Thursday, September 6, 2018

கலைஞர் கருணாநிதி முதல் கருணாநிதி வரை!

கருணாநிதி மறைவு செய்தி வந்தவுடனே, இணையத்தில் இரு பிரிவுகளின் மோதல் ஆரம்பித்து விட்டது. தமிழ்நாட்டை பிடித்த சாபம் போய் விட்டது என ஒரு பிரிவு, இனி தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என இன்னொரு பிரிவு. கருணாநிதி அவ்வளவு முக்கியமாக தமிழகத்துக்கு இருந்தாரா, என்னுடைய பார்வையில் இந்த பதிவு. என்னுடைய கேள்வி அறிவை வைத்தே இந்த பதிவு. ஏதேனும் தவறு இருந்தால், கருத்திடவும். திருத்திக்கொள்கிறேன். 


பொதுவாக, ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது, மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறதா என்றால், முதலிடம் என்று சொல்ல முடியா விட்டாலும், முதல் 5 இடங்களுக்குள் கண்டிப்பாக இருக்கும். இதற்கு அடித்தளம் இட்டவர்கள் இரண்டு பேர். பெரியார் மற்றும் காமராஜர். 

முதலாமர், எல்லோருக்கும் கல்வி வேண்டும், அனைவரும் சமமாக கல்வி கற்க வேண்டும் என்று சொன்னவர். இரண்டாமவர், நிறைய பள்ளிகளைத் திறந்தவர், மதிய உணவு போட்டவர். இன்றைய 30 வயதிற்குள் உள்ள இளைய தலைமுறையினரே, உங்களது பெற்றோரின் ஆசிரியர்கள் அல்லது உங்களது தாத்தா படித்தவராக இருந்தால் அவர்களிடம் கேளுங்கள், அதிலும் பெண்கள் இருந்தால் கண்டிப்பாக கேளுங்கள். இவர்களது அருமையை சொல்வார்கள். எனக்கு இவர்கள் பற்றி முழுமையாக தெரிய வைத்தது என் அம்மாவும், என் அத்தையும்

காமராஜருக்குப் பிறகு அண்ணா. அவர் எதையும் பெரியதாக செய்வதற்கு முன்பே இறந்து விட்டார். அதன் பிறகு தமிழகத்தை ஆண்டது 3 பேர்தான். அதில் தமிழகம் இந்த அளவிற்கு முன்னேறி உள்ளது. அதற்கு முதல் காரணம் கருணாநிதி, காரணம், பெரியாரும் காமராஜரும் இட்ட அடித்தளத்தில், சரியான முறையில் கட்டடம் கட்டியவர் அவர்தான். பிறகுதான் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா. 

இன்று பொறியியல் படிப்பு இந்த அளவுக்கு நாறிப்போய் கிடைப்பதற்கு முக்கிய காரணம் எம்ஜிஆர். தனியார் பொறியியல் கல்லூரிகள் ஆரம்பிக்க அனுமதி அளித்து, அதிலும் தனக்கு வேண்டப்பட்ட அனைவருக்கும் அனுமதி கொடுத்துள்ளார். சத்யராஜ் கூட ஒரு பேட்டியில் எம்ஜிஆர் தன்னை ஒரு பொறியியல் கல்லூரி வேண்டுமானால் ஆரம்பித்துக்கொள் என்று சொன்னதாகவும், தான் அதை மறுத்து விட்டதாகவும் கூறினார். அதற்காக இருவரும் எந்த நன்மையும் செய்யவில்லை என்று அர்த்தமில்லை. ஆனால், அதனைத் தொடர்ந்து இன்று வரை அதை நிறுத்தாமல் தொடர்ந்ததன் விளைவு, எல்லா திமுக,அதிமுக மாவாட்டும் செயலாளர்களும் ஆளுக்கு இரண்டு பள்ளிகள், நான்கு கல்லூரிகளும் வைத்துள்ளனர். 

பொதுவான வரலாறு என்னவென்றால், அண்ணா இறந்த பிறகு, 'அரசியல்' செய்து கருணாநிதி முதல்வராகிறார். அப்போது 'எமர்ஜன்சி' காலம். அதை எதிர்த்தார். 5 ஆண்டுகள் முடியும் முன்பே ஆட்சி கலைக்கப்படுகிறது. அந்த நேரத்தில் அவர் என்ன சாதனைகள் செய்தார் என எனக்கு தெரியவில்லை. அதன் பிறகு, 13 ஆண்டுகள் வனவாசம். மீண்டும் ஆட்சி கிடைத்தாலும், 2 ஆண்டுகளில் கலைக்கப்படுகிறது. ராஜீவ் காந்தி கொலை வேறு நடக்க, படு தோல்வி அடைகிறது கட்சி, ஆனாலும் அவருக்கு வெற்றி. 5 ஆண்டுகள் கழித்து வெற்றி பெறுகிறார். 5 ஆண்டுகள் முழுமையாக ஆளுகிறார், மீண்டும் தோற்கிறார். 5 ஆண்டுகள் கழித்து அரைகுறையாக வெற்றி பெற்று, எப்படியோ 5 ஆண்டுகளை ஓட்டுகிறார். அவ்வளவுதான், முற்றும்.

கருணாநிதி என்னென்ன நன்மைகள் செய்தார் என்பது இருக்கட்டும். ஆனாலும் எனக்கு என்ன சந்தேகம் என்றால், அரசியல் ஆளுமை உள்ள ராஜாஜி, காமராஜர், எம்ஜிஆர் என பல ஆளுமைகளுடன் போட்டி போட்டு வென்ற கருணாநிதியால், கடைசி 15 ஆண்டுகளில் ஏன் ஜெயலிதாவை முழுமையாக தோற்கடிக்க முடியவில்லை. அது ஜெயலலிதாவின் வெற்றியா? கண்டிப்பாக இல்லை. கருணாநிதியின் தோல்வி. அது ஏன்? பிறகு பார்ப்போம். 

கருணாநிதி நமக்கு (சரி எனக்கு) என்னென்ன செய்தார் என்று பார்ப்போம். பள்ளி மாணாக்கர்களுக்கு இலவச பேருந்து பயணச்சீட்டு, முதலில் 8ம் வகுப்பு வரை இருந்தது, பிறகு 12ம் வகுப்பு வரை கொடுக்கப்பட்டது. இரண்டுமே கருணாநிதி ஆட்சியில்தான். கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் 15 சதவீத இட ஒதுக்கீடு. இது ஜெயலலிதா அரசால், சாமர்த்தியமாக ஒழிக்கப்பட்டது, மீண்டும் கொண்டு வரப்படவில்லை. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்று பல உள்ளன. மறுக்கவோ, மறைக்கவோ முடியாதது இட ஒதுக்கீடு. பல குடும்பங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகள் வெளிவந்து, நல்ல வேலையில் உள்ளனர் என்றால், அது கருணாநிதி கொண்டு வந்த பல திட்டங்களால்தான். 

சரி, மற்றவர்கள் கருணாநிதி ஏன் கெட்டவர் என்று சொல்கிறார்கள் என்று பார்ப்போம். அவர்தான் மதுக்கடைகளை திறந்தார். சரி, அதற்கு பிறகுதானே எம்ஜிஆர் வந்தார், அவர் மூடி இருக்கலாமே? ஜெயலலிதா வந்தார், அவைகளை அரசுடைமையாக்கி விட்டார். ஹிந்தி படிக்க விடாமல் செய்து விட்டார். இதற்கு எதை சொன்னாலும் அவர்களுக்கு புரியாது. ஹிந்தி கட்டாயம் என்பதைத்தான் எதிர்த்தார்கள். இன்னொன்றும் சொல்கிறேனே. ராஜாஜி குலக்கல்வி முறையை கொண்டு வந்தார். "சரி, இதிலென்ன தப்பு, படிக்கும்போதே ஒரு வேலைய தெரிஞ்சுக்கலாமே" என்றார்கள். ஆனால் அவர் சொன்னது தந்தையின் தொழிலைத்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று. அதைத்தான் எதிர்த்தார்கள். 

சரி, ஏன் வீழ்ந்தார். முதலாவது, குடும்ப ஆதிக்கம். ஸ்டாலின் உறுப்பினராகி, பிறகு படிப்படியாக தலைவர் ஆனார் என்பார்கள். சரிதான், ஆனால், ஸ்டாலினைத் தவிர வேறு யாருமே ஏன் அப்படி வரவில்லை, வந்த வைகோவையும் அனுப்பி விட்டீர்கள். அது அவரிடம் மட்டும் இல்லை. எல்லா திமுக ஆட்களிடமும் இருக்கிறது. 

அதே போல ஆரம்ப கட்டத்தில் வேலை வாய்ப்பு பதிவின் முதிர்வு அடிப்படையில் வேலை என்றாலும் கூட, அரசு வேலைகள் அனைத்தும் திமுகவை சார்ந்த நபர்களுக்கே தரப்பட்டன. தகுதியான நபர் என்பதை விட கட்சிக்காரர் என்பதற்குத்தான் முக்கியத்துவம். நடராசன் (சசிகலாவின் கணவர்) கூட ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர் என்றுதான் அவருக்கு அரசு வேலை தரப்பட்டது, இதை அவரே சொல்லி இருக்கிறார். நெல்லுக்கு பாயும்போது, புல்லுக்கு பாய்வது போல சில சரியானவர்களுக்கும் வேலை கிடைத்தது. அதனாலேயே பொதுவாக வயதான பல அரசு ஊழியர்கள் கருணாநிதியின் விசுவாசிகளாக இன்னும் இருக்கிறார்கள். 

எல்லோரும் ஊழல் செய்கின்றனர். அதனாலேயே மாறி மாறி ஆட்சி நடந்தது. 2015 வெள்ளத்தின்போது அதிமுக அரசு காட்டிய அலட்சியம், அது முடிந்தவுடனே ஆளும் கட்சி விழாவிற்காக நடந்த அட்டகாசம், இவையனைத்தையும் தாண்டியும் ஏன் 2016ல் திமுக தோற்றது? ஏனென்றால், திமுக நேரடியாக மக்களின் வயிற்றில் அடித்தது. ஒரு பாலம் காட்டியதில் ஊழல், குட்கா ஊழல் எல்லாம் எந்த தனி மனிதனையும் பாதிக்கவில்லை, சமூகத்தை பாதித்தது (அதற்காக அதை நான் நியாயப்படுத்தவில்லை). 

2006-11 வரையிலான திமுக ஆட்சியில் மக்களின் நிலங்கள் மிரட்டியும், விரட்டியும் பிடுங்கப்பட்டன. அது மட்டுமே மிக முக்கிய காரணம். இன்னமும் பலர் வயிறெரிந்து சொல்வார்கள். பலர் இன்னும் கண்ணீருடன் அதை மீட்க அலைந்து கொண்டிருக்கின்றனர். இன்னும் குறிப்பாக சொன்னால், எங்கெங்கெல்லாம் பணம் வரும் என்பதை திமுக கண்டு பிடிக்கும், அதிமுக அதை தொடரும். 

2006 வரை கலைஞராக இருந்த அவர், பிறகு கருணாநிதியாக மாறியதற்கு காரணம் அவர் மட்டுமே. இலவசங்கள், பல விளம்பரங்கள், தேவையில்லாத பாராட்டு விழாக்கள், மதுரையில் தினகரன் அலுவலக தீ விபத்து, (அழகிரியின் மதுரை சாதனைகள் பற்றி தனியாக எதுவும் சொல்ல வேண்டியதில்லை), 3 பேர் இறப்பிற்கு பின் இவர்களது குடும்பம் இணைய 'கண்கள் பனிக்க, இதயம் இனிக்க' என்று கூறியது, செம்மொழி மாநாடு என்ற பெயரில் கோயமுத்தூரில் நடந்த குடும்ப விழா என்று இன்னும் சில சம்பவங்கள் உள்ளன, அவற்றை நான் குறிப்பிட விரும்பவில்லை, எல்லோருக்கும் தெரியும். 

கடைசியாக சொல்வது என்னவென்றால், 2001 வரை இருந்த கலைஞர் கருணாநிதியை எனக்கு பிடிக்கும். அது வரை மக்களுக்காக உழைத்தார், அதன் பிறகும் மக்களுக்காகவே உழைத்தார், சொந்த மக்களுக்காக. அவர் ஒரு சில பேர் மீது கட்சி சார்பாக நடவடிக்கை எடுத்திருந்தால் கூட, 2016ல் ஆட்சியைப் பிடித்திருக்க முடியும். எல்லாவற்றையும் தாண்டி ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பிடியில் இருந்து கல்வி, அரசு, பதவிகளை கடைக்கோடி ஏழை வரை கொண்டு சென்றது கருணாநிதிதான் என்பதை மறுக்க இயலாது. 

பின் குறிப்பு: "சூப்பருங்க. இந்த திராவிட ஆட்சியாலதான் நாம் இப்படி இருக்கோம், இதுக்குதான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும்கிறது" என்று யாரும் வரவேண்டாம்.    

3 comments:

  1. உங்களின் புரிதலை அறிந்து கொண்டேன்... வேறு எதுவும் சொல்வதை தவிர்க்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. விமர்சனம் இருந்தால் சொல்லலாம். கருத்தை ஒட்டிய விமர்சனமாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும், அவ்வளவே. உங்கள் மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது. கண்டிப்பாக தங்களின் கருத்தை தெரிவிக்கவும். நன்றி தனபால் அண்ணா.

      Delete
  2. See the today's news. https://www.vikatan.com/news/tamilnadu/136265-hosur-court-ordered-one-year-imprisonment-to-dmk-cadre.html

    ReplyDelete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..