Sunday, May 8, 2016

இங்கு அரசியல் (தவிர வேறெதுவும்) பேசாதீர்!

அரசியல் பற்றிய இன்னொரு பதிவு. இதில் இப்போதுள்ள கட்சிகள் பற்றி எனது கருத்தைக் கூறி உள்ளேன். இனி உங்கள் பாடு. முதலில் கட்சிகள் பற்றி பார்ப்போம்.

திமுக - அதிமுக:


இருக்கும் கோவணத்தையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என நினைப்போர் சத்தியமாக திமுக, அதிமுக கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம். சுய நினைவுள்ள யாரும், திமுக, அதிமுக கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டார்கள். அது மட்டுமில்லாமல் இரண்டு கட்சிகளுக்கும் போதுமான அளவு சந்தர்ப்பங்கள் கொடுத்தாகி விட்டது.

திமுக பற்றி 2008 வரை ஓரளவு நல்ல அபிப்ராயம் இருந்தது. ஆனால், அதன் பிறகு நீண்ட குடும்ப ஆக்டோபஸ் கரங்கள் தற்போது சுருண்டுள்ளன, வெட்டப்படவில்லை. பல விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாறுவதற்கு முழு முதல் காரணம் இவர்கள்தான். வெளியில் தெரியாமல் நடந்தது எவ்வளவோ உண்டு. இதில் நடுவில் ஸ்டாலினின் காமெடி வேறு. அவரிடம் ஏதோ ஒன்று, இல்லையில்லை எல்லாமே குறைகிறது.

ஜெயலலிதா பற்றி சொல்லவே வேண்டாம். எனக்குத் தெரிந்து ஜெயலலிதா தரையில் இறங்கியது, வைகோ நடைப்பயணம் போகும்போது இறங்கிப் பார்த்தாரே, அப்போதுதான். அதன் பின், அவர் கால் தரையில் பட்டதேயில்லை என நினைக்கிறேன். இப்போது வேட்புமனு தாக்கல் செய்ய வேறு வழியின்றி தரையில் கால் பட வேண்டியதாகி விட்டது.

சில உதா'ரணங்கள்':


பேருந்து கட்டண உயர்வு. அது சரிதான் வாதிடுபவர்கள், என்ன முன்னேற்றம் அடைந்தது சொல்லுவார்களா? ஓட்டுனர், நடத்துனர் வேலைக்கு ஆளுக்கு 3 லட்சம் வாங்கியதுதான் மிச்சம். இவ்வளவு உயர்வு தேவையற்றது என சொல்லக் காரணம் உண்டு. குறிப்பாக நாமக்கல்லிருந்து சேலம் போக 18 ரூபாயில் இருந்து 32 ரூபாயாக உயர்த்தினார்கள். ஆனால், தனியார் பேருந்துகள் வசூலிப்பதோ 25 ரூபாய்தான். இருக்கைகளும் நன்றாக இருக்கும். ஒளி ஒலி வசதியுடன். மக்கள் எதை தேர்ந்தெடுப்பார்கள்?

உண்மை என்னவென்றால், தனியாருக்கு லாபம் கிடைக்கவே இப்படி அரசு பேருந்துகள் உள்ளன. நாமக்கல்லிருந்து சென்னைக்கு சில ஆண்டுகள் அரசு விரைவுப் பேருந்து நிறுத்தப்பட்டது. தாங்கள் செந்தில் பாலாஜியிடம் சொல்லித்தான் அது நிறுத்தப்பட்டது என அவர்களே அதை பெருமையாக சொன்னதுண்டு.

அடுத்து மின் கட்டணம். இலவசமே கொடுக்காமல், பழைய மின் கட்டண முறை வைத்தாலே போதுமே. அதாவது 200 யூனிட் வரை ஒரு கட்டணம், 201வது யூனிட்டில் இருந்து அதிக கட்டணம். ஆனால், இப்போது 200 யூனிட்டிற்கு மேல் போனால், முதலாவது யூனிட்டில் இருந்தே அதிக கட்டணம். அதாவது நீங்கள் 200 யூனிட் உபயோகித்தால் 300 ரூபாய் கட்டணம். அதுவே 201 யூனிட் என்றால் 400 ரூபாய். எப்பூடி?

மக்கள் நலக் கூட்டணி:


கொஞ்சம் நன் மொழியில் சொன்னால், 'பல வீட்டு சாப்பாடு', இன்னும் சொன்னால், 'பிச்சைக்காரன் எடுத்த வாந்தி' போன்ற கூட்டணி. ஒன்று தவிட்டிற்கு இழுக்க, இன்னொன்று தண்ணிக்கு இழுக்கும்.

வைகோ மீதும் காலத்தில் நல்ல எண்ணம் இருந்தது. அவர் மகனின் சிகரட் கம்பெனிக்கு வக்காலத்து வாங்கியவுடனே அந்த எண்ணம் போய் விட்டது. ஒரு தலைவர் என்பவர் எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு 'தடை வந்தால்' என சொல்வது கேவலம்.

விஜயகாந்த் பாவம். முதல்வரை நாங்கள் வெற்றி பெற்ற பின்னால் தேர்ந்தெடுப்போம் என்று சொல்லி இருந்தால், ஒரு வேளை கூட்டணியை நம்பி இருக்கலாம். சுதீஷ் பாராளுமன்ற தேர்தலின் போது, சேலத்தில் வாக்கு எப்படி கேட்டார் என்றால் "நான் மந்திரி ஆனவுடன் இதை, அதை செய்வேன்" என. அதுக்கு நீ மொதல்ல பாராளுமன்ற உறுப்பினர் ஆகணுமேப்பா என்ற மக்களின் மனக்குரல் அவருக்கு கேட்கவில்லை. கூட்டணியும் செல்லாது செல்லாது.

பாமக:


இவர்கள் பரவாயில்லையே, நன்றாக சொல்கிறார்களே என நினைத்தாலும், பழைய கதைகள் நினைவுக்கு வருகின்றன. அன்புமணியும் சுதீஷ் போலவே பிதற்றுகிறார். முதலில் சட்டசபை உறுப்பினர் ஆகுங்க, அப்புறம் முதலமைச்சர் ஆகலாம். இதுவரை அவர்கள் வென்ற இடங்களில் எல்லாம் முன்னேறியுள்ளதா என்றால் இல்லை. எங்களுக்கு அதிகாரம் கொடுங்கள், அப்போதுதான் செய்வோம் என்றால் அது விதண்டாவாதம். அது மட்டுமின்றி அதிகார பகிர்வு இருந்தவரையும் அவர்கள் அவ்வளவாக செய்யவில்லை என்பது என் கருத்து.

நாம் தமிழர்:


இவர்கள் பற்றி சொல்ல வேண்டாம் என்றுதான் பார்த்தேன். ஆனாலும் சில வரிகள்.

வந்தேறிகள் நம் இடத்தை ஆளக்கூடாது, தமிழன்தான் ஆழ வேண்டும் என்கிறார். ஒரு நல்லவன் ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் ஒரு நியாயம் உள்ளது. உண்மையில் தமிழன் என்பவன் யார்? பாரதிதாசன் சொன்ன "எங்கு பிறந்தாலும் தமிழன் தமிழன்தான், இங்கு பிறந்தாலும் அயலான் அயலான் தான்" கருத்தில் எனக்கு சுத்தமாக உடன்பாடு இல்லை.

நம்மாட்கள் குணம் (நண்டு கதை) உலகம் அறிந்தது. அமெரிக்காவில் உள்ள பல தமிழ்க் குழந்தைகளுக்கு (எல்லோரும் அல்ல) தமிழ் சுத்தமாக வராது. அவர்களே அவர்களை 'தமிழன்' என்று சொல்லிக்கொள்வதில்லை.

விஜய் டிவியில் ஒரு வார்த்தை ஒரு லட்சம் நிகழ்ச்சி பார்த்திருப்பீர்கள். சில வாரங்களுக்கு முன், அதில் வெற்றி பெற்ற மாணவர்-ஆசிரியை இருவருக்குமே தமிழ் தாய்மொழி கிடையாது. ஆனாலும் தமிழர்களே வெட்கப்படும் அளவிற்கு அவர்களின் உச்சரிப்பு இருந்தது. அவர்கள் வீட்டில் கூட தமிழ் பேசுவது கிடையாது. அது தேவையும் இல்லை. ஆனால், வெளியில் மற்றவர்களுடன் தமிழில் சரளமாக உரையாட முடிகிறதே.

சரி, அதை விடுங்கள், சொந்த ஊர் நாமக்கல் என்றாலும், சென்னையில் பிறந்து வளர்ந்த ஆளுக்கு நாமக்கல்லின் பிரச்சினைகள் எப்படித் தெரியும், அதுவே, அங்கேயே பிறந்து வளர்ந்த வேற்று ஆளாக இருந்தாலும், என்னென்ன பிரச்சினைகள் என்றாவது தெரியும் அல்லவா. அதே போல தமிழன்தான் தமிழகத்திற்கு முதல்வராக வர வேண்டும் என்றால், கடலூருக்கு கடலூர்க்காரன்தான் சட்டமன்ற உறுப்பினராக வர வேண்டும்.

இன்னொரு முக்கியமான விஷயம், தமிழன் என்பவன் பொதுவாக சாதிக்குள் அடங்குபவன். அவன் முதல்வராக வந்தால், அவனது சாதிக்குத்தான் முதலில் முக்கியத்துவம் தருவான். இது எல்லோருக்கும் தெரியும். முடிந்தால் 'தமிழர்கள் மட்டும் எனக்கு ஓட்டு போடட்டும், மற்றவர்கள் போட வேண்டாம்' என்று சொல்லுவாரா?

கடைசியாக ஒன்று. 'தமிழன்தான் ஆள வேண்டும் என்கிறார். நாம் தேர்ந்தெடுப்பது மன்னரை அல்ல. மக்கள் பிரதிநிதியை. அதே போல நீங்கள் ஆளப்போவது ஆயுசுக்கும் அல்ல. ஐந்து வருடங்கள்தான்.

பாஜக, விடியல் கூட்டணி பற்றியெல்லாம் நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை.

"இருக்கிற எல்லோரும் மோசம்னு சொல்ற. அப்புறம் யாருக்கு ஓட்டு போடறது, நோட்டவுக்கா?" என்கிறீர்களா. இன்னொரு பதிவில் யாருக்கு வாக்களிக்கலாம் என்ற எனக்கு தோன்றியதை சொல்கிறேன்.

2 comments:

  1. அருமை நண்பரே அழகாக விரிவாக அலசியுள்ளீர்கள் எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்ன செய்வது நோட்டோ நல்லதுதான் மாற்றத்துக்கான வழி இருப்பினும் தங்களது யோசனையை சொல்லுங்கள் பார்ப்போம்
    தமிழ் மணம் 2
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா. இதோ இன்று அல்லது நாளை அடுத்த பதிவு.

      Delete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..