Sunday, November 13, 2016

பணமாற்றம் 1!1

ஏற்கனவே 110 பதிவுகள். 111க்கான சரியான தீனி கிடைக்காமல் இருந்தேன். இதோ மோடி சொல்லி விட்டாரே. ஆரம்பிச்சுட வேண்டியதுதானே. முதலிலேயே சொல்லி விடுகிறேன். நான் இந்தக் கட்சியையும் சேர்ந்தவன் கிடையாது.

நான் நினைக்கும் நன்மைகள் என்னவென்றால்,

கண்டிப்பாக கறுப்புப் பணம் வெளியில் வந்து விடும். எல்லாருடைய பணமும் அல்ல. யார் யாரெல்லாம், கணக்காளர்கள், தணிக்கையாளர்களை (ஆடிட்டருக்கு தமிழில் என்ன?) நம்பாமல், கட்டு கட்டாக சேர்த்து வைத்தவர்கள் மட்டும்.

உண்மையில் கறுப்புப் பணம் பற்றி பேச நமக்கு அருகதையே இல்லை. கட்ட வேண்டிய 10 சதவிகித வரிக்கே, தந்தைக்கு வாடகை கொடுக்கிறேன் என கணக்கு கொடுப்பது, சொந்த வீட்டில் இருந்து கொண்டு வாடகை வீடு என கணக்கு காண்பிப்பது, ஏமாற்றி வாங்கும் மருந்து பொருட்களின் ரசீதுகள் என்று எவ்வளவோ.

தெரிந்தோ, தெரியாமலோ கள்ள நோட்டை வைத்திருப்பவர்கள்.

பெரும்பான்மையான மக்களின் பணம் வங்கிகளுக்கு வந்து சேரும். நிறைய பரிமாற்றங்கள், பணம் மூலமாக அல்லாமல், மின்னனு முறையில் நடைபெறும்.

வேறு வழி இன்றியோ தினசரி கூலி வேலை செய்பவர்கள் கூட அரசின் கண்காணிப்பிற்கு உள் வந்து விடுவார். இதனால், தவறான வேலைகள் செய்து சம்பாதிப்பவர்கள் மாட்டுவர். 

வருமான வரி கட்டுபவர்கள் எண்ணிக்கை கூடும்.

ஆனால்.

என்னடா இழுவை என்றால், கீழ்க்காணும் காரணங்கள்தான்.

வெறும் 4 மணி நேரத்திற்கு முன், மக்களிடையே அறிவித்தது.

சரியான திட்டமிடல் இல்லை.

நாட்டில் சிறு வணிகர்கள்தான் அதிகம் என்று தெரிந்தும், அவர்கள் தினசரி காலையில் பணம் எடுத்து, பொருள் வாங்கி, வியாபாரம் செய்து, வாங்கிய பணத்தை மாலையில் திருப்பிக் கொடுத்து, லாபத்துடன் வீடுகளுக்கு செல்பவர்கள். அதிகளவில் பாதிக்கப்படப் போவது சாதாரண பொது மக்கள் என்று தெரிந்தும், இதை அவசர அவசரமாக செய்தது.

நான் ஒன்றும் பெரிய பொருளாதார நிபுணன் இல்லை. இருந்தாலும், எப்படி செய்திருக்கலாம் என்று யோசித்தவை.

முதலில், புது 500 ரூபாய் நோட்டை எப்போதும் போல உள்ளே விட்டிருக்கலாம். பொதுவாக (சரி சினிமாவில்), யாரும் கறுப்புப் பணமாக அல்லது பரிவர்த்தனையில் புது நோட்டை வாங்குவதில்லை. பழைய நோட்டுக்களையே வாங்குகிறார்கள். எனவே, இன்னும் கொஞ்ச நாள் கழித்து பழைய 500 ருபாய் நோட்டுக்கள் செல்லாது என்று சொல்லி இருக்கலாம். இது சற்றே மொக்கைதான்.

முதலில் புது 500 ருபாய் நோட்டுக்களையே மாற்றி இருக்க வேண்டும். ஒரு 2000 ருபாய் நோட்டை வைத்து ஒரு சாதாரண அத்தியாவசிய தேவைக்கு என்ன செய்ய முடியும். 1000 ரூபாய்க்கு பொருள் வாங்கி, 2000 ருபாய் நோட்டு கொடுத்தால், கடைக்காரர் சொல்வார், "உங்களுக்கே சில்லறை கொடுத்துட்டா, மத்தவங்களுக்கு நான் எங்க போறது" என்று. அதையேதான் வாடிக்கையாளரும் சொல்வார்.

இன்றோடு 5ஆவது நாள். இன்றும் சகஜ நிலை திரும்பவில்லை. நான் சென்னையில் மட்டும் சொல்கிறேன். இன்றும் கூட வங்கிகளில் வெறும் 2000 ருபாய் நோட்டையே தருகிறார்கள். 100 மற்றும் அதற்கு குறைவான நோட்டுக்கள் ஒரு சிலருக்கே கிடைக்கின்றன.

முதலில் ஒவ்வொரு வங்கியிலும் எத்தனை வாடிக்கையாளர்கள், நாளொன்றுக்கு எவ்வளவு வரவு என்று பார்த்து, அதற்கேற்றாற்போல பணம் அனுப்பி இருக்க வேண்டும். அல்லது, வங்கிகள் வந்த பணத்தை, அதற்கேற்றாற்போல, ஒவ்வொருவருக்கும் இவ்வளவு என்றாவது திட்டமிட்டிருக்க வேண்டும்.

சென்னை, குரோம்பேட்டையில் உள்ள ஒரு பெரிய வங்கிக்கு, நாளொன்றுக்கு 10 லட்ச ரூபாய்க்கு புது நோட்டு வருகிறது. அவர்கள் வங்கிக் கணக்கு உள்ளவர்களுக்கு மட்டும், 10000 கொடுக்கின்றனர். எனவே 100 பேருக்கு மட்டுமே கிடைக்கிறது. அதிலும் முதலில் செல்வோர், கெஞ்சியோ மிரட்டியோ 50, 100 ரூபாய் கட்டுக்களை வாங்கி விடுகின்றனர். கடைசியில் செல்வோருக்கு 2000 ருபாய் நோட்டுக்கள் மட்டுமே கிடைக்கிறது.

ஊடகங்களின் அனாவசிய பயமுறுத்தல்.

மோடி அறிவித்த உடனே, ஊடகங்களில் வந்த செய்தி, இனி 500, 1000 செல்லாது. "இவனுங்க நல்லா சொன்னாலே, நரித்தனமா இருக்கும். நரித்தனமாவே சொன்னா?" உடனே எல்லோருக்கும் பயம். சில பேர் அப்போதே கையில் இருந்த பணம் முழுவதையும் செலவு செய்த கதையும் நடந்தது. தெளிவாக "பயப்பட தேவையில்லை" என்ற விவரம் தெளிவாக சொல்லப்படவே இல்லை. மிக விவரமாக இருந்த வணிகர்கள், இதை சாதகமாக்கி நல்ல வியாபாரமும் செய்தார்கள்.

ஏற்கனவே செய்திகளில் கேள்விப்பட்டவரை, இரு குழந்தைகள் இந்தப் பண விஷயத்தில் உயிரிழந்துள்ளனர். பணமில்லாமல் இறப்பதே மிக கொடுமையான விஷயம். இதில் கையில் பணம் இருந்தும், இவ்வாறு நடப்பது என்ன சொல்ல.

80:20 என்ற கருத்து உண்டு. அதாவது நாட்டில் 80 சதவிகித செல்வம், 20 சதவிகித ஆட்களிடம்தான் உள்ளது. இன்னொரு 20 சதவிகித ஆட்கள் அன்றாடம் காய்ச்சிகள். இதில் நடுவே உள்ள 60 சதவிகித மக்கள், நடுத்தர மக்கள் (பிச்சை எடுக்கவோ, பிச்சை போடவோ வழியில்லாமல் [உபயம் மதி-தினமணி], முகப்புத்தகம், கீச்சுகளில் புரட்சி செய்பவர்கள், பிரபல பதிவர்கள்) மோடிடா, வல்லரசுடா, விஜயகாந்த்டா என்றெல்லாம் கூவுகிறோம்.

நாம் அனைவருமே ஒரு லட்சம் சம்பளம் வாங்கினாலும், அதில் கையில் பணமாக எடுத்து செலவு செய்வது மாதத்திற்கு 2000 கூட இருக்காது. எனவே நம்மால் கருப்பு பணக்காரர்களின் கஷ்டமும் தெரியாது, சாமானியர்களின் வலியும் புரியாது.

இதைப்பற்றி விகடனில் வந்த கட்டுரை. விகடன் கட்டுரையில் வந்தது போல இந்தப் பணக்காரனும் வந்து வரிசையில் நிற்கவில்லை. ஒன்றும் தெரியாதவர்கள், நடுத்தர வர்க்கம், இவர்கள்தான். ராகுல் காந்தி நின்றார். உடனே விளம்பரம் என்று சொல்லி விட்டனர்.

சில பேர் "இலவசம் கொடுக்கும்போது நிக்கலயா, ஜியோ சிம் வாங்க நிக்கலையா, இப்போ நிக்க வலிக்குதா. நாட்டுக்காக ரெண்டு நாள் பட்னி கெடந்தா ஒன்னும் ஆவாது" என்றெல்லாம் கேட்கிறார்கள். என்னத்த சொல்ல.

நமது அரசியலமைப்பு சட்டம் சொல்வது "1000 குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது". ஆனால், மோடியின் கொள்கையோ "1000 ஏழைகள் பாதிக்கப்பட்டால் கூட பரவாயில்லை. ஒரு கறுப்புப் பணக்காரனாவது மாட்ட வேண்டும்" என்பதுதான். "காரில் போகும்போது நாய் குறுக்கே வந்தால் அடிபடும்" என்றவர்தானே.

இது குறுகிய நேரம். இதற்குள் நாம் எதையும் எதிர் பார்க்க முடியாது. காத்திருப்போம். ஆனால், நாம் நினைக்கும் நன்மைகள் அனைத்தும் நடக்கும்போது, இந்தியாவில் ஏழ்மையே இருக்காது. ஏனென்றால் ஏழைகளே இருக்க மாட்டார்கள்.

Tuesday, October 25, 2016

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

"என்னடா ரொம்ப நாளா ஆளக் காணோமே, அப்படியே ஓடிட்டானா?" என்றெல்லாம் யோசித்தவர்களுக்கும், "தப்பிச்சோன் சாமி" என்று எண்ணியவர்களுக்கும், "பயபுள்ள நல்லாத்தானே எழுதினான், என்னாச்சோ பாவம்!" என்று கூட எண்ணியவர்களுக்கும் எனது நன்றிகள்.மீண்டு(ம்) வந்து விட்டேன்.

ஒன்றும் பெரிய விஷயம் எல்லாம் இல்லை. வேறு நிறுவனம் மாறி விட்டேன். நான் சேர்ந்த நேரம் "சிக்குனாண்டா" என்று சற்றே போட்டு தாளித்து விட்டனர். இப்போதுதான் மூச்சு விடவே நேரம் கிடைத்தது. கிடைத்த நேரத்தில், இந்தப் பதிவு.

"நீ அடிக்கடி மாத்திக்கிட்டே இருக்கற மாறி தெரியுதே" என்கிறீர்களா? என்ன செய்ய. அந்தப் புலம்பலை தனியாக ஒரு பதிவில் சொல்கிறேன்.

மெட்ரோ:

நிறுவனம் மாறிய பிறகு, தங்கமணி, மகளை எங்கேயும் கூட்டிப் போகவில்லையே, "காந்தி ஜெயந்தி, ஆயுதபூஜை விடுமுறைகளில் கூட அவர்களை மட்டும் ஊருக்கு அனுப்பி விட்டோமே, கபாலி படத்திற்கு பின்னர், திரையரங்கமே போகவில்லையே" என பல எண்ணங்கள் வந்ததால், கடந்த வாரம் வெளியே கிளம்பினோம். "மெட்ரோ ரயில் வந்து வருஷமாச்சு, இன்னும் அதுல போன பாடில்லை" என்று எனக்கு(ம்) தோன்றியதால், விமான நிலையத்தில் இருந்து வடபழனி பயணம். சும்மா சொல்லக்கூடாது. கட்டணம் அதிகம் என்றாலும், அதற்கான மதிப்பு இருந்தது. "If you see, in America" என்று சொல்லியவர்கள் எல்லாம் மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு உள்ளது.

வடபழனியில் விஜயா போரம் மால் போனோம். ரெமோ படத்திற்கு இடமில்லை. எனவே, ஆண்டவன் கட்டளை படம் பார்த்து விட்டு, சாப்பிட்டு விட்டு, அங்கே உள்ள குழந்தைகள் விளையாடும் இடத்தில, விளையாட வைத்து விட்டு வந்தோம். குழந்தைக்கு 4 வயது ஆகி விட்டதால், எல்லா இடங்களிலும் சீட்டு வாங்க சொல்லி விட்டனர். அன்று மட்டும் ஆனா மொத்த செலவு அரை நாளும், 1500/- ரூபாயும். வீட்டுக்கு வந்தவுடன் தங்கமணி சொன்னது, "இன்னும் 3 மாசத்துக்கு வெளியவே போகக் கூடாது".

திரைப்படங்கள்:


ஜோக்கர், குற்றமே தண்டனை என்று பல படங்களை, திரையரங்கில் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். முடியவில்லை. ஆனாலும், அவற்றை இன்னும் நான் பார்க்கவும் இல்லை. இந்தியாவில், திரையரங்கில் ஓடி முடித்த படங்களை, வீட்டில் நியாயமாக பணம் கட்டிப் பார்க்கும் வசதி வந்து விட்டதா என்று தெரியவில்லை.

என்னைப் பொறுத்தவரை, ஒரு மாதம் கழித்து, யூடியூபில் விளம்பரங்களோடு விடலாம். அதுவே வருமானத்திற்கு வழி வகுக்கும். அல்லது பொதுவாக ஒரு வங்கி கணக்கு தொடங்கலாம். ஜோக்கர் படம் போல, அதற்காக மட்டும் இல்லாமல், பொதுவாக ஒரு கணக்கு. படம் பார்த்தா, அதற்கு பணம் அனுப்பலாம். இல்லையா. சும்மா இருக்கலாம்.

எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படங்கள் வந்தபோது, என் பெண், சிவகார்த்திகேயனின் விசிறி. விஜயும் பிடிக்கும். ஆனால், ரஜினி முருகன் படத்திற்கு பிறகு என்னவோ பிடிக்காமல் போய் விட்டது. சலீம் படம் பார்த்த பிறகு, விஜய் ஆண்டனியும், சேதுபதி படம் பார்த்த பின், விஜய் சேதுபதி விசிறி ஆகவும் மாறி விட்டாள்.

நாங்கள் முதலில் ரெமோ படம்தான் போகலாம் என முடிவு செய்திருந்தோம். அந்த என் வேடத்தை எல்லாம் காட்டி, என் பெண்ணை சம்மதிக்க வைத்திருந்தேன், ஆனால், டிக்கெட் இல்லாததால், சேதுபதி படத்தில் வநத ஆள் என்று சொல்லி, ஆண்டவன் கட்டளை போனோம். ஆனால், என் பெண்ணால், அது விஜய் சேதுபதி என்பதை ஒத்துக்கொள்ளவே முடியவில்லை. இது அந்த ஆள் இல்லை என்று சாதித்து விட்டாள். விஜய் சேதுபதி, அந்த இடத்தில் வென்று விட்டார்.

படம் பரவாயில்லை. இருந்தாலும், இன்னும் கொஞ்சம் நீளத்தைக் குறைத்திருக்கலாம். 

சில திரைப்படங்களை பார்த்தவுடனே, "அடடே, நல்லா இருக்கே. இதைப் பத்தி ஒரு பதிவு போட்டா, இன்னும் நெறைய பேர் படம் பாப்பாங்களே" என்று தோன்றும். அல்லது அதனைப் பற்றி மற்றவர்கள் நன்றாக எழுதியதால், தரவிறக்கம் செய்தாவது பார்க்கத் தோன்றும் (மெட்ரோ, உறியடி, அப்பா போன்றவை). 

இன்னும் பல படங்கள் உண்டு. அவற்றை பார்த்தவுடன், "அய்யய்யோ, உடனே, இதப்பத்தி சொல்லி, மத்தவங்கள காப்பாத்தணும்" என்று தோன்றும். சில படங்களை தரவிறக்கம் செய்து பார்த்தால் கூட, "அட ச்சீ" என்று தோன்றும். அப்படிப்பட்ட படங்கள், வாய்மை, நம்பியார், அட்றா மச்சான் விசிலு, திருநாள் போன்றவை. "ப்ப்பா, முடியல, உங்களுக்கு காசு கொடுத்து பாக்க சொன்னா கூட பாக்காதீங்க".

இப்போதைக்கு அவ்ளோதான். ஆனாலும், உங்களை விட மாட்டேன்.

Wednesday, August 17, 2016

கபாலி - இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருக்கலாம்!

கபாலி படம் அறிவிக்கப்பட்ட உடனே, எல்லோரையும் போல எனக்கும் எதிர்பார்ப்பு எகிறியது. ஏனென்றால், ரஜினியின் வெற்றிக்கு மற்றவர்களும், பெரிய பின்னணி பட்டாளமுமே காரணம் என்றுதான் நான் சண்டை போடுவேன். ஆனால், இதில் ரஜினி தவிர மற்றவர்கள் எல்லோருமே கிட்டத்தட்ட புதியவர்கள், (நாசர் உள்ளார் என்பது கூட படம் வந்த பிறகே எனக்கு தெரியும்), ரஜினி வயதான வேடத்தில் நடிக்கிறார் என்றதும், இன்னமும் எதிர் பார்ப்பு கூடியது.

பாடல்கள் வெளிவந்த பிறகு எல்லோரும் "நெருப்புடா, நெருங்குடா" என்று கூவிக் கொண்டிருந்ததை வெறுப்புடா என்று பார்த்தாலும், அந்தப் பாடல் பிடிக்கவே செய்தது. அதே போல சங்கர் (அய்யய்யோ கோச்சுக்குவாரோ) ஷங்கர் போல ரகசியம் எல்லாம் வைக்காமல், இன்னார் இன்னார் இந்த இந்த வேடங்களில்தான் நடிக்கிறார்கள், இவர்களுக்குள் என்ன சம்பந்தம் என்பதுதான் கதை என்றே தைரியமாக ரஞ்சித் ரொம்ப நாள் முன்பு கொடுத்த பேட்டி. அட என்று எண்ண தோன்றியது.

படம் வெளிவருவதற்கு முன் தாணு செய்த அலப்பரைகளைப் பார்க்கும்போது எரிச்சல் வந்தாலும், அவர் ஒரு வியாபாரி, அப்படிதான் செய்வார் என்று தெரியும். எனவே விட்டு விடலாம். என் முதல் நாள் முதல் காட்சி மற்றும் லிங்கா பட பாதிப்புகளால், படம் ஓரளவு ஓடிய பிறகு, கட்டணமும் சாதாரண நிலைக்கு வந்த பிறகே நான் பார்த்தேன்.

படத்தின் பலம் முதலில் ரஜினிதான். தேவையில்லாத துவக்கக் காட்சி இல்லை, தலையை திருப்பும்போதெல்லாம் "விஷ்க், விஷ்க்" என்ற இசை இல்லை. ஆடிப் பாடும் காட்சிகள் இல்லை. இன்னும் சொல்லப் போனால், அடக்கி வாசித்துள்ளார் எனலாம்.

சிலர் சொல்கிறார்கள், நிறைய நாள் கழித்து ரஜினிக்கு நடிப்பதற்கான வாய்ப்பு அதிகம் என. இன்னும் முத்துசிவா போன்றோர், அப்படி எல்லாம் இல்லை, அவர் எல்லாப் படங்களிலுமே தனது தேர்ந்த நடிப்பைக் காட்டியுள்ளார் என்கிறார்கள். ஆனால், அவையெல்லாம் ஊறுகாய் போல, இதில் கிடைத்த வாய்ப்புகள் நிறைய. குறிப்பாக மனைவி, மக்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள், மாயநதி பாடல் உள்பட.


பலவீனம் முதலில் திரைக்கதை. முதல் பாதி முடியும்போதே படம் முடியப்போகிறதோ என்று என்னும் அளவிற்கு இருந்தது. வெறும் 75 நிமிடங்கள்தான் முதல் பாதி, ஆனால், ரொம்ப நேரம் போல தோன்றியது. அந்த துப்பாக்கி சண்டையின் போது, ஒரு வேளை அந்த வெளிநாட்டு வில்லனும், கிஷோரும் இருந்திருந்தால், படம் அங்கேயே முடிந்திருக்கும். அப்பாடா என்றிருக்கும். சரி பரவாயில்லை என இடைவேளை முடிந்து வந்தால், ரஜினி சவால் விடுகிறார். "அட, இப்போ இடைவேளை விட்டிருந்தா நல்லா இருக்குமே" என்று எனக்கு மட்டும்தான் தோன்றியதா என தெரியவில்லை.

அதே போல முதல் பாதியில் நிறைய பாத்திரங்கள். யார் யார் என்றே புரியவில்லை. நான் ரொம்ப நேரம் கலையரசன் நாசரின் பையன் என்று நினைத்தேன், பின்னர்தான் தெரிந்தது அது பேரன் என்று. அட்டக்கத்தி தினேஷின் பாத்திரமே தேவையில்லை. இது போல பல குழப்பங்கள். அதே போல முதல் பாதியில் மனைவியை தேடுவது வந்திருந்தால் ஒரு வேளை இரண்டாம் பாதி வேகமாக முடிந்திருக்குமோ என்னவோ. ஒரே நாளில் கெட்டவர்களை அழிப்பதை, முன்னமே செய்திருக்கலாமே என்றெல்லாம் தோன்றியது.

ஆனாலும், எல்லாவற்றையும் தாண்டி, ரஜினி என்றால் இப்படித்தான் என்று எண்ணுபவர்கள் கண்டிப்பாக இந்தப் படத்தைப் பார்த்தால், தங்களது எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். படத்தில் இன்னொரு ஆச்சரியம், 'டைகர்' வேடத்தில் வருபவர், மெட்றாஸ் படத்தில் வரும் 'ஜானி' வேடத்தில் நடித்தவர் என்பதுதான். "நடிகன்டா, நீ நடிகன்டா".

படத்தைப் பற்றிய அரசியல் எதுவும் நான் பேசவில்லை. இருந்தாலும் சிலவற்றை மட்டும் கூற விரும்புகிறேன். பொதுவாக மலேசிய வாழ் தமிழர்கள், இங்கிருந்து குடிபெயர்ந்து சென்ற தமிழர்களை மதிப்பதில்லை, 'ஊர்நாட்டான்' என்றெல்லாம் அழைப்பார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன். படத்தில் அது போன்ற அரசியல் எதுவும் காட்டப்படவில்லை. சரி கதை மலேசிய வாழ் தமிழர்கள் பற்றி மட்டும் வருவது, விட்டு விடலாம். மலேசிய வாழ் தமிழர்கள் என்ன கஷ்டப்படுகிறார்கள் என்றும் தெரியவில்லை. ஒரே காட்சியில் வந்து, போய் விடுகிறது.

ஒரு வேளை நன்றாகவே காண்பித்திருந்தாலும், நம் மண்டைக்கு அது உரைக்காது. அனேகன் படத்தில், பர்மாவில் வாழ்நத தமிழர்கள் எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தப்பட்டு, நம்மூருக்கு திருப்பி அனுப்பப்பட்டார்கள் என்று காட்டுவார்கள். நாம் யாரும் அதைப்பற்றி மதிக்கவேயில்லை. அதே போல இதையும் கடந்திருப்போம்.

படத்தின் இறுதிக்காட்சியில் இது நாயகன் போல போல இருக்குமா அல்லது தேவர் மகன் மகன் போல இருக்குமா என்ற குழப்பம் எனக்கு வந்தது. உண்மையில் அப்படி ஒரு முடிவு வைத்ததில் மக்கள் மற்ற குறைகளை மறந்து "என்ன நடந்திருக்கும்" என்ற குழப்பத்திலேயே இருப்பார்கள் என்றுதான் வைத்துள்ளார்கள் போல.

இந்தக் கருத்துகள் யாவும் என்னுடைய ஆதங்கமே. எத்தனை பேர் முதலில் வந்த அந்த திருட்டு விசிடி காணொளியைப் பார்த்தார்கள் என்று தெரியவில்லை. நான் ஒரு 45 நிமிடங்கள் பார்த்திருப்பேன். அதில் நன்றாக கவனித்தீர்கள் என்றால், முதல் 10 நிமிடங்கள் திரையரங்கில் ஒரே ஆரவாரமாக இருக்கும். அதற்குள்ளாகவே, டீசரில் வந்த காட்சிகள் எல்லாம் வந்திருக்கும். அதன் பின், அனைவரும் மிக அமைதியாக பார்ப்பார்கள். ஒரு சப்தமும் இருக்காது. 10 நாட்கள் கழித்து நான் திரையரங்கில் பார்க்கும்போதும் அதே நிலைதான்.

ரஜினி அவர்களே. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையாவது, இதே போல நடியுங்கள். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், ரஜினியை ரொம்பவும் கஷ்டப்பட வைக்காமல், அதே சமயம் வணிக நோக்கிலும் எடுக்க சரியான ஆள் ஹரிதான். ஒரு முறை முயன்று பாருங்கள். 

ரஜினியின் தற்போதைய மதிப்பிற்கு, அந்தளவிற்கு கனமான கதாபாத்திரமும் மிகவும் முக்கியம். அதே போல ரஜினி முழுவதும் கெட்டவனாக ஒரு படத்தில் , (நாயகனாக அவரே நடிக்காமல்) வர வேண்டும், ஏனென்றால், வில்லனுக்கு என ரசிகர் பட்டாளத்தை, முதலில் உருவானது அவருக்குத்தான்.

சந்திரமுகி படத்தில், 'ரா ரா' பாடலில் அவர் வரும்போது, 'ஜோதிகா எப்படி?' என ஒரு ராஜகுரு போன்ற ஒருவரிடம் கேட்பார். அதற்கு அவர் சைகையில் சொல்லும் பதிலும், அதற்கு ரஜினி கொடுக்கும் எதிர்வினையும் செம. எந்திரன் படத்தில், அது ஓரளவிற்கு திருப்தி அடைந்தாலும், ரஜினியால் இன்னும் முடியும். காத்திருப்போம்.

Thursday, June 9, 2016

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

சூடான செய்திகள் ஒன்றுமில்லை. ஆறிய பழங்கஞ்சிதான்.

தேர்தல் முடிவுகள்:

ஓரளவு எதிர்பார்த்ததுதான். எண்ணெய் சட்டியா, அடுப்பா என்பதுதான் சந்தேகமே. ஆனாலும் நம் மக்கள் மிக மோசம். என்ன செய்ய. தொங்கலில் விடுவார்கள் என்று பார்த்தேன். எனக்கென்னவோ புலியின் நகத்தைப் பிடுங்கி பல்லில்லா சிங்கத்திற்கு அதைக் கட்டியது போல உள்ளது. (புரிஞ்சுதா?).

அதிமுக 200ல் வென்று திமுக காணாமல் போயிருந்தால் கூட பரவாயில்லை. ஆனால், திமுக முன்னேறி வந்துள்ளது, அதிமுக சற்றே பின்னடவை சந்தித்துள்ளது. "நாங்கதான் ஆளுங்கட்சி" என்பவர்களைப் பார்த்தால் நினைவுக்கு வருவது "ஏழாவது பாசுன்னே, பத்தாப்பு பெயில்னே".

ஆனாலும், நான் சொன்னது போல பல இடங்களில் NOTA வெற்றி வாய்ப்பை மாற்றியுள்ளது. இன்னும் குறிப்பாக சொன்னால், 22 தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் நோட்டா வாக்குகளையும் விட குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். அதில் அதிமுக 14ல் வெற்றி, திமுக 8ல் வெற்றி. அதுவரை சந்தோஷம். இரு கட்சிகளும் அதை உணர்ந்து கொண்டால் நல்லது.

24 விமர்சனம்:

அப்படி ஒன்றும் ஆஹா ஓஹோ என்றெல்லாம் இல்லை. இதுவரை வந்த காலப் பயண படங்களை விட இதில் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும், கேவலமாக இருந்தது. இதைப் பற்றி பதிவர் முத்துசிவா தெளிவாக விளக்கியுள்ளார். இருந்தாலும் மாசு, அஞ்சான் படங்களுக்கு இது பரவாயில்லை. "என்னடா இப்படி சொல்ற" என்பவர்களுக்கு, "நான் ஒரு பிரபல பதிவர்ங்க, எனக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம்"

இளையராஜா:

தேசிய விருது சர்ச்சை பற்றி எனது கருத்து. பழசி ராஜா படத்திற்கு விருது கொடுத்த போதே ராஜா அதை வாங்கவில்லை. அப்போதும் கூட தனித்தனியாக கொடுப்பதை எதிர்த்தார். இப்போது ஏன் அதை பெரிய விஷயமாக்கினார்கள் என தெரியவில்லை. எனது சில கருத்துகள். கங்கை அமரன் முந்திக்கொண்டு ராஜாவை வம்புக்கிழுத்தது பொறாமையா என தெரியவில்லை. ஆனாலும், தீயை அணைக்க எதிர்ப்பக்கம் தீப்பற்ற வைப்பது போல எனக்குத் தோன்றியது.

பாடல்கள் முதலில் அது வரும் காட்சிகள் மட்டும் சொல்லப்பட்டு மெட்டு போடப்படுகிறது. ஆனால், பின்னணி இசை, படம் முடிந்த பிறகு போடுவது. எனவே, அதில் இன்னும் அதிக ஈடுபாட்டுடன் இசையமைக்க முடியும். எனவே, பின்னணி இசைக்கு தனியாக விருது கொடுப்பது தப்பில்லை.

இசைக்கு கட்டாயமாக இரண்டு விருதுகள் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. பாடல்கள் இல்லாத அல்லது நிஜமாகவே பின்னணி இசை நன்றாக இருந்தால், கண்டிப்பாக தனியாக கொடுக்கலாம்.

கமல்:

சபாஷ் நாயுடு படத்திற்கு எதிர்ப்பு. மக்களுக்கு திரையில் நல்லவர்களாக நடிப்பவர்களைப் பிடிக்கிறது. நிஜ வாழ்க்கையில் எப்படி இருந்தாலும் கவலை இல்லை போல. படத்தில் சிறு குழந்தைகளை பிச்சை எடுக்க வைப்பவர்களை ஓட ஓட அடிக்கும் நாயகன், சாலையில் அவர்களுக்கு ஐந்து பைசா கொடுத்தாரா என்று தெரியாது.

நிஜத்தில், மகள்களின் சான்றிதழ்களில் சாதி, மதம் என்ற இடங்களில் இல்லை என்ற சொன்னவர், திரையில் வரும் கற்பனைப் பாத்திரத்திற்கு சாதிப் பெயரை வைத்து விட்டார் என்று குதிக்கிறார்கள். தேவர் மகன் படத்தால் பெரிய பிரச்சினை வந்தது என நிறைய பேர் சொல்வார்கள். விவரம் தெரியாத நிறைய பேர் எண்ணுவது "அந்த படத்துல அப்படி ஒன்னும் இல்லையே" என்றுதான்.

ஆனால், அந்தப் படத்தில் வரும் பாடல், அதைப் பாடிய நபரின் சாதி, அதை வைத்து உயர் சாதியினர் தாழ்த்தப்பட்டோரை செய்த கிண்டல் கேலிகளும் ஒரு காரணம். உண்மையில் போராட வேண்டியது முத்தையா, பிரபாகரன் போன்ற இயக்குனர்களிடம்தான். கமலிடம் அல்ல.

ரொம்ப நாள் முன்பு "யாருடா மகேஷ்" என்ற படத்தின் டிரைலர் (மட்டும்) இணையத்தில் சக்கை போடு போட்டது. அதில் ஒரு வசனம் வரும் "ரத்னவேலுவை சுருக்கமா ரேண்டின்னு கூப்புட்டா, குழந்தைவேலுவை என்ன கு​​_டின்னு கூப்பிடுவீங்களா?" என்று.


உடனே, திரை உலகில் சில பேர் இது ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவை நக்கல் செய்வது போல உள்ளது எனக் குதிக்க, படத்தின் இயக்குனர் சொன்னார், "இந்த வசனத்திற்கு குழந்தவேலுதான் கோபப்படனும், ஏன் ரத்னவேலு குதிக்கிறார்?" அதே போல உண்மையில் நாயுடுக்கள் தான் போராட்டத்தில் இறங்க வேண்டும் கமல் தங்களை மட்டம் தட்டும் விதமாக படம் எடுக்கிறார் என.

அவ்வளவுதாங்க. மறுபடியும் ஏதாவதுன்னா ஒரு பதிவு போடுறேன்.

Friday, May 13, 2016

யாருக்கு வாக்களிக்கலாம்?

ஏற்கனவே தமிழக அரசியல் கட்சிகள் பற்றிய எனது பார்வை. அதைப் படித்து விட்டு இங்கே வந்தால் நலம்.

சரி இனி யாருக்கு வாக்களிக்கலாம் என்று யோசிப்போம்..

நோட்டா (NOTA):

'சார். இது வேஸ்ட். 49ஓ படம் பாத்தீங்களா. அதுல கவுண்டமணி சொல்வாருல்ல. இதுல நாம ஓட்டு போட்டா, கெட்டவனுக்கு போடலேன்னு வேணா ஆறுதல் அடையலாம். அதுக்கு யாருக்காவது சுயேச்சைக்கு போடலாம்" என்கிறார்கள். "எப்படி இருந்தாலும் 100க்கு 99 பேர் நோட்டாவுக்கு போட்டாலும், அந்த ஒரு ஓட்டு யாருக்கு விழுதோ, அவங்கதான் ஜெயிச்சவர் அப்டிங்கும்போது ஏன் இந்த நோட்டா" என்ற கேள்வியும் வரலாம். கொஞ்சம் பொறுங்கள். படியுங்கள்.

இப்போது விஜயகாந்திற்கு ஏன் இத்தனை தேவை என்று தெரியும் அல்லவா. அதையே நாம் ஏன் நோட்டாவிற்கு உருவாக்கக் கூடாது? அனைவருமே நோட்டாவிற்கு போட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால்,ஒரு தொகுதியில் 100 ஓட்டுகள், 4 வேட்பாளர்கள் முறையே 25, 20, 15, 10 ஓட்டுகள் வாங்குகிறார்கள். 10 பேர் ஓட்டே போடவில்லை. 20 பேர் நோட்டாவிற்கு போடுகிறார்கள். இப்போது வெற்றி வாய்ப்பை மாற்றியதில் முக்கிய பங்கு நோட்டா.

ஒரு கட்சி வேட்பாளர் இன்னொருவரின் வெற்றி வாய்ப்பைப் பறிக்கிறார் என்றால், அவரை, அந்தக் கட்சியை சரிக் கட்டுவது சுலபம். நோட்டாவில் வாக்களித்தவர்களுக்கு? இதே போல நிறைய தொகுதிகளில் நோட்டா கணிசமான வாக்குகள் வாங்கினால்? வேறு வழியில்லை. மக்களுக்கு ஏதாவது செய்தால்தான் அடுத்த முறை வேட்பாளர்களுக்கு ஓட்டு விழும். இல்லையென்றால், நோட்டாவிற்கே போகும் என்ற பயம் வரும். வர வேண்டும். இன்னும் குறிப்பாக சொன்னால், இளைஞர்கள் அனைவருமே நோட்டாவிற்கு வாக்களிக்க வேண்டும்.

பொதுவாக தாத்தா, பாட்டி இருவரும் சின்னங்களுக்கே வாக்களிப்பார்கள். பெற்றோர் கட்சி பார்த்து வாக்களிப்பார்கள். அதாவது பெரிய கட்சி போட்டியிடவில்லை என்றாலும், அதன் கூட்டணி கட்சிக்கு வாக்களிப்பார்கள். நானும், தங்கமணியும் (மிரட்டியாவது, அதாவது காலில் விழுந்து) நோட்டாவிற்கு.

"சொல்றது எல்லாம் சரிதாம்பா, ஆனா, நீ சொன்ன மாதிரி இந்த தேர்தலில் நோட்டாவுக்கு போட்டா இப்ப எதுவும் நடக்காதுல்ல, அடுத்த தேர்தலில்தான ஏதாவது நடக்கும்" என எண்ணாதீர்கள். அடுத்து உள்ளாட்சி தேர்தல் வரும், 3 வருடங்களில் பாராளுமன்ற தேர்தல் வரும். நல்லது நடக்கும் என காத்திருப்போம். இத்தன வருஷம் பொறுத்தாச்சு. இன்னும் கொஞ்ச நாள் பாப்போமே.

வேட்பாளர்:

"அதெல்லாம் முடியாதுங்க. நான் யாருக்காவது ஓட்டு போட்டே ஆகணும்" என்று விருப்பமா. முதலில் உங்கள் தொகுதியில் 35 வயதுக்கு உட்பட்ட, ஓரளவு படித்த ஆள் உள்ளாரா என்று பாருங்கள். அவரிடம் இப்போது உள்ள சொத்து, அவர் சம்பாதித்து வாங்கியதா என்று பாருங்கள். "யோவ், எங்களுக்கு வேற வேல இல்லையா" என முனகாதீர்கள். சில வாரிசுகள் நிற்கிறார்களே, அவர்களைப் பற்றி சொன்னேன். இருந்தால் அவர் எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, நம்பி ஓட்டளிக்கலாம். மேஜையை தட்டினாலும், கொஞ்சம் நன்மை கிடைக்க வாய்ப்பு உண்டு.

பாமக, நாம் தமிழர் கட்சிகளில் சிலர் உள்ளனர். மொத்த வேட்பாளர் விவரங்கள் தொகுதி வாரியாக இங்கே பார்க்கலாம். பார்த்து முடிவெடுங்கள். எங்கள் ஊரில் கூட நாம் தமிழர் வேட்பாளருக்கு போடலாமா என்ற எண்ணம் உள்ளது. பார்ப்போம்.

கட்சி:

"முடியாது, நான் ஏதாவது கட்சி ஆளுக்குத்தான் போடுவேன்" என்பவரா. சரி, அப்படியென்றால் மக்கள் நலக் கூட்டணிக்கு வாக்களியுங்கள். அவசரப்படாதீர்கள். ஏன் என்று சொல்கிறேன். டெல்லியில் மாற்று சக்தி என்று கருதப்பட்ட ஆம் ஆத்மி என்ன சாதித்தது, இளம் ரத்தம் என்று வந்த அகிலேஷ் யாதவ் என்ன செய்தார், மோடியாலேயே முடியலாமா, விஜயகாந்த் செய்வாரா என்றெல்லாம் உடனே யோசிக்க வேண்டாம். விஜயகாந்தோ, மக்கள் நலக் கூட்டணியோ ஒரு மாற்றத்தையும் கொண்டு வர முடியாது என்பதுதான் உண்மை.

முதலில் இது ஒரு கூட்டணி ஆட்சியாக அமையும். எப்படியும் ஐந்து வருடங்கள் தாக்குப் பிடிக்காது. மக்களுக்கு நல்லது நடக்கிறதோ இல்லையோ, கெட்டது அதிகம் நடக்காது. இது பெரிய கட்சிகளுக்கு ஒரு பாடமாக அமையும். அதே போல திமுக, அதிமுகவிற்கு அடுத்துள்ள பெரிய கட்சி என்பது இதுதான். அது மட்டுமில்லாமல் அதிகாரம் ஓரிடத்தில் குவியாமல் இருக்கும். கூட்டணியின் பலமும், விஜயகாந்தின் தலைமை லட்சணமும் தெரியும். அதை விட முக்கியம், கருணாநிதி, ஜெயலிதா இருவரை விட நல்லதாகவோ, கெட்டதாகவோ வைகோ, விஜயகாந்த் இருவரும் மக்களிடையே தேர்தல் இல்லாத போது கூட ஓரளவு தொடர்பில் இருந்தனர்.

ஏன் பாமக, நாம் தமிழர் வேண்டாம் என்றால், இதேதான் காரணம். இரு கட்சிகளும், தங்களுக்கு சாதகமான தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டு, வெற்றி பெற்று, அந்த தொகுதிகளை முன்னேற்றி, அதை வைத்து அடுத்த தேர்தலில் வாக்கு கேட்கலாம். பாமகவுக்கு அந்தத் தகுதி குறைந்து விட்டது. "இல்லீங்க, ஜெயிச்சா முதலமைச்சர்தான்" என்றால் ஒன்றும் செய்ய முடியாது. நாம் தமிழருக்கு வாக்களிக்கலாம். ஆனால், நாம் கொடுத்த அந்த வாக்கு சதவிகிதம், அடுத்தடுத்த தேர்தல்களில் விலை போகாமல், மீண்டும் தனியாகவே கம்பீரமாக இருந்தால், அடுத்த முறை யோசிக்கலாம்.

ஒரு வேளை, தொங்கு சட்டசபை அமைந்து, இவர்களில் யாரவது திமுக அல்லது அதிமுகவிற்கு ஆதரவு அளித்தாலும் இதேதானே என்ற போல கூட்டணி ஆட்சிதானே என்ற கேள்வி வரலாம். ஆட்சியில் கூட்டணி கிடையாது என அவர்களே சொல்லி விட்டார்கள். அது மட்டுமின்றி, அவர்கள் யாரையும் விலைக்கு வாங்க தயாராக இருப்பார்கள். பல அசிங்கங்கள் நடக்கும்.

சில எண்ணங்கள்:

தேர்தல் அறிக்கை என்பது குழந்தைகளைத் தூங்க வைக்க சொல்லும் கதை போன்றது. எனவே, வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டு அதை நம்ப வேண்டாம். தமிழகத்தின் இப்போதுள்ள கடனை குறைப்பது பற்றியோ அடைப்பது பற்றியோ யாரும் தெளிவாக எதுவும் சொல்லவில்லை. தமிழகத்தின் முக்கிய பிரச்சினை சாதி பற்றி யாரும் சொல்லவில்லை. அதை விட முக்கியம் எல்லா அறிக்கைகளும் மறைமுகமாக 'நிபந்தனைகளுக்கு உட்பட்டவை'.

அனைத்து கட்சிகளும் தேர்தல் நேரத்தில்தான் மக்களோடு உறவாடும். மற்ற நேரங்களில் வெறும் அறிக்கைதான். எல்லா பத்திரிக்கைகளின் மின்னிதழ்கள் இணையத்தில் உள்ளன (2006 முதல்). ஓய்வு நேரத்தில் அவ்வப்போது படித்துப் பாருங்கள். கண்டிப்பாக நான் சொல்வதை ஒப்புக் கொள்வீர்கள்.

உண்மையில் நியாயமாக கல்விக்கும், விவசாயத்திற்கும் கடன் வாங்கியவர்கள் அதை தள்ளுபடி செய்ய வேண்டும் என எதிபார்க்க மாட்டார்கள். மாறாக, கொஞ்சம் தவணையை வேண்டுமானால் நீட்டிக்க எண்ணுவார்கள். 90 சதவிகித கல்வி மற்றும் விவசாய கடன்கள் வட்டி குறைவு என்பதால் மற்ற தேவைகளுக்காகவே வாங்கப்படுகிறது. எனவே, சரியாக விசாரித்து தேவைப்பட்டவர்களுக்கு மட்டும் தள்ளுபடி செய்தால் வரிப்பணம் வீணாகாது.

இன்னொரு முக்கிய விஷயம். ஒரு வேளை நீங்கள் இப்போது உள்ள சட்டமன்ற வேட்பாளருக்கு, அல்லது ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களித்தாலோ அவர்கள் தண்டிக்கப்பட்டதாக எண்ண வேண்டாம். இவ்வளவு நாள் சம்பாதித்ததை இனி அதே வேகத்தில் சம்பாதிக்க முடியாது. அவ்வளவே. வந்தவரை லாபம். மற்றபடி பிடுங்கியதை திரும்ப வாங்கவே முடியாது.

நம் சமுதாயத்தில் இரண்டு கோடுகள் உண்டு. மேல் கோட்டுக்கு மேலே இருப்பவர்கள் வெயில் படாதவர்கள். எதையும் வளைக்கும் திறனுடையவர்கள். அரசியல்வாதிகள் அல்லது அவர்களைத் தீர்மானிப்பவர்கள். கீழ்க் கோட்டுக்கு கீழே உள்ளவர்கள், அன்றைய தினம் கழிந்தால் போதும். அவர்களே அடி மட்ட தொண்டர்கள். அவர்களை நம்பித்தான் கட்சி. அப்படி இல்லாதவர்கள் தேர்தலின்போது பணம் வாங்கிக் கொண்டு, அவர்களுக்கு வாக்களிப்பவர்கள்.

பெரும்பாலும் இவர்கள் வாக்கு திமுக அல்லது அதிமுகவிற்கே இருக்கும். வேட்பாளர்கள் கொடுக்கும் பணம் அப்போதைக்கு ஓரிரு நாட்கள் உதவுவதால், உடனே தேர்தலில் அவர்களுக்கு வாக்களித்துவிடுகிறார்கள் (இது என்னுடைய பொதுவான கருத்து)

இந்த இரண்டு கோட்டிற்கும் நடுவில் உள்ளவர்கள் தட்டிக் கேட்கவும் துணிவில்லாது, தேர்தலில் நிற்கவும் பயந்து, அடையாளம் கூட இல்லாமல் என்னைப் பதிவு எழுதுபவர்கள். இவர்களுக்கு யார் வந்தாலும் கவலை இல்லை, அவர்களால் இந்த மக்களுக்கு நன்மையையும் இல்லை, தீமையும் இல்லை. நம்மைப் போன்றவர்களே இந்த வெற்றியை தீர்மானிப்பவர்கள். அவ்வப்போது ஞானம் வரும். இதே போல பதிவிடுவோம். முகப்புத்தகத்தில் பகிர்வோம். அவ்வளவே. அதைத் தாண்டி ஒன்றும் கிழிக்க மாட்டோம். நமக்கு உள்ள ஒரே ஆயுதம் ஓட்டுதான்.

ஏன் வாக்களிக்க வேண்டும்:

"எதுக்கு சார் ஓட்டு போடணும், இவனுங்க திங்கறதுக்கா", " நான் ஒருத்தன் ஓட்டு போடலேன்ன குடியா முழுகிடும், எப்படி இருந்தாலும் ஒரு நல்லவன் வரப்போறதில்ல" என்றெல்லாம் புலம்ப வேண்டாம். சிறு துளிதான் பேரு வெள்ளம். உங்களை போலவேதான் இன்னும் பல பேர் எண்ணுவார்கள். அந்த எண்ணங்கள் ஒரே மாதிரிதான் இருக்கும், ஆனாலும் யாரும் வெளிக்காட்டாமல் "நாம சொல்றத எவன் கேப்பான்?" என நமக்குள்ளேயே புலம்பிக் கொள்கிறோம்.

நானே 2014 பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கவில்லை. காரணம் அது நடந்தது வியாழன் அன்று. எனது வாக்கு சொந்த ஊரில் உள்ளது. வெள்ளியுடன் சேர்த்து 4 நாட்களுக்கு எல்லோரும் விடுமுறை கேட்டால் நிறுவனம் என்ன செய்யும்? போக முடியவில்லை. ஆனால், இந்த முறை அதனால்தான் திங்களன்று வைத்துள்ளார்கள் என நினைக்கிறேன். இதையும் தாண்டி வெளியூரில் உள்ள வாக்காளர்களுக்கும் தபால் ஓட்டு வைத்தால் இன்னும் நலம்.

ஓட்டுக்கு பணம்:

திமுக, அதிமுக இரண்டு விளம்பரங்களிலும் நடித்த கஸ்தூரி பாட்டி நடித்த ஒரு நல்ல தேர்தல் விளம்பரத்தைப் பாருங்கள். அதை வைத்தே முடிவு செய்யலாம். எனக்கென்ன அது சொல்ல வருகிறது என்றால், பணம் வாங்கிக்கொண்டு அவனுக்கு போட வேண்டாம் என்பது போல உள்ளது. மற்றபடி உங்கள் விருப்பம்.


சரிங்க. ஓட்டு போட ஊருக்கு போறேன். சிந்திச்சு செயல்படுங்க. தேர்தல் நாளையும், அடுத்த 5 வருடங்களையும் மட்டும் நினைக்காமல், அடுத்த 50 வருடங்களிலாவது முன்னேற என்ன வழி என யோசித்து வாக்களியுங்கள்.

"என் ஒருத்தன் ஓட்டு என்னத்த மாத்திட போகுது" என்று எண்ணாதீர்கள். நம் படுக்கையறையில் ஒரு செங்கல் இல்லையென்றால் என்ன வீடா இடிந்து விடும்?

Sunday, May 8, 2016

இங்கு அரசியல் (தவிர வேறெதுவும்) பேசாதீர்!

அரசியல் பற்றிய இன்னொரு பதிவு. இதில் இப்போதுள்ள கட்சிகள் பற்றி எனது கருத்தைக் கூறி உள்ளேன். இனி உங்கள் பாடு. முதலில் கட்சிகள் பற்றி பார்ப்போம்.

திமுக - அதிமுக:


இருக்கும் கோவணத்தையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என நினைப்போர் சத்தியமாக திமுக, அதிமுக கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம். சுய நினைவுள்ள யாரும், திமுக, அதிமுக கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டார்கள். அது மட்டுமில்லாமல் இரண்டு கட்சிகளுக்கும் போதுமான அளவு சந்தர்ப்பங்கள் கொடுத்தாகி விட்டது.

திமுக பற்றி 2008 வரை ஓரளவு நல்ல அபிப்ராயம் இருந்தது. ஆனால், அதன் பிறகு நீண்ட குடும்ப ஆக்டோபஸ் கரங்கள் தற்போது சுருண்டுள்ளன, வெட்டப்படவில்லை. பல விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாறுவதற்கு முழு முதல் காரணம் இவர்கள்தான். வெளியில் தெரியாமல் நடந்தது எவ்வளவோ உண்டு. இதில் நடுவில் ஸ்டாலினின் காமெடி வேறு. அவரிடம் ஏதோ ஒன்று, இல்லையில்லை எல்லாமே குறைகிறது.

ஜெயலலிதா பற்றி சொல்லவே வேண்டாம். எனக்குத் தெரிந்து ஜெயலலிதா தரையில் இறங்கியது, வைகோ நடைப்பயணம் போகும்போது இறங்கிப் பார்த்தாரே, அப்போதுதான். அதன் பின், அவர் கால் தரையில் பட்டதேயில்லை என நினைக்கிறேன். இப்போது வேட்புமனு தாக்கல் செய்ய வேறு வழியின்றி தரையில் கால் பட வேண்டியதாகி விட்டது.

சில உதா'ரணங்கள்':


பேருந்து கட்டண உயர்வு. அது சரிதான் வாதிடுபவர்கள், என்ன முன்னேற்றம் அடைந்தது சொல்லுவார்களா? ஓட்டுனர், நடத்துனர் வேலைக்கு ஆளுக்கு 3 லட்சம் வாங்கியதுதான் மிச்சம். இவ்வளவு உயர்வு தேவையற்றது என சொல்லக் காரணம் உண்டு. குறிப்பாக நாமக்கல்லிருந்து சேலம் போக 18 ரூபாயில் இருந்து 32 ரூபாயாக உயர்த்தினார்கள். ஆனால், தனியார் பேருந்துகள் வசூலிப்பதோ 25 ரூபாய்தான். இருக்கைகளும் நன்றாக இருக்கும். ஒளி ஒலி வசதியுடன். மக்கள் எதை தேர்ந்தெடுப்பார்கள்?

உண்மை என்னவென்றால், தனியாருக்கு லாபம் கிடைக்கவே இப்படி அரசு பேருந்துகள் உள்ளன. நாமக்கல்லிருந்து சென்னைக்கு சில ஆண்டுகள் அரசு விரைவுப் பேருந்து நிறுத்தப்பட்டது. தாங்கள் செந்தில் பாலாஜியிடம் சொல்லித்தான் அது நிறுத்தப்பட்டது என அவர்களே அதை பெருமையாக சொன்னதுண்டு.

அடுத்து மின் கட்டணம். இலவசமே கொடுக்காமல், பழைய மின் கட்டண முறை வைத்தாலே போதுமே. அதாவது 200 யூனிட் வரை ஒரு கட்டணம், 201வது யூனிட்டில் இருந்து அதிக கட்டணம். ஆனால், இப்போது 200 யூனிட்டிற்கு மேல் போனால், முதலாவது யூனிட்டில் இருந்தே அதிக கட்டணம். அதாவது நீங்கள் 200 யூனிட் உபயோகித்தால் 300 ரூபாய் கட்டணம். அதுவே 201 யூனிட் என்றால் 400 ரூபாய். எப்பூடி?

மக்கள் நலக் கூட்டணி:


கொஞ்சம் நன் மொழியில் சொன்னால், 'பல வீட்டு சாப்பாடு', இன்னும் சொன்னால், 'பிச்சைக்காரன் எடுத்த வாந்தி' போன்ற கூட்டணி. ஒன்று தவிட்டிற்கு இழுக்க, இன்னொன்று தண்ணிக்கு இழுக்கும்.

வைகோ மீதும் காலத்தில் நல்ல எண்ணம் இருந்தது. அவர் மகனின் சிகரட் கம்பெனிக்கு வக்காலத்து வாங்கியவுடனே அந்த எண்ணம் போய் விட்டது. ஒரு தலைவர் என்பவர் எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு 'தடை வந்தால்' என சொல்வது கேவலம்.

விஜயகாந்த் பாவம். முதல்வரை நாங்கள் வெற்றி பெற்ற பின்னால் தேர்ந்தெடுப்போம் என்று சொல்லி இருந்தால், ஒரு வேளை கூட்டணியை நம்பி இருக்கலாம். சுதீஷ் பாராளுமன்ற தேர்தலின் போது, சேலத்தில் வாக்கு எப்படி கேட்டார் என்றால் "நான் மந்திரி ஆனவுடன் இதை, அதை செய்வேன்" என. அதுக்கு நீ மொதல்ல பாராளுமன்ற உறுப்பினர் ஆகணுமேப்பா என்ற மக்களின் மனக்குரல் அவருக்கு கேட்கவில்லை. கூட்டணியும் செல்லாது செல்லாது.

பாமக:


இவர்கள் பரவாயில்லையே, நன்றாக சொல்கிறார்களே என நினைத்தாலும், பழைய கதைகள் நினைவுக்கு வருகின்றன. அன்புமணியும் சுதீஷ் போலவே பிதற்றுகிறார். முதலில் சட்டசபை உறுப்பினர் ஆகுங்க, அப்புறம் முதலமைச்சர் ஆகலாம். இதுவரை அவர்கள் வென்ற இடங்களில் எல்லாம் முன்னேறியுள்ளதா என்றால் இல்லை. எங்களுக்கு அதிகாரம் கொடுங்கள், அப்போதுதான் செய்வோம் என்றால் அது விதண்டாவாதம். அது மட்டுமின்றி அதிகார பகிர்வு இருந்தவரையும் அவர்கள் அவ்வளவாக செய்யவில்லை என்பது என் கருத்து.

நாம் தமிழர்:


இவர்கள் பற்றி சொல்ல வேண்டாம் என்றுதான் பார்த்தேன். ஆனாலும் சில வரிகள்.

வந்தேறிகள் நம் இடத்தை ஆளக்கூடாது, தமிழன்தான் ஆழ வேண்டும் என்கிறார். ஒரு நல்லவன் ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் ஒரு நியாயம் உள்ளது. உண்மையில் தமிழன் என்பவன் யார்? பாரதிதாசன் சொன்ன "எங்கு பிறந்தாலும் தமிழன் தமிழன்தான், இங்கு பிறந்தாலும் அயலான் அயலான் தான்" கருத்தில் எனக்கு சுத்தமாக உடன்பாடு இல்லை.

நம்மாட்கள் குணம் (நண்டு கதை) உலகம் அறிந்தது. அமெரிக்காவில் உள்ள பல தமிழ்க் குழந்தைகளுக்கு (எல்லோரும் அல்ல) தமிழ் சுத்தமாக வராது. அவர்களே அவர்களை 'தமிழன்' என்று சொல்லிக்கொள்வதில்லை.

விஜய் டிவியில் ஒரு வார்த்தை ஒரு லட்சம் நிகழ்ச்சி பார்த்திருப்பீர்கள். சில வாரங்களுக்கு முன், அதில் வெற்றி பெற்ற மாணவர்-ஆசிரியை இருவருக்குமே தமிழ் தாய்மொழி கிடையாது. ஆனாலும் தமிழர்களே வெட்கப்படும் அளவிற்கு அவர்களின் உச்சரிப்பு இருந்தது. அவர்கள் வீட்டில் கூட தமிழ் பேசுவது கிடையாது. அது தேவையும் இல்லை. ஆனால், வெளியில் மற்றவர்களுடன் தமிழில் சரளமாக உரையாட முடிகிறதே.

சரி, அதை விடுங்கள், சொந்த ஊர் நாமக்கல் என்றாலும், சென்னையில் பிறந்து வளர்ந்த ஆளுக்கு நாமக்கல்லின் பிரச்சினைகள் எப்படித் தெரியும், அதுவே, அங்கேயே பிறந்து வளர்ந்த வேற்று ஆளாக இருந்தாலும், என்னென்ன பிரச்சினைகள் என்றாவது தெரியும் அல்லவா. அதே போல தமிழன்தான் தமிழகத்திற்கு முதல்வராக வர வேண்டும் என்றால், கடலூருக்கு கடலூர்க்காரன்தான் சட்டமன்ற உறுப்பினராக வர வேண்டும்.

இன்னொரு முக்கியமான விஷயம், தமிழன் என்பவன் பொதுவாக சாதிக்குள் அடங்குபவன். அவன் முதல்வராக வந்தால், அவனது சாதிக்குத்தான் முதலில் முக்கியத்துவம் தருவான். இது எல்லோருக்கும் தெரியும். முடிந்தால் 'தமிழர்கள் மட்டும் எனக்கு ஓட்டு போடட்டும், மற்றவர்கள் போட வேண்டாம்' என்று சொல்லுவாரா?

கடைசியாக ஒன்று. 'தமிழன்தான் ஆள வேண்டும் என்கிறார். நாம் தேர்ந்தெடுப்பது மன்னரை அல்ல. மக்கள் பிரதிநிதியை. அதே போல நீங்கள் ஆளப்போவது ஆயுசுக்கும் அல்ல. ஐந்து வருடங்கள்தான்.

பாஜக, விடியல் கூட்டணி பற்றியெல்லாம் நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை.

"இருக்கிற எல்லோரும் மோசம்னு சொல்ற. அப்புறம் யாருக்கு ஓட்டு போடறது, நோட்டவுக்கா?" என்கிறீர்களா. இன்னொரு பதிவில் யாருக்கு வாக்களிக்கலாம் என்ற எனக்கு தோன்றியதை சொல்கிறேன்.

Thursday, April 28, 2016

மாற்றான் தோட்டத்து மல்லிகைகள்

கொஞ்சம் வித்தியாசமாக மொழிக்கொன்றாக ஒரு படம் பார்ப்போமே என நினைத்தேன். விளைவு, ஒரு பதிவு.

ஜாலி LLB என்கிற மனிதன் - ஹிந்தி:


எப்போது இணையம் வந்ததோ, அப்போது இருந்தே ஒரு படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது என்றால், அதை உடனே அதனை தரவிறக்கம் செய்து பார்த்து விடுவேன். தமிழில் தோன்றினால் பார்ப்பேன். அதனாலேயே தமிழில், அது நன்றாகவே இருந்தாலும் பிடிப்பதில்லை.

இப்போது 'தோழா' படம் கூட அங்கங்கே பார்த்தேன். எனக்கு என்னவோ பிடிக்கவில்லை. கண்டிப்பாக காதல் இருந்தே ஆக வேண்டும் என்று கட்டாயமா என்ன. The Intouchables படத்தில் வருவது போல நாகார்ஜுனாவிற்கு திருமண வயதில் பெண் இருந்தார் என வைத்திருக்கலாமே, என்றுதான் தோன்றியது. சரி பரவாயில்லை. நம்ம உதயநிதி படத்தை தொலைக்காட்சியில் கூட பார்க்க முடியாது, எனவே, மனிதன் படத்தை ஹிந்தியிலே பார்த்து விட்டேன்.


ஒரு பணக்கார பையன் ஏற்படுத்தும் விபத்து. அது நீதிமன்றத்தில் எப்படி விளையாடுகிறது, இதில் குடி போதையில் வண்டி ஓட்டி, நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றிக் கொன்ற ஒரு பணக்காரன், அவனுக்காக வாதாடும் இந்தியாவின் பெரிய வக்கீல், இதில் ஆர்வக்கோளாறில் உள்ளே வரும் இளம் வக்கீல், இவர்களுக்கு இடையேயான கதை.


படம் பாதிக்கு மேல், நீதிமன்றத்தில்தான் நடக்கிறது. அவ்வப்போது நாம் கேள்விப்பட்ட, மருத்துவரின் 15 வயது மகன் பிரசவம் பார்த்தது, இசையைத் திருடியவர்கள் மீது வழக்கு என சில நகைக்க முடியாத நகைச்சுவைக் காட்சிகள். அவ்வளவு ஒன்றும் நன்றாக இல்லை எனலாம். சத்தியமாக உதியநிதிக்கு சரியாக இருக்கும் என்று தோன்றவில்லை.

படத்தில் ஒளிப்பதிவு கோணங்கள் கூட மாறியது போல தெரியவில்லை. எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு சந்தேகம். ஒரு இயக்குனரின் வேலை என்ன. தன்னுடைய கதை, அடுத்தவருடைய கதை என எதுவாக இருந்தாலும், கதை, திரைக்கதை, வசனங்களை கொடுத்து இயக்கினால் கூட சரி எஸ்.பி.முத்துராமன் போல. ஆனால், ஒரு வேற்று மொழிப்படம், அதை அப்படியே ஆட்களை மட்டும் மாற்றி, வசனங்களை அப்படியே தமிழ்ப்படுத்துவதற்கு எதற்கு ஒரு பெரிய இயக்குனர். நண்பன் படம் பார்த்தது முதலே எனக்கு இந்த சந்தேகம். யாராவது தெளிவாக விளக்கினால் பரவாயில்லை.

இந்தப் படத்தின் இறுதிக் காட்சியில் உணர்ச்சியும், கண்ணீரும் பொங்க நாயகன் நீண்ட வசனம் பேசும் காட்சி வரும். அதில் உதயநிதியைக் காண எனக்கு சக்தி இல்லையப்பா. எனக்குத் தெரிந்து தமிழுக்கும், ஹிந்திக்கும் தெரிந்த ஒரே வித்தியாசம், ஹிந்தியில் நாயகன் மீரட்டில் இருந்து டெல்லி போவார். நாயகியிடம் 2 மணி நேரத்தில் தேவையென்றால் வந்து விடுவேன் என்பார். இந்தப் படத்தில் பொள்ளாச்சியில் இருந்து சென்னை போவாராம். தூரமும், நேரமும் அதிகம். படத்திலும் 2 பாட்டை வைத்து நேரத்தை இழுத்து விடுவர் என நினைக்கிறேன்.

ஆக்சிடெண்ட் (Accident) - கன்னடம்:

ஜாலி LLB பார்த்தவுடனே இந்தப் படமும் பார்க்க வேண்டும் எனத் தோன்றியது. கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்பே பத்தரிக்கை, அரசியல் என எல்லோரையும் கிழி கழி என கிழித்திருப்பார்கள். அதிலும் இதே கதைதான்.

போதையில் விபத்தை ஏற்படுத்தும் பெரிய அரசியல்வாதியின் மகன், அதைக் கண்டு பிடித்தும் எதுவும் செய்ய முடியாமல் தவிக்கும் காவல்துறை (கண்டு பிடித்த அதிகாரியை கட்டாய விடுமுறையில் அனுப்புவது, ), அதை வைத்து எப்படியாவது பரபரப்பை உண்டாக்க நினைக்கும் பத்திரிக்கையாளர் (அவர் நீதிக்காக போராடுவதை விட இது ஒரு சென்சேஷனல் நியுஸ் என பரபரப்பார், விபத்தில் தப்பியவரை அதை நினைவூட்டி அழ வைத்து படம் எடுத்துக் கொள்வார்), விசுவாசம், பணத்திற்காக சிறை செல்லும் வேலைக்காரர், அதையும் அரசியல் ஆதாயத்திற்கு உபயோகிப்பது என பாத்திரங்களும், அட்டகாசமான திரைக்கதையும் உள்ள படம். இசை இளையராஜா என்பதால்தான் இந்தப் படமே எனக்கு தெரிய வந்தது.


பாடல்கள், குலுக்கல் நடனம் என எதுவும் இல்லாமல் 1980களில் படமா என ஆச்சரியமாக உள்ளது. இப்படத்தை இயக்கிய சங்கர் நாக் ஒரு விபத்தில் இறந்து போய் விட்டார். அதற்கு தனியாக பின்னணி காரணங்களை கன்னடக்காரர்களிடம் கேட்டால் கதை கதையாக சொல்வார்கள். எனக்கு கொஞ்சம் கொஞ்சம் கன்னடம் தெரியும். மற்றபடி மொழி ஒரு பிரச்சினையாக இருக்காது. நம்பிப் பார்க்கலாம்.

சார்லி - மலையாளம்:

எனக்கு மௌன ராகம் கார்த்திக்கின் நவீன அவதாரம் போல தோன்றியது, இந்தப் படம் பார்த்தபோது. ஒரு வேளை இந்தப் படத்தை தமிழில் எடுத்தால் அந்த கார்த்திக்தான் சரியான பொருத்தம். அடுத்த நொடி பற்றிக் கவலைப்படாமல், மற்றவர்களை சந்தோஷப்படுத்தி வாழும் மனிதனும், அவனைத் தேடி அலையும், அதே போன்ற பெண்ணைப் பற்றியுமான கதை. தமிழில் சரியாக வராது.


மலையாளத்தில் மட்டும் எப்படி இப்படி கதையே இல்லாமல், அல்லது ஒரு வரிக்கதையை மட்டும் வைத்து நல்ல படம் கொடுக்கிறார்கள் என தெரியவில்லை. இதே போல பெரிதாக கதை இல்லாமல், ஆனாலும் ரசித்த படங்கள் ஓம் சாந்தி ஒஷானா, மகேஷிண்டே பிரதிகாரம் போன்றவை. தமிழில் இதே போலவே எனக்கு தெரிந்த ஒரே படம் களவாணி தான்.

க்ஷணம் (Kshanam) - தெலுங்கு:

துணை எழுத்து (?), சரி விடுப்பா, சப் டைட்டில் இல்லாமல்தான் பார்த்தேன். அவ்வளவாக புரியவில்லை. மலையாளம் அவ்வளவு பிரச்சினை இல்லை. தெலுங்கு கொஞ்சம் கஷ்டம். ஆனாலும் ஒரு நல்ல படம். மீண்டும் தெளிவாக பார்த்து, நன்றாக இருந்தால், மீண்டும் இதைப்பற்றி எழுதுகிறேன். தெலுங்கு புரிந்து கொள்வேன், நல்ல படங்கள் பார்ப்பேன் என நீங்கள் நினைத்தால், கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமே இது. சிபிராஜ் தமிழில் நடிக்கப் போகிறாராம். எனவே, சீக்கிரம் தெலுங்கிலேயே பார்த்து விடுங்கள்.

தி ஹேட்புல் எய்ட் (The Hateful Eight) - ஆங்கிலம்:

இந்தப் படமும், தி ரெவெனெண்ட் (The Revenent நான் செத்துப் பொழச்சவன்டா, தமிழில் சரியா?) படமும் தரவிறக்கம் செய்து விட்டாலும், பார்க்காமலே இருந்தேன். இரண்டு படங்களுமே இரண்டரை மணி நேரத்திற்கு அதிகம் என்பதால், கொஞ்சம் சோம்பேறித்தனம். ஆனாலும், ஒரே நாளில் இரண்டு படங்களையும் அடுத்தடுத்து பார்த்து முடித்து விட்டேன். ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாக போனாலும், போகப் போக சுவாரஸ்யமாக இருந்தது. அதுவும், இந்த சென்னை வெயிலுக்கு, இந்த இரண்டு படங்கள் பார்க்கும் போது, எனக்கே சற்று குளிரத்தான் செய்தது.


டிகாப்ரியோ படம் அமைதி என்றால், டரண்டினொ படம் அதிரடி. அவரது பாணி நக்கல் வசனங்களும் முன்னதை விட சற்று சுவாரஸ்யம் அதிகமாகவே இருந்தது. ஒரு பெண் கைதி,அவளை தூக்கிலிட கூட்டிப் போகும் ஒருவர், வண்டி ஓட்டுபவர், நடுவில் உதவி கேட்டு, உடன் வரும் இருவர், செல்லும் வழியில் தங்கும் விடுதியில் ஏற்கனவே இருக்கும் மூவர், விடுதியின் உதவியாளர் என எட்டு பேர். கணக்கு இடிக்குதே என்கிறீர்களா, இவர்களில் நால்வர் அந்த பெண் கைதியை தப்பிக்க வைக்க வந்திருப்பவர், இருவர் அப்பாவி, ஒரு ஆள் ஒளிந்து கொண்டு என் கணக்கில் வரவில்லை. என சுவாரஸ்யமாக போகும் படம். குழம்ப வேண்டாம். பார்த்து ரசியுங்கள். வன்முறை அதிகம். அதனால், பாருங்கள். ரசிக்க முடியுமா என தெரியவில்லை. கண்டிப்பாக இரண்டு படங்களையும் பார்த்திருப்பீர்கள், இல்லையென்றாலும் பார்க்கலாம்.

தெறி - தமிழ்:

கடைசியாக திரையரங்கம் சென்று பார்த்தாகி விட்டது. மகளுடன்தான் போனேன். முதல் முறையாக அழாமல், தூங்காமல் பார்த்தாள். எனக்குத்தான் தூக்கம் வந்தது. சில காட்சிகளில் சற்றே பயந்தாலும், பெரிதாக அழவில்லை. ஒரு வார நாள், அதுவும் திங்களன்று, நாமக்கல் போன்ற ஊரில், பாதிக்கு மேல் கூட்டம், அதுவும் படம் வந்து 10 நாள் கழித்து. அனைவரும் குழந்தை குட்டியுடன். ஏன் வெயில் இப்படி அடிக்காது, மழை இப்படி ஊத்தாது?


நமக்கு என்னத்த சொல்ல. படத்தில் புதிதாக ஒன்று கூட இல்லை. முன்பெல்லாம் பொதிகையில் திரை மாலை என்ற நிகழ்ச்சி போடுவார்கள். ஒவ்வொரு படத்தில் இருந்தும் சில காட்சிகள் அல்லது பாடல்கள் என. அதே போலவே இருந்தது. கேரளாவில் விஜயை ஒருவர் பழைய பெயர் சொல்லிக் கூப்பிட்டதும் ஒரு முக பாவனை காமிப்பார் பாருங்கள். முடியல.

பொதுவாக மற்ற படத்தில் இருந்து சுட்டாலும், படம் பார்க்கும்போது அது நம் நினைவுக்கு வராமல் செய்ய வேண்டும். தனி ஒருவன் போல. ஆனால், இது படத்தின் பெயர் உட்பட அனைத்து படங்களும் நினைவுக்கு வருகின்றன. அப்படி இல்லையென்றாலும் அவர்களே நினைவூட்டுகிறார்கள். ("பெரிய வேட்டையாடு விளையாடு கமலு"). தான் செய்யும் வேலை பிடிக்காத, வருங்கால மாமனாருடன் பேசும்போது திடீரென அடியாட்கள் கொள்ள வர, அவர்களைத் தாக்கும்போது மாமனார் கோவித்துக் கொண்டு செல்லும் காட்சி எதில் என முதலில் நினைவுக்கு வரவில்லை. பிறகு வந்து விட்டது. முதல்வன்.

உண்மை என்னவென்றால், வேதாளம் படத்திற்கும், இந்தப் படத்திற்கும் 2 வித்தியாசங்கள்தான்.
1. அதில் ரவுடி, இதில் போலிஸ்.
2. அதில் தங்கை, நினைவுகள் போய் விடும். (நியாயமாக கெட்டவர்களிடம் இருந்து ஒரு பெண்ணைக் காப்பாற்றினால் காதல்தான் வர வேண்டும். வித்தியாசமாக இந்தப் படத்தில் அண்ணன் பாசம் வரும்.) தெறியில் மனைவி, இறந்து விடுவார்.

ஒரு ஆளுக்கு ஒன்று இரண்டு இரண்டு படங்களும் பிடிக்கும் அல்லது இரண்டுமே பிடிக்காது. ஒன்றுதான் பிடிக்கும், ஒன்று பிடிக்காது என்றால், அது பொய். படத்தில் பின்னணி இசை பரவாயில்லை. பாடல்கள் மொக்கை. அது ஏன் சைந்தவி பாடும் பாடல்கள் எல்லாம் ஒரே மாதிரி இருக்கிறதோ தெரியவில்லை.

என் பெண்ணிற்கு பிடித்ததே. விஜய் 60க்கு காத்திருக்கோம்.

Thursday, April 14, 2016

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

என்னுடைய அருமை பெருமைகளைப் பற்றிப் படிக்காதவர்கள் இப்போது போய்ப் படித்து விடுங்கள். அப்புறம் என்னைக் குற்றம் சொல்லக் கூடாது.

விமர்சனம்:

கடைசியாக பசங்க - 2 படத்திற்கு குடும்பத்தோடு திரையரங்கம் சென்றேன். மகள் படம் பார்ப்பாள் என நினைத்தால் பாதியில் தூங்கி விட்டாள். ஆயினும் எங்களை ஒன்றும் தொந்தரவு செய்யவில்லை. அதன் பின் எந்த படமும் திரையரங்கம் சென்று பார்க்க முடியவில்லை. இது ஒரு சாக்குதான். 10 நிமிடம் நடந்தால் வெற்றி திரையரங்கம். வண்டியில் சென்றால் இரண்டே நிமிடம். ஆனாலும் ஏதோ ஓர் சோம்பேறித்தனம்.

ரஜினி முருகன் படம் பார்க்கலாம் என நினைத்தால் அந்த நேரத்தில் மகள் திரையரங்கம் செல்லக் கூடாது, வேண்டுமானால் மடிக்கணினியில் எப்போதும் போல(?) பார்க்கலாம் என்று சொல்லி விட்டாள். திரையரங்கம் தான் செல்ல வேண்டும் என்றால், அப்போது ஏன் மற்ற படங்களை மடிக்கணினியில் பார்த்தீர்கள் என்று கேட்டாள். வாயடைத்துப் போய் விட்டது. அப்போதுதான் உறைத்தது, நாம் ஏனோதானோ என செய்யும் காரியங்கள் எப்படி குழந்தைகள் மனதில் தவறாக பதிகின்றன என்று. அப்போதே முடிவு செய்தேன், இனி அடிக்கடி திரையரங்கம் செல்ல வேண்டும் என்று. ஆனால், பல படங்கள் குழந்தைகளை கூட்டிக் கொண்டு போக முடியாதபடி உள்ளன.

இதுவரை பார்த்த வரையில் மனத்தைக் கவர்ந்தவை என்றால், இறுதி சுற்று, விசாரணை, சேதுபதி மற்றும் பிச்சைக்காரன்தான். என் மகளுக்கு தெரிந்தது விஜய், சிவகார்த்திகேயன்தான். எனவே, தெறி, தூத்தேறி என்று சொல்லும் வகையில் இருந்தாலும், அதை குடும்பத்துடன் திரையரங்கம் சென்று பார்க்கலாம் என்றுதான் உள்ளேன். இவர்கள் இருவரும் அதிகம் அலட்டிக் கொள்ளாமல், வித்தியாசம் காட்டாமல் நடிப்பதால், குழந்தைகள் அவர்களை சுலபமாக எந்தப் படமாக இருந்தாலும் அடையாளம் கண்டு கொள்கிறார்கள் போல. ஊரில் 'ஜங்கிள் புக்' படத்திற்கு கூட்டிக் கொண்டு போயிருக்கிறார்கள். பாதிப்படத்தில், அதிலும் பாம்பு வரும் காட்சியில் கதறியழ ஆரம்பிக்க, உடனே கிளம்பி வந்து விட்டார்கள். ஆனாலும் இன்று புலி படத்தை பயப்படாமல் பார்த்தாள். என்னவோ போடா மாதவா.

ஹலோ நான் பேய் பேசறேன்: மனைவியும் மகளும் ஊருக்குப் போய் விட்டதால், மீண்டும் தனிமை வாழ்க்கை. எனவே, செய்த பாவங்களுக்கு பலனாக திரையரங்கம் சென்று படம் பார்ப்போம் என இந்தப் படத்திற்கு போனேன். கிட்டத்தட்ட 'யாமிருக்க பயமே', 'டார்லிங்' படங்களின் அடுத்த பாகம் போலத்தான் இது. படத்தின் முதல் பாதிக்கும், இரண்டாம் பாதிக்கும் சம்பந்தமே இல்லை. படத்தின் ஆரம்பத்திலேயே கருணாகரன், ஓவியா சம்பந்தப்பட்ட ஒரு காட்சியாவது இருந்திருக்கலாம். ஆனாலும், அந்த அந்த கதைப் பாடல், அட்டகாசம்.

புதிய நியமம்: எதேச்சையாகவே இந்தப் படம் பார்க்க நேர்ந்தது. மோகன்லால் 'த்ரிஷ்யம்' படம் மூலம் வெற்றி அடைந்தது போல, அதே வெற்றியை அடைய வேண்டும் என அதே போன்ற கதையை எடுத்து மம்முட்டி நடித்திருப்பார் போல. இவ்விரு படங்களின் ஒற்றுமை பற்றி ஒரு கட்டுரை தினமலரில் வந்துள்ளது. இந்தப் படத்தில் வரும் வில்லன் ஒருவர், தமிழன், துணி தேய்ப்பவர். அதே போல, மம்முட்டி ஒரு தள்ளு வண்டி கடைக்காரரிடம் (கருப்பாக இருப்பார்) அண்ணாச்சி என தமிழில் கேட்க, அவரோ, "தோலின் நிறம் பார்த்து ஆளை தவறாக எண்ணாதே" என்பார். மலையாளப் படங்களில் இது சகஜம்தான், என்றாலும் இன்னும் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. முன்பெல்லாம் முழுக்க முழுக்க தமிழர்கள் வில்லனாக மட்டுமே காட்டப்படுவார்கள். இப்போது போனால் போகிறது என அவ்வப்போது நல்லவர்களாக காட்டபடுகிறார்கள். இதிலும் நயன்தாரா தமிழ்தான் (பாதி?).

கருத்து கந்தசாமிகள்:

முன்பெல்லாம் பொதுவாக பெட்டிக்கடையில் பேப்பர் படித்து விட்டு, அங்கேயே நான்கு பேர் சேர்ந்து வெட்டி நியாயம் பேசி விட்டு, சண்டை போட்டு விட்டு சென்று விடுவார்கள். ஆனால், இப்போதெல்லாம் ஆன்-லைனில் படித்து விட்டு கருத்து போட முடிவதால், நிறைய கருத்து கந்தசாமிகள் வந்து விட்டனர். நிறைய கருத்துகள் வருவது தினமலர், விகடன், தமிழ் ஹிந்து போன்றவைதான்.

இதில் தமிழ் ஹிந்துவில் ஓரளவு நியாயமாக இருக்கும், அல்லது அவர்கள் தேவையில்லாத சர்ச்சை ஏற்படுத்தும் கருத்துக்களை அனுமதிப்பதில்லை என நினைக்கிறேன். தட்ஸ்தமிழில் கேட்கவே வேண்டாம், நா, காது, கை என உடம்பின் அனைத்து பாகங்களும் கூசும் அளவிற்கு வார்த்தைகள் இருக்கும். முன்பு ஒரு முறை அவர்கள் இது பற்றி காவல் துறையிடம் புகார் அளித்துள்ளோம் என்றார்கள். அது என்னவாயிற்று என்றே தெரியவில்லை. விகடனில் ஒரு சிலர் உள்ளனர். செய்தி எதைப்பற்றி இருந்தாலும், மக்கள் பொதுவாக என்ன கருத்து இடுவார்களோ அதற்கு எதிர் வினையாக கருத்திடுவது. இன்னும் சில பேருக்கு அதில் எதிர்மறை ஓட்டு போடுவதே வேலையாக வைத்திருப்பார்கள்.

தினமலர் பற்றி சொல்லவே வேண்டாம். பத்திரிக்கையே பொதுவாக குறிப்பிட்டவர்களுக்கு ஆதரவாக இருக்கும். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல இருக்கும். குற்றம் சார்ந்த செய்திகளில், குற்றவாளி முஸ்லீமாக இருந்தால், குற்றவாளி பற்றி ஒருமையில் இருக்கும் (செய்தான், வந்தான், போனான் என). அது கொலை, கொள்ளை. வழிப்பறி, தீவிரவாதம் எதுவானாலும் சரி. ஆனால், மற்றவர்கள் என்றார், மரியாதையாக இருக்கும் (செய்தார், வந்தார், போனார் என). இது போக தீவிரவாதம் என எந்த செய்தி வந்தாலும், வாசகர் கருத்து எல்லாமே "இவனுங்கள நம்ம நாட்ட விட்டு தொரத்தனும், இந்தியா இந்துக்களுக்குத்தான்" என்றெல்லாம் கருத்துகள் வரும்.

இங்கு அரசியல் (தவிர வேறெதுவும்) பேசாதீர்:

ஏற்கனவே சில அன்பர்கள் 'நமக்கெதுப்பா அந்த கண்றாவி எல்லாம். நீ பாட்டுக்கு ஜாலியா நாலு பதிவு எழுது. இந்தா, இளையராஜா தேசிய விருது வாங்கி இருக்காரு. அதப்பத்தி எழுது. நமக்கெதுக்கு அரசியல்' என்றெல்லாம் சொல்லி இருந்தார்கள். ஆனாலும், நானும் ரவுடிதான், எனக்கும் எல்லாம் தெரியும் என நிரூபிக்க வேண்டி இருப்பதால் இந்தப் பகுதி.

இப்போதெல்லாம் அரசியல் என்பது தெளிவான வியாபாரம் ஆகி விட்டது. பொதுவாக 'ஆத்துல போற தண்ணில, நாம கொஞ்சம் அள்ளிக்கிட்டா என்ன' என்ற மனநிலையில் இருந்தவர்கள் இப்போது 'ஆத்துல தண்ணி மாதிரி ஏதாவது போனா போதும், அதனால வேணா நாம தண்ணிய குடிச்சிட்டு மூ___ தை விடுவோம்' என்று ஆகி விட்டார்கள். கொள்கை கோட்பாடு என்பதெல்லாம் கிடையாது. (இதெல்லாம் ஆரம்பத்துல இருந்தே கெடையாதேப்பா). சரி விடுங்க. ஒரு சில கருத்துக்களை சொல்லி விடுகிறேன்.

ஞாபகம்/மறதி: இவை இரண்டுமே நம் மக்களுக்கு இருப்பதால்தான் அரசியல்வாதிகளுக்கு லாபம். எதையெல்லாம் மறக்க வேண்டுமோ, அதையெல்லாம் நினைவில் வைத்துக்கொள்வது, எதையெல்லாம் நினைவில் வைக்க வேண்டுமோ, அதையெல்லாம் மறந்து விடுவது. இதுதான் பெரும் பிரச்சினை. இவற்றில் ஊடகங்களின் பங்கும் உள்ளது. அது தனி.

ஐந்து வருடங்களுக்கு முன் கூட தேவையில்லை, இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த மக்களவை தேர்தலின் போது, ஒவ்வொரு கட்சியும் என்ன வாக்குறுதி கொடுத்தார்கள், வென்றிருந்தாலும், தோற்றிருந்தாலும், அந்த பிரச்சினைகளுக்கு என்ன நடவடிக்கை அவர்கள் சார்பில் எடுத்திருந்தார்கள் என்பதை நினைவு கூர்ந்தாலே போதுமே. இன்னும் வேண்டுமானால், எல்லா நாளிதழ்கள், வார இதழ்களும் இப்போது 2006ம் ஆண்டு முதலான மின்னணு இதழ்களை வைத்துள்ளன. அதை படித்துப்பாருங்களேன். இப்போது இருக்கும் ஒரு கட்சி மீதும் உங்களுக்கு நல்ல எண்ணமே வராது. அப்படியே எல்லாம் நினைவூட்டினாலும், தேர்தலின்போது வாக்குப்பெட்டி முன் நிற்கும்போது, நினைவுக்கு வருவது, இரட்டை இல்லை, உதய சூரியன், கை, போன்றவைதான்.

ஒவ்வொரு தேர்தலுக்கும், அனைத்து கட்சிகளுக்கும் சின்னங்கள் மாற்றப்பட வேண்டும் என்று மட்டும் சொல்லிப்பாருங்கள். மக்கள் பிரச்சினைக்கு ஒன்று கூடாத இந்தக் கட்சிகள் கதறிக்கொண்டு ஓரணியில் திரண்டு போராட்டம் நடத்தும்.

சகாயம்: 'அவருதான் அரசியலுக்கு வரலேன்னு சொல்லிட்டாரே?' என்கிறீர்களா. வேறு ஒன்றுமில்லை. நிறைய பேர் சகாயம் அரசியலுக்கு வர வேண்டும் என்று சொல்கிறார்கள் அல்லவா. உண்மையில் மக்கள் பிரதிநிதிகள், மந்திரிகள் அனைவருமே உயிருள்ள ரப்பர் ஸ்டாம்புகள் தான். ஒரு திட்டத்திற்கு இறுதி ஒப்பம் மட்டும்தான் அவர்கள் கொடுப்பார்கள். ஆனால், உண்மையில் எல்லாவற்றிற்கும் பின்னால் இருப்பது அதிகாரிகள்தான். அரசியலுக்கு வருவது சம்பாதிக்கத்தான். ஆனால், எப்படி சம்பாதிப்பது என்ற வழி, அதிகாரிகளுக்குத்தான் தெரியும். மந்திரி ஆவது அதிகார சுகத்திற்காகத்தான். மந்திரியாக இருக்கும்போது பெரிய அதிகாரிகள் கை கட்டி முன்னால் நிற்பார்கள். ஆனால், பதவி இல்லையென்றால் நாய் கூட மதிக்காது. ஆனால், அதிகாரிகள் அங்கேயே இருப்பார்கள்.

சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் வாசிக்கும் அறிக்கைகள் எல்லாம் அம்மா என்ன வீட்டில் இருந்தா எழுதுகிறார்? எல்லாமே அதிகாரிகள் கொடுப்பது தான். ஓரளவு நல்ல அதிகாரியாக இருந்தால் நெல்லுக்கு (அரசியல்வாதி/அதிகாரி) பாயும்போது சற்று புல்லுக்கும் (நாமதான்) பாயட்டுமே என ஒரு சில நல்ல திட்டங்களை சொல்லலாம். பல திட்டங்கள் பணம் அடிக்க மட்டும். சில அறிவிப்பிற்காக மட்டும். உண்மையில் அதிகாரிகளுக்குத்தான் ஆயுள் அதிகம். அரசியல்வாதிகளுக்கு 5 வருடங்கள்தான். அதுவும் அம்மா ஆட்சி என்றால், எப்போதென்றே தெரியாது. எனவேதான், சகாயம் சொன்னதையே நானும் சொல்கிறேன். அரசியல் வேண்டாம். அதிகாரி ஆகுங்கள்.

"இதுல அரசியலே இல்லையேப்பா? பொதுவாத்தான சொல்லி இருக்க" என்கிறீர்களா? சரிதான். ஒவ்வொரு கூட்டணியைப் பற்றிய என்னுடைய கருத்துகளை தனிப் பதிவாக இடலாம் என உள்ளேன். போடலாமா, வேண்டாமா? என்ற குழப்பம் உள்ளது. இன்னும் ஒரு மாதம் உள்ளதே, பார்ப்போம்.

Friday, March 18, 2016

நானும் பிரபல பதிவர்தான்!

இதனால சகல விதமானவர்களுக்கும் சொல்லிக்கிறது என்னான்னா, நானும் இனிமே 'பிரபல பதிவர்'தான்.

என் பதிவப் பத்தி எவனும் சந்துல கூட பேசுனதில்லையே. ஆனா, இப்போ ஹிந்துல வந்திருக்கே.


திண்டுக்கல் அண்ணாச்சிக்கு எவ்ளோ ஹிட்சு? அட கேபிளார்க்கு எவ்ளோ?? ஐயோ என்னோடது எவ்ளோன்னு யாருக்காவது சொல்லணுமே.


நான் பதிவு எழுதறேன்னு என் பொண்டாட்டிக்கு கூட தெரியாதே? நான் யார்கிட்ட போய் என் பெருமையைப் பேசுறது. வழக்கம் போல சிக்குறவங்கள செதச்சுற வேண்டியதுதான்.



நான் பதிவு எழுதுவது எனது நெருங்கிய வட்டத்தில் மிக சிலருக்கே தெரியும். அவர்களும் ஆரம்ப காலங்களில் படித்ததோடு சரி. இப்போது யாரும் சீண்டுவதில்லை. நானும் ஏனோதானோ என்றுதான் எழுதிக் கொண்டு இருந்தேன். இப்போதெல்லாம் 140 எழுத்துக்களில் கீச்சுகளும், புகைப்பட கிண்டலும் வந்து விட்டதால், "இவ்ளோ பெருசா எழுதியிருக்க, யாரு படிப்பா" என்ற கிண்டல்கள் வந்தன. ஆனாலும், எனக்கென்னவோ பெரிதாக எழுதினால்தான் பிடிக்கும். எனவே சற்று சற்று சுணங்கி, கடமைக்காக சில பதிவுகள் போட்டேன்.

ஆனால், இப்போது உற்சாக பானம் அருந்தியது போல உள்ளது. இதே ஆர்வத்தில் இன்னும் கொஞ்ச நாள் ஓடும். என்னுடைய பதிவுகளை இன்னும் படித்து வரம் எனது நண்பன் சிவா மட்டும்தான். ஏனென்றால் அவனும் ஒரு பதிவர். என்னுடைய வலைப்பூ பற்றி ஹிந்துவில் வந்ததை முதலில் பார்த்து சொன்னதே அவன்தான். நண்பேன்டா! என்னுடைய வலைப்பூ பற்றி யாராவது சொன்னார்களா அல்லது அவர்களே பார்த்தார்களா என தெரியவில்லை. ஆனாலும், எனக்கு ஆதரவளித்து வரும் அனைவருக்கும் மிக்க நன்றிகள்.


அப்புறம் அந்த கட்டுரைல ஒரு ரெண்டு ஓட்டு 'கோவம்'னு குத்தியிருக்குற செவப்பு ஆடுங்க யாருன்னுதான் தெரியல. நல்லா இருங்கப்பா.



Sunday, February 28, 2016

இளையராஜா 1000

நான் இந்த நிகழ்ச்சிக்கு எல்லாம் போகவில்லை. சும்மா ராஜாவின் சில அதிகம் கேட்டிராத பாடல்களைப் பகிரலாம் என்பதற்காகவே இந்தப் பதிவு.

அந்தரங்கம் யாவுமே - ஆயிரம் நிலவே வா:


இந்தப் பாடலை வானொலியில் கேட்டதாக எனக்கு .நினைவில்லை. பாடல் வரிகள் கூட காரணமாக இருக்கும். இந்தப் படத்தில் வரும் இன்னொரு பாடலான தேவதை இளம் தேவி, ஒரு ஹிட்டான பாடல். ஆனால், இதையும் ஒரு முறை கேட்டு (பார்க்க வேண்டாம்) மட்டும் பாருங்களேன். உங்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும்.அதிலும் குறிப்பாக 'எப்டி எப்டி' என்பதையே வித்தியாச வித்தியாசமாக கேட்பது.

ஆத்தாடி - அன்பு சின்னம்:


இது ஒரு டப்பிங் படம். ஆனாலும் இந்தப் பாடல் அதிக முறை கேட்டது போலவே நினைவு. முன்பு, 2 ஸ்டேட்ஸ் படம் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ரேவதி பாடும் 'இசையின் அலை' பாடலில் திடீரென எங்கேயோ கேட்டது போல ஒரு பாடல்.


தேடித் பார்த்தால் அது சல்மான்கான் ரேவதி நடித்த ஹிந்திப் பாடல் என சொன்னது. இன்னும் கொஞ்சம் தீவிரமாக தேடிய போதுதான் தெரிந்தது, அந்த ஹிந்திப் படம், இந்தப் படத்தின் ரீமேக் என. சுரேஷ் கிருஷ்ணா பாடலையும் சேர்த்து கொண்டு போய் விட்டார்.


பாதிப் பாடல்களை இசையமைப்பாளர்கள் திருடினால், மீதியை இயக்குனர்கள் சுடுவார்கள் போல. வட இந்தியர்கள் பாதி பேர், தங்களுக்கு பிடித்த பாடலின் உண்மையான இசையமைப்பாளர் இளையராஜாதான் என்று தெரியாமலே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இளமனது பல கனவு - செல்வி:

இந்தப் பாடலையும் முடியும். சிறு வயதில், நாய் நடித்த படம் என ஞாயிறு வரை காத்திருந்து பார்த்தது மட்டும் நினைவில் உள்ளது. இதே பாடல் பின்னணி இசையாகவும் ஒலிக்கும். அதுவும் நன்றாகவே இருக்கும்.


ஓ உன்னாலே நான் - என் அருகில் நீ இருந்தால்:

இது 90களில் எனக்கு நினைவு தெரிந்து அடிக்கடி வானொலியில் கேட்ட பாடல். வழக்கம் போல பார்க்க வேண்டாம்.


அன்பு மலர்களின் சோலை இது - கண்ணுக்கு மை எழுது:

கிட்டத்தட்ட மந்திரப் புன்னகையோ பாடல் போலவே இருந்தாலும், சற்றே வித்தியாசமான பாடல். நீங்களும் ரசியுங்கள்.