Friday, June 29, 2018

திரைப்பட (விமர்சனம் அல்ல) அலசல்!

எல்லோரும் நல்லா இருக்கீங்களா? வாங்க படிப்போம். இந்த முறை மொத்தமாக திரைப்படங்கள் மட்டுமே. 

இன்னும் 'காலா' பார்க்கவில்லை. குடும்பத்துடன் போகலாம் என்றால் அவர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே, காத்திருக்கிறேன். மற்றபடி பார்த்ததில் (போன பிட்டுக்கும் இந்த பிட்டுக்கும் நடுவில்) அவ்வளவு ஒன்றும் பெரிதாக கவரவில்லை. 

மெர்க்குரி படம் திரையரங்கில் சென்று பார்த்து நொந்தே விட்டேன். 'சில சமயங்களில்' படம் இணையத்தில் (Netflix) பார்த்தேன். வித்தியாசமான முயற்சி. ஆனால், சற்றே இழுவை. 'பக்கா' என்று ஒரு படம். சத்தியமாக முடியவில்லை. தமிழ் படம் போல மற்ற படங்களை கிண்டல் அடிக்கிறார்களா அல்லது சீரியஸாகவே எடுத்துள்ளார்களா என்றே புரியவில்லை.  தியா, இரவுக்கு ஆயிரம் கண்கள் செம, காளி, பாஸ்கர் ஒரு ராஸ்கல் போன்றவை ஒரு முறை பொழுது போக்கிற்கு பார்க்கலாம். 

இரும்புத்திரை: பார்க்க பார்க்க பயமுறுத்துகிறார்கள். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக ஒரே தொலைபேசி எண்ணை பயன்படுத்துகிறேன். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, எங்கே சென்றாலும், அங்கே அலை பேசி எண்ணை கேட்டால் கொடுத்து விடுவேன். திருமணம் ஆன புதிதில் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு மனைவி முன் 'கெத்தாக' பணம் கொடுத்தேன். அலைபேசி எண்ணையும்தான். 

அதன் பிறகு ஆரம்பித்தது தொல்லை, 'சார் எங்களுக்கும் உதவி பண்ணுங்க சார்" என்று தினமும் அழைப்புகள், தொலைபேசி எண்ணையே மாற்றி விடலாமா என்று கூட தோன்றியது. பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக எங்கே போனாலும் கொடுக்காமல் உள்ளேன். "சார், நம்பர் கொடுத்தா 15% டிஸ்கவுண்ட்" என்பார்கள். அடித்தாலும் கொடுக்க மாட்டேன். ஆனால், எப்போதோ கொடுத்ததன் விளைவை இன்று வரை அனுபவிக்கிறேன். இன்றும் கூட தினமும் 2,3 அழைப்புகள் கடன் அட்டை, லோன் என்று வந்து கொண்டே இருக்கிறது. 

கொஞ்சம் ஜாக்கிரதையாக உபயோகிப்பதால் பெரிய தொந்தரவு இல்லை. ஆனால், என் மனைவிக்கு ஸ்டேட் பேங்கில் கணக்கு உள்ளது. 3 மாதங்களுக்கு ஒரு முறையாவது "மேடம் உங்க கார்டு எக்ஸ்பைரி ஆக போகுது" என்று உடைந்த தமிழில் அழைப்பு வரும். என் மனைவியோ "எல்லாம் என்ற வூட்டுக்காரனுக்குத்தானுங்க தெரியும்" என்று சொல்லி வைத்து விடுவார். 

இந்த படத்தில் வருவது போல ஒரே ஆள் எல்லாவற்றையும் செய்வதில்லை. மற்றபடி எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதில் பாதி உண்மைதான். எளிமையாக சொன்னால், அதிகம் ஆசைப்படாமல் இருந்தாலே போதும். 

நடிகையர் திலகம்: இரண்டு வருடங்களுக்கு முன் தினமலர்-வாரமலரில் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு தொடர் வந்தது. அப்போதே "ச்சே எப்படி வாழ்ந்து கெட்டிருக்காங்க" என்று தோன்றியது. படத்தில் அதில் படித்ததில் பாதி கூட வரவில்லை. ஜெமினியை கெட்டவனாக காட்டி, சமந்தா-விஜய் காதல் கதை வேறு குறுக்கே குறுக்கே. இன்னும் அவரது சிறப்புகளையும், அந்த பிடிவாத குணம் பற்றியும் நன்றாக சொல்லி இருக்கலாம். சந்திரபாபு வரவேயில்லை. 

இந்த படத்தை அமேசான் பிரேமில் தான் பார்த்தேன். ரொம்ப நாளாக எந்த தமிழ் படமும் அதில் வரவே இல்லை. நிறைய வாய்ப்புகள் இருந்தாலும் தமிழ் திரையுலகம் அதை வீணடிக்கிறது என்று நினைக்கிறேன். 

தினமும் அலுவலகத்திற்கு அலுவலக வாகனத்தில் பயணிப்பதால் நிறைய படங்களை பார்ப்பதுண்டு. மொழி பேதம் கிடையாது. அந்த வகையில் பார்த்த ஒரு நல்ல திரைப்படம் (Feel Good) ராணி முகர்ஜீ நடித்த Hichki, ஹிந்தி திரைப்படம். 

நரம்பு குறைபாட்டால் (திடீரென தலையாட்டி, ஒரு வினோதமான சப்தம் எழுப்புவார். என் அத்தை ஒருவருக்கு இதே போல உள்ளது. அவர் சப்தம் எழுப்ப மாட்டார். ஆனால், தலை தன்னை அறியாமல் ஆடும்) பாதிக்கப்பட்ட ராணி முகர்ஜீ பள்ளி ஆசிரியராக ஆசைப்படுவார். அவரை, அவர் படித்த பணக்கார பள்ளியில், கல்வி உரிமையின் கீழ் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு ஆசிரியராக சேர்க்கிறார்கள். யாரையும் மதிக்காத, யாராலும் மதிக்கப்படாத அந்த மாணவர்களை பள்ளியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். எப்படி ராணி சமாளிக்கிறார் என்பதே படம். 

பொதுவாக விளையாட்டு (இறுதி சுற்று, கேக் தி இந்தியா, தங்கல், இன்னும் பல) மற்றும் கல்வி (ஹிந்தி மீடியம், தாரே ஜமீன் பர், சாட்டை, பசங்க 2 இன்னும் சில) எல்லவற்றிலும் பார்த்தால், நாயகன்/நாயகி வருவார். அவர் கண்டிப்பாக தோல்வி அடைந்தவராக இருப்பார். அவரிடம் இருப்பதிலேயே மோசமான குழுவோ, தனியாளோ வருவார்கள். அவர்களிடம் உள்ள தனித்திறமையை கண்டறிந்து வெற்றி பெற வைப்பார்கள். இதுதான் கதை. ஆனால், திரைக்கதையில் உள்ள வித்தியாசம்தான் படங்களை வெற்றி அடைய வைக்கும். அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்று நமக்கு தெரியும். இருந்தாலும் அதை சலிப்பு தட்டாமல் கொண்டு போகிறார்கள். கண்டிப்பாக பார்க்கலாம். 

அட்லீ சுட்ட இட்லி: 

The Frighteners, Judgement Night என்று இரண்டு படங்கள் பார்த்தேன். "ஏற்கனவே எங்கேயோ பாத்திருக்கமே, அதுவும் ஒரே ஆளோடதாச்சே" என்று பார்த்தல், நம்ம வெங்கட் பிரபு. மாஸ் என்கிற மாசிலாமணி, சரோஜா படங்களின் மூலம். அடச்சே என்று தலையிலடித்துக் கொண்டேன். 

அதே போல 'தெறி' என்ற மட்டமான படம். இருந்தாலும் அதில் ஒரு சில காட்சிகள் கொஞ்சம் பிடிக்கும். பாரிஸ் கார்னரில், குழந்தைகளை பிச்சை எடுக்க வைப்பவர்களை அடிப்பது. அதில் சண்டை ஆரம்பிப்பதற்கு முன், ரவுடி "பாத்தல்ல, நாங்க எத்தனை பேருன்னு" என்பார். உடனே விஜய் "என்ன, 5 பேரு" என்றவுடன், "கணக்குல பெயிலா நீ. நாங்க 11 பேர்" என்றவுடன், விஜய் " நான் மொதல்ல இவன அடிப்பேன். அப்ப 2 பேர் ஓடிருவானுங்க" என்றெல்லாம் கணக்கு சொல்வார். "படம் மொக்கையா ஈ அடிச்சான் காப்பியா இருந்தாலும், நல்ல சீன்லாம் வச்சிருக்காம்பா" என்றெல்லாம் எண்ணினேன். (காணொளியை 02:20ல் இருந்து காணவும். அதே வசனம்)  


Jack Reacher என்றொரு படம். அதில் இதே காட்சி அப்படியே இருந்தது. அடேய் அட்லீ, அடுத்தவன் மாவு எடுத்து இட்லி சுட்டா பரவாயில்லடா, ஆனா, அடுத்தவன் இட்லியையே ஏண்டா சுடர. (காணொளியை 02:50ல் இருந்து காணவும். அதே வசனம்)


மீண்டும் சந்திப்போம். மற்றபடி மிக மிக ஆவலாக பார்க்க வேண்டும் என்று காத்திருப்பது தமிழ் படம் 2.O தான்.