Saturday, July 12, 2014

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

போன முறை போட்ட பதிவு பலருக்கு மண்டைக் குடைச்சல் கொடுத்ததால், இந்த முறை பொத்தாம் பொதுவாக ஒரு பதிவு.

விமர்சனம்:

சைவம்: வெற்றிகரமாக குழந்தையுடன் இரண்டாவது முறையாக திரையரங்கம் சென்று பார்த்தோம். இதில் எப்படியும் ஆடு, மாடு வரும் என்று போனோம். இன்னும் கொஞ்ச நேரம் கத்தரித்து ஒன்றரை மணி நேரப் படமாக்கி இருக்கலாம். நமக்குத்தான் பொறுமை போய் விட்டது.

"ஆமாமா, அப்படியே போட்டுட்டாலும். இவன் விமர்சனம் போடும்போது அந்தப் படத்த டிவியிலே நாலு வாட்டி போட்டிருப்பாங்க" என்றுதானே நினைக்கிறீர்கள். சரிதான். என்ன செய்வது. நானும் சுட சுட ஒரு படத்தின் விமர்சனம் போட வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். இப்போதிருக்கும் நிலையில் உடனே நான் விமர்சனம் போட வேண்டும் என்றால், ஏதேனும் நெடுந்தொடருக்குத்தான் போட வேண்டும்.

எல்லா தொல்லைக்காட்சிகளிலும் வரும் நெடுந்தொடர்கள் அனைத்துமே, ஒரு நல்ல திரைப்படத்தின் தலைப்பைக் கொண்டுள்ளன. அந்தப் படத்தைப் பற்றி ஏதாவது இணையத்தில் தேடினால், இவை வந்து விழுந்து எரிச்சல் ஊட்டுகின்றன. இதைப் பற்றி ஏற்கனவே 'உதிரிப்பூக்களில்' எழுதியிருந்தேன்.

எல்லா நெடுந்தொடர்களிலும் இன்னும் முத்தக் காட்சிகளும் படுக்கையறைக் காட்சிகளும்தான் வரவில்லை. ஆனால், அவற்றுக்கு இணையாக (அல்லது அவையே பரவாயில்லை) எனும் அளவிற்கு வசனங்களும் காட்சிகளும் உள்ளன. இதை எழுத ஆரம்பித்தால், அதுவே ஒரு நெடுந்தொடராக போகும் அபாயம் உள்ளதால், இத்துடன் நிறுத்தி விடுகிறேன்.

அரசியல்:

இதைப் பற்றி எழுதக் கூடாது என்றுதான் இருந்தேன். ஆனாலும், வேறு என்ன எழுதி பதிவை நீளமாக்குவது என்று தெரியாததால், வேறு வழியின்றி எழுதுகிறேன்.

விலைவாசி உயர்வு என்பது தவிர்க்க இயலாத செயல். எனவே இந்த கசப்பு மருந்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், முந்தைய அரசு கொண்டு வந்த பொது ஏன் நீங்கள் நீலிக்கண்ணீர் வடித்தீர்கள்? வருமான வரி விலக்கு 5 லட்சம் வரை என்று ஏன் சொன்னீர்கள்? படிப்படியாக உயர்த்தப்படும் என்றாவது சொல்லியிருக்க வேண்டும். ஒரு வேளை அப்போது நிதி நிலைமை பற்றி தெரியாது என்றால் நீங்கள் அரசை நிர்வகிக்கவே தகுதி இல்லை.

இந்த லட்சணத்தில் ரயில் கட்டண உயர்வை எதிர்த்து போராட்டமாம். "டேய், முன்னாடி ஏத்துனதே நீங்கதான்டா. எங்களைப் பாத்தா உங்களுக்கு எப்படித்தான் தோணுதோ".

புது அரசு மட்டும் வரட்டும், பாலாறும் தேனாறும் ஓடும்னு சொன்னவங்க, இப்ப என்ன சொல்றங்க? "அதுக்குள்ள என்ன அவசரம், இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்" என்பார்கள். எத்தனை வருஷம் ஆனாலும் இப்படித்தான். ஏனென்றால், மக்களிடம் (மக்களுமே) யாரும் உண்மையாக இருக்க விரும்புவதில்லை. மற்றவர்களை சங்கடப்பட வைக்ககூடாது என்று, பிற்காலத்தில் பெரும் துன்பத்திற்கு ஆளாக்குகின்றனர்.

ஒரு மருத்துவரிடம் சென்று, நோய் குணமாகவில்லை என்று இன்னொரு மருத்துவரிடம் போனால், அவர் முன்னவர் கொடுத்த மருந்தை மாற்றி வேறொன்று கொடுப்பார். பெயர்தான் வேறே தவிர, உள்ளிருக்கும் மருந்து ஒன்றே. அதே போலத்தான் அரசாங்க மாற்றமும்.

"இதுக்குத்தான் படிச்சவங்க அரசியலுக்கு வரணும்கிறது" என்பர்களுக்கு, இந்த படிப்பு அரசியலை விட்டு ஒதுங்கவே கற்றுத் தந்துள்ளது. பல வருடங்களுக்கு முன் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் "படித்தவர்கள் கட்சி (பரீத்ரக்ஷன என்று நினைக்கிறேன்)" என்று புதிதாக தோன்றி போட்டியிட்டது. சென்னையில், திமுக, அதிமுகவை அடுத்து மூன்றாம் இடத்தையும் பிடித்தது. அடுத்த நாளே மாதங்களில் கட்சி சுக்கு நூறாக உடைந்தது. இப்போதுள்ள சாமானிய மக்கள் கட்சிக்கும் அதேதான் நடக்கிறது. இதைத்தான் நம்மூரில் "படிச்சவன் பாட்டக் கெடுத்தான்" என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.

உடனே யாராவது, "இவ்ளோ சொல்றியே, நீ?" என்று சண்டைக்கு வர வேண்டாம். ஏனென்றால் பதில் உங்களுக்கே தெரியும். சரித்திரத்தை கொஞ்சம் புரட்டிப் பார்த்தால், உண்மையாகவே இந்த சமுதாயத்திற்காகவும், மக்களுக்காகவும் பாடுபட்டவர்களும், அவர்களை சார்ந்தவர்க்களும் நல்ல நிலையில் இருந்ததே இல்லை. இன்னமும் அவர்களின் சந்ததியினர் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் உள்ளனர். நம் மக்கள் அதைப் பார்த்துதான் "நமக்கெதுக்கப்பா வம்பு, நாம உண்டு நம்ம வேல உண்டுன்னு போனோமா வந்தோமான்னு இருக்கணும்" என்று வளர்க்கின்றனர். ஏதோ ஒரு திரைப்படத்தில் வருவது போல "இந்த சமுதாயத்துல உங்க எல்லோருக்காக கஷ்டப்பட ஒருத்தன் வேணும், ஆனா, அவன் அவன் உங்க வீட்டுல இருந்து வரக்கூடாது".

சொந்தக்கதை அது சோகக்கதை:

சென்னையில் நடந்த கட்டிட விபத்து நேரடியாக அங்கு நூறு பேரை பாதித்தது என்றால், மறைமுகமாக பல்லாயிரம் பேரை பாதித்துள்ளது. நான் அங்கு வீடு வாங்கவில்லை. ஆனால், வீடு வாங்கிய கட்டிடத்திற்கு அனுமதி பெறுவதில் சிக்கலாம். "நீ ஒழுங்காதான கட்டியிருக்க" என்று கேட்டால், "அதெல்லாம் சரிதான் சார், ஆனா, அது நொள்ள, இது நொட்டன்னு சொல்லி இப்ப காசு நெறைய கேப்பாங்க சார்" என்கிறார்கள். பளார் பளார் என்று அறைய வேண்டும் என்றுதான் தோன்றுகிறது, ஆனால் பதிவுதான் போட முடிகிறது.

குற்றம் செய்தவர்களை விட, குற்றம் செய்யத் தூண்டியவர்களுக்கு தண்டனை அதிகமாம். அதே போல, குற்றத்தைப் பற்றி தெரிந்தும் வெளியே சொல்லாமல் இருப்பதும் பெருங்குற்றமாம். அப்படிப் பார்த்தால் நாட்டில் எல்லார் பெயரிலும் குறைந்தது நான்கு வழக்காவது இருக்க வேண்டும்.

Saturday, June 21, 2014

வாழ்க்கை என்பது

எச்சரிக்கை: இந்தப் பதிவு எப்போதோ குருட்டாம் போக்கில் எழுத ஆரம்பித்தது, என்னென்னவோ யோசித்து, எப்படியெல்லாமோ மாற்றி, ஒரு வழியாக போட்டுள்ளேன். முடிந்தால், தலைவலி தைலமோ அல்லது மாத்திரையோ எடுத்து வைத்துக்கொண்டு படிக்கவும். பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.

வாழ்க்கை என்பது,

இன்பம், துன்பம், காகித ஓடம், கானல் நீர், பொய், நேர்க்கோடு, வட்டம், சாலை, வாழ்வதற்கே, முழுவதும் சாவதெற்கே, மோசமான ஆசிரியர், இந்த கணம், விடுகதை, தொடர்கதை, கணக்கு, வேதியியல், ஆறு, கடல், போர்க்களம், சுமை, முள் கிரீடம், கடலில் கார் ஊட்டுவது, சாலையில் சைக்கிள் ஓட்டுவது, உண்பது, உறங்குவது, விழுவது, விழுந்து எழுவது, ஓடுவது, துரத்துவது, ............. சிவாஜி நடித்த படம்........



இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம், அதற்காகவே ஒரு தொடர் பதிவு கூட போடலாம். ஆனால், இது சும்மா, என்னுடைய புலம்பல்களை ஓர் நாலு பேர் படிக்கட்டுமே என்பதற்காக ஒரு பதிவு. இதில் உள்ளவை அனைத்தும் என்னுடைய கருத்துக்கள் அல்ல. பிச்சைக்காரன் எடுத்த வாந்தி என்று வேண்டுமானால் சொல்லலாம்.

உலகில் எந்த விஷயத்திற்கு உதாரணங்களும், பழமொழிகளும் அதிகம் என்றால், காதலை விட வாழ்க்கைக்குத்தான் இருக்கும். அட, அதுதானே இது என்று குழப்ப வேண்டாம். வாழ்க்கையின் ஒரு அங்கமே காதல், என்னைப் பொருத்தவரை.

முதலில் வாழ்க்கை என்பது கை ரேகை போல. உலகில் ஒரே மாதிரி கை ரேகை இன்னொருவருக்கு இருக்காது என்பார்கள். அதே போலத்தான், வாழ்க்கை என்னும் தத்துவமும், கோட்பாடும். கண்டிப்பாக உலகில் இரண்டு பேருக்கு அது பொதுவாக இருக்காது. (எனக்கென்னவோ இந்த விஷயத்தைத்தான் மக்கள் தவறாக புரிந்து கொண்டு ஜோசியக்காரர்கள் பின்னால் அலைகிறார்கள் என்று நினைக்கறேன்.)

குறிக்கோள் அல்லது லட்சியம். ஒவ்வொருவருக்கும் ஒரு குறிக்கோள் கண்டிப்பாக இருக்கும். அது அடுத்த வேளை சோறாகவும் இருக்கலாம், அடுத்த அம்பானியாகவும் இருக்கலாம். கண்டிப்பாக அதன் மூல காரணம் ஒன்றுதான், மகிழ்ச்சி.



மக்கள் ஆற்று நீர் போல. மகிழ்ச்சி எனும் கடலை நோக்கிப் போக வேண்டும். வழியில் பல தடைகள் அல்லது. அது வேறு வேறு கிளைகளாக மாறி செல்ல வேண்டும். அந்த பாதைகள் நல்லதா கெட்டதா, அதில் சென்றால் விரைவாக போவோமா அல்லாத தாமதமாகுமா என்பதை யோசிக்க விடாமல், நம்மை தள்ளிக் கொண்டு போய் விடுகிறார்கள். அப்படி போகும்போது கடலை நோக்கித்தான் போகிறோம் என்று நினைப்போம். ஆனால், முடிவு எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.

இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் இருப்பதால் வரும் பிரச்சனைகளை சமாளிக்க உருவானவைதான் மதம், இனம், மொழி, கலாச்சாரம் கடைசியாக சட்டம். இவை அனைத்தும் இது சரி, இது தவறு என்று ஒவ்வொரு விஷயத்தையும் பிரித்துள்ளன.

இன்னும் கொஞ்சம் குழப்ப வேண்டுமென்றால், பொதுவாக வாழ்க்கை இரண்டே வகைதான். இந்த நொடிக்காக வாழ்வது அல்லது நாளைய ஓய்வுக்காக இன்று ஓடுவது. இரண்டு வழிகள். ஒன்று, எப்படியாவது, எவனுக்கு என்ன ஆனாலும், நாம் நம் காரியத்தில் கண்ணாக இருக்க வேண்டும். இரண்டு, முடிந்த அளவு மற்றவர்களைக் கெடுக்காமல் செல்வது. இந்த பெர்முடேசன் காம்பினேஷன் (permutation and combination - தமிழ்ல என்னன்னு மறந்து போச்சு) வைத்து, ஆளுக்கொரு வகையாக வாழ்ந்து வருகிறோம்.

ஒரு உதாரணம். கொஞ்சம் மிகைதான், இருந்தாலும் புரிதலுக்காக. கல்லூரி நண்பர்கள் இருவர். ஒருவன் நிறைய இனிப்புகள் சாப்பிடுவான். இன்னொருவனோ கையிலேயே தொடமாட்டான். இந்த இரு எதிரெதிர் செயல்களுக்கும் காரணம் ஒன்றுதான்.

முதலாமவன்: எங்க அப்பா, அம்மா, தாத்தா எல்லோருக்கும் சுகர் இருக்கு. எனக்கும் எப்படியும் வயசான காலத்துல வரத்தான் போகுது, அப்புறம் ஏன் நான் இப்பவே வாயக் கட்டனும். நல்லா சாப்பிட்டுகிட்டு, பின்னாடி கண்ட்ரோல் பண்ணிக்குவேன்.

இரண்டாமவன்: எங்க அப்பா, அம்மா, தாத்தா எல்லோருக்கும் சுகர் இருக்கு. எனக்கும் எப்படியும் வயசான காலத்துல வரத்தான் போகுது, இப்பவே கண்ட்ரோல் பண்ணிக்கிட்டா பின்னாடி பிரச்சினை இல்ல பாரு. 

இருவரில் யார் சரி, யார் தவறு? அனைவருக்கும் ஒவ்வொன்று தோன்றும். இந்த இடத்தில் 'சமுதாயம்' என்ற கண்ணோட்டத்தில் யோசித்தால், இரண்டாமவனே சரி என்று தோன்றும். ஏனென்றால் நம் சமுதாயம் சொல்லுவது, "இப்ப கஷ்டப்பட்டா, பின்னாடி சொகுசா இருக்கலாம்". நீங்கள் பனிரெண்டாம் வகுப்பு படித்திருந்தால், இதை நிறைய கேட்டிருக்கலாம்.

இதே பல பேருக்கு தவறாக தோன்றும். "ஒரு வேளை, நாளைக்கே அவனுக்கு ஏதாவது ஒண்ணுன்னா?" என்பார்கள். இந்த வார்த்தையும், நமது சமுதாயத்தைப் பொருத்தவரை தவறு.

அதே போல இந்த சமுதாயம் சொல்லும் இன்னொரு முக்கியமான விஷயம். "அடுத்தவனின் மகிழ்ச்சியே நமது சந்தோஷம்". அதாவது, நம்மை சார்ந்தவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது, நாமும் மகிழ்வோம்.

இங்குதான் பிரச்சினையே. தமிழ் இலக்கியத்திலோ, சமுதாயத் தொண்டிலோ ஆர்வமுடையவனிடம் "எப்பா, எப்படியாவது படிச்சு டாக்டர் ஆயிட்டேன்னா, எங்களுக்கு சந்தோசமப்பா. அப்படி இல்லீன்னா நல்ல எஞ்சினீரிங் காலேஜுல படிச்சு நாலு வருஷத்துல வேல வாங்கி, பக்கத்து வீட்டுக்காரன் ரெண்டு வருஷத்துல அமெரிக்கா போன மாதிரி இல்லாம, ஒரே வருஷத்துல போயிடனும் " என்று சொல்லி, பெற்றவர்களின் சந்தோசத்திற்காக தன்னை தொலைக்கின்றான்.

ஒரு வேளை அவன் விருப்பத்திற்காக, தமிழ் இலக்கியம் படிக்கின்றான் என்றால், சமுதாயம் "நல்ல மார்க் வாங்கி இப்படி நாசமா போயிட்டானே, கற்றது தமிழ் படம் மாதிரி கொலைதான் செய்யப்ப் போறான்" என்று தூற்றும். இவை எதையும் காதில் வாங்காமல், அவன் தனக்குப் பிடித்ததை மட்டும் செய்து கொண்டிருந்தால், அவன் மகிழ்ச்சியாக இருக்கலாம். மற்றவர்கள், பெற்றோர்கள்?

இன்னொரு மிக முக்கியமான விஷயம். கசப்பை அவ்வப்போது சுவைத்தால்தான் இனிப்பின் அருமை புரியும். அதே போல கஷ்டப்பட்டால்தான் மகழ்ச்சியை உணர முடியும். நம்முடைய மகிழ்ச்சி அடுத்தவனுக்கு கஷ்டம், நமது கஷ்டம் அடுத்தவனுக்கு மகிழ்ச்சி. எனவே, நமக்கானதை நாம் நம்முள்ளே தேட வேண்டும். அதை விட்டு விட்டு "அவன மாதிரி பண்ணா என்ன?" என்றால், காலிதான். 

அதே போல, விதி விலக்கு (Exception) என்பதும் எல்லாவற்றிற்கும் உண்டு. இந்தப் பதிவில் கூறப்பட்டுள்ள கருத்துகளுக்கும்தான்.

சரி, குழப்பம் எதற்கு. தெளிவாக சொல்கிறேனே. நாம், வாழ்வதற்காக தினம் தினம் சாகிறோம். இறுதியில் சாவதற்காக தினமும் வாழ்கிறோம். இதைப் புரிந்து கொண்டால் நல்லது. எங்க?

ஆனாலும், இவை எல்லாவற்றையும் தாண்டி, தினமும் எப்படியெல்லாமோ கஷ்டப்பட்டாலும், ஏதாவது ஒரு கணத்தில் கிடைக்கும் சந்தோசத்திற்காக அவை அனைத்தையும் தாங்கிக் கொள்கிறோமே.அது தான் வாழ்க்கை. (உபயம், ஏதோ ஒரு தமிழ் படம் அல்லது நெடுந்தொடர் அல்லது கதை)

Saturday, May 31, 2014

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

என்ன போடுவதென்று தெரியவில்லை. எனவே, ஏதாவதொரு பிட்டை போடுவோம்.

சமர்ப்பணம்:

பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்துள்ளன. அந்த மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும், எனது பதிவுகளையும் சமர்ப்பிக்கிறேன்.

ஒரு பத்து வருடத்து கதை. எனது நண்பன், 0.1 மதிப்பெண்ணில் தனது மருத்துவர் கனவு காலாவதி ஆனதால், எந்திரவியல் பொறியியலில் சேர்ந்து, நான்கு வருடம் மாங்கு மாங்கென்று படித்து, முதல் வகுப்பில் தேறி, ஒரு மென் பொறியியல் நிறுவனத்தில் வேலை வாங்கி, வெளிநாட்டில் ஆணி பிடுங்கிக் கொண்டுள்ளான்.

'3 இடியட்ஸ்' படம் பார்த்து விட்டு அவனை "ஏண்டா, நீ நடந்த, ரயில்ல ஏறனும்னு நெனச்ச, ஆனா பஸ்தான் கெடச்சிது, லோக்கல் பஸ்ல டிக்கெட் காசு கொடுத்து வாங்கிட்டு, வேற பஸ்ல கூப்டாங்கன்னு ஏறப் போற, எங்கதாண்டா போகணும்?" என்றெல்லாம் கலாய்க்கும் போது அவன் சொன்னான் 'தெரியாது. ஆனால், நான் இன்னும் என்னுள் தேடிக் கொண்டிருக்கிறேன் எனது திறமை என்னவென்று, அது கண்டிப்பாக படிப்பது மட்டுமல்ல' என்றான். 

நீ என்ன ஒழுங்கா, என்று கேட்பவர்களுக்கு, எனக்கு உயிரியல் பிடிக்காது, கணக்கு நன்றாக் வரும், இயற்பியலில் எந்திரவியல் பிடிக்கும் ஆனால் மின்னணுவியல் பிடிக்காது. கூட்டிக் கழிச்சிப் பாத்தா கணக்கு சரியா வரும். இப்போது ஆணி பிடுங்குவது கூட, எந்திரவியல் சார்ந்த துறைதான். இருந்தாலும் அதையும் தாண்டி ஏதோ உள்ளது. (உபயம், 7G ரெயின்போ காலனி) அவனாவது தேடிக் கொண்டிருக்கிறான். நான் இன்னும் தேடவே ஆரம்பிக்கவில்லை. 

சில கீச்சுக்கள்:

இன்னும் டிவிட்டரில் முழுதாக போடவில்லை என்றாலும், என்னுடைய எண்ணங்களை, சிறு சிறு கீச்சுகளாக இங்கே பதிவு செய்கிறேன். இதை இன்னும் மீண்டும் கொஞ்சம் மாற்றி டிவிட்டரில் போடலாம்.

500, 1000 என்று மொத மதிப்பெண்கள் வைப்பதால் ஒரே மதிப்பெண்ணை பலர் வாங்குகின்றனர். அதற்கு பதிலாக, 10000 அல்லது 20000 என்று மாற்றிவிட்டால், முதல் மதிப்பெண்ணை யாராவது ஓரிருவரே வாங்குவர்.

IPL Series என்பது நெடுந்தொடர் போல. மக்களின் விருப்பத்திற்கேற்ப தினமும் முடிவு மாற்றப்படுகிறது. #ipl2014 

IPL மேட்ச் முதல் நாள் முதல் காட்சி போல. பார்க்கும் நாம்தான் முடிவைப் பற்றி தெரிய பறப்போம். ஆனால், ஆடுபவர்களுக்கும், ஆட்டுவிப்பவர்களுக்கும் முடிவு முன்னமே தெரியும். #ipl2014


சிறுவர்களின் உற்சாக பான விளம்பரங்களுக்கும், iplல்அணிகளுக்கு ஊர்ப் பெயரை வைத்ததற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. #பீலிங்க்ஸ்

உலகம், தவறு செய்பவனை 'அவன் செய்யறானே' என்று உதாரணமாக காட்டும். நல்லது செய்பவனை ஏமாளி என்று தூற்றும்.


தேர்தல் முடிவுகள், ஒருவனின் வெற்றி என்பதை விட, அடுத்தவனின் தோல்வி என்பதுதான் முக்கியம். இதைப் புரிந்து கொண்டால் சரிதான். #Elections2014


கொதிக்கும் எண்ணையில் இருந்து தப்பி விழுந்தது எரியும் அடுப்பிலா, வெளியிலா. பார்ப்போம். #Elections2014


விமர்சனங்கள்:

இரண்டு மாதங்களாக மனைவி மகளுடன் சந்தோசமாக (?) கழித்ததால், படத்திற்கும் போகவில்லை. மகளுக்கு படம் காட்டவே மடிக்கணினி பத்தாததால், தரவிறக்கமும் பண்ணவில்லை. ஒரு சின்ன (முதல்) முயற்சியாக, ரியோ 2 படம் சென்றோம். படம் நன்றாக இருந்தாலும், கண்ணாடி போட்டு பார்க்க என் மகள் அடம் பிடித்ததாள். அது மட்டுமல்லாது, திடீரென சத்தம் வரும்போதெல்லாம் பயந்தாள். எனவே, அடுத்து ஏதாவது மென்மையான தமிழ் படம் ஏதாவது பார்க்க எண்ணியுள்ளோம். பார்ப்போம்.

இப்போதுதான் ஒரு இரண்டு வாரம் விடுமுறை கிடைத்துள்ளது. 'யாமிருக்க பயமே', 'கோச்சடையான்' இரண்டும் பார்க்கும் எண்ணம் உள்ளது.

கொசுறு:

இந்த பீனிக்ஸ் மால் பக்கத்தில்தான் உள்ளது, இதுவரை போகவேயில்லையே என்று மனைவி, மகளுடன் இரு சக்கர வாகனத்தில் கிளம்பி வந்தால் மணிக்கு 50 ரூபாய் வண்டி நிறுத்தவதற்கு. மனைவியோ கொமட்டில் குத்தி "ஆட்டோவுல வந்தா கூட அம்புட்டு ஆகாது" என்றாள். திரும்பிக் கூட போக முடியவில்லை. படம் பார்க்க வந்ததற்காக 4 மணி நேரத்திற்கு 100 ரூபாய் என்று குறைத்துக் (?) கொண்டார்கள். 15 நிமிடத்திற்கு இலவசமாம். வெளியே அட்டை வாங்கிக் கொண்டு, எங்குமே நிறுத்தாமல் பணம் செலுத்துமிடம் வரவே 20 நிமிடம் ஆகும். நன்றாக அளந்து வைத்துள்ளனர்.

அனைவரும் கோடை விடுமுறையை கோச்சடையானோடு கொண்டாடியிருப்பீர்கள் (கவித). நானும் பதிவு எதுவும் போடவில்லை அல்லவா. ஆகட்டும், டும்.

Thursday, April 24, 2014

தவறுக்குக் காரணம் பெற்றோர்களே!! மாணவர்களே!!

எத்தனை நூற்றாண்டுகள் (முன்னோக்கி சென்றாலும், பின்னோக்கி சென்றாலும்) வாதாட ஒரு நல்ல தலைப்பு இதுதான். மன்னராட்சி முதல் மக்களாட்சி வரை, இந்த இரு பிரிவினருக்குமே பிரச்சினைதான். இருந்தாலும், இந்தப் பதிவு, என்னுடைய முந்தைய பதிவின் தொடர்ச்சியாக, கல்வி பற்றி மட்டுமே இடுகிறேன், முடிந்தவரை.

இந்த பிரச்சினைக்கு முதலும், முதன்மையானதுமான காரணம் தலைமுறை வித்தியாசம். முன்பெல்லாம் ஒரு தலைமுறை என்பது 33 வருடங்கள் என்று சொல்வார்கள், இப்போதெல்லாம் அது 33 நிமிடங்கள்/நொடிகளாக மாறி விட்டது. கடந்த ஆண்டு கல்லூரி முடித்து, வேலைக்கு போக ஆரம்பித்த சொந்தக்கார பையன், அவனை விட இரண்டு வயது சிறிய, கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவனிடம் "இது என்ன புது கேம்?, எப்ப வந்துச்சு?' என்று கேட்க, அவன் சொன்னான், "நீயெல்லாம் பழைய ஆளுடா, போ போ".

உடன் வேலை பார்க்கும் ஊழியர், தன்னுடைய 4 வயது மகனுக்கு இப்போது பள்ளியில் (LKG) சேர்த்துள்ளார். சாப்பிடும்போது, அடுத்து அழியப்போகும் ச்சே சேர்க்கப் போகும் எங்களைப் போன்ற நான்கைந்து பேர் விசாரித்தோம்.

"எவ்ளோ ஆச்சு?"

"டெபாசிட், டொனேஷன், புக் பீஸ், பஸ் பீஸ் அது இதுன்னு கிட்டத்தட்ட 2 லட்சம் ஆச்சு"

"அடேங்கப்பா, நாம காலேஜு படிச்சி முடிச்ச 16 வருஷ படிப்புக்கே இவ்ளோ ஆகலையேப்பா, நானெல்லாம் இங்க சேத்த மாட்டேன்பா, ஊர்ல கொண்டு போயி ஏதாவது கவர்ன்மெண்டு ஸ்கூல்ல தள்ள வேண்டியதுதான்"

அவர் நக்கலாக, "நானும் இப்படித்தான் பேசுனேன், சும்மா விசாரிச்சதுக்கே, சொந்தக்காரன், பக்கத்து வீட்டுக்காரன் எல்லாம் போட்ட போடுல, எங்க வீட்டுல அரண்டு போயி, சமச்சீர் எல்லாம் சும்மா, கண்டிப்பா CBSEல தான் போடணும், இந்த ஸ்கூல்னா பரவாயில்லன்னு சொல்லி, அதுக்காக நாயா அலைஞ்சு, மினிஸ்டர் லெட்டெர் வாங்கி, சேத்துருக்கேன், உனக்கும் வரும் பார். ஆள் நம்ம கைவசம் இருக்கு, கண்டிப்பா என்கிட்டே வந்து கேப்ப பார்" என்றார்.

அவர் இன்னும் சொன்ன நிறைய விஷயங்களைக் கேட்டபோது 'குங்குமப் பொட்டு கவுண்டர்', 'அபியும் நானும்' படத்தில் வருவதெல்லாம் சும்மா என்பது புரிந்தது. அதை விட்டு விடுவோம்.

நானும் யோசித்துப் பார்க்கிறேன், என் சொந்த ஊரில் (என் தாத்தா, அம்மா, நான் அனைவரும் படித்த, வீட்டிலிருந்து 10 அடி மட்டுமே தள்ளி உள்ள) 'ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில்' சேர்க்க வேண்டும் என்று நான் சொல்லும்போதெல்லாம், என் அம்மாவும், மனைவியும் நக்கலாக சிரிக்கிறார்கள். "அங்கெல்லாம் இப்ப யாரு படிக்கிறா? இன்னும் நாலஞ்சு வருஷத்துல இழுத்து மூடிருவாங்க, இன்னொன்னு தெரிஞ்சுக்கோ, ஊருக்குள்ள டவுன் பஸ் வருதோ இல்லையோ, ஸ்கூல் பஸ் 10 வருது. ஊருக்குள்ள நம்மாளுங்க புள்ளங்க எல்லாம் வெளி ஸ்கூல்லதான் படிக்கிறாங்க, தெரிஞ்சுக்க" என்கிறார்கள்.

பொதுவாக, இன்னும் எல்லோருடைய அடி மனத்திலும் 'கல்வி' முக்கியம் என்பது படிந்திருந்தாலும், அது கற்பிக்கப்படுவதற்கும், திணிக்கப்படுவற்கும் வித்தியாசம் தெரியாமலே உள்ளனர். அந்தப் பள்ளிகளில் விளையாட்டோ, நீதி போதனை வகுப்போ இல்லை என்று சொன்னால், "வீட்டுக்கு வந்து குதிக்கத்தானே போகுது, நீதிக் கதை எல்லாம்தான் இப்ப சுட்டி டிவியிலே சொல்றாங்களே" என்கிறார்கள். இதைத்தாண்டி "படிப்பைத் தாண்டி குழந்தைக்கு ஏதாவது" என்றவுடனே, "ம், கண்டிப்பா, பாட்டு கிளாஸ், டான்ஸ் கிளாஸ், அடுத்த வருஷம் கராத்தே, அப்புறம் கிரிக்கெட் கூட" என்கிறார்கள்.

"அவனுக்கு என்ன வரும்" என்றால், "சின்னப் பையன், இப்ப என்ன தெரியும், எல்லாம் தெரிஞ்சுக்கிட்டும்" என்கிறார்கள். இது ஆரம்பக் கல்விக்காக. அதன் பின்னர் அனைவரின் லட்சியமும் "MBBS லட்சியம், BE நிச்சயம்" (தேர்தல் உபயம்) என்று அடுத்த இலக்கை எய்கின்றனர். "சரிங்க, இப்பவாவது, அவனுக்கு என்ன ஆகணும்னு கேளுங்க" என்றால், "ரெண்டும்கெட்டான் வயசு, நாமதான் சொல்லணும்" என்பார்கள், அதைத்தாண்டி பையனோ/பெண்ணோ தன் விருப்பத்தை தெரிவித்தால், காரமாகவோ அல்லது பதமாகவோ "அந்த மாமாவும் இப்படித்தான் சொல்லி, கண்டத படிச்சு, இப்ப பாரு சும்மா சுத்தறான், எல்லாரும் அவன திட்றாங்க, இந்த மாமா பாரு, சொன்னபடி படிச்சு அமெரிக்காவுல நல்ல வேலைல இருக்காங்க" என்று குழப்புவர்.

ஒரு விளம்பரம்:

[ஊரில் நன்றாக படித்து, பொறியியல் முடித்து இரண்டு முறை அமெரிக்காவும் போய் விட்டு வந்தாகி விட்டது. கல்யாணத்திற்கு முன் மாதம் ஒரு முறை ஊருக்கு போவேன். இப்போது இரண்டு/மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என்றாகி விட்டது. ஊரிலும், சொந்தத்திலும் என்னை ஒரு உதாரணமாக காட்டியுள்ளனர். என் நண்பன், சுமாராக படித்து, ஊரிலேயே இளங்கலை முடித்து, தோட்டம், சிறு சிறு வேலை பார்த்து, கொஞ்சம் அப்பா சொத்தை அழித்து, ஒரு நான்கு வருடங்கள் அனைவரின் சாபத்தையும் வாங்கி, இப்போது இரண்டு லாரி, கடை, தோட்டம் என்று சொந்த ஊரிலேயே ஜம்மென்று வாழ்கிறான். இருந்தாலும், இன்னும் அவன் வீட்டில், நான் சென்று வந்தால், என்னைக் காட்டி அவனுக்கு குத்தல் பேச்சு விழும், அவன் என்னைப் பார்த்து பொறாமைப் படுகிறானா என்று தெரியாது, ஆனால், எனக்கு அவனைப் பார்த்தால் பொறாமையாக உள்ளது]

சரி விஷயத்திற்கு வருவோம். பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளுக்கு அறிவைக் கொடுக்க வேண்டும் என்று பள்ளிகளில் சேர்த்தவில்லை. பிள்ளைகளை முதலீடு செய்கிறோம். இவ்வளவு பணம் கட்டி சேர்த்தால், குறைந்த பட்சம் இவ்வளவு மதிப்பெண்கள் எடுக்க வேண்டும், இந்த சம்பளத்தில் வேலை வாங்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறோம்.

சரி பெற்றோர்களே, அந்தப் பள்ளியில் சேர்த்தால், மாநில அளவில் முதலிடம், அட குறைந்த பட்சம் அதிக மதிப்பெண்கள் எடுத்து நல்ல பொறியியல் கல்லூரியில் இடம் வாங்கி விடலாம் என்ற கணக்கு சரிதான். கடந்த பத்து வருடங்களில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பில் முதலிடம் எடுத்த மாணவர்கள், தற்போது என்ன செய்கிறார்கள் என்று தெரியுமா? எனக்கும் தெரியாது, ஆனால், கண்டிப்பாக இந்தியாவிலோ, இல்லை வெளி நாட்டிலோ, எங்கிருந்தாலும் பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக இருப்பார்களே தவிர எதையும் சாதித்திருக்க மாட்டார்கள், சாதிக்கவும் இல்லை. ("தேவை இல்லேன்றேன், எதுக்குன்றேன்" என்கிறார்கள்).

மாணவர்களோ, இப்போதெல்லாம் வைத்தால் குடுமி, அடித்தால் மொட்டை என்ற மனநிலையில்தான் உள்ளனர். எனக்கு பிடித்ததை நீ கொடுக்கவில்லை என்றால் உனக்கு பிடித்ததை செய்ய மாட்டேன் என்கின்றனர். முன்பெல்லாம் குறைந்த பட்சம் இரண்டாம் ஆளுக்குத் தெரியாமல் தப்பு செய்ய முடியாது. பெட்டிக் கடையில் சிகரெட் கேட்டால் (கடமைக்காகவாவது) "யாருக்குடா?" என்று கேட்பார்கள். அதனால் ஓரளவுக்காவது பயம் இருந்தது. இப்போதெல்லாம், 'அதெல்லாம் அசால்ட்டுடா" என்கிறார்கள். எப்படி தெரியாமல் தப்பு செய்வது என்று இணையத்தில் தேடுகின்றனர். இன்னும் நிறைய சொல்லலாம். இன்னொரு பதிவில்.

பெற்றோர்களே, இந்த கல்வி முறை என்ன கற்றுக் கொடுத்துள்ளது தெரியுமா? சிக்னலில் ஆள் இல்லை என்றால் தாண்டிப்போ, சாலையில் யாராவது அடிபட்டுக் கிடந்தால், பரிதாபப்பட்டு ஓரமாக செல், கண் முன்னே தப்பு நடந்தால் நமக்கெதுக்கு வம்பு என்று கண்டு கொள்ளாதே, முடியவில்லையா பேஸ் புக்கில் பகிர்ந்துடு அல்லது உன் வலைப்பூவில் எழுதிடு (நீ யாரென்று சொல்லாமல்). தொடரும் போடலாமா என்று தெரியவில்லை. ஆனால், இன்னொன்று போடலாம். 'முடியாது'

Wednesday, March 26, 2014

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

அலுவல் பணிகள் காரணமாக வெளியூரில் சுற்ற இருப்பதால் அவசரத்திற்காகவும், கணக்கு காட்டவும், இந்தப் பிட்டுப் பதிவு இடப்படுகிறது.

தேர்தல் 2014:

ஒரு வியாழன் அன்று தேர்தல் வருகிறது, அனைவரும் வெள்ளிக்கிழமை விடுமுறை எடுத்து, தங்களது ஜனநாக கடமையை செய்யத் துடிக்கின்றனர். நானோ, ஊரில் கோயில் திருவிழா என்று இரண்டு நாள் விடுமுறை எடுத்ததால், என்னால் எனது ஜனநாயக கடமையை இந்த முறை செய்ய முடியாமல் போய் விடும் போல உள்ளது. ஆதார் அட்டைக்காக அனைவரது கை ரேகையையும் எடுத்தார்களே, அதைப் பயன்படுத்தி, எந்த வாக்குச்சாவடியாக இருந்தாலும், நம் கை ரேகை வைத்தால், நம்முடைய தொகுதி வேட்பாளர்கள் சின்னம் வந்து 'தொடு திரை' மூலம் நமது வாக்கை பதிவு செய்வது போல வைக்கலாமே. இதன் மூலம், இந்தியாவில் எந்த பகுதியில் இருந்தாலும், அனைவரது வாக்குகளும் பதிவாகுமே? சிந்திப்பார்களா? அல்லது நான் சர்வாதிரிகாரியாக மாறித்தான் நடக்குமா, தெரியவில்லையே. எது எப்படி இருப்பினும், நான் அளிக்கும் வாக்கு NOTAவிற்குத்தான். பரவாயில்லை. போன முறை நான் 49'O' என்று சொன்னவுடன், என்னை வளைத்துக் கட்டி தொலைத்து விட்டனர். இந்த முறை தவறுகிறது. பரவாயில்லை. அடுத்த முறை விட மாட்டேன்.

விமர்சனம்:


அவ்வளவாக எந்தப் படமும் பார்க்க முடியவில்லை. வீட்டில் தங்கமணி, குழந்தை இருவரையும் சமாளிப்பதே பெரிய படமாக எடுக்கலாம் போல. தவறிப் போய் பார்த்த கோலி சோடா படம் கூட, நன்றாக இருந்தாலும், 'இருக்க எடம் கொடுத்தா' என்ற பழமொழியை நினைவூட்டியதால், கவரவில்லை.




தெகிடி: லக்கி சொன்னது போலவே, ஒரு ராஜேஷ் குமார் கதை படிப்பது போலத்தான் இருந்தது. படத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம், இடைவேளையும், இறுதிக் காட்சியையும் ஒரே மாதிரி வைத்தது. ஆனாலும், அந்த முடிவு, 2008ல் வந்த ஷெர்லக் ஹோம்ஸ் படம் போல உள்ளது. பார்ப்போம் அந்த முகமறியா வில்லன் யாராக இருக்கும் என்று. (இரண்டாம் பாகம் வந்தால். தயவு செய்து வேறு ஏதாவது மொக்கை படம் எடுத்து. தெகிடி-2 என்று எங்களை ஏமாற்ற வேண்டாம். வில்லாவில் பட்டதே போதும்).



த்ரிஷ்யம்: திடீரென தமிழ்நாட்டில், 'கமல் ஹாசன் நடிக்கவிருக்கும்' என்று இதை திரையிட ஆரம்பித்து விட்டனர். எத்தனை நாள்தான் தமிழ்ப் படமே பார்ப்பது (எத்தனை நாள்தான் நல்ல பிரதிக்கு காத்திருப்பது?!?!) என்று போய்ப் பார்த்து விட்டேன். பற்றி சொல்வதற்கு முன்னால், ஒரு தெனாலி ராமன் கதை படித்து விட்டு வாருங்கள்.

இந்த நகைச்சுவையான கதையை, ஒரு குடும்பத்தில் நடக்கும் பிரச்சினையோடு இணைத்தால், அதுதான் 'த்ரிஷ்யம்'. அந்தப் பிரச்சினையில் இருந்து, தனது குடும்பத்தைக் காப்பாற்ற, இந்தக் கதையைப் பயன்படுத்துவதாகவே எனக்கு தோன்றியது. அதிலும் குறிப்பாக, பிணத்தைத் தோண்டி எடுக்கும் காட்சி. (அதற்கடுத்த இறுதிக் காட்சியை என்னால் யூகிக்க முடிந்தது, அட நெஜமாத்தாங்க. ஏனென்றால், படத்தின் ஆரம்பமே அங்குதானே ஆரம்பிக்கிறது)

இந்தப் படம் ஏன், மற்ற த்ரில்லர் வகைப் படங்களில் இருந்து தனித்து நிற்கிறது என்றால், எந்த 'த்ரில்லர்'' படமாக இருந்தாலும், இறுதியில் முடிச்சை அவிழ்க்கும்போது திடீரென புதுக் கதை வரும். (அதே கண்கள் படம் தவிர, ஏனென்றால், அதில் அந்தக் கதையை முன்பே அசோகன் சொல்லி விடுவார்).

ஆனால், இந்தப் படத்தில், கதை ஒரே நேர்க்கோட்டில் செல்கிறது, தன்னை அசிங்கமாக படம் எடுத்தவனை கொல்லும் மகள். அந்த பிணத்தை மறைக்கும் தாய், அதைப் பார்த்து விடும் இளைய மகள். கொலை செய்யப்பட்டவன் காவல் துறை உயர் அதிகாரியின் பையன். காவல்துறை விசாரணையில் இருந்தும், கொலைக் குற்றத்தில் இருந்தும் தனது குடும்பத்தைக் காப்பாற்றப் போராடும் குடும்பத் தலைவன். எப்படி என்பதுதான் படமே.

மோகன்லால் ஒரு அமைதியான,அடக்கமான குடும்பத் தலைவனாக வருகிறார். மகளை ஒரு காவல் துறை அதிகாரி அடிக்கும்போது கூட, , தடுக்கவே முயற்சி செய்கிறார். தமிழில்,அது கமலாக இருந்தாலும், தம்பி ராமையாவாக இருந்தாலும், திருப்பி ஒரு அடியாவது அடித்தால்தான் நமக்கு திருப்தியாக இருக்கும். பார்ப்போம்.

திரிஷ்யம் - கண்டிப்பாக பாருங்கள். சப் டைட்டில் இல்லாமலேயே படம் புரிந்தது.

புத்தகம்:

கடந்த இரண்டு வருடங்களாக புத்தக கண்காட்சிக்கு செல்லவில்லை. என்ன புத்தகம் கடைசியாக படித்தேன் என்று யோசித்தால், 'ஆனந்த விகடன்' கூட நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது. கல்யாணம் ஆகி விட்டால், மூளை மங்கி விடும் என்று படித்தது உண்மைதான் போல.

6174 என்ற புத்தகத்தைப் பற்றி அதிஷா எழுதியதைப் படித்தவுடன், அதை வாங்க வேண்டுமென்று தோன்றியது. இன்னமும் நினைவில்தான் உள்ளது. வாங்கலாம் என்றால், விலையைப் பார்த்து விட்டால், தங்கமணியிடம் இருந்து கொமட்டில் ஒரு குத்து விழும். 'அதே காசுக்கு பொடவை கேட்டா, 1008 சாக்கு சொல்ல வேண்டியது, புத்தகம் ஒரு கேடா' என்று. சரி. காலம் கனியும் வரை காத்திருப்போம்.

வீடு:

இந்த சென்னைப் பட்டணத்தில், எனக்கு ஒரு ஆகாயத்தில் (நான்காவது மாடி) காணி நிலமும், அதிலே ஒரு வீடும் கட்டித் தருவதாக சொல்லி, நான் காசையும் கட்டி, அவர்கள் வீட்டையும் கட்டி விட்டார்கள். சரிடா, சாவியைக் கொடுடா, என்றால், அரசுக்கு இன்னும் 'முக்கியமான' பேப்பர் போகவில்லை, என்று இழு இழுவென இழுக்கிறார்கள். இப்போது என்னடாவென்றால், தேர்தல் வந்து விட்டது, இன்னும் ஒரு ரெண்டு மாசம்தான் சார், ஒரு வருஷம் பொறுத்தீங்க, இன்னும் கொஞ்ச நாள் பொறுங்க சார்' என்று சொல்கிறார்கள். நண்பனிடம் புலம்பினால், அவன் சொன்னான்' 'சரி விடுறா, எனக்கு இந்தா இந்தான்னு சொல்லி மூணு வருஷம் ஆச்சு, இன்னும் கொடுக்கல' என்றான். சரி, அவனப் பாத்து ஆறுதல் அடஞ்சுக்குவோம்னு விட்டுட்டேன்.

பின்னூட்டம்:

யாராவது, ஏதாவது போட்டா உண்டு, அதுவம், இந்த பதிவு சம்பந்தமா இருந்தா பரவால்ல. இந்தப் பதிவுல 10 பின்னூட்டம் இருந்தாலும், அதுல ஒன்னு கூட பதிவுக்கு சம்பந்தமே இல்ல. (அதுல பாதிக்கு மேல நானே போட்டது). அந்த மாதிரி இதுக்கு இல்லாம இருந்தா பரவால்ல.

Wednesday, February 19, 2014

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

போன பதிவோட தொடர்ச்சியாத்தான் ஒரு பதிவு எழுதனும்னு இருந்தேன். ஆனா, ரொம்ப சீரியஸா இருக்கும் அப்டின்னு (இதான் செம காமெடியே என்கிறீர்களா) ஒரு சின்ன பிட்டு போட்டு விட்ரலாமுன்னு. 

சிவிகை விருதுகளின் தொடர்ச்சியாக இன்னும் மூன்று விருதுகளை அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன்.

'உண்மையிலேயே ரொம்ப தைரியந்தான்' சரவணன்:



இந்த விருதை எங்கேயும் எப்போதும் சரவணனுக்கும் சேர்த்தே அளிக்கிறேன். சட்டக்கல்லூரி கலவரத்தைக் கையில் எடுத்து 'இவன் வேற மாதிரி' என்று காட்டியதற்காக.

'சிறந்த மேலாளர்' மணி ரத்னம்:



எந்த ஒரு நிறுவனத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு வேலை செய்யும் யாராக இருந்தாலும் சொல்லுவது "என் மேனேஜருக்கு ஒன்னும் தெரியாது, நாங்க செய்யற வேலைய வச்சே பொழப்ப ஒட்டிக்கிட்டிருக்கார்' என்று சொல்லுவார்கள். 

மேலாளர் பணியைப் பொருத்தவரை வேலை செய்யத் தெரிய வேண்டியதில்லை, என்ன வேலை, எப்படி வேலை வாங்க வேண்டும் என்று மட்டும் தெரிந்தால் போதும். மணி அந்த கால MBA அல்லவா. அவரது படங்களில், அதில் வேலை செய்தவர்களின் அதிகபட்ச திறமை அந்தப் படத்தில் இருக்கும். இசை, ஒளிப்பதிவு, நடிப்பு, என்று அனைவரின் திறமையையும் உறிஞ்சி எடுத்திருப்பார். ஆனால், தனது வேலையில் சொதப்பியிருப்பார். எனவே, அவர் சிறந்த மேலாளர்.

'பழைய சோறு' ஜில்லா, வீரம்:



ஊரில், சோறு நிறைய மீதி ஆகி விட்டது என்றால் என்ன செய்வார்கள் என்றால், கொஞ்சம் புளியிலும், எழுமிச்சை, தயிர், தக்காளி என்று கிளறி விடுவார்கள். அது இன்னும் இரண்டு வேளைக்கு நன்றாகவே இருக்கும். முன்பெல்லாம், எங்கேயாவது வெளியூர் சென்றால் 'கட்டிசோறு கட்டிக்கொண்டு' போவார்கள். 

இதே போல ஒரு பழைய கதையை வைத்து, வேறு வேறு சுவைகளில் கிண்டித் தந்துள்ளனர். பக்கத்து கேரளாவில் த்ரிஷ்யம், மெமரீஸ், மும்பை போலிஸ் என்று பிரியாணியாக போட, இவர்களோ மொக்கை போடுகிறார்கள்.

இரு படங்களிலும், நாயகனை விபத்துக்கு உள்ளாக்குகின்றனர், கொலை செய்ய வரும் அல்லக்கையை உடைத்து யார் கொல்ல அனுப்பியது அல்லது யாரைக் கொல்ல அனுப்பியது என்று கண்டு பிடிகிறார்கள். தனக்கு நெருக்கமானவர்கள் காரில் தூங்குவதால், தூக்கம் கலையாமல் சண்டை போடுகிறார்கள். இரண்டிலும் ஒரு உருப்படியான காட்சி கூட இல்லை. எல்லாம் நம் தலை எழுத்து.

இளையராஜா vs ரஹ்மான்:

மக்களே யாரும் கோபப்பட வேண்டாம். பொறுமை, பொறுமை. அமைதி ஆகி விட்டீர்களா. சரி, இந்த மூன்றாம் கோணம் பதிவில், ஒரு குறிப்பிட்ட நிலைமையை (சிச்சுவேசன், ஸ் அப்பா) எடுத்து, அதில் ராஜா எவ்வாறு இசை அமைத்துள்ளார், ரஹ்மான் எவ்வாறு அமைத்துள்ளார் என்று சொல்லியிருப்பார். திட்டோ, பாராட்டோ, அந்தப் பதிவில் போய் இடவும்.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், தமிழில் 'தாண்டியா' பாட்டு என்றால் முதலில் நினைவுக்கு வருவது 'காதலர் தினம்' படத்தில் வரும் 'தாண்டியா ஆட்டமும் ஆட', ஏனெனில் பாடலிலேயே அந்த வரி வருகிறது,



அது இல்லாமல் நினைவுக்கு வரும் இன்னொரு பாடல் 'கலைஞன்' படத்தில் வரும் 'தில் பர் ஜானே' என்ற பாடல்.



இவை இரண்டில் எது சிறந்தது என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். அது உங்கள் விருப்பம். ஆனால், இவை தவிர வேறு ஏதாவது உள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை. தெரிந்தால் சொல்லலாம்.

மலையாள த்ரில்லர்கள்:

கடந்த வருடம் சிறந்த த்ரில்லர் படங்கள் வந்தது, எனக்கு தெரிந்து மலையாளத்தில்தான். ஒவ்வொன்றும் அட்டகாசம்.

மும்பை போலிஸ்: படத்தின் இறுதிக்கு முன்னே, ஒரு காட்சியில் கொலையாளியை யூகித்து விட்டாலும் (பிரித்விராஜ் கேமரா மூலம் கொலை நடந்த இடத்தில் கொலையாளி ஓடி வரும் வழியைப் பார்ப்பது), கொலைக்கான காரணம் எதிர்பாராதது. 

மெமரீஸ்: கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும், இதுவும் அட்டகாசமான படம்தான். இதில் கொலையாளியின் பெயர், ஏன் கொலை செய்கிறான் என்றெல்லாம் தெரியும், ஆனால் ஆள் யார் என்பதுதான் ஆட்டமே.

இன்னும் 'த்ரிஷ்யம்' பார்க்கவில்லை. இது மலையாளத்தில் இரண்டாவது சிறந்த த்ரில்லர் என்றும், முதலில் 'யவனிகா' என்ற படமும் உள்ளது என்று படித்தேன். அதையும் தரவிறக்கம் செய்துள்ளேன். பார்த்து விட்டு சொல்கிறேன்.

பொதுவாக இதுவரை எனக்கு வாய்த்த திரில்லர் படங்கள் மூன்று வகை. எல்லோருக்கும் இதுதான் என நினைக்கிறேன்.

படம் முழுக்க ஒரு வித பரபரப்பை உண்டாக்கி, அதைப் பூர்த்தி செய்யும் விதத்தில் முடிவு இருக்கும் (தமிழில் பிட்சா தவிர வேறு எதுவும் தோன்றவில்லை. மற்ற மொழிகளில் என்றால் கஹானி, மும்பை போலிஸ், லுசியா).

படம் முழுக்க ஒரு வித பரபரப்பை உண்டாக்கி, பொசுக்கென்று சப்பையாக முடிப்பது (நிறைய படங்கள், ராம், கலைஞன்)

படம் இழு இழுவென இழுத்து விட்டு, கடைசியில் படாரென ஒரு முடிச்சு அவிழ்ப்பது (பொம்மலாட்டம் அந்த கடைசி காட்சிக்காகவே அவ்வளவு மொக்கையைத் தாங்கிக் கொண்டேன், சமீபத்தில் தகராறு).

இது தவிர, சில படங்கள் சம்பந்தமே இல்லாமல் கடைசியில் டிவிஸ்ட் என்று சொதப்பலுக்கு மேல் சொதப்புவது (சுட்ட கதை, மங்காத்தா, வாமனன்)

அவ்வளவுதான் பிட்டு.. அடுத்து ஒரு சீரியஸ் பதிவு, அட சிரிக்காதீங்க..

Sunday, January 12, 2014

நாமக்கல் கல்விப் பண்ணைகள்

இதே தலைப்பில் ஏற்கனவே தமிழ் ஹிந்துவிலும், முரளிக்கண்ணன் வலைப்பதிவிலும் வந்து விட்டது. இருந்தாலும், நானும் அந்த ஊரைச் சேர்ந்தவன் என்ற முறையில் என் கருத்தையும் கூறுகிறேன். இதில் கூறப்பட்டுள்ளவை அனைத்தும் என்னுடைய சொந்த அனுபவக் கருத்துக்களே. ஆதாரங்கள் எதுவுமில்லை.

நாமக்கல்லில், தில்லைபுரம் என்ற பகுதி உள்ளது. அரசு பள்ளிகளுக்கு மிக அருகே உள்ள அந்த பகுதி கிட்டத்தட்ட 2001 வரை 'டியுஷன்புரம்' என்றே அழைக்கப்பட்டதாகும். அதுவரை ராசிபுரம் மற்றும் திருச்செங்கோட்டில் இரண்டு கல்விப் பண்ணைகள் இருந்தன. அங்கே 10ம் வகுப்பு முடித்த உங்களது குட்டிக் கோழிகளை ('அதை' அடிச்சா 'A' சான்றிதழ்தான்) அங்கே விட்டால், இரண்டு ஆண்டுகள் முடிவில், நுழைவுத்தேர்வும் முடித்து கண்டிப்பாக ஓரளவு நல்ல கொழுத்த பிராய்லர் கோழியாக மாற்றித் தருவார்கள்.

அதுவரை நாமக்கல் நகரில் தலை சிறந்த பள்ளிகளாக விளங்கியவை, நம்புங்கள் அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் தான். யாரும் மாநில அளவில சாதிக்கவில்லை என்றாலும், நல்ல தேர்ச்சி விகிதம், சராசரியாக நல்ல மதிப்பெண்கள் என்ற அளவில் இருந்தன.

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், அப்போது முதன் முதலாக சன் தொலைக்காட்சியில் மாவட்ட அளவில் சிறந்த 5 பள்ளிகள் என்று வந்த கருத்துக்கணிப்பில், நாமக்கல்லில் முதலிடம் பெற்ற பள்ளி 'அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் (தெற்கு)'. அதற்கடுத்த வருடங்களில் முதலிடம் 'மாற்றப்பட்டது'.

இதற்கு மிக முக்கிய காரணம், தில்லைபுரம். நாமக்கல் மாவட்டத்தின் அனைத்து தலை சிறந்த மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் அங்கேதான் தனி வகுப்பு எடுப்பார்கள். 5 மணிக்கு மேல் அந்த பகுதியே சும்மா களை கட்டும். நாமக்கல் நகரை சுற்றி உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவ மாணவியர் ஒரே இடத்தில் கூடினால் சும்மாவா?.

அப்போது அந்த ஆசிரியர்கள் யாரும் யாரையும் 'பிராய்லர்' கோழியாக மாற்றவில்லை. ஏன், எதற்கு, எப்படி என்று சொல்லுவார்கள். அதைக் கற்றுக்கொண்டோருக்கு அறிவு வளர்ந்தது. பெண்களை மட்டும் பார்க்க வந்தோருக்கு, சரி விடுங்க.

மார்ச் மாத இறுதியில், தனித்தனியாக உள்ள ஆசிரியர்கள்  (எனக்குத் தெரிந்த வரை) 3 குழுவாக இணைந்து நுழைவுத் தேர்வுக்கு வகுப்பு எடுப்பார்கள். ஒரு பாடத்திற்கு இரண்டு முதல் மூன்று ஆசிரியர்கள், இரண்டு ஆண்டுகளாக படித்த பாடங்களை 40 நாட்களில் அட்டகாசமாக நினைவூட்டுவர். ராசிபுரத்தில் உள்ள பள்ளி அப்போது இதற்கு பயங்கர புகழ். ஏனென்றால் அங்கே 'ராத்தங்கல்' கட்டாயம். பணமும் அதிகம். எனவே, நல்ல பள்ளி.

2001 மார்ச்சில், அந்த 3 குழு சற்றே உடைந்து, ஒரு புதுக்குழு சேர்ந்து, காவெட்டிப்பட்டியில், தற்போது பரபரப்பாக பேசப்படும் 'குறிஞ்சி' நுழைவுத் தேர்வு பயிற்சி மையம் ஆரம்பித்தனர். அதே ஆண்டு இறுதியில், அங்கே மேல்நிலைப்பள்ளியும் தொடங்கப்பட்டது. உடனே, அரசுப் பள்ளிகளில் படித்த பலர், அங்கிருந்து வேரோடு பிடுங்கப்பட்டு, இங்கே கொண்டு வந்து சேர்க்கப்பட்டனர்.

அந்த ஆண்டில், ஓரளவு நல்ல மதிப்பெண்கள் பெற்று மாணவர்கள் தேறினர். அடுத்த ஆண்டிலிருந்து அரசுப் பள்ளிகளின் சேர்க்கை குறைய ஆரம்பித்தது. எல்லா பெற்றோர்களும், அரசுப் பள்ளியில் சேர்ந்தால் எப்படியும் டியுஷன் போக வேண்டும், ஆனால், அந்தப் பள்ளியில் அதே ஆசிரியர்கள் முழு நேரமும் எடுக்கிறார்களே என்று காரணம் சொன்னனர். 

குறிஞ்சி பள்ளி சம்பாதிப்பதைப் பார்த்ததும், இங்கே டியுஷன் எடுத்த மற்ற ஆசிரியர்களுக்கும் கை அரிக்க ஆரம்பித்தது. அவ்வளவுதான். அதன் பின் ஆரம்பித்தது மாணவர்களின் அழிவு காலம். ரெட்டிப்பட்டி, அணியாபுரம், நல்லி பாளையம் என்று பல இடங்களில் பல பள்ளிகள் தொடங்கப்பட்டன. எந்த பள்ளிகள் அதிகம் பணம் பிடுங்கி, அதிக விதிமுறைகளை விதிக்கிறார்களோ, அவைகளே நல்ல பள்ளிகள் என்று அடையாளம் காணப்பட்டன.

இன்னொரு முக்கியமான விஷயம், இந்த அனைத்து தனியார் பள்ளிகளிலும் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் அனைவரும், அரசு ஆசிரியர்கள், ஒரு காலத்தில் அவர்களிடம் டியுஷன் போவதை பெருமையாக கருதப்பட்டவர்கள். எனவே, அந்த தனியார் பள்ளிகள், அவர்கள் வேலை பார்க்கும் அரசுப் பள்ளிகளை விட சிறந்தவையாக மாறின. மாற்றப்பட்டன.

ஆரம்பத்தில் எல்லாப் பள்ளிகளும் ஓரளவு நன்றாகத்தான் இருந்தன. ஆனால், இந்த நுழைவுத் தேர்வுகள் எப்போது நீக்கப்பட்டனவோ, அப்போது பிடித்தது சனியன். ஏனென்றால், நுழைவுத் தேர்வுக்கு மனப்பாடம் செய்வதை விட, சற்றே புரிந்து படிக்க வேண்டும். ஆனால், நுழைவுத் தேர்வு இல்லை எனும்போது, அரசுப் பொதுத் தேர்வில் மட்டும் முழு மதிப்பெண் எடுத்தால் போதும். அப்போதுதான், பள்ளிகள் பண்ணைகளாக மாறின.

மாணவர்கள் பொதுவாக தவறு செய்வது ஒரு மதிப்பெண் வினாக்களில் தான். மற்றபடி, மனப்பாடம் செய்தால் மற்ற பதில்களை எழுதி விடலாம். எனவே, மாணவர்கள் முதலில் நன்றாக 'தட்ட' வைக்கிறார்கள்.(கட்டுரையில் குறிப்பிடப்பட்டது போல, மெமரி கார்டாக மாற்றப்படுகிறார்கள்). மற்றபடி, தேர்வின் போது, எந்த மாணவர்களும் அந்த ஒரு மதிப்பெண் வினாக்கள் 'எப்படியாவது' சரியாக எழுதி விடுவார்கள். (ஆனால், நீங்கள் எந்த மாணவனைக் கேட்டாலும், அடித்துக் கேட்டாலும் கூட, அந்த உண்மையை அவர்கள் சொல்ல மாட்டார்கள்)

மாநில அளவில் இடங்கள் வாங்கியவுடன், மீண்டும் அதை தக்க வைத்துக் கொள்வதற்காக, 'எந்த அளவிற்கும்' இறங்க தயாராக உள்ளனர். அதில் முதலாவதுதான், மாணவர்களை 'கோழிகளாக' மாற்றுவது.

ஆசிரியல் தொழில் புனிதமானது என்றெல்லாம் வசனம் பேச வேண்டாம். ஆனால், அந்தத் தொழிலை, உலகின் மற்ற தொழிலை விட கீழ்த்தரமாக ஆக்கி விட்டார்கள். இது போன்ற பள்ளிகளில் படிப்பவர்களுக்கு மதிப்பெண்கள் கிடைக்கிறதே தவிர 'கல்வி' கிடைக்கிறதா என்றும் யாரும் பார்ப்பதில்லை.

"எங்க மேல மட்டும்தான் தப்பா, இந்த ஸ்கூலே இப்படித்தான்னு எல்லோருக்கும் தெரியும், தெரிஞ்சுதானே சேத்துறாங்க" என்று எந்த ஆசிரியரும் போங்க வேண்டாம். இந்தப் பதிவு இன்னும் தொடரும்.


இதில் தவறு எங்கே என்றால், மாறி மாறி குற்றம் சொல்லுவார்கள். இப்போதுதானே பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் பற்றி சொன்னேன். இன்னும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பற்றியும் ஒரு பதிவு உண்டு.



இதில் என்னுடைய முக்கியமான கருத்து. நுழைவுத் தேர்வு தேவை. நுழைவுத் தேர்வு வைப்பதால் பாதிக்கப்பட்டது கிராமப்புற மாணவர்கள் கிடையாது, பணமிருந்தும், படிப்பு வராத மாணவர்களே.

இதில் உச்சகட்ட நகைச்சுவை என்னவென்றால், அந்தப் பள்ளிகளில் பணி புரியும்(?) தலை சிறந்த (அரசு) ஆசிரியர்களின் வாரிசுகள் யாருமே, எனக்குத் தெரிந்த வரை, உருப்படி இல்லை. அவர்கள் பாணியிலே சொல்வதென்றால், "பன்னெண்டாவதுல இவ்ளோதான் வாங்கினியா, அந்த ஸ்கூல்ல படிச்சேவா?"