Tuesday, October 24, 2017

விஸ்வநாதன் வேலை வேண்டும்!

கிட்டத்தட்ட 4 மாதங்களாக ஒரு பதிவும் போடவில்லை. ஏன் என்று பார்ப்போம். அலுவல சுமை. எங்கேயாவது அறை எடுத்து அழ வேண்டும். நம்முடைய இணைய அறையே போதுமே. முழுக்க முழுக்க சோக புலம்பல்களே.

12 வருடங்களுக்கு மேல் தானியங்கி பொறியியல் துறையில் அனுபவம். 4 நிறுவனங்கள் மாறி விட்டேன். இந்த நிறுவனத்தில் கடந்த ஒரு வருடமாக வேலை செய்து வருகிறேன். முதல் நிறுவனத்தில் இருந்து மாறியது சம்பளம் அதிகம் என்பதற்காக. 12 வருடங்களுக்கு முன் வேலை சற்றே கஷ்டப்பட்டு கிடைத்தபோது, "நம்மளையும் நம்பி வேலை கொடுத்திருக்காங்களே, இவர்களுக்காக காலம்பூராவும், இல்ல அதிகம், 5 வருஷமாவது வேலை பாக்கணும்" என்று எண்ணினேன்.

ஆனால், இரண்டு வருடங்கள் கழித்து, அதே தகுதி உள்ள ஆள், வெளியில் இருந்து வரும்போது நம்மை விட மிக அதிக சம்பளம் வாங்கி உள்ளே வந்ததால், எனக்கும் சூது தெரியும் என்று வெளியேறியது மிகப் பெரிய தவறு. நான் வேலை செய்தது ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி (அட R&Dங்க), அதிலும் குறிப்பாக மதிப்பீட்டுப் பொறியியல் (Value Engineering), அதாவது ஒரு பொருளின் மதிப்பை (Value) அதிகரிப்பது அல்லது மதிப்பைக் குறைக்காமல் அதன் திறனையும் விலையையும் குறைப்பது (Value=Function/Cost). 

கிட்டத்தட்ட ராஜா போன்ற வாழ்க்கை, மிக சாதாரணமாக இலக்குகளை அடைய முடிந்தது, எல்லோருடனும் இலகுவான அணுகுமுறை என்று இருந்தேன். வெளியில் இருந்து இங்கே அதிக சம்பளம் வாங்குகிறார்கள், அதே போல நம் நண்பர்களும் வேறு நிறுவனம் மாறி அதிக சம்பளம் வாங்குகிறார்களே என்ற தேவையில்லாத எண்ணம்.

இரண்டாம் நிறுவனத்தில் வேலைப்பளு அதிகம் என்பதால் எப்படியாவது மாற வேண்டும் என்று முக்கி, முனகி பெரிய அளவில் சம்பளம் வித்தியாசம் இல்லையென்றாலும் மாறினேன். அதாவது, "நீ கல்யாணம் ஆகாத ஆள்தானே, சனி ஞாயிறு ஆபிஸ் வராம என்ன பண்ற, உனக்கா கல்யாணம், உன் அக்கா/அண்ணாவுக்குத்தானே, நாலு நாள் எதுக்கு, அதான் செத்துட்டாங்களே, நீ போனா மட்டும் பொழச்சு வந்துருவாங்களா என்ன" என்ற அளவிற்கு கேள்வி கேட்ட கேவலம் எல்லாம் நடந்தது.

மூன்றாவது நிறுவனம் ஒரு தொழில்நுட்ப நிறுவனம். இங்கிருந்துதான் மூன்று முறை வெளிநாடு கூட சென்றேன். இந்த நிறுவனத்தில் உள்ள ஒரு கெட்ட பழக்கம், ஒரு முறை குறுகிய வெளிநாடு பயணம் போனால், அந்த முறை, பணி மதிப்பீட்டில் (அப்ரைசல்) கை வைத்து விடுவார்கள். ஏனென்றால், குறுகிய கால வெளிநாட்டுப் பயணங்களில், இங்கே சம்பளம் முழுதும் வரும். அங்கே தினக்கூலி, தங்க இடம் கொடுத்து விடுவார்கள். பயணப்படியும் உண்டு. பஞ்சப்படி (சோறுதாங்க) மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எனவே ஒரு மாதம் பயணம் போனால் கூட நல்ல சேமிப்பு. மூன்று மாதம் என்றால் நல்ல சேமிப்பு கையில் இருக்கும். நாம் நன்கு வேலை செய்திருந்தாலும், "அதான் அங்க நல்லா சம்பாதிச்ச இல்ல, இங்கயும் உனக்கு இவ்ளோ உயர்வா" என்று கேட்டு, 3 அல்லது 4 மதிப்பீடு கொடுப்பார்கள்.

கிட்டத்தட்ட 5 வருடங்கள் அங்கே முடிந்திருந்தது, அங்கே சேர்ந்தவுடன்தான் திருமணம், புது வீடு என எல்லாம் நடந்தது. மனைவி, மக்கள் எல்லோரும் ஓரளவு என் வேலை அமைப்போடு பழகி இருந்தார்கள். ஒரே பிரச்சினை, எனக்கு வெளிநாட்டுப் பயணங்களில் விருப்பம் இல்லை. இரு முறை என் குழந்தையின் பிறந்த நாளுக்கு நான் இல்லை.

எனவே, அந்த கோபத்தில் வேலை தேடவும் இந்த வேலை கிடைத்தது. சம்பளமும் அதிகம். உடனே அங்கே பயந்து போய், "தம்பி இந்தாப்பா ஊதிய உயர்வு" என்று நீட்டுவார்கள் என்று நினைத்தேன். ஆனால், "தம்பி, காத்திரு, உனக்கான நேரம் வரும்" என்றனர். நானோ வடிவேலு அல்லது கவுண்டமணி அளவிற்கு இல்லையென்றாலும், கொஞ்சம் ஸீன் போட்டு விட்டுதான் வந்தேன். அது மீண்டும் அதே போல திருப்பி அடிக்கும் என சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.

இது உதிரி பொருட்களை பெரிய வாகனங்களுக்கு உற்பத்தி செய்யும் நிறுவனம் (Tier 1), அலுவலகம் போக, வர அலுவலக வண்டி, தினமும் ஒரு மணி நேர பயணம், ஏதாவது படிக்கலாம், படம் பார்க்கலாம். தினமும் காலை 7 மணிக்கு கிளம்பினால், இரவு 7 மணிக்கு வீட்டிற்கு வந்து விடலாம், வெளியில் பயணம் அதிகளவு இல்லை என்று நிறைய கனவுகளோடு சேர்ந்தேன். சேர்ந்த 3 மாதங்களிலேயே பல் இளித்து விட்டது.

பொதுவாக நமது இந்திய நிறுவனங்களில் உள்ள போட நம்பிக்கைகள் என்னவென்றால், "மாலையில் வேலை நேரம் முடிந்தாலும் வீட்டிற்கு போகக் கூடாது, சனி, ஞாயிறு விடுமுறை என்றாலும் அலுவலகம் வர வேண்டும்". அதை 100 சதவிகிதம் சரி என்று நம்பும் நிறுவனம் இது. முதலில் நானும் சமாளித்து விடலாம் என்றுதான் நம்பினேன். ஆனால், நீ வேலை பார்க்கிறாயா இல்லையா என்பது பற்றி எல்லாம் கவலை இல்லை. எந்நேரமும் அலுவலகத்திலேயே இரு என்று அழுத்தம்.

பொதுவாக வேலை பார்க்கும் எல்லோரும் விரும்புவது, குறிப்பாக நான், கீழ்க்கண்டவை, அதே வரிசையில். 

1. சொந்த வேலை - அலுவலக வேலை பங்கீடு (Work Life Balance)
2. நமக்கு பிடித்த, நன்கு தெரிந்த வேலை (Job Satisfaction)
3. நல்ல சம்பளம், வேலையில் முன்னேற்றம், (Career Growth).

இந்த மூன்றுமே அமைவது நடக்கவே இயலாத காரியம். ஆனால், இந்த மூன்றில் ஒன்றுதான், அதுவும் சம்பளம் மட்டும்தான் எனும்போது, நிறைய பேர் அதை தேர்வு செய்யலாம். ஆனால், நாம் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பது முக்கியம் இல்லை, எதற்காக, யாருக்காக என்பதுதான் மிக முக்கியம். இரண்டு முறை என் குழந்தை பிறந்த நாளுக்கு நான் உடன் இல்லாவிட்டாலும், Skype மூலம் பார்த்தேன். ஆனால், இந்த முறை ஞாயிறு அன்று பிறந்தநாள் என்றாலும், அலுவலகம் சென்று, கடைசியில் எல்லாம் முடிந்த பிறகே வந்தேன்.

அதன் பிறகு, நம்முடைய சுய சிந்தனையை அது இழக்க வைக்கிறது எனில், கண்டிப்பாக அந்த வேலை தேவையா இல்லையா என்று யோசிக்க வேண்டும். என்னால் 3 மாதங்களாக ஒரு பதிவு போட முடியவில்லை, மனைவி, மகளை வெளியே கூட்டிப் போக முடியவில்லை, அவசரத்திற்கு உடன் இருக்க முடியவில்லை எனில் உடனே மாற்றம் பற்றி யோசித்தே ஆக வேண்டும்.

"சரி, இப்போதான் மாறின, உடனே வேற வேலை கிடைக்குமா என்றால், கிடைக்காது. அவசரத்திற்கு மாறி, மீண்டும் கொதிக்கும் எண்ணெய், அடுப்பு என்று மாட்டிவிடக்கூடாது. சரி என்ன செய்யலாம் என்று யோசித்து, நல்லது, கெட்டது எல்லாம் அலசி ஆராய்ந்ததில் பழைய நிறுவனமே பரவாயில்லை என்று தோன்றுகிறது. சரி, திரும்ப கேட்டால் அசிங்கம் என்று யோசித்தாலும், வயது, கிடைத்த அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது தவறில்லை என்றுதான் தோன்றுகிறது. சொல்லி வைத்துள்ளேன். ஓரளவு சுமூகமான முறையில் வெளியே வந்ததால், எதிர்மறையான பதில் வரவில்லை.

கவுண்டமணிக்கு சொன்னது போலவே, 6 வருடத்திற்கு முன்னால் என்ன சம்பளமோ, அதே தான் இப்போதும் என்று சொல்ல மாட்டார்கள் என நம்புகிறேன். இன்னும் ஒரு மாதத்தில் நல்லது நடக்கும், மீண்டு வருவேன் என நம்புகிறேன்.