Monday, April 29, 2019

வார இறுதி படங்கள்!!!

பார்த்து, ரசித்த, கண்டிப்பாக விடுமுறையை வீட்டில் கழிக்க சில திரைப்படங்கள். அனைத்துமே இருக்கை நுனியில் (seat edge thriller) அமர வைக்கும் படங்களே. 

அந்தாதுன் - ஹிந்தி - 2018 (Andhadhun):

ஒரு பார்வையற்ற இசைக்கலைஞன். அவன் காதல், ஒரு கள்ளக்காதல், அதனால் ஒரு கொலை, யாருமில்லாதவர்களின் உறுப்புகளைத் திருடி விற்கும் கும்பல், இவர்களோடு வயலில் உள்ள காய்கறிகளை உண்ணும் முயலைக் கொல்லும் நோக்கத்தோடு துப்பாக்கியுடன் ஒரு விவசாயி இவர்கள் அனைவருக்கும் இடையே நடக்கும் ஒரு கண்ணாமூச்சி ஆட்டமே அந்தாதுன். 



படத்தில் சில திருப்பங்களை நீங்கள் உலகப்படம் பார்ப்பவர்களாக இருந்தால், சுலபமாக யூகிக்கலாம். ஆனாலும், அதைத்தாண்டி படத்தில் நிறைய சிறு சிறு ஆச்சரியங்கள் உள்ளன. நாயகன், தபு, நாயகனுக்கு உண்மையிலேயே பார்வை இருக்கிறதா என்று சோதிக்கும் சிறுவன் என அனைவருமே கவனம் ஈர்க்கின்றனர். படம் உண்மையில் நகைச்சுவைப்படம்தான், இருந்தாலும், இந்தப்பக்கம் அந்தப்பக்கம் திரும்ப விடாமல் கவனம் ஈர்க்க வைக்கிறது. 

தடம் - தமிழ் - 2019:

ஒரு கொலை. கொலைகாரன் ஒரு புகைப்படத்தில் உள்ளான். ஒரே பிரச்சினை, ஒரே மாதிரி இரண்டு பேர். இரண்டு பேரில் ஒருவர்தான் குற்றவாளி, யார் அது, எதற்காக கொன்றான், தண்டனை கிடைத்ததா இல்லையா என்பதை, நிஜமாகவே கடைசி வரை அங்கும், இங்கும் திரும்ப வைக்காமல், நிஜமாகவே மண்டை காய வைத்து விட்டார்கள். உண்மையில் அட்டகாசமான திரைப்படம். 



பொதுவாக துப்பறியும் படங்களில் இவனா, அவனா, என்று நிறைய பேரை சந்தேகப்படுமாறு காட்டுவார்கள். இதில் இரண்டே பேர். இவனா, அவனா என கடைசி வரை, அப்பப்பா. அதிலும் காவல் துறையில், வயதில் சிறியவர் பெரிய பதவியில் இருந்தால் என்ன நடக்கும், ஒருவனை சிக்க வைக்க காவல் துரை எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை எல்லாம் சரியாக காண்பித்துள்ளனர். ஆய்வாளருக்கும், நாயகனுக்கும் உள்ள பிரச்சினையை காட்சிகள் இன்றி வசனங்களில் சொன்ன விதம், கடைசியில் நீதிபதி பேசும் இடம் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. மகிழ் திருமேனியின் அனைத்து படங்களுமே தவற விடக்கூடாதவை. அதில் இது முதலிடம். 

அந்தரிக்ஷம் - தெலுங்கு - 2018 (Anthariksham):

இதுவரை நீங்கள் பார்த்த அனைத்து ஆங்கில திரைப்படங்களில் வருவதுதான். ஒரு பழைய செயற்கை கோள் கட்டுப்பாட்டை இழக்கிறது. அதை மீட்க வேண்டும் என்றால், நாயகன் வர வேண்டும். அவனோ வழக்கம் போல வேறு ஒரு பிரச்சினையால் இது எதுவும் வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறான். இப்போது, இதையும், தன் பழைய கணக்கையும் எப்படி தீர்க்கிறான் என்பதுதான் படம். 



தமிழில் டிக் டிக் டிக், தமிழின் முதல் விண்வெளி படம் என்று மொக்கையாக ஒரு படம் எடுத்தார்கள். ஆனால், தெலுங்கில், நிஜமாகவே நன்றாக எடுத்துள்ளார்கள். என்ன, கொஞ்சம் இல்லை இல்லை, நிறையவே இயற்பியல் தெரிந்திருக்க வேண்டும். உண்மையில் பக்காவாக ஆராய்ந்து எடுத்துளார்கள். கட்டுப்பாட்டு அறை, செயற்கை கோள், விண்வெளி என்று அனைத்தும், ஆங்கில படங்கள் அளவுக்கு உள்ளன. நல்ல முயற்சி. 

வெள்ளைப்பூக்கள் - தமிழ் - 2019:

ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி, காதல் திருமணம் செய்து, அமெரிக்காவிலேயே குடியேறிய மகனின் வீட்டிற்கு செல்கிறார். அங்கு நடக்கும் சில கடத்தல்களை, தனது பாணியில், அங்குள்ள நண்பனோடு சேர்ந்து ஆராய்கிறார். கண்டுபிடிக்கிறாரா என்பதுதான் கதை. 



படத்தில் இசையமைப்பாளர் உட்பட நிறைய பேர் MITயில் படித்தவர்கள். அவர்களுக்காக பார்த்தேன். பரவாயில்லை. எதிர் பார்த்ததை விட நன்றாகவே இருந்தது. விவேக், சார்லி அட்டகாசமான நடிப்பு. திறமையான நடிகர் சார்லி, நகைச்சுவை, குணச்சித்திரம் இரண்டிலும் கலக்கக்கூடியவர் அவர். இன்னும் பல நல்ல வாய்ப்புகளை அவருக்கு கிடைக்க வேண்டும். 

தில்லுக்கு துட்டு 2: 

பெரிதாக ஒன்றுமில்லை. ஊருக்குள் அட்டகாசம் செய்யும் நாயகனை சிக்க வைக்க, மந்திரவாதியின் பெண்ணுடன் காதல் வர வைக்கின்றனர். காதல் என்றாலே கொல்ல துடிக்கும் பேயைத் தாண்டி, எப்படி நாயகியை திருமணம் செய்கிறார் நாயகன் என்பதுதான் கதை. 



என் பெண்ணிற்கு மிகவும் பிடித்த படம். தொடர்ச்சியாக நான்கைந்து முறை கூட பார்க்கிறாள். அதிலும் இரண்டாம் பாதியின், இரண்டாம் பாதி, அதாவது பேய் வீட்டிற்கு போன பிறகு நடக்கும் காட்சிகள் வயிற்றைப் பதம் பார்க்கும். நிச்சயம் பொழுதுபோக்கிற்கு உகந்த படம். 

இவை தவிர, தப்பித்தவறி கூட பார்த்து விடக்கூடாத படங்கள் சில உள்ளன. 

பொட்டு: யப்பா, முடியலடா சாமி. மனசுல பெரிய லாரன்ஸ் அப்டின்னு நெனப்பு போல. 

தேவ்: என்னவாம். ஒண்ணுமில்ல. சும்மா ஊர் சுத்துனாங்களாம். அப்ப எடுத்த கொஞ்ச நஞ்சத்த படம்னு சொல்றாங்க. 

கண்ணே கலைமானே: நெடுத்தொடரை விட தூரமாக போகிறது, போகிறது. கடைசியில் படம் முடியவில்லை, அதுதான் கொடுமை. 

பூமராங்: Face/off ஒரு சிட்டிகை. தெலுங்கில் வந்த எவடு இரண்டு கரண்டி, கடைசியாக கொஞ்சம் கத்தி படத்தை போட்டு கடைந்தால், பூமராங். 

ஐரா: இருப்பதிலேயே பெருங் கொடுமை இதுதான். கருப்பு நயன்தாரா, வெள்ளை நயன்தாராவை பழி வாங்க ஒரு காரணம் வரும் பாருங்கள். பொதுவாக கடைசியாக வரும் திருப்பங்கள், படம் எவ்வளவு மொக்கையாக இருந்தாலும், பரவாயில்லை என்று தோன்றும். ஆனால் இதில், அப்படியே தலைகீழ். 

அவ்வளவுதாங்க. கண்டிப்பாக குறிப்பிட்டுள்ள படங்களை பாருங்கள்.  

Sunday, April 14, 2019

தேர்தல் களவரம்!

இதோ, அடுத்த திருவிழா ஆரம்பித்து விட்டது. இதில் நாம் வழக்கம் போல பெரிய ஆர்வம் காட்ட மாட்டோம். ஏனென்றால், நமக்கு இதில் பெரிய பலன் இருக்காது. எப்படி என்று கேட்கிறீர்களா? ஒவ்வொன்றாக பார்ப்போம். யார் வென்றாலும், ஆட்சி அமைத்தாலும் சரி, நம்மூரில் வெல்பவர்கள் எதிரணியாகவே இருப்பார்கள், 

அது மட்டுமில்லாமல், எப்படி இருந்தாலும், நாம் தமிழர்கள், அவர்கள் வட நாட்டவர்கள். காவிரியாக இருந்தாலும், முல்லை பெரியாறாக இருந்தாலும், நமக்கு எதிராகவே செயல்படுவார்கள். காலம் காலமாக நடப்பதுதான். 

அனைத்து சமூக வலைத்தளங்களிலும் 50 ஆண்டுகால திராவிடத்தால் வீழ்ந்தோம், இல்லை இல்லை வாழ்ந்தோம் என்று மோதிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் வாழ்ந்தோமா இல்லையா என்பதை என் சிற்றறிவுக்கு எட்டிய வரை சொல்கிறேன். 

இன்னொன்று, நான் வெளிமாநிலங்களில் ஒரே ஒரு வருடம், அதுவும் மைசூரில் வேலை பார்த்தேன். ஒரு சில மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளேன், அவ்வளவே. மற்றபடி எல்லாமே ஏட்டறிவே. திராவிட புரட்சியாளர்களைப் பாருங்களேன், நீட் தேர்வு, எய்ம்ஸ் பற்றி பேச்சு வரும்போதெல்லாம் தமிழகம் எப்படியெல்லாம் முன்னேறியுள்ளது என்று பேசுவார்கள், ஆனால் டெங்கு வரும்போது தமிழகம் மருத்துவத்துறையில் பயங்கரமாக பின் தங்கியுள்ளது என்பார்கள். இவர்களுக்கு இதே வேலைதான். சரி விடுங்கள். 

புள்ளி விவரங்கள் அடிப்படையில் பார்த்தால், தமிழகம் மற்ற மாநிலங்களை விட எவ்வளவோ பரவாயில்லை. அதற்காக முதலிடம் என்றும் சொல்ல முடியாது. முதல் 5 இடங்களுக்குள் கண்டிப்பாக இருக்கும். இவை எல்லாவற்றிக்கும் காரணம், அடித்தளம் என்பது இரண்டு பேர்தான். காமராஜர், பெரியார். 

கிராமப்புறங்களில், 60 வயதிற்கு மேற்பட்டவர்களில், குறைந்தபட்சம் எழுதப்படிக்க தெரிந்தவர்களிடம் கேளுங்கள், காமராஜர் பற்றி சொல்வார்கள், அதே போல பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம் பெரியார். பெரியார் என்னத்தைக் கிழித்தார், மகளைக் கல்யாணம் செய்தார் என்று பேசுவோர் எல்லாம் கூறுபவர்களைப் பார்த்தால் சிரிப்பாக வரும். அவர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரல்ல என்பதை அவரே சொல்லி இருக்கிறார். அவரைப்பற்றி பிறகு தனிப்பதிவில் பார்ப்போம். 

காமராஜர் திராவிட கட்சி இல்லையே, பெரியார் அரசியல்வாதி இல்லையே என்பவர்களுக்கு, உண்மைதான். அடித்தளமிட்டவர்கள் இவர்கள்தான். ஒரு வேளை சோறு கிடைக்குமே என்று பள்ளிக்கு சென்றவர்கள், இன்று இருக்கும் நிலைமையே வேறு. இவர்கள் போட்ட சாலையை அகலப்படுத்தியது கருணாநிதிதான்

ஆனால், ஒரு கட்டத்தில் ருசி கண்ட பூனையாக மாறி விட்டார்கள். எம்ஜிஆர் வருவதற்கு முன் தனியார் கல்லூரிகள் குறைவு. அவர் அனுமதி கொடுத்த பிறகு, எப்படி பணம் பார்ப்பது என்பதைக் கண்டு பிடித்த பிறகு தடம் மாறியது. அடுத்தடுத்த ஆட்சிக்காலங்களில் இன்னும் மோசமாக மாறி விட்டது. நம் மக்களும் கொஞ்சம் கொஞ்சமாக 'நமக்கென்ன வந்தது' மனநிலைக்கு வந்து விட்டார்கள். 

இவ்வளவு ஏன், முருகதாஸ் கூட கண்டிப்பாக அரசுப்பள்ளியில், அரசு கொடுத்த இலவச பஸ் பாஸ் வசதியைக் கூட பயன்படுத்தி இருக்கலாம். இப்போது இலவசங்கள் வேண்டாம் என்கிறார். மனிதன் ஒரு நிலையில் இருந்து கொஞ்சம் மேலே போன பிறகு, கீழே இருப்பவர்களைப் பார்த்தால் இளக்காரமாகாத்தான் இருக்கும். இன்னொன்று, நாம் எப்போது கடைசியாக உபயோகித்தோமோ, அதே நிலைமையிலேயே இன்னும் இருக்கும் என்று நினைக்கிறோம். இதுதான் சாதாரண மனிதனுக்கான பிரச்சினை. 

சரி விடுங்கள். யாருக்கு வாக்களிக்கலாம் என்று முன்பே ஒரு முறை எழுதியுள்ளேன். அதேதான் இப்போதும். "அப்ப நீ சொன்ன மக்கள் நல கூட்டணி என்னாச்சு பாத்தல்ல" என்பவர்களுக்கு, உண்மைதான். அது ஒரு உப்புமா கூட்டணி என்பது தெரிந்ததுதான். மாற்று சக்தி என்பதே நமக்கு இல்லை. 

உப்புமா என்றவுடன்தான் இப்போது உலாவும் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.உப்புமா வேண்டாம் என்று எல்லோரும் வேறு வேறு உணவுகளுக்கு மக்கள் வாக்களிக்க, கடைசியில் உப்புமாவே வெல்கிறதாம். மற்ற மாநிலங்களில் எப்படியோ, நம்மூர் மக்கள் வித்தியாசமானவர்கள். பார்ப்போம். 

மீண்டும் சொல்கிறேன். மாற்றம் ஒரே நாளில் நிகழாது.