Sunday, April 25, 2021

அரசியல் விளையாட்டு!

தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே அரசியல் பதிவு ஒன்று போட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், மடிக்கணினியில் சில பல பிரச்சினைகள், ஊரில் வேறு அலைபேசியின் இணையம் மிகவும் மெதுவாக இருந்ததால், அலுவலக வேலைக்கே நேரம் சரியாக இருந்தது. அது சரி, நாம சொன்ன மாதிரியா எல்லோரும் ஓட்டு போட போறாங்க? 


அப்போது இருந்த கட்சிகளும் மாறவில்லை, ஆனால், அப்போது இருந்த இரு பெரும் ஆளுமைகள் இப்போது இல்லை. ஆளுமை என்றே யாரும் இல்லை இப்போது. எனவே கருத்துக்கள் கொஞ்சம் மாறி உள்ளன. . 

திமுக: 

2006-11ல் ஆடிய ஆட்டத்தினால், 2011ல் அடி விழுந்தது. 2014ல் அது படு தோல்விக்கு வழி வகுத்தது. ஆனால், அப்போது இருந்த அதிமுகவும், தேமுதிகவும், பாமகவும் அதை சரியான முறையில் பயன்படுத்தி இருந்தால், 2016ல் திமுக என்ற கட்சியே இல்லாமல் போயிருக்கலாம். ஆனால், ஆட்சியைப் பிடிக்கும் போல என்ற அளவிற்கு வந்த திமுக, 2019ல் 38 பாராளுமன்ற தொகுதிகளைக் கைப்பற்றி உள்ளது, அதுவும் கருணாநிதி இல்லாமல். இப்போது பாஜாகவிற்கு தாங்களே மாற்று என்ற பலம் அவர்களின் உள்ளது. அதனாலேயே அவர்கள் வெற்றி பெரும் வாய்ப்பு அதிகம் என்பது என் கணிப்பு. 

அதிமுக: 

ஜெயலலிதா மறைவு, பன்னீரின் தர்ம யுத்தத்திற்கு பின் எடப்பாடி ஆட்சிக்கு வந்தவுடன், இன்னும் எத்தனை நாளோ என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், எல்லா எண்ணங்களையும் தவிடு பொடியாக்கி 4 வருடங்களை கடந்து விட்டார். 2019ல், முடிந்த அளவு சம்பாதித்து விட்டு ஓடி விடலாம் என்ற எண்ணத்தில்தான் இருந்திருப்பார்கள் போல. ஆனால், அப்போது நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி நம்பிக்கையை கூட்டி, இப்போது தைரியமாக, எப்படியும் 40+ வாங்கி எதிர்க்கட்சியாகி விடுவார்கள் போல. 

ஆனால், அடுத்த தேர்தல் வரை இந்த கட்சி இருக்குமா, அப்படி இருந்தாலும் இதே போல கூட்டணிக்கும் தலைமை தாங்கும் அளவிற்கு இருக்குமா என்பது சந்தேகம்தான். ஆட்சியில் இருக்கும்போதே பயப்படுவார்கள். அடுத்த முறை, பாண்டிச்சேரி போல ஒரு 20 இடங்கள் வாங்கிக்கொண்டு யாருக்காவது ஆதரவு அளிப்பார்கள் என நினைக்கிறேன். அது திமுகவிற்காக கூட இருக்கலாம். கட்சி உடையலாம், அல்லது உடைக்கப்பட்டு சாதி கட்சியாக கூட மாற வாய்ப்பு உள்ளது.

இந்த கட்சிகள், இந்த தேர்தலில் எல்லாம் நாங்களும் இருக்கிறோம் என்று காண்பித்தால் மட்டும் போதும். அடுத்த 5 வருடங்களில் ஸ்டாலின் தான் ஒரு நல்ல தலைவர் என்று நிரூபிக்க வேண்டும். எடப்பாடி தான் ஒரு நல்ல எதிர்க்கட்சி தலைவர் என்று காட்ட வேண்டும். மிரட்டலுக்கு பதுங்கலாம் ஆனால், அடி பணிய மாட்டோம். எங்களுக்கு மாற்று நாங்களே என்று நிரூபிக்க வேண்டும். 

அதை விட்டு விட்டு உதயநிதியை முன்னிறுத்துவது, முடிந்தவரை சம்பாதிக்கலாம் என்று நினைத்தால், பொன் முட்டையிட்ட கோழி கதைதான். பல நல்ல ஆளுமைகள் இரு கட்சிகளிலும் இருக்கிறார்கள். அவர்களை அடுத்து முன் நிறுத்தினால் மட்டுமே உருப்படும் 

பாமக: 

'எங்களுக்கும் குடும்பம், குழந்தை இருக்குல்ல, பசிக்கும்ல' என்று அடக்கி வாசிக்கிறார்கள். நமக்குன்னு அடிமைங்க இருக்காங்க. அவங்கள வச்சி அப்பப்ப காசு பார்த்துக்கலாம் என்று எண்ணுவார்கள் போல. சாதி இருக்கும் வரை, அவர்களுக்கு கவலை இல்லை. 

மக்கள் நீதி மையம்: 

எனக்கு கமலின் நடிப்பு மிகவும் பிடிக்கும். அதற்காக அரசியலிலும் நடித்தால் எப்படி. முன்பொரு காலத்தில் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு, ஏன் என்று கேட்டார். மக்களுக்கு நல்லது செய்ய என்றார்கள். நான் இப்போதே நல்லது செய்து கொண்டுதான் இருக்கிறேன். நல்லது செய்ய அரசியலுக்கு வர வேண்டும் என்று தேவையில்லை என்றெல்லாம் கதை விட்டார்.

இப்போதோ நடிச்சா ஹீரோதான் எனப்து போல, ஜெயிச்சா CMதான் என்கிறார். இட ஒதுக்கீடு பற்றி கேட்டால் பதுங்குகிறார், 100 நாள் வேலை திட்டம் மக்களை சோம்பேறி ஆக்குகிறது என்கிறார். திட்டத்தின் குறைகளை களைவது பற்றி பேச மாட்டேன் என்கிறார். கோவை தெற்கு தொகுதிக்கு என் செய்கிறார் என்று பார்ப்போம்.  

மதிமுக, விசி: 

ஒட்டுண்ணி போல பழகி விட்டார்கள். திருமாவின் தொலை நோக்கு பார்வை மீது நம்பிக்கை உள்ளது. ஆனாலும் சாதிக்கட்சி, மற்ற சாதிகளின் மீதான பார்வை மட்டுமே பிரச்சினை. நல்ல ஆளுமையாக வளர்வது தமிழகத்திற்கு நல்லது. வைகோ, என்ன சொல்ல. அவ்வளவுதான். 

நாம் தமிழர் பற்றி எல்லாம் கூற ஒன்றுமில்லை. 

பாஜக: 

கண்டிப்பாக இவர்களது குறிக்கோள் 2031 அல்லது 2036ல், கண்டிப்பாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதுதான். நீ முன்னாடி போட்ட பதிவுல எல்லாம், இந்த திமுக, அதிமுக எல்லாம் நெறைய கொள்ளை அடிச்சுது, அது எல்லாத்தையும் ஒழிக்கணும்னு சொன்ன. அப்ப அதுக்கு சரியானது பாஜக தானே என்று கேட்பது புரிகிறது. 

நிறைய தமிழ்ப்படங்களில் நாயகன் சிறு சிறு திருட்டுகள் செய்வார், மக்களுக்கு கோபம் இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. திடீரென ஒரு பெரிய வில்லன் வருவான். அவனால் எல்லாமே அழியும் என்று தெரிந்தவுடன் அவனை எதிர்த்து நாயகியுடன் இணைவார்கள். அதேதான் இங்கேயும். இப்போது கூட இரு திராவிட கட்சிகளும் ஓட்டிற்கு பணம் கொடுத்துள்ளனர். எனவே கண்டிப்பாக திருடுவார்கள். 

ஆனால் பாஜக விஷம். வட இந்தியாவில் பார்த்தீர்கள் என்றால், இவர்கள் எதிரிகளை அழிக்கிறார்கள். அதாவது ஒரு ஆள் மட்டும் ஓடி ஜெயிப்பது போல. அது மிகவும் ஆபத்தானது. நம்மூரில் இரண்டு கட்சிகள் இருந்ததாலேயே நம்மால் இவ்வளவு முன்னேற முடிந்தது.  

அடுத்து ஒரு தலைவர் தன்னை நிரூபிக்கும் வரை நமக்கு வேறு வழி இல்லை. காத்திருப்போம்.