Sunday, April 1, 2018

கமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா?

எப்படியோ ஒரு வழியாக வரவே மாட்டேன் சொன்ன கமலும், இந்தா வந்து விடுகிறேன் என்று நான் ஐந்தாவது படிக்கும்போது சொன்ன ரஜினி, என் மகளுக்கு ஐந்து வயது ஆன பின்பும் அரசியலுக்கு வந்து விட்டனர். என்னதான் இருந்தாலும், கமல் ரசிகன்தானே. அவருக்குத்தான் முட்டுக்கொடுக்க வேண்டும். இருந்தாலும் சில விஷயங்கள் பற்றி விவாதிப்போம். 


கமலை ஏன் ஆதரிக்கக் கூடாது: 

ஒரு வருடம் முன்பு வரை கூட, கமலிடம் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டால், "நான் அரசியலில் இல்லை என்று யார் சொன்னது" என்பார். அல்லது "அரசியலில் இறங்கித்தான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றில்லையே" என்பார். அப்படி இருக்கையில் திடீரென ஏன் அரசியலில் இறங்க வேண்டும்? கருணாநிதியும் ஜெயலலிதாவும் இருந்தபோது இது போல ஒவ்வொரு விஷயங்களுக்கும் கருத்து சொல்லவில்லையே? அப்படி என்றால், வெற்றிடம் உள்ளது என்று இறங்குகிறீர்களா? 

ஒரு சில நேரங்களில் அவர் சொல்வது நான் முதலமைச்சர் ஆனால்" என்றே உள்ளது.ஆனால், கண்டிப்பாக கமலை விட திறமையான ஆளுமை உள்ளவர்கள் உண்டு, அவர்களை ஆக்குவாரா என்றும் சொல்லவில்லை. 

இப்போது தமிழ் திரையுலகம் பிரச்சினையில் உள்ளது. ஒரு தலைவராக, தான் இதுவரை சார்ந்துள்ள துறையில் உள்ள பிரச்சினைகளை ஏன் தீர்க்கவில்லை, அல்லது தீர்க்க முடியவில்லை. அவர் 60 வருடங்கள் இருந்த துறையிலேயே பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை என்றால், எப்படி அவர் சாராத துறைகளின் பிரச்சினைகளை தீர்க்க முடியும்? 

இப்போது அவர் பேசுவது எப்படி உள்ளது என்றால், இந்த ஒரு வருடத்தில் தமிழகம் அழியும் நிலைக்கு வந்து விட்டது போலவும், இதற்கு முன் இருந்தவர்கள் இன்னும் குறிப்பாக எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்றோர் எப்படி ஆட்சி செய்தனர். நல்லதா இல்லை கெட்டதா என்று அவர் சரியாக கூறவில்லை. 

தினமும் கட்சி சார்பில் ஏதேனும் அறிக்கையோ, பேசுவதோ யார் என்றால், கமல், கமல், கமல் மட்டுமே. அவருக்கு பதிலாக, அல்லது அவருக்கு அடுத்து யார்? ஸ்ரீப்ரியா, ஞானசம்பந்தன் என்றால், அவர்கள் ஏன் அறிக்கையோ, பேட்டியோ கட்சி சார்பில் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். 

பொதுவாக கமல் படங்களில், இயக்குனரையும் தாண்டி கமல் மட்டுமே தெரிவார், அந்த படங்கள் அத்தனையும் என்ன ஆகின என்று எல்லோருக்கும் தெரியும். இதே போல நடந்தால், கமலுக்கு அரசியலும் அப்படிதான் ஆகும். 

மற்ற கட்சிகளில், ஏதாவது ஒருவர் தவறாக சொல்லி விட்டால், ஒன்று அதற்கு ஆதரவாக பேசியாக வேண்டும், அல்லது அது அவரது சொந்தக் கருத்து என்று தப்பிக்க வேண்டும். இது போல நடந்து விடக்கூடாது என்பதற்காகவே இப்படி செய்கிறீர்களா?  

"ஏம்பா, ஒரு பொம்பள கூட உருப்படியா, ஒத்துமையா இருக்க முடியல, எப்படிப்பா ஊருல எல்லோருக்கும் இவரு நல்லது பண்ணுவார்?" என்று பொதுவாக கூறுகிறார்கள். அதற்கும், இதற்கும் சம்பந்தம் இல்லையென்றாலும் கருத்து வேற்றுமை என்பது தான் இங்கே கூற விழைவது. 

இன்னும் தமிழ்நாட்டில் உள்ள நிறைய பிரச்சினைகளுக்கு கமல் கருத்து கூறவில்லை. நெடுவாசல், கூடங்குளம், மணல் கொள்ளை, என பல விஷயங்கள். 

தேர்தல் காலத்தில் கூட்டணி அமைப்பாரா? அப்படி அமைத்தால் என்ன மாதிரி கட்சிகளுடன் கூட்டணி? ஒரு வேளை அவரது ஆதரவு தேவைப்பட்டால், யாருக்கு அளிப்பார். கெஜ்ரிவால் போல எதிரிகளுடன் கூட கூட்டணி அமைப்பாரா? 

அடுத்து, மிக முக்கியமான ஒன்று பேச்சுத் திறமை: கமலிடம் அது நிறையவே உள்ளது. ஆனால், அது நேரடியான, எல்லோருக்கும் புரியும்படியாக இல்லை. இது மிகப் பெரும் குறை. "நீங்க புரியற மாறி பேசணும்னு சொல்லல, ஆனா, பேசுனா நல்லாருக்கும்னுதான் சொல்றோம்". 

இதன் விளைவு என்னவென்றால், கமல் நம்மில் ஒருவர் என்றில்லாமல், அவர் எங்கேயோ இருப்பவர் என்றாகிறது. 

கமலை ஏன் ஆதரிக்க வேண்டும்: 

தேசியம், கழகம் என்று பெயரை வைத்து ஊரை ஏமாற்றவில்லை, மக்களை குழப்பவில்லை. 

ஒரு விஷயம் செய்வதற்கு முன், நிறைய ஆராய்ந்து, அல்லது ஆராய்வது போல தோற்றமளிக்க வைக்கிறார். கொசஸ்தலம் செல்வதற்கு முன், 'பூவுலகின் நண்பர்கள்' மூலம் தகவல் பெற்றது. கட்சி ஆரம்பிப்பதற்கு முன் நல்லகண்ணு, கருணாநிதி, வக்கீல்களை சந்தித்தது. எதுவாக இருந்தாலும், முந்திரிக்கொட்டை போல பேசாமல், சற்றே அலசி ஆராய்ந்து கருத்து சொல்வது. 

எதிரிக்கட்சியாக இல்லாமல், சில நல்ல விஷயங்களையும் பாராட்டுவது. குரங்கணி தீ விபத்தில், அரசை குறை கூறாமல் நிவாரப்பணிகளை மேற்கொண்டதில் குறைகள் கூறாமல் இருந்தது. 

மக்களை ஏமாற்றாமல் எப்படி செயல்படுவேன் என்று கூறுவது. மது விலக்கை உடனே அமுல்படுத்த முடியாது என்றும், அது ஏன் என்றும் கூறியது. அது உண்மைதான். 

இன்னும் குறிப்பாக சொன்னால், இப்போது மத்தியில் உள்ள ஆளும் கட்சி "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை 50க்கு கீழ் குறையும், வருமான வரி விலக்கு 5 லட்சம்" என்றெல்லாம் கூவினார்களே, அதெல்லாம் செய்ய முடியாது என்று அவர்களுக்கும் தெரியும், ஆனால், ஏமாற்றினார்கள். 

அதே போல கமல் சொன்ன இன்னொரு முக்கியமான விஷயம், "நான் ஆட்சிக்கு வந்தால் இலவசங்களை ஒழிப்பேன். ஸ்கூட்டரும் கிடையாது, குவாட்டரும் கிடையாது" என்று. அந்த தைரியம். தனித்துவம். 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கமலை எதிர்க்கின்றன. கமல் பொதுவாக ஒரு கருத்து சொன்னாலும், உடனே எல்லோரும் வரிந்து கட்டிக்கொண்டு வருகின்றனர். அந்த பயம் நல்லது. 

பொதுவாக கமல் ரசிகர்கள் எல்லோரும் கண் மூடித்தனமாக அவரை தொடர்வதில்லை, யாரும் இதுவரை கட்சி ஆரம்பிப்பார், பதவி கொடுப்பார் என இருந்ததில்லை. எனவே, சம்பாதிக்க வேண்டும் என்று வருபவர்கள், குறைவாக இருக்கலாம். 

அதே தனித்துவம். "ஏதோ சொல்றாருப்பா. கண்டிப்பா செய்வாருப்பா" என்று சில (மிகச்சிலர்) நம்புகின்றனர். 

மற்ற மொழிகளில் வெற்றி பெற்ற படங்களை, அப்படியே தமிழில் மசாலா கலந்து அடிப்பதில் வல்லவர். எனவே, மற்ற மாநிலங்களிலோ அல்லது நாடுகளிலோ உள்ள நல்ல திட்டங்களை கண்டிப்பாக, சொந்த திட்டம் போல கொண்டு வருவார்.

மொத்தத்தில் கூட்டிக் கழித்துப் பார்த்தால், கமல் கொஞ்சம் வேகமாக போவது போல தோன்றுகிறது. விஜயகாந்தும் இதே போல எடுத்தவுடன் முதலமைச்சராவேன் என்று 234 தொகுதிகளிலும் நின்றார். அது மாதிரி இல்லாமல், ஒரு குறிப்பிட்ட 10 அல்லது 20 தொகுதிகளில் மட்டும் நின்று, அதில் சொன்ன வாக்குறுதிகளைக் காப்பாற்றி ஒரு முன் மாதிரியாக செய்யலாம். நிழல் அமைச்சரவை அமைக்கலாம். (இதையேதான் ராமதாஸும் செய்கிறார். ஆனால், அவர் மீது விழுந்த கறை அப்படி) 

இன்னும் கொஞ்சம் முன் மாதிரியாக மற்றவர்களிடம் இருந்து எந்தளவிற்கு வேறுபட்டு செயல்படுகிறார் என்பது முக்கியம். ஆனால், ஒரு சாமானியனுக்கு அந்த வித்தியாசமே ஒரு அவ நம்பிக்கையை உண்டாக்கி விடக் கூடாது. 

இதுநாள் வரை என் வாக்கு NOTAவிற்கே. இனி உங்களுக்குத்தான் என இன்னும் முடிவு செய்யவில்லை. அதற்கு இன்னும் கொஞ்சம் நாள் இருப்பதாக நான் கருதுகிறேன். 

வாழ்த்துக்கள் கமல்.   

4 comments:

  1. அலசல் அருமை நண்பரே...

    ReplyDelete
  2. நல்லவற்றையே எதிர்ப்பார்ப்போம்... வரவேற்போம்...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக. நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்தானே எல்லாம் செய்கிறோம்.

      Delete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..