Tuesday, October 29, 2013

நான் சர்வாதிகாரி ஆனால் - 1

இது பள்ளிகளில் பிள்ளைகளை 'நான் மன்னன் ஆனால்' என்ற தலைப்பில் கட்டுரை எழுது என்று சொல்வது போல் உள்ளது என்று நீங்கள் நினைத்தாலும் சரி. இது என்னுடைய முந்தைய ஆதங்கத்தின் தொடர்ச்சியே.

இதில் சொல்லப்பட்டுள்ள பல விஷயங்கள் முட்டாள்தனமாகவும், நடைமுறைக்கு சாத்தியமில்லாமலும், சில பல திரைப்படங்களின் பாதிப்புகளாகவும் தெரியலாம். இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று நான் எண்ணியவை. இவற்றை ஒரு முதலமைச்சரோ, பிரதமரோ செய்ய முடியாமல் போகலாம். எனவேதான் 'சர்வாதிகாரி'.

கல்வி:

அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அனைவரும் அரசுப் பள்ளிகளில்தான் படிக்க வேண்டும். இல்லையெனில் அவர்களது வேலை பறிக்கப்படும்.

அரசுக் கல்லூரிகளிலும், வேலை வாய்ப்பிலும் அரசுப் பள்ளிகளில் படித்தோருக்கு முன்னுரிமை.

எட்டாம் வகுப்பில் இருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை, அனைத்து 5 ஆண்டுகளுக்கும் பொதுவான இறுதி தேர்வு வைக்கப்படும். (இது பாடங்களை முன் கூட்டியே நடத்துவதை தவிர்க்க).

மதிப்பெண்கள், பாடங்களை மட்டும் பொறுத்து இல்லாமல், மாணாக்கர்களின் தனித்திறமைக்கும் சேர்த்து நிர்ணயிக்கபடும். இது சரி வராத பட்சத்தில், மாணாக்கர்களின் தனித்திறமைக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

ஒவ்வொரு மாணவ மாணவியரும், படிப்பைத் தவிர வேறு ஏதாவது ஒன்றில் சான்றிதழ் கண்டிப்பாக பெற வேண்டும்.

2000ஆம் ஆண்டிற்குப் பின் பிறந்த அனைத்து குழந்தைகளும், குறைந்தபட்சம் 10ம் வகுப்பு வரையாவது படித்திருக்க வேண்டும்.

அனைவருக்கும், கட்டாயமாக அவரவர் தாய் மொழியை எழுத, படிக்க, பேசத் தெரிந்திருக்க வேண்டும். 

பாலியல் கல்வி, அவசிய சட்டங்கள் பற்றிய அறிவு போதிக்கப்படும்.

அரசுப்பள்ளிகளுக்கு ஒரு சீருடை, தனியார் பள்ளிகளுக்கு ஒரு சீருடை. ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொரு விதமான சீருடை கிடையாது.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தனியாக டியுஷன் எடுப்பது, வேறு பள்ளிகளில் பகுதி நேரமாக பணி புரிவது தெரிந்தால், பணி நீக்கம் செய்யப்படுவர்.

அரசு நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச தகுதிகள் இல்லாத அனைத்துப் பள்ளிகளும்/ கல்லூரிகளும் மூடப்படும் (கழிவறை, விளையாட்டுத் திடல், அவசர வழி).

கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் விரும்பத் தகாத நடவடிக்கைகளில் ஈடுபட்டால், குற்றங்களைப் பொறுத்து மன்னிப்பு, சான்றிதழ் வழங்கப்படாது, கடவுச்சீட்டு (சரி விடுங்க பாஸ்போர்ட்) வழங்கப்படாது. அதிகபட்சம் சிறை தண்டனையும் வழங்கப்படும்.

இட ஒதுக்கீடு:

அனைத்து சாதிகளும், மதங்களும் (முதல்வன் படத்தின் தாக்கம்) நான்கே நான்கு பிரிவுகளின் கீழ் கொண்டு வரப்படும். (பொது, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர்). சாதி மற்றும் மதம் அனைத்து இடங்களில் இருந்தும் நீக்கப்பட்டு, ஒதுக்கீடு என்பது மட்டும் இருக்கும்.

எந்த பிரிவின் கீழ் யார் இருந்தாலும், அவர்களின் கல்வி முடிந்து, முதல் பணியில் சேரும் வரை மட்டுமே அவர்கள் இட ஒதுக்கீடுக்கு உட்படுவர். அதன் பின் வரும் அனைத்து பதவி உயர்விற்கும், சம்பள உயர்விற்கும், அவர்களும் பொதுப் பிரிவின் கீழ்தான் போட்டியிட வேண்டும்.

ஒருவர் தனது வேலையை இட ஒதுக்கீட்டின் மூலம் பெற்று விட்டால் அல்லது உயர் கல்வி முடித்து விட்டாலோ, அவர்களது வாரிசுகள் அனைவரும் பொதுப் பிரிவின் கீழ் வந்து விடுவர். ஏனென்றால் ஒதுக்கீடு சேர வேண்டியவர்களுக்கு மட்டுமே சேர வேண்டும். (நான் பார்த்தவரை, தாழ்த்தப்பட்டோர் பிரிவில் என்னுடன் படித்த அனைவரின் பெற்றோரும் அரசுப் பணிகளில் உள்ளோர்)

இந்த விதி மாற்றுத் திறனாளிகளுக்கும் பொருந்தும். அதிலும் மாற்றுத் திறனாளிகள் என்பதற்கான விதி சரியாக வரையறுக்கப்படும். (என்னுடன் கல்லூரியில் படித்த ஒரு மாற்றுத் திறனாளி - வலது கை கட்டை விரல், இடது கை கட்டை விரலை விட சற்றே, மிக சற்றே சிறியது)

சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து:

எந்த குற்றமாக இருந்தாலும், அபராதம் கிடையாது, சிறை தண்டனைதான். மக்களில் பாதி பேர், "என்ன 100 ரூவா லஞ்சம் கேப்பான், இல்லையா, 500 ரூபா அபராதம், அவ்வளவுதானே, தூக்கி வீசிட்டு போக வேண்டியத்தானே' என்பார்கள். எனவேதான் இது. குற்றங்களைப் பொறுத்து அரை நாள் முதல் ஆயுள் முழுதும் சிறையில் இருக்கும்படி தண்டனை வழங்கப்படும்.

சாலை விதிகளை மதிக்கவில்லை என்றாலும் சிறைதான். அனைத்து முக்கிய சந்திப்புகளிலும் கண்காணிப்பு கருவி பொருத்தப்படும். தினமும் அதைப் பார்த்து, விதிகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

வாகன ஓட்டுனர் குற்றத்தின் அளவைப் பொறுத்து சிறை தண்டனை. இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை சந்திப்புகளில், அவ்வப்போது கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டு சோதிக்கப்படும். இதை ஒரு பத்து நாள் செய்தாலே, மக்கள் தானாக சாலை விதிகளை மதித்து நடப்பர்.

எந்த வண்டியாக இருந்தாலும் (மீன் பாடி வண்டி உட்பட) கண்டிப்பாக பதிவு செய்திருக்க வேண்டும். அனைத்து வண்டிகளும், நீக்க முடியாத முறையில் வாகன எண்களை, நான்கு புறமும் பதிந்திருக்கும்படி செய்ய வேண்டும்.

பாலியல் குற்றங்கள், திட்டமிட்ட கொலை, வன்முறை, குழந்தைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள், இவை அனைத்திற்கும் ஆயுள் முழுதும் தனிமைச் சிறை. அவர்கள் தினமும் வேலை செய்ய வேண்டும். அந்த சம்பளத்திற்கு சாப்பாடு. வேலை செய்ய மறுத்தால், சோறு, தண்ணீர் இல்லை. அது அவரவர் இஷ்டம். இது கொடூரமாக தெரியலாம். ஆனால், வேறு வழியில்லை.

அப்படி இல்லையெனில், அவர்களது புகைப் படங்கள் அவர்கள் வெளி வந்தவுடனே, நாளிதழ்கள், தொலைக்காட்சிகளில் காட்டப்படும்.

சாலை மறியல், பந்த் செய்ய யாருக்கும் அனுமதி இல்லை.

எந்த பிரச்சினை என்றாலும், சம்பந்தப் பட்ட அதிகாரி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அனைவரும் சேர்ந்து மனு கொடுத்தால், அந்த அதிகாரி நீக்கப்படுவார். (சுதேசி படத்தில் வந்தது).

நீதிபதிகளும் மனிதர்கள்தான். எனவே, ஒரு மன்றத்தில் தீர்ப்பு வழங்குவதற்கு முன், அது குறிப்பிட்ட குழுவின் முன் வைத்து விவாதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும். அதுவே இறுதி தீர்ப்பாகும். அதன் பின் மேல் கோர்ட், கீழ் கோர்ட் என்று எதுவும் இல்லை. இது நேரம் எடுக்கும் செயல் என்றாலும், ஒரே தீர்ப்பாக இருக்கும்.

ஒரு குற்றத்தில், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் விரும்பும் வழக்கறிஞரை வைத்து வாதாடிக் கொள்ளலாம். அரசு வழக்கறிஞரே வேண்டும் என்ற தேவையில்லை. அதற்கான செலவை அரசே ஏற்றுக் கொள்ளும்.

குற்றப் பின்னணி கொண்ட யாரும் அரசுப் பதவியில் இருக்கக் கூடாது. அதே நேரம், யாராவது வேண்டுமென்றே வழக்கு போட்டிருந்தால், வழக்கு போட்டவர்களுக்கு சிறை.

இது சற்றே அவசரத்திலும், ஆதங்கத்திலும் எழுதிய பதிவு. மக்கள் தங்களுக்கு தோன்றியவற்றையும் சொல்லலாம். மற்ற துறைகள் பற்றியும் சொல்லலாம். சொல்லுவேன்.

தொடரும்!