Saturday, May 29, 2010

இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் - படத்தினால் அறியப்படும் நீதி யாதெனில்

இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் வெளியாகி பல நாட்கள் ஆகின்றன. அதற்குப் பின் வெறும் சிங்கமும் வெளியாகி விட்டது. ஆனாலும் இன்றுதான் முரட்டு சிங்கத்தைப் பார்க்க முடிந்தது. ஏனோ தெரியவில்லை, இந்தப் படத்தைப் பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது. எனவேதான் இந்தப் பதிவு.

அது ஏனோ தெரியவில்லை, சிம்புதேவன் படங்களுக்கு போகும்போது மட்டும் பல காட்சிகள் வெட்டப்படுகின்றன. அறை எண் 305ல் கடவுள் படத்தில் 'ஆணி பிடுங்குவோர்க்கு' கையை மொன்னையாக்கும் காட்சிகள், சிங்கம் படத்தில் 'அணு ஆயுத ஒப்பந்தக் காட்சிகள்' வெட்டப்பட்டுவிட்டன. சத்யமிலேயே இந்த நிலைமை.

கிட்டத்தட்ட படம் முழுதும், இறுதிக்காட்சிக்கு முன்பு வரை பார்த்துப் பார்த்து ரசித்து, சிரித்துக் கொண்டிருந்தோம். புதையலை எடுக்கும்போது வரும் கேள்விகளைக் கேட்டபோது, எனக்கு பொளேரென்று அறைந்தது போல இருந்தது. முதலில் தமிழில் எத்தனை எழுத்துக்கள் என்ற கேள்விக்கு வந்த பதில்களைக் கேட்டபோதே, இப்போதைய தலைமுறைதான் ஞாபகம் வந்தது.

தமிழ் பற்றி வந்த அந்த கேள்வி பற்றி யோசிக்கும்போது, ஊடகங்களின் பங்கும் நினைவுக்கு வந்தது. சில நிகழ்ச்சிகளின் தலைப்புக்கள் 'ஹலோ தமிழா', 'குட் மார்னிங் தமிழா', 'அருக்காணி டு அழகு ராணி (இந்த தலைப்பைக் கேட்டவுடனும் சரி, தெரியாமல் பார்த்து விட்டாலும் சரி, பயங்கரமாக எரிச்சல் வரும். ஏன்? அருக்காணி என்ற பெயர் இருந்தால் அசிங்கமாகத்தான் இருக்க வேண்டுமா என்ன?).

அடுத்த கேள்வியாக, பொங்கு தமிழர்களுக்கு இன்னல் விளைவித்து, அல்லையில் மிதிக்கும்போதும், அகதிகளாக அலையவிடும்போது நாம் என்ன செய்வோம் என்று. எனக்கு அவர்கள் சொன்ன நான்கு பதில்களுக்கு மேல் எனக்கு ஐந்தாவதாக ஒன்று தோன்றியது. "பாராட்டு விழா எடுத்துக் கொண்டிருப்போம்" என்று. என்னால் அதற்கு மேல் சிரிக்க முடியவில்லை. மக்கள் அதை ரசித்து, சிரித்தனர். ('அங்காடித் தெரு' படம் முடிந்த பின், வெளியே வரும்போது கேட்டது. "ஏம்பா, அவங்க மாதவரத்துல தங்கச்சிய பாக்கற சீன்ல வர்ற நாய் என்ன ஜாதி?)

சிம்புதேவன் ஆனந்த விகடனில் இருக்கும்போதே, அவரின் கார்ட்டூன்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருக்குள் உள்ள இன்னொரு 'சிகப்புத் தமிழனை' இந்தப் படத்தில் நான் பார்த்தேன். இது கொஞ்சம் அதிகம் என்று நினைப்பவர்களுக்கு, மன்னிச்சூ!! ஏனென்றால், உண்மையான சிங்கம் இறக்கும்போது வரும் வசனங்கள் யாருக்காக என்பது அனைவருக்கும் புரிந்திருக்கும். அதே போல இறுதிக்காட்சியில் இரட்டைக் கோபுரத்தை தகர்ப்பது, விடுவிக்கும் கைதிகள் யார் யார் என்பதை பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். சற்றே மிகைப்படுத்தியிருந்தாலும், ரசித்தேன். சிரிக்கவில்லை. சிரிக்க முடியவில்லை.

எண் 305ல் கடவுள் படம் எனக்கு மிகவும் பிடித்தது. ஒரே முக்கிய காரணம், தமிழில், 'உருவங்கள் மாறலாம்', 'கடவுள்' படத்திற்குப் பிறகு மிகவும் வித்தியாசமான கோணத்தில் கடவுளைக் காட்டியதற்காக. ஆனால், கடவுள் நம்பிக்கை உள்ள என் நண்பர்களுக்கு அந்தப் படம் பிடிக்கவில்லை, இந்தப் படம் புரியவில்லை.

"சரிடா, இவ்ளோ எழுதறியே? நீ என்ன செய்யலாமுன்னு இருக்கே, இல்ல என்னதான் பண்ணியிருக்க? சிம்புதேவன் சொல்லித்தான் உனக்கு இதெல்லாம் தெரியணுமா?" என்று கேட்பவர்களுக்கு, அசிங்கதுடனும், வெட்கத்துடனும் சொல்லிக்கொள்வது "தெரியவில்லை, ஒன்றுமில்லை". இந்தப் படத்திற்கு சும்மா, ஜாலியாக போய் விட்டு வரலாம் என்றுதான் நான் போனேன். ஏதோ உறுத்தியதால், இந்தப் பதிவு. மீண்டும் சொல்வது, தவறாக இருந்தால் சொல்லவும், திருத்திக் கொள்கிறேன். பி ஹாப்பி..

Tuesday, April 27, 2010

இப்போது பிடித்த பத்து பாடல்கள்!!!

நான் சமீப காலங்களில் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் புதுப் பாடல்கள் பற்றிய சிறு பதிவு... இதில் தர வரிசை எதுவும் கிடையாது. திடீரென எங்கேயோ கேட்டதில் நச்சென்று மனதில் உட்கார்ந்து விட்டது. சில புதுப் பாடல்கள் படம் பார்த்த பின். பாடல்களைக் கேட்டு விட்டு, மக்கள் தங்கள் மனதிற்கு பிடித்தவற்றையும் பின்னூட்டமிடலாம்.

பாடல் : ஜில்லென்று ஒரு கலவரம்
படம் : லீலை
இசை : சதீஷ் சக்ரவர்த்தி

படமும் இன்னும் வரவில்லை, இசையமைப்பாளரும் புதியவர், நாயகன் நாயகியும் தெரியாது. எப்போதோ பண்பலையில் கேட்டது. மனதில் தங்கி விட்டது. தினமும் குறைந்தது ஏழெட்டு முறையாவது கேட்டு விடுவேன். இந்த பாடலின் திரையாக்கத்தைக் காண ஆவலுடன் இருக்கிறேன். நீங்களும் கேட்டு சொல்லுங்களேன்?

பாடல் : மழை பெய்யும்போது
படம் : ரேணிகுண்டா
இசை : கணேஷ் ராகவேந்தரா

இந்த படத்தை முதலில் நண்பர்கள் பார்த்து விட்டு வந்து இந்தப் பாடல் நன்றாக இருந்தது என்றனர். நான் கேட்டு விட்டு அப்படி ஒன்றுமே இல்லையே என்றேன். ஆனால், படம் பார்த்த பின் உண்மையிலேயே எனக்கு மிக மிக பிடித்தது. ஹரீஷ் ராகவேந்த்ராவின் குரலும், நடுவில் அவ்வப்போது வரும் ஹம்மிங்கும் அப்படியே எங்கோ போவது போலவே உள்ளது.

பாடல் : லேசா பறக்குது
படம் : வெண்ணிலா கபடிக் குழு
இசை : செல்வ கணேஷ்

இந்தப் பாடலும் படம் பார்த்த பின் மனதில் நச்சென்று நின்று விட்டது. காட்சியமைப்பும் அருமை. எங்களூர் திருவிழாவை ஞாபகப்படுத்தியது. ஆரம்பத்தில வரும் புல்லாங்குழலும், அதன் பின் வரும் குழுப் பாடலுமே அட்டகாசமாய் இருக்கும்.

பாடல் : அவள் அப்படி ஒன்றும்
படம் : அங்காடி தெரு
இசை : விஜய் ஆண்டனி

இந்தப் பாடலை ஏன் பிடிக்கும் என்று சொல்லத் தெரியவில்லை. ஏனென்றால் நமக்கு மிகவும் பிடித்த பெண்ணிடம் இந்தப் பாடலைப் பாட முடியாது. ஆனாலும் ஏதோ ஒன்று மிகவும் கவர்ந்தது. 'நாக்க முக்க' இசையைப்பாளர் அவ்வப்போது மட்டும் இது போன்ற நல்ல பாடல்களைத் தருகிறார். அவருக்கு இன்னும் நல்ல படங்கள் அமைய வேண்டும்.

பாடல் : The King Arrives
படம் : ஆயிரத்தில் ஒருவன்
இசை : G. V. பிரகாஷ்

முதலில் இந்த இசையைக் கேட்டபோது 'என்ன கொடும ஜி வீ இது?' என்று கேட்க தோன்றியது. படம் பார்க்கும்போதுதான், அதுவும், திரையரங்கில் அதன் அம்சம் புரிந்தது. இசைக்கேற்ற நடனமும் அருமையாக இருந்தது. இந்த இசையை எப்போதுமே ஹெட் போனில் கேட்டால் மட்டுமே நன்றாக உள்ளது.

பாடல் : உன் பேரை சொல்லும்போதே
படம் : அங்காடி தெரு
இசை : G. V. பிரகாஷ்

ஆடத் தெரியாத, ஆடப் பிடிக்காத என் போன்றோருக்கு, கஷ்டப் படாமல் ஆடுவதற்கேற்ற பாடல். படத்திலும் மிகவும் சிரமப்படாமல் ஆடியிருப்பார்கள். 'பீலிங்க்ஸ்' இருப்பவர்களுக்கு இன்னும் பிடிக்கும் என்று சொன்னார்கள். உண்மையா என்று 'பீல்' பண்ணுவோர் சொல்லலாம்.

பாடல் : இது வரை
படம் : கோவா
இசை : யுவன்

இந்தப் பாடலையும் முதலில் கேட்டபோது, என்னடா ஆரம்பமே அபசகுனமாக உள்ளதே என்று தோன்றியது. ஆனால், அஜீஷின் குரல் ஒட்டு மொத்தமாக எல்லாவற்றையுமே பின்னுக்குத் தள்ளி விட்டது. அநேகருக்கும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

பாடல் : ஜூபி டூபி (zoobi doobi)
படம் : 3 இடியட்ஸ்
இசை : சாந்தனு மொய்த்ரா

வழக்கம் போல பார்த்தது, பிடித்தது சாதியில்லை. படம் பார்த்தபோது சற்றே 'தமிழ்ப்படம்' சாயல் இந்தப் பாடலில் தெரிந்தது. அத்துடன் மறந்தும் விட்டேன். அலுவலகத்தில் இந்தப் பாடலை ஒருவர் 'டோனாக' வைத்திருந்தார். எங்கேயோ கேட்டது போலவே உள்ளதே என்று போசித்து, யோசித்து கடைசியில் கேட்க ஆரம்பித்து கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.

பாடல் : ஈரம் (Theme of Eeram)
படம் : ஈரம்
இசை : தமன்

'இந்தப் பையனுக்குள்ள ஏதோ இருந்திருக்கு பாரேன்' என்று நினைக்க வைத்த படம். இந்த 'தீமை' விட படத்தில் மற்ற இடங்களில் (குறிப்பாக கொலை நடக்கும்போது வரும் இசை) எனக்கு மிகவும் பிடிக்கும். படத்தின் மற்ற பாடல்களுமே அருமை.

பாடல் : நான் போகிறேன்
படம் : நாணயம்
இசை : ஜேம்ஸ் வசந்தன்

அது என்னவோ தெரியவில்லை. இவரின் இசையமைப்பில் வரும் படங்கள் அனைத்திலும் ஒரு பாடல், குறிப்பாக ஒரு மென்மையான காதல் பாடல் வந்து விடுகிறது. அதுவும் நன்றாகவும் இருக்கிறது. சுப்ரமணியபுரம், பசங்க, நாணயம், காவலர் குடியிருப்பு என எல்லாவற்றிலுமே. மிக அருமையான, மென்மையான பாடல்.

அவ்வளோதாங்க.. என்னடா சம்பந்தமே இல்லாம இவனும் பாட்டப் பத்தி எழுதறானேன்னு யோசிக்கிறீங்களா? பதிவு போட்டோ ரொம்ப நாளாச்சா?? ஒரு வருகைப் பதிவுதான்... அம்புட்டுதேன்.. நீங்களும் வருகைய பதிவு செஞ்சிடுங்கோ!!!

Saturday, February 6, 2010

நான் படமாக்க விரும்பும் கதைகள் - 2

நான் முதலில் படமாக விரும்பிய கதையை படித்திருந்தாலும், இல்லாவிட்டாலும், இந்த பதிவைப் படிக்கலாம். முதல் கதையைப் போல இதுவும் த்ரில்லர், ஆக்ஷன் கதைதான். இதை படமாக எடுத்தால், கண்டிப்பாக பெரிய பட்ஜெட்டில் எடுக்க வேண்டும். நிறைய எதிர்ப்பு வரவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, படத்திற்கு விளம்பரம் கிடைக்கும். மற்றபடி படித்து விட்டு உங்கள் கருத்தை சொல்லவும்.

காசனோவா '99:

எண்டமூரி வீரேந்த்ரநாத் என்ற தெலுங்கு கதையாசிரியரின் கதை. (தமிழ் மொழிபெயர்ப்பு கௌரி கிருபானந்தன்). இவர் படமெல்லாம் கூட இயக்கியிருக்கிறார் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட பனிரெண்டு வருடங்களுக்கு முன் வந்த கதை. ஒரு சதவிகிதம் வரலாற்றையும், மிச்சம் கற்பனையும் கலந்த நாவல். படிக்கும்போது கீழே வைக்க முடியாமல் ஒரே மூச்சில் படித்த கதை. எனக்கு சரியாக, கோர்வையாக கதை சொல்ல வராது. எனவே, சற்றே பொறுத்துக் கொள்ளவும்.

1971 டிசம்பர் 16, பாகிஸ்தானின் படைகளைத் தோற்கடித்து விட்டு, பங்களாதேஷை, சுதந்திர நாடாக்குகிறது இந்தியா. அவமானத்தால் கொதிக்கும் பாகிஸ்தானோ, சதி வேலைகளில் ஈடுபட்டு, பங்களாதேஷின் தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மானைக் கொன்று விடுகிறது. மேலும், இந்தியாவையும் காஷ்மீரையும் பிரித்து தன்னுடன் இணைக்க விரும்புகிறது. (இத்துடன் வரலாறு முடிகிறது). அதற்காக ஒருவனைத் தேர்ந்தெடுக்கிறது. அவனுடைய திட்டமும் அபாரமாக இருக்கிறது. அதன் மூலம் எப்படியும் அடுத்த நாற்பது வருடங்களில் எப்படியும் காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துவிடலாம் என்று நம்புகிறது. (அதாவது புட்டோ மட்டும்) அவன் ஒருவனை மட்டும் நம்பி, கிட்டத்தட்ட, நூறு கோடியை கொடுத்து, அவனை 1975ல் இந்தியாவுக்கு அனுப்புகிறார் புட்டோ. அவன் பெயர் ஃபாக்ஸ் (Farrook Om Xeviour - FOX).

இப்போது டைட்டில்ஸ்.

அதன் பின் பாகிஸ்தான், இந்தியா இரண்டிலும் நிறைய அரசியல் மாற்றங்கள். காலமும் யாருக்கும் நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கிறது. புட்டோ தூக்கிலடப்படுகிறார், ஜெனரல் ஜியோ விமான விபத்தில் இறக்கிறார், பெனாசிர், நவாஷ் என பாகிஷ்தானிலும், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், மற்றும் பலர் என்று மாறி, தற்போது ஸ்ரீ வாத்சவா பிரதமராகி உள்ளார். பாக்ஸ் பற்றிய விஷயங்களும் பாக்கின் அதிகார வர்க்கத்தில் மறக்கப்படுகின்றன. இதெல்லாம், பின்னணியில் காண்பிக்கலாம்.

டைட்டில்ஸ் முடிந்தவுடன், டாக்டர் மதுஷாலினி, B.D.S போர்டு முன் காமரா நிற்கிறது. சென்னையில், திருவல்லிக்கேணியில், ஒரு சந்தில் உள்ள, அழகான பல டாக்டர். தானுண்டு, தன் வேலையுண்டு, உலகத்தில் அனைவரும் நல்லவர்களே என்று நம்புகிற அப்பாவி. தற்போது ராஜேஷ் என்ற பணக்கார இளைஞன் மட்டும் பின்னால் துரத்துகிறான். மற்றபடி பிரச்சினை எதுவுமில்லை.

அடுத்து, மாந்தாதா (Mandhatha). பிரதமரின் முதன்மை பாதுகாவலன். கடமைக்காவே வாழ்பவன். அதனாலேயே, அம்மாவின் முதுத்தண்டு உடைபட்டது, மனைவி பிரிந்து விட்டாள், உடன் பிறந்த தம்பி எங்கோ ஓடி விட்டான். ஆனாலும், கடமைக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பவன்.

ஸ்வப்னமித்ரா. கடமைக்காக அம்மாவின் உயிரையும் பலியிட துணிந்த அண்ணனை விட்டு, தப்பி ஓடி வந்து, எப்படி எப்படியெல்லாமோ கஷ்டப்பட்டு விமானப் பயிற்சி முடித்து விட்டவன். இவன்தான் காசனோவா (Casanova). எந்த பெண்ணும் திரும்பிப் பார்க்கும்வரை பின்னால் அலைவது, பார்த்தவுடன் கழட்டி விட்டு, வேறொரு பெண்ணை தேட வேண்டியதுதான். அவனது அடுத்த குறி, மது ஷாலினி.

இந்த மூவரையும் முக்கியமாக வைத்து, எப்படி பாக்ஸ் யார் என கண்டு பிடித்து நாட்டை காப்பாற்றுகிறார்கள் என்பதை, சூடாகவும், சுவையாகவும் சொல்லியிருப்பார். இவர்கள் தவிர, நிறைய கதாபாத்திரங்களை கதையில் நுழைத்திருப்பார். அவை, அங்கங்கே கதையின் திருப்பத்திற்கு உதவும். ஆனால், நாவலில் அவர்களில் முழு பின்னணியை விவரித்திருப்பார். அவற்றை தவிர்த்து விடலாம். உண்மையாகவே, கதையை முழுதாக படித்தீர்கள் என்றால், என்னென்ன பிரச்சினைகள் வரும் என்று உங்களுக்குப் புரியும்.

பல சம்பவங்கள் (இறுதிக்காட்சி உட்பட), பாகிஸ்தானில் நடக்கும். அது மட்டுமன்றி சீனா வேறு அங்கங்கே வந்து வில்லத்தனம் பண்ணும். அது மட்டுமன்றி, உலகளாவிய வகையில் உள்ள உளவுத்துறையினர் (பிளாண்டர்ஸ் - அடுத்த நாட்டில் நிரந்தரமாக குடியேறி, ரகசியங்களை வாங்கி சுந்த நாட்டிற்கு கொடுப்பவர்கள்) பற்றியும், கடைசியில் அவர்களுக்கு நிகழும் கதியும், அப்பப்பா.

கதையிலும், நிறைய லாஜிக் பொத்தல்கள் இருக்கின்றன. கோனூசி வைத்து தைத்து விடலாம். கதையின் நீதி, ஜீரணிக்க கஷ்டமாக இருந்தாலும், தசாவதாரம் வில்லன் கமல் சொல்வது போல, இந்தியாவில் பணமிருந்தால் யார் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதை அழகாக சொல்லியிருப்பார்.

நாவல் பற்றிய விவரங்கள்:
தலைப்பு : காசனோவா 99
ஆசிரியர் : எண்டமூரி வீரேந்த்ரநாத்
வெளியிடுவோர் : அல்லயன்ஸ் நிறுவனம்.
விலை : ரூ.75-

பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன



Friday, December 4, 2009

சூப்பர் நாவல் - சுபா

அனைவருக்கும் எனது புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!!!

க்ரைம் நாவல் -ராஜேஷ் குமார் பற்றிய பதிவை படித்திருப்பீர்கள். உடனே,எனக்கு அடுத்து நினைவுக்கு வருவது சூப்பர் நாவல் - சுபாதான்.

சுபா
(சுரேஷ்-பாலா):

சூப்பர் நாவல், க்ரைம் நாவலைப் போலஅவ்வளவு சீரியஸாக இருக்காது. சில துணுக்குகள் இருக்கும். அது மட்டுமின்றி நாவலின் அட்டைப் படமும் ரணகளமாக இருக்கும். காரணம், புகைப்பட நிபுணர் கே.வி.ஆனந்த். அதன் பிரதி பலனாகவே, அவர் இயக்கும் படங்களுக்கு சுபா திரைக்கதை அமைக்கின்றனர் என்று நினைக்கிறேன். அது மட்டுமன்றி சூப்பர் நாவலில், சுரேஷ் பாலா இருவரும் நடுவில் சில காலம், அலுவல் காரணமாக பிரிந்திருந்த பொது நடந்த மடல்பரிமாற்றங்கள் வேறு தொடராக வந்தது.

சுபாவின் கதைகளில், துப்பறியும் காட்சிகள் நன்றாக இருக்கும். நம்மால் அதை மனதில் ஓட்டிப் பார்க்கும்படி விவரித்திருப்பார்கள்.பொதுவாக
எல்லா கதாசிரியர்களும் தங்களது கதைகளின் நாயகர்களாக ஒரே பாத்திரத்தை வைத்திருப்பார்கள். ஆனால், எனக்கு தெரிந்து சுபாவிற்கு இரண்டு விதமான நாயகர்கள்.

ஈகிள்ஸ் தனியார் துப்பறியும் நிறுவனத்தை சேர்ந்த நரேந்திரன் - வைஜெயந்தி, எம்.டி ராமதாஸ், ஜான்-அனிதா, அப்புறம் ஒரு நாய் (பெயர் மறந்து விட்டது), அவர்களின் காவல்துறை நண்பர் பால் ராஜ்.

நரேன் வைஜ் வரும் கதைகள், அவர்களது ஊடல்,கூடலுடன் அழகாக பயணிக்கும் எனக்கு அவர்கள் தோன்றும் கதைகள் படிக்கும்போது,அந்த கால கமல் ராதாதான் நினைவுக்கு வருவார்கள். அது மட்டுமின்றி, இணைபாத்திரங்களும் நன்றாக படைக்கப்பட்டிருக்கும்.நரேனின் நண்பனாக வரும் ஒரு இணை கதாபாத்திரத்தை, ஆரம்ப கால கதைகளிலேயே போட்டுத் தள்ளி விட்டார்கள். அதன் பின்தான் ஜான் பாத்திரம் வந்தது.

இன்னொரு நாயகன் செல்வா. செல்வா மற்றும்முருகேசன். ராணுவத்தில் குண்டடி பட்டதால் தனியே வந்து துப்பறியும் நிறுவனம் நடத்தும் பாத்திரம். முருகேசனும் அவனுடைய அத்தைகளும் பற்றி சுபா தனியே எழுதுவார்கள் என்று நினைக்கிறேன். செல்வா வரும் எல்லா கதைகளிலுமே வரும் நாயகி, செல்வாவுடன் சகஜமாக சுற்றி விட்டு, கடைசியில் 'எஸ்' ஆகிவிடுவார்கள். (கிட்டத்தட்ட வசந்த் போலவே).செல்வா முருகேசன் கதைகளில், கதை எப்போதும் செல்வாவின் பார்வையில்தான் பயணிக்கும். இந்த இரண்டு பாத்திரங்களும் இணைந்து கலக்கிய கதை ஏதோ ஒன்று மட்டும் படித்ததாக ஞாபகம். மக்கள் யாரேனும் படித்திருந்தால் கூறவும். நான் படமாக்க விரும்பும் கதையாக முதலில் சுபாவின் நாவலைத்தான் கூறியுள்ளேன்.

இன்னும் நிறைய பேர் உள்ளனர்.. விரைவில் வரும்.

Wednesday, December 2, 2009

க்ரைம் நாவல். ஆசிரியர் - ராஜேஷ் குமார்

யார்ரா இவன்?? பெரிய ______ மாதிரி சொல்ல வந்துட்டான்னு நெனக்காதீங்க... சும்மா எனக்கு தெரிஞ்சத சொல்லலாமுன்னு நெனச்சேன்.. அம்புட்டுதேன்.. அதுவுமில்லாம, நான் சொல்ல வந்தது நம்ம மாத நாவலாசிரியர்கள் பத்திதேன்.. நெறைய சொல்லனுமுன்னு ஆசங்க.. கொஞ்ச கொஞ்சமா சொல்றேன்..

ராஜேஷ் குமார்:

ஒரு காலத்தில், ராஜேஷ் குமாரை விட சிறந்த நாவலாசிரியர் உலகத்திலேயே கிடையாது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். அந்தளவிற்கு வெறித்தனமான ரசிகனாக இருந்தேன். அவரது மாத நாவல் 'க்ரைம் நாவல்'. எனக்கு தெரிந்து தமிழ் மாத நாவல்களில் விலை அதிகமானதும், அதிகம் விற்பனையாவதும் அதுதான். எனவே, அப்போது பழைய புத்தக கடைதான் அந்த நாவலுக்கு. பழைய புத்தக கடையில், மற்றவர்களின் புத்தகங்கள் பாதி விலை என்றால், ராஜேஷ் குமாரின் நாவல் மட்டும், பாதிக்கு மேல், ஒரு ரூபாய் அதிகம். இதிலிருந்து அவரின் பெருமை தெரியும் என்று நினைக்கிறேன்.

அந்த நாவலில் 'ட்ரங்க் கால்', 'விளக்கம் ப்ளீஸ் விவேக்' (இது தனியே புத்தகமாகவும் வெளியானது) மற்றும் அரட்டை (ஞாபகம் இல்லை) பகுதிகளும் நன்றாக இருக்கும். சமீப காலங்களில்தான் படிப்பது சற்றே குறைந்து விட்டது. பள்ளியில் படிக்கும்போது, வீட்டில் திட்டுவார்கள் என்று அங்கங்கே ஒளித்து வைத்த க்ரைம் நாவல்கள் இன்னும் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அவரது நாவல்களில் வரும் துப்பறியும் நாயகன் விவேகானந்தன் என்கிற விவேக், புலனாய்வுதுறை உயரதிகாரி. அவரது மனைவி ரூபலா. காவல்துறையில் அவரது நண்பர் கோகுல் நாத். இப்போதெல்லாம், விஷ்ணு என்கிற உதவியாளரும். எனக்கு தெரிந்து, நாவலாசிரியர்களின் நாயகர்களில், விவேக் மட்டும்தான் அரசாங்க அதிகாரி. நிறைய முறை, ஸ்காட்லாந்து போலீஸால் துப்பறிய முடியாத வழக்குகளையும், விவேக் கண்டு பிடித்துள்ளார். பல வருடங்களுக்கு முன், ஒரு கதையில் நடந்த விவேக்-ரூபலா திருமணத்திற்கு மொய்ப்பணம் மட்டும் சில ஆயிரங்கள் தேறியதாக படித்துள்ளேன்.

விவேக் - ரூபலா வரும் நாவல் என்றால் எப்பாடு பட்டாவது அதை வாங்கி விடுவேன். ஊருக்குள், புத்தக மாற்று முறையில், விவேக் வரும் ஒரு புத்தகத்திற்கு, இரண்டு புத்தகங்களைக் கொடுத்தெல்லாம் வாங்கியுள்ளேன். அது மட்டுமன்றி, அவரது கதைகளின் தலைப்பு, எதுகை மோனையோடு இருக்கும். அஞ்சாதே அஞ்சு (இது தொடராக வந்தது), விட்டு விடு விவேக், தப்பு தப்பாய் ஒரு தப்பு, இந்தியனாய் இரு எனப் பல. அவரது இன்னும் சில நாவல்களும் தொலைக்காட்சியில் தொடராக வந்துள்ளன.

அவரது கதைகளில், தொழில் நுட்பங்கள் அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கும். கம்ப்யுட்டர், அதில் 'பாஸ் வேர்டு' என்ற பாதுகாப்பு உள்ளது என்பதெல்லாம் எனக்கு க்ரைம் நாவல் மூலம்தான் தெரியும். கிரிப்டோகிராபி பற்றியெல்லாம், தமிழில் பல வருடங்களுக்கு முன்பே எழுதியுள்ளார். தற்போது ஓரளவிற்கு விவரம் தெரிந்தாலும், அதற்கு முன்னோடி ராஜேஷ் குமார்தான். மற்ற தமிழ் கதாசிரியர்களுடன் பார்க்கும்போது, அவர் டெக்னிக்கலாக, சற்று முன்னுள்ளார் என்பது என் கருத்து.

பொதுவாக அவரது கதைகள் கடைசி இரு அத்தியாயங்களுக்கு முன் வரை பயங்கரமாக இருக்கும். கடைசியில் (என்னைப் பொறுத்த வரை) நம்ப முடியாமல் இருக்கும். பெரும்பாலும் இரு கதைகளாக பயணித்து, இறுதி அத்தியாயத்தில் ஒன்று சேரும். இதை கலாய்த்து, அவரே ஒரு கதை எழுதியுள்ளார். கடைசி வரை அவை இரு வேறு கதைகளாகவே வரும்.

ரமணா படத்தில் வரும் மருத்துவமனையில் பிணத்தை வைத்து வியாபாரம் செய்யும் காட்சி, அதற்கு ரொம்ப நாள் முன்பே அவரது கதையில் வந்து விட்டது. படத்தில் அதற்காக நன்றி தெரிவித்தது போல தெரியவில்லை. யாரும் அதைப் பற்றியும் சொல்லவும் இல்லை.

திரையுலகில் அவரது எந்த கதையும் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. தற்போது ஏதோ ஒரு படத்திற்கு (படத்தின் பெயர் அகராதி) கதை, திரைக்கதை அமைத்துள்ளார். மேலும் ஆனந்த விகடனில் ஒரு தொடரும் எழுதி வருகிறார். (தலைப்பு: இனி, மின்மினி). விவேக், அவரது உதவியாளர் விஷ்ணு துப்பறியும் கதை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.அவரைப் பற்றி இன்னொரு பதிவு இங்கே.