முதலில் மருத்துவர் விஜயின் 'திருமலை'. படத்தை பற்றி நான் சொல்ல போவதில்லை. அதில் என்னை மிகவும் கவர்ந்த காட்சி.
திருமணத்தன்று காதலியுடன் ஓடி வரும் நண்பனைக் கூட்டிப்போய், திருமணம் செய்துவைப்பார் என்று நினைக்க, அவரோ திருமண மண்டபம் கூட்டிப்போய், அந்த மாப்பிள்ளையிடம் மன்னிப்பு கேட்க வைக்கும் காட்சி. இதுவரை அந்த பாத்திரத்தை ஒரு பொருட்டாக எந்த படத்திலுமே மதித்ததில்லை. அதிலும் பெண்ணின் தந்தை நண்பனிடம், "எப்படிரா எம்பொண்ணை நீ காப்பாத்துவ? அவளுக்கு அழத் தெரியுமுன்னே எனக்கு இன்னிக்குத்தாண்டா தெரியும்" என்பார். நண்பனோ அரண்டு போய் விஜயை அழைக்க, அவரோ "கேக்குறார்ல, சொல்லு" என்பார். அருமையான, என்னைக் கவர்ந்த காட்சி. இதுவரை, இது போல வேறு படத்தில் நான் பார்த்ததில்லை. ஆனாலும், 'சாக்லேட்' படத்தில் வரும் அந்த அமெரிக்க மாப்பிள்ளை பாத்திரமும் நன்றாக, ஓரளவு கிறுக்குத்தனமில்லாமல் இருக்கும்.
மற்றொரு படமான ஆதியில், அவரின் அறிமுக காட்சி. தற்கொலை செய்ய முயற்சிப்பவனைக் காப்பாற்றும் காட்சி. கொஞ்சம் ஓவராக இருந்தாலும், எனக்கு மிகவும் பிடிக்கும். தண்டவாளத்தில் தற்கொலைக்கு படுத்திருப்பவனைக் காப்பாற்றுவார் என்று நினைக்க, அவரோ அவனையும் தாண்டி, ரயிலை நோக்கி ஓட, அவன் எழுந்து ஓடி, தலைவரைக் காப்பாற்றுவான். படம் முடியும்போதுதான் அவன் ஏண்டா காப்பாற்றினான் என்று தோன்றியது.
அஜித்தின் 'ஜனா'. படம் பார்க்க போகும்போது, டிக்கெட் வாங்க ஒருவன் செல்ல, நாங்கள் காத்திருந்தோம். படம் முடிந்து வந்து கொண்டிருந்தவர்களிடம், 'படம் எப்படி?' என்று கேட்க, ஒருவர் சொன்னார். "கொன்னுட்டான் போ!".. முழு அர்த்தம் எங்களுக்கு உள்ளேதான் விளங்கியது.
அதில் வரும் ஃப்ளாஷ் பேக் காட்சியில், ஒரு வில்லனைப் பார்க்க ஆயுதமின்றி போவார். அவனோ திடீரென துப்பாக்கியை நீட்டி, "நான் நெனச்சா உன்ன இங்கயே முடிச்சிருவேன்" என்பார். உடனே அஜித் ஏதோ பேசுவார். (தூக்க கலக்கம்.. கவனிக்கவில்லை அப்போது) பின் கையை நீட்ட, உடனே வில்லனின் ஆட்கள் துப்பாக்கியை அவரிடம் கொடுத்துவிட்டு அவரின் பின்புறம் வந்து விடுவர். அப்போது நன்றாக இருந்தது. பின் நண்பன் அது ஒரு ஆங்கிலப் பட காப்பி என்றான். அப்போது நம்பவில்லை. 'மலைக்கோட்டை' பார்த்தபின் நம்பினேன்.
சத்யராஜின் 'என்னம்மா கண்ணு'. எனக்கு படம் மிகவும் பிடித்திருந்தது. அதிலும், முடிவில் நண்பனாக வரும் ரஞ்சித், சத்யராஜையும், காதலி தேவயானியையும் பற்றி தவறாகக் கூற, தேவயானி சத்யராஜிடம் தன்னை திருமணம் செய்துகொள்ள சொல்வார். ஆனால், அவரோ பின் நண்பன் சொன்ன குற்றம் உண்மையாகிவிடும் என்றும், ஒருபோதும் அவரை அந்த கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை என்றும் கூறிவிட்டு, தேவயானியை விரும்பிய ஒருவருக்கு மணமுடித்து வைப்பார். எனக்கென்னவோ இதனால்தான் படம் ஓடவில்லையோ என்று தோன்றியது.
விஜயகாந்தின் காவல்துறை சம்பந்தப்பட்ட திரைப்படங்களில், சில சம்பவங்களுக்கு வில்லன்தான் காரணம் என்று தோன்றும். ஆனால், தலைவர்தான் அதற்கு பின்னால் இருப்பார். வில்லனின் காதலியை நான்கு பேர் துரத்த, சரி தலைவர் வருவார் காப்பாற்ற என்று பார்த்தால், வில்லன் வருவான். என்னடா என்றால், அந்த ஆட்களே தலைவரின் செட் அப்தான். அதன் பின்னும் வில்லனை துரத்திக்கொண்டு அவன் இடத்திற்கு போக, அங்கு ஒரு கும்பலே அவரை பயங்கரமாக கலாய்க்கும். "இது பழைய மாடல் பிஸ்டல் ஆச்சே. இதுல சுட்டா நீ கணக்கு காமிக்கணும் தெரியுமா?" என்க, அவர் பொசுக்கென்று சுட்டு விட்டு "ஆமாடா, இது பழைய மாடல்தான். எனக்கு கணக்கு எப்படி காமிக்கணும்னு தெரியும்" என்பார். இதே போல நிறைய காட்சிகள் தொடர்ந்து அடுத்தடுத்து வருவதால், சலித்து விட்டது.
இவை தவிர, ஒரு சில நல்ல படங்களில், வழக்கமான பாணி அல்லது முடிவு இல்லாத படங்களும் உண்டு. அஜித்தின் பில்லா படத்தில், அவருக்கும், நயன்தாராவுக்கும் காதல் என்ற ஒன்றே இல்லாமலிருக்கும். அதே போல, 'கண்ணெதிரே தோன்றினாள்' படத்தில், கரண் இறுதிவரை தனது முதல் தங்கையின் காதலை ஒப்புக் கொள்ளவே மாட்டார். இவையிரண்டும் சற்றே சராசரியிலிருந்து மாறுபட்டவை. காட்சிகளாக வராது(?).
இவையாவும் எனக்கு அவ்வப்போது ஞாபகம் வந்தவை. மக்களுக்கு தோன்றுபவைகளை பின்னூட்டங்களிலிட வேண்டுகிறேன்.
தலைப்பில் 'கவர்ந்த' காட்சிகள் என்பதால், இன்னும் சிலவற்றையும் சேர்க்க வேண்டும். ஆனால், 'ஏ'டாகூடமாக ஆகிவிடக்கூடாது என்பதால், இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்.
[சார், இந்த மாசத்துக்கு ஒரு பதிவ...
போட்டாச்சு போட்டாச்சு..]