அரசியல் பற்றிய இன்னொரு பதிவு. இதில் இப்போதுள்ள கட்சிகள் பற்றி எனது கருத்தைக் கூறி உள்ளேன். இனி உங்கள் பாடு. முதலில் கட்சிகள் பற்றி பார்ப்போம். திமுக - அதிமுக:
இருக்கும் கோவணத்தையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என நினைப்போர் சத்தியமாக திமுக, அதிமுக கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம். சுய நினைவுள்ள யாரும், திமுக, அதிமுக கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டார்கள். அது மட்டுமில்லாமல் இரண்டு கட்சிகளுக்கும் போதுமான அளவு சந்தர்ப்பங்கள் கொடுத்தாகி விட்டது. திமுக பற்றி 2008 வரை ஓரளவு நல்ல அபிப்ராயம் இருந்தது. ஆனால், அதன் பிறகு நீண்ட குடும்ப ஆக்டோபஸ் கரங்கள் தற்போது சுருண்டுள்ளன, வெட்டப்படவில்லை. பல விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாறுவதற்கு முழு முதல் காரணம் இவர்கள்தான். வெளியில் தெரியாமல் நடந்தது எவ்வளவோ உண்டு. இதில் நடுவில் ஸ்டாலினின் காமெடி வேறு. அவரிடம் ஏதோ ஒன்று, இல்லையில்லை எல்லாமே குறைகிறது. ஜெயலலிதா பற்றி சொல்லவே வேண்டாம். எனக்குத் தெரிந்து ஜெயலலிதா தரையில் இறங்கியது, வைகோ நடைப்பயணம் போகும்போது இறங்கிப் பார்த்தாரே, அப்போதுதான். அதன் பின், அவர் கால் தரையில் பட்டதேயில்லை என நினைக்கிறேன். இப்போது வேட்புமனு தாக்கல் செய்ய வேறு வழியின்றி தரையில் கால் பட வேண்டியதாகி விட்டது. சில உதா'ரணங்கள்': பேருந்து கட்டண உயர்வு. அது சரிதான் வாதிடுபவர்கள், என்ன முன்னேற்றம் அடைந்தது சொல்லுவார்களா? ஓட்டுனர், நடத்துனர் வேலைக்கு ஆளுக்கு 3 லட்சம் வாங்கியதுதான் மிச்சம். இவ்வளவு உயர்வு தேவையற்றது என சொல்லக் காரணம் உண்டு. குறிப்பாக நாமக்கல்லிருந்து சேலம் போக 18 ரூபாயில் இருந்து 32 ரூபாயாக உயர்த்தினார்கள். ஆனால், தனியார் பேருந்துகள் வசூலிப்பதோ 25 ரூபாய்தான். இருக்கைகளும் நன்றாக இருக்கும். ஒளி ஒலி வசதியுடன். மக்கள் எதை தேர்ந்தெடுப்பார்கள்? உண்மை என்னவென்றால், தனியாருக்கு லாபம் கிடைக்கவே இப்படி அரசு பேருந்துகள் உள்ளன. நாமக்கல்லிருந்து சென்னைக்கு சில ஆண்டுகள் அரசு விரைவுப் பேருந்து நிறுத்தப்பட்டது. தாங்கள் செந்தில் பாலாஜியிடம் சொல்லித்தான் அது நிறுத்தப்பட்டது என அவர்களே அதை பெருமையாக சொன்னதுண்டு. அடுத்து மின் கட்டணம். இலவசமே கொடுக்காமல், பழைய மின் கட்டண முறை வைத்தாலே போதுமே. அதாவது 200 யூனிட் வரை ஒரு கட்டணம், 201வது யூனிட்டில் இருந்து அதிக கட்டணம். ஆனால், இப்போது 200 யூனிட்டிற்கு மேல் போனால், முதலாவது யூனிட்டில் இருந்தே அதிக கட்டணம். அதாவது நீங்கள் 200 யூனிட் உபயோகித்தால் 300 ரூபாய் கட்டணம். அதுவே 201 யூனிட் என்றால் 400 ரூபாய். எப்பூடி? மக்கள் நலக் கூட்டணி:
கொஞ்சம் நன் மொழியில் சொன்னால், 'பல வீட்டு சாப்பாடு', இன்னும் சொன்னால், 'பிச்சைக்காரன் எடுத்த வாந்தி' போன்ற கூட்டணி. ஒன்று தவிட்டிற்கு இழுக்க, இன்னொன்று தண்ணிக்கு இழுக்கும். வைகோ மீதும் காலத்தில் நல்ல எண்ணம் இருந்தது. அவர் மகனின் சிகரட் கம்பெனிக்கு வக்காலத்து வாங்கியவுடனே அந்த எண்ணம் போய் விட்டது. ஒரு தலைவர் என்பவர் எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு 'தடை வந்தால்' என சொல்வது கேவலம். விஜயகாந்த் பாவம். முதல்வரை நாங்கள் வெற்றி பெற்ற பின்னால் தேர்ந்தெடுப்போம் என்று சொல்லி இருந்தால், ஒரு வேளை கூட்டணியை நம்பி இருக்கலாம். சுதீஷ் பாராளுமன்ற தேர்தலின் போது, சேலத்தில் வாக்கு எப்படி கேட்டார் என்றால் "நான் மந்திரி ஆனவுடன் இதை, அதை செய்வேன்" என. அதுக்கு நீ மொதல்ல பாராளுமன்ற உறுப்பினர் ஆகணுமேப்பா என்ற மக்களின் மனக்குரல் அவருக்கு கேட்கவில்லை. கூட்டணியும் செல்லாது செல்லாது. பாமக:
இவர்கள் பரவாயில்லையே, நன்றாக சொல்கிறார்களே என நினைத்தாலும், பழைய கதைகள் நினைவுக்கு வருகின்றன. அன்புமணியும் சுதீஷ் போலவே பிதற்றுகிறார். முதலில் சட்டசபை உறுப்பினர் ஆகுங்க, அப்புறம் முதலமைச்சர் ஆகலாம். இதுவரை அவர்கள் வென்ற இடங்களில் எல்லாம் முன்னேறியுள்ளதா என்றால் இல்லை. எங்களுக்கு அதிகாரம் கொடுங்கள், அப்போதுதான் செய்வோம் என்றால் அது விதண்டாவாதம். அது மட்டுமின்றி அதிகார பகிர்வு இருந்தவரையும் அவர்கள் அவ்வளவாக செய்யவில்லை என்பது என் கருத்து. நாம் தமிழர்:
இவர்கள் பற்றி சொல்ல வேண்டாம் என்றுதான் பார்த்தேன். ஆனாலும் சில வரிகள். வந்தேறிகள் நம் இடத்தை ஆளக்கூடாது, தமிழன்தான் ஆழ வேண்டும் என்கிறார். ஒரு நல்லவன் ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் ஒரு நியாயம் உள்ளது. உண்மையில் தமிழன் என்பவன் யார்? பாரதிதாசன் சொன்ன "எங்கு பிறந்தாலும் தமிழன் தமிழன்தான், இங்கு பிறந்தாலும் அயலான் அயலான் தான்" கருத்தில் எனக்கு சுத்தமாக உடன்பாடு இல்லை. நம்மாட்கள் குணம் (நண்டு கதை) உலகம் அறிந்தது. அமெரிக்காவில் உள்ள பல தமிழ்க் குழந்தைகளுக்கு (எல்லோரும் அல்ல) தமிழ் சுத்தமாக வராது. அவர்களே அவர்களை 'தமிழன்' என்று சொல்லிக்கொள்வதில்லை. விஜய் டிவியில் ஒரு வார்த்தை ஒரு லட்சம் நிகழ்ச்சி பார்த்திருப்பீர்கள். சில வாரங்களுக்கு முன், அதில் வெற்றி பெற்ற மாணவர்-ஆசிரியை இருவருக்குமே தமிழ் தாய்மொழி கிடையாது. ஆனாலும் தமிழர்களே வெட்கப்படும் அளவிற்கு அவர்களின் உச்சரிப்பு இருந்தது. அவர்கள் வீட்டில் கூட தமிழ் பேசுவது கிடையாது. அது தேவையும் இல்லை. ஆனால், வெளியில் மற்றவர்களுடன் தமிழில் சரளமாக உரையாட முடிகிறதே. சரி, அதை விடுங்கள், சொந்த ஊர் நாமக்கல் என்றாலும், சென்னையில் பிறந்து வளர்ந்த ஆளுக்கு நாமக்கல்லின் பிரச்சினைகள் எப்படித் தெரியும், அதுவே, அங்கேயே பிறந்து வளர்ந்த வேற்று ஆளாக இருந்தாலும், என்னென்ன பிரச்சினைகள் என்றாவது தெரியும் அல்லவா. அதே போல தமிழன்தான் தமிழகத்திற்கு முதல்வராக வர வேண்டும் என்றால், கடலூருக்கு கடலூர்க்காரன்தான் சட்டமன்ற உறுப்பினராக வர வேண்டும். இன்னொரு முக்கியமான விஷயம், தமிழன் என்பவன் பொதுவாக சாதிக்குள் அடங்குபவன். அவன் முதல்வராக வந்தால், அவனது சாதிக்குத்தான் முதலில் முக்கியத்துவம் தருவான். இது எல்லோருக்கும் தெரியும். முடிந்தால் 'தமிழர்கள் மட்டும் எனக்கு ஓட்டு போடட்டும், மற்றவர்கள் போட வேண்டாம்' என்று சொல்லுவாரா? கடைசியாக ஒன்று. 'தமிழன்தான் ஆள வேண்டும் என்கிறார். நாம் தேர்ந்தெடுப்பது மன்னரை அல்ல. மக்கள் பிரதிநிதியை. அதே போல நீங்கள் ஆளப்போவது ஆயுசுக்கும் அல்ல. ஐந்து வருடங்கள்தான். பாஜக, விடியல் கூட்டணி பற்றியெல்லாம் நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. "இருக்கிற எல்லோரும் மோசம்னு சொல்ற. அப்புறம் யாருக்கு ஓட்டு போடறது, நோட்டவுக்கா?" என்கிறீர்களா. இன்னொரு பதிவில் யாருக்கு வாக்களிக்கலாம் என்ற எனக்கு தோன்றியதை சொல்கிறேன்.
கொஞ்சம் வித்தியாசமாக மொழிக்கொன்றாக ஒரு படம் பார்ப்போமே என நினைத்தேன். விளைவு, ஒரு பதிவு. ஜாலி LLB என்கிற மனிதன் - ஹிந்தி: எப்போது இணையம் வந்ததோ, அப்போது இருந்தே ஒரு படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது என்றால், அதை உடனே அதனை தரவிறக்கம் செய்து பார்த்து விடுவேன். தமிழில் தோன்றினால் பார்ப்பேன். அதனாலேயே தமிழில், அது நன்றாகவே இருந்தாலும் பிடிப்பதில்லை. இப்போது 'தோழா' படம் கூட அங்கங்கே பார்த்தேன். எனக்கு என்னவோ பிடிக்கவில்லை. கண்டிப்பாக காதல் இருந்தே ஆக வேண்டும் என்று கட்டாயமா என்ன. The Intouchables படத்தில் வருவது போல நாகார்ஜுனாவிற்கு திருமண வயதில் பெண் இருந்தார் என வைத்திருக்கலாமே, என்றுதான் தோன்றியது. சரி பரவாயில்லை. நம்ம உதயநிதி படத்தை தொலைக்காட்சியில் கூட பார்க்க முடியாது, எனவே, மனிதன் படத்தை ஹிந்தியிலே பார்த்து விட்டேன்.
ஒரு பணக்கார பையன் ஏற்படுத்தும் விபத்து. அது நீதிமன்றத்தில் எப்படி விளையாடுகிறது, இதில் குடி போதையில் வண்டி ஓட்டி, நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றிக் கொன்ற ஒரு பணக்காரன், அவனுக்காக வாதாடும் இந்தியாவின் பெரிய வக்கீல், இதில் ஆர்வக்கோளாறில் உள்ளே வரும் இளம் வக்கீல், இவர்களுக்கு இடையேயான கதை.
படம் பாதிக்கு மேல், நீதிமன்றத்தில்தான் நடக்கிறது. அவ்வப்போது நாம் கேள்விப்பட்ட, மருத்துவரின் 15 வயது மகன் பிரசவம் பார்த்தது, இசையைத் திருடியவர்கள் மீது வழக்கு என சில நகைக்க முடியாத நகைச்சுவைக் காட்சிகள். அவ்வளவு ஒன்றும் நன்றாக இல்லை எனலாம். சத்தியமாக உதியநிதிக்கு சரியாக இருக்கும் என்று தோன்றவில்லை. படத்தில் ஒளிப்பதிவு கோணங்கள் கூட மாறியது போல தெரியவில்லை. எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு சந்தேகம். ஒரு இயக்குனரின் வேலை என்ன. தன்னுடைய கதை, அடுத்தவருடைய கதை என எதுவாக இருந்தாலும், கதை, திரைக்கதை, வசனங்களை கொடுத்து இயக்கினால் கூட சரி எஸ்.பி.முத்துராமன் போல. ஆனால், ஒரு வேற்று மொழிப்படம், அதை அப்படியே ஆட்களை மட்டும் மாற்றி, வசனங்களை அப்படியே தமிழ்ப்படுத்துவதற்கு எதற்கு ஒரு பெரிய இயக்குனர். நண்பன் படம் பார்த்தது முதலே எனக்கு இந்த சந்தேகம். யாராவது தெளிவாக விளக்கினால் பரவாயில்லை. இந்தப் படத்தின் இறுதிக் காட்சியில் உணர்ச்சியும், கண்ணீரும் பொங்க நாயகன் நீண்ட வசனம் பேசும் காட்சி வரும். அதில் உதயநிதியைக் காண எனக்கு சக்தி இல்லையப்பா. எனக்குத் தெரிந்து தமிழுக்கும், ஹிந்திக்கும் தெரிந்த ஒரே வித்தியாசம், ஹிந்தியில் நாயகன் மீரட்டில் இருந்து டெல்லி போவார். நாயகியிடம் 2 மணி நேரத்தில் தேவையென்றால் வந்து விடுவேன் என்பார். இந்தப் படத்தில் பொள்ளாச்சியில் இருந்து சென்னை போவாராம். தூரமும், நேரமும் அதிகம். படத்திலும் 2 பாட்டை வைத்து நேரத்தை இழுத்து விடுவர் என நினைக்கிறேன். ஆக்சிடெண்ட் (Accident) - கன்னடம்: ஜாலி LLB பார்த்தவுடனே இந்தப் படமும் பார்க்க வேண்டும் எனத் தோன்றியது. கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்பே பத்தரிக்கை, அரசியல் என எல்லோரையும் கிழி கழி என கிழித்திருப்பார்கள். அதிலும் இதே கதைதான். போதையில் விபத்தை ஏற்படுத்தும் பெரிய அரசியல்வாதியின் மகன், அதைக் கண்டு பிடித்தும் எதுவும் செய்ய முடியாமல் தவிக்கும் காவல்துறை (கண்டு பிடித்த அதிகாரியை கட்டாய விடுமுறையில் அனுப்புவது, ), அதை வைத்து எப்படியாவது பரபரப்பை உண்டாக்க நினைக்கும் பத்திரிக்கையாளர் (அவர் நீதிக்காக போராடுவதை விட இது ஒரு சென்சேஷனல் நியுஸ் என பரபரப்பார், விபத்தில் தப்பியவரை அதை நினைவூட்டி அழ வைத்து படம் எடுத்துக் கொள்வார்), விசுவாசம், பணத்திற்காக சிறை செல்லும் வேலைக்காரர், அதையும் அரசியல் ஆதாயத்திற்கு உபயோகிப்பது என பாத்திரங்களும், அட்டகாசமான திரைக்கதையும் உள்ள படம். இசை இளையராஜா என்பதால்தான் இந்தப் படமே எனக்கு தெரிய வந்தது.
பாடல்கள், குலுக்கல் நடனம் என எதுவும் இல்லாமல் 1980களில் படமா என ஆச்சரியமாக உள்ளது. இப்படத்தை இயக்கிய சங்கர் நாக் ஒரு விபத்தில் இறந்து போய் விட்டார். அதற்கு தனியாக பின்னணி காரணங்களை கன்னடக்காரர்களிடம் கேட்டால் கதை கதையாக சொல்வார்கள். எனக்கு கொஞ்சம் கொஞ்சம் கன்னடம் தெரியும். மற்றபடி மொழி ஒரு பிரச்சினையாக இருக்காது. நம்பிப் பார்க்கலாம். சார்லி - மலையாளம்: எனக்கு மௌன ராகம் கார்த்திக்கின் நவீன அவதாரம் போல தோன்றியது, இந்தப் படம் பார்த்தபோது. ஒரு வேளை இந்தப் படத்தை தமிழில் எடுத்தால் அந்த கார்த்திக்தான் சரியான பொருத்தம். அடுத்த நொடி பற்றிக் கவலைப்படாமல், மற்றவர்களை சந்தோஷப்படுத்தி வாழும் மனிதனும், அவனைத் தேடி அலையும், அதே போன்ற பெண்ணைப் பற்றியுமான கதை. தமிழில் சரியாக வராது.
மலையாளத்தில் மட்டும் எப்படி இப்படி கதையே இல்லாமல், அல்லது ஒரு வரிக்கதையை மட்டும் வைத்து நல்ல படம் கொடுக்கிறார்கள் என தெரியவில்லை. இதே போல பெரிதாக கதை இல்லாமல், ஆனாலும் ரசித்த படங்கள் ஓம் சாந்தி ஒஷானா, மகேஷிண்டே பிரதிகாரம் போன்றவை. தமிழில் இதே போலவே எனக்கு தெரிந்த ஒரே படம் களவாணி தான். க்ஷணம் (Kshanam) - தெலுங்கு: துணை எழுத்து (?), சரி விடுப்பா, சப் டைட்டில் இல்லாமல்தான் பார்த்தேன். அவ்வளவாக புரியவில்லை. மலையாளம் அவ்வளவு பிரச்சினை இல்லை. தெலுங்கு கொஞ்சம் கஷ்டம். ஆனாலும் ஒரு நல்ல படம். மீண்டும் தெளிவாக பார்த்து, நன்றாக இருந்தால், மீண்டும் இதைப்பற்றி எழுதுகிறேன். தெலுங்கு புரிந்து கொள்வேன், நல்ல படங்கள் பார்ப்பேன் என நீங்கள் நினைத்தால், கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமே இது. சிபிராஜ் தமிழில் நடிக்கப் போகிறாராம். எனவே, சீக்கிரம் தெலுங்கிலேயே பார்த்து விடுங்கள். தி ஹேட்புல் எய்ட் (The Hateful Eight) - ஆங்கிலம்: இந்தப் படமும், தி ரெவெனெண்ட் (The Revenent நான் செத்துப் பொழச்சவன்டா, தமிழில் சரியா?) படமும் தரவிறக்கம் செய்து விட்டாலும், பார்க்காமலே இருந்தேன். இரண்டு படங்களுமே இரண்டரை மணி நேரத்திற்கு அதிகம் என்பதால், கொஞ்சம் சோம்பேறித்தனம். ஆனாலும், ஒரே நாளில் இரண்டு படங்களையும் அடுத்தடுத்து பார்த்து முடித்து விட்டேன். ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாக போனாலும், போகப் போக சுவாரஸ்யமாக இருந்தது. அதுவும், இந்த சென்னை வெயிலுக்கு, இந்த இரண்டு படங்கள் பார்க்கும் போது, எனக்கே சற்று குளிரத்தான் செய்தது.
டிகாப்ரியோ படம் அமைதி என்றால், டரண்டினொ படம் அதிரடி. அவரது பாணி நக்கல் வசனங்களும் முன்னதை விட சற்று சுவாரஸ்யம் அதிகமாகவே இருந்தது. ஒரு பெண் கைதி,அவளை தூக்கிலிட கூட்டிப் போகும் ஒருவர், வண்டி ஓட்டுபவர், நடுவில் உதவி கேட்டு, உடன் வரும் இருவர், செல்லும் வழியில் தங்கும் விடுதியில் ஏற்கனவே இருக்கும் மூவர், விடுதியின் உதவியாளர் என எட்டு பேர். கணக்கு இடிக்குதே என்கிறீர்களா, இவர்களில் நால்வர் அந்த பெண் கைதியை தப்பிக்க வைக்க வந்திருப்பவர், இருவர் அப்பாவி, ஒரு ஆள் ஒளிந்து கொண்டு என் கணக்கில் வரவில்லை. என சுவாரஸ்யமாக போகும் படம். குழம்ப வேண்டாம். பார்த்து ரசியுங்கள். வன்முறை அதிகம். அதனால், பாருங்கள். ரசிக்க முடியுமா என தெரியவில்லை. கண்டிப்பாக இரண்டு படங்களையும் பார்த்திருப்பீர்கள், இல்லையென்றாலும் பார்க்கலாம். தெறி - தமிழ்: கடைசியாக திரையரங்கம் சென்று பார்த்தாகி விட்டது. மகளுடன்தான் போனேன். முதல் முறையாக அழாமல், தூங்காமல் பார்த்தாள். எனக்குத்தான் தூக்கம் வந்தது. சில காட்சிகளில் சற்றே பயந்தாலும், பெரிதாக அழவில்லை. ஒரு வார நாள், அதுவும் திங்களன்று, நாமக்கல் போன்ற ஊரில், பாதிக்கு மேல் கூட்டம், அதுவும் படம் வந்து 10 நாள் கழித்து. அனைவரும் குழந்தை குட்டியுடன். ஏன் வெயில் இப்படி அடிக்காது, மழை இப்படி ஊத்தாது?
நமக்கு என்னத்த சொல்ல. படத்தில் புதிதாக ஒன்று கூட இல்லை. முன்பெல்லாம் பொதிகையில் திரை மாலை என்ற நிகழ்ச்சி போடுவார்கள். ஒவ்வொரு படத்தில் இருந்தும் சில காட்சிகள் அல்லது பாடல்கள் என. அதே போலவே இருந்தது. கேரளாவில் விஜயை ஒருவர் பழைய பெயர் சொல்லிக் கூப்பிட்டதும் ஒரு முக பாவனை காமிப்பார் பாருங்கள். முடியல. பொதுவாக மற்ற படத்தில் இருந்து சுட்டாலும், படம் பார்க்கும்போது அது நம் நினைவுக்கு வராமல் செய்ய வேண்டும். தனி ஒருவன் போல. ஆனால், இது படத்தின் பெயர் உட்பட அனைத்து படங்களும் நினைவுக்கு வருகின்றன. அப்படி இல்லையென்றாலும் அவர்களே நினைவூட்டுகிறார்கள். ("பெரிய வேட்டையாடு விளையாடு கமலு"). தான் செய்யும் வேலை பிடிக்காத, வருங்கால மாமனாருடன் பேசும்போது திடீரென அடியாட்கள் கொள்ள வர, அவர்களைத் தாக்கும்போது மாமனார் கோவித்துக் கொண்டு செல்லும் காட்சி எதில் என முதலில் நினைவுக்கு வரவில்லை. பிறகு வந்து விட்டது. முதல்வன். உண்மை என்னவென்றால், வேதாளம் படத்திற்கும், இந்தப் படத்திற்கும் 2 வித்தியாசங்கள்தான். 1. அதில் ரவுடி, இதில் போலிஸ். 2. அதில் தங்கை, நினைவுகள் போய் விடும். (நியாயமாக கெட்டவர்களிடம் இருந்து ஒரு பெண்ணைக் காப்பாற்றினால் காதல்தான் வர வேண்டும். வித்தியாசமாக இந்தப் படத்தில் அண்ணன் பாசம் வரும்.) தெறியில் மனைவி, இறந்து விடுவார். ஒரு ஆளுக்கு ஒன்று இரண்டு இரண்டு படங்களும் பிடிக்கும் அல்லது இரண்டுமே பிடிக்காது. ஒன்றுதான் பிடிக்கும், ஒன்று பிடிக்காது என்றால், அது பொய். படத்தில் பின்னணி இசை பரவாயில்லை. பாடல்கள் மொக்கை. அது ஏன் சைந்தவி பாடும் பாடல்கள் எல்லாம் ஒரே மாதிரி இருக்கிறதோ தெரியவில்லை. என் பெண்ணிற்கு பிடித்ததே. விஜய் 60க்கு காத்திருக்கோம்.
என்னுடைய அருமை பெருமைகளைப் பற்றிப் படிக்காதவர்கள் இப்போது போய்ப் படித்து விடுங்கள். அப்புறம் என்னைக் குற்றம் சொல்லக் கூடாது. விமர்சனம்: கடைசியாக பசங்க - 2 படத்திற்கு குடும்பத்தோடு திரையரங்கம் சென்றேன். மகள் படம் பார்ப்பாள் என நினைத்தால் பாதியில் தூங்கி விட்டாள். ஆயினும் எங்களை ஒன்றும் தொந்தரவு செய்யவில்லை. அதன் பின் எந்த படமும் திரையரங்கம் சென்று பார்க்க முடியவில்லை. இது ஒரு சாக்குதான். 10 நிமிடம் நடந்தால் வெற்றி திரையரங்கம். வண்டியில் சென்றால் இரண்டே நிமிடம். ஆனாலும் ஏதோ ஓர் சோம்பேறித்தனம். ரஜினி முருகன் படம் பார்க்கலாம் என நினைத்தால் அந்த நேரத்தில் மகள் திரையரங்கம் செல்லக் கூடாது, வேண்டுமானால் மடிக்கணினியில் எப்போதும் போல(?) பார்க்கலாம் என்று சொல்லி விட்டாள். திரையரங்கம் தான் செல்ல வேண்டும் என்றால், அப்போது ஏன் மற்ற படங்களை மடிக்கணினியில் பார்த்தீர்கள் என்று கேட்டாள். வாயடைத்துப் போய் விட்டது. அப்போதுதான் உறைத்தது, நாம் ஏனோதானோ என செய்யும் காரியங்கள் எப்படி குழந்தைகள் மனதில் தவறாக பதிகின்றன என்று. அப்போதே முடிவு செய்தேன், இனி அடிக்கடி திரையரங்கம் செல்ல வேண்டும் என்று. ஆனால், பல படங்கள் குழந்தைகளை கூட்டிக் கொண்டு போக முடியாதபடி உள்ளன. இதுவரை பார்த்த வரையில் மனத்தைக் கவர்ந்தவை என்றால், இறுதி சுற்று, விசாரணை, சேதுபதி மற்றும் பிச்சைக்காரன்தான். என் மகளுக்கு தெரிந்தது விஜய், சிவகார்த்திகேயன்தான். எனவே, தெறி, தூத்தேறி என்று சொல்லும் வகையில் இருந்தாலும், அதை குடும்பத்துடன் திரையரங்கம் சென்று பார்க்கலாம் என்றுதான் உள்ளேன். இவர்கள் இருவரும் அதிகம் அலட்டிக் கொள்ளாமல், வித்தியாசம் காட்டாமல் நடிப்பதால், குழந்தைகள் அவர்களை சுலபமாக எந்தப் படமாக இருந்தாலும் அடையாளம் கண்டு கொள்கிறார்கள் போல. ஊரில் 'ஜங்கிள் புக்' படத்திற்கு கூட்டிக் கொண்டு போயிருக்கிறார்கள். பாதிப்படத்தில், அதிலும் பாம்பு வரும் காட்சியில் கதறியழ ஆரம்பிக்க, உடனே கிளம்பி வந்து விட்டார்கள். ஆனாலும் இன்று புலி படத்தை பயப்படாமல் பார்த்தாள். என்னவோ போடா மாதவா. ஹலோ நான் பேய் பேசறேன்: மனைவியும் மகளும் ஊருக்குப் போய் விட்டதால், மீண்டும் தனிமை வாழ்க்கை. எனவே, செய்த பாவங்களுக்கு பலனாக திரையரங்கம் சென்று படம் பார்ப்போம் என இந்தப் படத்திற்கு போனேன். கிட்டத்தட்ட 'யாமிருக்க பயமே', 'டார்லிங்' படங்களின் அடுத்த பாகம் போலத்தான் இது. படத்தின் முதல் பாதிக்கும், இரண்டாம் பாதிக்கும் சம்பந்தமே இல்லை. படத்தின் ஆரம்பத்திலேயே கருணாகரன், ஓவியா சம்பந்தப்பட்ட ஒரு காட்சியாவது இருந்திருக்கலாம். ஆனாலும், அந்த அந்த கதைப் பாடல், அட்டகாசம். புதிய நியமம்: எதேச்சையாகவே இந்தப் படம் பார்க்க நேர்ந்தது. மோகன்லால் 'த்ரிஷ்யம்' படம் மூலம் வெற்றி அடைந்தது போல, அதே வெற்றியை அடைய வேண்டும் என அதே போன்ற கதையை எடுத்து மம்முட்டி நடித்திருப்பார் போல. இவ்விரு படங்களின் ஒற்றுமை பற்றி ஒரு கட்டுரை தினமலரில் வந்துள்ளது. இந்தப் படத்தில் வரும் வில்லன் ஒருவர், தமிழன், துணி தேய்ப்பவர். அதே போல, மம்முட்டி ஒரு தள்ளு வண்டி கடைக்காரரிடம் (கருப்பாக இருப்பார்) அண்ணாச்சி என தமிழில் கேட்க, அவரோ, "தோலின் நிறம் பார்த்து ஆளை தவறாக எண்ணாதே" என்பார். மலையாளப் படங்களில் இது சகஜம்தான், என்றாலும் இன்னும் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. முன்பெல்லாம் முழுக்க முழுக்க தமிழர்கள் வில்லனாக மட்டுமே காட்டப்படுவார்கள். இப்போது போனால் போகிறது என அவ்வப்போது நல்லவர்களாக காட்டபடுகிறார்கள். இதிலும் நயன்தாரா தமிழ்தான் (பாதி?). கருத்து கந்தசாமிகள்: முன்பெல்லாம் பொதுவாக பெட்டிக்கடையில் பேப்பர் படித்து விட்டு, அங்கேயே நான்கு பேர் சேர்ந்து வெட்டி நியாயம் பேசி விட்டு, சண்டை போட்டு விட்டு சென்று விடுவார்கள். ஆனால், இப்போதெல்லாம் ஆன்-லைனில் படித்து விட்டு கருத்து போட முடிவதால், நிறைய கருத்து கந்தசாமிகள் வந்து விட்டனர். நிறைய கருத்துகள் வருவது தினமலர், விகடன், தமிழ் ஹிந்து போன்றவைதான். இதில் தமிழ் ஹிந்துவில் ஓரளவு நியாயமாக இருக்கும், அல்லது அவர்கள் தேவையில்லாத சர்ச்சை ஏற்படுத்தும் கருத்துக்களை அனுமதிப்பதில்லை என நினைக்கிறேன். தட்ஸ்தமிழில் கேட்கவே வேண்டாம், நா, காது, கை என உடம்பின் அனைத்து பாகங்களும் கூசும் அளவிற்கு வார்த்தைகள் இருக்கும். முன்பு ஒரு முறை அவர்கள் இது பற்றி காவல் துறையிடம் புகார் அளித்துள்ளோம் என்றார்கள். அது என்னவாயிற்று என்றே தெரியவில்லை. விகடனில் ஒரு சிலர் உள்ளனர். செய்தி எதைப்பற்றி இருந்தாலும், மக்கள் பொதுவாக என்ன கருத்து இடுவார்களோ அதற்கு எதிர் வினையாக கருத்திடுவது. இன்னும் சில பேருக்கு அதில் எதிர்மறை ஓட்டு போடுவதே வேலையாக வைத்திருப்பார்கள். தினமலர் பற்றி சொல்லவே வேண்டாம். பத்திரிக்கையே பொதுவாக குறிப்பிட்டவர்களுக்கு ஆதரவாக இருக்கும். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல இருக்கும். குற்றம் சார்ந்த செய்திகளில், குற்றவாளி முஸ்லீமாக இருந்தால், குற்றவாளி பற்றி ஒருமையில் இருக்கும் (செய்தான், வந்தான், போனான் என). அது கொலை, கொள்ளை. வழிப்பறி, தீவிரவாதம் எதுவானாலும் சரி. ஆனால், மற்றவர்கள் என்றார், மரியாதையாக இருக்கும் (செய்தார், வந்தார், போனார் என). இது போக தீவிரவாதம் என எந்த செய்தி வந்தாலும், வாசகர் கருத்து எல்லாமே "இவனுங்கள நம்ம நாட்ட விட்டு தொரத்தனும், இந்தியா இந்துக்களுக்குத்தான்" என்றெல்லாம் கருத்துகள் வரும். இங்கு அரசியல் (தவிர வேறெதுவும்) பேசாதீர்: ஏற்கனவே சில அன்பர்கள் 'நமக்கெதுப்பா அந்த கண்றாவி எல்லாம். நீ பாட்டுக்கு ஜாலியா நாலு பதிவு எழுது. இந்தா, இளையராஜா தேசிய விருது வாங்கி இருக்காரு. அதப்பத்தி எழுது. நமக்கெதுக்கு அரசியல்' என்றெல்லாம் சொல்லி இருந்தார்கள். ஆனாலும், நானும் ரவுடிதான், எனக்கும் எல்லாம் தெரியும் என நிரூபிக்க வேண்டி இருப்பதால் இந்தப் பகுதி. இப்போதெல்லாம் அரசியல் என்பது தெளிவான வியாபாரம் ஆகி விட்டது. பொதுவாக 'ஆத்துல போற தண்ணில, நாம கொஞ்சம் அள்ளிக்கிட்டா என்ன' என்ற மனநிலையில் இருந்தவர்கள் இப்போது 'ஆத்துல தண்ணி மாதிரி ஏதாவது போனா போதும், அதனால வேணா நாம தண்ணிய குடிச்சிட்டு மூ___ தை விடுவோம்' என்று ஆகி விட்டார்கள். கொள்கை கோட்பாடு என்பதெல்லாம் கிடையாது. (இதெல்லாம் ஆரம்பத்துல இருந்தே கெடையாதேப்பா). சரி விடுங்க. ஒரு சில கருத்துக்களை சொல்லி விடுகிறேன். ஞாபகம்/மறதி: இவை இரண்டுமே நம் மக்களுக்கு இருப்பதால்தான் அரசியல்வாதிகளுக்கு லாபம். எதையெல்லாம் மறக்க வேண்டுமோ, அதையெல்லாம் நினைவில் வைத்துக்கொள்வது, எதையெல்லாம் நினைவில் வைக்க வேண்டுமோ, அதையெல்லாம் மறந்து விடுவது. இதுதான் பெரும் பிரச்சினை. இவற்றில் ஊடகங்களின் பங்கும் உள்ளது. அது தனி. ஐந்து வருடங்களுக்கு முன் கூட தேவையில்லை, இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த மக்களவை தேர்தலின் போது, ஒவ்வொரு கட்சியும் என்ன வாக்குறுதி கொடுத்தார்கள், வென்றிருந்தாலும், தோற்றிருந்தாலும், அந்த பிரச்சினைகளுக்கு என்ன நடவடிக்கை அவர்கள் சார்பில் எடுத்திருந்தார்கள் என்பதை நினைவு கூர்ந்தாலே போதுமே. இன்னும் வேண்டுமானால், எல்லா நாளிதழ்கள், வார இதழ்களும் இப்போது 2006ம் ஆண்டு முதலான மின்னணு இதழ்களை வைத்துள்ளன. அதை படித்துப்பாருங்களேன். இப்போது இருக்கும் ஒரு கட்சி மீதும் உங்களுக்கு நல்ல எண்ணமே வராது. அப்படியே எல்லாம் நினைவூட்டினாலும், தேர்தலின்போது வாக்குப்பெட்டி முன் நிற்கும்போது, நினைவுக்கு வருவது, இரட்டை இல்லை, உதய சூரியன், கை, போன்றவைதான். ஒவ்வொரு தேர்தலுக்கும், அனைத்து கட்சிகளுக்கும் சின்னங்கள் மாற்றப்பட வேண்டும் என்று மட்டும் சொல்லிப்பாருங்கள். மக்கள் பிரச்சினைக்கு ஒன்று கூடாத இந்தக் கட்சிகள் கதறிக்கொண்டு ஓரணியில் திரண்டு போராட்டம் நடத்தும். சகாயம்: 'அவருதான் அரசியலுக்கு வரலேன்னு சொல்லிட்டாரே?' என்கிறீர்களா. வேறு ஒன்றுமில்லை. நிறைய பேர் சகாயம் அரசியலுக்கு வர வேண்டும் என்று சொல்கிறார்கள் அல்லவா. உண்மையில் மக்கள் பிரதிநிதிகள், மந்திரிகள் அனைவருமே உயிருள்ள ரப்பர் ஸ்டாம்புகள் தான். ஒரு திட்டத்திற்கு இறுதி ஒப்பம் மட்டும்தான் அவர்கள் கொடுப்பார்கள். ஆனால், உண்மையில் எல்லாவற்றிற்கும் பின்னால் இருப்பது அதிகாரிகள்தான். அரசியலுக்கு வருவது சம்பாதிக்கத்தான். ஆனால், எப்படி சம்பாதிப்பது என்ற வழி, அதிகாரிகளுக்குத்தான் தெரியும். மந்திரி ஆவது அதிகார சுகத்திற்காகத்தான். மந்திரியாக இருக்கும்போது பெரிய அதிகாரிகள் கை கட்டி முன்னால் நிற்பார்கள். ஆனால், பதவி இல்லையென்றால் நாய் கூட மதிக்காது. ஆனால், அதிகாரிகள் அங்கேயே இருப்பார்கள். சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் வாசிக்கும் அறிக்கைகள் எல்லாம் அம்மா என்ன வீட்டில் இருந்தா எழுதுகிறார்? எல்லாமே அதிகாரிகள் கொடுப்பது தான். ஓரளவு நல்ல அதிகாரியாக இருந்தால் நெல்லுக்கு (அரசியல்வாதி/அதிகாரி) பாயும்போது சற்று புல்லுக்கும் (நாமதான்) பாயட்டுமே என ஒரு சில நல்ல திட்டங்களை சொல்லலாம். பல திட்டங்கள் பணம் அடிக்க மட்டும். சில அறிவிப்பிற்காக மட்டும். உண்மையில் அதிகாரிகளுக்குத்தான் ஆயுள் அதிகம். அரசியல்வாதிகளுக்கு 5 வருடங்கள்தான். அதுவும் அம்மா ஆட்சி என்றால், எப்போதென்றே தெரியாது. எனவேதான், சகாயம் சொன்னதையே நானும் சொல்கிறேன். அரசியல் வேண்டாம். அதிகாரி ஆகுங்கள். "இதுல அரசியலே இல்லையேப்பா? பொதுவாத்தான சொல்லி இருக்க" என்கிறீர்களா? சரிதான். ஒவ்வொரு கூட்டணியைப் பற்றிய என்னுடைய கருத்துகளை தனிப் பதிவாக இடலாம் என உள்ளேன். போடலாமா, வேண்டாமா? என்ற குழப்பம் உள்ளது. இன்னும் ஒரு மாதம் உள்ளதே, பார்ப்போம்.
நான் பதிவு எழுதுவது எனது நெருங்கிய வட்டத்தில் மிக சிலருக்கே தெரியும். அவர்களும் ஆரம்ப காலங்களில் படித்ததோடு சரி. இப்போது யாரும் சீண்டுவதில்லை. நானும் ஏனோதானோ என்றுதான் எழுதிக் கொண்டு இருந்தேன். இப்போதெல்லாம் 140 எழுத்துக்களில் கீச்சுகளும், புகைப்பட கிண்டலும் வந்து விட்டதால், "இவ்ளோ பெருசா எழுதியிருக்க, யாரு படிப்பா" என்ற கிண்டல்கள் வந்தன. ஆனாலும், எனக்கென்னவோ பெரிதாக எழுதினால்தான் பிடிக்கும். எனவே சற்று சற்று சுணங்கி, கடமைக்காக சில பதிவுகள் போட்டேன். ஆனால், இப்போது உற்சாக பானம் அருந்தியது போல உள்ளது. இதே ஆர்வத்தில் இன்னும் கொஞ்ச நாள் ஓடும். என்னுடைய பதிவுகளை இன்னும் படித்து வரம் எனது நண்பன் சிவா மட்டும்தான். ஏனென்றால் அவனும் ஒரு பதிவர். என்னுடைய வலைப்பூ பற்றி ஹிந்துவில் வந்ததை முதலில் பார்த்து சொன்னதே அவன்தான். நண்பேன்டா! என்னுடைய வலைப்பூ பற்றி யாராவது சொன்னார்களா அல்லது அவர்களே பார்த்தார்களா என தெரியவில்லை. ஆனாலும், எனக்கு ஆதரவளித்து வரும் அனைவருக்கும் மிக்க நன்றிகள்.
அப்புறம் அந்த கட்டுரைல ஒரு ரெண்டு ஓட்டு 'கோவம்'னு குத்தியிருக்குற செவப்பு ஆடுங்க யாருன்னுதான் தெரியல. நல்லா இருங்கப்பா.
நான் இந்த நிகழ்ச்சிக்கு எல்லாம் போகவில்லை. சும்மா ராஜாவின் சில அதிகம் கேட்டிராத பாடல்களைப் பகிரலாம் என்பதற்காகவே இந்தப் பதிவு. அந்தரங்கம் யாவுமே - ஆயிரம் நிலவே வா:
இந்தப் பாடலை வானொலியில் கேட்டதாக எனக்கு .நினைவில்லை. பாடல் வரிகள் கூட காரணமாக இருக்கும். இந்தப் படத்தில் வரும் இன்னொரு பாடலான தேவதை இளம் தேவி, ஒரு ஹிட்டான பாடல். ஆனால், இதையும் ஒரு முறை கேட்டு (பார்க்க வேண்டாம்) மட்டும் பாருங்களேன். உங்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும்.அதிலும் குறிப்பாக 'எப்டி எப்டி' என்பதையே வித்தியாச வித்தியாசமாக கேட்பது. ஆத்தாடி - அன்பு சின்னம்:
இது ஒரு டப்பிங் படம். ஆனாலும் இந்தப் பாடல் அதிக முறை கேட்டது போலவே நினைவு. முன்பு, 2 ஸ்டேட்ஸ் படம் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ரேவதி பாடும் 'இசையின் அலை' பாடலில் திடீரென எங்கேயோ கேட்டது போல ஒரு பாடல்.
தேடித் பார்த்தால் அது சல்மான்கான் ரேவதி நடித்த ஹிந்திப் பாடல் என சொன்னது. இன்னும் கொஞ்சம் தீவிரமாக தேடிய போதுதான் தெரிந்தது, அந்த ஹிந்திப் படம், இந்தப் படத்தின் ரீமேக் என. சுரேஷ் கிருஷ்ணா பாடலையும் சேர்த்து கொண்டு போய் விட்டார்.
பாதிப் பாடல்களை இசையமைப்பாளர்கள் திருடினால், மீதியை இயக்குனர்கள் சுடுவார்கள் போல. வட இந்தியர்கள் பாதி பேர், தங்களுக்கு பிடித்த பாடலின் உண்மையான இசையமைப்பாளர் இளையராஜாதான் என்று தெரியாமலே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இளமனது பல கனவு - செல்வி: இந்தப் பாடலையும் முடியும். சிறு வயதில், நாய் நடித்த படம் என ஞாயிறு வரை காத்திருந்து பார்த்தது மட்டும் நினைவில் உள்ளது. இதே பாடல் பின்னணி இசையாகவும் ஒலிக்கும். அதுவும் நன்றாகவே இருக்கும்.
ஓ உன்னாலே நான் - என் அருகில் நீ இருந்தால்: இது 90களில் எனக்கு நினைவு தெரிந்து அடிக்கடி வானொலியில் கேட்ட பாடல். வழக்கம் போல பார்க்க வேண்டாம்.
அன்பு மலர்களின் சோலை இது - கண்ணுக்கு மை எழுது: கிட்டத்தட்ட மந்திரப் புன்னகையோ பாடல் போலவே இருந்தாலும், சற்றே வித்தியாசமான பாடல். நீங்களும் ரசியுங்கள்.
பார்த்தவுடன் பகிரவும்: சுமார் 20 வருடங்களுக்கு முன் ஆடி மாதத்தில் சில பிரசுரங்கள் வரும். திருப்பதி கோயிலில் ஒரு பாம்பு வந்து அர்ச்சகர் முன் நின்று, நான் இப்படி வந்ததை உடனே 1000 துண்டு பிரசுரங்களாக அடித்து எல்லோருக்கும் கொடுக்க வேண்டும். யார் யாருக்கெல்லாம் கொடுக்கிறாயோ அவர்களும் அதே போல செய்ய வேண்டும். அப்படி செய்தால் என் அருள் கிடைக்கும் என்று சொல்லி மறைந்து விட்டது. இதை அவர் செய்தததால் அவர் வீட்டில் புதையல் கிடைத்தது. இதை மதிக்காமல் கிழித்துப் போட்டவர் பாம்பு கொத்தியது என்றெல்லாம் இருக்கும். அல்லது, இதுவே அஞ்சலட்டையில் வரும். இதே போல இன்னும் 15 பேருக்கு அனுப்ப வேண்டும். காலப்போக்கில், மரங்களின் அழிவை மனதில் கொண்டு மின்னஞ்சலிலும், குறும் செய்திகளாகவும் வந்தன. இப்போது முகப்புத்தம்தானே முக்கியம். எனவே, பார்த்தவுடன் 3 நொடிகளில் விரும்பி, உடனே பகிரவும் என்று சொல்கிறார்கள். இதில் இன்னும் கொடுமை, ஒரு பாம்பு படம் போட்டு, இதற்கு 'லைக்' போட்டு, 1 என கம்மெண்ட் போடுங்கள், உடனே பாம்பு உங்கள் முன்னே இந்திரன் படம் எடுக்கும் எனப் போட்டாலும், அதையும் நம் மக்கள் செய்வதுதான் கொடுமை.
அதே போல இந்த குழந்தையைப் பாருங்கள். இதன் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இந்த பதிவை அந்த குழந்தைக்கு 10 பைசா கிடைக்கும். அதே போல இந்தக் குழந்தை காணாமல் போய் விட்டது. பெற்றோரிடம் கிடைக்க நாம் உதவி செய்யலாமே என நிறைய. கொஞ்சம் கூட விசாரிக்காமல் அப்படியே பகிர்வது. இதில் கொடுமை என்னவென்றால், அந்த குழந்தைகளே வளர்ந்து பெரியவர்களே ஆயிருக்கும். சரி இது கூட பரவாயில்லை. லிங்கிடுஇன் (Linkedin) என்ற தளம் உண்டு. அது மெத்தப்படித்தவர்களுக்கான தளம். அதிலேயே, நான் வேலை வாய்ப்புக்கு ஆள் எடுக்கிறேன், எனது பக்கத்தை விரும்பவும், உங்களது எண்ணைப் பதியவும் என இருக்கும். என்ன மாதிரி வேலை, ஏற்கனவே நிறைய பேர் அந்தப் பக்கத்தை விரும்பி உள்ளனரே, அத்தனை பேரின் விவரங்களைப் பார்த்து, நம்முடையதை பார்க்க எத்தனை நாளாகும் என்றெல்லாம் கூட யோசிக்காமல் நம் மக்கள் செய்யும் அட்டூழியம் உள்ளதே. அட போங்கப்பா.
அந்த தினம் இந்த தினம்: முன்பெல்லாம் உருப்படியான, எல்லோருக்குமான கொண்டாட்டம் என்பது பொங்கல், பங்குனி உத்திரம், ஆடி 18, தைப்பூசம், ஊரில் நடக்கும் திருவிழா இவைகள்தான். தீபாவளி கூட பட்டாசுக்காக மட்டும். மற்ற அனைத்து பண்டிகையிலும் பெரியவர்களுடன் சேர்ந்து கொண்டாட்டத்துடன், அவற்றுக்கென ஒரு அர்த்தமும் இருந்தது. ஆனால், இப்போது பெண்கள் தினம், அம்மா தினம், அப்பா தினம், சகோதரி தினம், சகோதரர் தினம் (Cousins Day என்று கூட உள்ளதாம்) என்று வைத்துக் கொண்டு அட்டூழியம் செய்கிறார்கள். வெளிநாடுகளில் அதை எதற்காக கொண்டாடுகிறார்கள், நமக்கு அது ஒத்து வருமா என்று கூட தெரியாமல், "வாங்கோ எல்லோரும் கொண்டாடலாம்" என்று கூப்பிடுகிறார்கள். இணையத்துலதாங்க, நேர்ல கூப்டுட்டாலும். புத்தாண்டு: நமது கலாசாரத்தின்படி ஒரு நாள் என்பது ஒரு பகல், ஒரு இரவு. முதல் நாள் காலை சூரியன் உதயத்தில் இருந்து, அடுத்த நாள் சூரியன் உதிப்பது வரை ஒரு நாள். அதை மறந்து விட்டு இரவு 12 மணிக்கு (சித்திரையோ, தையோ) Happy Tamil New Year என செய்தி அனுப்புவது, டிசம்பர் 31ம் தேதி இரவு 12 மணிக்கு கோயிலுக்குப் போவது என நம்மாட்கள் பண்ணும் அலும்புக்கு அளவே இல்லை. சரி பரவாயில்லை. 'இளமை இதோ இதோ' தான் சிறந்த புத்தாண்டுப் பாடல் என இன்னும் நிறைய பேர் நம்புவது, சிரிப்புதான் வருகிறது. அதில் பாடலுக்கு முன் வரும் 'ஹேப்பி நியு இயர்' என்பதைத் தவிர, மற்றதெல்லாம் தனி மனித துதிப் பாடல். தமிழில் புத்தாண்டு பற்றிய சில பழைய பாடல்கள் உள்ளன, ஆனாலும் அவை யாவும் வெற்றி பெறாததால் இதையே பிடித்துத் தொங்குகிறோம். பிரியாவிடை பாடல்: கல்லூரிகளில் இறுதியாண்டில் பிரியாவிடை கொண்டாட்டத்தில், முஸ்தபா முஸ்தபா என்று போட்டுவிட்டு, கட்டிப்பிடித்து அழுவது. அந்தப் பாடல், நட்பைப் பற்றிய பாடல் அதில் பிரியாவிடை ஒரு பகுதிதான். 'பசுமை நிறைந்த நினைவுகளே' பாடல்தான் ஒரு முழுமையான, அழகான பிரியாவிடை கொண்டாட்ட பாடல். இதை சொன்னால், "அதெல்லாம் எங்களுக்கு தெரியாது, எங்களுக்கு முஸ்தபா முஸ்தபா வேணும். ஆங்" என்பார்கள்.
தாய் பற்றிய பாடல்: 'காலையில் தினமும் கண் விழித்தால்' என ஒரு பாதி கும்பல் சொல்லும். அதுவும் ஒரு வகையில் உண்மைதான். ஆனால், அந்தப் பாடலின் ஒரு பாதிதான் தாய் பற்றியது. மீதி, பெண் பாடும் வரிகள் தாய்மையுடன் காதலன் பற்றி பாடுவது. ஒரு முழு தாய் பற்றிய பாடல் பற்றி நான் சொல்ல மாட்டேன். உங்களுக்கே தெரியும்.
போராட்டம்: முன்பெல்லாம்
போராட்டம்: முன்பெல்லாம் போராட்டம் என்றால் சாலையில் இறங்கி, கோஷமிட்டு போராடுவார்கள். இப்போதெல்லாம் ஆன்லைனில் DP படத்தை மாற்றி போராட்டம் நடத்துகிறார்கள். இதைப் பற்றி பேசினால் பதிவு மிகவும் சீரியஸாக போய் விடும். இது சிரிப்புப் பதிவு. எனவே, மக்களும் பின்னூட்டத்தில் தங்களுக்கு தோன்றுவதைப் பதியலாம். இதுவும் நவீன மூட நம்பிக்கையே.