Showing posts with label இளையராஜா. Show all posts
Showing posts with label இளையராஜா. Show all posts

Sunday, April 2, 2023

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

அனைவருக்கும் வணக்கம். 2023 சிறப்பாக போய்க்கொண்டிருக்கும் என்று நம்புகிறேன். வழக்கம் போல ஊறுகாய் போல எல்லா விஷயங்களையும் தொட்டு செல்கிறேன். 

ஆஸ்கார் மரகதமணி: எப்போதுமே ராஜா, ரஹ்மான் என்றுதான் பதிவுகளும், சண்டைகளும் நடக்கும். எப்போதாவது ஹாரிஸ், யுவன். திடீரென எங்கிருந்து வந்தார் என்றே தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன்பு, 2020ல் தான் இசை அமைப்பதில் இருந்து ஓய்வு பெறப்போவதாக படித்தேன். இதையேதான் ரஹ்மானும் அவருடைய வாழ்த்தில் சொல்லி இருந்தார்.


பணம் கொடுத்து வாங்கினார்கள், இதை விட நல்ல பாடல்களை மரகதமணி கொடுத்துள்ளார் என்று என்னதான் சொன்னாலும் இது ஒரு புதுவித தொடக்கம். கண்டிப்பாக என்னுடைய முந்தைய பதிவில் சொன்னபடி இனி வரும் காலங்களில் கண்டிப்பாக இந்தியாவிற்கும் தமிழுக்கும் நிறைய ஆஸ்கார்கள் கண்டிப்பாக கிடைக்கும். 

எப்போதுமே, ஒரு சில இயக்குனர் - இசையமைப்பாளர் இணை ஒரு போதும் சோடை போகும் பாடல்களை கொடுத்ததே இல்லை. மணிரத்னம் இளையராஜா, மணிரத்னம் ரஹ்மான், சங்கர் ரஹ்மான், பாசில் இளையராஜா, சரண் பரத்வாஜ் என்று நிறைய. அதில் ராஜமௌலி மரகதமணியும் ஒன்று. அவர்களின் ஆரம்பகால பாடல்கள் முற்றிலும் தெலுங்கு வாடை அடித்தாலும், நான் ஈ படத்தில் இருந்து மரகதமணி இசை உலகத்தரம். 

ஆரம்பகால கட்டங்களில் ஜாதி மல்லி, நீ பாதி நான் பாதி, வானமே எல்லை, அழகன் என்று பாலச்சந்தர் மற்றும் அவர்களது சீடர்களுக்கும் நல்ல பாடல்களை கொடுத்துள்ளார். இன்னும் அடுத்தடுத்த படங்களில் நிறைய விருதுகளை வெல்லவும், வெளிநாட்டுப் படங்களுக்கு இசை அமைக்கவும் வாழ்த்துக்கள். 

எனக்கு புரியாத ஒரு விஷயம் என்னவென்றால், இதை வைத்து ரஹ்மான் ரசிகர்களும், மரகதமணி ரசிகர்களும்தானே சண்டை போட வேண்டும். ராஜா ரசிகர்கள் ஏன் குறுக்கே மறுக்கே விழுந்து சண்டை போடுகிறார்கள் என்றுதான் தெரியவில்லை திடீரென ஜேம்ஸ் வசந்தன் வேறு ராஜா 2 வருடங்களுக்கு முன்னால் உளறியதை மீண்டும் தூண்டி விட்டுள்ளார். ஐயோ ஐயோ.

விமர்சனம்: உண்மையில், தமிழில் டாடா படம் தவிர வேறு எதுவும் பார்க்கிற மாதிரியே இல்லை. வாரிசு, துணிவு, வாத்தி எல்லாம் உண்மையில் மரண மொக்கை. தெலுங்கு இயக்குனர்கள் தமிழில் படம் எடுக்கும் பொது மாற்றுகின்ற ஒரே விஷயம், அங்கு எப்போதுமே இரண்டு நாயகிகள். தமிழில் ஒரே ஒரு நாயகி. அதைத் தவிர மற்ற எல்லாமே அப்படியே தெலுங்கு வாடைதான். அதிலும் தெலுங்கில் வீரசிம்ஹா, வால்டர் வீரய்யா படங்களை பார்த்து நொந்து விட்டேன். 


முன்பெல்லாம் ஆங்கிலப் படங்களின் கதைக்களம் தெரிந்தாலும் தொழில் நுட்பத்தோடு (நெசமாத்தான்) பார்ப்போம். இப்போதெல்லாம், பார்க்கவே தோன்றுவதில்லை. Horror வகையறாவில் உள்ள முக்கால்வாசி படங்கள் ஒரே மாதிரியான களம், காட்சிகள். இன்னும் கொஞ்ச வருடங்களில் படம் பார்ப்பதையே விட்டு விடுவேன் என்று நினைக்கிறேன்.

இணையத் தொடர்கள் இன்னும் மோசம். ராணா நாயுடுவை தெரியாமல் பார்த்து தொலைத்து விட்டேன். 20 வருடங்களுக்கு முன்பே மறந்து போயிருந்த கெட்ட வார்த்தைகளை மீண்டும் ஞாபகப்படுத்தி விட்டார்கள். இந்த தொடர்களில் பிரச்சினை என்னவென்றால், நிறைய நாமே அனுமானித்துக் கொள்ள வேண்டும். அடுத்த பாகத்துக்கு என்று பாதி விஷயங்களை தொங்கலில் விடுவது என்று ஒரு திருப்தியே இருக்காது. என்னவோ போங்க. 

அரசியல்: திமுகவினர் ஆட்டம் அதிகமாகி விட்டது. இவர்களே பாஜக வர வழி வகுத்து விடுவார்கள் போல. ஒரு சில சங்கி நண்பர்கள் கூட "ஏன், பாஜக வந்தா என்ன. ஏற்கனவே தமிழ்நாடு முன்னேறி இருக்கு. எங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்தா, இதே வழியிலதான் நாங்களும் போவோம். அப்புறம் என்ன" என்று கேட்டனர். 

என்னுடைய பதில் இதுதான். திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் கொள்கை என்பதில் சமத்துவம், சமூக நீதி போன்றவை உள்ளன. அவை அதனை செயல்படுத்துகிறதா என்பது வேறு. ஆனால், உங்களுடைய கொள்கையில் இது எதுவும் இல்லை. அதனால்தான் எனக்கு நீங்கள் வேண்டாம் என்றேன். அதற்கு வழவழ கொழகொழ என்று பதில் வந்தது. நாங்கள் இந்த வரலாற்றை மாற்றுவோம். உண்மையான கலாச்சாரம் பற்றி மக்களுக்கு சொல்லுவோம் என்று. இதிலும் நன்மைகள் உள்ளன என்றெல்லாம் சொன்னார்கள். 

உலகத்தில் எந்த செயலுமே தீமை கிடையாது. ஆனால், அது எத்தனை பேருக்கும் நன்மை என்பதில்தான் விஷயமே உள்ளது. சரி திமுக விஷயத்திற்கு வருவோம். நம்மை விட்டால் வேறு நாதி இல்லை என்ற எண்ணம் அவர்களுக்கு வந்து விட்டது. இதுவே அழிவிற்கு முதல் காரணமாக அமையக்கூடும். திருந்துங்கள், இல்லையேல் உங்களுடன் சேர்ந்து மக்களும் பிற்காலத்தில் வருத்தப்படும்படி ஆகி விடும். 

அவ்வளவுதான். மீண்டும் சந்திப்போம். 

Sunday, November 20, 2022

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

இன்னும் பதிவுகளைத் தேடிவரும் பதிவர்களுக்கு வணக்கம். மாதத்திற்கு ஒன்று என்று எண்ணியது வருடத்திற்கு ஒரு முறை என்று மாறி விடும் போல. இருந்தாலும் பரவாயில்லை, தோன்றும்போது எழுத வேண்டியதுதான். 

இளையராஜா:

கமல் எப்போது கட்சி ஆரம்பித்தாரோ, அப்போதே அவர் மீது இருந்த மதிப்பு போய் விட்டது. இப்போது ராஜா மீதும்தான். வெற்றிமாறன் ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார். நடு நிலை என்று கிடையாது. அது மறைமுகமாக ஒரு நிலைக்கு ஆதரவாக இருப்பதுதான் என்றான். யோசித்துப் பார்த்தால் அது உண்மைதான். இன்னொரு உண்மையும் என்னவென்றால், நாம் ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு செல்லும்போது நம்முடைய கருத்தும், அரசியல் நிலைப்பாடும் மாறுகிறது. 


இட ஒதுக்கீட்டில் படித்த நானே, வீடு, நல்ல வேலை வந்தவுடன் இப்போது இட ஒதுக்கீடு தேவையில்லை என்று எண்ண ஆரம்பித்து விட்டேன். கல்லூரி திரைப்படத்தில், மிக அழகாக இதனைக் காட்சிப்படுத்தி இருப்பார்கள். எத்தனை தலைமுறைகளாக மறுக்கப்பட்ட கல்வி, வேலை ஒரு தலைமுறையில் கிடைத்தவுடன் நமக்கு எல்லாமே கிடைத்து விட்டது போல எண்ணம் வந்து விட்டது. சரி வழி தவறி வந்து விட்டேன். இதைப்பற்றி பின்னர் விரிவாக பார்க்கலாம். 


எனக்கு பொழுது போகாத போது விக்கிப்பீடியாவில் பழைய படங்கள் பற்றி படித்துக்கொண்டிருப்பேன். அதில் பல படங்களில், ராஜாவின் இசையைப் பற்றி சொல்லி இருக்கவே மாட்டார்கள். அப்படியே இருந்தாலும், நன்றாகவே இல்லை, கேவலமாக உள்ளது, என்றுதான் இருக்கும். அனைவருக்கும் தெரியும், ஒரு மனிதனுக்கு பாராட்டு எவ்வளவு முக்கியம் என்று. ஆனால், ஊரே உங்களை பாராட்டும்போது பெரிய ஆட்கள் எல்லாம் உங்களை அழுத்தும்போது கண்டிப்பாக நீங்களே உங்களை பற்றி பெருமையாக பேச ஆரம்பிப்பீர்கள். அதுதான் ராஜாவுக்கும் நடக்கிறது. 

"உன் பின்னாடி எல்லாம் வர வேண்டி இருக்கு, எல்லாம் என் தலையெழுத்து" என்று வந்தால், "அப்படியா, உன்ன கொஞ்சம் வச்சு செஞ்சாதான் திருந்துவ" என்ற கண்டிப்பாக எண்ணி இருப்பார். அதன் விளைவே ரஹ்மான். எனக்கு தெரிந்து ரஹ்மான் ராஜாவை நேரில் பார்த்துப் பழகியதால் தான் இன்னும் அடக்கி வாசிக்கிறார் என்று நினைக்கிறேன். 

ராஜா இதற்கு மேல் சாதிக்க வேண்டும் என்று கிடையாது. ஆனால், இப்போது ஒரு சார்பு நிலை எடுத்ததால், இனி அவருக்கு எந்த விருது கிடைத்தாலும் அது அவருக்கு பெருமையாக இருக்காது. அந்த வகையில் எனக்கு வருத்தம்தான். 

விமர்சனம்:

இப்போதெல்லாம் வீட்டிலிருந்து வேலை செய்யும்போதும், சனி ஞாயிறு என எல்லா நாளும் குறைந்தது 3 படங்களாவது பார்த்து விடுகிறேன். இந்த வருடம், இதுவரை எந்த விமர்சனமும் போடவே இல்லை. யாரும் இப்போது படிப்பதற்கு ஆர்வம் காட்டுவது இல்லை. யூடியூபில் கூட ஷார்ட்ஸ் தான் நிறைய பார்க்கிறார்கள். ஒரு மனிதனின் கவனம் இப்போது 8 நொடிகள் மட்டுமே. அதற்குள் அவர்களை கவர வேண்டும். அடச்சே. மறுபடியும் மாறி மாறி போகிறேன். 

சரி, இந்த வருடம் இதுவரை வந்த படங்களில், மிகவும் பிடித்தது என்று எதுவும் இல்லை. தமிழில் டைரி, சர்தார், திருச்சிற்றம்பலம் படங்கள் எனக்கு கொஞ்சம் பிடித்திருந்தன. ஆனால், மலையாளத்தில் நிறைய படங்கள். ஒவ்வொன்றும் அட்டகாசமாக உள்ளன. ஒரு வரி கதையை வைத்துக்கொண்டு எப்படி எடுக்க முடிகிறது என்பதுதான் ஆச்சரியம். மற்ற மொழிகளில் இப்படி எடுத்தாலும், மலையாளத்தில் மிக அதிகம். 

தள்ளுமாலா (பல்ப் பிக்சன் பாதிப்பு), ஜன கன மன, Rorschach, நீதான் கேஸ் கொடு, சல்யூட், புழு, தீர்ப்பு என நிறைய படங்கள். அதிலும் மம்முட்டி இந்த வருடம் இறங்கி அடித்துள்ளார். அதன் பிறகு பிரித்விராஜும், துல்கரும். அதிலும் புழு மற்றும் Rorschach படங்களில் மம்முட்டி ஏற்றுள்ள வேடங்கள், உண்மையில் கமல் கூட நடிப்பாரா என்பது சந்தேகம். முடிந்தால் பார்க்கவும். இப்போதைக்கு அவ்வளவுதான். 

கொஞ்சம் விரிவான விமர்சனங்களோடு மீண்டும் பதிவிடுகிறேன். 

Sunday, June 30, 2019

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்!

முந்தைய பதிவு கொஞ்சம் சோகமாகவும், சமுதாய நோக்கத்தோடும் (?) இருந்ததால், இந்த முறை ஜாலிலோ ஜிம்கானா பதிவு. 

தண்ணீர் தண்ணீர்:

தண்ணீர் பிரச்சினை மிக கொடூரணமான நிலைக்கு போய்க் கொண்டிருக்கிறது. ஒரு நாளைக்கு காலையில் 4 மணி நேரம், மாலையில் 4 நேரம் இன்றி இருத்தது, காலையில் மட்டும் என்று மாறியது. பிறகு 2 மணி நேரமானது. தற்போது ஒரு மணி நேரமாக உள்ளது. 

கொடுமை என்னவென்றால், அந்த ஒரு மணி நேரத்திலும் கிட்டத்தட்ட 80 ஆயிரம் லிட்டர் தண்ணீர் செலவாகிறது. தற்போது ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீரை அளக்கும் மீட்டர் பொறுத்தி விட்டோம். இனி சற்றே குறையும் என்று எதிர் பார்க்கிறோம். 

படித்தவர்கள், பண்பானவர்கள், அடுத்தவர்களுக்கு கஷ்டம் கொடுக்காமல் நடந்து கொள்பவர்கள், மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவர்கள்தான் இது போன்ற அடுக்கு மாடி குடியிருப்புகளில் இருப்பார்கள் என்று நினைத்தால், தயவு செய்து உங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்ளுங்கள். எவன் எப்படிப்போனால் எனக்கென்ன, எனக்கு வேண்டியது நடந்தால் போதும் என்பவர்கள்தான் நிறைய. இப்படிப்பட்ட தண்ணீர் பஞ்சத்திலும், "நாந்தான் காசு கொடுக்கிறேன்ல, எனக்கு ஏன் தண்ணி தர மாட்டேன்னு சொல்ற" என்று சண்டை போடும் ஆட்கள்தான் நிறைய உள்ளனர்.  

அஞ்சலி:

அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க ஆரம்பித்த பிறகு, அடிக்கடி நான் எழுத நினைத்த திரைப்படம் அஞ்சலி. அந்தப் படம் பார்க்கும் போது 8 வயது இருக்கும் என்று நினைக்கிறேன். 

மூக்கு ஒழுக, அரைஞாண் கயிற்றால் இடுப்பில் டிராயர் விழாமல் பிடித்துக் கொண்டு, காலில் செருப்பு கூட போடாமல் சுற்றும்போது, நம்மைப் போன்ற ஒரு பையன் ஜீன்ஸ், டீ சர்ட், ஷூ போட்டுக்கொண்டு, நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியே போய், போட்டுக்கொண்டு மொட்டை மாடி மொட்டை மாடி, இரவு நிலவு என்று பாட்டு பாடியதைப் பார்க்கும்போது, வாயைப்பிளந்து கொண்டு பார்த்தேன். நாமும் அதே போல சுற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டு, வீட்டில் போய் அந்தப் படத்தில் வருவது எல்லாம் வேண்டும் என்று கேட்டு, அடி வாங்கியதுதான் மிச்சம். 

அதன் பிறகு, 10ஆவது படிக்கும் பொது என் அத்தை வீட்டிற்காக முதல் முறை சென்னை வந்தேன். அதுவும் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பே. ஆனால், அங்கு பக்கத்துக்கு வீட்டில் யாரென்று தெரியாது, பார்த்தால் சிரிப்பார்கள், அங்கேயெல்லாம் போகக்கூடாது, சிறுவர்கள் இருந்தாலும், வெளியே வந்தால்தான் விளையாட வேண்டும் என்றெல்லாம் சொன்னவுடன், அடப்போங்கப்பா என்றாகி விட்டது. இப்போது நானும் அதே குட்டையில் ஊறிக்கொண்டிருக்கிறேன்.

ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்: 

எங்கள் அடுக்குமாடி குடியிருப்பின் நல சங்கத்தில், முக்கிய உறுப்பினர்கள் எல்லோருமே ஓய்வு பெற்ற ஆட்கள். அவர்கள் தாங்கள் செய்வதுதான் சரி என்பார்கள், நான் ஏற்கனவே நான்கைந்து இடங்களில் இதே போல இருந்திருக்கிறேன், நிறைய செய்திருக்கிறேன் என்பார்கள். ஐயா, இப்போதைக்கு, இங்கே என்ன தேவை என்று பாருங்கள், அதற்கேற்றாற்போல செய்யுங்கள் என்றால், உடனே கோபப்படுவார்கள். 

அதே போலத்தான் இப்போது இளையராஜாவும். அவர் நிறைய செய்திருக்கிறார். ஆனால், இப்போதைய மக்களின் மன நிலை என்ன, அவர்களின் தேவை என்ன என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை. தான் என்ன கொடுக்கிறோமோ அதை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார். என்னத்த சொல்ல. 

இதில் கொடுமை என்னவென்றால், இளையராஜாவை விமர்சிக்கும் (ஆதரித்தோ, எதிர்த்தோ) முக்கால்வாசிப் பேர், அவரது பாடல்களை இணையத்தில் தரவிறக்கம் செய்து கேட்பவர்கள். இதில் நானும் அடக்கம். 


இளையராஜாவின் பாடல்கள் என்பது ஒரு பொருள். நமக்கு பொருள் பிடிக்கிறதா இல்லையா என்பதுதான் முக்கியம். ஆனால், நாம் அதை தயாரிப்பவரை ஏன் விமர்சிக்கிறோம் என்று புரியவில்லை. இது எப்போதும் திரைத்துறையில் மட்டுமே நடக்கிறது. என்னவோ போடா மாதவா. 

"ஏண்டா இதையா ஜாலியாத பதிவுன்னு சொன்ன" என்று சண்டை போட வேண்டாம், ஏதோ புலம்ப வேண்டும் என்று தோன்றியது. அவ்வளவுதான். 


Saturday, May 25, 2019

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்!

கொஞ்சம் வெயிலின் கொடுமையோடு, எனது கொடுமையையும் சேர்த்து அனுபவிக்கவும். 

அரசியல்:

எப்படியோ தேர்தல் முடிந்து விட்டது. நான் கொஞ்சம் கர்நாடகா சட்டமன்றம் போல ஆகும் என நினைத்தேன். சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ், மம்தா எல்லோரும் அதே போலத்தான் நினைத்திருப்பார்கள் போல. 

சரி நம் விதி வலியது. தமிழ்நாடு வழக்கம் போல தனது வேலையைக் காட்டி விட்டது. இன்னமும் பிஜேபி புரிந்து கொள்ளாத ஒரே விஷயம் என்னவென்றால், ஏன் தமிழகத்தில் வெல்ல முடியவில்லை என்றால், மீண்டும் மீண்டும் அவர்கள் செய்யும் தவறு என்னவென்றால், நம்மூரில் மத வெறியைக் கிளப்ப முயற்சி செய்வதுதான். 

எனக்கு இன்னமும் புரியாத விஷயம், முகப்புத்தகத்தில், கீச்சுகளிலும் பிஜேபியை ஆதரிக்கும் ஆட்கள் வாக்களித்தாலே ஒரு 4 சதவிகிதம் வர வேண்டும். நம்மூர் ஆட்கள் பல பேர் கொஞ்சம் நக்கல் பிடித்தவர்கள். யாராவது ஏதாவது சொன்னால், அதை எதிர்க்க வேண்டும். அது அவர்கள் ஆதரிக்கும் விஷயமாக இருந்தாலும் சரி, உடனே அதை எதிர்ப்பார்கள். அது போலத்தான், யாராவது பிஜேபியை எதிர்த்தால், அங்கே போய் பதிவிட்டவர்களை எதிர்க்க வேண்டியது, கடைசியில் வாக்களிக்கும்போது வழக்கம் போல எதிர்த்து வாக்களிக்க வேண்டியது. 

இன்னொரு விஷயம், திமுக பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாய் பெற்ற தெங்கம்பழம் போல. கண்டிப்பாக எதுவும் உருப்படியாக செய்ய முடியாது. செய்தாலும் அதை பங்கு போட அதிமுக வந்து விடும். இனி வழக்கம் போல வெளிநடப்புகளும், புலம்பல்களும்தான் இருக்கும். நம்மாட்கள், வழக்கம் போல நம் வேலையை பார்ப்பார்கள். 

யோசித்துப் பாருங்களேன், ஒருவேளை மொத்தமாக தமிழத்தில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றிருந்தால், ஊழல் கொடூரமாக நடக்க ஆரம்பிக்கும். அதே போல, சட்டமன்ற தேர்தலில் மொத்தமாக திமுக வெற்றி பெற்றிருந்தாலும் அதேதான். 

நாங்க எவ்ளோ புத்திசாலி பாத்தீங்களா. 

சரிடா, ஆனா உனக்கு எதுவுமே நல்லதே செய்ய மாட்டார்களே. 

ஆமாமா, அப்படியே செஞ்சுட்டாலும். கடைசி வரைக்கும், மாத்தி மாத்தி எல்லாரையும் கதற வச்சிக்கிட்டே இருப்போமுல்ல. 

விமர்சனம்:

முன்பெல்லாம், நிறைய உலகப்பட விமர்சகர்கள் இருந்தார்கள். மற்ற மொழிப்படங்கள் பற்றி நிறைய எழுதுவார்கள். குறிப்பாக நிறைய கொரியன் படங்கள் பற்றியும் படித்து, அதில் சில படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்போம். ஆனால், இப்போது அப்படி யாரும் எழுதுவது போல தெரியவில்லை. இன்னும் பல பேர் காணொளி இடுகிறார்கள், அனால், அது என்னவோ படிப்பது போல இல்லை. சரி விடுங்கள். 

ரொம்ப நாள் கழித்து ஒரு கொரியன் படம். அதுவும் யாருடைய பதிவிலும் படிக்கவில்லை. அது தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது என்று படித்ததால் பார்த்தேன். 

மிஸ் கிரானி (Ms. Granny - 2014): சிறு வயதில் கணவனை இழந்து, தனது ஒரே மகனை கஷ்டப்பட்டு வளர்த்து, அதனால் பேரன் பேத்தி பெரியவர்கள் ஆனாலும், மகனை தங்குவதால், மருமகளுக்கு கஷ்டம். பேத்திக்கு பாட்டியின் போக்கு பிடிக்கவில்லை, பேரன் மட்டும் ஆதரவு.


மாமியாரின் தினசரி அழுத்தம் காரணமாக, மருமகளுக்கு மாரடைப்பு ஏற்பட, மகனோ தனது தாயை ஆசிரமத்தில் சேர்த்த முடிவு செய்கிறார். இதனால் வருத்தமாடியும் தாய், ஏதோ நினைப்பில் வெளியே போகிறார். கடைசி ஆசை போல, ஒரு கடையில் புகைப்படம் எடுக்கிறார். எடுத்தவுடன், 20 அவரது இளைஞியாக மாறி விடுகிறார். 

இனி தனது விருப்பம் போல வாழ ஆசைப்படுகிறார். பாட வேண்டும் என்ற சிறு வயது ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறார் அவரது பேரன் அவர் மீது காதல் வயப்படுகிறார். அவருக்கு, ஒரு தொலைகாட்சி நிறுவனர் மீது காதல், கடைசியில் தமிழ் படம் போல, படம் முடிகிறது. 

படமும் ஏற்கனவே நிறைய மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது போல. எல்லாமே, இந்த காணொளியில் உள்ளது. 


கண்டிப்பாக பார்க்கலாம். தெலுங்கில் பார்க்க கொஞ்சம் பயமாக இருக்கிறது. பார்ப்போம். 

இளையராஜா: 


எப்படியோ எல்லா கல்லூரிகளுக்கும் சென்று வந்து விட்டார் போல. இளையராஜாவிடம் உள்ள பெரிய பிரச்சினை என்னவென்றால், அவருக்கு எல்லாமே தெரியும்தான். ஆனால், இயக்குனர் என்ன, எப்படி கேட்கிறாரோ அதை அவர் கொடுத்தாலே போதும். ஆனால், இது போதும் என்று நினைப்பதாலேயே அவருடைய சிறந்த படைப்பை அவரால் கொடுக்க முடியவில்லை. 

அவதாரம் படத்தின் 'தென்றல் வந்து' பாடல், நாசர் கேட்காமலே கொடுக்கப்பட்டது. அதே போல, ஒவ்வொரு இயக்குனருக்கும் இருக்காதல்லவா. இயக்குனர்களும், அவரிடம் கேட்க பயப்படுகிறார்கள் போல. 

எல்லா இயக்குனர்களும், ஒரு கடமைக்கு, ஆசைக்கு அவருடன் பணி புரிந்து விட்டு, பிறகு அவரவர்க்கு இஷ்டப்பட்ட இசையமைப்பாளர்களுடன் சென்று விடுகின்றனர். கவனித்துப் பாருங்களேன். கடந்த 10 வருடங்களில், எந்த இயக்குனரும் தொடர்ச்சியாக இளையராஜாவுடன் பயணிக்கவில்லை. ஓரிரு படங்கள்தான். இளையராஜா இல்லாமல் படம் எடுக்க மாட்டேன் என்று சொன்ன பால்கி கூட மாறி விட்டார். 

இசைக்கு வயதில்லை. மக்களின் இசையாக மீண்டு(ம்) வர வாழ்த்துக்கள்.   

Sunday, November 4, 2018

தென்றல் வந்து தீண்டும்போது...

முதலில் பாடலைக் கேட்போம்.


தோணி பட விழாவில் நாசர் இந்த பாடல் உருவான கதையை சொல்லி இருந்தார். நகைச்சுவையாக இருந்தாலும், அவருடைய உண்மையான உணர்வுகளை சொல்லி இருப்பார். 


இதே பாடல் தெலுங்கில் சில வருடங்களுக்கு முன் 'எவடே சுப்பிரமணியம்' படத்தில் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. அதை அவரே இன்னும் நன்றாக மெருகூட்டினார் என்று படித்தேன்.


சில நாட்களுக்கு முன் MOP வைஷ்ணவா கல்லூரியிலும், பின் எம்ஜிஆர் சத்யா பெண்கள் கல்லூரியிலும் இளையராஜாவின் 75ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இந்த இரண்டு இடங்களிலும் கண்டிப்பாக மாணவிகள் 2000களின் ஆரம்பத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். ஆனாலும், இரண்டு இடங்களிலும் தானத்தந்த தானத்தந்த என்ற ஆரம்பித்தவுடன் அவர்களின் ஆரவாரத்தைக் கேட்டால் ஆச்சரியமாக இருந்தது. கிட்டத்தட்ட அதே போலவே கோயமுத்தூர் PSG கல்லூரியிலும். அதே ஜனனி ஜனனி முதல், தென்றல் வந்து தீண்டும்போது வரை.


இந்த பாடல் அந்த அளவிற்கு மக்களின், குறிப்பாக இளைஞர்களின் மனதில் இருப்பது ஆச்சரியம். அங்கு அவரின் பேச்சும், மாணவிகளின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களும் காணொளியாக. நீங்களும் பாருங்கள், பொறுமை அவசியம்.




மூன்றிலும் நிறைய முறை தற்பெருமை பற்றி நிறைய பேசினாலும் ஒரு சில விஷயங்கள் நன்றாக பேசினார். குறிப்பாக, வாழ்க்கையில் வெற்றி பெறுவது பற்றிய கேள்விக்கு, வெற்றி என்பது நீங்கள் செய்யும் செயல்களுக்கு மட்டுமே. வாழ்க்கைக்கு இல்லை. அடுத்து மன நிம்மதிக்கு என்ன மாதிரி இசை என்ற கேள்விக்கு உன் மனதிற்கு என்ன பிடிக்குமோ அதைக்கேள். நான் எதையாவது சொல்லி, அது இன்னும் பிரச்சினை அதிகரித்து விடப் போகிறது என்றார். இது இரண்டும் கொஞ்சம் கூட தற்பெருமை இன்றி வயதுக்கேற்ற மாதிரியான பதில்கள். அதே போல உங்களது குடும்ப உறவுகள் இல்லாமல் உங்களுக்கு பிடித்த 3 பேர் என்ற கேள்விக்கு முதலில் மூகாம்பிகை என்றார். பிறகு தன்ராஜ் மாஸ்டர் மற்றும் GK வெங்கடேஷ் என்றார். அந்த வகையில் மகிழ்ச்சி.

ஆனால், MOPயில் கொஞ்சம் அதிகமாகவே 'நான், என்' விகுதி இருந்தது. அதிலும் ஒரு ஆட்டோ ஓட்டுனர் தன்னிடம் "ஸார், நீங்க மட்டும் இல்லேன்னா, நான் என் பொண்டாட்டிய கழுத்தை நெரிச்சிருப்பேன்" என்றதெல்லாம் கொஞ்சம் அதிகமாக தெரிந்தது. ஆனாலும், என்ன செய்ய. அது உண்மைதான். 

ஏன் நிறைய பேர் இளையராஜா என்று உருகிறார்கள் தெரியுமா. ஒவ்வொருவருக்குமே வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான நிகழ்வுகளும் சோக நிகழ்வுகளும் கலந்திருக்கும். அல்லது மறக்க முடியாத கணங்களும் இருக்கும். 1970களிலிருந்து 90கள் வரை பிறந்தவர்களுக்கு இப்போது இருப்பது போல நினைத்த நேரத்தில் நினைத்த பாடல்களை கேட்க முடியாது. ஆனால், அந்த குறிப்பிட்ட சமயத்தில் கேட்கும் பாடல் நம்மை கதறி அழ வைத்திருக்கும், கவலையை மறக்க வைத்திருக்கும். எத்தனையோ வருடங்கள் கடந்திருந்தாலும், இன்னும் அந்த பாடல் எங்காவது நமக்கு கேட்டால், நம்மை அறியாமல் பின்னோக்கி செல்வோம். இது பல பேருக்கு, ராஜாவின் பாடலாக அமைந்து விட்டது. இது பற்றிய பதிவு. இது 96 படம் வருவதற்கு முன்பே நான் எழுதியது.  

அதே போல ஜனவரி முதல் டிசம்பர் வரை, நாம் கொண்டாடும் அனைத்து பண்டிகைகள், தினங்கள் அனைத்திற்கும் ராஜாவின் ஏதாவதொரு பாடல் பொருந்தியிருக்கும் அல்லது நாமே பொருத்திக் கொண்டு இருப்போம். சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் மட்டும் விதி விலக்கு. அதை மொத்தக் குத்தகைக்கு ரஹ்மான் எடுத்துள்ளார்.

ஜனவரி:
புத்தாண்டு - இளமை இதோ இதோ (சகலகலா வல்லவன்)
போகி - மார்கழிதான் ஓடிப் போச்சு (தளபதி)
பொங்கல் - தைப்பொங்கலும் பொங்குது (மகாநதி)
ஜல்லிக்கட்டு - தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறலாம்.

பிப்ரவரி:
காதலர் தினம் - நிறைய பாடல்கள்.

மார்ச்:
மகளிர் தினம் - மகளிர் மட்டும் (மகளிர் மட்டும்)

ஏப்ரல்: 
சித்திரை 1 - தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறலாம்.

மே:
உழைப்பாளர் தினம் - உழைப்பாளி இல்லாத (உழைப்பாளி)
அன்னையர் தினம் - அம்மா என்றழைக்காத (மன்னன்)

ஜூன்:
ரம்ஜான் - எங்குமுள்ள அல்லா (தர்மசீலன்)

செப்டம்பர்:
விநாயக சதுர்த்தி - அட சாமி வருது (உடன் பிறப்பு)

அக்டோபர்: ஆயுத பூஜை - தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறலாம்.
தீபாவளி - பட்டாச சுட்டு சுட்டு (பூவே பூச்சூடவா)

டிசம்பர்:
கிறிஸ்துமஸ் - தேவனே (வெள்ளை ரோஜா) 

இது தவிர இன்னும் தாய்ப்பாசம், சகோதர பாசம், அதிலும் அண்ணன் தங்கைக்கு தனியாக, அண்ணன் தம்பிக்கு தனியாக, பிரியும்போது ஒரு பாடல், சேரும்போது ஒரு பாடல் என, அது கேட்க நன்றாக இருக்கிறதோ இல்லையோ, நம் நிலையை அப்படியே உணர்த்துவது போல இருக்கும், நம் வாழ்வோடு இணைந்து விடும். இது பற்றி ஏற்கனவே ஒரு நீயா நானா விவாதம் கூட நடந்தது. அதைப்பற்றிய பதிவு. 

இல்லை இல்லை. ராஜா 1000 படங்கள் இசையமைத்திருந்தாலும் அதில் பாதிதான் வெற்றி. மற்றவைகளை ஒரு முறை கூட கேட்க முடியாது. ஆனால், மற்றவர்கள் அப்படி இல்லை. வெற்றி சதவிகிதத்தை பாருங்கள், ஹிந்தியில ஒன்னும் பண்ண முடியலல்ல, ஹாலிவுட் தெரியுமா, எங்க சிம்பொனியை விட சொல்லுங்க, முகவரி படம் பார்த்தீர்களா, இசை படம் பார்த்தீர்களா, என்னவோ ராஜாதான் எல்லாத்தையும் பண்ணுனாரா, அவருக்கு முன்னால எத்தனையோ ஜாம்பவான்கள் இருந்திருக்காங்க, 2010க்கு அப்புறம் ஒரு நல்ல பாட்டு சொல்லுங்க பாப்போம், என்றெல்லாம் ஒரு கும்பல் வரும். 

அவர்கள் சொல்வதிலும் மிகச்சில விஷயங்கள் சரியாக இருக்கலாம். ஆனாலும், புத்திக்கு தெரியுது, மனசுக்கு தெரியல. மற்ற இசையமைப்பாளர்கள் கும்பலுக்கு. ராஜா எங்களுக்கு.

Friday, September 21, 2018

திரை விமர்சனம்

நேரடியாக போய் விடலாம். 

கடைக்குட்டி சிங்கம்:


அருமையான குடும்பப் படம். சில இடங்களில் நாடகத்தனம் இருந்தாலும், கண்டிப்பாக ரசிக்கக்கூடிய படம்தான். கதை அனைவருக்கும் தெரிந்ததுதான். 5 பெண்களுக்கு பிறகு பிறக்கும் ஆண், அவனுக்காகவே வளர்ந்து நிற்கும் இரு அக்கா மகள்கள், பையனுக்கோ வெளியிலே காதல், இதனால் ஏற்படும் குடும்ப சிக்கல்கள், நடுவே ஒரு ஆணவக்கொலை வேறு. கடைசியில் எப்படி சுபமாக முடிக்கிறார் நாயகன் என்பதே கதை. 

நான் ஒரே பையன்தான். ஆனால், மிக நெருங்கிய சொந்தக்காரர் ஒருவருக்கு கிட்டத்தட்ட இந்த படத்தில் வந்த நிலைதான். தனது மகளைக் கட்ட வேண்டும், சொந்தம் விட்டுப் போக கூடாது என அக்காவும், அம்மாவும் இருக்க, இவரோ மறுக்க, பெரிய பஞ்சாயத்து. ஒரு வழியாக சமாதானம் ஆகி, வேறு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து முடித்திருந்தாலும், இன்னும் சுபம் ஆகவில்லை. யாரையாவது பலிகடா ஆக வேண்டும் என்ற நிலையில் என் தலை கூட வெட்டப்பட இருந்தது. அந்த ஒரு காரணமே என்னால் படத்துடன் ஒன்ற முடிந்தது. 

அது ஏன் தேவையே இல்லாமல் நிறைய படங்களில் இரு மனைவிகளை படத்தில் கொண்டு வருகிறார்கள் என்றே தெரியவில்லை. இதில் கூட ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் போகும் பாத்திரம் என்பதால் ஒத்துக் கொண்டாலும், சுந்தர பாண்டியன், கோலி சோடா படத்திலும் தேவையே இல்லாத இரு மனைவிகள் பாத்திரம். குடும்பத்துடன் முகம் சுழிக்க வைக்காமல் ரசித்து பார்க்கலாம். 

விஸ்வரூபம் 2:


விஸ்வரூபம் முதல் பாகத்திலேயே, அடுத்தது நட்டுக்கொள்ளும் என்று தெரிந்து விட்டது. அடுத்த ஒரு வருடத்திற்குள் வந்திருந்தால் கூட ஓரளவு வெற்றி பெற்றிருக்கும். இப்போது அரசியலில் வேறு இறங்க போவதால் மக்கள் நிறைய எதிர் பார்த்திருப்பார்கள். பொறுத்திருந்து இந்தியன் 2 வந்த பிறகு வெளி விட்டிருக்கலாம். படம் பார்த்த பிறகு தோன்றியது 'விஸ்வரூபம் 1 பார்த்து விட்டு சிலிர்த்து போய் சில்லையெல்லாம் வீசி எறிஞ்சேன், பெரிய பதிவெல்லாம் வேற போட்டேன். 

பாதிக்கு மேல் பழைய படத்தில் வந்த காட்சிகள். மீதி கூட படத்தொகுப்பின் மிச்சம் மீதி இருந்த காட்சிகள் என்று தெளிவாக தெரிகிறது. கடைசி சண்டை கூட போன படத்தின் இறுதியில் சும்மா காண்பிப்பார்கள். அம்மா, ராணுவம், கொஞ்சம் லண்டன் காட்சிகள் மட்டும் புதிது. பேசாமல் கமல் இணையத்திலேயே விட்டுருக்கலாம். கோவணமும், கொஞ்ச நஞ்ச மானமுமாவது மிஞ்சியிருக்கும். குறைந்தது புதுமை (போன முறை சொன்ன D2H போல) என்றாவது சொல்லி இருக்கலாம். இந்தியனுக்காகவும், நாயுடுக்காகவும் காத்திருக்கிறேன்.' 

மேற்கு தொடர்ச்சி மலை:


எந்த பொருளுமே கொஞ்சமாவது கலப்படம் இருந்தால்தான் நன்றாக இருக்கும். தங்கத்தில் செம்பு போல. அப்படியே இருந்தால் கொஞ்சம் கஷ்டம். இந்தப் படத்தில் அதுதான் நடந்துள்ளது. நம்முடைய வாழ்க்கையை படமாக எடுத்தால் நன்றாக இருக்குமா? நாமே பார்க்க மாட்டோம். 

முதல் 30 நிமிடங்கள் ஊர் சுற்றிக் காண்பிக்கிறார்கள். படத்தில் எல்லோரும் நாயகனுக்கு நன்மையே செய்கிறார்கள். இயற்கையான மனிதர்கள் என்பதால் நடிப்பு இயல்பாக இல்லை. நிறைய நாடகத்தன்மை அதனாலேயே வந்து விட்டது. குறிப்பாக ஒரு காட்சி, முதலாளியிடம் ஏலக்காய் மூட்டை கணக்குப்பிள்ளை கேட்கும் காட்சி. என்னதான் இருந்தாலும், இப்படியும் இன்னும் இது போல மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதை சொன்ன விதத்தில் படம் வெற்றி பெற்றுள்ளது. 

வர வர இளையராஜாவும் இசையை சுருக்கி விட்டார். பாடல்களும் படத்துடன் பார்க்க, கேட்க நன்றாக உள்ளது. சில சமயங்களில், மேற்கு தொடர்ச்சி மலை படங்களில் மொத்த பின்னணி இசை 15 நிமிடங்கள் கூட இருக்காது. ஆனாலும், அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. இயல்பான பின்னணி இசையை நிறைய கொடுத்து விட்டார். மற்ற காதல் படங்களில் எல்லாம் (திருவாசகம் உட்பட) ஸிம்போனி இசை போல மாதா கோயில் மணி ஓசையும், 'ஓஓஓஓஓ' என்று வெளிநாட்டுக்காரர்கள் பாடுவதும் வேறு நிறைய வரும். மிஷ்கினின் சைக்கோவை எதிர்பார்க்கிறேன். மீண்டும் ஒரு நூறாவது நாள், 24 மணி நேரம் போல இருக்க வேண்டும். 

Memoir of a Murderer (கொரியன்):


முன்பெல்லாம் நிறைய உலகப்பட விமர்சகர்கள் இருந்தார்கள். ஆங்கிலம் தவிர கொரியா, ஜப்பான், மொழிப்படங்கள் பற்றி நிறைய பதிவுகள் வரும். நாமும் அதில் கொஞ்சம் பொறுக்கி எடுத்துக் பார்ப்போம். இப்போதெல்லாம் யாரும் கொரியப் படங்கள் பற்றி எழுதுவதில்லை. நாமும் சரி எதையாவது பார்த்து சொல்லலாம் என்றால், நமக்கென்று சரியாக அமையவேயில்லை. கடைசியாக தேறியது இதுதான். 

சிறு வயதில் தந்தையின் கொடுமையால் பாதிக்கப்பட்டு, அவரை முதல்கோலை செய்யும் ஒருவன், அதன் பிறகு அந்நியன் போல சமூகத்தில் இருக்கும் தவறான மனிதர்களை தொடர்ச்சியாக கொலை செய்கிறான். ஒரு முறை ஒரு விபத்து நடக்க, அதன் பின் தன மகளுக்காக சாதாரண மனிதனாக வாழ்கிறான். 15 வருடங்கள் கழித்து மறதி நோய் பாதிக்கிறது. அடிக்கடி தான் யார், எங்கே இருக்கிறேன் என்பதையே மறந்து, எங்கேயாவது போய் விடுகிறான். 

அதே நேரம் மீண்டும் தொடர்ச்சியாக கொலைகள் மீண்டும் நடக்கின்றன. அவனுக்கே, தான்தான் அந்தக் கொலைகளை செய்கிறோமோ என்ற குழப்பம், மகளின் காதலனான ஒரு காவலனின் மீது சந்தேகம், கடைசியாக இதில் தன் மகளே கொல்லப்பட போகிறாள் என்பதையும் உணர்கிறான். யார் உண்மையான கொலைகாரன், மகளை காப்பாற்ற முடிந்ததா இல்லையா என்பதே படம். 

உண்மையில் அட்டகாசமான உருவாக்கம். ஒரு காட்சி கூட தேவையின்றி இல்லை. முதல் காட்சியில் குனிந்து தனது வெள்ளைக் காலணியை பார்ப்பது கூட ஒரு காரணம் உண்டு. 

தமிழிலும் கூட மறதியை வைத்து படங்கள் வருகிறதே.

கஜினிகாந்த் - யப்பா முடியலடா சாமி.

60 வயது மாநிறம் - கன்னடத்தில் (கோதி பண்ணா சாதாரண மைக்கட்டு) ஏற்கனவே பார்த்து விட்டேன். முடிந்தவரை அதன் அசலை பார்த்து விடுவது. பிற்பாடு நேரம் போகவில்லை என்றால் நகலை பார்ப்பது. அதனால் தமிழில் பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை.

இத்தனைக்கும் ராதாமோகன் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர், இளையராஜாவும் கூட இருக்கிறார். ஆனாலும் மொழி மாற்றுப் படங்களின் மீது அவ்வளவு ஈர்ப்பு இல்லை. கஜினிகாந்த் கூட தெலுங்கில் பார்த்தேன். தமிழில் நகைச்சுவை நன்றாக இருக்குமோ (வானம் படம் போல) என்று நினைத்தேன். ஆனால் இல்லை.

U-Turn கூட ஏற்கனவே கன்னடத்தில் பார்த்து விட்டேன். 

பியார் பிரேமா காதல், ஒன்றும் சொல்வதற்கில்லை. 90களில் பிறந்தவர்களுக்கே அந்தப் படம் பார்க்க தகுதி இல்லையாம். நானெல்லாம் 80களின் ஆரம்பம். அப்புறம் எப்படி. 

RX 100 (தெலுங்கு):


மறுபடியும் ஒரு மொக்கை காதல் கதையா (ஊர் சுற்றும் நாயகன், பண்ணையார் வீட்டு நாயகி, காதலுக்கு எதிர்ப்பு) என்று சலிப்படைந்து தருணத்தில், படத்தில் வந்த அந்த திருப்பம். நாடோடிகள் படத்திலும் அதுதான் நினைத்தேன், அதற்கு மாறாக நடந்தது. இருந்தாலும், தலைப்பிற்கும் படத்திற்கும் சம்பந்தமே இல்லை. ஒரே ஒரு இடத்தில, நீ இல்லாமல் நான் என் பைக்குடன் பேசிக்கொண்டு நாட்களை கடத்தினேன் என்கிறான் நாயகன். அவ்வளவுதான். அதை எரித்ததற்கு கூட ஒரு எதிர் வினையும் இல்லை. நம்ம செந்தூரப்பூவே ராம்கி கூட உள்ளார். 

இப்போதெல்லாம் பாலிவுட், ஹாலிவுட் அளவிற்கு போய் விட்டது. தெலுங்கு மற்றும் தமிழ்ப்படங்கள் பாலிவுட் அளவிற்கு வந்துள்ளன. எப்படி என்றால், ஹிந்திப்படங்களில் தேவையற்ற நிர்வாண, பாலுறவு காட்சிகள். நம்மூரில் முத்தம், முத்தம் முத்தம். அப்படி என்ன கதைக்கு தேவை என்று இதுவரை எனக்கு புரியவில்லை. அர்ஜுன் ரெட்டி, RX100 படங்களை என்ன தைரியத்தில் நம்மூரில் எடுக்கிறார்கள் என்று புரியவில்லை. சரி கலைக்கண்ணோடு பார்ப்போம்.

அர்ஜுன் ரெட்டி படத்தில், நாயகியின் தம்பியிடம் நாயகன், "நான் அர்ஜுன்" என்பான். அவன் உடனே " அர்ஜுன் what?" என்று கேட்பான். நம்மூரில் அப்படியா? "அப்புறம் தம்பி அப்பா அம்மா என்ன செய்யுறாங்க, எந்த கோயிலுக்கு போறீங்க" என்று போகும். பாலா எப்படி எடுத்திருக்கிறார் என்று பார்ப்போம். அவருக்கு பரோட்டாவிலேயே கொத்து பரோட்டாதான் பிடிக்கும். இதில் எப்படி கொத்தி இருக்கிறார் என்று பார்ப்போம். 

ஷூட்டர் - Shooter (ஆங்கிலம்):


உரிமை கீதம் என்றொரு படம். பிரபு, கார்த்திக் நடித்தது. RV உதயகுமாரின் முதல் படம். அதில் ஏழையான பிரபுவிடம் பணம் கொடுத்து ஒரு அரசியல்வாதியை பொதுக்கூட்டத்தில் கொல்வது போல நடிக்க சொல்வார்கள். கேட்டால், அப்போதுதான் அவர் மீது பரிதாபம் வரும், உனக்கும் எதுவும் ஆகாது என்பார்கள். பார்த்தால் நிஜமாகவே அவரை யாரோ சுட்டு விட, பழி பிரபு மீது விழும்.அந்த அரசியல்வாதியின் மகனாக கார்த்திக். இருவரும் எப்படி கெட்டவர்களை பழி வாங்குகிறார்கள் என்பதுதான் கதை. 


இந்தப் படத்தில் நண்பன் இறந்ததால், ராணுவத்தில் இருந்து வெளியேறும் நாயகன் (எவ்வளவு தூரத்திலும் சரியாக குறி பார்த்து சூடுபவன் - Sniper/Shooter). அவனிடம் அமெரிக்க ஜனாதிபதியை கொல்ல போவதாக தகவல் வந்துள்ளது எனவும், என்னென்ன வழிகள் இருக்கும் என கண்ணுட் பிடித்தும் சொல்ல சொல்வார்கள். அதே போல செய்தால், அதை வைத்து ஒரு கொலை செய்து பழியை நாயகன் மேலே போட்டு விடுவார்கள். இதை ஒரு அப்பிராணி FBI கண்டு பிடித்து விட, அவரையும் கொல்ல துரத்துகிறார்கள். எப்படி தப்பிக்கிறார்கள், பழி வாங்கினார்கள் என்பதுதான் படம். பரவாயில்லை. பார்க்கலாம். 

The Jackal (ஆங்கிலம்):


இதுவும் ஒரு வகை எலி பூனை கதைதான். எனக்கென்னவோ எலி பூனை என்பதை விட பாம்பு கீரி என்று சொல்லலாம் என நினைக்கிறேன். ரஷ்யாவில் ஒரு தீவிரவாதி தலைவனின் தம்பியை அமெரிக்கா, ரஷ்யா அதிகாரிகள் இணைந்து கொன்று விட, அதற்கு பதிலாக அமெரிக்காவின் ஒரு பெரிய மனிதரைக் கொல்ல சொல்லி அந்த தீவிரவாத தலைவன் ஒரு கூலிப்படை ஆளை அமர்த்துகிறான். இதை மோப்பம் பிடிக்கும் அரசு, அவனை பிடிக்க சிறையில் உள்ள ஒரு குற்றவாளியின் உதவியை நாடுகிறது. அவர்கள் இருவருக்கும் இடையே வேறு ஒரு பழைய கணக்கு உள்ளது. இறுதியில் யார் வெல்கிறார்கள் என்பதே படம்.

அவ்வளவுதாங்க.    

Sunday, April 29, 2018

தேடல்

பொழுது போகாத ஒரு நாளில், திடீரென நீயா நானா - இளையராஜா ரேடியோ ரசிகர்கள் என்ற காணொளியைப் பார்க்க நேர்ந்தது. 80களில் இளையராஜா பற்றிய கலந்துரையாடல். 50 வயதுக்கு மேற்பட்ட பலர் கலந்து கொண்டு அவர்களது வாழ்வில் இளையாராஜா எப்படி தாக்கத்தை உண்டாக்கினார் என்பது பற்றிய விவாதம். நன்றாகவே இருந்தது. மொத்தமாக பார்த்ததில் தோன்றிய சில விஷயங்கள். 

பல பேருக்கு அவர்கள் சொன்ன பாடலுக்கு ராஜா இசை இல்லை என்பதே தெரியவில்லை. 80களின் இசை என்று தலைப்பு வைத்திருக்கலாம். 

கலந்து கொண்டவர்கள் அனைவருமே "கேட்டுண்டே இருக்கச்சே" வகையினர். அது மட்டுமில்லாமல் அனைவரும் படித்து, உயர் பதவியில் உள்ள மேல்குடி மக்கள். அந்த காலத்திலேயே "நாங்களே ரெக்கார்ட் பண்ணி பாடிந்திருந்தோம்" என்றனர். 

உண்மையில் ராஜாவின் பாதிப்பை மிகச்சரியாக சொன்னது சிறப்பு விருந்தினராக வந்த தாமிரா. கீழக்கரையில் பீடி சுற்றும் பெண்கள் எப்படி கேட்ட மாத்திரத்தில் அந்த பாடலை பாடுவார்கள் என்று சொன்னார்.

எல்லாவற்றையும் விட முக்கியம். தேடல். முன்பெல்லாம் ஒரு பாடலை நினைத்தவுடன் கேட்டு விட முடியாது. அதில் ஒருவர் சொன்னது போல ஒரு பாடல் ஒலிபரப்பாகும், அது என்ன படம் என்று தெரியாமல் தேடுவோம் என்றார். அது போன்ற பாடல்கள் நம் மனதை விட்டு மறக்காது. 

எனக்கெல்லாம் 2001ல் சென்னை வரும்வரை அந்த பிரச்சினை இருந்தது. மேல்நிலைப்பள்ளியில் படிக்கும்போது(?) தனி வகுப்பு எல்லாம் முடித்து விட்டு கடைசி பேருந்தில் ஊருக்கு செல்ல கிட்டத்தட்ட 30 நிமிடம் பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டியிருக்கும். அப்போது வரிசையாக உள்ள கேசட் கடைகளில் பாடல்கள் ஓடிக் கொண்டிருக்கும். எங்கே நமக்கு பிடித்த பாடல் ஓடுகிறதோ அங்கே சென்று கேட்க வேண்டியது. 


ஏதாவது பாடல் கேட்க நன்றாக இருந்து, என்ன படம் என்று தெரியவில்லை எனில், அவர்களிடமே கேட்டுக்கொள்வேன். பின், கையில் கொஞ்சம் காசும் (T60 கேசட் என்றால் 45 ரூபாய், மொத்தம் ஒரு மணி நேர பாடல்கள் கிடைக்கும். T90 என்றால் 60 ரூபாய், 90 நிமிடம்), 10 பாடல்களும் சேர்ந்த பின், அவற்றை பதிவு செய்து கொள்வேன். அல்லது, மொத்தமாக ஒரு கலவையான படங்கள் உள்ள கேசட். அது 25 அல்லது 30 ரூபாய் மட்டுமே. அப்போது எல்லோரும் படிப்பு படிப்பு என்று தொந்தரவு செய்து தொலைக்காட்சியை பார்க்கவே விட மாட்டார்கள். இது மட்டும்தான் ஒரே பொழுதுபோக்கு. 


ஒரு கலவையான படங்கள் உள்ள கேசட்


அதே போல ஒரு படம் பார்க்கவும், அதாவது பழைய படங்கள், நிறைய காத்திருக்க வேண்டும். அப்போது சன் மூவீஸ் என்றொரு சேனல் இருந்தது. 24 மணி நேரமும் படம்தான். நமக்கு படித்த படம் அதிகாலை 3 மணிக்கு கூட போடுவார்கள். வீட்டில் உதைப்பார்களே என்ற காரணத்தில், அதை பார்ப்பதில்லை.

ரஹ்மான் கூட இந்த தேடல் குறைகிறது என்றபொழுது அவர் தேடலை உருவாக்கினார். அதைப்பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். இன்றைய தலைமுறையிடம் அந்த தேடல் என்பதே கிடையாது. எதுவாயினும் உடனே கூகுளாண்டவர்.

25 வயதிற்கு மேல் உள்ளவர்களிடம் அந்த காலத்தில் ஒரு படம் பார்க்க திரையரங்கம் செல்வது எப்படி என்று கேட்டுப் பாருங்கள் தெரியும். இப்போதெல்லாம், படம் வந்த அடுத்த நிமிடம் மொபைலில் வந்து விடுகிறது. அடுத்தடுத்து, பழையதை மறந்து விட்டு, புதியதை தேடி ஓடுகிறார்கள். 

உங்களுடைய முதல் மொபைல் எதுவென்று உங்களுக்கு நினைவிருக்கும். ஆனால், அதன் பின் எத்தனை மாற்றி இருப்பீர்கள் என்று தெரியாது. தேடல் தொலைவதற்கு இன்னொரு காரணம் பெற்றோர். அதைப் பற்றி சொல்ல ஒரு பதிவு போதாது. என்ன சொல்ல. வழக்கம் போல பெரு மூச்சு விட்டு கொண்டு, "அந்த காலத்துல எல்லாம்" என்று ஒரு பதிவிட்டு விட்டு போக வேண்டியதுதான்.

Friday, June 30, 2017

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்!

இளையராஜா 40!:

"அட என்னப்பா இது எப்ப பாரு இளையராஜா 1000, இளையராஜா 2000ன்னு சொல்லிக்கிட்டு" என்று எனக்கே தோன்றுகிறது. இருந்தாலும் என்ன செய்ய. உண்மையில் இப்போது ராஜா ஆடுகளம் பேட்டைக்காரன் போல ஆகி விட்டார். ஊரில் உள்ள 70 வயது பெரியவர் போல "இப்பல்லாம் அந்தக் காலம் மாதிரி இல்ல. அப்பல்லாம் எப்படி இருக்கும் தெரியுமா" என்றாகி விட்டார்.

13 வருடங்களில் 500 படம் (1990 - அஞ்சலி), அதிலும் 90 சதவிகிதம் வெற்றி ஏற்ற பாடல்கள். அப்படிப்பட்ட ராஜா, அடுத்த 500 படங்கள் இசையமைக்க 26 வருடங்கள் ஆகி விட்டது. அதில் வெற்றி என்று பார்த்தால் 60 சதவிகிதம் இருக்கலாம். அதிலும் கடைசி 10 வருடங்கள் உண்மையில் "அவ்ளோல்லாம் ஒண்ணுமில்ல" கதைதான்.

இதற்கு மிக முக்கியமான காரணம் ராஜாவிடம் இருந்து அந்த திறமையை வெளிக் கொண்டு வரும் இயக்குனர்கள் யாருமில்லை. எனக்கு தெரிந்து அந்த அளவு திறமையான இயக்குனர்கள் யார் என்றால், மணிரத்னம், பாலு மகேந்திரா (மறைந்தாலும்), பாசில், மகேந்திரன் போன்றவர்கள்தான். இவர்கள் அனைவருக்கும் இசையமைத்த பாடல்கள், பின்னணி இசை அனைத்துமே வெற்றி பெற்றவை.

இவர்களில் இப்போது படம் எடுத்தால் கண்டிப்பாக வெற்றி அடையும் என்று சொல்லும் அளவிற்கும் யாருமில்லை. மகேந்திரன் இளையராஜாவுடன் பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் இணைவதாக சொல்லப்பட்டது. அது என்ன ஆனது என்றே தெரியவில்லை. பாசில் படம் இயக்குவதையே விட்டு விட்டார். மணிரத்தினம் ராஜாவுடன் இணைய வாய்ப்பு குறைவு.

இவர்கள் தவிர, ஓரளவு நம்பிக்கை தரக்கூடிய இருவர், கமல் மற்றும் பாலா. பாரதிராஜா கூட சந்தேகம்தான். அதுவரை "அந்தப் படத்துல இந்தப் பாட்டு கேட்ருக்கியா" என்று புராணம்தான். இதுவே என் பதிவு. அதுவே உங்கள் தலையெழுத்து.

பொதுவாக ராஜா மேல் உள்ள பொதுவான குற்றச்சாட்டு 'மெட்டுக்கு பாட்டு' போட்டதால் கவிதை நயமே இல்லை. தந்தன தந்தன, லாலாலாலா, ஜிங்கிடி ஜிங்கிடி, என ஏதேதோ வார்த்தைகள் எல்லாம் பாடல்களாக வந்து விட்டன என்பதுதான். இதை வேறொரு வகையில் பார்த்தால், ஒரு உரையாடலைக் கூட பாடலாக மாற்றி நம்மை முணுமுணுக்க வைத்துள்ளார். 

இந்த 3 பாடல்களைக் கேளுங்களேன் (பார்த்தால் வரும் பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல). ஆனாலும் நடுவில் வழக்கம் போல மாறி விடும்.

இசை பாடும் தென்றல் என்றொரு படம். அதில் வரும் "எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது" என்ற பாடல்.


நினைவு சின்னம் படத்தில் வரும் "ஊருக்குள்ள உன்னயப் பத்தியும் என்னைய பத்தியும்" பாடல்.


புது நெல்லு புது நாத்து படத்தில் வரும் "ஏய் மரிக்கொழுந்து, என்னம்மா கிருஷ்ணவேணி" பாடல்.


விமர்சனம்:

கடந்த சில மாதங்களாக எந்தப் படமும் அந்தளவிற்கு மனதைக் கவரவில்லை. குறிப்பாக சொன்னால், இந்த வருட ஆரம்பத்திலிருந்தே அப்படித்தான். விமர்சனங்கள் நன்றாக இருந்தாலும் கூட எனக்கு ஏனோ பிடிக்கவில்லை. குறிப்பாக பவர் பாண்டி. 3 நாட்களில் ஒரு காதல் முறிவு, அதற்கும் தெளிவான காரணமே இல்லை. சாதியா, பணமா, படிப்பா என்று எதுவும் சொல்லப்படவில்லை.

3 படம் மொக்கையாக இருந்தாலும் அதன் முதல் பாதி அதிலும் குறிப்பாக பள்ளிப்பருவ காட்சிகள் அட்டகாசமாக இருக்கும். ஏனென்றால் தனியாக டியூஷன் போய்ப் படித்த எல்லோருக்கும் அதன் நினைவுகளை தட்டி எழுப்பியிருக்கும். இதில் அது போல ஒன்றுமேயில்லை.

8 தோட்டாக்கள் படமும் அதே போலத்தான். லென்ஸ் படம் பரவாயில்லை. மரகத நாணயம் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் நன்றாக இருக்கும் என நம்புகிறேன்.

திரைத்துறைக்கு யோசனை:

கல்யாணத்திற்கு முன்பு, எப்படியும் வாரம் ஒரு முறையாவது திரையரங்கம் சென்று விடுவோம். நான் தனியாக இருக்கும்போது கூட திரையரங்கில்தான் பார்ப்பேன். ஆனால், இப்போதெல்லாம் செல்ல முடியாததால் தரவிறக்கம்தான். ஆனால், முதல் நாளே ஏதோ ஒரு தளத்தில் சென்று பார்ப்பதெல்லாம் இல்லை. பொறுமையாக காத்திருந்து நல்ல பதிப்பு வந்த பிறகுதான்.

ஏன் வெளிநாடுகள் போல இங்கு இன்னும் படங்களை கொஞ்ச நாள் கழித்து இணைய தளத்தில் வெளியிட மறுக்கிறார்கள் என தெரியவில்லை. அமேசான் தளத்தில் ரொம்ப நாள் கழித்துதான் வருகிறது. இதை ஏதேனும் ஒரு வகையில் வரைமுறைப்படுத்தினால், நானும் அதை ஆதரிப்பேன்.

பணம் கட்டி இணையத்தில் பார்க்க, தயாரிப்பாளர் சங்கமோ, நடிகர் சங்கமோ ("இப்ப ரெண்டுமே ஒண்ணுதானே" என்ற குரல் கேட்கிறது) ஒரு இணையதளம் ஆரம்பித்து, படம் வெளியாகி 15 நாட்கள் கழித்து வெளியிடலாம். தரவிறக்கம் செய்யும் 100 பேரில், 25 பேராவது பணம் கட்டி பார்ப்பார்கள். எதுவும் இல்லாததற்கு இது லாபம்தான்.

இப்ப 120 ரூவா டிக்கட்டு 150 ரூவா ஆகுதாம். அதிலும் பெரிய வளாகங்கள் சென்றால், 3 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் கட்டணம். "அண்ணே, அவ 5 நிமிஷத்துல தூங்கிருவாண்ணே" என்றாலும் கேட்க மாட்டார்கள். கொஞ்சம் யோசித்து ஏதாவது செய்யுங்கள்.

Thursday, April 27, 2017

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

எப்படியாவது மாதம் ஒரு பதிவு போட்டு விட வேண்டும் என்ற குறிக்கோளை வைத்திருப்பதால், எதையாவது எழுத வேண்டி உள்ளது. "அப்படி என்னடா பெரிய சிவகாமியின் சபதம், இல்ல சரசுவதி சபதமா எடுத்திருக்க, எங்கள போட்டு வதைக்க" என்று எண்ணினாலும் பரவாயில்லை.

எஸ்.பி.பி - இளையாராஜா உரிமை பிரச்சினை: 


என்னப்பா இதப்பத்தி நீ எதுவுமே சொல்லவேயில்லையே என்று யாரும் கேட்கவில்லை. என்ன எழுவதென்று தெரியாததால் இதைப் பற்றி எழுதுகிறேன். முதலில் மேடையில் பாடுவது பிடிக்காது. அதாவது அடிக்கடி ஒரு பாடலை எப்படிக் கேட்டு பழகினோமோ, அதையே கேட்பதுதான் என் பழக்கம். எனவே "நீங்கள் மேடையில் பாடுங்க, பாடாம போங்க. எனக்கு பிரச்சினையே இல்ல" என்பதுதான் என் கருத்து.

ஆனால், பாலு எனக்கு இந்த காப்பிரைட் பற்றியெல்லாம் தெரியாது என்று சொன்னதுதான் எனக்கே (?) கோபம் வந்தது.சில ஆண்டுகளுக்கு முன், இவர் தலைமையில் பாடகர்கள் அனைவரும் "எங்களுக்கும் ராயல்டியில் பங்குண்டு" என்று பேட்டி எல்லாம் கொடுத்தார். அது மட்டும்தான் உறுத்தல். மற்றபடி இளையராஜா கொஞ்சம் பேசியிருக்கலாம்.

கவண்:

விமர்சனங்கள் இருக்கவே, சரி என திரையரங்கம் சென்று பார்த்தேன். கொஞ்சம் அங்கங்கே இழுவையாக இருந்தாலும், ஒரு முறை பார்க்கலாம். படம் முடிந்த பின்புதான் "எப்படிடா இப்படி எல்லாம் பண்ண முடியும்" என்று தோன்றியது.

பாகுபலி 2:

பயப்படாதீங்க. சத்தியமா இன்னும் பாக்கல. கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்னாருன்னு எனக்கு தோன்றத சொல்றேன். எனக்கு தெரிஞ்சு ஏதோ ஒரு உள்குத்து செஞ்சு ராணா ராஜா ஆகுறாரு. அதுக்கு அப்புறமா, பிரபாஸ் வெளிய போய் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்குறாரு.

ஒரு கட்டத்துல ராணாவோட கொடும தாங்காம மக்கள் பிரபாஸ்கிட்ட சொல்றாங்க. போர் நடக்குது. பிரபாஸ் ஜெயிக்கிற மாதிரி இருக்காரு. ராணாவாக கொல்லப் பாக்குறாரு. ராணாதான் மன்னர், அவர காப்பாத்தணும்னுதான் கட்டப்பா அவரக் கொல்றாரு. அதே நேரம் அனுஷ்காவுக்கு கொழந்த பொறக்குது. மீதிக்கதை உங்களுக்கே தெரியும். 

அடிக்கடிக்கடி (தப்பால்லாம் அடிக்கல) படம் பாக்குற யாரா இருந்தாலும், இதேதான் தோணும். பாப்போம்.

இப்போதெல்லாம் பெரியதாக எழுதுவது என்பது குறைந்து விட்டது. பல பதிவர்கள் எல்லாம் எழுதுவதை விட்டு விட்டு, காணொளி மூலம் வருகிறார்கள். இல்லையெனில், கீச்சுக்களிலும், முகப்புத்தங்களிலும்தான் எழுதுகிறார்கள். ஒரு கட்டத்தில் புத்தகம் படிப்பது என்பது எப்படி குறைந்ததோ, அதே போல பதிவுகளும், பதிவர்களும், குறிப்பாக அதைப் படிப்பவர்களும் குறைந்து வருகிறார்கள்.

இது முழுக்க முழுக்க என் கருத்துதான். ஏனென்றால், எனக்கே கொஞ்சம் பதிவிடுவதற்கான ஆர்வம், நேரம் எல்லாமே குறைந்து வருகிறது. கிட்டத்தட்ட 8 வருடங்கள் நாட்குறிப்பு எழுதி வந்தேன். இதே போன்ற சூழ்நிலையில்தான் அதை நிறுத்தினேன். அது போலவே ஆகி விடுமோ என்ற பயம் உள்ளது. எனவேதான் எப்பாடு பட்டாவது (அல்லது படுத்தியாவது) மாதம் ஒரு பதிவிடுகிறேன்.

Friday, March 31, 2017

அக்கரைச் சீமை திரையினிலே!

ஒன்றுமில்லை. முன்பு எழுதிய பதிவு போலவே பிற மொழி திரைப்படங்கள் பற்றிய பதிவுதான். பேருதான் சும்மா. சரி, பார்ப்போம்.

பிங்க் (Pink) - ஹிந்தி:


"ஒரு பெண் முடியாது என்று சொன்னால், அதன் அர்த்தம் முடியாது என்பதுதான்", இதுவே படத்தின் கரு. ஒரு பெண், தனது நண்பிகளுடன் இரவு வெளியே இருந்தபோது மானபங்கப்படுத்தப்பட்டாள் என்று கேள்விப்பட்டவுடன், "அந்த நேரத்துல பொண்ணுங்க ஏன் வெளிய போனாங்க" என்று என்னும் சராசரி ஆண்தான் நான். என்னதான் வெளியே பெண்ணீயம் பேசினாலும் "நான் ஆம்பளடீ" என்று வீட்டில் கத்தியிருக்கிறேன்.

சரி அத விடுங்க. வழக்கம் போல முழுக்க முழுக்க நீதிமன்றத்தில் நடக்கும் கதை. என்ன நடந்தது, என்பது படம் பார்க்கும் நமக்கும் அவர்கள் பேசுவது மூலம் நாமே அனுமானித்துக் கொள்ள வேண்டியுள்ளது. கொஞ்சம் ஜாலி LLB நினைவுக்கு வந்தாலும், கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். அமிதாப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. ஏன் இது போன்ற படங்கள் தமிழில் வருவதில்லை என்றால், கண்டிப்பாக ரஜினி நடித்தால் நன்றாக இருக்கும். நடிப்பாரா, நடித்தாலும் பிளாஷ் பேக்கில் ஒரு சண்டை வேறு வைக்க வேண்டும். எனக்காக இல்லப்பா, ரசிகர்களுக்காக.

தங்கல் யுத்தம் - படத்தின் முன்னோட்டத்திலேயே முழுக்கதையும் வந்து விட்டது. ஆனாலும் 3 மணி நேரம் நம் கவனம் சிதறாமல் பார்க்க வைத்த படம். தனியாக அலசுகிறேன்.

யு - டர்ன் (U-Turn) கன்னடம்:


பொதுவாக இந்த சமூகத்தோடு நான் பொதுவாக இணைந்திருப்பது சாலைப் பயணங்களில்தான். அதைப் பற்றிய ஒரு பதிவின் மூலம்தான் நான் அகில உலக புகழ் வேறு அடைந்தேன். "இதுல என்ன பெருசா நடந்திட போகுது" என்று செய்யும் சில காரியங்கள் ஏற்படுத்தும் விளைவுகள்தான் இந்தப் படம்.

பெங்களூருவில்,ஒரு மேம்பாலத்தில் கொஞ்ச தூரம் போய்த் திரும்ப சங்கடப்பட்டு, நடுவில் வைத்திருக்கும் கல்லை எடுத்து நகர்த்தி விட்டு செல்பவர்கள் திடீரென மரணமடைகிறார்கள். சாலை விதிகளை மீறுவோர் பற்றி ஒரு கட்டுரை எழுத ஒரு பெண் நிருபர் அந்த மேம்பாலத்தை தேர்ந்தெடுக்கிறார். விதிவசத்தால் அவர் பலிகடா ஆகிறார். ஏன், எதனால் என்பதுதான் இந்தப் படம். பொதுவாக ஒரு விபத்து நடந்தால், அடுத்து என்ன நடக்க வேண்டும் என்று நான் நினைத்தேனோ அது இந்தப் படத்தில் நடக்கிறது. கண்டிப்பாக பார்க்கலாம்.

கம்மட்டிப்பாடம் (Kammattipadam) மலையாளம்:


மலையாளத்தின் 'மெட்றாஸ்' திரைப்படம். இதிலும் நாயகனின் நண்பன் கொல்லப்படுகிறான். இறுதியில் வழக்கம் போல தெரிவது, கொன்றவன் எதிரி அல்ல, துரோகி என்பது. ஆனால், இதில் இளம் பருவம் முதல், வாலிபம் மற்றும் வயதானவரை நம்மையும் கூடவே அழைத்து செல்வதுதான் படத்தின் பலம். நண்பியாக இருந்தாலும், சாதி காரணமாக ஒடுக்கப்படுவது, ஆதிக்க சக்தியின் ஆக்கிரமிப்புகள் என பல விஷயங்கள் உள்ளன. சற்று பொறுமையாக பார்க்க வேண்டிய படம்.

ஒழிவுதிவசத்தே களி: படம் என் பொறுமையை மிகவும் சோதித்தது. ஆனால், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது என்பதை இந்தப் படத்தின் மூலம்தான் தெரிந்து கொண்டேன். இதே சாதி வெறி பற்றிய படம்தான், அடுத்த மராத்திய படம்.

சாய்ராட் (Sairat) மராத்தி:


இளையராஜா இரண்டு மராத்திப் படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்று செய்தி வந்தபோது கூட படம் பார்க்க தோன்றவில்லை. ஆனால், இந்தப் படத்தின் இசையமைப்பாளர்கள் இளையராஜாதான் எங்கள் மானசீக குரு என்று பேட்டி கொடுத்த போதுதான், "பார்றா" என்று தோன்றியது. ரொம்ப நாள் கழித்து நல்ல பிரிண்ட் வந்தவுடன்தான் பார்த்தேன்.

"ஆதலால் காதல் செய்வீர்" படம் பார்த்திருந்தால், அதில் கடைசியில் வரும் பாடல், இதிலும் அருமையாக பொருந்தும். படம் சொல்லும் செய்தி, இந்த உலகம் அழிந்தால்தான் அது போன்ற விஷயங்கள் நடக்காமல் இருக்கும். படமும் உங்களுக்கு "காதல்" படத்தை நினைவூட்டும்.

ஆணவக்கொலை, கவுரவக்கொலை என்று என்னென்ன சொன்னாலும் அதன் இன்னொரு பெயர் பொறாமைதான். எப்போதும் நம் உதவி எதிர்பார்க்கும் குழந்தை, நம் உதவி இன்றி ஒரு வேலையை செய்தவுடன் எப்படி உற்சாகப்படுத்துவோம், அதை விட்டு விட்டு அரிவாளா தூக்குவோம். அதையே வளர்ந்த பின் செய்தால் மட்டும் ஏன் வெறுக்கிறோம்.

"அப்பன், ஆத்தா பாத்து கல்யாணம் பண்ணி வைக்க மாட்டாங்களா? எதுக்கு இப்படி அலையனும்" என்று எண்ணினால், மன்னிக்கவும்.

பெல்லி சூப்புலு (Pelli Chooppulu) - தெலுங்கு:


இதுவரை பார்த்த படங்கள் எல்லாமே, சற்று மனதை உலுக்கும் வகை. "கொஞ்சம் ஜாலியா ஏதாவது சொல்லுங்களே" என்றால் இந்தப் படம்தான். "ஆஹா கல்யாணம்" என்று ஒரு படம் வந்ததே, அதே போலத்தான் இதுவும். ஆனாலும் ஓர் 'Feel Good' படம்.

தவறான வீட்டிற்கு பெண் பார்க்க செல்லும் நாயகன், நாயகியுடன் தனியறையில் மாட்டிக்கொள்கிறான். கூடவே ஒரு சிறுவனும் இருப்பதால் 'A' படம் ஆகவில்லை. பின் உண்மை தெரிந்து சென்று விடுகின்றனர். ஆயினும் அவரவர் லட்சியம் என்ன என்பதை அடுத்தவருக்கு உணர்த்தி விடுகின்றனர். அதன் பின் நடப்பதே படம். கண்டிப்பாக பார்க்கலாம்.

"என்னப்பா இவ்ளோ சொன்ன. ஒரு தமிழ் படம் கூட சொல்லலியே" என்பவர்களுக்காக,

பைரவா - பை ரவா அண்ட் டூ உப்புமா.
ரம் - கொடூரம்
யாக்கை - மொக்கை
பகடி ஆட்டம், என்னோடு விளையாடு - ரெண்டுமே போங்காட்டம்
போகன் - ஸ்ஸ், முடியல
சி3 - காது வலி
அதே கண்கள் - இலுப்பைப்பூ.

அவ்வளவுதான்.

Thursday, June 9, 2016

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

சூடான செய்திகள் ஒன்றுமில்லை. ஆறிய பழங்கஞ்சிதான்.

தேர்தல் முடிவுகள்:

ஓரளவு எதிர்பார்த்ததுதான். எண்ணெய் சட்டியா, அடுப்பா என்பதுதான் சந்தேகமே. ஆனாலும் நம் மக்கள் மிக மோசம். என்ன செய்ய. தொங்கலில் விடுவார்கள் என்று பார்த்தேன். எனக்கென்னவோ புலியின் நகத்தைப் பிடுங்கி பல்லில்லா சிங்கத்திற்கு அதைக் கட்டியது போல உள்ளது. (புரிஞ்சுதா?).

அதிமுக 200ல் வென்று திமுக காணாமல் போயிருந்தால் கூட பரவாயில்லை. ஆனால், திமுக முன்னேறி வந்துள்ளது, அதிமுக சற்றே பின்னடவை சந்தித்துள்ளது. "நாங்கதான் ஆளுங்கட்சி" என்பவர்களைப் பார்த்தால் நினைவுக்கு வருவது "ஏழாவது பாசுன்னே, பத்தாப்பு பெயில்னே".

ஆனாலும், நான் சொன்னது போல பல இடங்களில் NOTA வெற்றி வாய்ப்பை மாற்றியுள்ளது. இன்னும் குறிப்பாக சொன்னால், 22 தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் நோட்டா வாக்குகளையும் விட குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். அதில் அதிமுக 14ல் வெற்றி, திமுக 8ல் வெற்றி. அதுவரை சந்தோஷம். இரு கட்சிகளும் அதை உணர்ந்து கொண்டால் நல்லது.

24 விமர்சனம்:

அப்படி ஒன்றும் ஆஹா ஓஹோ என்றெல்லாம் இல்லை. இதுவரை வந்த காலப் பயண படங்களை விட இதில் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும், கேவலமாக இருந்தது. இதைப் பற்றி பதிவர் முத்துசிவா தெளிவாக விளக்கியுள்ளார். இருந்தாலும் மாசு, அஞ்சான் படங்களுக்கு இது பரவாயில்லை. "என்னடா இப்படி சொல்ற" என்பவர்களுக்கு, "நான் ஒரு பிரபல பதிவர்ங்க, எனக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம்"

இளையராஜா:

தேசிய விருது சர்ச்சை பற்றி எனது கருத்து. பழசி ராஜா படத்திற்கு விருது கொடுத்த போதே ராஜா அதை வாங்கவில்லை. அப்போதும் கூட தனித்தனியாக கொடுப்பதை எதிர்த்தார். இப்போது ஏன் அதை பெரிய விஷயமாக்கினார்கள் என தெரியவில்லை. எனது சில கருத்துகள். கங்கை அமரன் முந்திக்கொண்டு ராஜாவை வம்புக்கிழுத்தது பொறாமையா என தெரியவில்லை. ஆனாலும், தீயை அணைக்க எதிர்ப்பக்கம் தீப்பற்ற வைப்பது போல எனக்குத் தோன்றியது.

பாடல்கள் முதலில் அது வரும் காட்சிகள் மட்டும் சொல்லப்பட்டு மெட்டு போடப்படுகிறது. ஆனால், பின்னணி இசை, படம் முடிந்த பிறகு போடுவது. எனவே, அதில் இன்னும் அதிக ஈடுபாட்டுடன் இசையமைக்க முடியும். எனவே, பின்னணி இசைக்கு தனியாக விருது கொடுப்பது தப்பில்லை.

இசைக்கு கட்டாயமாக இரண்டு விருதுகள் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. பாடல்கள் இல்லாத அல்லது நிஜமாகவே பின்னணி இசை நன்றாக இருந்தால், கண்டிப்பாக தனியாக கொடுக்கலாம்.

கமல்:

சபாஷ் நாயுடு படத்திற்கு எதிர்ப்பு. மக்களுக்கு திரையில் நல்லவர்களாக நடிப்பவர்களைப் பிடிக்கிறது. நிஜ வாழ்க்கையில் எப்படி இருந்தாலும் கவலை இல்லை போல. படத்தில் சிறு குழந்தைகளை பிச்சை எடுக்க வைப்பவர்களை ஓட ஓட அடிக்கும் நாயகன், சாலையில் அவர்களுக்கு ஐந்து பைசா கொடுத்தாரா என்று தெரியாது.

நிஜத்தில், மகள்களின் சான்றிதழ்களில் சாதி, மதம் என்ற இடங்களில் இல்லை என்ற சொன்னவர், திரையில் வரும் கற்பனைப் பாத்திரத்திற்கு சாதிப் பெயரை வைத்து விட்டார் என்று குதிக்கிறார்கள். தேவர் மகன் படத்தால் பெரிய பிரச்சினை வந்தது என நிறைய பேர் சொல்வார்கள். விவரம் தெரியாத நிறைய பேர் எண்ணுவது "அந்த படத்துல அப்படி ஒன்னும் இல்லையே" என்றுதான்.

ஆனால், அந்தப் படத்தில் வரும் பாடல், அதைப் பாடிய நபரின் சாதி, அதை வைத்து உயர் சாதியினர் தாழ்த்தப்பட்டோரை செய்த கிண்டல் கேலிகளும் ஒரு காரணம். உண்மையில் போராட வேண்டியது முத்தையா, பிரபாகரன் போன்ற இயக்குனர்களிடம்தான். கமலிடம் அல்ல.

ரொம்ப நாள் முன்பு "யாருடா மகேஷ்" என்ற படத்தின் டிரைலர் (மட்டும்) இணையத்தில் சக்கை போடு போட்டது. அதில் ஒரு வசனம் வரும் "ரத்னவேலுவை சுருக்கமா ரேண்டின்னு கூப்புட்டா, குழந்தைவேலுவை என்ன கு​​_டின்னு கூப்பிடுவீங்களா?" என்று.


உடனே, திரை உலகில் சில பேர் இது ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவை நக்கல் செய்வது போல உள்ளது எனக் குதிக்க, படத்தின் இயக்குனர் சொன்னார், "இந்த வசனத்திற்கு குழந்தவேலுதான் கோபப்படனும், ஏன் ரத்னவேலு குதிக்கிறார்?" அதே போல உண்மையில் நாயுடுக்கள் தான் போராட்டத்தில் இறங்க வேண்டும் கமல் தங்களை மட்டம் தட்டும் விதமாக படம் எடுக்கிறார் என.

அவ்வளவுதாங்க. மறுபடியும் ஏதாவதுன்னா ஒரு பதிவு போடுறேன்.