Friday, September 21, 2018

திரை விமர்சனம்

நேரடியாக போய் விடலாம். 

கடைக்குட்டி சிங்கம்:


அருமையான குடும்பப் படம். சில இடங்களில் நாடகத்தனம் இருந்தாலும், கண்டிப்பாக ரசிக்கக்கூடிய படம்தான். கதை அனைவருக்கும் தெரிந்ததுதான். 5 பெண்களுக்கு பிறகு பிறக்கும் ஆண், அவனுக்காகவே வளர்ந்து நிற்கும் இரு அக்கா மகள்கள், பையனுக்கோ வெளியிலே காதல், இதனால் ஏற்படும் குடும்ப சிக்கல்கள், நடுவே ஒரு ஆணவக்கொலை வேறு. கடைசியில் எப்படி சுபமாக முடிக்கிறார் நாயகன் என்பதே கதை. 

நான் ஒரே பையன்தான். ஆனால், மிக நெருங்கிய சொந்தக்காரர் ஒருவருக்கு கிட்டத்தட்ட இந்த படத்தில் வந்த நிலைதான். தனது மகளைக் கட்ட வேண்டும், சொந்தம் விட்டுப் போக கூடாது என அக்காவும், அம்மாவும் இருக்க, இவரோ மறுக்க, பெரிய பஞ்சாயத்து. ஒரு வழியாக சமாதானம் ஆகி, வேறு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து முடித்திருந்தாலும், இன்னும் சுபம் ஆகவில்லை. யாரையாவது பலிகடா ஆக வேண்டும் என்ற நிலையில் என் தலை கூட வெட்டப்பட இருந்தது. அந்த ஒரு காரணமே என்னால் படத்துடன் ஒன்ற முடிந்தது. 

அது ஏன் தேவையே இல்லாமல் நிறைய படங்களில் இரு மனைவிகளை படத்தில் கொண்டு வருகிறார்கள் என்றே தெரியவில்லை. இதில் கூட ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் போகும் பாத்திரம் என்பதால் ஒத்துக் கொண்டாலும், சுந்தர பாண்டியன், கோலி சோடா படத்திலும் தேவையே இல்லாத இரு மனைவிகள் பாத்திரம். குடும்பத்துடன் முகம் சுழிக்க வைக்காமல் ரசித்து பார்க்கலாம். 

விஸ்வரூபம் 2:


விஸ்வரூபம் முதல் பாகத்திலேயே, அடுத்தது நட்டுக்கொள்ளும் என்று தெரிந்து விட்டது. அடுத்த ஒரு வருடத்திற்குள் வந்திருந்தால் கூட ஓரளவு வெற்றி பெற்றிருக்கும். இப்போது அரசியலில் வேறு இறங்க போவதால் மக்கள் நிறைய எதிர் பார்த்திருப்பார்கள். பொறுத்திருந்து இந்தியன் 2 வந்த பிறகு வெளி விட்டிருக்கலாம். படம் பார்த்த பிறகு தோன்றியது 'விஸ்வரூபம் 1 பார்த்து விட்டு சிலிர்த்து போய் சில்லையெல்லாம் வீசி எறிஞ்சேன், பெரிய பதிவெல்லாம் வேற போட்டேன். 

பாதிக்கு மேல் பழைய படத்தில் வந்த காட்சிகள். மீதி கூட படத்தொகுப்பின் மிச்சம் மீதி இருந்த காட்சிகள் என்று தெளிவாக தெரிகிறது. கடைசி சண்டை கூட போன படத்தின் இறுதியில் சும்மா காண்பிப்பார்கள். அம்மா, ராணுவம், கொஞ்சம் லண்டன் காட்சிகள் மட்டும் புதிது. பேசாமல் கமல் இணையத்திலேயே விட்டுருக்கலாம். கோவணமும், கொஞ்ச நஞ்ச மானமுமாவது மிஞ்சியிருக்கும். குறைந்தது புதுமை (போன முறை சொன்ன D2H போல) என்றாவது சொல்லி இருக்கலாம். இந்தியனுக்காகவும், நாயுடுக்காகவும் காத்திருக்கிறேன்.' 

மேற்கு தொடர்ச்சி மலை:


எந்த பொருளுமே கொஞ்சமாவது கலப்படம் இருந்தால்தான் நன்றாக இருக்கும். தங்கத்தில் செம்பு போல. அப்படியே இருந்தால் கொஞ்சம் கஷ்டம். இந்தப் படத்தில் அதுதான் நடந்துள்ளது. நம்முடைய வாழ்க்கையை படமாக எடுத்தால் நன்றாக இருக்குமா? நாமே பார்க்க மாட்டோம். 

முதல் 30 நிமிடங்கள் ஊர் சுற்றிக் காண்பிக்கிறார்கள். படத்தில் எல்லோரும் நாயகனுக்கு நன்மையே செய்கிறார்கள். இயற்கையான மனிதர்கள் என்பதால் நடிப்பு இயல்பாக இல்லை. நிறைய நாடகத்தன்மை அதனாலேயே வந்து விட்டது. குறிப்பாக ஒரு காட்சி, முதலாளியிடம் ஏலக்காய் மூட்டை கணக்குப்பிள்ளை கேட்கும் காட்சி. என்னதான் இருந்தாலும், இப்படியும் இன்னும் இது போல மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதை சொன்ன விதத்தில் படம் வெற்றி பெற்றுள்ளது. 

வர வர இளையராஜாவும் இசையை சுருக்கி விட்டார். பாடல்களும் படத்துடன் பார்க்க, கேட்க நன்றாக உள்ளது. சில சமயங்களில், மேற்கு தொடர்ச்சி மலை படங்களில் மொத்த பின்னணி இசை 15 நிமிடங்கள் கூட இருக்காது. ஆனாலும், அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. இயல்பான பின்னணி இசையை நிறைய கொடுத்து விட்டார். மற்ற காதல் படங்களில் எல்லாம் (திருவாசகம் உட்பட) ஸிம்போனி இசை போல மாதா கோயில் மணி ஓசையும், 'ஓஓஓஓஓ' என்று வெளிநாட்டுக்காரர்கள் பாடுவதும் வேறு நிறைய வரும். மிஷ்கினின் சைக்கோவை எதிர்பார்க்கிறேன். மீண்டும் ஒரு நூறாவது நாள், 24 மணி நேரம் போல இருக்க வேண்டும். 

Memoir of a Murderer (கொரியன்):


முன்பெல்லாம் நிறைய உலகப்பட விமர்சகர்கள் இருந்தார்கள். ஆங்கிலம் தவிர கொரியா, ஜப்பான், மொழிப்படங்கள் பற்றி நிறைய பதிவுகள் வரும். நாமும் அதில் கொஞ்சம் பொறுக்கி எடுத்துக் பார்ப்போம். இப்போதெல்லாம் யாரும் கொரியப் படங்கள் பற்றி எழுதுவதில்லை. நாமும் சரி எதையாவது பார்த்து சொல்லலாம் என்றால், நமக்கென்று சரியாக அமையவேயில்லை. கடைசியாக தேறியது இதுதான். 

சிறு வயதில் தந்தையின் கொடுமையால் பாதிக்கப்பட்டு, அவரை முதல்கோலை செய்யும் ஒருவன், அதன் பிறகு அந்நியன் போல சமூகத்தில் இருக்கும் தவறான மனிதர்களை தொடர்ச்சியாக கொலை செய்கிறான். ஒரு முறை ஒரு விபத்து நடக்க, அதன் பின் தன மகளுக்காக சாதாரண மனிதனாக வாழ்கிறான். 15 வருடங்கள் கழித்து மறதி நோய் பாதிக்கிறது. அடிக்கடி தான் யார், எங்கே இருக்கிறேன் என்பதையே மறந்து, எங்கேயாவது போய் விடுகிறான். 

அதே நேரம் மீண்டும் தொடர்ச்சியாக கொலைகள் மீண்டும் நடக்கின்றன. அவனுக்கே, தான்தான் அந்தக் கொலைகளை செய்கிறோமோ என்ற குழப்பம், மகளின் காதலனான ஒரு காவலனின் மீது சந்தேகம், கடைசியாக இதில் தன் மகளே கொல்லப்பட போகிறாள் என்பதையும் உணர்கிறான். யார் உண்மையான கொலைகாரன், மகளை காப்பாற்ற முடிந்ததா இல்லையா என்பதே படம். 

உண்மையில் அட்டகாசமான உருவாக்கம். ஒரு காட்சி கூட தேவையின்றி இல்லை. முதல் காட்சியில் குனிந்து தனது வெள்ளைக் காலணியை பார்ப்பது கூட ஒரு காரணம் உண்டு. 

தமிழிலும் கூட மறதியை வைத்து படங்கள் வருகிறதே.

கஜினிகாந்த் - யப்பா முடியலடா சாமி.

60 வயது மாநிறம் - கன்னடத்தில் (கோதி பண்ணா சாதாரண மைக்கட்டு) ஏற்கனவே பார்த்து விட்டேன். முடிந்தவரை அதன் அசலை பார்த்து விடுவது. பிற்பாடு நேரம் போகவில்லை என்றால் நகலை பார்ப்பது. அதனால் தமிழில் பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை.

இத்தனைக்கும் ராதாமோகன் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர், இளையராஜாவும் கூட இருக்கிறார். ஆனாலும் மொழி மாற்றுப் படங்களின் மீது அவ்வளவு ஈர்ப்பு இல்லை. கஜினிகாந்த் கூட தெலுங்கில் பார்த்தேன். தமிழில் நகைச்சுவை நன்றாக இருக்குமோ (வானம் படம் போல) என்று நினைத்தேன். ஆனால் இல்லை.

U-Turn கூட ஏற்கனவே கன்னடத்தில் பார்த்து விட்டேன். 

பியார் பிரேமா காதல், ஒன்றும் சொல்வதற்கில்லை. 90களில் பிறந்தவர்களுக்கே அந்தப் படம் பார்க்க தகுதி இல்லையாம். நானெல்லாம் 80களின் ஆரம்பம். அப்புறம் எப்படி. 

RX 100 (தெலுங்கு):


மறுபடியும் ஒரு மொக்கை காதல் கதையா (ஊர் சுற்றும் நாயகன், பண்ணையார் வீட்டு நாயகி, காதலுக்கு எதிர்ப்பு) என்று சலிப்படைந்து தருணத்தில், படத்தில் வந்த அந்த திருப்பம். நாடோடிகள் படத்திலும் அதுதான் நினைத்தேன், அதற்கு மாறாக நடந்தது. இருந்தாலும், தலைப்பிற்கும் படத்திற்கும் சம்பந்தமே இல்லை. ஒரே ஒரு இடத்தில, நீ இல்லாமல் நான் என் பைக்குடன் பேசிக்கொண்டு நாட்களை கடத்தினேன் என்கிறான் நாயகன். அவ்வளவுதான். அதை எரித்ததற்கு கூட ஒரு எதிர் வினையும் இல்லை. நம்ம செந்தூரப்பூவே ராம்கி கூட உள்ளார். 

இப்போதெல்லாம் பாலிவுட், ஹாலிவுட் அளவிற்கு போய் விட்டது. தெலுங்கு மற்றும் தமிழ்ப்படங்கள் பாலிவுட் அளவிற்கு வந்துள்ளன. எப்படி என்றால், ஹிந்திப்படங்களில் தேவையற்ற நிர்வாண, பாலுறவு காட்சிகள். நம்மூரில் முத்தம், முத்தம் முத்தம். அப்படி என்ன கதைக்கு தேவை என்று இதுவரை எனக்கு புரியவில்லை. அர்ஜுன் ரெட்டி, RX100 படங்களை என்ன தைரியத்தில் நம்மூரில் எடுக்கிறார்கள் என்று புரியவில்லை. சரி கலைக்கண்ணோடு பார்ப்போம்.

அர்ஜுன் ரெட்டி படத்தில், நாயகியின் தம்பியிடம் நாயகன், "நான் அர்ஜுன்" என்பான். அவன் உடனே " அர்ஜுன் what?" என்று கேட்பான். நம்மூரில் அப்படியா? "அப்புறம் தம்பி அப்பா அம்மா என்ன செய்யுறாங்க, எந்த கோயிலுக்கு போறீங்க" என்று போகும். பாலா எப்படி எடுத்திருக்கிறார் என்று பார்ப்போம். அவருக்கு பரோட்டாவிலேயே கொத்து பரோட்டாதான் பிடிக்கும். இதில் எப்படி கொத்தி இருக்கிறார் என்று பார்ப்போம். 

ஷூட்டர் - Shooter (ஆங்கிலம்):


உரிமை கீதம் என்றொரு படம். பிரபு, கார்த்திக் நடித்தது. RV உதயகுமாரின் முதல் படம். அதில் ஏழையான பிரபுவிடம் பணம் கொடுத்து ஒரு அரசியல்வாதியை பொதுக்கூட்டத்தில் கொல்வது போல நடிக்க சொல்வார்கள். கேட்டால், அப்போதுதான் அவர் மீது பரிதாபம் வரும், உனக்கும் எதுவும் ஆகாது என்பார்கள். பார்த்தால் நிஜமாகவே அவரை யாரோ சுட்டு விட, பழி பிரபு மீது விழும்.அந்த அரசியல்வாதியின் மகனாக கார்த்திக். இருவரும் எப்படி கெட்டவர்களை பழி வாங்குகிறார்கள் என்பதுதான் கதை. 


இந்தப் படத்தில் நண்பன் இறந்ததால், ராணுவத்தில் இருந்து வெளியேறும் நாயகன் (எவ்வளவு தூரத்திலும் சரியாக குறி பார்த்து சூடுபவன் - Sniper/Shooter). அவனிடம் அமெரிக்க ஜனாதிபதியை கொல்ல போவதாக தகவல் வந்துள்ளது எனவும், என்னென்ன வழிகள் இருக்கும் என கண்ணுட் பிடித்தும் சொல்ல சொல்வார்கள். அதே போல செய்தால், அதை வைத்து ஒரு கொலை செய்து பழியை நாயகன் மேலே போட்டு விடுவார்கள். இதை ஒரு அப்பிராணி FBI கண்டு பிடித்து விட, அவரையும் கொல்ல துரத்துகிறார்கள். எப்படி தப்பிக்கிறார்கள், பழி வாங்கினார்கள் என்பதுதான் படம். பரவாயில்லை. பார்க்கலாம். 

The Jackal (ஆங்கிலம்):


இதுவும் ஒரு வகை எலி பூனை கதைதான். எனக்கென்னவோ எலி பூனை என்பதை விட பாம்பு கீரி என்று சொல்லலாம் என நினைக்கிறேன். ரஷ்யாவில் ஒரு தீவிரவாதி தலைவனின் தம்பியை அமெரிக்கா, ரஷ்யா அதிகாரிகள் இணைந்து கொன்று விட, அதற்கு பதிலாக அமெரிக்காவின் ஒரு பெரிய மனிதரைக் கொல்ல சொல்லி அந்த தீவிரவாத தலைவன் ஒரு கூலிப்படை ஆளை அமர்த்துகிறான். இதை மோப்பம் பிடிக்கும் அரசு, அவனை பிடிக்க சிறையில் உள்ள ஒரு குற்றவாளியின் உதவியை நாடுகிறது. அவர்கள் இருவருக்கும் இடையே வேறு ஒரு பழைய கணக்கு உள்ளது. இறுதியில் யார் வெல்கிறார்கள் என்பதே படம்.

அவ்வளவுதாங்க.    

2 comments:

  1. இரண்டு (தமிழ்) படங்கள் தேறும் போல...!

    ReplyDelete
    Replies
    1. அப்படி சொல்ல முடியாது. ஒவ்வொருவர் ரசனையும் வேறு வேறு. உங்களுக்கு எல்லா படங்களும் கூட பிடிக்கலாம். எல்லாவற்றையும் பாருங்கள்.

      Delete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..