Friday, May 13, 2016

யாருக்கு வாக்களிக்கலாம்?

ஏற்கனவே தமிழக அரசியல் கட்சிகள் பற்றிய எனது பார்வை. அதைப் படித்து விட்டு இங்கே வந்தால் நலம்.

சரி இனி யாருக்கு வாக்களிக்கலாம் என்று யோசிப்போம்..

நோட்டா (NOTA):

'சார். இது வேஸ்ட். 49ஓ படம் பாத்தீங்களா. அதுல கவுண்டமணி சொல்வாருல்ல. இதுல நாம ஓட்டு போட்டா, கெட்டவனுக்கு போடலேன்னு வேணா ஆறுதல் அடையலாம். அதுக்கு யாருக்காவது சுயேச்சைக்கு போடலாம்" என்கிறார்கள். "எப்படி இருந்தாலும் 100க்கு 99 பேர் நோட்டாவுக்கு போட்டாலும், அந்த ஒரு ஓட்டு யாருக்கு விழுதோ, அவங்கதான் ஜெயிச்சவர் அப்டிங்கும்போது ஏன் இந்த நோட்டா" என்ற கேள்வியும் வரலாம். கொஞ்சம் பொறுங்கள். படியுங்கள்.

இப்போது விஜயகாந்திற்கு ஏன் இத்தனை தேவை என்று தெரியும் அல்லவா. அதையே நாம் ஏன் நோட்டாவிற்கு உருவாக்கக் கூடாது? அனைவருமே நோட்டாவிற்கு போட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால்,ஒரு தொகுதியில் 100 ஓட்டுகள், 4 வேட்பாளர்கள் முறையே 25, 20, 15, 10 ஓட்டுகள் வாங்குகிறார்கள். 10 பேர் ஓட்டே போடவில்லை. 20 பேர் நோட்டாவிற்கு போடுகிறார்கள். இப்போது வெற்றி வாய்ப்பை மாற்றியதில் முக்கிய பங்கு நோட்டா.

ஒரு கட்சி வேட்பாளர் இன்னொருவரின் வெற்றி வாய்ப்பைப் பறிக்கிறார் என்றால், அவரை, அந்தக் கட்சியை சரிக் கட்டுவது சுலபம். நோட்டாவில் வாக்களித்தவர்களுக்கு? இதே போல நிறைய தொகுதிகளில் நோட்டா கணிசமான வாக்குகள் வாங்கினால்? வேறு வழியில்லை. மக்களுக்கு ஏதாவது செய்தால்தான் அடுத்த முறை வேட்பாளர்களுக்கு ஓட்டு விழும். இல்லையென்றால், நோட்டாவிற்கே போகும் என்ற பயம் வரும். வர வேண்டும். இன்னும் குறிப்பாக சொன்னால், இளைஞர்கள் அனைவருமே நோட்டாவிற்கு வாக்களிக்க வேண்டும்.

பொதுவாக தாத்தா, பாட்டி இருவரும் சின்னங்களுக்கே வாக்களிப்பார்கள். பெற்றோர் கட்சி பார்த்து வாக்களிப்பார்கள். அதாவது பெரிய கட்சி போட்டியிடவில்லை என்றாலும், அதன் கூட்டணி கட்சிக்கு வாக்களிப்பார்கள். நானும், தங்கமணியும் (மிரட்டியாவது, அதாவது காலில் விழுந்து) நோட்டாவிற்கு.

"சொல்றது எல்லாம் சரிதாம்பா, ஆனா, நீ சொன்ன மாதிரி இந்த தேர்தலில் நோட்டாவுக்கு போட்டா இப்ப எதுவும் நடக்காதுல்ல, அடுத்த தேர்தலில்தான ஏதாவது நடக்கும்" என எண்ணாதீர்கள். அடுத்து உள்ளாட்சி தேர்தல் வரும், 3 வருடங்களில் பாராளுமன்ற தேர்தல் வரும். நல்லது நடக்கும் என காத்திருப்போம். இத்தன வருஷம் பொறுத்தாச்சு. இன்னும் கொஞ்ச நாள் பாப்போமே.

வேட்பாளர்:

"அதெல்லாம் முடியாதுங்க. நான் யாருக்காவது ஓட்டு போட்டே ஆகணும்" என்று விருப்பமா. முதலில் உங்கள் தொகுதியில் 35 வயதுக்கு உட்பட்ட, ஓரளவு படித்த ஆள் உள்ளாரா என்று பாருங்கள். அவரிடம் இப்போது உள்ள சொத்து, அவர் சம்பாதித்து வாங்கியதா என்று பாருங்கள். "யோவ், எங்களுக்கு வேற வேல இல்லையா" என முனகாதீர்கள். சில வாரிசுகள் நிற்கிறார்களே, அவர்களைப் பற்றி சொன்னேன். இருந்தால் அவர் எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, நம்பி ஓட்டளிக்கலாம். மேஜையை தட்டினாலும், கொஞ்சம் நன்மை கிடைக்க வாய்ப்பு உண்டு.

பாமக, நாம் தமிழர் கட்சிகளில் சிலர் உள்ளனர். மொத்த வேட்பாளர் விவரங்கள் தொகுதி வாரியாக இங்கே பார்க்கலாம். பார்த்து முடிவெடுங்கள். எங்கள் ஊரில் கூட நாம் தமிழர் வேட்பாளருக்கு போடலாமா என்ற எண்ணம் உள்ளது. பார்ப்போம்.

கட்சி:

"முடியாது, நான் ஏதாவது கட்சி ஆளுக்குத்தான் போடுவேன்" என்பவரா. சரி, அப்படியென்றால் மக்கள் நலக் கூட்டணிக்கு வாக்களியுங்கள். அவசரப்படாதீர்கள். ஏன் என்று சொல்கிறேன். டெல்லியில் மாற்று சக்தி என்று கருதப்பட்ட ஆம் ஆத்மி என்ன சாதித்தது, இளம் ரத்தம் என்று வந்த அகிலேஷ் யாதவ் என்ன செய்தார், மோடியாலேயே முடியலாமா, விஜயகாந்த் செய்வாரா என்றெல்லாம் உடனே யோசிக்க வேண்டாம். விஜயகாந்தோ, மக்கள் நலக் கூட்டணியோ ஒரு மாற்றத்தையும் கொண்டு வர முடியாது என்பதுதான் உண்மை.

முதலில் இது ஒரு கூட்டணி ஆட்சியாக அமையும். எப்படியும் ஐந்து வருடங்கள் தாக்குப் பிடிக்காது. மக்களுக்கு நல்லது நடக்கிறதோ இல்லையோ, கெட்டது அதிகம் நடக்காது. இது பெரிய கட்சிகளுக்கு ஒரு பாடமாக அமையும். அதே போல திமுக, அதிமுகவிற்கு அடுத்துள்ள பெரிய கட்சி என்பது இதுதான். அது மட்டுமில்லாமல் அதிகாரம் ஓரிடத்தில் குவியாமல் இருக்கும். கூட்டணியின் பலமும், விஜயகாந்தின் தலைமை லட்சணமும் தெரியும். அதை விட முக்கியம், கருணாநிதி, ஜெயலிதா இருவரை விட நல்லதாகவோ, கெட்டதாகவோ வைகோ, விஜயகாந்த் இருவரும் மக்களிடையே தேர்தல் இல்லாத போது கூட ஓரளவு தொடர்பில் இருந்தனர்.

ஏன் பாமக, நாம் தமிழர் வேண்டாம் என்றால், இதேதான் காரணம். இரு கட்சிகளும், தங்களுக்கு சாதகமான தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டு, வெற்றி பெற்று, அந்த தொகுதிகளை முன்னேற்றி, அதை வைத்து அடுத்த தேர்தலில் வாக்கு கேட்கலாம். பாமகவுக்கு அந்தத் தகுதி குறைந்து விட்டது. "இல்லீங்க, ஜெயிச்சா முதலமைச்சர்தான்" என்றால் ஒன்றும் செய்ய முடியாது. நாம் தமிழருக்கு வாக்களிக்கலாம். ஆனால், நாம் கொடுத்த அந்த வாக்கு சதவிகிதம், அடுத்தடுத்த தேர்தல்களில் விலை போகாமல், மீண்டும் தனியாகவே கம்பீரமாக இருந்தால், அடுத்த முறை யோசிக்கலாம்.

ஒரு வேளை, தொங்கு சட்டசபை அமைந்து, இவர்களில் யாரவது திமுக அல்லது அதிமுகவிற்கு ஆதரவு அளித்தாலும் இதேதானே என்ற போல கூட்டணி ஆட்சிதானே என்ற கேள்வி வரலாம். ஆட்சியில் கூட்டணி கிடையாது என அவர்களே சொல்லி விட்டார்கள். அது மட்டுமின்றி, அவர்கள் யாரையும் விலைக்கு வாங்க தயாராக இருப்பார்கள். பல அசிங்கங்கள் நடக்கும்.

சில எண்ணங்கள்:

தேர்தல் அறிக்கை என்பது குழந்தைகளைத் தூங்க வைக்க சொல்லும் கதை போன்றது. எனவே, வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டு அதை நம்ப வேண்டாம். தமிழகத்தின் இப்போதுள்ள கடனை குறைப்பது பற்றியோ அடைப்பது பற்றியோ யாரும் தெளிவாக எதுவும் சொல்லவில்லை. தமிழகத்தின் முக்கிய பிரச்சினை சாதி பற்றி யாரும் சொல்லவில்லை. அதை விட முக்கியம் எல்லா அறிக்கைகளும் மறைமுகமாக 'நிபந்தனைகளுக்கு உட்பட்டவை'.

அனைத்து கட்சிகளும் தேர்தல் நேரத்தில்தான் மக்களோடு உறவாடும். மற்ற நேரங்களில் வெறும் அறிக்கைதான். எல்லா பத்திரிக்கைகளின் மின்னிதழ்கள் இணையத்தில் உள்ளன (2006 முதல்). ஓய்வு நேரத்தில் அவ்வப்போது படித்துப் பாருங்கள். கண்டிப்பாக நான் சொல்வதை ஒப்புக் கொள்வீர்கள்.

உண்மையில் நியாயமாக கல்விக்கும், விவசாயத்திற்கும் கடன் வாங்கியவர்கள் அதை தள்ளுபடி செய்ய வேண்டும் என எதிபார்க்க மாட்டார்கள். மாறாக, கொஞ்சம் தவணையை வேண்டுமானால் நீட்டிக்க எண்ணுவார்கள். 90 சதவிகித கல்வி மற்றும் விவசாய கடன்கள் வட்டி குறைவு என்பதால் மற்ற தேவைகளுக்காகவே வாங்கப்படுகிறது. எனவே, சரியாக விசாரித்து தேவைப்பட்டவர்களுக்கு மட்டும் தள்ளுபடி செய்தால் வரிப்பணம் வீணாகாது.

இன்னொரு முக்கிய விஷயம். ஒரு வேளை நீங்கள் இப்போது உள்ள சட்டமன்ற வேட்பாளருக்கு, அல்லது ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களித்தாலோ அவர்கள் தண்டிக்கப்பட்டதாக எண்ண வேண்டாம். இவ்வளவு நாள் சம்பாதித்ததை இனி அதே வேகத்தில் சம்பாதிக்க முடியாது. அவ்வளவே. வந்தவரை லாபம். மற்றபடி பிடுங்கியதை திரும்ப வாங்கவே முடியாது.

நம் சமுதாயத்தில் இரண்டு கோடுகள் உண்டு. மேல் கோட்டுக்கு மேலே இருப்பவர்கள் வெயில் படாதவர்கள். எதையும் வளைக்கும் திறனுடையவர்கள். அரசியல்வாதிகள் அல்லது அவர்களைத் தீர்மானிப்பவர்கள். கீழ்க் கோட்டுக்கு கீழே உள்ளவர்கள், அன்றைய தினம் கழிந்தால் போதும். அவர்களே அடி மட்ட தொண்டர்கள். அவர்களை நம்பித்தான் கட்சி. அப்படி இல்லாதவர்கள் தேர்தலின்போது பணம் வாங்கிக் கொண்டு, அவர்களுக்கு வாக்களிப்பவர்கள்.

பெரும்பாலும் இவர்கள் வாக்கு திமுக அல்லது அதிமுகவிற்கே இருக்கும். வேட்பாளர்கள் கொடுக்கும் பணம் அப்போதைக்கு ஓரிரு நாட்கள் உதவுவதால், உடனே தேர்தலில் அவர்களுக்கு வாக்களித்துவிடுகிறார்கள் (இது என்னுடைய பொதுவான கருத்து)

இந்த இரண்டு கோட்டிற்கும் நடுவில் உள்ளவர்கள் தட்டிக் கேட்கவும் துணிவில்லாது, தேர்தலில் நிற்கவும் பயந்து, அடையாளம் கூட இல்லாமல் என்னைப் பதிவு எழுதுபவர்கள். இவர்களுக்கு யார் வந்தாலும் கவலை இல்லை, அவர்களால் இந்த மக்களுக்கு நன்மையையும் இல்லை, தீமையும் இல்லை. நம்மைப் போன்றவர்களே இந்த வெற்றியை தீர்மானிப்பவர்கள். அவ்வப்போது ஞானம் வரும். இதே போல பதிவிடுவோம். முகப்புத்தகத்தில் பகிர்வோம். அவ்வளவே. அதைத் தாண்டி ஒன்றும் கிழிக்க மாட்டோம். நமக்கு உள்ள ஒரே ஆயுதம் ஓட்டுதான்.

ஏன் வாக்களிக்க வேண்டும்:

"எதுக்கு சார் ஓட்டு போடணும், இவனுங்க திங்கறதுக்கா", " நான் ஒருத்தன் ஓட்டு போடலேன்ன குடியா முழுகிடும், எப்படி இருந்தாலும் ஒரு நல்லவன் வரப்போறதில்ல" என்றெல்லாம் புலம்ப வேண்டாம். சிறு துளிதான் பேரு வெள்ளம். உங்களை போலவேதான் இன்னும் பல பேர் எண்ணுவார்கள். அந்த எண்ணங்கள் ஒரே மாதிரிதான் இருக்கும், ஆனாலும் யாரும் வெளிக்காட்டாமல் "நாம சொல்றத எவன் கேப்பான்?" என நமக்குள்ளேயே புலம்பிக் கொள்கிறோம்.

நானே 2014 பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கவில்லை. காரணம் அது நடந்தது வியாழன் அன்று. எனது வாக்கு சொந்த ஊரில் உள்ளது. வெள்ளியுடன் சேர்த்து 4 நாட்களுக்கு எல்லோரும் விடுமுறை கேட்டால் நிறுவனம் என்ன செய்யும்? போக முடியவில்லை. ஆனால், இந்த முறை அதனால்தான் திங்களன்று வைத்துள்ளார்கள் என நினைக்கிறேன். இதையும் தாண்டி வெளியூரில் உள்ள வாக்காளர்களுக்கும் தபால் ஓட்டு வைத்தால் இன்னும் நலம்.

ஓட்டுக்கு பணம்:

திமுக, அதிமுக இரண்டு விளம்பரங்களிலும் நடித்த கஸ்தூரி பாட்டி நடித்த ஒரு நல்ல தேர்தல் விளம்பரத்தைப் பாருங்கள். அதை வைத்தே முடிவு செய்யலாம். எனக்கென்ன அது சொல்ல வருகிறது என்றால், பணம் வாங்கிக்கொண்டு அவனுக்கு போட வேண்டாம் என்பது போல உள்ளது. மற்றபடி உங்கள் விருப்பம்.


சரிங்க. ஓட்டு போட ஊருக்கு போறேன். சிந்திச்சு செயல்படுங்க. தேர்தல் நாளையும், அடுத்த 5 வருடங்களையும் மட்டும் நினைக்காமல், அடுத்த 50 வருடங்களிலாவது முன்னேற என்ன வழி என யோசித்து வாக்களியுங்கள்.

"என் ஒருத்தன் ஓட்டு என்னத்த மாத்திட போகுது" என்று எண்ணாதீர்கள். நம் படுக்கையறையில் ஒரு செங்கல் இல்லையென்றால் என்ன வீடா இடிந்து விடும்?

No comments:

Post a Comment

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..