Monday, November 23, 2015

கமல் ரசிகனுக்குப் பிடித்த ரஜினி படங்கள்

'தலைப்பே உங்களுக்கு எல்லாம் விளக்கி விடும் என்பதால், நேரே விஷயத்திற்கு போய் விடுவோம். இன்னும் யாருக்காவது சந்தேகம் இருந்தால் கமல் பற்றிய பதிவுகளையும், ரஜினி படங்கள் (எந்திரன், லிங்கா) பற்றிய விமர்சனங்களையும் வேண்டுமானால் படித்து விடுங்கள் (விளம்பரம்!).

அது ஏனென்று தெரியவில்லை, சிறு வயதில் இருந்தே எனக்கு கமல்தான் பிடிக்கும். ஒரு வேளை எல்லோரும் ரஜினி பிடிக்கும் என்று சொன்னதால் எனக்கு கமல் பிடிக்க ஆரம்பித்ததா, இல்லை, ரஜினி போல என்னால் தலை முடி கோத முடியவில்லையே என்ற கோபத்தில் கமல் ரசிகன் ஆனேனா என எனக்கே தெரியவில்லை.

கல்லூரி வரும்வரை, எனக்கு ரஜினி பிடிக்காது என்றெல்லாம் கிடையாது. ரஜினியா கமலா என்றால், கமல் அவ்வளவுதான். கல்லூரிக் காலங்களில்தான் நண்பர்களிடம் ஆரம்பித்த விவாதங்கள், சரி அத விடுங்க. குறிப்பாக ஒரு முக்கிய விஷயம். இது எனக்குப் பிடித்த படங்களில் பட்டியல். அந்தப் படம் எங்கே, இது எங்கே என்றெல்லாம் கேட்க வேண்டாம். அது மட்டும் இல்லாமல் இந்தப் படங்கள் அனைத்தும், ரஜினிக்காக மட்டும் எனக்கு பிடித்தவை. உதாரணமாக, எனக்கு தளபதி மிகவும் பிடிக்கும். இதில் தளபதி இல்லை, ஏனென்றால் ரஜினியை விட இளையராஜாவிற்காகவே அந்த படம் எனக்கு பிடிக்கும்.

ராஜாதி ராஜா:



1970களின் இறுதியிலும், 80களின் ஆரம்பத்திலும் பிறந்த யாராக இருந்தாலும் சரி, சிறு வயதில் இந்தப் படத்தை ரசிக்காமல் இருந்திருக்கவே முடியாது. அது யாருடைய ரசிகராக இருந்தாலும் சரி. (போக்கிரி ராஜாவின் தழுவலாக இருந்தாலும்). அதிலும் குறிப்பாக "ஒரு மொட்ட, ஒரு மீச, நாலு ஸ்கூல் பசங்க, அதுக்கு ஒரு தலைவன்" இந்த ஒரு வசனத்தைக் கேட்டாலே எனக்கு பழைய நினைவுகள் வந்து விடும். என்னுடைய சிறு வயது நினைவுகளை கொண்டு வருவாதேலேயே எனக்கு இந்தப் படம் மிகவும் பிடிக்கும்.

இதே போல மனிதன், ராஜா சின்ன ரோஜா, வேலைக்காரன், குரு சிஷ்யன் போன்ற படங்கள். ம்ம், அது ஒரு அழகிய நிலாக்காலம். அந்த நிலாக்காலம் பற்றி தனியாக சொல்கிறேன். கமல் படங்களில் எனக்கு அபூர்வ சகோதரர்கள் மட்டுமே அப்படி நினைவில் உள்ளது என்பதுதான் கசப்பான உண்மை.

"என்னப்பா கொழப்பற, இந்த லாஜிக்படி பாத்தா நீ ரஜினி ரசிகனாத்தான இருக்கணும்" என்கிறீர்களா? பத்து வருடங்களுக்கு முன்புதான் நாங்கள் தொலைகாட்சி வாங்கினோம். அதற்கு முன் பக்கத்துக்கு வீட்டில் போய்தான் பார்க்க வேண்டும். 90களின் ஆரம்பத்தில் வெள்ளி இரவு 9 மணிக்கு தமிழ்ப்படம் போடுவார்கள். ஏதாவது ஒரு நாள் திடீரென ஹிந்தி படம் போட்டு விடுவார்கள்

என் அம்மா எனக்கு நினைவு தெரிந்து டிவியில் எதுவுமே பார்க்க மாட்டார்கள். இப்போது கதை வேறு. அப்படிப்பட்ட அவரே, 'மூன்றாம் பிறை' படம் டிவியில் போட்டபோது இரவு வந்து பார்த்தார்கள். அதிலும் அந்த வாரம் அதன் ஹிந்தி பதிப்பு (சத்மா) தான் திரையிடப்பட்டது. ஆனாலும், அது முழுதும் பார்த்தார்கள். ஆனாலும் வேறு எந்த கமல் படமும் அவர் பார்த்ததில்லை. ஆனால், எனக்கென்னவோ அப்போதுதான் கமல் பிடித்திருக்கும் என நினைக்கிறேன்.

தம்பிக்கு எந்த ஊரு:



பொதுவாக ரஜினியின் காமெடி படங்களில் எல்லோருக்கும் முதலில் சொல்லும் படம் தில்லு முல்லு. என்றாலும், எனக்கு அதையும் தாண்டி பிடித்த படம் இதுதான். படத்தின் ஆரம்பக் காட்சியில் ஒரு நட்சத்திர ஓட்டலில் நொண்டி அடித்துக்கொண்டே போவார். அப்போது ஆரம்பிக்கும் அந்தக் குறும்பு படம் முழுதுமே பரவி இருக்கும். கதிர் அறுப்பது, மாடு கழுவுவது, பால் கறப்பது, கூழ் சாப்பிடுவது என தூள் பறக்கும். ஆரம்பக்காட்சிகளில் பணத்தை தண்ணீராக செலவு செய்வார். பிற்பாடு, செந்தாமரை ரஜினிக்கு அவர் செய்த வேலைக்கு சம்பளம் கொடுப்பார். ரஜினி அந்தப் பணத்தை நெகிழ்ச்சியோடு பார்ப்பார். "என்னப்பா, இதுக்கு முன்னாடி பணத்தையே பாத்ததில்லையா" என்று கேட்டதற்கு ரஜினி "இந்த மாதிரி பணத்தை நான் இப்பத்தான் பாக்கறேன்" என்பார். நான் முதன் முதலில் சம்பளம் வாங்கியபோது எனக்கு இதுதான் நினைவுக்கு வந்தது.

புதுக்கவிதை:



பொதுவாக ரஜினி மிக இயல்பாக நடித்தது என ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல் போன்ற படங்களைத்தான் சொல்லுவார்கள். ஆனால், எனக்கு இந்தப் படம்தான் பிடிக்கும். அதே போல விதவை மறுமணம் பற்றிய படங்களில் நாயகி கன்னி கழியாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால் இதில் அப்படி எல்லாம் இல்லை (கணவர் ஒரு வாரம் கழித்து இறந்ததாக நாயகி சொல்வார்). அதே போல ரஜினி, சரிதா ஜோடியின் எதிர்பாராத திருப்பம் நன்றாக இருக்கும். ரஜினி கொஞ்சம் கூட ஒப்பனை போடாமல் நடித்த படம் என நினைக்கிறேன். படத்திலேயே அவரை கருப்பன் என சொல்வார்கள்.

நெற்றிக்கண்:



ரஜினியே நாயகனாகவும், வில்லனாகவும் நடித்த படங்கள் இரண்டுதான். அதில் எந்திரன் தான் எல்லோரும் முதலில் சொல்வார்கள். ஆனால், எனக்கு நெற்றிக்கண் தான் முதலில். எனக்கு தெரிந்து ரஜினி கல்லூரி மாணவனாக நடித்த ஒரே படம் இதுதான் என நினைக்கிறேன். மகன் ரஜினியிடம் ஒவ்வொரு முறையும் அவர் காட்டும் இயலாமை நடிப்பு, நக்கலாக 'ம்ஹும்' என்று ஒவ்வொரு முறையும் சொல்லி கையில் 'நன்றி' என்று எழுதியதைக் காட்டும் இடமும் அட்டகாசம். எந்திரன் எனக்கு பிடிக்க காரணம் ரஹ்மான், சிட்டி ரஜினி. இதில் ராஜாவும் அட்டகாசமான இசையைக் கொடுத்திருந்தாலும், அது கூடுதல் பலமே. ரஜினிக்காகவே கண்டிப்பாக படம் எனக்குப் பிடித்தது.

கழுகு:



கமல்தான் நடக்கப் போவதை முன் கூட்டியே படங்களில் காண்பிப்பார் என்பார்கள். ஆனால், ரஜினி அதற்கு முன்னரே போலி சாமியார்கள் பற்றி இந்தப் படத்தில் சொல்லி இருப்பார். ஏழாம் அறிவு படத்தில் வரும் 'நோக்கு வர்மம்' எல்லாம் முன்னரே இந்தப் படத்தில் வந்து விட்டது. அதே போல ஒரு சொகுசு பேருந்து என்றால் என்ன என்பது இந்தப் படத்தின் மூலம்தான் எனக்கு தெரியும். ஒரு அருமையான மர்ம திரைப்படம். ஆரம்பக் காட்சிகள் சற்றே இழுவையாக இருந்தாலும் போக போக அட்டகாசமாக இருக்கும்.

இவை தவிர இன்னும் நிறைய ரஜினி படங்கள் எனக்கு பிடித்தாலும், இவையே எனது பட்டியலில் முதலில் இருப்பவை.

Saturday, November 14, 2015

பதிவு எண் 96/8

அனைவருக்கும் வணக்கம். இன்றோடு பதிவு எழுத ஆரம்பித்து 8 வருடம் ஆகி விட்டது. அதைப்பற்றி ஒரு சிறிய பதிவு (என்னாது, மறுபடியுமா?). ஏற்கனவே உள்ள ஐம்பதாவது செல்பீ புகழ் பதிவு இங்கே.

பொதுவாக 50ஆவது, 75ஆவது, 100ஆவது பதிவு, அட 110 விதியின் கீழ் 110ஆவது பதிவு என்றால் கூட பரவாயில்லை. அது ஏன் 96ஆவது பதிவு சிறப்பு என்கிறீர்களா? சும்மாதான். இதுவரை மொத்தம் எழுதிய பதிவுகள் 96, இன்றோடு 8 வருடங்கள் முடிந்து விட்டன. ஒரு வருடத்திற்கு சராசரியாக 12 பதிவுகள். மாதம் சராசரியாக ஒரு பதிவு. கஷ்டப்பட்டு (கஷ்டப்படுத்தி?) இந்த சராசரியைக் கொண்டு வந்துள்ளேன்.

அதிக பதிவுகள் எழுதப்பட்ட வருடம் 2015. இதுவரை 17 பதிவுகள். இந்த வருடத்திற்குள் மொத்தம் 100 பதிவுகள் எழுதி விட ஆ! (ச்)சை உள்ளதால், கண்டிப்பாக எண்ணிக்கை கூடும். 50 பதிவுகள் எழுத 5 வருடங்கள், ஆனால் அடுத்த 50 பதிவுகளை 3 ஆண்டுகளில் எழுதியாகி விட்டது. என்னடா கணக்கு சரியா வரலியே என்கிறீர்களா? நம்பிக்கைதான் வாழ்க்கை.

மிக குறைந்த பதிவுகள் எழுதி (மக்கள் சந்தோஷமாக) இருந்த வருடம் 2007. இரண்டே பதிவுகள். அப்போதான் ஆரம்பித்தேன், அதனால்தான். அடுத்து 2010. ஆறு பதிவுகள்.

மிக அதிக பார்வையாளர்களை இழுத்த பதிவு உத்தம வில்லன்: லிங்குவிற்கு சங்கு? 3250+ வருகையாளர்கள், அடுத்து அஞ்சான் - நோஞ்சான், அதற்கு 2700+ வருகையாளர்கள். மிக மொக்கையான பதிவு சும்மா, வாழ்த்துக்கள் என்ற பதிவுகள்தான். ஒற்றை எண்ணிக்கைதான்.

பின்னூட்டங்கள் சராசரியாக பதிவிற்கு 3ல் இருந்து 4 என மாறி உள்ளது. இதுவரை 370 பின்னூட்டங்கள் வந்துள்ளன. (அதில் பாதிக்கு மேல் நானே போட்டது என நினைக்கிறேன்)

ஒரு அதிசயம் என்னவென்றால் அதிக பின்னூட்டமிடப்பட்ட பதிவு மட்டும் இன்னும் மாறாமலே உள்ளது. ராஜா ரசிகனும், ரஹ்மானும்!!! பதிவு 18 பின்னூட்டங்களுடன் உள்ளது. அதே நேரம் உத்தம வில்லன்: லிங்குவிற்கு சங்கு? மற்றும் சென்னையின் வாகன ஓட்டிகள் இரு பதிவுகளும் அதே 18 பின்னூட்டங்களுடன் உள்ளன. பின்னூட்டங்களே இல்லாத பதிவுகள் நிறைய உள்ளன. அதில் இந்தப் பதிவும் சேருமா?