோ, அல்லது இரண்டு பேர் பேசுவதுதான் படமே.

இந்த இரண்டு படங்களிலும், எல்லோரும் பேசிக்கொண்டேதான் இருப்பார்கள். ஆனால், மிக சாதாரணமாக கதையில் திருப்பங்கள் நிகழும். இந்த இரண்டு படங்களையும் மறு ஆக்கம் கூட செய்திருக்கிறார்கள். ஆனால், மூலப் படம் பார்ப்பதே சிறந்தது என்பது என் எண்ணம். பொறுமை மிக முக்கியம் அமைச்சரே. அடுத்த பதிவில், இதே போல ஒரே அறையில் நடக்கும் சம்பவங்கள் பற்றிய (நான் பார்த்த) படங்கள் பற்றிப் பார்ப்போம்.