Tuesday, December 26, 2017

குக்கரன்! 'தில்'கரண்!!

ரொம்ப நாளாக திரைப்படங்கள் பற்றி பதிவே போடவில்லையே. வருட கடைசியில் ஒன்று போடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், இன்றைய தேர்தல் முடிவுகள் என் எண்ணத்தை மாற்றி விட்டன. இது போன்ற பரபர, விறுவிறு காட்சிகள் எல்லாம், இப்போது படங்களில் கூட வருவதில்லை. யார் நாயகன், யார் கெட்டவன், யார் குணச்சித்திரம் என்று நாம் எண்ணுகிறோமோ, அப்படியே எதிர்மறையாக மாறுகின்றன. இன்றைய முடிவுக்கு குறித்து எனது சில கருத்துக்கள். 

பணநாயகம் வென்றது. இது உண்மைதான் என்றாலும், இது மட்டுமே உண்மை கிடையாது. எனது நிறுவனத்தில் உள்ள ஒருவர், அதே தொகுதியில் இருப்பவர். அவர் சொன்னது, திமுக பணம் கொடுக்கவில்லை, அதிமுக 6000 கொடுத்தார்கள், ஓர் ஓட்டிற்கு. தினகரன் அணியோ, முதலில் ஒரு குக்கர், பின் அந்த 20 ருபாய் நோட்டு. 

வென்றால், ஓர் ஓட்டிற்கு 10000 ருபாய், உறுதியாக. இதுதான் அவர்களது வாக்கு. சரி பணத்திற்காக வாக்களித்தீர்களா என்ற கேள்விக்கு அவரது பதில், "அதில் என்ன தவறு?, அது மட்டுமின்றி, நாங்கள் ஏன் திமுக, அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும், ஏதாவது ஒரு காரணம் நீங்களே சொல்லுங்கள்" என்றார். உண்மைதான். இவ்வளவு நாள் அவர்கள் இருவரும்தான் மாறி மாறி இருந்துள்ளனர், என்ன ஆயிற்று. ஒன்றுமே ஆகவில்லை. மீண்டும் ஏன் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். 

எவனாக இருந்தாலும், எப்படி இருந்தாலும் திருடத்தான் போகிறான். அதில் எங்களுக்கு யார் நிறைய பங்கு கொடுக்கிறார்களோ அவர்களுக்கு வாக்களிக்கிறேன் என்பதுதான் அவரது கூற்று. ஆனால், அது மட்டுமே 50 சதவிகித வாக்கு தினகரனுக்கு கிடைக்க காரணமா என்றால், கண்டிப்பாக இல்லை.

முதலில் இருந்தே பார்ப்போமே, ஜெயலலிதா இறந்தவுடன், சசிகலா எதுவுமே வேண்டாம் என்பது போல நடிக்க, மற்ற அடிமைகள் எங்களை காக்க வைக்க தெய்வமே நீங்கள்தான் என்பது போல கதறி அழ, உங்களுக்காக எனது வாழ்க்கையை நான் அர்ப்பணிக்கிறேன் என சசி அழ, பொதுக்குழுவில் சசி தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த நிமிடம் பிரம்மாண்டமான போஸ்டர் அடுத்த நொடியே மாறியதை யார் பார்த்திருந்தாலும் "என்னா நடிப்புடா சாமி" என்று கண்டிப்பாக தோன்றியிருக்கும்.

எனக்கு 'காஸநோவா' கதைதான் நினைவுக்கு வந்தது.

ஆனால், அடுத்தடுத்த திருப்பங்கள், சசி உள்ளே போக, அதற்குள் தினகரனை உள்ளே நுழைக்க, பன்னீர் தியானம் செய்ய, ஒரு நாளில் பன்னீர் காமெடியனாக இருந்து நாயகன் ஆனார். அப்போது அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலில், தினகரனும் உடனே உள்ளே நுழைய ஆசைப்பட, "இதுக்கு மேல என்ன ஆதாரம் வேணும் யுவர் ஹானர், இவங்க கண்டிப்பா ஜெயலலிதாவை கொன்னுருப்பாங்க" என எனக்கு நானே நீதிபதிகள் தீர்ப்பு எழுதி விட்டனர். அதற்குள் தேர்தலையே நிறுத்தி விட்டனர். அதற்குள் தர்மயுத்தம் நாடகம் முடிந்து எடப்பாடியும், பன்னீரும் சேர்ந்து விட தினகரன் தனித்து விடப்பட்டார். நிற்க.

நிறைய படங்களில் நாயகன் திருடனாக இருப்பார். அடுத்தவர்களிடம் திருடுவார், கொள்ளை அடிப்பார். அவர் ஏதாவது பிரச்சினையில் சிக்குவார். உடனே நமக்கு என்ன தோன்றும். "ஐயோ பாவமே, அவன் எப்படியாவது தப்பிக்கணுமே" என்றுதான் தோன்றும். அதே போலத்தான், "எடப்பாடி, பன்னீரை எல்லாம் பெரிய ஆளாக்குனது ஜெயலலிதா இல்ல, சசிகலா போல, அவங்களுக்கு போய் துரோகம் பண்ணிட்டாங்களே" என்று முதலில் பரிதாபம் முதலில் வந்தது. "ஒரு வேளை, இவங்கதான் ஜெயலிதாவை கொன்னுருப்பங்களோ" என்ற சந்தேகத்தையும் முதல் நாள் வெளியிட்ட காணொளியில் நிவர்த்தி செய்து விட்டார்கள். முடிந்தது. 

அதை விட முக்கியமான இன்னொரு விஷயம். பேச்சுத்திறன். ஜெயலலிதா ஏன் எந்த மங்குனி அமைச்சர்களையும் பேச விடாமல் வைத்திருந்தார் என்று எல்லா அமைச்சர்களும் நிரூபித்து வருகின்றனர். ஆனால், தினகரனோ எந்த கேள்விகளையும் தவிர்த்ததில்லை, மங்குணித்தனமாக பதிலளிக்கவில்லை. அதிலும் பாண்டேவை திணறடித்ததெல்லாம் தனிக்கதை. அது ஒரு தனித்துவமான திறன். ஜெயலலிதாவுக்கு கூட அந்த திறன் இல்லை. 

இந்த வருட அரசியல் நிகழ்வுகளினால் அறியப்படும் நீதி. 

1. எதிலும் அவசரப்படக்கூடாது. (சசிகலா பொது செயலாளர் ஆனது). 
2. பரிதாபத்தை உருவாக்கக் கூடாது, உருவாக வேண்டும். (பன்னீர் செல்வம் தர்ம யுத்தம் மூலம் உருவாக்கினார். ஆனால், தினகரனுக்கு பன்னீரும், எடப்பாடியும் செய்த வேலையால் பரிதாபம் உருவானது.) 
3. மக்கள் முட்டாள் அல்ல. மக்களுக்கு தெரிந்தது இரட்டை இலையும், உதயசூரியனும்தான் என்ற எண்ணம். (இரட்டை இலை இரண்டாக பிரிந்ததால், நமக்கு வாக்கு வரும், 2G விடுதலை என அளவுக்கதிமான தலைக்கனத்தில் திமுக அழிந்தது.) 
4. வாய்மை. இது நேர்மையை குறிப்பிடவில்லை. மற்றவர்களின் கேள்விகளை எதிர்கொள்வது. 
5. அடுத்தது என்ன செய்வோம். ஒவ்வொருவரும், அடுத்தவரை குற்றம் சொல்லியே வாக்கு கேட்டனர். தினகரன் உட்பட. திமுக, அதிமுக இதுவரை உருப்படியாக அந்த தொகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை. தினகரனோ, குறைந்தது அடுத்து ஆட்சியை (?) பிடிக்கவாவது ஏதாவது நல்லது செய்வார் என்ற நப்பாசையும் மக்களுக்கு இருந்திருக்கலாம். 

எது எப்படியோ, இது அனைவருக்கும் ஒரு பாடம். பார்ப்போம். இதே போல தமிழ் ஹிந்துவில் இரண்டு கட்டுரைகள் வந்துள்ளன. உங்களுக்காக. 

ஆர்.கே.நகரில் தினகரன் சாதித்தது எப்படி?

ஜெயலலிதா பாதி... கருணாநிதி பாதி..! - இது தினகரன் ஸ்டைல்?

Monday, November 13, 2017

பதிவுலகில் பத்து வருடங்கள்!!

இன்றோடு பதிவு எழுத ஆரம்பித்து 10 வருடங்கள் ஆகி விட்டது. 120 மாதங்கள், 120 பதிவுகள். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. விளையாட்டாக ஆரம்பித்தது, இன்னும் விளையாட்டாகவே போய்க் கொண்டிருக்கிறது. கொஞ்சம் பின்னே சென்று வருவோம்.

2005லேயே தமிழ் பதிவுகள் பிரபலமாக ஆரம்பித்து விட்டாலும், இணையம் சென்றால் படம் தரவிறக்கம், இளையராஜாவின் யாஹூ குழுமம், செய்திகள் என்றே என் பிழைப்பு ஓடியது. அதிலும், ரஹ்மானின் யாஹூ குழுமம் மற்றும் மற்ற குழுமம்(Forum)களில் ராஜா மற்றும் ரஹ்மானின் சண்டைகள் பற்றி படிப்பேன்.

இந்த நிலையில்தான் குமுதம், ஆனந்த விகடனில் தமிழ் பதிவுகள் பற்றி எழுத ஆரம்பித்தனர். முதல் வாரமே இட்லிவடை பற்றிதான். அதன் பிறகு கேபிள்சங்கர் என நிறைய பேர் பற்றி வாராவாரம் வர ஆரம்பிக்கவும், அது என்னடா பதிவர் என்று தேட ஆரம்பித்தால், ஒரு முறை மிக தெளிவாக பதிவு என்றால் என்ன, அப்படி என செய்முறை விளக்கம் எல்லாம் போட்டிருந்தார்கள். நமக்குத்தான் கூகுளாண்டவர் அருள் ஏற்கனவே இருந்ததால், உடனே பதிவு ஆரம்பித்தாகி விட்டது. ஆனால், பெயர் வைக்கவே ஒரு மாதம் ஆகி விட்டது.

முதலில் என்ன எழுதுவது என்றே தெரியவில்லை. சும்மா, இளையராஜா, கமல் என ஜல்லி அடித்துவிட்டு, மீண்டும் ஆறு மாதம் என்ன எழுதுவது என்றே தெரியவில்லை. அதன் பின் ஆரம்பித்தது, அவ்வப்போது 3 மாதம், 4 மாதம் என இடைவெளி விழுந்தாலும், பின் எழுந்து சென்று கொண்டே உள்ளேன். நமக்கு கணக்கு பிடிக்கும் என்பதால், ஒரு சில புள்ளி விவரங்கள் அங்கங்கே வரும்.

ஏற்கனவே வேலை பற்றிய பதிவில் சொன்னது போல எனது இரண்டாவது நிறுவனத்தில் (2008-2011) செய்த சித்ரவதையால் அந்த வருடங்களில் பதிவுகள் குறைந்து விட்டன. அதன் பின் அவ்வப்போது வெளிநாட்டுப் பயணங்கள் போகும்போதெல்லாம், நிறைய பதிவுகள் போட ஆரம்பித்துவிட்டேன். அதனால்தான் முதல் 5 வருடங்களில் 50 பதிவுகள் என்பது அடுத்த 5 வருடங்களில் 70ஆக அதிகரித்துள்ளது. எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், எப்படி சிலர் ஒரு மாதத்திற்கே 50 பதிவுகள் எழுதுகின்றனர் என்பதுதான்.

நான் பதிவு எழுத ஆரம்பித்த உடன், என் நண்பர்கள் சிலரும் பதிவு எழுத ஆரம்பித்தனர். ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் நிறுத்தி விட்டனர். அப்போது பிரபலமாக இருந்த பாதிக்கு மேலான பதிவர்கள், இப்போது பதிவே எழுதுவதில்லை, அப்படியே எழுதினாலும் மிகக் குறைவு. இனி ஒரு சில மலரும் நினைவுகள்.

லிங்குசாமி: என்னுடைய பதிவுலக வரலாற்றில், இரண்டு பதிவுகள் மிக அதிகமாக படிக்கப்பட்டன. அஞ்சான், உத்தம வில்லன். இரண்டுக்குமே காரணம் லிங்குசாமி. அப்போது பாதிக்கப்பட்டவரை இன்று வரை மீட்க இயலவில்லை. சண்டைக்கோழி 2ல் கண்டிப்பாக மீது வர வாழ்த்துக்கள்.

என் அத்தை: எனது தந்தையின் தங்கை பற்றிய எனது பதிவு திடீரென நிறைய பேர் படிக்கும் பதிவாக உள்ளது. என் அத்தை என்றவுடன் ஏதாவது கில்மா பதிவு என்று நினைத்து விட்டார்களா என்று தெரியவில்லை. பகுதி 1, பகுதி 2 என இரண்டு இருந்தாலும், முதல் பகுதி மட்டும் அதிகம் படிக்கப்படுகிறது.

புகழ்: ஆரம்ப காலங்களில் நமது பதிவுகள் மற்றவர்களுக்கு தெரிய வேண்டுமெனில் மற்றவர்களின் பதிவுகளுக்கு போய், பின்னூட்டங்கள் இட்டு, பின் எனது பதிவிற்கும் வாருங்களேன் என்று அழைப்பு விடுக்க வேண்டும். அதை செய்தாலும், பின் ஏதோ ஒரு மாதிரி இருந்ததால், அதன் பிறகு அதை விட்டு விட்டேன். சில பதிவர்கள், தாங்கள் ரசித்த புது பதிவர்கள் என்று அறிமுகப்படுத்தினார்கள். அதன் மூலம் இன்னும் கொஞ்சம். ஒரு கட்டத்தில் யார் படித்தால் என்ன, நாம் பாட்டுக்கு எழுதுவோம் என்று எழுதிக்கொண்டிருந்தேன்.

திடீரென யாராவது இளையராஜா பற்றியோ, கமல் பற்றியோ கேவலமாக ஒரு பதிவு போட்டால், உடனே அதை எதிர்த்து ஒரு பதிவு போட்டால்தான் மனது அடைக்கும். அந்தப் பதிவில் ஏதாவது கருத்துக்கள் இட்டு, அது வேறு பஞ்சாயத்து ஆகி, அது தனிக்கதை. இருந்தாலும், வயது ஆகிறது அல்லவா. இப்போது கொஞ்சம், கொஞ்சம்தான் பக்குவம் வந்துள்ளது. அது போல ஏதாவது பதிவு படித்தால், முதலில் சிரிப்பு வரும். பின், அதைத் தவிர வேறு எதையாவது நினைக்க ஆரம்பித்தால், அது மறந்து விடும். பின் ஆற அமர ஏதாவது பதிவு எழுதுவேன்.

அதன் பிறகு திடீரென தமிழ் ஹிந்துவில் எனது பதிவு பற்றி வந்தது. என் வாழ்க்கையிலேயே மிகவும் பெருமையா தருணம் அது. நமது படைப்புகளுக்கு கிடைக்கிற அங்கீகாரம், அந்த போதையே தனி சுகம். இது போல அவ்வப்போது கிடைக்கும் பாராட்டுகளே இன்னும் என்னை எழுத வைக்கிறது.

சில நல்ல பதிவுகள்:

இந்தியாவின் சாலை விதிகள்

நாமக்கல் கல்விப் பண்ணைகள்

தவறுக்குக் காரணம் பெற்றோர்களே!! மாணவர்களே!!

சென்னையின் வாகன ஓட்டிகள்

திரைப்படங்கள்/திரையிசை பதிவுகளில் சில நல்ல பதிவுகள்:

நான் ரீமேக் செய்ய விரும்பும் படங்கள்!!! 

ராஜா ரசிகனும், ரஹ்மானும்!!!

விஸ்வரூபம் - தவறு கமல் மீதுதான்


தங்களின் ஆதரவிற்கு நன்றி!!

Monday, November 6, 2017

ஞாபக மறதி

முன் குறிப்பு: இது மிகவும் சோகமான பதிவு.

நமக்கு உள்ள சக்திகளிலே மிகவும் நல்லது என்னவென்றால் ஞாபக மறதிதான். அனால், அதை சரியாக நாம் பயன்படுத்தாததால்தான் நிறைய பிரச்சினைகள். எதை மறக்க வேண்டுமோ அதை நினைவில் வைத்துக் கொள்வது, எதை நினைவில் வைக்க வேண்டுமோ அதை மறந்து விடுவது, இவையே நிறைய பிரச்சினைகளுக்கு காரணம்.

சமீபத்தில் உங்களை மிகவும் பாதித்த சம்பவம் என்னவென்று கேட்டால், மழை பெய்தது, அதன் பாதிப்புகள் பற்றி சொல்லலாம், சரி அதற்கு முன் என்று கேட்டால், நெல்லையில் கந்து வட்டி கொடுமையால் 4 பேர் இறந்தது என்போம், சரி அதற்கும் முன்னால் என்றால், அனிதா தற்கொலை என்போம். சரி ஒரு பத்து வருடம் முன்னால் என்று கேட்டால், சற்றே யோசிப்போம், கும்பகோணம் தீ விபத்து எனலாம். (அது நடந்து 16 வருடங்கள் ஆகி விட்டது),

சரி அதற்கு காரணமானவர்கள் என்ன ஆனார்கள் என்று பார்த்தால், எனக்குத் தெரிந்து அந்தப் பள்ளியின் தாளாளர் விடுதலை ஆகி விட்டார். இப்படி அந்தந்த நேரங்களில் அதைப் பற்றி பொங்கி குமுறுவோம், அதன் பின் அதற்கு காரணமானவர்கள் பற்றி மறந்து விடுவோம், நமக்கும் அடுத்து வேலை வருகிறது அல்லவா. அதை விட முக்கியம், எதுவாக இருந்தாலும், எங்கேயோ நடப்பதற்கும், நமக்கு தெரிந்தவர்களுக்கு நடப்பதற்கும், நமக்கு நடப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

இருந்தாலும், எங்கோ நடந்த சில நிகழ்வுகள், இன்னமும் என் மனதில் ஏதோ ஒரு ஓரத்தில் அரித்துக்கொண்டே இருக்கின்றன. இதில் சில நிகழ்வுகள் "அட ஆமால்ல", சில நிகழ்வுகள் "இப்படி நடந்ததா?" என்பதாக கூட இருக்கலாம். 

அருணா ராமச்சந்திரா:

அப்போதைய பம்பாயில் ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நர்ஸ் அருணா, அதே மருத்துவமனையில் உள்ள ஒரு மருத்துவருடன் நிச்சயிக்கப்பட்டிருந்தார். அதே மருத்துவமனையில் இருந்த ஒரு உதவியாளரான சோஹன்லால் என்பவருடன் ஏற்கனவே சில பல பிரச்சினைகள். அதனால் 1973 நவம்பர் 27ல் சங்கிலியால் கட்டப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார். அதன் விளைவாக கோமாவிற்கு சென்று விடுகிறார். கிட்டத்தட்ட 42 வருடங்கள், நினைவு திரும்பாமலே 18 மே 2015ல் இறந்தும் விடுகிறார்.

அவர் இறந்த பிறகு வந்த செய்திகளில்தான் எனக்கே இது தெரியும். கிட்டத்தட்ட காய்கறி போல 42 வருடங்களாக இருந்த பெண்ணை, அந்த நிலைக்கு ஆளாக்கிய கயவன், 7 வருடங்கள் சிறையில் இருந்து விட்டு, திரும்பி வந்து, திருமணம் செய்து ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்ந்து(ம்) வருகிறான். அருணாவைக் கருணைக்கொலை செய்ய அனுமதி கேட்டும் கொடுக்கப்படவில்லை.

யோசித்துப் பாருங்களேன். குற்றம் செய்தவன் 7 வருடம் தண்டனை முடிந்து, மீண்டும் சாதாரண வாழ்க்கைக்கு திரும்பி விட்டான். ஆனால், பாதிக்கப்பட்ட நபர், 42 வருடங்கள், யோசிக்க முடிகிறதா, 42 வருடங்கள் ஒன்றும் செய்ய முடியாமல் நடைப்பிணமாக இருந்து இறக்கிறார். இதேதான் நிர்பயா வழக்கிலும் நடக்கும்.

மெட்ரோ ரயில் விபத்துக்கள்:

6 வருடங்களுக்கு முன்னால், இன்னும் குறிப்பாக சொன்னால், குழந்தை பிறப்பதற்கு முன், பொதுவாக ஒரு விபத்து பற்றி படித்தால் "தண்ணி போட்டுட்டு ஓட்டி இருப்பான், இல்லேன்னா, கன்னா பின்னான்னு போயிருப்பான்" என்று எண்ணுவேன். ஆனால், வாழ்க்கை பற்றிய பயம் வந்த பின், அப்படி எண்ணுவதில்லை.

2015 ஜூன் 17, அன்றுதான் என் மகளுக்கு இரண்டாவது நாள் பள்ளிக்கு சென்றாள். முதல் 3 நாட்கள், பெற்றோரும் உடன் செல்லலாம் என்பதால், அந்த 3 நாள் மட்டும் அலுவலகம் மதியம்தான் வருவேன் என்றும் சொல்லியிருந்தேன். அன்று மகளை பள்ளியில் இருந்து 12 மணிக்கு அழைத்து வந்த பின், செய்தி பார்த்தால், பரங்கிமலை அருகே பில்லர் கீழே விழுந்து கிரிதரன் என்பவர் பலி என்று செய்தி. அடுத்து அவரைப் பற்றி வந்த செய்திதான் பகீர் என்றது, தலைக்கவசம் அணிந்திருந்தார், அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணி என்பதுதான் அது.

அதே போல கார்த்திகேயன் என்ற பொறியாளர், நந்தனம் அருகே இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது, கிரேன் தவறான திசையில் வந்து தாக்கியதில் உயிரிழந்தார். அவருக்கு அப்போது 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. இதைப்போல இன்னும் நிறைய விபத்துக்கள் நடந்திருக்கலாம். ஆனால், இந்த இரண்டு மட்டும் என்னால் ஏனோ மறக்கவே முடியவில்லை. எல்லோரும் மெட்ரோ ரயில் பற்றி பெருமையாக பேசும்போது இவர்களது குடும்பத்தில் என்ன நினைப்பார்கள், அந்த குழந்தைகள் எப்படி இருப்பார்கள் என்று அடிக்கடி தோன்றுகிறது.

இந்த செய்திகள் எல்லாம், கூகிளிலேயே தேடினால் கிடைக்கிறது, ஆனால், விடைதான் இல்லை. இன்னும் சில செய்திகள் உள்ளன. எப்போதோ வந்த செய்திகள்தான். ஆனாலும் இன்னும் கண்ணில் ஈரம் வரச்செய்பவை அவை.

இரண்டு குழந்தைகள் உள்ள பெண், இன்னொருவனுடன் கள்ள தொடர்பு. இருவரும் சேர்ந்து கணவனை கொலை செய்து விடுகிறார்கள். அதன் பின் அவர்கள் இருவருக்குள்ளும் சண்டை. அதில் அந்த பெண் கொலை செய்யப்பட்டாள். பிறகு அந்த கள்ளக்காதலன் அந்த இரு குழந்தைகளையும் (6 வயது சிறுவன், 4 வயது சிறுமி என்று நினைக்கிறேன்), சென்னையில் இருந்து மும்பை செல்லும் தொடர்வண்டியில் தனியே ஏற்றி அனுப்பி விடுகிறான். காவல்துறை, கொலையாளிகளை அடையாளம் கண்டு பிடித்தபின்தான் இந்த தகவல் தெரிகிறது. உடனே சென்னை மும்பை இடையே அனைத்து ரயில் நிலையங்களிலும் அந்த இரு குழந்தைகள் புகைப்படம் அனுப்பி தேடுகிறார்கள், ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.

அந்த இருவரும் என்ன ஆனார்கள் என இரண்டு மூன்று தினங்கள் தொடர்ந்து செய்திகள் பார்த்தேன், ஆனால், அதன் பிறகு அதைப்பற்றிய செய்திகள் எதுவும் வரவில்லை. அவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என யோசிக்கவே முடியவில்லை. இந்த நிகழ்வுகள் யாவும் மீண்டும் நான் இணையத்தில் தேடி, கொஞ்சம் விவரமாக கொடுத்துள்ளேன்.

ஆனாலும், இவை யாவும் அவ்வப்போது, இன்னும் குறிப்பாக சொன்னால், ஏதாவது சோக செய்திகள் வரும்போது, இவையும் என் மனதில் நிழலாடும். ஏதோ பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. "நீங்க வேணும்னா புளூ டூத்த ஆன் பண்ணுங்களேன், சோகத்தை ஷேர் பண்ணிக்கலாம்."

Tuesday, October 24, 2017

விஸ்வநாதன் வேலை வேண்டும்!

கிட்டத்தட்ட 4 மாதங்களாக ஒரு பதிவும் போடவில்லை. ஏன் என்று பார்ப்போம். அலுவல சுமை. எங்கேயாவது அறை எடுத்து அழ வேண்டும். நம்முடைய இணைய அறையே போதுமே. முழுக்க முழுக்க சோக புலம்பல்களே.

12 வருடங்களுக்கு மேல் தானியங்கி பொறியியல் துறையில் அனுபவம். 4 நிறுவனங்கள் மாறி விட்டேன். இந்த நிறுவனத்தில் கடந்த ஒரு வருடமாக வேலை செய்து வருகிறேன். முதல் நிறுவனத்தில் இருந்து மாறியது சம்பளம் அதிகம் என்பதற்காக. 12 வருடங்களுக்கு முன் வேலை சற்றே கஷ்டப்பட்டு கிடைத்தபோது, "நம்மளையும் நம்பி வேலை கொடுத்திருக்காங்களே, இவர்களுக்காக காலம்பூராவும், இல்ல அதிகம், 5 வருஷமாவது வேலை பாக்கணும்" என்று எண்ணினேன்.

ஆனால், இரண்டு வருடங்கள் கழித்து, அதே தகுதி உள்ள ஆள், வெளியில் இருந்து வரும்போது நம்மை விட மிக அதிக சம்பளம் வாங்கி உள்ளே வந்ததால், எனக்கும் சூது தெரியும் என்று வெளியேறியது மிகப் பெரிய தவறு. நான் வேலை செய்தது ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி (அட R&Dங்க), அதிலும் குறிப்பாக மதிப்பீட்டுப் பொறியியல் (Value Engineering), அதாவது ஒரு பொருளின் மதிப்பை (Value) அதிகரிப்பது அல்லது மதிப்பைக் குறைக்காமல் அதன் திறனையும் விலையையும் குறைப்பது (Value=Function/Cost). 

கிட்டத்தட்ட ராஜா போன்ற வாழ்க்கை, மிக சாதாரணமாக இலக்குகளை அடைய முடிந்தது, எல்லோருடனும் இலகுவான அணுகுமுறை என்று இருந்தேன். வெளியில் இருந்து இங்கே அதிக சம்பளம் வாங்குகிறார்கள், அதே போல நம் நண்பர்களும் வேறு நிறுவனம் மாறி அதிக சம்பளம் வாங்குகிறார்களே என்ற தேவையில்லாத எண்ணம்.

இரண்டாம் நிறுவனத்தில் வேலைப்பளு அதிகம் என்பதால் எப்படியாவது மாற வேண்டும் என்று முக்கி, முனகி பெரிய அளவில் சம்பளம் வித்தியாசம் இல்லையென்றாலும் மாறினேன். அதாவது, "நீ கல்யாணம் ஆகாத ஆள்தானே, சனி ஞாயிறு ஆபிஸ் வராம என்ன பண்ற, உனக்கா கல்யாணம், உன் அக்கா/அண்ணாவுக்குத்தானே, நாலு நாள் எதுக்கு, அதான் செத்துட்டாங்களே, நீ போனா மட்டும் பொழச்சு வந்துருவாங்களா என்ன" என்ற அளவிற்கு கேள்வி கேட்ட கேவலம் எல்லாம் நடந்தது.

மூன்றாவது நிறுவனம் ஒரு தொழில்நுட்ப நிறுவனம். இங்கிருந்துதான் மூன்று முறை வெளிநாடு கூட சென்றேன். இந்த நிறுவனத்தில் உள்ள ஒரு கெட்ட பழக்கம், ஒரு முறை குறுகிய வெளிநாடு பயணம் போனால், அந்த முறை, பணி மதிப்பீட்டில் (அப்ரைசல்) கை வைத்து விடுவார்கள். ஏனென்றால், குறுகிய கால வெளிநாட்டுப் பயணங்களில், இங்கே சம்பளம் முழுதும் வரும். அங்கே தினக்கூலி, தங்க இடம் கொடுத்து விடுவார்கள். பயணப்படியும் உண்டு. பஞ்சப்படி (சோறுதாங்க) மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எனவே ஒரு மாதம் பயணம் போனால் கூட நல்ல சேமிப்பு. மூன்று மாதம் என்றால் நல்ல சேமிப்பு கையில் இருக்கும். நாம் நன்கு வேலை செய்திருந்தாலும், "அதான் அங்க நல்லா சம்பாதிச்ச இல்ல, இங்கயும் உனக்கு இவ்ளோ உயர்வா" என்று கேட்டு, 3 அல்லது 4 மதிப்பீடு கொடுப்பார்கள்.

கிட்டத்தட்ட 5 வருடங்கள் அங்கே முடிந்திருந்தது, அங்கே சேர்ந்தவுடன்தான் திருமணம், புது வீடு என எல்லாம் நடந்தது. மனைவி, மக்கள் எல்லோரும் ஓரளவு என் வேலை அமைப்போடு பழகி இருந்தார்கள். ஒரே பிரச்சினை, எனக்கு வெளிநாட்டுப் பயணங்களில் விருப்பம் இல்லை. இரு முறை என் குழந்தையின் பிறந்த நாளுக்கு நான் இல்லை.

எனவே, அந்த கோபத்தில் வேலை தேடவும் இந்த வேலை கிடைத்தது. சம்பளமும் அதிகம். உடனே அங்கே பயந்து போய், "தம்பி இந்தாப்பா ஊதிய உயர்வு" என்று நீட்டுவார்கள் என்று நினைத்தேன். ஆனால், "தம்பி, காத்திரு, உனக்கான நேரம் வரும்" என்றனர். நானோ வடிவேலு அல்லது கவுண்டமணி அளவிற்கு இல்லையென்றாலும், கொஞ்சம் ஸீன் போட்டு விட்டுதான் வந்தேன். அது மீண்டும் அதே போல திருப்பி அடிக்கும் என சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.

இது உதிரி பொருட்களை பெரிய வாகனங்களுக்கு உற்பத்தி செய்யும் நிறுவனம் (Tier 1), அலுவலகம் போக, வர அலுவலக வண்டி, தினமும் ஒரு மணி நேர பயணம், ஏதாவது படிக்கலாம், படம் பார்க்கலாம். தினமும் காலை 7 மணிக்கு கிளம்பினால், இரவு 7 மணிக்கு வீட்டிற்கு வந்து விடலாம், வெளியில் பயணம் அதிகளவு இல்லை என்று நிறைய கனவுகளோடு சேர்ந்தேன். சேர்ந்த 3 மாதங்களிலேயே பல் இளித்து விட்டது.

பொதுவாக நமது இந்திய நிறுவனங்களில் உள்ள போட நம்பிக்கைகள் என்னவென்றால், "மாலையில் வேலை நேரம் முடிந்தாலும் வீட்டிற்கு போகக் கூடாது, சனி, ஞாயிறு விடுமுறை என்றாலும் அலுவலகம் வர வேண்டும்". அதை 100 சதவிகிதம் சரி என்று நம்பும் நிறுவனம் இது. முதலில் நானும் சமாளித்து விடலாம் என்றுதான் நம்பினேன். ஆனால், நீ வேலை பார்க்கிறாயா இல்லையா என்பது பற்றி எல்லாம் கவலை இல்லை. எந்நேரமும் அலுவலகத்திலேயே இரு என்று அழுத்தம்.

பொதுவாக வேலை பார்க்கும் எல்லோரும் விரும்புவது, குறிப்பாக நான், கீழ்க்கண்டவை, அதே வரிசையில். 

1. சொந்த வேலை - அலுவலக வேலை பங்கீடு (Work Life Balance)
2. நமக்கு பிடித்த, நன்கு தெரிந்த வேலை (Job Satisfaction)
3. நல்ல சம்பளம், வேலையில் முன்னேற்றம், (Career Growth).

இந்த மூன்றுமே அமைவது நடக்கவே இயலாத காரியம். ஆனால், இந்த மூன்றில் ஒன்றுதான், அதுவும் சம்பளம் மட்டும்தான் எனும்போது, நிறைய பேர் அதை தேர்வு செய்யலாம். ஆனால், நாம் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பது முக்கியம் இல்லை, எதற்காக, யாருக்காக என்பதுதான் மிக முக்கியம். இரண்டு முறை என் குழந்தை பிறந்த நாளுக்கு நான் உடன் இல்லாவிட்டாலும், Skype மூலம் பார்த்தேன். ஆனால், இந்த முறை ஞாயிறு அன்று பிறந்தநாள் என்றாலும், அலுவலகம் சென்று, கடைசியில் எல்லாம் முடிந்த பிறகே வந்தேன்.

அதன் பிறகு, நம்முடைய சுய சிந்தனையை அது இழக்க வைக்கிறது எனில், கண்டிப்பாக அந்த வேலை தேவையா இல்லையா என்று யோசிக்க வேண்டும். என்னால் 3 மாதங்களாக ஒரு பதிவு போட முடியவில்லை, மனைவி, மகளை வெளியே கூட்டிப் போக முடியவில்லை, அவசரத்திற்கு உடன் இருக்க முடியவில்லை எனில் உடனே மாற்றம் பற்றி யோசித்தே ஆக வேண்டும்.

"சரி, இப்போதான் மாறின, உடனே வேற வேலை கிடைக்குமா என்றால், கிடைக்காது. அவசரத்திற்கு மாறி, மீண்டும் கொதிக்கும் எண்ணெய், அடுப்பு என்று மாட்டிவிடக்கூடாது. சரி என்ன செய்யலாம் என்று யோசித்து, நல்லது, கெட்டது எல்லாம் அலசி ஆராய்ந்ததில் பழைய நிறுவனமே பரவாயில்லை என்று தோன்றுகிறது. சரி, திரும்ப கேட்டால் அசிங்கம் என்று யோசித்தாலும், வயது, கிடைத்த அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது தவறில்லை என்றுதான் தோன்றுகிறது. சொல்லி வைத்துள்ளேன். ஓரளவு சுமூகமான முறையில் வெளியே வந்ததால், எதிர்மறையான பதில் வரவில்லை.

கவுண்டமணிக்கு சொன்னது போலவே, 6 வருடத்திற்கு முன்னால் என்ன சம்பளமோ, அதே தான் இப்போதும் என்று சொல்ல மாட்டார்கள் என நம்புகிறேன். இன்னும் ஒரு மாதத்தில் நல்லது நடக்கும், மீண்டு வருவேன் என நம்புகிறேன்.

Friday, June 30, 2017

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்!

இளையராஜா 40!:

"அட என்னப்பா இது எப்ப பாரு இளையராஜா 1000, இளையராஜா 2000ன்னு சொல்லிக்கிட்டு" என்று எனக்கே தோன்றுகிறது. இருந்தாலும் என்ன செய்ய. உண்மையில் இப்போது ராஜா ஆடுகளம் பேட்டைக்காரன் போல ஆகி விட்டார். ஊரில் உள்ள 70 வயது பெரியவர் போல "இப்பல்லாம் அந்தக் காலம் மாதிரி இல்ல. அப்பல்லாம் எப்படி இருக்கும் தெரியுமா" என்றாகி விட்டார்.

13 வருடங்களில் 500 படம் (1990 - அஞ்சலி), அதிலும் 90 சதவிகிதம் வெற்றி ஏற்ற பாடல்கள். அப்படிப்பட்ட ராஜா, அடுத்த 500 படங்கள் இசையமைக்க 26 வருடங்கள் ஆகி விட்டது. அதில் வெற்றி என்று பார்த்தால் 60 சதவிகிதம் இருக்கலாம். அதிலும் கடைசி 10 வருடங்கள் உண்மையில் "அவ்ளோல்லாம் ஒண்ணுமில்ல" கதைதான்.

இதற்கு மிக முக்கியமான காரணம் ராஜாவிடம் இருந்து அந்த திறமையை வெளிக் கொண்டு வரும் இயக்குனர்கள் யாருமில்லை. எனக்கு தெரிந்து அந்த அளவு திறமையான இயக்குனர்கள் யார் என்றால், மணிரத்னம், பாலு மகேந்திரா (மறைந்தாலும்), பாசில், மகேந்திரன் போன்றவர்கள்தான். இவர்கள் அனைவருக்கும் இசையமைத்த பாடல்கள், பின்னணி இசை அனைத்துமே வெற்றி பெற்றவை.

இவர்களில் இப்போது படம் எடுத்தால் கண்டிப்பாக வெற்றி அடையும் என்று சொல்லும் அளவிற்கும் யாருமில்லை. மகேந்திரன் இளையராஜாவுடன் பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் இணைவதாக சொல்லப்பட்டது. அது என்ன ஆனது என்றே தெரியவில்லை. பாசில் படம் இயக்குவதையே விட்டு விட்டார். மணிரத்தினம் ராஜாவுடன் இணைய வாய்ப்பு குறைவு.

இவர்கள் தவிர, ஓரளவு நம்பிக்கை தரக்கூடிய இருவர், கமல் மற்றும் பாலா. பாரதிராஜா கூட சந்தேகம்தான். அதுவரை "அந்தப் படத்துல இந்தப் பாட்டு கேட்ருக்கியா" என்று புராணம்தான். இதுவே என் பதிவு. அதுவே உங்கள் தலையெழுத்து.

பொதுவாக ராஜா மேல் உள்ள பொதுவான குற்றச்சாட்டு 'மெட்டுக்கு பாட்டு' போட்டதால் கவிதை நயமே இல்லை. தந்தன தந்தன, லாலாலாலா, ஜிங்கிடி ஜிங்கிடி, என ஏதேதோ வார்த்தைகள் எல்லாம் பாடல்களாக வந்து விட்டன என்பதுதான். இதை வேறொரு வகையில் பார்த்தால், ஒரு உரையாடலைக் கூட பாடலாக மாற்றி நம்மை முணுமுணுக்க வைத்துள்ளார். 

இந்த 3 பாடல்களைக் கேளுங்களேன் (பார்த்தால் வரும் பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல). ஆனாலும் நடுவில் வழக்கம் போல மாறி விடும்.

இசை பாடும் தென்றல் என்றொரு படம். அதில் வரும் "எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது" என்ற பாடல்.


நினைவு சின்னம் படத்தில் வரும் "ஊருக்குள்ள உன்னயப் பத்தியும் என்னைய பத்தியும்" பாடல்.


புது நெல்லு புது நாத்து படத்தில் வரும் "ஏய் மரிக்கொழுந்து, என்னம்மா கிருஷ்ணவேணி" பாடல்.


விமர்சனம்:

கடந்த சில மாதங்களாக எந்தப் படமும் அந்தளவிற்கு மனதைக் கவரவில்லை. குறிப்பாக சொன்னால், இந்த வருட ஆரம்பத்திலிருந்தே அப்படித்தான். விமர்சனங்கள் நன்றாக இருந்தாலும் கூட எனக்கு ஏனோ பிடிக்கவில்லை. குறிப்பாக பவர் பாண்டி. 3 நாட்களில் ஒரு காதல் முறிவு, அதற்கும் தெளிவான காரணமே இல்லை. சாதியா, பணமா, படிப்பா என்று எதுவும் சொல்லப்படவில்லை.

3 படம் மொக்கையாக இருந்தாலும் அதன் முதல் பாதி அதிலும் குறிப்பாக பள்ளிப்பருவ காட்சிகள் அட்டகாசமாக இருக்கும். ஏனென்றால் தனியாக டியூஷன் போய்ப் படித்த எல்லோருக்கும் அதன் நினைவுகளை தட்டி எழுப்பியிருக்கும். இதில் அது போல ஒன்றுமேயில்லை.

8 தோட்டாக்கள் படமும் அதே போலத்தான். லென்ஸ் படம் பரவாயில்லை. மரகத நாணயம் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் நன்றாக இருக்கும் என நம்புகிறேன்.

திரைத்துறைக்கு யோசனை:

கல்யாணத்திற்கு முன்பு, எப்படியும் வாரம் ஒரு முறையாவது திரையரங்கம் சென்று விடுவோம். நான் தனியாக இருக்கும்போது கூட திரையரங்கில்தான் பார்ப்பேன். ஆனால், இப்போதெல்லாம் செல்ல முடியாததால் தரவிறக்கம்தான். ஆனால், முதல் நாளே ஏதோ ஒரு தளத்தில் சென்று பார்ப்பதெல்லாம் இல்லை. பொறுமையாக காத்திருந்து நல்ல பதிப்பு வந்த பிறகுதான்.

ஏன் வெளிநாடுகள் போல இங்கு இன்னும் படங்களை கொஞ்ச நாள் கழித்து இணைய தளத்தில் வெளியிட மறுக்கிறார்கள் என தெரியவில்லை. அமேசான் தளத்தில் ரொம்ப நாள் கழித்துதான் வருகிறது. இதை ஏதேனும் ஒரு வகையில் வரைமுறைப்படுத்தினால், நானும் அதை ஆதரிப்பேன்.

பணம் கட்டி இணையத்தில் பார்க்க, தயாரிப்பாளர் சங்கமோ, நடிகர் சங்கமோ ("இப்ப ரெண்டுமே ஒண்ணுதானே" என்ற குரல் கேட்கிறது) ஒரு இணையதளம் ஆரம்பித்து, படம் வெளியாகி 15 நாட்கள் கழித்து வெளியிடலாம். தரவிறக்கம் செய்யும் 100 பேரில், 25 பேராவது பணம் கட்டி பார்ப்பார்கள். எதுவும் இல்லாததற்கு இது லாபம்தான்.

இப்ப 120 ரூவா டிக்கட்டு 150 ரூவா ஆகுதாம். அதிலும் பெரிய வளாகங்கள் சென்றால், 3 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் கட்டணம். "அண்ணே, அவ 5 நிமிஷத்துல தூங்கிருவாண்ணே" என்றாலும் கேட்க மாட்டார்கள். கொஞ்சம் யோசித்து ஏதாவது செய்யுங்கள்.

Monday, May 8, 2017

பாஹுபலி 2: ஒரு பிரம்மாண்ட கதைக்கான தேடல்!

படம் 1000 கோடி வசூல் செய்து விட்டதாம். நான் விமர்சனம் செய்யவில்லை. அதனாலதான். செய்திருந்தால், இன்னொரு 150 ரூபாயை கொஞ்சம் முன்னரே வசூலித்திருக்கும். அவ்வளவே.

எல்லோரும் சொல்லும் பொதுவான கருத்து, முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம்தான் நன்றாக இருந்தது என்று. ஆனால், எனக்கோ முதல் பாகம்தான் பிடித்தது. ஏனென்றால், படம் முதல் பாகம் படம் என்ன திசையில் செல்கிறது என்பதை கொஞ்சம் யோசிக்க விடாமல் நிறைய யூகங்களை படம் பார்க்கும் போது எழுப்பியது. முடிந்த பின் ஏமாற்றம் என்பது வேறு விஷயம். குறிப்பாக நாயகன் சாதாரண மனிதர்களை விட மேலான சக்தி படைத்தவன், தெய்வப்பிறவி என்பது போல வந்த காட்சிகள். "தன்னைத்தானே சுமந்து கிட்டு லிங்கம் நடந்து போகுது" போன்ற வரிகள் (எனக்கு) இன்னும் சில வித்தியாசமான எதிர்பார்ப்புகளை உண்டாக்கின. ஆனால், படம் சராசரி தெலுங்கு படம்தான் என்பதை உணர்த்தியது.


இரண்டாம் பாகத்தின் கதை கண்டிப்பாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதன் திரைக்கதை வடிவம்தான் என் ஆர்வத்திற்கு காரணமாக இருந்தது. அதில் எனக்கு சற்றே ஏமாற்றம்தான். என்னாலேயே ஓரளவு யூகிக்க முடிந்தது (?) என்றால் பாருங்களேன். முதல் பாகத்தை அடிக்கடி பார்க்கும் என் மகளுக்கு கூட இரண்டாம் பாகம் பிடிக்கவில்லை. காரணம் முதல் பாகத்தின் பிரம்மாண்டம் இயற்கையை சார்ந்து இருந்தது. காடுகள், அருவி, பனி மலைகள் என. ஆனால், இரண்டாம் பாகம் முழுக்க அரண்மனை, கோட்டை போன்றவைதான். அது கூட காரணமாக இருக்கலாம்.


அதே போல பாத்திரப்படைப்புகளின் சில குழப்பங்கள். முதல் பாகத்தில் எந்த விஷயமாக இருந்தாலும், தீர்க்கமாக யோசித்து முடிவெடுக்கும் ராஜமாதா, இதில் சராசரிப் பெண்ணைப் போல நடந்து கொள்கிறார். மகனின் திருமண விஷயத்தில் சரி. ஆனால், அதி முக்கியமான கட்டத்தில் கூட அவரசரப்பட்டு முடிவெடுப்பது என்பது, என்ன சொல்ல.

அதே போல கட்டப்பா. ராஜமாதாவைக் காப்பாற்ற ராணாவை அடிக்கிறார், ராஜமாதாவைக் கொன்றபின் அடிபணிகிறார். நம்ம ஊர் காவல் துறை போல. அப்போது யார் அதிகாரத்தில் இருக்கிறார்களோ அவர்களுக்கு வணக்கம் வைத்து ராஜ மரியாதை கொடுப்பது (ராஜமாதாவைக் கொன்ற பின், ராணாவுக்கு அடி பணிவது), அதிகாரம் இல்லை என்றவுடன் ஏறி மிதிப்பது (ராஜமாதா குழந்தை பாகுபலியை மன்னர் என்று அறிவித்த பின், அவரைக் காப்பாற்ற ராணாவை அடிப்பது). பல்வாள்தேவன் புத்திசாலியா அல்லது முரட்டு முட்டாளா என்றும் தெரியவில்லை.

படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவும், கணினி வரைகலையும்தான். அட்டகாசம். எனக்கு மிகவும் பிடித்தது "ஒரே ஓர் ஊரில்" பாடல்தான். என்னைப் பொறுத்தவரை இரு படங்களின் கதை, திரைக்கதை இரண்டுமே, ஒரு சராசரி தெலுங்குப் படத்திற்கு என்ன தேவையோ அது மட்டுமே உள்ளது. அனால், அதை உருவாக்கிய விதம்தான், படத்தை கண்டிப்பாக திரையரங்கில் சென்று பார்க்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டியது.

பிரம்மாண்டம் என்றால், நாயகன் வில்லன் மட்டும் சராசரி மனிதர்களை போல இல்லை. படத்தில் வரும் யானை, எருமை போன்றவை கூட பிரம்மாண்டமாக உள்ளன. ஆனால், அவை தனியாக துருத்துக் கொண்டோ, கிராபிக்ஸ் என்றோ தெரியவில்லை. அங்குதான் ராஜமவுலியின் வெற்றி அடங்கி உள்ளது.

உண்மையில் நான் ஈ படம் தவிர வேறெந்த ராஜமவுலியின் படமும் தமிழில் ஓடியதில்லை. ஏனென்றால் அவையாவும் அக்மார்க் தெலுங்குப் படங்கள். கஜேந்திரா ராஜமவுலியின் படம் என்றால் (அதாவது கதை, திரைக்கதை) என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? யமதொங்கா என்றொரு படம் உண்டு. சத்தியமாக ஒரு சாதாரண தமிழ் ரசிகனால் அதைப் பார்க்க முடியாது.

ஷங்கர் படம் போல தேவையில்லாத பிரம்மாண்டம் எல்லாம் காட்டாமல் அதை படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் காட்டி "அட அந்த ஸீன் (காட்சி) மொக்கையா இருந்தா என்ன, அந்த visual (காட்சியமைப்பு) எப்படி இருந்துச்சு" என்று ரசிக்க வைக்கிறார் ராஜமவுலி.

அதாவது சில படங்கள் எவ்வளவு மோசமான பிரிண்டில் பார்த்தாலும் நன்றாக இருக்கும். 8 தோட்டாக்கள், மாநகரம் போன்றவை. ஆனால், பாஹுபலி, ஒரு திரையரங்கில் மட்டுமே பார்த்து ரசிக்க முடியும். அதனால்தான் முதல் நாளே இணையத்தில் வெளிவந்தாலும், 1000 கோடி வசூலிக்க முடிகிறது. அதாவது ரஹ்மானின் இசை போல. ஒரு கரகர வானொலியில் உங்களால் ரஹ்மானின் பாடலைக் கண்டிப்பாக ரசித்துக் கேட்க முடியாது. அதே போலத்தான் இந்தப்படமும்.

நான் பொதுவாக நல்ல, அல்லது எனக்கு மிகவும் பிடித்த படங்களை தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்வேன். எந்த மொழியாக இருப்பினும் அதன் அளவு 700MB அல்லது அதிக பட்சம் 1GB. ஆனால் பாஹுபலி 1 மட்டும் 5.1 தரத்தில் 5GB ஆக தரவிறக்கம் செய்துள்ளேன். ஒருவேளை இரண்டு பாகங்களும் சேர்த்து DVD ஆக வெளியிட்டால் கண்டிப்பாக வாங்குவேன்.

மொத்தத்தில் கண்களுக்கு மிகச்சிறந்த விருந்தளிக்கும் தரமான படம். கண்டிப்பாக கதை, திரைக்கதையில் இல்லை. ஆனால், இதே சாதனையை முறியடிக்க மீண்டும் ராஜமவுலியால் மட்டுமே முடியும். அழுத்தமான திரைக்கதையும், பிரம்மாண்டத்துடனும். நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

Thursday, April 27, 2017

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

எப்படியாவது மாதம் ஒரு பதிவு போட்டு விட வேண்டும் என்ற குறிக்கோளை வைத்திருப்பதால், எதையாவது எழுத வேண்டி உள்ளது. "அப்படி என்னடா பெரிய சிவகாமியின் சபதம், இல்ல சரசுவதி சபதமா எடுத்திருக்க, எங்கள போட்டு வதைக்க" என்று எண்ணினாலும் பரவாயில்லை.

எஸ்.பி.பி - இளையாராஜா உரிமை பிரச்சினை: 


என்னப்பா இதப்பத்தி நீ எதுவுமே சொல்லவேயில்லையே என்று யாரும் கேட்கவில்லை. என்ன எழுவதென்று தெரியாததால் இதைப் பற்றி எழுதுகிறேன். முதலில் மேடையில் பாடுவது பிடிக்காது. அதாவது அடிக்கடி ஒரு பாடலை எப்படிக் கேட்டு பழகினோமோ, அதையே கேட்பதுதான் என் பழக்கம். எனவே "நீங்கள் மேடையில் பாடுங்க, பாடாம போங்க. எனக்கு பிரச்சினையே இல்ல" என்பதுதான் என் கருத்து.

ஆனால், பாலு எனக்கு இந்த காப்பிரைட் பற்றியெல்லாம் தெரியாது என்று சொன்னதுதான் எனக்கே (?) கோபம் வந்தது.சில ஆண்டுகளுக்கு முன், இவர் தலைமையில் பாடகர்கள் அனைவரும் "எங்களுக்கும் ராயல்டியில் பங்குண்டு" என்று பேட்டி எல்லாம் கொடுத்தார். அது மட்டும்தான் உறுத்தல். மற்றபடி இளையராஜா கொஞ்சம் பேசியிருக்கலாம்.

கவண்:

விமர்சனங்கள் இருக்கவே, சரி என திரையரங்கம் சென்று பார்த்தேன். கொஞ்சம் அங்கங்கே இழுவையாக இருந்தாலும், ஒரு முறை பார்க்கலாம். படம் முடிந்த பின்புதான் "எப்படிடா இப்படி எல்லாம் பண்ண முடியும்" என்று தோன்றியது.

பாகுபலி 2:

பயப்படாதீங்க. சத்தியமா இன்னும் பாக்கல. கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்னாருன்னு எனக்கு தோன்றத சொல்றேன். எனக்கு தெரிஞ்சு ஏதோ ஒரு உள்குத்து செஞ்சு ராணா ராஜா ஆகுறாரு. அதுக்கு அப்புறமா, பிரபாஸ் வெளிய போய் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்குறாரு.

ஒரு கட்டத்துல ராணாவோட கொடும தாங்காம மக்கள் பிரபாஸ்கிட்ட சொல்றாங்க. போர் நடக்குது. பிரபாஸ் ஜெயிக்கிற மாதிரி இருக்காரு. ராணாவாக கொல்லப் பாக்குறாரு. ராணாதான் மன்னர், அவர காப்பாத்தணும்னுதான் கட்டப்பா அவரக் கொல்றாரு. அதே நேரம் அனுஷ்காவுக்கு கொழந்த பொறக்குது. மீதிக்கதை உங்களுக்கே தெரியும். 

அடிக்கடிக்கடி (தப்பால்லாம் அடிக்கல) படம் பாக்குற யாரா இருந்தாலும், இதேதான் தோணும். பாப்போம்.

இப்போதெல்லாம் பெரியதாக எழுதுவது என்பது குறைந்து விட்டது. பல பதிவர்கள் எல்லாம் எழுதுவதை விட்டு விட்டு, காணொளி மூலம் வருகிறார்கள். இல்லையெனில், கீச்சுக்களிலும், முகப்புத்தங்களிலும்தான் எழுதுகிறார்கள். ஒரு கட்டத்தில் புத்தகம் படிப்பது என்பது எப்படி குறைந்ததோ, அதே போல பதிவுகளும், பதிவர்களும், குறிப்பாக அதைப் படிப்பவர்களும் குறைந்து வருகிறார்கள்.

இது முழுக்க முழுக்க என் கருத்துதான். ஏனென்றால், எனக்கே கொஞ்சம் பதிவிடுவதற்கான ஆர்வம், நேரம் எல்லாமே குறைந்து வருகிறது. கிட்டத்தட்ட 8 வருடங்கள் நாட்குறிப்பு எழுதி வந்தேன். இதே போன்ற சூழ்நிலையில்தான் அதை நிறுத்தினேன். அது போலவே ஆகி விடுமோ என்ற பயம் உள்ளது. எனவேதான் எப்பாடு பட்டாவது (அல்லது படுத்தியாவது) மாதம் ஒரு பதிவிடுகிறேன்.

Friday, March 31, 2017

அக்கரைச் சீமை திரையினிலே!

ஒன்றுமில்லை. முன்பு எழுதிய பதிவு போலவே பிற மொழி திரைப்படங்கள் பற்றிய பதிவுதான். பேருதான் சும்மா. சரி, பார்ப்போம்.

பிங்க் (Pink) - ஹிந்தி:


"ஒரு பெண் முடியாது என்று சொன்னால், அதன் அர்த்தம் முடியாது என்பதுதான்", இதுவே படத்தின் கரு. ஒரு பெண், தனது நண்பிகளுடன் இரவு வெளியே இருந்தபோது மானபங்கப்படுத்தப்பட்டாள் என்று கேள்விப்பட்டவுடன், "அந்த நேரத்துல பொண்ணுங்க ஏன் வெளிய போனாங்க" என்று என்னும் சராசரி ஆண்தான் நான். என்னதான் வெளியே பெண்ணீயம் பேசினாலும் "நான் ஆம்பளடீ" என்று வீட்டில் கத்தியிருக்கிறேன்.

சரி அத விடுங்க. வழக்கம் போல முழுக்க முழுக்க நீதிமன்றத்தில் நடக்கும் கதை. என்ன நடந்தது, என்பது படம் பார்க்கும் நமக்கும் அவர்கள் பேசுவது மூலம் நாமே அனுமானித்துக் கொள்ள வேண்டியுள்ளது. கொஞ்சம் ஜாலி LLB நினைவுக்கு வந்தாலும், கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். அமிதாப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. ஏன் இது போன்ற படங்கள் தமிழில் வருவதில்லை என்றால், கண்டிப்பாக ரஜினி நடித்தால் நன்றாக இருக்கும். நடிப்பாரா, நடித்தாலும் பிளாஷ் பேக்கில் ஒரு சண்டை வேறு வைக்க வேண்டும். எனக்காக இல்லப்பா, ரசிகர்களுக்காக.

தங்கல் யுத்தம் - படத்தின் முன்னோட்டத்திலேயே முழுக்கதையும் வந்து விட்டது. ஆனாலும் 3 மணி நேரம் நம் கவனம் சிதறாமல் பார்க்க வைத்த படம். தனியாக அலசுகிறேன்.

யு - டர்ன் (U-Turn) கன்னடம்:


பொதுவாக இந்த சமூகத்தோடு நான் பொதுவாக இணைந்திருப்பது சாலைப் பயணங்களில்தான். அதைப் பற்றிய ஒரு பதிவின் மூலம்தான் நான் அகில உலக புகழ் வேறு அடைந்தேன். "இதுல என்ன பெருசா நடந்திட போகுது" என்று செய்யும் சில காரியங்கள் ஏற்படுத்தும் விளைவுகள்தான் இந்தப் படம்.

பெங்களூருவில்,ஒரு மேம்பாலத்தில் கொஞ்ச தூரம் போய்த் திரும்ப சங்கடப்பட்டு, நடுவில் வைத்திருக்கும் கல்லை எடுத்து நகர்த்தி விட்டு செல்பவர்கள் திடீரென மரணமடைகிறார்கள். சாலை விதிகளை மீறுவோர் பற்றி ஒரு கட்டுரை எழுத ஒரு பெண் நிருபர் அந்த மேம்பாலத்தை தேர்ந்தெடுக்கிறார். விதிவசத்தால் அவர் பலிகடா ஆகிறார். ஏன், எதனால் என்பதுதான் இந்தப் படம். பொதுவாக ஒரு விபத்து நடந்தால், அடுத்து என்ன நடக்க வேண்டும் என்று நான் நினைத்தேனோ அது இந்தப் படத்தில் நடக்கிறது. கண்டிப்பாக பார்க்கலாம்.

கம்மட்டிப்பாடம் (Kammattipadam) மலையாளம்:


மலையாளத்தின் 'மெட்றாஸ்' திரைப்படம். இதிலும் நாயகனின் நண்பன் கொல்லப்படுகிறான். இறுதியில் வழக்கம் போல தெரிவது, கொன்றவன் எதிரி அல்ல, துரோகி என்பது. ஆனால், இதில் இளம் பருவம் முதல், வாலிபம் மற்றும் வயதானவரை நம்மையும் கூடவே அழைத்து செல்வதுதான் படத்தின் பலம். நண்பியாக இருந்தாலும், சாதி காரணமாக ஒடுக்கப்படுவது, ஆதிக்க சக்தியின் ஆக்கிரமிப்புகள் என பல விஷயங்கள் உள்ளன. சற்று பொறுமையாக பார்க்க வேண்டிய படம்.

ஒழிவுதிவசத்தே களி: படம் என் பொறுமையை மிகவும் சோதித்தது. ஆனால், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது என்பதை இந்தப் படத்தின் மூலம்தான் தெரிந்து கொண்டேன். இதே சாதி வெறி பற்றிய படம்தான், அடுத்த மராத்திய படம்.

சாய்ராட் (Sairat) மராத்தி:


இளையராஜா இரண்டு மராத்திப் படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்று செய்தி வந்தபோது கூட படம் பார்க்க தோன்றவில்லை. ஆனால், இந்தப் படத்தின் இசையமைப்பாளர்கள் இளையராஜாதான் எங்கள் மானசீக குரு என்று பேட்டி கொடுத்த போதுதான், "பார்றா" என்று தோன்றியது. ரொம்ப நாள் கழித்து நல்ல பிரிண்ட் வந்தவுடன்தான் பார்த்தேன்.

"ஆதலால் காதல் செய்வீர்" படம் பார்த்திருந்தால், அதில் கடைசியில் வரும் பாடல், இதிலும் அருமையாக பொருந்தும். படம் சொல்லும் செய்தி, இந்த உலகம் அழிந்தால்தான் அது போன்ற விஷயங்கள் நடக்காமல் இருக்கும். படமும் உங்களுக்கு "காதல்" படத்தை நினைவூட்டும்.

ஆணவக்கொலை, கவுரவக்கொலை என்று என்னென்ன சொன்னாலும் அதன் இன்னொரு பெயர் பொறாமைதான். எப்போதும் நம் உதவி எதிர்பார்க்கும் குழந்தை, நம் உதவி இன்றி ஒரு வேலையை செய்தவுடன் எப்படி உற்சாகப்படுத்துவோம், அதை விட்டு விட்டு அரிவாளா தூக்குவோம். அதையே வளர்ந்த பின் செய்தால் மட்டும் ஏன் வெறுக்கிறோம்.

"அப்பன், ஆத்தா பாத்து கல்யாணம் பண்ணி வைக்க மாட்டாங்களா? எதுக்கு இப்படி அலையனும்" என்று எண்ணினால், மன்னிக்கவும்.

பெல்லி சூப்புலு (Pelli Chooppulu) - தெலுங்கு:


இதுவரை பார்த்த படங்கள் எல்லாமே, சற்று மனதை உலுக்கும் வகை. "கொஞ்சம் ஜாலியா ஏதாவது சொல்லுங்களே" என்றால் இந்தப் படம்தான். "ஆஹா கல்யாணம்" என்று ஒரு படம் வந்ததே, அதே போலத்தான் இதுவும். ஆனாலும் ஓர் 'Feel Good' படம்.

தவறான வீட்டிற்கு பெண் பார்க்க செல்லும் நாயகன், நாயகியுடன் தனியறையில் மாட்டிக்கொள்கிறான். கூடவே ஒரு சிறுவனும் இருப்பதால் 'A' படம் ஆகவில்லை. பின் உண்மை தெரிந்து சென்று விடுகின்றனர். ஆயினும் அவரவர் லட்சியம் என்ன என்பதை அடுத்தவருக்கு உணர்த்தி விடுகின்றனர். அதன் பின் நடப்பதே படம். கண்டிப்பாக பார்க்கலாம்.

"என்னப்பா இவ்ளோ சொன்ன. ஒரு தமிழ் படம் கூட சொல்லலியே" என்பவர்களுக்காக,

பைரவா - பை ரவா அண்ட் டூ உப்புமா.
ரம் - கொடூரம்
யாக்கை - மொக்கை
பகடி ஆட்டம், என்னோடு விளையாடு - ரெண்டுமே போங்காட்டம்
போகன் - ஸ்ஸ், முடியல
சி3 - காது வலி
அதே கண்கள் - இலுப்பைப்பூ.

அவ்வளவுதான்.

Friday, February 24, 2017

அரசியல் மல்லுக்கட்டு!

ஜெயலலிதா இறந்தவுடன் பதிவிட்ட பின்பு. பொங்கல் முடிந்து ஒரு பதிவு போடலாம் என்று நினைத்தால், தினமும் நடைபெற்ற போராட்டங்கள், அரசியல் மாற்றங்களால் எங்கே அசிங்கப்பட்டு விடுவோமோ என்று போடாமலே இருந்தேன். நான்கைந்து முறை திருத்தமும் செய்தேன். இப்போது கூட, சற்று சந்தேகத்துடன்தான் பதிவிடுகிறேன். ஆதியோடந்தமாக பார்ப்போம்.

ஜல்லிக்கட்டு போராட்டம்:

"ஜெயலலிதா இருந்திருந்தால், இப்படி ஒரு போராட்டம் நடந்திருக்குமா, போன 2 வருஷம் மட்டும் நடக்கலியே, அப்ப ஏன் போராட்டம் பண்ணல?" என்றெல்லாம் ஒரு சாரார் கேட்டனர். இதற்கு காரணம் எல்லாம் கேட்டால், பெரியார் காலத்தில் இருந்து வர வேண்டும். எளிமையாக சொல்கிறேனே. 

ஏற்கனெவே மத்திய அரசின் மீதிருந்த கோபம்தான், அதுவும் குறிப்பாக தமிழர்களை மதிக்காமல் இருப்பது, ஹிந்தி திணிப்பு, காவிரி விவகாரத்தில் அலட்சியம் போன்றவை நீறு பூத்த நெருப்பாக எல்லோர் மனத்திலும் இருந்ததுதான், போராட்டமாக வெடித்தது. இதை இன்னும் மக்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை. எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற எண்ணம்தான், போராட்டத்தில் "மோடி ஒழிக" என்று கத்த வைத்தது. (ஐயோ அது நான் இல்லிங்கோ!).

நமது அரசியல்வாதிகள் ஊழல்வாதிகள் என்றாலும் சட்டத்தை மீறாதவர்கள்(?). அதாவது பாலத்தைக் கட்டாமலே, கட்டினேன் என்று சொல்ல மாட்டார்கள். மாறாக, கட்டுவதற்கு யார் யாரிடம் எவ்வளவு வாங்க முடியும் என்றுதான் யோசிப்பார்கள். அதனால்தான் காவிரி விஷயத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவை கர்நாடகம் மதிக்காவிட்டாலும் சும்மா இருந்தனர். எந்த பிரச்சினை வந்தாலும், இங்கு யாருக்கும் எதுவும் நேரவில்லை.

ஆனாலும், இப்படி ஒரு போராட்டம் யாருமே எதிர்பாராதது. அதாவது, இது போராட்டமே அல்ல. எல்லோரும் ஒன்றாக குழுமினர். "காக்கைகள்தானே. இரை தீர்ந்தவுடன் கலைந்து விடும், இல்லையா ஒரு வெடி வெடித்தால் போதும்" என்றுதான் எல்லோரும் எண்ணியிருப்பர். அதே போல ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு நாட்டிலும் கூடியது, உண்மையிலேயே மகிழ்ச்சி.

"அந்த பிரச்சினைக்கு கூடியிருக்கலாமே, இந்த பிரச்சினைக்கு கூடியிருக்கலாமே" என்றவர்களுக்கு பதில், அவையாவும் அரசாங்கமோ, சட்டமோ தீர்க்க வேண்டியவை. இது நம் உரிமை மறுப்பு, இன்னும் சொல்லப் போனால் நம்மை ஏமாற்றிக் கொண்டிருந்தனர் என்பதுதான் முதல் காரணம். இதே போல தினமும் இறங்கினால் அது நீர்த்துப் போய்விடும். மீண்டும் இது போல மக்கள் போராட்டம் நடக்கக் கூடாது என அரசு எண்ணினால், அது போல பிரச்சினைகளை வளரவிடக்கூடாது. அவ்வளவே.

முன்பு ஒரு பதிவில், இது போன்ற முகப்புத்தக போராட்டங்களைக் கிண்டல் செய்திருந்தேன். அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

அதே போல, "இதுவும் கடந்து போகும்" என்ற மனநிலை எல்லா தமிழர்க்கும் பொதுவான குணம். எனவே, அதே போல பொங்கல் வரை எதையாவது சொல்லி ஓட்டி விடலாம் என்று எண்ணியிருப்பர். பொங்கல் முடிந்தவுடன் எப்படியும் அவனவன் வேலையைப் பார்த்துக்கொண்டு போய் விடுவான் என்றுதான் நினைத்திருப்பர்.

ஒரு வேளை, ஜெயலலிதா இருந்து அதை வேறு விதமாக அடக்க முயன்றிருந்தால், வெற்றி கூட பெற்றிருக்கலாம். அதாவது போராட்டத்தின் இறுதியேதான் அப்போது ஆரம்பமாக இருந்திருக்கும்.பின் விளைவுகள் வேறு விதமாக இருந்திருக்கும். நடக்காததைப் பற்றி யோசிக்கத் தேவையில்லை.

சசிகலா:

காஸநோவா 99 என்றொரு நாவல் உண்டு. நான் கூட அதைப் பற்றி எழுதி உள்ளேன். அதே போல, 33 வருடங்கள் காத்திருந்து, சரியான சந்தர்ப்பத்தை நடராஜனும், சசிகலாவும் அடைந்துள்ளனர். ஆனால், அரசியலில் உள்ள அரசியலால் பொன் முட்டையிடும் வாத்தை அறுத்த கதையாகி விட்டது. என்னைப் பொறுத்தவரை ஜெயலலிதா ஒரு பொம்மைதான். இருந்தாலும், அதிகாரமே ஒரு போதைதானே. அது இல்லாமல் எப்படி என்று கூட எண்ணியிருக்கலாம். சசிகலா இன்னும் சற்று பொறுத்திருக்கலாம். பார்ப்போம்.

இப்போது குற்றவாளி என்று தீர்ப்பு வந்து விட்டது. ஜெயாவும் குற்றவாளிதான் என்று குதிப்பவர்கள், ஏன் 2001, 2011, 2016ல் அந்த குற்றவாளியைத் தேர்ந்தெடுத்தோம் என்று யோசிக்க வேண்டும். 2006-2011ல் திமுக ஆடிய ஆட்டம் அப்படி. கருணாநிதி, அதுவே தனக்கு இறுதி முதலமைச்சர் தருணம் என்று எண்ணினாரோ இல்லையோ, அவரை சார்ந்தோர் அப்படி எண்ணி ஆடிய ஆட்டம் 2016 வரை எதிரொலித்தது. 

இப்போது நமக்கு திமுகவை விட்டால் வேறு வழியில்லை என்பது போல தோன்றுகிறது. நமக்கு யாரும் வேண்டாம் என்று காண்பிக்க வேண்டும். என்ன செய்யலாம். பொறுத்திருப்போம். 2018 பாதிக்குள் நான் தேர்தலை எதிர்பார்க்கிறேன். (122-117=5) 6 பேரின் ஆட்டத்தைக் கலைப்பதெல்லாம் சாதாரணம்.

ஒரு நண்பர் கேட்டார். "எதுக்கு தேவையில்லாம அரசியல் எல்லாம் எழுதற. சும்மா காமெடியா நாள் போஸ்ட் போடு" என்றார். இது எனது ஆதங்கம். அவ்வளவே.

Sunday, January 8, 2017

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

கடைசியாக பணம் பற்றி எழுதிய பின்பு, 50 நாட்கள் கழித்து மீண்டும் எழுதலாம் என்று நினைத்தால் முடியவில்லை. அதற்குள் நிறைய நடந்து விட்டது. ஜெயலலிதா மரணம், புயல், புத்தாண்டு என காலம் ஓடிக் கொண்டே இருக்கிறது. 

சொல்ல மறந்து விட்டேனே. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். எழுதுவதற்கு நிறைய விஷயம் இருக்கிறது, ஆசையும் இருக்கிறது. ஆனால், நேரம்தான் இல்லை. சில விஷயங்கள் பற்றி மட்டும் சொல்கிறேன்.

ஜெயலலிதா:

நம்மூரில் எப்போதுமே ஒரு விஷயம் என்னவென்றால், ஒருவர் இறந்து விட்டால், அவரைப் பற்றி நல்ல விஷயங்கள் மட்டுமே பேச வேண்டும். கெட்ட விஷயங்களை மறந்து விட வேண்டும் என்பதுதான். நம் சட்டத்தில் கூட, ஒருவர் இறந்து விட்டால், அவர் பெயர் குற்றப் பத்திரிகையில் இருந்து நீக்கப்படும். இது சரியா என்று விவாதிக்கத் தேவையில்லை.

என்னைப் பொறுத்தவரை, கருணாநிதி, மன்மோகன்சிங், மோடி என யார் வந்தாலும், நான் என் வேலையை பார்த்துக் கொண்டுள்ளேன். இவர்களால் நேரடியாக பாதிக்கப்பட்டதில்லை. ஆனால், ஜெயலலிதா கொண்டு வந்த சட்டங்களால், நேரடியாக ஒரு முறை பாதிக்கப்பட்டு இருக்கிறேன்.

1999ல் கருணாநிதி ஒரு சட்டம் கொண்டு வந்தார். கிராமப்புற பள்ளிகளில் 12வது முடிக்கும் மாணவர்களுக்கு, பொறியியல் சேர்க்கையில் 15 சதவிகித இட ஒதுக்கீடு என்று. நான் அப்போதுதான் 10ஆவது முடித்திருந்தேன். ஆனால், நான் படித்த கிராமத்துப் பள்ளியில் அப்போதுதான் மேல்நிலைக்கல்வி ஆரம்பித்ததால், எதற்கு விபரீதம் என என்னை நாமக்கல் பள்ளியில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கே படித்த படிப்பைப் பற்றி ஏற்கனேவே சொல்லி இருக்கிறேன். சரி விடுங்கள்.

2001ல் 12ஆவது முடித்து, நுழைவுத் தேர்வும் முடிந்து விட்டது. தேர்தல் நடந்தது. அம்மா வந்தார்கள். கருணாநிதியைத் தூக்கி உள்ளே போட்டார்கள். அன்றுதான் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒற்றை சாளர முறைக்கான தரவரிசையை அறிவித்தார்கள். இந்த கொடுமையில் அதை ஒரு நாள் கழித்துதான் தெரிந்து கொள்ள முடிந்தது. அம்மா அறிவித்தார், இனி 15 சதவிகித ஒதுக்கீடு 25 சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது. அதுவும் இந்தக் கல்வியாண்டு முதலே என அறிவித்தார்.

கோயமுத்தூர் அரசு பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் கண்டிப்பாக கிடைக்கும் என நம்பிக்கையோடு இருந்த எனக்கு இடி. அதன் பின் எப்படியோ படித்து, இப்படி இருக்கிறேன். சரி இட ஒதுக்கீடு என்ன ஆனது என்கிறீர்களா? வழக்கம் போல சில பேர் வழக்கு போட்டார்கள். நீதிமன்றம், அந்த 25 சதவிகிதத்தை ரத்து செய்தது. அரசு மேல்முறையீடு செய்யவில்லை. அதன் பின் வந்த கருணாநிதி அரசும், அதைக் கண்டு கொள்ளவில்லை.

ஒருவேளை நான் கிராமத்துப் பள்ளியில் படித்து, அந்த இட ஒதுக்கீட்டில் இடம் கிடைத்திருந்தால், நான் வேறு மாதிரி பேசியிருக்கலாம். அம்மாவிற்கு நன்றி கூட சொல்லியிருக்கலாம். யாருக்குத் தெரியும். இப்போதும் நான் நன்றாகவே உள்ளேன். எங்கள் வீட்டில் அப்போது சொன்னது, "எங்கிருந்தாலும் நல்ல படிச்சா பிரச்சினையே இல்ல". படித்தால்தானே.

அது மட்டுமின்றி, என்னைப் பொறுத்தவரை, கடைசி வரை ஜெயலலிதா ஒரு பொம்மைதான். ஆட்டி வைத்தவர்கள் நிறைய. இப்போது சசிகலா வந்தாலும், அவரும் கைப்பாவைதான். எப்போதும் அமைச்சர்கள் கையில் அதிகாரம் இருந்தாலும், ஆட்சி செய்வது அதிகாரிகள்தான். நடராஜனும் ஒரு அரசு அதிகாரியாக இருந்தவர். ஆட்சியும் கையில் இருந்தால், ஒரு காட்டு காட்டுவார் என்றுதான் தெரியவில்லை. பார்ப்போம்.

வார்த் புயல்:

வார்தா, வரதா, வல்லையா என்றெல்லாம் சொன்னாலும், நான் புயல்டா என்று ஒரு காட்டு காட்டி விட்டது. அந்த திங்கள் காலைதான் ஊரில் இருந்து எல்லோரும் நனைந்து கொண்டே சென்னை வந்தோம். தாமதம் ஆனதால், அலுவலக வண்டி போய் விட்டது. மழை பெய்ததால், எதற்கு என்று வீட்டிலேயே உட்கார்ந்தேன்.

மதியத்திற்கு மேல், ஆடிய ஆட்டத்தில் "தப்பிச்சோண்டா சாமி" என்றுதான் தோன்றியது. அன்று மாலை 6 மணிக்கு அலுவலகத்தில் இருந்து கிளம்பியவர்கள், விடியற்காலை 3 மணி, 4 மணிக்கெல்லாம் வீட்டிற்கு போய் சேர்ந்திருக்கிறார்கள். புயல் என்றால் வழக்கம் போல ஆந்திரா, ஒரிசா பக்கம் போய் விடும் என்று எண்ணியவர்களுக்கெல்லாம் தண்ணி காட்டி விட்டது. சென்னையில் இத்தனை மரங்கள் இருந்தனவா என எண்ணியவர்களுக்கெல்லாம் யுவகிருஷ்ணா பதில் அளித்துள்ளார்.

பொழுதுபோக்கு:

இபோது தினமும் அலுவலக வண்டியில் காலையில் ஒரு மணி நேரம், மாலையில் ஒரு மணி நேரம் பயணம் என்பதால், தினமும் ஒரு படம் பார்த்து விடுகிறேன். வீட்டிலும், இப்போது ஏர்டெல் இணைப்பு வாங்கி, உள்ள டேட்டாவை காலி செய்ய படமாக இறக்கித் தள்ளியாகி விட்டது. கலைக்கு மொழி கிடையாது என்பதால் மானாவாரியாக படம் தரவிறக்கம் செய்தாகி விட்டது.

ஆண்டவன் கட்டளை படத்திற்கு பிறகு, திரையரங்கமும் செல்லவில்லை. அதன் பிறகு வந்த படங்களின் விமர்சனங்கள் எதையும் பார்க்க வேண்டும் என்றே தோன்றவில்லை. விமர்சனங்கள் நன்றாக இருந்ததால், துருவங்கள் 16 படம் திரையரங்கம் சென்று பார்த்தோம். உண்மையிலேயே அருமை.

எப்போதும், யாரோ செய்யும் தவறுகளால், சம்பந்தமே இல்லாத நபர் பாதிக்கப்படுவார். சாலையில் திடீரென ஒருவர் திரும்பும்போது, பின்னால் வருபவர் பதறி நிற்க, அதன் பின்னால் வருபவர் அவர் மேல் இடித்து இருவரும் சண்டை போட்டுக் கொள்வார்கள். உண்மையில் காரணமான நபர் வீட்டில் இருப்பார்.

அதே போல, ஒரு மழை பெய்யும் இரவில் நடக்கும் சில சம்பவங்கள், காவல்துறையின் விசாரணை என 16 மணி நேரத்தில் நடக்கும் கதை. முடிவுறா அந்த வழக்கு, 5 வருடம் கழித்து எப்படி முடித்து வைக்கப்படுகிறது என்பதே கதை. தவற விடக்கூடாத படம். இயக்குனரின் வயது 22 என்பது மிக ஆச்சரியமான விஷயம். தயாரிப்பு அவரது பெற்றோரே என்பது இன்னும் ஆச்சரியம்.

அச்சம் என்பது மடமையடா படம் பற்றி மட்டும் சொல்ல விரும்புகிறேன். உண்மையிலேயே இந்தப் படத்தை படக்குழுவினர் முடித்து விட்டு போட்டுப் பார்த்தார்களா, இல்லை இன்னும் தாமதம் ஆனால் என்ன செய்வது என அப்படியே வெளியிட்டு விட்டார்களா என்றே தெரியவில்லை. ஏன் துரத்துகிறார்கள் என்பதற்கு காரணம் சொல்கிறார்களே, முடியவில்லை. 3 வருடங்களாக சிம்புவைத் தேடுவதைத் தவிர வேறு வேலையே இல்லையா? மேனன் அவ்வளவுதானா? 'எனை நோக்கிப் பாயும் தோட்டா' தலைப்பே படத்தின் விமர்சனத்தைக் குறிக்கிறது என விமர்சனம் வராமல் இருந்தால் சரி.

மற்றபடி, பிறமொழிபடங்களில் நிறைய மனதைக் கவர்ந்தன. அவற்றைப் பற்றி தனியாக ஒரு பதிவில் சொல்கிறேன். எல்லாம் நீங்கள் பார்த்தவையாகத்தான் இருக்கும். இருந்தாலும், அண்ணன் ஒரு பதிவு போடணுமே.