Sunday, April 24, 2011

ஒளியில்லாத ஒலி



பொதுவாக, பல இளையராஜாவின் பாடல்களைக் கேட்டது மட்டுமே உண்டு. எனக்குள்ளேயே ஏதாவது கற்பனையில் அந்தப் பாட்டை ஓட விட்டுக் கொள்வேன். எப்போதாவது, அந்தப் பாடலைப் பார்த்து விட்டால், சற்றே மனம் நோகும். உதாரணமாக கீழே வரும் பாடல். இதைப் பற்றி ஏற்கனவே ஒரு முக்கியமான பதிவில் நான் கூறியுள்ளேன்.



இதே போல பல பாடல் உண்டு. ஆனால், திரையிலேயே வராத சில ராஜாவின் பாடல்களைப் பகிர விரும்புகிறேன். தீவிர ராஜா ரசிகர்களுக்கு இந்தப் பாடல்களை மிக நன்றாக தெரியும். ரி-மிக்ஸ் என்ற பெயரில் கொலை செய்யாமல், இதையே ஏதாவது வரப் போகும் புதிய படங்களில் நேரடியாக பயன்படுத்தலாமே.

புத்தம் புது காலை - அலைகள் ஓய்வதில்லை:

ஒரு காலை வணக்கத்தோடு ஆரம்பிக்கிறேன். எப்போதுமே, காலை எழுந்தவுடனே கேட்கும் பாடல் இதுதான். நாயகி பாடுவதாக வருவதாக இருக்கலாம்.



'உயர்ந்த உள்ளம்' படத்தில் வரும் காலைத் தென்றல்' பாடல் போலவே இருக்கும். காலையில் எழுந்தவுடனே எப்போதும் கேட்பதுண்டு.

தற்போது 'பா' ஹிந்திப் படத்தில் அருமையாக பயன்படுத்தியுள்ளனர்.



சொல்லாத ராகங்கள் - மகா நதி:



சிறையில் நாயகனும் நாயகியும் சந்திக்கும்போது வரும் பாடல். அட்டகாசமான பாடல். ஆனால், இந்தப் பட்டதில் தேவையேயில்லை என்று இதற்கு பதில், இதை விட அழகாக பின்னணி இசை போட்டு நிரப்பி விட்டார்.



சொல்லி விடு வெள்ளி நிலவே - அமைதிப்படை:

அல்வா விஷயத்தால், மற்ற நல்ல விஷயங்கள் இந்தப் படத்தில் வெளி வராமலே போய் விட்டது. அதில் இந்தப் பாடலும் ஒன்று. ஆனாலும், பின்னணி இசையாக கிடைக்கிற இடங்களில் அனைத்தும் ராஜா ராஜாங்கம் நடத்தியிருப்பார்.



புத்தம் புது பூ - தளபதி:

விருந்திலே எல்லாமே ரொம்ப நல்லா இருந்துச்சு.. ஆமாமா.. பாயாசத்துல முந்திரி இருந்துச்சா?? அடடா, சரியா கவனிக்கலையே.. மத்த எல்லாத்தையும் சாப்பிட்டதில, அத கவனிக்கலப்பா. லேசா தட்டுப்பட்ட மாதிரி தெரிஞ்சுது.

இதே போலவே, இந்தப் பாடலும். பின்னணி இசையாக லேசாக வரும். அப்படியே போய் விட்டது. மணி ரத்னமே இதை எங்காவது பயன்படுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.



உன் நெஞ்சத் தொட்டுச் சொல்- ராஜாதி ராஜா:

இந்தப் பாடல் பற்றிய ஒரு நல்ல தகவல் உள்ள பதிவு. அந்த காலத்தில், 'ராஜாதி ராஜா/சத்யா' இரண்டும் உள்ள கேசட் வாங்கினேன். இரண்டில் உள்ள பாடல்கும் மாறி மாறி வரும். எனவே, இந்தப் பாடல் எந்தப் படம் என்று பயங்கரமாக குழம்பி இருந்தேன். இரண்டு படத்திலும் வரும் என்று கூட நம்பிய காலம் அது.



ஒரு மாலை நேரம் வந்தது - நான் மகான் அல்ல:

இந்த பாடல் மட்டும் சொல்லக் காரணம் உண்டு. இதைப் படமாக்கிய பின்பு, யுவன் அதே ஒளியமைப்புக்கு, இன்னும் நன்றாக பாடல் இருக்க வேண்டுமென்றுதான் 'இறகைப் போலே' பாடல் போட்டதாக கூறப்பட்டது. இந்தப் பாடலுக்கு, அந்த ஒளியமைப்பும் நன்றாகவே பொருந்தும். சும்மா முயன்று பார்த்தேன்.



இதே போலவே, நிறைய பாடல்கள் உள்ளன. எனக்கு தோன்றியதை மட்டும் பதிவு செய்துள்ளேன்.

Monday, March 28, 2011

அழகிய மொழியில் அபியும் நானும் பயணம்



கல்லூரி இறுதி ஆண்டில் ஒரு நாள், தாம்பரம் வித்யா தியேட்டரில், ஸ்பைடர் மேன் 2 படம் பார்க்கலாம் என்று நண்பர்களுடன் போனோம். அங்கோ, அந்த படத்தைத் தூக்கி விட்டு, 'அழகிய தீயே' என்று போஸ்டர் ஒட்டியிருந்தது. என்னடா, இங்கு கூட பிட்டு படம் ஓட்ட ஆரம்பித்து விட்டார்களா என்று யோசித்தோம். பாவம் இந்த பிரசன்னா. இப்படியா ஆக வேண்டும் என்று நினைத்த பொது, திடீரென நண்பன் சொன்னான் "டேய், பிரகாஷ் ராஜ் படம்டா". சரி, வந்தது வந்து விட்டோம் என்று உள்ளே போய் உட்கார்ந்தோம். மொத்தமாகவே, இருபது முப்பது பேர்தான். அதில் நாங்களே ஏழெட்டு பேர்.

சரி, கொஞ்சம் கலாசி விட்டுப் போகலாம் என்றுதான் போனோம். ஆனால், எங்களை விட, படத்தில் அவர்கள் கலாசியதுதான் அதிகம். ஒரு வழக்கமான, நட்பு - காதல் கதை என்றாலும், அதைக் கொண்டு போன விதம்தான் முக்கியம். அருமையான வசனங்கள். பிரசன்னாவை முதன் முதலில் ரசிக்க முடிந்தது. பிரகாஷ் ராஜ் அருமையாக நடித்தார் என்பது, அட போங்க சார்.

அதன் பின் கொஞ்ச நாள் கழித்து 'பொன்னியின் செல்வன்' படம் வெளியானது. ஆனால் படம் பார்க்கவில்லை. இதுவரையிலும் பார்க்கவில்லை. விரைவில் பார்க்க வேண்டும். படத்தின் நாயகனை நினைத்துதான் கொஞ்சம் பயம். ஆனாலும் நாயகிக்காகவாவது பார்க்க வேண்டும்.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து, பொழுதே போகாத 2007 பிப்ரவரி மாதம், ஒரு வெள்ளிக் கிழமையன்று இரண்டு படங்கள் வெளிவந்தன. இரண்டுமே, எங்களது எதிர்பார்ப்பில் இல்லாததால், அதைக் கண்டு கொள்ளவில்லை. "ஏதோ பருத்தி வீரன்னு படம். சூர்யாவோட தம்பியாம். ஆனா ஊனா, வீட்டு வீட்டுக்கு நடிக்க கெளம்பி வந்தருவான்கப்பா. அப்புறம் மொழி. காது கேட்காத, வாய் பேச முடியாத பொண்ணாம். போட்டு அழுக வச்சிருவாங்க. வேண்டவே வேண்டாம்பா" என்று விட்டு விட்டோம். எங்களது எண்ணத்தில் மண்ணள்ளிப் போட்டன இந்த இரண்டு படங்களும். மிகவும் குறிப்பாக மொழி. Thi Hinduவில் அதன் வகை நகைச்சுவை (Genre : Comedy) என்று இருந்தது. இரண்டு படங்களையும் இரு முறை தியேட்டரிலும், அதன் பின் 'மொழி' படம் மொசெர்பியரில் வந்தபோது, கிட்டத்தட்ட அதை பரிசாக வாங்கியே கொடுக்க ஆரம்பித்தோம். என் அம்மா பார்க்க வேண்டும் என்று நான் நினைத்த/நினைக்க வைத்த ஒரே படம் இதுதான்.

'பயணம்'. சமீபத்தில் வந்த மற்றுமொரு அருமையான, ராதா மோகனின் படைப்பு. படத்தில் சிறு சிறு குறைகள் இருந்தாலும், அவை ராதா மோகனின் பொதுவான கிளிஷேக்கள் என்பதால், எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. சில பல முக்கிய காட்சிகள் காமெடி ஆனாலும், அவர்களே அதை கலாசியதால் மன்னிப்போம். "ஓ.. நீங்க தமிழா? அப்பா நாம தமிழிலேயே பேசலாம்" என்று கடத்தல்காரன் சொல்லும்போது எல்லோரும் சிரித்து விட்டோம். பிறிதொரு காட்சியில், "யூசுப் கான் எப்படி தமிழ்ல பேச முடியும்?", "இப்படியெல்லாம் பாத்தா படம் எடுக்க முடியாது சார்" என்று வரும்.

அபியும் நானும். இந்தப் படம் எனக்கு மிக மிக மிகப் பிடித்த படம். ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமான காதல், காமமற்ற அன்பு, பாசம், நேசம் (நட்பும் கூட) பற்றிய படம். படம் தந்தை மகள் பற்றி இருந்தாலும், சாராம்சம் தாய் மகன், சகோதரன் சகோதரி (சற்று வயது வித்தியாசம் அதிகமான), ஏன் இரண்டு வயது அக்கா மகளுக்கும், தாய் மாமாவுக்கும் கூட வரலாம். தனது அன்பினை பங்கு போட இன்னொருவர் வருவதால் ஏற்படும் ஈகோ பற்றி அற்புதமாக காண்பித்த படம். இதில் சற்று காமம் கலந்து 'செல்லமே' படமும், மிகுதியாக கலந்து 'நடுநிசி நாய்கள்' படமும் வந்திருப்பதாக நான் நினைக்கிறேன். (முன்னே/பின்னே எல்லாம் விட்டு விடுங்கள். சும்மா, ஒரு ஒப்பீடு).

"நம்ம குழந்தைங்க வளந்துருவாங்க. ஆனா, நாம வளராம அப்படியே இருப்போம்" வசனம். நிதர்சனமான உண்மை. நாம் முதன் முதலில் அவர்களை எப்போது பார்த்தோமோ, அவர்கள் அப்படியே இருப்பார்கள் என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருப்போம். எனக்கு உடன் பிறந்தோர் யாரும் இல்லை. ஆனால், தூரத்து சொந்தங்கள் என்ற முறையில் சில பல தங்கைகள் உண்டு. கல்லூரி முடித்து, வேலைக்குப் போகும்போது, அவர்கள் படித்துக் கொண்டிருந்ததால், என்னிடம் 'என்ன செய்யலாம்' என்று (பெற்றோரின் தொந்தரவு தாளாமல்தான்) கேட்பார்கள். அப்போதிருந்து, இன்று வரை, அவர்களிடம், 'எனக்கு எல்லாம் தெரியும்' என்ற பாணியில்தான் பேசி வருகிறேன். இத்தனைக்கும், அவர்கள் என்னை விட நன்றாகப் படித்து, நல்ல வேலைக்குப் போய் விட்டனர். இருந்தாலும், என்னை சற்றும் ஒதுக்காமல், இன்னும் என் கருத்தைக் கேட்பார்கள்.

சிறு வயதில், அவ்வப்போது, ஒழுங்காக படிக்கவில்லை எண்டு வீட்டில் அம்மாவிடமிருந்து அடி விழும்போது, என் அம்மாவின் அம்மாதான் என்னைக் காப்பாற்றுவார்கள். அவருக்கு, என் தாய் மாமாவின் மகன் மேல் (மகன் வழி மூத்த பேரன்) சற்று பாசம் அதிகம். அவன் என்னை விட ஐந்து வயது சிறியவன். அப்போதெல்லாம், இதற்காகவே, அவனை அடித்தும் கூட இருக்கிறேன். இப்போது நினைத்தாலும் வெட்கமாக உள்ளது. இவையனைத்துமே, நன்றாக, உணர்வுப்பூர்வமாக படத்தில் காட்டப்பட்டிருந்தன.

பொதுவாக நாம் அடிக்கடி பார்க்கும்/பழகும் பாத்திரங்களும், வசனங்கள்தான் அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். நமது வீட்டிலோ அல்லது பக்கத்துக்கு வீட்டிலோ அடிக்கடி இது போல கேட்டிருப்போம்.

"இப்படியெல்லாம் கொடூரமான ஆளுங்கெல்லாம் கூட இருப்பாங்களா?? ஏன், உன் வீட்டு ஆளுங்க இல்ல."
"யாரிந்த பிச்சக்காரன். உன் சொந்தக்காரனா?"

அதே போல காதல் வரும் தருணங்களை ஒவ்வொரு படத்திலும், அழகாக சொல்லியிருப்பதும் நன்றாக இருக்கும். "பூம்", "மணியோசை, பல்ப் எரிவது", "மேஜிக்கல் மொமென்ட்ஸ்", "Stockholm Syndrome" என்று ஹைக்கூ போல.

முன்பெல்லாம் யாராவது "Its a feel good movie" என்று சொன்னால் எனக்கு சத்தியமாக புரியவே புரியாது. இப்போதெல்லாம், தெளிவான ஒரு கருத்து. "ஓ. ராதா மோகன் படமா?" என்று. ஒவ்வொரு இயக்குனருக்கும், 'இவர் இப்படிதான்' என்ற முத்திரை விழுந்து விடக்கூடாது என்று இருப்பார்கள். ஆனால், ராதா மோகன் அவர்களே, நீங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதே என் தாழ்மையான கருத்து. அவருடன் எனக்கு அவ்வளவு இடைவெளி இருப்பதாக நான் எண்ணவில்லை. எனவே, ஒரு நண்பனின் கருத்தாக இதை நான் கூறுகிறேன்.

Sunday, February 27, 2011

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

அல்லாரும் நல்லா கீறிங்களா?? என்ன எழுத என்று தெரியாததால், வழக்கம் போலவே, ஓர் பிட்டை போட்டுவிட்டு போகலாம் என்றுள்ளேன். போன பிட்டை பார்க்க, ரசிக்க(?)

திரைப்படங்கள்:

இதுவரை பார்த்த படங்கள் அனைத்துமே மிக நன்றாகவே உள்ளன. 'ஆடுகளத்தில்' ஆரம்பம். பொங்கலுக்கு வெளியான மற்ற இரண்டு ரீமேக் படங்களின் ஒரிஜினலைப் பார்த்து விட்டதால், ஆடுகளமே முதலில் பார்த்தேன். படம் பார்த்தபோது பிடிக்கவில்லை. மிகவும் மெதுவாக போனது போல இருந்தது. பிறகுதான், அதைப் பற்றி யோசிக்கும்போதுதான் ஒரு திருப்தி வந்தது. ஆனாலும், படத்தில் எனக்கு அந்த காதல் பிடிக்கவில்லை. இறுதியில், தனுஷுடன் போனில் பேசும் அந்த காட்சி மற்றும் 'ஒத்த சொல்லால' பாட்டுக்காக பொறுத்துக் கொள்ளலாம்.

அதை சரிப்படுத்தும் வகையில், இந்த மாதம் வந்த அனைத்து திரைப்படங்களுமே எனக்கு மிகவும் பிடித்தன. 'யுத்தம் செய்', 'பயணம்' மற்றும் 'நடுநிசி நாய்கள்', அதே வரிசையில். ஏனென்றால், மூன்று படங்களுமே, ஒரு தமிழ் த்ரில்லர் படம் எப்படி இருக்க வேண்டும் என்று இருக்குமோ, அப்படி இல்லை. இருக்கை நுனிக்கு வரவைக்கும் காட்சிகள், 'பர பர' என ஓடுவது, திடீரென வரும் பின்னணி இசை, காதல், பாட்டு என்று இல்லாமல், எனக்கு பிடித்த மாதிரி இருந்தது. இந்த மூன்று படங்களுமே, தமிழில் வரவேற்கத்தக்க முயற்சி.

'யுத்தம் செய்' படத்தில், இடைவேளைக்குப் பின், ஓரளவிற்கு ஊகித்து விட்டாலும், திரைக்கதை, காட்சியமைப்புகள் அருமை. நிறைய பாத்திரங்களை வசனங்கள் மூலமே அறிந்து கொள்ள வேண்டியிருப்பதால், சற்றே முதலில் குழம்பினாலும், பின் சரியாகி விட்டது. ஒளிப்பதிவு, இசை அட்டகாசம். படம் மிகவும் இயல்பாக இருந்தது. ஆரம்ப காட்சிகள், காவல் நிலைய காட்சி போன்றவை மிகவும் புதிதாக இருந்தன. படத்தில், தர்பூசணி திருடும் காட்சியை விட, அதிகமாக சிரித்தது 'அப்புக்குட்டி' என்று சேரன் சொன்னபோதுதான். அந்த ஒரு கணம், இயக்குனர் சேரன் கண் முன்னே வந்து விட்டார்.

'பயணம்'. சரோஜா போலவே காமெடி திரில்லர். படம் பார்க்கும் நாமும், அந்த பயணிகள் போலவே ஜாலியாகவே இருந்தது போலவே இருந்தோம். இருக்கையின் நுனிக்கு வரவைக்கும் அளவிற்கு எந்த காட்சிகளும் இல்லை. வசனங்கள் அட்டகாசம். நகைச்சுவையாகவும் சரி, நாட்டு நடப்பானாலும் சரி. படம் சற்றே நெடுந்தொடர் போலவும், குறைந்த செலவில் எடுக்கப்பட்ட பிரமாண்டமான (?) படம் போலவும் தோன்றியது.

'நடுநிசி நாய்கள்'. பாலியல் வன்முறையை வைத்து படம் எடுக்கும்போது, அதைப் பற்றி காட்சிகள் இல்லாமலேயே, அதன் அழுத்தத்தை உணர்த்த முடியும் என்று சில படங்கள் வந்தாலும், எல்லாவற்றையும் காட்டி, நம்மை எரிச்சலூட்டும் வகையில் இருந்த படம். தேவையே இல்லாத காட்சிகள், வசனங்கள் மூலம் சொல்லப்பட்டவை மீண்டும் காட்சிகளாக வருவது, லாஜிக் பொத்தல்கள் என்று பொறுமையை சோதித்து விட்டது. என்னைப் பொருத்தவரை முதல் பாதியின் நீளத்தை இன்னும் சற்று குறைத்திருக்கலாம். ஒளிப்பதிவு அருமை. படத்தில், மருத்துவமனையில் வாக்குமூலம் கொடுக்கும் காட்சியில், எனக்கென்னவோ பயணம் படத்தில் வரும் காட்சிதான் நினைவுக்கு வந்தது. "நீதான் யூசுப் கான், உலகமே உன்னப் பாத்து பயப்படுது.. ஏய், என்னடா, ஓவராக்ட் பண்றியா?, வாய ஒரு பக்கமா இழுக்குற."

மொத்தத்தில், காதலர் தினம் மட்டும்தான், காதலே இல்லாத படங்கள்தான்.

சிறுகதை:

ரொம்ப நாள் முன்பு குமுதத்தில் வந்த ஒரு பக்க சிறு கதை.

கல்லூரியில், மிக அழகான, பணக்காரியான பெண்ணிடம் பழக வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை. வழிபவர்களை வழக்கம் போலவே அவள் ஒதுக்குகிறாள். நாயகன் ஒரு முறை அவளிடம் நேராக சென்று "உன்னப் பாத்தா செத்துப் போன என் தங்கச்சி மாதிரியே இருக்க. என்ன உன் அண்ணனா ஏத்துக்குவியா?" என்று கேட்டு, ஒரு ராக்கியும் கட்டிக் கொள்கிறான். அவன் நண்பன் கேட்கிறான், "நீ லூசாடா? போய் தங்கச்சின்னு சொல்லிட்ட" என்றதும் அவன் சொல்கிறான். "நீங்க எப்பவும் சூப்பர் பிகர்னு பாக்கறீங்க. எனக்க அவ பிரண்ட் கொஞ்சம் சுமாரா இருந்தாலும், எனக்கு பிடிச்சுது. இப்ப எனக்கு அவளும் சிக்கிடுவா, இவகிட்டையும் நல்ல பேர். எப்பூடீ".

கொசுறு:

இதுவரை எழுதியதே கொசுறு என்பதால், எதுவும் இல்லை. மன்னிக்க!


Saturday, January 1, 2011

2oi!

ஒரு வழியாக 2010 முடிந்து விட்டது. கடைசியாக இந்த வருடமும் 'வழக்கம் போலவே' முடிந்து விட்டது. வருட ஆரம்பத்தில், இனி மாதம் ஒரு பதிவாவது இட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், இரண்டு மாதத்திற்கு ஒன்றுதான் இட முடிந்தது. சரி பாதி சபதம்தான் நிறைவேறியுள்ளது. பரவாயில்லை. மக்கள் நன்றாக இருந்தால் சரிதான். எந்த சபதமும் எடுக்கக்கூடாது என்பதுதான் இந்த வருட சபதம்.

கடந்த பத்தாண்டுகளைத் திரும்பிப் பார்க்கிறேன். "ஓரமா நின்னு பார்ரா" என்று சொல்வது புரிகிறது. பரவாயில்லை. பல விதமான இன்ப துன்பங்கள் "தம்பி, இது வெறும் டிரையிலர் தான்" என்ற வகையில் வந்து போய் விட்டன. வாழ்க்கை இன்னும் இருக்கிறது என்பதை உணர வைக்கும் சம்பவங்களும் பல. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிஜமாகவே ஒரு மிருகம் இருக்கும் என்பதும் அதில் ஒன்று. மற்றொன்று நானும் பெரிய மனுஷனாகி விட்டேன்.

கொஞ்சம் ஓவராக போய் விட்டோனோ? சரி விடுங்கள். வழக்கம் போல ஆரம்பிப்போம். வருட ஆரம்பம் கொஞ்சம் கொடூரமாகத்தான் ஆரம்பித்தது. 'ஆயிரத்தில் ஒருவன்' என ஆரம்பித்து, 'கனிமொழி'யில் முடிந்து விட்டது. பரவாயில்லை. எல்லாம் நன்மைக்கே.

இசை எனும்போது, வழக்கம் போல எனக்கு, ரஹ்மானும், யுவனும் இந்த வருடத்தின் நல்ல இசையைக் கொடுத்தனர் என்றுதான் நினைத்திருந்தேன். இளையராஜாவுக்கு சிறந்த பின்னணி இசைக்கு விருது என்ற போதும், அப்படி என்ன அந்த படத்தில் என்று கண்டு கொள்ளவில்லை. ஆனால், பழசி ராஜா படம் பார்த்த பின், நான் ராஜா ரசிகன் என்று மீண்டும் பெருமையோடு கூறிக்கொள்கிறேன். "ஏன், நந்தலாலாவிற்கு என்ன குறை" என்பவர்களுக்கு, என்னுடைய கருத்து என்னவென்றால், தனி மனிதனின் உணர்சிகளை இசை வடிவமாக்குவது என்பது ராஜாவிற்கு சாதாரணம். ஆனால், சரி சொல்ல தெரியவில்லை. ஒரே ஒரு காட்சி, எனக்கு மிக மிக பிடித்த காட்சி. ஆங்கிலேயர்களுடன் ஒப்பந்தம் செய்ய வரும்போது, "தனியாகத்தானே வந்துள்ளான். கைது செய்யலாமே" எனும்போது அவரது படையைக் காட்டுவார்கள். அப்போது வரும் இசை. ராஜா ராஜாதான்.

மற்றபடி நம் பதிவுகளை எடுத்துக் கொண்டால், சொன்னதைப்போல் செய்யாமல் பாதி மட்டுமே செய்ததால், மக்கள் தப்பித்தனர். இந்த வருடம் அது போல அல்லாமல் இருக்க அனைவரும் ஆண்டவனைப் பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

சொல்ல மறந்து விட்டேனே. அனைவுக்கும் இனிய புத்தாண்டு, பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு, ஆயுத பூஜை, தீபாவளி, கிருஸ்துமஸ், ரமலான், பிறந்த நாள் மற்றும் 2012ன் புத்தாண்டு வாழ்த்துக்கள்:-)

Thursday, October 7, 2010

எந்திரன் - நானும் நானும்!!!

வழக்கம் போல, மக்களோடு மக்களாக, நானும் ஐக்கியமாகிறேன்.

சில எண்ணங்கள்:

எந்திரன் ஒரு அசாதாரமான படம். எந்திரன் ஒரு குப்பை. எந்திரன் போல ஒரு படம் வந்ததுமில்லை, இனி வரப்போவதுமில்லை. இப்படி ஒரு படம் வந்ததே தேவையற்றது. இந்தப் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கலாம். எந்திரன் படத்தை புறக்கணிப்போம். நல்ல வேளை கமல் தப்பித்து விட்டார். இந்நேரம் கமலுக்கு வயிறெரிந்து வயிறே ஓட்டை ஆயிருக்கும். உஸ் அப்பாஆஅ!!! கண்ணக் கட்டுதப்பா.

சாதாரணமாக, படம் பார்க்கும்போதும், முடிந்தவுடனேயும், இந்த கீழே உள்ள ஏதாவது ஒரு நிலைதான் இருக்கும்.

படம் முழுதும் சிரித்துக் கொண்டு, படம் முடிந்த பின்னரும், அதில் வரும் ஏதாவது ஒரு காட்சியைப் பற்றி பேசி சிரிப்பது. (பாஸ் எ பாஸ்கரன், ஓரம்போ, கோவா போன்ற படங்கள்.)
இடைவேளை வரை அல்லது அதற்கு சற்று அடுத்து வரை சிரித்து விட்டு, அதன் பின் அமைதியாய் பார்த்து விட்டு, சற்றே சோகமாய் வருவது. (பருத்தி வீரன், சுப்ரமணியபுரம், ரேணிகுண்டா போன்ற படங்கள்)
படம் முழுதும் அல்லது பிற்பாதியில் ஒரு வித ஆக்ரோஷத்துடன் பார்ப்பது (நேரம் போவதே தெரியாமல்). சண்டைக்காட்சிகள், சவால் விடும் காட்சிகளில் நாமும் கத்துவது என்று. படம் முடிந்து வீட்டிற்கு வந்து யோசிக்கும்போதுதான், லாஜிக் கழுதை உதைக்கும். (சிங்கம், பில்லா, நான் மகான் அல்ல போன்றவை).
எப்படா படம் முடியும். ஏன்தான் வந்தமோ என்று தன்னைத்தானே நொந்துக் கொள்வது (மாயக்கண்ணாடி, கந்தசாமி, ராவணா, விண்ணைத் தாண்டி வருவாயா போன்றவை)

ஆனால் , எந்திரன் இதில் எந்த வகையிலும் வரவில்லை. கிட்டத்தட்ட கடைசி வகைதான். ஆனால் சிட்டி ver2.0 அதை சற்றே முன்னே கொண்டு போய் விட்டார். (சந்திரமுகி வேட்டையனைப் பார்த்த பின், இந்த படத்திற்காக மிக ஆவலோடு காத்திருந்தேன். ஏமாற்றவில்லை / ஏமாறவில்லை). என்னைப் பொறுத்த வரை, படத்தின் நீளத்தை மட்டும் குறைத்தால் கண்டிப்பாக அட்டகாசமாக இருக்கும். கிளிமஞ்சாரோ மற்றும் இரும்பிலே ஒரு இதயம் பாடல்களையும், (ரஹ்மான் மன்னிப்பாராக. அவர் பாட்டெல்லாம் நன்றாகத்தான் இசையமைத்து தருகிறார். ஆனால், படத்தில் சரியாகவே ஒட்டி வருவதில்லை. ராவணா, எந்திரன் இரண்டிலும் எனக்கு அப்படித்தான் தோன்றியது) நகைச்சுவை என்று சொல்லப்படும் சில காட்சிகளையும் நீக்கலாம். எந்திரனின் ஒரு கை மட்டும் குப்பையிலிருந்து வரும் காட்சியில் இடைவேளை விட்டால், ம்ம்ம்ம்.

நான் ஒன்றும் ஆண்டனி அல்ல. அரவிந்த் தான். ஆனாலும், இது என்னுடைய பதிவாக்கும்.

சில சம்பவங்கள்:

சன் டிவியின் நேரடி ஒளிபரப்பில், ரஜினி, ஐஸ்வர்யா, ஷங்கர், ரஹ்மான், எல்லோரும் கலந்து கொண்டு, அழைப்பவர்களிடம், "சீக்கிரம் எந்திரன் பாருங்கம்மா, குழந்தைகளையும் கண்டிப்பா கூட்டிட்டுப் போய் பாருங்க, அவங்க ரொம்ப என்ஜாய் பண்ணுவாங்க. கொசு கூட பேசற மாதிரி நகைச்சுவை காட்சிகள் எல்லாம் வருது. இப்ப உங்களுக்காக ஒரு காட்சி வருது. பார்த்து ரசிங்க" என்று பேசலாம்.

"எந்திரன் முதல் காட்சி - இடைவேளை விடும் விழா". எந்திரன் இடைவேளையில் மசால் வடை விற்ற சிறப்பு நிகழ்ச்சி (சமோசா அடுத்த வாரம்). விற்பவர் "கலாநிதி மாறனுக்கு ரொம்ப நன்றி சார். அவர் மட்டும் இல்லேன்னா, இந்த மசால் வடை எல்லாம் வித்தே தீர்ந்திருக்காதுங்க" என்று சொல்லாவிட்டால், கத்தரிக்கப்படும். (நான் அவர் கொடுக்கும் பேட்டியை சொன்னேன்).

ரஜினி மனதிற்குள் "நூறு நூத்தம்பது படம் நடிச்சுட்டு சந்தோசமா காச வாங்கிட்டு போயிட்டு இருந்தேன். இந்த ஒரு படம் நடிச்சுட்டு, நான் படற அவஸ்தை இருக்கே, அய்யய்யோ" என்று மருவிக்கொண்டிருக்கலாம்.

சன்னில் வரும் எல்லா நெடுந்தொடர்களிலும், எந்திரனை வைத்து ஒரு நாள் அல்லது ஒரு வாரம் ஓட்டப்படும்.

சில சந்தேகங்கள்:

தமிழ் மற்றும் தெலுங்கு போஸ்டர்களில், சற்றே தொலைவில் இருந்து பார்த்தால், "சன் பிக்சர்ஸ், கலாநிதி மாறன்" தான் நன்கு தெரியும். ஷங்கர், ரஜினி, ரஹ்மான் பெயர்களை விட. ஆனால், ஹிந்தியில் அப்படி இல்லை. ஏன்? (சத்தியமா எனக்கு தெரியலீங்க).

"எந்திரன் உருவான விதம்" என்று கண்டிப்பாக நிகழ்ச்சி வரும். அதில் டிரெயின் சண்டைக்காட்சி மற்றும் நடனக் காட்சிகளை எப்படி எடுத்தோம் என்று போடுவார்களா??

படம் கொஞ்சம் சுமாரா இருக்கும்போதே இவங்க அலும்பு தாங்கலியே? ஒரு வேளை ரொம்ப நல்லா எடுத்திருந்தா?? (என்னங்க, அப்படி எடுத்தாதான் இவ்வளவு அலும்பு தேவை இல்லையேன்னு சொல்றீங்களா.. சரிதான். )

மேலே கூறியது போல எந்த நிகழ்ச்சி போட்டாலும், அதையும் உட்கார்ந்து பார்க்கிறேனே. இது வரை, Indian rupee450/- செலவு செய்து, இரண்டு முறை பார்த்துள்ளேனே. நான் என்ன லூசா??

டிஸ்கி:


கடைசிக் கேள்விக்கு எப்படியும், யாரும் "இல்லை" என்று பதிலளிக்கப் போவதில்லை. எனவே, "ஆம்" என்று பின்னூட்டமிட்டு நேர விரயம் வேண்டாம்.

Tuesday, September 21, 2010

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

இப்போதெல்லாம் பெரிய பதிவர் ஆக வேண்டும் என்றால் இது போல மசாலா மிக்ஸ் பதிவுகள் இடவேண்டும் என்று மரத்தடி ஜோசியக்காரர் சொன்னார். அதை விட முக்கியம் என்ன பதிவிடலாம் என்று பொழுதை ஓட்டுவதை விட, இது போல நாலு வெட்டி விஷயங்களைப் பற்றி எழுதி ஒப்பேற்றி விடலாம் என்றுள்ளேன். இனி உங்கள் தலைவிதி.

கமல் காப்பி:

கமல் காப்பி குடிப்பாரா இல்லை டீ குடிப்பாரா என்று நிறைய பேர் கவலைப்படுகிறார்கள். வாதி, பிரதிவாதிகள் நிறைய பேர் உள்ளனர். ஒவ்வொருவரும் தாங்கள் நினைத்ததை எழுதவே பதிவுலகிற்கு வருகின்றனர். அனைவருக்கும் கமலை விட ரஜினியை விட மோசமான பிரச்சினைகள் (அ) மகிழ்ச்சியான நிகழ்வுகள் வீட்டிலோ, அலுவலகத்திலோ நடக்கும். ஆனால், அதைப் பற்றி எழுதினால் யாரும் படிக்க மாட்டார்கள் என்பதால் இவர்கள் சிக்குகிறார்கள். அந்த மீடியாக்காரங்கதான் அப்படின்னா நீங்களுமா??

பொதுவாக ஒருவர் செய்வது சரியா தவறா என்பது, அவர் நமக்கு பிடித்தவரா, இல்லையா என்பதைப் பொறுத்த விஷயம். நமக்கு மிகவும் பிடித்த ஒருவர் தவறு செய்தால், நமக்கு தெரிந்தாலும் மூன்றாம் நபரிடம் "இல்லை, இல்லை. அது சரிதான்" என்றே வாதிடுவோம். அதேதான் நடக்கிறது.

இப்போதுதான் Technology has very much improved இல்லையா. ஏன் ராபின் வில்லியம்ஸ்க்கு ஒரு மெயில் அனுப்பக் கூடாது? "பாருங்க சார். உங்க படத்த அப்படியே தமிழ்ல டப் பண்ணி இருக்காங்க" என்று. அதை விட்டு விட்டு சும்மா பதிவிட்டால்? மக்கள் அதைப் படித்து விட்டு உடனே "நீங்க காப்பி அடிக்கிறீங்க, உங்க படத்த நாங்க பாக்க மாட்டோம்" என்று புரட்சி செய்வார்களா என்ன?

நான் கமல் மற்றும் இளையராஜாவின் ரசிகன். இதுவரை படித்ததில் புரிந்திருக்கும். அதற்காக ரஜினி, ரஹ்மானை நான் வெறுத்ததில்லை. ஆனால், பொதுவாக விவாதம் நடக்கும்போது (கல்லூரிக் காலங்களில், இப்போதல்ல. சற்றே தெளிந்து விட்டேன்) இவர்களை ஆதரிக்க அவர்களைப் பற்றி தவறான தகவல்களையே தர முயற்சிப்பேன். இப்போது நினைத்தாலும் வெட்கமாக உள்ளது. ராஜாவின் பாடல்களை விட, ரஹ்மானுடையதே அதிகம் கேட்பேன். ஏதாவது, எங்கேயாவது கேட்டது போல இருக்காதா? rahman copy என்று அடிக்கடி google செய்வேன்.

கமல், ரஜினி பற்றி எப்படி எழுதினாலும் நமக்கு எந்த வித ஆதாயமும் கிடையாது. சிவாஜி அதிகம் வசூலித்ததா இல்லை தசாவதாரம் அதிகம் வசூலித்ததா என்று பட்டிமன்றம் நடக்கையில், இதைப் பற்றி கவலைப்பட வேண்டியது AVMமும், ரவிச்சந்திரனும்தானே, நாம் ஏன்? என்று நினைத்தேன். AVMன் பேர் சொல்லும் பிள்ளை கமல் என்று அவர்களே படம் எடுத்தார்களே? (உடனே AVMன் எஜமான் ரஜினிதானே என்று சொல்ல வேண்டாம்).

இதனால் நான் சொல்வது என்னவென்றால், ரசிப்போம். சிரிப்போம். தவறென்றால் என்ன செய்யலாம்? செய்தவர் பிடித்திருந்தால் மன்னிப்போம். இல்லையென்றால் பதிவிட்டுக் கிழிப்போம்.

சிறுகதை:

பல வருடங்களுக்கு முன், குமுதத்தில் படித்த சிறுகதை. முடிவிற்குப் பின் இன்னொரு முடிவைக் கொடுத்துள்ளேன்.

ஒரு பேருந்துப் பயணம். ஒருவருக்கொருவர் அறிமுகமற்ற ஒரு முதியவரும், ஒரு இளைஞனும் அருகருகே அமர்ந்து பயணிக்கின்றனர். முதியவர் களைப்பாக இருப்பதால், தூங்கி தூங்கி இளைஞன் மேல் விழுகிறார். சொல்லி சொல்லிப் பார்க்கும் இளைஞன், ஒரு கட்டத்தில் கடுப்பாகி, அவர் விழும்போது எழுந்து விட, பெரியவர் பொறுமையாக சொல்கிறார்.

"ஏம்பா, நான் வயசானவன்னுதானே எழுந்துட்டே, ஒருவேள ஒரு பதினெட்டு வயசுப் பொண்ணு இப்படி தூங்கி விழுந்திருந்தா நீ எந்திரிச்சிருப்பியா?"

இத்துடன் கதை முடிந்திருந்தது. என் கருத்து அடுத்த வரி.

"ஏன் பெரியவரே. ஒருவேள ஒரு பதினெட்டு வயசுப் பொண்ணு உங்க பக்கத்துல உக்காந்திருக்கும்போது, நீங்க இப்படி அவங்க மேல தூங்கி விழுவீங்களா?"

திரைப்படங்கள்:

களவாணி, வம்சம், பாஸ் (எ) பாஸ்கரன் போன்ற சில நல்ல சில டைம் பாஸ் படங்களையும், விண்ணைத் தாண்டி வருவாயா, ராவணா (தமிழ் மற்றும் ஹிந்தி) போன்ற இன்னும் சில நல்ல (?) படங்களையும் பார்த்தேன். பாஸ் படம்தான் ரசித்து, சிரித்துப் பார்த்த படம். அதுவும் பயங்கரமாக கமெண்ட் எல்லாம் அடித்துக் கொண்டு, கூட வந்த நண்பர்களையும் கலாய்த்துக்கொண்டு அனுபவித்து சிரித்தோம்.

நண்பனின் தம்பியும் உடன் வந்திருந்தான். ஆர்யாவின் அண்ணன், ஆர்யா வெளியேறும்போது குடை கொடுக்கும் காட்சியில் நாங்கள் அவனிடம் "உங்கண்ணன் ரொம்ப நல்லவன்டா. குடை மட்டுமில்ல, ரெயின் கோட்டும் கொடுப்பான்டா. அண்ணேன்டா !!!" . அதே போல படம் பார்க்க நாங்கள் போனது Express Avenue Mall. எனவே, வெட்டி சீனாக, கண்ணாடி எல்லாம் போட்டுக்கொண்டு போனோம். சந்தானம் ஆர்யாவைப் பார்த்து கடுப்பாகி "அந்தக் கண்ணாடியைக் கழட்டித் தொலைடா" என்று கத்தும்போதெல்லாம், ஒரே ரவுசுதான் போங்க.

கொசுறு:

இன்னும் ஏதோ ஒன்று குறைகிறதே? Aதாவது ஜோக் சொல்ல வேண்டுமல்லவா? ம்ம்ம்ம்... ஒரு பழைய மொக்கை ஒன்று..

நண்பன் 1: எம் பொண்டாட்டி ஏதோ ஒரு வித்தியாசமான லிப்ஸ்டிக் வச்சிருக்கா. ரொம்ப வித்தியாசமான சுவை.
நண்பன் 2: ஆமாமா.. ஒரு மாதிரி ஆரஞ்ச் டேஸ்டும் இல்லாம மாதுளை மாதிரியும் இல்லாம.. கொஞ்சம் வித்தியாசமாத்தான் இருக்கும்.

புரிந்தவர்கள் சிரித்துக்கொள்ளவும். புரியாதவர்கள் புரிந்தவர்களிடம் கேட்டுக் கொள்ளவும்.

தலைப்பைப் பார்த்து ஏமாந்து வந்தவர்கள் அப்படி ஒரு ஓரமாக துப்பிவிட்டு செல்லவும். மற்றவர்கள் வழக்கம் போலவே.

Sunday, August 15, 2010

பட்டுக்கோட்டை பிரபாகர்-பாலகுமாரன்-இந்திரா சௌந்திரராஜன்

இதற்கு முன் இட்ட ராஜேஷ் குமார், சுபா பற்றிய பதிவுகள்.

பட்டுக்கோட்டை பிரபாகர்:

இவரின் பரத் சுசீலா பாத்திரங்களுக்கும், சுசீலாவின் டி சர்ட் வாசகங்களுக்கும் நான் ரசிகன் என்றால், அது அறை குறையாக அவரின் கதைகளைப் படித்தவன் என்று அர்த்தம். அவரின் துப்பறியும் நாவல்கள் மட்டுமல்ல, சமூக நாவல்களும் எனக்குப் பிடிக்கும். அவரது திரைப்பட வசனங்களும் வசன நடையும் நன்றாகவே இருக்கும். குறிப்பாக 'சாமுராய்' படத்தின் வசனங்கள். "எரிமலை வெடிக்கும்போது, அடியில் சில பூக்களும் கருகத்தான் செய்யும்", "காரும் காரும் மோதுனா அது incident. FIR போட்டாதான் அது accident". மற்றபடி கதைகளின் பெயர்கள்தான் நினைவில் இல்லை.'

திரு திரு துரு துரு' படத்தில், மருத்துவமனைக்கு நாயகன் நாயகி விசாரிக்க வரும்போது, நாயகி 'நாங்கதான் பரத் சுசீலா, மாறு வேஷத்துல வந்துருக்கோம்' என்றபோது அங்கங்கே கேட்ட சிரிப்புக் குரல்களே பாத்திரங்களின் வெற்றிக்கு சாட்சி. என்ன, எனக்குத் தெரிந்து இதுவரை இந்த பாத்திரங்களை வைத்து எந்தப் படமும் வரவில்லை.

பாலகுமாரன்:

எனக்கு சிறு வயதில் பாலகுமாரனின் கதைகள் அவ்வளவாக பிடிக்காது. ஏனென்றே தெரியவில்லை. சமீப காலங்களில் படித்த பின்தான் அவரது அருமையே தெரிகிறது. அதுவும் 'இரும்பு குதிரை' (க்கன்னா வராதாமே. எட்டெழுத்து என்பதாலா??) படித்த பின் அவர் மேலிருந்த மதிப்பு அதிகமாகிவிட்டது. இவரின் திரை வசனங்களும் எனக்குப் பிடிக்கும். பாட்ஷா', 'ஜென்டில்மேன்' பற்றி தனியாக சொல்ல வேண்டுமா?? இவருடைய கதைகளும் எனக்கு தெரிந்து திரையில் வந்ததில்லை.

இந்திரா சௌந்திரராஜன்:

இது வரை இவரைப் பற்றி என்னால் சரியாக கணிக்கவே முடியவில்லை. அதுவும் 'விடாது கருப்பு'க்குப் பின் அந்தக் குழப்பம் அதிகமாகி விட்டது. அவரின் மற்ற கதைகள் சரியான விகிதத்தில் விஞ்ஞானத்தையும் புராணத்தையும் கலந்து கட்டி அடித்திருப்பார். அதே போல சமூக நாவல்களும் நன்றாகவே இருக்கும்.
சேலம் நெசவாளர்களை மையமாக வைத்து எழுதிய கதை ஒன்று. தலைப்பு வழக்கம் போல நினைவில் இல்லை. அருமையாக இருக்கும்.

'விடாது கருப்பு' தொடராக வந்த காலத்தில் எங்களூரில் கேபிளும் இல்லை, எங்கள் வீட்டில் டிவியும் இல்லை. இப்போதுதான் யுடியுபில் பார்த்தேன். நிஜமாகவே பயமாக இருந்தது. பொதுவாக புதினங்கள் படமாக்கப்படும்போது, என்னைப் பொறுத்தவரை சரியாகவே இருந்ததில்லை. ஆனால், படித்ததை விட பல மடங்கு நன்றாக இருந்தது அந்த தொடர். அந்த நம்பிக்கையில்தான் 'ஆனந்தபுரத்து வீடு' படம் பார்க்கப் போனோம். சரி அத விடுங்க.. இவரின் மற்ற நாவல்கள் ஒரு முறை படித்ததுண்டு. இவரின் 'ஐந்து வழி மூன்று வாசல்' படித்தால் 'மஹதீரா' நினைவுக்கு வரலாம். ஆனால் கதை வந்து பல வருடங்களாகி விட்டன.

இப்போதைக்கு அவ்வளவுதான்.எப்பா பாத்துக்கோங்க.. நானும் பதிவர்தான், பதிவர்தான், பதிவர்தான். ஒரு பதிவு போட்ருக்கேன்..