சில பல காரணங்களால் கடந்த இரண்டு மாதங்களாக பதிவு போட முடியவில்லை. அது மட்டுமில்லாமல் அஞ்சானின் பாதிப்பில் இருந்தே இன்னும் மீளவில்லை. எனவே சில பல பிட்டுக்கள் மட்டும். புது வீடு: 8 வருடங்களாக இருந்த வாடகை வீட்டிலிருந்து, சொந்த வீட்டிற்கு மாறியாகி விட்டது. வேளச்சேரியில் இருந்து மீண்டும் குரோம்பேட்டை. கல்லூரிக் காலம் கிழக்கு குரோம்பேட்டை, தற்போது மேற்கு குரோம்பேட்டை. என்னதான் இருந்தாலும், 8 வருடங்கள் ஒரே இடத்தில் இருந்து விட்டு மாறும்போது சொந்த வீடு என்றாலும், இன்னும் செட் ஆகவே இல்லை.
நண்பர்களுடன் 5 வருடங்கள், சரியாக எனக்கு திருமணம் ஆகும்போது நண்பர்கள் ஆன் சைட், சொந்த வீடு என கலைய, நானே வீட்டுக்காரருடன் பேசி, வாடகை சற்றே குறைத்து, குடியேறி 3 வருடங்களும் முடிந்து விட்டது. சொந்த வீட்டை வாடகைக்கு விடலாம் என்றால் "அதெப்புடி, சொந்த வீட்டை விட்டுட்டு வாடகை வீட்டுல இருக்கிறது" என்று எல்லோரும் பொங்க, மாறியாகி விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக நிறைய வேலைகள். எல்லாம் முடித்து இணையத்தை இணைக்க இவ்வளவு நாட்களாகி விட்டது. பயணம்: முன்பு அலுவலகம் செல்ல தூரம் குறைவு. அதற்கே 'உயிர் பயம்'. இப்போதோ, பயண தூரம் இரு மடங்கு, அதுவும் GST சாலை. நள்ளிரவில் திரும்பும்போது எந்த சிக்னலிலும் நிற்பதில்லை. நின்றால் காலிதான். அதுவும் இல்லாமல் மெட்ரோ வேலை வேறு நடப்பதால், திடீரென குறுகிய சாலைகள் வந்து விடும். நம் பாடு திண்டாட்டம்தான். எதிர் திசையில் நம்மை நோக்கி (அவ்வளவாக) வர மாட்டார்கள் என்றாலும், சற்று கவனக் குறைவாக இருந்தால், நம்மை அரைத்து கூழாக்கி விடுவார்கள். கவனம். விமர்சனம்: அஞ்சானுக்குப் பிறகு நன்றாக டியூன் ஆகி இருந்ததால், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் மட்டும் பார்த்தேன். அதன் பிறகு தினமும் வேலை நிறைய வந்ததால், தியேட்டருக்கே போகவில்லை. நீண்ட நாட்களுக்குப் பின் 'கத்தி' பார்த்தேன். படத்திலும், படத்தைப் பற்றியும் 1000 சர்ச்சைகள் இருந்தாலும், கூறப்பட்டுள்ள கருத்து மிக முக்கியம். மற்றபடி அரண்மனை, சலீம், ஜீவா, மெட்ராஸ் போன்ற படங்களை தரவிறக்கம் செய்தே பார்த்தேன். எல்லாமே நேரத்தைக் கடத்த உதவும். மற்றபடி ஒன்றுமில்லை. அரசியல்: மக்களின் முதல்வரின் ஆணைக்கிணங்க, மாக்களின் முதல்வர் நாடாள, வாயில் கை சூப்பிக் கொண்டு நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டும், பதிவிட்டுக் கொண்டும், மக்களா அல்லது மாக்களா என்று தெரியாமல் இருக்கிறோம். இப்படியே போனால், "வெளங்கிரும்".
நிகழ்வுகள்: பாலியல் பலாத்காரம். முன்பெல்லாம் ஒரு கிளுகிளுப்பான செய்தியாக படித்து விட்டு போய் விடுவேன். இப்போது 2 வயது பெண்ணுக்கு தகப்பன் என்று ஆனவுடன், குழந்தையை யார் தூக்கினாலும் மனது 'பகீர்' என்கிறது. இதற்கு முன் இப்படியெல்லாம் நடக்கவில்லையா, அல்லது இப்போதுதான் இந்த செய்திகளை வெளியிடுகிறார்களா? என்றே தெரியவில்லை. நமது செய்திகளை எப்போதும் நம்பக்கூடாது என்பதற்கான மிகச் சிறந்த உதாரணம், காவல் நிலையத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட ஒரு இளைஞனின் செய்திகள். ஆறு வேறு வேறு தமிழ் இணையங்களில் இருந்து எடுத்துள்ளவை. தினமலர் தினத்தந்தி தமிழ் ஹிந்து விகடன் ஒன் இந்தியா தினமணி
இவர்களில் சிறந்த திரைக்கதைக்கான முதல் பரிசு 'தின மலர்'. இரண்டாம் பரிசு 'தின தந்தி'. ஏன் தினமலருக்கு என்றால், அந்த SI கொல்லப்பட்ட நபரை தம்பி போல பார்த்துக் கொண்டார் என்றும், கொல்லப்பட்ட நபரும் அந்த SIயை அண்ணா என்றுதான் அழைப்பார் என்றும் ஒரு செய்தி இருந்தது. அந்த செய்தியை இப்போது காணவில்லை. அதற்குள் மாக்களின் அடச்சே, மக்களின் முதல்வருக்கு குழம்பிய குட்டையில் இருந்து மீன் கிடைத்து விட்டதால், இந்த செய்திகள் இத்தோடு நிறுத்தப்படுகின்றன. மற்றபடி உருப்படியான ஒரு செய்தி என்றால் தமிழ் ஹிந்துவில் வரும் 'மெல்லத் தமிழன் இனி..!' என்ற தொடர். குடியினால் நிகழும் எதிர் வினைகளை, உண்மை நிகழ்வுகளைப் பற்றிய தொடர். படியுங்கள்..
நான் பதிவெழுத ஆரம்பித்த பின், இது முறை கூட முதல் நாள் முதல் ஷோ பார்த்ததில்லை. அதற்கு முன் நான் முதல் நாள் முதல் ஷோ பார்த்த எந்த எந்தப் படமும் ஓடியதில்லை (கண்ணுக்குள் நிலவு, ஷாக், பீமா, அருள் இன்னும் சில). அதை விட முக்கியம் எனக்கு பிடித்ததேயில்லை. (நிறைய ஓடாத படங்கள்தான் நமக்குப் பிடிக்குமே, அன்பே சிவம் போல) ஆனால், தவிர்க்க இயலாத காரணங்களால்(?) இன்று முதல் நாள் முதல் ஷோ அஞ்சான் பார்த்து விட்டேன். இந்தப் படம் ஓடினால் "எப்படி ஓடியது?" என்றெல்லாம் கேள்வி தேவையில்லை. ஏழாம் அறிவு, வேலாயுதம், ஆரம்பம், ஜில்லா, வீரம் எல்லாம் எப்படி ஓடியதோ, அதே போல இதுவும் ஓடியிருக்கும் என்று நினைக்க வேண்டியதுதான். அஞ்சானும் அந்தப் பட்டியலில் சேர்ந்து விட்டது. இப்படியொரு படத்திற்கு என்னுடைய மாதமொரு பதிவு என்ற சபதத்தை உடைத்து, 75ஆவது பதிவையும் (விளம்பரம்) போடுவது மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும், மக்களின் நலன் கருதி வெளியிடுகிறேன். கதை என்று பார்த்தால், தன் சகோதரன் ராஜுவைத் தேடி மும்பை வருகிறார் கிருஷ்ணா எனும் சூர்யா. இங்கு வந்தால்தான் தெரிகிறது ராஜூ ஒரு பெரிய ரவுடி, அவனையும் அவனது உயிர் நண்பனையும் எதிரிகளும் துரோகிகளும் சேர்ந்து கொன்று விட்டனர் என்று. இவனையும் கொல்ல வேண்டும் என்று அந்த கும்பல் துரத்த, சில பல திருப்பங்களுடன் இனிதே படம் முடிகிறது. இப்படி எல்லாம் சொல்ல வேண்டும் என்று ஆசைதான். ஆனால், 'டிவிஸ்ட்' என்று லிங்குசாமி எதெல்லாம் நினைக்கிறாரோ, அது எல்லாம் குழந்தை கூட சொல்லும். படம் பார்க்கும்போது, எனக்கு கேபிள் சங்கர் எழுதிய அலெக்ஸ் பாண்டியன் விமர்சனம்தான் நினைவுக்கு வந்தது. லிங்கு சார், கே(G)ட்ட அடைக்கிறது எல்லாம் ஒரு படத்துல சரி. இன்னும் பத்து படத்துக்கு அதே சீன வக்கினும்னு நெனச்சா எப்படி. இப்பல்லாம் ரெண்டு வயசு கொழந்தையே, ஒரு தடவ பார்த்த பாட்ட, அடுத்த வாட்டி போட்டா மாத்த சொல்லுது (அனுபவம்).
இது சூர்யாவுக்காக பண்ணுன மூணாவது கதையாம். மீதி இருந்த ரெண்டு கதைல ஒன்னத்தான் கார்த்தி அடுத்து நடிக்கப் போற படமாம். மூணாவது கதையே கேவலமா இருக்குன்னா, மீதி ரெண்டு இன்னும் எவ்ளோ கேவலமா இருக்கும்? ப்பா, முடியல. படத்துல, கிருஷ்ணாகிட்ட ஒருத்தர் கதை சொல்லுவார் "இந்த எடத்துக்கு வர ராஜுவும், சந்துருவும் என்ன வெல கொடுத்தாங்க தெரியுமா?" என்பார். உடனே, பிளாஷ்பேக் வரும். சரி ஏதோ அழுத்தமான காட்சிகள் வரும் என்றால், ஐட்டம் சாங் வருகிறது. அது முடிந்தவுடன் மீண்டும் அதே காட்சி வருகிறது. என்ன எழவோ?
இந்த கண்றாவி போதாதென்று காதல் வேறு. "நிதானமா நின்னு யோசி, உனக்கானவன் உன் கண்ணுல படுவான்" என்று நாயகிக்கு நாயகனே சொல்லுவார் (பிச்சக்காரனுக்கு செக்யுரிட்டி பிச்சக்காரனே, இதுதான் எனக்கும் தோணியது). அப்படி நாயகி யோசிக்கும்போது, நாயகன் அந்தப் பக்கம் போய், துப்பாகியால் ஒருவனை சுடுவார். உடனே நாயகிக்கு காதல் வருகிறது. (இந்த வகையில் எனக்கு இயக்குனர் விஷ்ணுவர்தன் பரவாயில்லை. பில்லா படத்திலும் சரி, ஆரம்பம் படத்திலும் சரி, தேவையில்லாத காதல் காட்சிகள் நாயகன் அஜித்துக்கு இல்லை. அவரக்கு அஜித்தின் மேல் என்ன எரிச்சலோ) படத்தில் நகைச்சுவைக்கு குறையே இல்லை. சூரி இருப்பதால் சொல்லவில்லை. அது மொக்கை. நாயகன் ஒரு பெரிய தாதா. நாயகியைக் கடத்தி விட்டதாக போலிஸ் அவரை இரண்டு முறை துரத்துகிறது. நாயகி காதலில் விழுந்து, நாயகனுடன் சுற்றுபோது மீண்டும் நாயகியைக் காணாமல் காவல்துறை தேடுகிறது. அப்போது நாயகனுக்கு போன் பண்ணி "இந்த முறையும் அந்தப் பெண்ணைக் காணவில்லை, ஆனால் நாங்கள் உங்களை சந்தேகப்படவில்லை. இது பார் யுவர் இன்பார்மேசன்" என்பார்கள். உடனே நாயகன் "இல்ல அவ என்னோடத்தான் இருக்கா, நாங்க லவ் பண்றோம். திஸ் இஸ் பார் யுவர் இன்பார்மேசன்" என்பார். இந்த லட்சணத்தில் பெண்ணின் அப்பா, காவல் துறை உயர் அதிகாரி வேறு. இனிமே நான் ஆபிஸ்ல மெயில் அனுப்பும்போது எப்படி FYI போடுவேன்? கன்றாவிடா. அதே போல உயிருக்கு பயந்து ஓடி ஒளிபவன், ஜாலியாக குதிரைப் பந்தயம் பார்த்துகொண்டிருப்பான். திருடும் ஏழை சிறுவன், ஆப்பிள் லாப்டாப்பை திறந்து உள்ளே உள்ள போட்டோவை பார்க்கிறான். ராஜு பாயை, ஊரில் உள்ள அனைவரும் பார்க்கும் இடங்களில்தான் சுற்றுகிறார், ஆனால் பாருங்கள் வில்லன்களுக்கு மட்டும் எங்கே என்று தெரிய மாட்டேன்கிறது.
படத்தில் பரட்டை தாடி மீசை எல்லாம் வைத்து பக்கி மாதிரி ஒரு பாத்திரம் உள்ளது. "ராஜூ பாய்" என்று கத்துமே, அதேதான். அது எதற்கு இந்தப் படத்தில் என்றே தெரியவில்லை. அதே போல போலிஸ். நீங்கள் இந்த ட்ரைலரில் பார்க்கும் அனைத்துக் காட்சிகளுமே, படத்தின் கதையோட்டத்தில் மொக்கையாகவே இருக்கும். படத்தில் நாயகியைக் கடத்துவார்கள். சரி ரொம்ப சீரியசான சீன் என்று பார்த்தால், "நீங்க என்ன கடத்தல, நானாத்தான் வந்தேன், அதனால, இது உங்க கணக்குல வராது" என்பார். அப்போதே உஷாராகி கிளம்பியிருக்க வேண்டும். படத்தில் சூர்யா வேறு அடிக்கடி "நீ சாவுரதையும் நாந்தான் முடிவு பண்ணனும்" என்பார். அது படம் பார்ப்பவர்களைக் குறிக்கும் போல. இந்தப் படம் பார்க்கும்போது, உங்களுக்கு கண்டிப்பாக லிங்குசாமியின் எல்லா படங்களும் நினைவுக்கு வரும். காட்சிகள் அது போல உள்ளது. பீமா படத்தில், திடீரென ரகுவரனைக் கடத்தி வைத்திருப்பார்கள் எப்படி என்றெல்லாம் தெரியாது. அதே போல இதிலும் வரும். ஆனால், கொஞ்சம் உஷாராக, எப்படி என்று இரு காட்சிகள் வைத்து விட்டார்கள். கடைசி சண்டையில் ஒரு மிகப்பெரிய டிவிஸ்ட் உள்ளது. ரொம்பவும் எதிர்பார்க்க வேண்டாம். அது ஏற்கனவே ஜனா என்ற மொக்கைப் படத்தில் வந்து விட்டது. படத்தில் நல்லதே இல்லையா? இரண்டு பாடல்களும், சில இடங்களில் பின்னணி இசையும் பரவாயில்லை. ஒளிப்பதிவும் பரவாயில்லை. மற்றபடி சமந்தா வரும் பாடல்களில் ஏன் ஒரு பட்டனை மட்டும் போட்டிருந்தாரோ? ஒரு வேளை அதையும் கழட்டி விட்டிருந்தால் இன்னும், ம்ம். படத்தில் என்னைக் கவர்ந்த காட்சி, நாணயம் சுண்டி விட்டு விழுவதற்குள் அனைவரையும் வீழ்த்துவது. இது இரண்டு இடங்களில் இரு வேறு பாத்திரங்களுக்கு வரும். அது அவர்களின் நட்பின் புரிதலையும் காட்டும். படம் பார்க்கவே முடியாதா என்றால், என்னால் முடியவில்லை. உங்களுக்கு சூர்யா பிடிக்கும் என்றால் சரி (சமந்தாவென்றாலும் சரி). மற்றபடி, கொஞ்சம் கஷ்டம்தான். மாற்றான் - தோற்றான். அஞ்சான் - நோஞ்சான். சூர்யா, நீ வேற வேலை இருந்தா போய் பார்யா. எனக்கென்னவோ சிவகுமார் குடும்பத்திற்கே யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டனர் என்று நினைக்கிறேன். எதற்கும் ஒரு பரிகாரம் செய்வது நல்லது. லிங்குசாமி சார், நீங்கள் படங்களை வெளியிடுவதோடு மற்றும் நிறுத்திக்கொள்ளலாம். முடியாது இப்படித்தான் என்று படம் எடுத்து எங்களைக் கொல்லலாம் என்று என்ன வேண்டாம். முடியல சார், சத்தியமா. கடைசியாக ஒன்று. படத்தில், எல்லோரும் ராஜூ பாய், ராஜூ பாய் என்று கத்துவார்கள், பக்கத்தில் இருந்தவர் மெதுவாக சொன்னார் "ராஜூ பாய்தாங்க, ராஜி, ராஜாத்தில்லாம் தாங்க கேர்ள்". அஞ்சான் பார்க்க தேவை, கொஞ்சம் அம்ருதாஞ்சன். அம்புட்டுதேன். "நீ என்ன பெரிய இவனா? முடிஞ்சா நீ ஒரு நல்ல படமா எடேன்" என்பவர்களின் கவனத்திற்கு மட்டும்.
நீங்கள் சரவணபவன் போய் சாப்பிடுகிறீர்கள். சாப்பாட்டில் ஏதோ ஒரு குறை. உடனே நீங்கள் உங்கள் முகப்புத்தகத்திலோ, கீச்சுகளிலோ இட்டு விடுகிறீர்கள். உடனே அந்த மேலாளர், "சார், சும்மா கொற சொல்லாதீங்க. நீங்க வேணும்னா வந்து இந்த ஹோட்டல நடத்திப் பாருங்க" என்றால் என்ன சொல்வீர்களோ அதே பதிலை எடுத்துக் கொள்ளலாம். அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!!!
இந்த முறை, நிஜமாகவே சுட சுட விமர்சனம், இல்ல இல்ல என்னுடைய கருத்துக்கள்தான். தங்கமணி வேறு ஊரில் இல்லை. வந்த இரண்டு படங்களும் சரி, ஏற்கனவே வந்த இரண்டு படங்களும் சரி, எல்லாமே நன்றாக உள்ளது என்று சொல்லும் போது எப்படி பார்க்காமல் இருக்க முடியும்? அது மட்டும் இல்லாமல் வேளச்சேரியில் இருப்பதால் உள்ள வசதி என்னவென்றால், நடந்து போய், பீனிக்ஸ் மாலில் படம் பார்க்கலாம். அப்படி இல்லையா, 'விடுறா S2க்கு' என போகலாம். அப்படியும் இல்லையா, 'துணையிருப்பாள் ராஜலக்ஷ்மி'. ஜிகர்தண்டா:
ஞாயிறு மாலை ஆறு மணியளவில், திடீரென மின்சாரம் தடை, ஆனால், சம்சாரம் தடை இல்லை. வீட்டில் உட்கார்ந்து என்ன செய்ய? உடனே கிளம்பி ராஜலக்ஷ்மி வந்து "பாத்துட்டோம்ல, நாங்கள்லாம் யாரு?". ஒரு இளம் இயக்குனர் ரவுடிகள் பற்றி படம் எடுக்க, மதுரைக்கு வந்து ஒரு ரவுடியை தொடர முயற்சிக்க, ஒரு கட்டத்தில் அவனிடம் மாட்டிக்கொள்ள, என் கதையில் நானே நடிக்கிறேன் என்று ரவுடி சொல்ல, அதன் பின் நடக்கும் சம்பவங்களே இந்த படம்.
உண்மையில் இந்தப் படம் எனக்கு பிடித்ததா இல்லையா என்றே சொல்லத் தெரியவில்லை. உண்மையிலேயே ஒளிப்பதிவும், இசையும் ஆங்கிலப்படங்களுக்கு இணையாகவே இருந்தன. ஆனால், எனக்குத்தான் என்னவோ போலிருந்தது. (சன் டிவியில் வரும் மஹாபாரதம் ஏன் நமக்கு பிடிக்கவில்லை, நாம் பக்கத்து வீட்டுக்காரர்கள் போல உள்ளவர்கள் அதில் நடிப்பதால். அதுவே விஜய் டிவியில் வரும் டப்பிங் நன்றாக இருப்பது போல தோன்றும். இதுவும் அது போலத்தான் இருந்தது.)
படத்தின் முற்பாதியில் அதிரடியாக பாயும் கதை, இரண்டாம் பாதியில் அப்படியே காமெடியாக (வடிவேலுக்கு வரும் அறிமுக காட்சி போல) மாறிவிட்டது. துரோகம் செய்யும் அடியாளைக் கண்டு பிடிக்க திட்டங்களை சொல்லி, கையும் களவுமாகப் பிடிப்பது நன்றாக இருந்தாலும், காமிரா முன் உட்கார்ந்து தாங்கள் செய்த கொலைகளை விலாவாரியாக சொல்வது என்ன லாஜிக்கோ?
வசூல் ராஜா படத்தில், பிரபு கமலிடம் சொல்லுவார் "நீ பாட்டுக்கு இங்க வந்துட்ட, அதனால, உன்ன டொக்கு ஆயிட்டன்னு சொல்றாங்க' என்பார். உடனே, கமல் கோவமாக "அப்டியா, யாரு" என்று கேட்டு விட்டு "சரி, நாம படிக்க வந்துட்டோம், படிக்கிற வேலயைப் பாப்போம்" என்பார். அதுதான் இரண்டாம் பாதியில் நினைவுக்கு வந்தது. கண்டிப்பாக, வித்தியாசமான படம், (கொஞ்சம் கூட பிட்சா படம் நினைவுக்கு வந்து விடக்கூடாது என்று மெனக்கெட்டுள்ளார்.) அதனாலேயே அனைவருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. முதல் பாதியில், அளவோடு வரும் நகைச்சுவை, இரண்டாம் பாதியில் மிஞ்சியது போல தோன்றியது. அதிலும் குறிப்பாக இறுதிக்காட்சிகள். (சொன்னால் சுவாரஸ்யம் போய் விடும்.) இந்தப் படத்தில் காதல் என்ற ஒன்று தேவையே இல்லை. அப்படி ஒன்றும் உண்மைக் காதலாகவும் அது இல்லை. அதை நீக்கி விட்டு, நீளத்தை குறைக்கலாம். மற்றபடி பல காட்சிகள் அட்டகாசம். ஒரே ஷாட்டில் வரும், தியேட்டரில் நடக்கும் கொலை முயற்சி, அடியாளின் துரோகத்தைக் கண்டுபிடிப்பது, நடிக்க முயற்சி செய்யும் காட்சிகள், இன்னும் பல. ராஜலக்ஷ்மியில் கொடுத்த 80 ரூவாய்க்கு, இதுக்கு மேல நான் கூவக் கூடாது. சதுரங்க வேட்டை:
வாயையும் மூளையும் மட்டும் மூலதனமாக வைத்து, மற்றவர்களின் ஆசையை பணமாக மாற்றி வாழும் ஆள், திருந்தி வாழ நினைக்கும்போது முன் செய்த பாவங்கள் தொடர்ந்து வர, என்ன ஆயிற்று என்பதே கதை. மைசூரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, ஒரு நாள், போன் பேசிக்கொண்டே நடந்து போய்க் கொண்டிருந்தேன். திடீரென ஒரு 40 வயதுள்ள ஒரு ஆள் வந்து "ஸார், நீங்க தமிழா, தயவு செஞ்சு உதவி பண்ணுங்க ஸார், ஊர்ல இருந்து இங்க சொந்தக்காரன் ஒருத்தன பாக்கவந்தேன், எல்லாத்தையும் திருடிட்டாங்க, போன் நம்பரும் ஞாபகம் இல்ல, 100 ரூபா கொடுத்தா நான் ஏன் சொந்த ஊருக்கே திரும்பி போயிடுவேன் ஸார், உங்க போன் நம்பர் மட்டும் கொடுங்க. போய் போன் பண்ணி, உங்க அட்ரஸ் வாங்கி காச அனுப்பறேன்" என்றான். நான் புத்திசாலித்தனமாக "நானே வந்து டிக்கட் எடுத்து தரேன், வாங்க" என்றேன். அவனும் "சாமி, சாமி, கோடி புண்ணியம் வாங்க" என்றான். நான் சற்றே குழம்பி, "சரி, இந்தாங்க பணம், என் போன் நம்பர். இங்கிருந்து டவுன் பஸ் புடிச்சு, சிட்டி பஸ் ஸ்டாண்ட் போய், உங்க ஊர் போங்க" என்று அனுப்பினேன். 9 வருடங்கள் ஆகி விட்டது, இன்னும் போன் வரவில்லை. இது பரிதாபத்தில் நான் ஏமாந்த கதை. ஆனால், படத்தில் இது போல காட்சிகள் இல்லை. ஆனால் ஒரு வசனம் உண்டு. "கருணை காட்டுறது முக்கியம் இல்லை, ஆனா, அந்த கருணையை எப்படி காசாக்குறதுன்னு யோசி" சென்னையில் ஒரு நாள், திடீரென ஒரு நண்பன் அழைத்தான். "டேய், நல்லா இருக்கியா, உன்ன பாக்கனும்போல இருக்கு, திருவான்மியூர் வாயேன். ஜெயந்தி தியேட்டர் கிட்ட நில்லு, நானே உன்ன வந்து கூட்டிப் போறேன்" என்றான். நானும்,எங்களுக்கு பொதுவான இன்னொரு நண்பனுடன் வந்து நின்றேன். இருவருமே பயங்கரமாக யோசித்தோம். "இம்புட்டு பாசத்தோட கூப்பிடுறான்? என்னவா இருக்கும்?". வந்து ஒரு சந்துக்குள் உள்ள பெரிய வீட்டுக்கு கூட்டிப் போனான். "ஒண்ணுமில்ல, ஒரு சின்ன டிஸ்கஸன்" என்றான். திடீரென, ஒரு டிப் டாப் வாலிபர் வந்து, ஒண்ணுக்கு ரெண்டுக்கு என்று ஆத்தோ ஆத்தென்று ஆத்தி விட்டு "நான் என்னோட சாஃப்ட்வேர் வேலய, விட்டுட்டு, இதுக்காக ஆள் பிடிச்சு, ஹோண்டா சிட்டி கார வாங்கியிருக்கேன். நீங்களும் சேருங்க" என்றான். இது என் நண்பன் ஆசையில் ஏமாந்த கதை. இதுதான் படந்தின் முக்கிய அம்சம். அடுத்தவன் பேராசையைத் தூண்டி பணம் பறிப்பது. அதற்கான வசனம் "நான் யாரையும் போய் ஏமாத்துல. ஏமாற தயாரா இருந்தவங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்தேன்"
அதன் பின் நாங்கள் என் நண்பனிடம் பேசியது எல்லாம் சென்சாரில் கட் ஆகிவிடும். அந்த டிப் டாப் வாலிபரின் பேச்சு அப்படியே அச்சு அசலாக இந்தப் படத்தில் வந்தது. என்ன, கார்தான் ஹோண்டா சிட்டியில் இருந்து BMW ஆக மாறி விட்டது. நாம் பல முறை வாழ்க்கையில் ஏமாற்றப்படுகிறோம் என்பதையே உணர்வதில்லை. அப்படியே தெரிந்தாலும், அதை அப்படியே துடைத்து விட்டு அடுத்த முறை ஏமாற தயாராகிறோம். கேட்டால் "எல்லோரையும் ஒரே மாதிரி நெனக்கலாமா" என்கிறோம்.
படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது, நகைக்கடை காட்சிதான், அதன் பின் MLM மற்ற அனைத்திலும் அவர்கள் குறிப்பிட்ட ஒருவரை மட்டுமே ஏமாறுகின்றனர். (சரி ஈமு மேட்டர் ஓகே). அதிலும் குறிப்பாக எங்கெங்கு மக்கள் ஏமாந்தனரோ, அதே இடங்களைத் தேர்வு செய்தது அருமை.
இந்தப் படத்தில் எனக்குப் பிடிக்காத காட்சிகள் என்றால், அந்த பிளாஷ்பேக் மற்றும் திருந்தி வாழும் காட்சிகள். நம் மக்களுக்கு அதுதான் தேவை என்பதால் வைத்து விட்டார்கள் போல. முடிந்தால் இதே போல வேறு வேறு ஏமாற்று வேலைகளை வைத்து இன்னும் நான்கைந்து பாகங்கள் கூட எடுக்கலாம்.
ஆனால் ஒன்று, இதைப்போல ஆயிரம் படங்கள் வந்தாலும் நம் மக்கள் திருந்த மாட்டார்கள் (நான் உட்பட). வேலையில்லாப் பட்டதாரி:
தனுஷோட பொல்லாதவன், படிக்காதவன் ரெண்டோட கதைய லேசா எடுங்க. மிஸ்டர் பாரத் படத்துல இருந்து கொஞ்சம் கொஞ்சம் எடுத்துப் போட்டு கலக்குங்க. கொஞ்சம் அம்மா செண்டிமெண்ட், அப்புறம் முந்திரிப் பருப்பு தூவற மாதிரி காமெடி வசனம். எல்லாத்தையும் நல்லா கலந்தா, சுட சுட VIP தயார்.
படத்துல எதுவுமே கூட குறைய இல்ல. சரியான கலவை. தன் சகலைய நக்கல் பண்ண எடுத்திருந்தாலும், நல்லாவே அதை பண்ணியிருக்காங்க. (ஏன் இதை அடிச்சு சொல்றேன்னா, கடைசியா வர்ற மன்னிப்பு சீன வச்சித்தான்).
ஆனாலும் இந்தப் படம் எனக்கு கொஞ்சம் அதிகமாவே பிடிச்சிது. அதுக்குக் காரணம் தனி பதிவாவே வரும். சரபம்: படம் பார்க்க வேண்டும் என்று முயற்சித்தேன். சற்றே அலைச்சல் அதிகமாக இருந்ததால், பார்க்கவில்லை. நன்றாக உள்ளது என்று கேள்வி. நன்றாக இருந்தால், இன்னொரு பதிவு போட வேண்டியதுதான். பார்த்த இன்னொரு நல்ல படத்தை விமர்சிக்கிறேன். பூவரசம் பீப்பீ:
துப்பாக்கி படத்தோட அட்டக் காப்பி. அதுல விஜய் லீவுல நாட்டக் காப்பாத்துறாரு. இது பட்ஜெட் கம்மிங்கறதால, சின்னப் பசங்க, குட்டி ஊர காப்பாத்துறதா மாத்திட்டாங்க. அருமையான இயக்கம். நிறைய காட்சிகள் மிகை என்று தோன்றினாலும், இந்த காலத்தில் கண்டிப்பாக நடக்கலாம். என்ன, இது போல அதிக பிரசங்கித்தனமாக ஒரு 10 பேர் இருந்தால், படம் பார்த்து விட்டு, இன்னும் 10 பேர் அதே போல நடக்க முயற்சி செய்வார்கள். அதுதான் பிரச்சினை. எனவே, காதல் (போன்ற) காட்சிகளை குறைத்திருக்கலாம். மற்றபடி தரமான படம். அதனால்தான் வெற்றி பெறவில்லை போல. பதிவின் தலைப்பிற்காக யாரும் தனியாக பின்னூட்டத்தில் பாராட்ட வேண்டாம். எனக்கு புகழ்ச்சி பிடிக்காது.
போன முறை போட்ட பதிவு பலருக்கு மண்டைக் குடைச்சல் கொடுத்ததால், இந்த முறை பொத்தாம் பொதுவாக ஒரு பதிவு. விமர்சனம்: சைவம்: வெற்றிகரமாக குழந்தையுடன் இரண்டாவது முறையாக திரையரங்கம் சென்று பார்த்தோம். இதில் எப்படியும் ஆடு, மாடு வரும் என்று போனோம். இன்னும் கொஞ்ச நேரம் கத்தரித்து ஒன்றரை மணி நேரப் படமாக்கி இருக்கலாம். நமக்குத்தான் பொறுமை போய் விட்டது. "ஆமாமா, அப்படியே போட்டுட்டாலும். இவன் விமர்சனம் போடும்போது அந்தப் படத்த டிவியிலே நாலு வாட்டி போட்டிருப்பாங்க" என்றுதானே நினைக்கிறீர்கள். சரிதான். என்ன செய்வது. நானும் சுட சுட ஒரு படத்தின் விமர்சனம் போட வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். இப்போதிருக்கும் நிலையில் உடனே நான் விமர்சனம் போட வேண்டும் என்றால், ஏதேனும் நெடுந்தொடருக்குத்தான் போட வேண்டும். எல்லா தொல்லைக்காட்சிகளிலும் வரும் நெடுந்தொடர்கள் அனைத்துமே, ஒரு நல்ல திரைப்படத்தின் தலைப்பைக் கொண்டுள்ளன. அந்தப் படத்தைப் பற்றி ஏதாவது இணையத்தில் தேடினால், இவை வந்து விழுந்து எரிச்சல் ஊட்டுகின்றன. இதைப் பற்றி ஏற்கனவே 'உதிரிப்பூக்களில்' எழுதியிருந்தேன். எல்லா நெடுந்தொடர்களிலும் இன்னும் முத்தக் காட்சிகளும் படுக்கையறைக் காட்சிகளும்தான் வரவில்லை. ஆனால், அவற்றுக்கு இணையாக (அல்லது அவையே பரவாயில்லை) எனும் அளவிற்கு வசனங்களும் காட்சிகளும் உள்ளன. இதை எழுத ஆரம்பித்தால், அதுவே ஒரு நெடுந்தொடராக போகும் அபாயம் உள்ளதால், இத்துடன் நிறுத்தி விடுகிறேன். அரசியல்: இதைப் பற்றி எழுதக் கூடாது என்றுதான் இருந்தேன். ஆனாலும், வேறு என்ன எழுதி பதிவை நீளமாக்குவது என்று தெரியாததால், வேறு வழியின்றி எழுதுகிறேன். விலைவாசி உயர்வு என்பது தவிர்க்க இயலாத செயல். எனவே இந்த கசப்பு மருந்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், முந்தைய அரசு கொண்டு வந்த பொது ஏன் நீங்கள் நீலிக்கண்ணீர் வடித்தீர்கள்? வருமான வரி விலக்கு 5 லட்சம் வரை என்று ஏன் சொன்னீர்கள்? படிப்படியாக உயர்த்தப்படும் என்றாவது சொல்லியிருக்க வேண்டும். ஒரு வேளை அப்போது நிதி நிலைமை பற்றி தெரியாது என்றால் நீங்கள் அரசை நிர்வகிக்கவே தகுதி இல்லை. இந்த லட்சணத்தில் ரயில் கட்டண உயர்வை எதிர்த்து போராட்டமாம். "டேய், முன்னாடி ஏத்துனதே நீங்கதான்டா. எங்களைப் பாத்தா உங்களுக்கு எப்படித்தான் தோணுதோ". புது அரசு மட்டும் வரட்டும், பாலாறும் தேனாறும் ஓடும்னு சொன்னவங்க, இப்ப என்ன சொல்றங்க? "அதுக்குள்ள என்ன அவசரம், இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்" என்பார்கள். எத்தனை வருஷம் ஆனாலும் இப்படித்தான். ஏனென்றால், மக்களிடம் (மக்களுமே) யாரும் உண்மையாக இருக்க விரும்புவதில்லை. மற்றவர்களை சங்கடப்பட வைக்ககூடாது என்று, பிற்காலத்தில் பெரும் துன்பத்திற்கு ஆளாக்குகின்றனர். ஒரு மருத்துவரிடம் சென்று, நோய் குணமாகவில்லை என்று இன்னொரு மருத்துவரிடம் போனால், அவர் முன்னவர் கொடுத்த மருந்தை மாற்றி வேறொன்று கொடுப்பார். பெயர்தான் வேறே தவிர, உள்ளிருக்கும் மருந்து ஒன்றே. அதே போலத்தான் அரசாங்க மாற்றமும். "இதுக்குத்தான் படிச்சவங்க அரசியலுக்கு வரணும்கிறது" என்பர்களுக்கு, இந்த படிப்பு அரசியலை விட்டு ஒதுங்கவே கற்றுத் தந்துள்ளது. பல வருடங்களுக்கு முன் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் "படித்தவர்கள் கட்சி (பரீத்ரக்ஷன என்று நினைக்கிறேன்)" என்று புதிதாக தோன்றி போட்டியிட்டது. சென்னையில், திமுக, அதிமுகவை அடுத்து மூன்றாம் இடத்தையும் பிடித்தது. அடுத்த நாளே மாதங்களில் கட்சி சுக்கு நூறாக உடைந்தது. இப்போதுள்ள சாமானிய மக்கள் கட்சிக்கும் அதேதான் நடக்கிறது. இதைத்தான் நம்மூரில் "படிச்சவன் பாட்டக் கெடுத்தான்" என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன். உடனே யாராவது, "இவ்ளோ சொல்றியே, நீ?" என்று சண்டைக்கு வர வேண்டாம். ஏனென்றால் பதில் உங்களுக்கே தெரியும். சரித்திரத்தை கொஞ்சம் புரட்டிப் பார்த்தால், உண்மையாகவே இந்த சமுதாயத்திற்காகவும், மக்களுக்காகவும் பாடுபட்டவர்களும், அவர்களை சார்ந்தவர்க்களும் நல்ல நிலையில் இருந்ததே இல்லை. இன்னமும் அவர்களின் சந்ததியினர் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் உள்ளனர். நம் மக்கள் அதைப் பார்த்துதான் "நமக்கெதுக்கப்பா வம்பு, நாம உண்டு நம்ம வேல உண்டுன்னு போனோமா வந்தோமான்னு இருக்கணும்" என்று வளர்க்கின்றனர். ஏதோ ஒரு திரைப்படத்தில் வருவது போல "இந்த சமுதாயத்துல உங்க எல்லோருக்காக கஷ்டப்பட ஒருத்தன் வேணும், ஆனா, அவன் அவன் உங்க வீட்டுல இருந்து வரக்கூடாது". சொந்தக்கதை அது சோகக்கதை: சென்னையில் நடந்த கட்டிட விபத்து நேரடியாக அங்கு நூறு பேரை பாதித்தது என்றால், மறைமுகமாக பல்லாயிரம் பேரை பாதித்துள்ளது. நான் அங்கு வீடு வாங்கவில்லை. ஆனால், வீடு வாங்கிய கட்டிடத்திற்கு அனுமதி பெறுவதில் சிக்கலாம். "நீ ஒழுங்காதான கட்டியிருக்க" என்று கேட்டால், "அதெல்லாம் சரிதான் சார், ஆனா, அது நொள்ள, இது நொட்டன்னு சொல்லி இப்ப காசு நெறைய கேப்பாங்க சார்" என்கிறார்கள். பளார் பளார் என்று அறைய வேண்டும் என்றுதான் தோன்றுகிறது, ஆனால் பதிவுதான் போட முடிகிறது.
குற்றம் செய்தவர்களை விட, குற்றம் செய்யத் தூண்டியவர்களுக்கு தண்டனை அதிகமாம். அதே போல, குற்றத்தைப் பற்றி தெரிந்தும் வெளியே சொல்லாமல் இருப்பதும் பெருங்குற்றமாம். அப்படிப் பார்த்தால் நாட்டில் எல்லார் பெயரிலும் குறைந்தது நான்கு வழக்காவது இருக்க வேண்டும்.
எச்சரிக்கை: இந்தப் பதிவு எப்போதோ குருட்டாம் போக்கில் எழுத ஆரம்பித்தது, என்னென்னவோ யோசித்து, எப்படியெல்லாமோ மாற்றி, ஒரு வழியாக போட்டுள்ளேன். முடிந்தால், தலைவலி தைலமோ அல்லது மாத்திரையோ எடுத்து வைத்துக்கொண்டு படிக்கவும். பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல. வாழ்க்கை என்பது, இன்பம், துன்பம், காகித ஓடம், கானல் நீர், பொய், நேர்க்கோடு, வட்டம், சாலை, வாழ்வதற்கே, முழுவதும் சாவதெற்கே, மோசமான ஆசிரியர், இந்த கணம், விடுகதை, தொடர்கதை, கணக்கு, வேதியியல், ஆறு, கடல், போர்க்களம், சுமை, முள் கிரீடம், கடலில் கார் ஊட்டுவது, சாலையில் சைக்கிள் ஓட்டுவது, உண்பது, உறங்குவது, விழுவது, விழுந்து எழுவது, ஓடுவது, துரத்துவது, ............. சிவாஜி நடித்த படம்........
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம், அதற்காகவே ஒரு தொடர் பதிவு கூட போடலாம். ஆனால், இது சும்மா, என்னுடைய புலம்பல்களை ஓர் நாலு பேர் படிக்கட்டுமே என்பதற்காக ஒரு பதிவு. இதில் உள்ளவை அனைத்தும் என்னுடைய கருத்துக்கள் அல்ல. பிச்சைக்காரன் எடுத்த வாந்தி என்று வேண்டுமானால் சொல்லலாம். உலகில் எந்த விஷயத்திற்கு உதாரணங்களும், பழமொழிகளும் அதிகம் என்றால், காதலை விட வாழ்க்கைக்குத்தான் இருக்கும். அட, அதுதானே இது என்று குழப்ப வேண்டாம். வாழ்க்கையின் ஒரு அங்கமே காதல், என்னைப் பொருத்தவரை. முதலில் வாழ்க்கை என்பது கை ரேகை போல. உலகில் ஒரே மாதிரி கை ரேகை இன்னொருவருக்கு இருக்காது என்பார்கள். அதே போலத்தான், வாழ்க்கை என்னும் தத்துவமும், கோட்பாடும். கண்டிப்பாக உலகில் இரண்டு பேருக்கு அது பொதுவாக இருக்காது. (எனக்கென்னவோ இந்த விஷயத்தைத்தான் மக்கள் தவறாக புரிந்து கொண்டு ஜோசியக்காரர்கள் பின்னால் அலைகிறார்கள் என்று நினைக்கறேன்.) குறிக்கோள் அல்லது லட்சியம். ஒவ்வொருவருக்கும் ஒரு குறிக்கோள் கண்டிப்பாக இருக்கும். அது அடுத்த வேளை சோறாகவும் இருக்கலாம், அடுத்த அம்பானியாகவும் இருக்கலாம். கண்டிப்பாக அதன் மூல காரணம் ஒன்றுதான், மகிழ்ச்சி.
மக்கள் ஆற்று நீர் போல. மகிழ்ச்சி எனும் கடலை நோக்கிப் போக வேண்டும். வழியில் பல தடைகள் அல்லது. அது வேறு வேறு கிளைகளாக மாறி செல்ல வேண்டும். அந்த பாதைகள் நல்லதா கெட்டதா, அதில் சென்றால் விரைவாக போவோமா அல்லாத தாமதமாகுமா என்பதை யோசிக்க விடாமல், நம்மை தள்ளிக் கொண்டு போய் விடுகிறார்கள். அப்படி போகும்போது கடலை நோக்கித்தான் போகிறோம் என்று நினைப்போம். ஆனால், முடிவு எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் இருப்பதால் வரும் பிரச்சனைகளை சமாளிக்க உருவானவைதான் மதம், இனம், மொழி, கலாச்சாரம் கடைசியாக சட்டம். இவை அனைத்தும் இது சரி, இது தவறு என்று ஒவ்வொரு விஷயத்தையும் பிரித்துள்ளன. இன்னும் கொஞ்சம் குழப்ப வேண்டுமென்றால், பொதுவாக வாழ்க்கை இரண்டே வகைதான். இந்த நொடிக்காக வாழ்வது அல்லது நாளைய ஓய்வுக்காக இன்று ஓடுவது. இரண்டு வழிகள். ஒன்று, எப்படியாவது, எவனுக்கு என்ன ஆனாலும், நாம் நம் காரியத்தில் கண்ணாக இருக்க வேண்டும். இரண்டு, முடிந்த அளவு மற்றவர்களைக் கெடுக்காமல் செல்வது. இந்த பெர்முடேசன் காம்பினேஷன் (permutation and combination - தமிழ்ல என்னன்னு மறந்து போச்சு) வைத்து, ஆளுக்கொரு வகையாக வாழ்ந்து வருகிறோம். ஒரு உதாரணம். கொஞ்சம் மிகைதான், இருந்தாலும் புரிதலுக்காக. கல்லூரி நண்பர்கள் இருவர். ஒருவன் நிறைய இனிப்புகள் சாப்பிடுவான். இன்னொருவனோ கையிலேயே தொடமாட்டான். இந்த இரு எதிரெதிர் செயல்களுக்கும் காரணம் ஒன்றுதான். முதலாமவன்: எங்க அப்பா, அம்மா, தாத்தா எல்லோருக்கும் சுகர் இருக்கு. எனக்கும் எப்படியும் வயசான காலத்துல வரத்தான் போகுது, அப்புறம் ஏன் நான் இப்பவே வாயக் கட்டனும். நல்லா சாப்பிட்டுகிட்டு, பின்னாடி கண்ட்ரோல் பண்ணிக்குவேன். இரண்டாமவன்: எங்க அப்பா, அம்மா, தாத்தா எல்லோருக்கும் சுகர் இருக்கு. எனக்கும் எப்படியும் வயசான காலத்துல வரத்தான் போகுது, இப்பவே கண்ட்ரோல் பண்ணிக்கிட்டா பின்னாடி பிரச்சினை இல்ல பாரு. இருவரில் யார் சரி, யார் தவறு? அனைவருக்கும் ஒவ்வொன்று தோன்றும். இந்த இடத்தில் 'சமுதாயம்' என்ற கண்ணோட்டத்தில் யோசித்தால், இரண்டாமவனே சரி என்று தோன்றும். ஏனென்றால் நம் சமுதாயம் சொல்லுவது, "இப்ப கஷ்டப்பட்டா, பின்னாடி சொகுசா இருக்கலாம்". நீங்கள் பனிரெண்டாம் வகுப்பு படித்திருந்தால், இதை நிறைய கேட்டிருக்கலாம். இதே பல பேருக்கு தவறாக தோன்றும். "ஒரு வேளை, நாளைக்கே அவனுக்கு ஏதாவது ஒண்ணுன்னா?" என்பார்கள். இந்த வார்த்தையும், நமது சமுதாயத்தைப் பொருத்தவரை தவறு. அதே போல இந்த சமுதாயம் சொல்லும் இன்னொரு முக்கியமான விஷயம். "அடுத்தவனின் மகிழ்ச்சியே நமது சந்தோஷம்". அதாவது, நம்மை சார்ந்தவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது, நாமும் மகிழ்வோம். இங்குதான் பிரச்சினையே.
தமிழ் இலக்கியத்திலோ, சமுதாயத் தொண்டிலோ ஆர்வமுடையவனிடம் "எப்பா, எப்படியாவது படிச்சு டாக்டர் ஆயிட்டேன்னா, எங்களுக்கு சந்தோசமப்பா. அப்படி இல்லீன்னா நல்ல எஞ்சினீரிங் காலேஜுல படிச்சு நாலு வருஷத்துல வேல வாங்கி, பக்கத்து வீட்டுக்காரன் ரெண்டு வருஷத்துல அமெரிக்கா போன மாதிரி இல்லாம, ஒரே வருஷத்துல போயிடனும் " என்று சொல்லி, பெற்றவர்களின் சந்தோசத்திற்காக தன்னை தொலைக்கின்றான். ஒரு வேளை அவன் விருப்பத்திற்காக, தமிழ் இலக்கியம் படிக்கின்றான் என்றால், சமுதாயம் "நல்ல மார்க் வாங்கி இப்படி நாசமா போயிட்டானே, கற்றது தமிழ் படம் மாதிரி கொலைதான் செய்யப்ப் போறான்" என்று தூற்றும். இவை எதையும் காதில் வாங்காமல், அவன் தனக்குப் பிடித்ததை மட்டும் செய்து கொண்டிருந்தால், அவன் மகிழ்ச்சியாக இருக்கலாம். மற்றவர்கள், பெற்றோர்கள்? இன்னொரு மிக முக்கியமான விஷயம். கசப்பை அவ்வப்போது சுவைத்தால்தான் இனிப்பின் அருமை புரியும். அதே போல கஷ்டப்பட்டால்தான் மகழ்ச்சியை உணர முடியும். நம்முடைய மகிழ்ச்சி அடுத்தவனுக்கு கஷ்டம், நமது கஷ்டம் அடுத்தவனுக்கு மகிழ்ச்சி. எனவே, நமக்கானதை நாம் நம்முள்ளே தேட வேண்டும். அதை விட்டு விட்டு "அவன மாதிரி பண்ணா என்ன?" என்றால், காலிதான். அதே போல, விதி விலக்கு (Exception) என்பதும் எல்லாவற்றிற்கும் உண்டு. இந்தப் பதிவில் கூறப்பட்டுள்ள கருத்துகளுக்கும்தான். சரி, குழப்பம் எதற்கு. தெளிவாக சொல்கிறேனே. நாம், வாழ்வதற்காக தினம் தினம் சாகிறோம். இறுதியில் சாவதற்காக தினமும் வாழ்கிறோம். இதைப் புரிந்து கொண்டால் நல்லது. எங்க? ஆனாலும், இவை எல்லாவற்றையும் தாண்டி, தினமும் எப்படியெல்லாமோ கஷ்டப்பட்டாலும், ஏதாவது ஒரு கணத்தில் கிடைக்கும் சந்தோசத்திற்காக அவை அனைத்தையும் தாங்கிக் கொள்கிறோமே.அது தான் வாழ்க்கை. (உபயம், ஏதோ ஒரு தமிழ் படம் அல்லது நெடுந்தொடர் அல்லது கதை)
என்ன போடுவதென்று தெரியவில்லை. எனவே, ஏதாவதொரு பிட்டை போடுவோம். சமர்ப்பணம்: பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்துள்ளன. அந்த மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும், எனது பதிவுகளையும் சமர்ப்பிக்கிறேன். ஒரு பத்து வருடத்து கதை. எனது நண்பன், 0.1 மதிப்பெண்ணில் தனது மருத்துவர் கனவு காலாவதி ஆனதால், எந்திரவியல் பொறியியலில் சேர்ந்து, நான்கு வருடம் மாங்கு மாங்கென்று படித்து, முதல் வகுப்பில் தேறி, ஒரு மென் பொறியியல் நிறுவனத்தில் வேலை வாங்கி, வெளிநாட்டில் ஆணி பிடுங்கிக் கொண்டுள்ளான். '3 இடியட்ஸ்' படம் பார்த்து விட்டு அவனை "ஏண்டா, நீ நடந்த, ரயில்ல ஏறனும்னு நெனச்ச, ஆனா பஸ்தான் கெடச்சிது, லோக்கல் பஸ்ல டிக்கெட் காசு கொடுத்து வாங்கிட்டு, வேற பஸ்ல கூப்டாங்கன்னு ஏறப் போற, எங்கதாண்டா போகணும்?" என்றெல்லாம் கலாய்க்கும் போது அவன் சொன்னான் 'தெரியாது. ஆனால், நான் இன்னும் என்னுள் தேடிக் கொண்டிருக்கிறேன் எனது திறமை என்னவென்று, அது கண்டிப்பாக படிப்பது மட்டுமல்ல' என்றான். நீ என்ன ஒழுங்கா, என்று கேட்பவர்களுக்கு, எனக்கு உயிரியல் பிடிக்காது, கணக்கு நன்றாக் வரும், இயற்பியலில் எந்திரவியல் பிடிக்கும் ஆனால் மின்னணுவியல் பிடிக்காது. கூட்டிக் கழிச்சிப் பாத்தா கணக்கு சரியா வரும். இப்போது ஆணி பிடுங்குவது கூட, எந்திரவியல் சார்ந்த துறைதான். இருந்தாலும் அதையும் தாண்டி ஏதோ உள்ளது. (உபயம், 7G ரெயின்போ காலனி) அவனாவது தேடிக் கொண்டிருக்கிறான். நான் இன்னும் தேடவே ஆரம்பிக்கவில்லை. சில கீச்சுக்கள்: இன்னும் டிவிட்டரில் முழுதாக போடவில்லை என்றாலும், என்னுடைய எண்ணங்களை, சிறு சிறு கீச்சுகளாக இங்கே பதிவு செய்கிறேன். இதை இன்னும் மீண்டும் கொஞ்சம் மாற்றி டிவிட்டரில் போடலாம். 500, 1000 என்று மொத மதிப்பெண்கள் வைப்பதால் ஒரே மதிப்பெண்ணை பலர் வாங்குகின்றனர். அதற்கு பதிலாக, 10000 அல்லது 20000 என்று மாற்றிவிட்டால், முதல் மதிப்பெண்ணை யாராவது ஓரிருவரே வாங்குவர். IPL Series என்பது நெடுந்தொடர் போல. மக்களின் விருப்பத்திற்கேற்ப தினமும் முடிவு மாற்றப்படுகிறது. #ipl2014 IPL மேட்ச் முதல் நாள் முதல் காட்சி போல. பார்க்கும் நாம்தான் முடிவைப் பற்றி தெரிய பறப்போம். ஆனால், ஆடுபவர்களுக்கும், ஆட்டுவிப்பவர்களுக்கும் முடிவு முன்னமே தெரியும். #ipl2014 சிறுவர்களின் உற்சாக பான விளம்பரங்களுக்கும், iplல்அணிகளுக்கு ஊர்ப் பெயரை வைத்ததற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. #பீலிங்க்ஸ் உலகம், தவறு செய்பவனை 'அவன் செய்யறானே' என்று உதாரணமாக காட்டும். நல்லது செய்பவனை ஏமாளி என்று தூற்றும். தேர்தல் முடிவுகள், ஒருவனின் வெற்றி என்பதை விட, அடுத்தவனின் தோல்வி என்பதுதான் முக்கியம். இதைப் புரிந்து கொண்டால் சரிதான். #Elections2014 கொதிக்கும் எண்ணையில் இருந்து தப்பி விழுந்தது எரியும் அடுப்பிலா, வெளியிலா. பார்ப்போம். #Elections2014 விமர்சனங்கள்: இரண்டு மாதங்களாக மனைவி மகளுடன் சந்தோசமாக (?) கழித்ததால், படத்திற்கும் போகவில்லை. மகளுக்கு படம் காட்டவே மடிக்கணினி பத்தாததால், தரவிறக்கமும் பண்ணவில்லை. ஒரு சின்ன (முதல்) முயற்சியாக, ரியோ 2 படம் சென்றோம். படம் நன்றாக இருந்தாலும், கண்ணாடி போட்டு பார்க்க என் மகள் அடம் பிடித்ததாள். அது மட்டுமல்லாது, திடீரென சத்தம் வரும்போதெல்லாம் பயந்தாள். எனவே, அடுத்து ஏதாவது மென்மையான தமிழ் படம் ஏதாவது பார்க்க எண்ணியுள்ளோம். பார்ப்போம். இப்போதுதான் ஒரு இரண்டு வாரம் விடுமுறை கிடைத்துள்ளது. 'யாமிருக்க பயமே', 'கோச்சடையான்' இரண்டும் பார்க்கும் எண்ணம் உள்ளது. கொசுறு: இந்த பீனிக்ஸ் மால் பக்கத்தில்தான் உள்ளது, இதுவரை போகவேயில்லையே என்று மனைவி, மகளுடன் இரு சக்கர வாகனத்தில் கிளம்பி வந்தால் மணிக்கு 50 ரூபாய் வண்டி நிறுத்தவதற்கு. மனைவியோ கொமட்டில் குத்தி "ஆட்டோவுல வந்தா கூட அம்புட்டு ஆகாது" என்றாள். திரும்பிக் கூட போக முடியவில்லை. படம் பார்க்க வந்ததற்காக 4 மணி நேரத்திற்கு 100 ரூபாய் என்று குறைத்துக் (?) கொண்டார்கள். 15 நிமிடத்திற்கு இலவசமாம். வெளியே அட்டை வாங்கிக் கொண்டு, எங்குமே நிறுத்தாமல் பணம் செலுத்துமிடம் வரவே 20 நிமிடம் ஆகும். நன்றாக அளந்து வைத்துள்ளனர். அனைவரும் கோடை விடுமுறையை கோச்சடையானோடு கொண்டாடியிருப்பீர்கள் (கவித). நானும் பதிவு எதுவும் போடவில்லை அல்லவா. ஆகட்டும், டும்.
எத்தனை நூற்றாண்டுகள் (முன்னோக்கி சென்றாலும், பின்னோக்கி சென்றாலும்) வாதாட ஒரு நல்ல தலைப்பு இதுதான். மன்னராட்சி முதல் மக்களாட்சி வரை, இந்த இரு பிரிவினருக்குமே பிரச்சினைதான். இருந்தாலும், இந்தப் பதிவு, என்னுடைய முந்தைய பதிவின் தொடர்ச்சியாக, கல்வி பற்றி மட்டுமே இடுகிறேன், முடிந்தவரை. இந்த பிரச்சினைக்கு முதலும், முதன்மையானதுமான காரணம் தலைமுறை வித்தியாசம். முன்பெல்லாம் ஒரு தலைமுறை என்பது 33 வருடங்கள் என்று சொல்வார்கள், இப்போதெல்லாம் அது 33 நிமிடங்கள்/நொடிகளாக மாறி விட்டது. கடந்த ஆண்டு கல்லூரி முடித்து, வேலைக்கு போக ஆரம்பித்த சொந்தக்கார பையன், அவனை விட இரண்டு வயது சிறிய, கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவனிடம் "இது என்ன புது கேம்?, எப்ப வந்துச்சு?' என்று கேட்க, அவன் சொன்னான், "நீயெல்லாம் பழைய ஆளுடா, போ போ". உடன் வேலை பார்க்கும் ஊழியர், தன்னுடைய 4 வயது மகனுக்கு இப்போது பள்ளியில் (LKG) சேர்த்துள்ளார். சாப்பிடும்போது, அடுத்து அழியப்போகும் ச்சே சேர்க்கப் போகும் எங்களைப் போன்ற நான்கைந்து பேர் விசாரித்தோம். "எவ்ளோ ஆச்சு?" "டெபாசிட், டொனேஷன், புக் பீஸ், பஸ் பீஸ் அது இதுன்னு கிட்டத்தட்ட 2 லட்சம் ஆச்சு" "அடேங்கப்பா, நாம காலேஜு படிச்சி முடிச்ச 16 வருஷ படிப்புக்கே இவ்ளோ ஆகலையேப்பா, நானெல்லாம் இங்க சேத்த மாட்டேன்பா, ஊர்ல கொண்டு போயி ஏதாவது கவர்ன்மெண்டு ஸ்கூல்ல தள்ள வேண்டியதுதான்" அவர் நக்கலாக, "நானும் இப்படித்தான் பேசுனேன், சும்மா விசாரிச்சதுக்கே, சொந்தக்காரன், பக்கத்து வீட்டுக்காரன் எல்லாம் போட்ட போடுல, எங்க வீட்டுல அரண்டு போயி, சமச்சீர் எல்லாம் சும்மா, கண்டிப்பா CBSEல தான் போடணும், இந்த ஸ்கூல்னா பரவாயில்லன்னு சொல்லி, அதுக்காக நாயா அலைஞ்சு, மினிஸ்டர் லெட்டெர் வாங்கி, சேத்துருக்கேன், உனக்கும் வரும் பார். ஆள் நம்ம கைவசம் இருக்கு, கண்டிப்பா என்கிட்டே வந்து கேப்ப பார்" என்றார். அவர் இன்னும் சொன்ன நிறைய விஷயங்களைக் கேட்டபோது 'குங்குமப் பொட்டு கவுண்டர்', 'அபியும் நானும்' படத்தில் வருவதெல்லாம் சும்மா என்பது புரிந்தது. அதை விட்டு விடுவோம். நானும் யோசித்துப் பார்க்கிறேன், என் சொந்த ஊரில் (என் தாத்தா, அம்மா, நான் அனைவரும் படித்த, வீட்டிலிருந்து 10 அடி மட்டுமே தள்ளி உள்ள) 'ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில்' சேர்க்க வேண்டும் என்று நான் சொல்லும்போதெல்லாம், என் அம்மாவும், மனைவியும் நக்கலாக சிரிக்கிறார்கள். "அங்கெல்லாம் இப்ப யாரு படிக்கிறா? இன்னும் நாலஞ்சு வருஷத்துல இழுத்து மூடிருவாங்க, இன்னொன்னு தெரிஞ்சுக்கோ, ஊருக்குள்ள டவுன் பஸ் வருதோ இல்லையோ, ஸ்கூல் பஸ் 10 வருது. ஊருக்குள்ள நம்மாளுங்க புள்ளங்க எல்லாம் வெளி ஸ்கூல்லதான் படிக்கிறாங்க, தெரிஞ்சுக்க" என்கிறார்கள். பொதுவாக, இன்னும் எல்லோருடைய அடி மனத்திலும் 'கல்வி' முக்கியம் என்பது படிந்திருந்தாலும், அது கற்பிக்கப்படுவதற்கும், திணிக்கப்படுவற்கும் வித்தியாசம் தெரியாமலே உள்ளனர். அந்தப் பள்ளிகளில் விளையாட்டோ, நீதி போதனை வகுப்போ இல்லை என்று சொன்னால், "வீட்டுக்கு வந்து குதிக்கத்தானே போகுது, நீதிக் கதை எல்லாம்தான் இப்ப சுட்டி டிவியிலே சொல்றாங்களே" என்கிறார்கள்.
இதைத்தாண்டி "படிப்பைத் தாண்டி குழந்தைக்கு ஏதாவது" என்றவுடனே, "ம், கண்டிப்பா, பாட்டு கிளாஸ், டான்ஸ் கிளாஸ், அடுத்த வருஷம் கராத்தே, அப்புறம் கிரிக்கெட் கூட" என்கிறார்கள். "அவனுக்கு என்ன வரும்" என்றால், "சின்னப் பையன், இப்ப என்ன தெரியும், எல்லாம் தெரிஞ்சுக்கிட்டும்" என்கிறார்கள்.
இது ஆரம்பக் கல்விக்காக. அதன் பின்னர் அனைவரின் லட்சியமும் "MBBS லட்சியம், BE நிச்சயம்" (தேர்தல் உபயம்) என்று அடுத்த இலக்கை எய்கின்றனர். "சரிங்க, இப்பவாவது, அவனுக்கு என்ன ஆகணும்னு கேளுங்க" என்றால், "ரெண்டும்கெட்டான் வயசு, நாமதான் சொல்லணும்" என்பார்கள், அதைத்தாண்டி பையனோ/பெண்ணோ தன் விருப்பத்தை தெரிவித்தால், காரமாகவோ அல்லது பதமாகவோ "அந்த மாமாவும் இப்படித்தான் சொல்லி, கண்டத படிச்சு, இப்ப பாரு சும்மா சுத்தறான், எல்லாரும் அவன திட்றாங்க, இந்த மாமா பாரு, சொன்னபடி படிச்சு அமெரிக்காவுல நல்ல வேலைல இருக்காங்க" என்று குழப்புவர். ஒரு விளம்பரம்: [ஊரில் நன்றாக படித்து, பொறியியல் முடித்து இரண்டு முறை அமெரிக்காவும் போய் விட்டு வந்தாகி விட்டது. கல்யாணத்திற்கு முன் மாதம் ஒரு முறை ஊருக்கு போவேன். இப்போது இரண்டு/மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என்றாகி விட்டது. ஊரிலும், சொந்தத்திலும் என்னை ஒரு உதாரணமாக காட்டியுள்ளனர். என் நண்பன், சுமாராக படித்து, ஊரிலேயே இளங்கலை முடித்து, தோட்டம், சிறு சிறு வேலை பார்த்து, கொஞ்சம் அப்பா சொத்தை அழித்து, ஒரு நான்கு வருடங்கள் அனைவரின் சாபத்தையும் வாங்கி, இப்போது இரண்டு லாரி, கடை, தோட்டம் என்று சொந்த ஊரிலேயே ஜம்மென்று வாழ்கிறான். இருந்தாலும், இன்னும் அவன் வீட்டில், நான் சென்று வந்தால், என்னைக் காட்டி அவனுக்கு குத்தல் பேச்சு விழும், அவன் என்னைப் பார்த்து பொறாமைப் படுகிறானா என்று தெரியாது, ஆனால், எனக்கு அவனைப் பார்த்தால் பொறாமையாக உள்ளது] சரி விஷயத்திற்கு வருவோம்.
பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளுக்கு அறிவைக் கொடுக்க வேண்டும் என்று பள்ளிகளில் சேர்த்தவில்லை. பிள்ளைகளை முதலீடு செய்கிறோம். இவ்வளவு பணம் கட்டி சேர்த்தால், குறைந்த பட்சம் இவ்வளவு மதிப்பெண்கள் எடுக்க வேண்டும், இந்த சம்பளத்தில் வேலை வாங்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறோம். சரி பெற்றோர்களே, அந்தப் பள்ளியில் சேர்த்தால், மாநில அளவில் முதலிடம், அட குறைந்த பட்சம் அதிக மதிப்பெண்கள் எடுத்து நல்ல பொறியியல் கல்லூரியில் இடம் வாங்கி விடலாம் என்ற கணக்கு சரிதான். கடந்த பத்து வருடங்களில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பில் முதலிடம் எடுத்த மாணவர்கள், தற்போது என்ன செய்கிறார்கள் என்று தெரியுமா? எனக்கும் தெரியாது, ஆனால், கண்டிப்பாக இந்தியாவிலோ, இல்லை வெளி நாட்டிலோ, எங்கிருந்தாலும் பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக இருப்பார்களே தவிர எதையும் சாதித்திருக்க மாட்டார்கள், சாதிக்கவும் இல்லை. ("தேவை இல்லேன்றேன், எதுக்குன்றேன்" என்கிறார்கள்). மாணவர்களோ, இப்போதெல்லாம் வைத்தால் குடுமி, அடித்தால் மொட்டை என்ற மனநிலையில்தான் உள்ளனர். எனக்கு பிடித்ததை நீ கொடுக்கவில்லை என்றால் உனக்கு பிடித்ததை செய்ய மாட்டேன் என்கின்றனர்.
முன்பெல்லாம் குறைந்த பட்சம் இரண்டாம் ஆளுக்குத் தெரியாமல் தப்பு செய்ய முடியாது. பெட்டிக் கடையில் சிகரெட் கேட்டால் (கடமைக்காகவாவது) "யாருக்குடா?" என்று கேட்பார்கள். அதனால் ஓரளவுக்காவது பயம் இருந்தது. இப்போதெல்லாம், 'அதெல்லாம் அசால்ட்டுடா" என்கிறார்கள். எப்படி தெரியாமல் தப்பு செய்வது என்று இணையத்தில் தேடுகின்றனர். இன்னும் நிறைய சொல்லலாம். இன்னொரு பதிவில். பெற்றோர்களே, இந்த கல்வி முறை என்ன கற்றுக் கொடுத்துள்ளது தெரியுமா? சிக்னலில் ஆள் இல்லை என்றால் தாண்டிப்போ, சாலையில் யாராவது அடிபட்டுக் கிடந்தால், பரிதாபப்பட்டு ஓரமாக செல், கண் முன்னே தப்பு நடந்தால் நமக்கெதுக்கு வம்பு என்று கண்டு கொள்ளாதே, முடியவில்லையா பேஸ் புக்கில் பகிர்ந்துடு அல்லது உன் வலைப்பூவில் எழுதிடு (நீ யாரென்று சொல்லாமல்).
தொடரும் போடலாமா என்று தெரியவில்லை. ஆனால், இன்னொன்று போடலாம். 'முடியாது'