Saturday, July 4, 2009

வாசிப்பனுபவம் (கல்லூரி)

ஒரு வழியாக, ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்நிலைக்கல்வி, மேல்நிலைக்கல்வி, பொதுத்தேர்வு, நுழைவுத்தேர்வு எல்லாவற்றையும் முடித்து விட்டு ஒரு வழியாக கல்லூரியில் சேர்ந்து விட்டேன். சென்னை என்னை வாடா வெண்ணை என்றது. முதன் முதலில் வீட்டைப் பிரிந்து விடுதியில். சுற்றிலும் நண்பர்கள் மட்டுமே. உலகத்திலேயே நாந்தான் நிறைய படிப்பேன் என்ற தலைக்கணத்திற்கு சம்மட்டியால் அடித்து போல, ஒவ்வொருவரும் தலையணை அளவில் புத்தகங்கள் வைத்திருந்தனர். சரிதான் என்று நினைத்தேன்.

கல்லூரியில்தான் மீண்டும் சுஜாதா (மச்சி, அது ஆம்பளைடா). பல கதைகள் புரியவேயில்லை. சென்னையில் உள்ள அத்தை வீட்டிற்கு அடிக்கடி போவேன். (சத்தியமாக அங்கு பெண்ணில்லை) அவர்களோ பயங்கரமாக படிப்பவர்கள். அங்குதான் கல்கி, சாவி, தேவன், சாண்டில்யன் போன்றோரின் புதினங்களைப் படித்தேன். ஊரில் நூலகத்தில் அவை இருந்தாலும், அவற்றை தேடும் அளவிற்கு ஞானம் வளரவில்லை.

சென்னையில் நடக்கும் புத்தக கண்காட்சிக்கு போவோம். (அப்போது நடந்தது காயிதே மில்லத் கல்லூரியில்.. கேர்ள்ஸ் காலேஜுடா.. ஏதாவது பிகர் இருக்குண்டா). ஆனாலும் எதுவும் வாங்குவதில்லை. வேலைக்கு போன பின் என்னென்ன வாங்க வேண்டுமென்று மட்டும் பார்ப்போம்.

ஒரு கால கட்டத்தில், ஆங்கில நாவல் ஒன்று விடுதி வட்டாரத்தில் சக்கை போடு போட்டது. The DaVinci Code. எல்லோரும் அதைப் படித்துவிட்டு, Last Supper Painting பாத்தியா என்றெல்லாம் கேட்க, என்னடா இது அரவிந்துக்கு வந்த சோதனை என்று, இ-புத்தகத்தை எடுத்து, அகராதிக்கென்று, இ-அகராதியையும் திறந்து படித்தேன், படித்தேன், படித்தேன். கிட்டத்தட்ட மூன்று வாரத்திற்கு மேல் ஆனது அதை முடிக்க. சற்றே பெருமையாகவும் இருந்தது. இனி நாளைய வரலாறு என் பேர் சொல்லும் என்ற பெருமை வேறு. என்னடா DaVinci Code தான் படிச்சியா, Angels & Demons படிக்கலியா என்று மீண்டும் கேட்க, கடுப்பாகி, டான் பிரௌனின் மீதி மூன்று நாவல்களையும் வாங்கி படித்து விட்டேன். சும்மா சொல்லக்கூடாது. நன்றாகவே இருந்தது.

அதன் பின் கொஞ்சம் கொஞ்சம் ஆங்கில நாவல்கள் படிக்க ஆரம்பித்தேன். இருந்தாலும், அவ்வளவாக பிடிக்கவில்லை. எனவே, தமிழாக்கம் செய்யப்பட்டதை படித்தேன். அதைப் படித்த பின்புதான், ஆங்கிலத்தில் படிப்பதே நல்லது என்று உணர்ந்தேன்.

கல்லூரி முடித்து, வேலைக்கு போக ஆரம்பித்த பின், வருடா வருடம் புத்தக கண்காட்சிக்குப் போய், ஒவ்வொரு வருடமும் கண்காட்சிக்குப் போய் குறைந்தது இரண்டாயிரதுக்குக் குறையாமல் அள்ளிக்கொண்டு வருவோம்.

பொதுவாக, போகும்போது 'இந்த புத்தகத்தை கண்டிப்பாக வாங்க வேண்டும்' என்று ஓரிரு புத்தகங்களைத்தான் நினைத்துக்கொண்டு போவோம். ஆனால், அதைத் தவிர மற்றவற்றை அள்ளிக்கொண்டு வருவோம். வேலைக்குப் போக ஆரம்பித்தவுடன், நான் வாங்க நினைத்த முதல் புத்தகம், விகடன் நிறுவனத்தாரின் 'கோல்'. அது தொடராக வந்தபோதே, என் துறை சம்பந்தப்பட்டது என்பதால், விரும்பிப் படிப்பேன். ஆனால், 'வந்தார்கள் வென்றார்கள்', 'வாவ் 2000', 'கற்றதும் பெற்றதும்' போன்றவற்றைத்தான் முதலில் வாங்கினேன்.

என் அத்தை வீட்டிலேயே மிகப்பெரிய நூலகம் இருப்பதால், நான் சற்று வித்தியாசனமான புத்தகங்களையே வாங்குவேன். மேலே சொன்ன 'கோல்' போன்றவை. அதே போல தேவனின் கதைகளையும் நான்தான் வாங்கினேன். முதலில் வாங்கியது, வேறென்ன, 'துப்பறியும் சாம்பு' தான்.

இந்த வருடம் 'சுஜாதா வருடம்'. 'குமரிப் பதிப்பகம்' ஸ்டாலில், எதேச்சையாக பார்த்தோம். பழைய புத்தகங்கள் போல இருந்தன. என்ன என்று பார்த்தல், எல்லாமே சுஜாதாவின் கதைகள், ஆனால் பழைய பதிப்பு. எனவே, விலையும் குறைவு. விக்ரம் 23 ரூபாய். 24 ரூபாய் தீவு 26 ரூபாய். முன்னமே எண்பது ரூபாய்க்கு வாங்கிய 21ம் விளிம்பு, வெறும் 40 ரூபாய். எனவே, இருந்த புத்தகங்கள் எல்லாவற்றிலும் ஒன்றை எடுத்து விட்டோம். இது மட்டுமின்றி, 'மேலாண்மை பொன்னுசாமி' புத்தகங்களும் அதே போல இருந்தன. கிட்டத்தட்ட, 32 புத்தகங்கள், 1200 ரூபாய்க்கு எடுத்தோம். பில் போடவே அரை மணிக்கு மேல் ஆனது.

தற்போது என்னுடைய வாசிப்பனுபவம் தொடருவது 'குமுதம்', 'விகடனில்' தான். அவ்வப்போது பழைய புத்தகங்கள் எடுத்து வாசிப்பதோடு சரி. அதுவும் அலுவலக பயண நேரங்களில்தான். வீட்டில் நமக்கு இணையத்தில் மேயவே நேரம் சரியாக உள்ளது. நிறைய இ-புத்தகங்கள் இருந்தும் படிப்பதில்லை.
இருந்தாலும் நாங்க விட மாட்டோமுல்ல!!!

இதோட இந்த தொடர் முடியுது..

அடுத்து வருவது,

என்னான்னு எனக்கே தெரியாது. உங்கள மாதிரியே நானும் செருப்போட (சீச்சீ) வெறுப்போட (அடங்க) ஆவலோட காத்திருக்கேன்.

வாசிப்பனுபவம் (மேல்நிலைக்கல்வி)

ஒரு வழியாக, ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்நிலைக்கல்வி எல்லாம் முடித்துவிட்டு, நாமக்கல் டவுனில் மேல்நிலைக்கல்விக்காக சேர்ந்தேன். படித்து முடித்த சந்தோசத்தை விட, இனி புத்தகங்கள் வாங்குவதில் பிரச்சினை இருக்காது என்பதில்தான் பெரும் சந்தோஷம்.

நாமக்கல்லிலேயே புகழ் பெற்ற அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (தெற்கு) தான் நான் சேர்ந்தது. சன் தொலைக்காட்சியில் ஏழெட்டு வருடங்களுக்கு முன், "உங்கள் மாவட்டத்தில் சிறந்த பள்ளி எது?" என்று முதலில் நடத்திய கருத்துக்கணிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் முதலாவதாக வந்தது. தமிழ் நாட்டிலேயே கருத்துக்கணிப்பில் அப்போது வந்த ஒரே அரசு பள்ளியும் எங்களுடையதுதான் என நினைக்கிறேன். அப்படிப்பட்ட 'தலை சிறந்த பள்ளி'.

சர்வ சாதாரணமாக 'A'ராளாமாக, Aனைத்து வகையான புத்தகங்களும் உலவிய இடம். டியுஷன் கட்டாயம் என்பதால், வகுப்பில் பெரும்பாலும் சும்மாவே இருப்போம். வீட்டிலிருந்து ஒவ்வொருவரும் புத்தகம் கொண்டு வந்து, மாற்றி மாற்றி படிப்போம். பல முறை அரிசியும், சில முறை உமியும். ஊதி ஊதி சாப்பிட வேண்டியதுதான்.

பத்தாவது வரையில், மதிப்பெண்கள் ஈரிலக்கமும், தரவரிசை ஓரிலக்கமும் இருக்கும். இங்கோ நிலைமை தலைகீழ் ஆகி விட்டது. வீட்டிலோ, எருமை மாடு வாங்க பணம் சேர்க்க ஆரம்பித்து விட்டனர். எனவே, சற்றே பாடங்களையும் படிக்க ஆரம்பித்து விட்டேன். புதியதாக எதுவும் ஆரம்பிக்கவில்லை. கல்லூரியில் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். அது அடுத்த பதிவில்.

Wednesday, June 3, 2009

வாசிப்பனுபவம் (உயர்நிலைக்கல்வி)

என்னுடைய ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி அனுபவங்கள் பற்றி படிக்க...

என்னதான் அரும்பு மீசை முளைத்து, நான்கு புத்தகங்கள் படித்துவிட்டு பீலா விட்டாலும், ஊருக்குள் நம்மை இன்னும் சின்ன பசங்க போலவே பார்க்கிறார்களே? ஏன் என்று வீட்டில், தனியறையில் யோசித்தோம். அப்போதுதான் மாத நாவல்களை விட, வார இதழ்கள் படித்து, நம் அறிவை சீக்கிரம் வளர்த்துக்கொள்ள வேண்டும். எனவே 'பல்சுவை வார இதழ்களை' படிக்க ஆரம்பித்தோம்.

குமுதம், ஆனந்த விகடன், கல்கி, கல்கண்டு, குங்குமம் (ஓசிதான்.. வாரா வாரம் நான்கு, ஐந்து ரூபாய்க்கு எங்கே போவது?). அதுவரை படித்த புத்தகங்களில் எல்லாம், மீறிப்போனால் பத்து நகைச்சுவைத் துணுக்குகளுக்கு மேல் இருக்காது. ஆனால், இவற்றில் உள்ள துணுக்குகளுக்காகவே விரும்பிப் படித்தேன்.

அதே நேரம், ஊரில், முழு நேர நூலகத்தை திறந்து விட்டார்கள். புத்தகங்களும் நூறிலிருந்து கிட்டத்தட்ட ஐநூறுக்கு மேல் ஆகி விட்டது. நூலகரும் புது நூலகர். ஆனாலும், என்னுடைய அருமை பெருமை எல்லாம் சொல்லி, ஓரளவு பெரியாளாக காட்டிக் கொண்டேன். சந்தாதாரராக நானும், பினாமியாக என் அம்மாவையும் சேர்த்து விட்டேன். அங்கேயே குமுதம், விகடன் எல்லாம் வரும். என்னுடைய 'பவர் ஆப் அட்டர்னியை' பயன்படுத்தி வீட்டுக்கு எடுத்து வந்து விடுவேன்.

அப்போதுதான் சிறுகதைகளின் பெருமைகளைப் பற்றி அறிந்தேன். சுஜாதா அப்போதுதான் அறிமுகம் (யாரந்த பிகர்னு தெரியலையே). அதன் பின் கேள்வி-பதில் பகுதி. மதன் பதில்கள், அரசு பதில்கள், அல்லி பதில்கள் முதல் சுண்டெலியார் பதில்கள் வரை அனைத்தும் பரிட்சயம்.

ஆனாலும், நூலகத்தில் நீதிக்கதைகளும், நாவல்களுமே பொழுதுபோக்கு. அவ்வப்போது கட்டுரைகளும் படிப்பதுண்டு. பத்தாவது அரையாண்டுக்குப் பின் வீட்டில் சொல்லி, என்னை நூலகத்தில் சேர்க்கக்கூடாது என்று தடையுத்தரவு போட்டு விட்டதால், படிப்பது கொஞ்சம் (கொஞ்சமே) குறைந்தது. என் வீட்டில் இல்லாமல், நண்பர்கள் வீட்டில் வைத்து படிப்பேன். என் வீட்டிலோ, 475க்கு மேல் எடுத்தால் சைக்கிள் என்றெல்லாம் ஆசை காட்டினார்கள். எனவே, சரி என்று சிறு நிறுத்தம் இட்டு வைத்தேன்.

மேல்நிலைக்கல்வியும், கல்லூரிக்கல்வியும் விரைவில்..

பத்தாம் வகுப்பு முடிவுதானே? வீட்டிற்கு வீண் செலவு வைக்கவில்லை.

Thursday, April 23, 2009

வாசிப்பனுபவம் (இடைநிலைக்கல்வி)

என்னுடைய ஆரம்பக்கல்வி அனுபவங்களைப் பற்றி முன்பே சொல்லி விட்டேன். அதிலிருந்தே என்னைப் பற்றி புரிந்திருக்கும். மன திடம் உள்ளவர்கள் மட்டுமே தொடரவும்.

சிந்துபாத் படிக்க ஆரம்பித்தவுடனே, படக்கதைகளின் மீதான ஆர்வம் தொடக்கி விட்டது. எனவே அடுத்த கட்டமாக 'ராணி காமிக்ஸ்' படிக்க ஆரம்பித்தேன். அப்போது அது இரண்டு ரூபாய். மாதமிரு முறை. அதுவும் யாராவது நாமக்கல் போனால்தான் கிடைக்கும். எனவே, எப்படியாவது நான்கு ரூபாயை தேற்றி, யாரையாவது வாங்கி வர சொல்வேன். அதை அப்படியே ரொடேஷனில் விட்டு 'அம்புலி மாமா' வாங்கி படிப்போம். ராணி காமிக்ஸில் ஒரு இதழ் விட்டு ஒரு இதழ் 'மாயாவியின்' கதை வரும். அதுதான் விரும்பிப் படிப்போம்.

லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் படித்தாலும், எனக்கு அவ்வளவாக பிடிக்காது. ஏனோ தெரியவில்லை. [ஆனாலும் டயானா சூப்பருங்க.. எனக்கு ரொம்ப நாளா அப்ப இருந்த சந்தேகம் என்னன்னா, மாயாவி டயானாவும், சார்லஸ் டயானாவும் ஒண்ணா வேறயா? ஒரு வேளை, சார்லஸ்தான் மாயாவியா?.. பாத்தா அப்படி தெரியலியே?. காமிக்ஸ்லயும் முகத்த காமிக்கல.. ஒரு வேளை அப்படி இருக்குமோ]

என் அம்மாவிற்கு காமிக்ஸ் படிப்பது பிடிக்காது. அவர்கள் நாமக்கல் போகும்போது வாங்கி வரச் சொன்னால் மதிக்கவே மாட்டார்கள். ஒரு கட்டத்தில் தொந்தரவு தாங்க முடியாமல், 'கோகுலம்' வாங்கி தந்தார்கள். அதன் பின் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள், மாதம் தவறாமல் கோகுலத்தின் வாசகனாக இருந்தேன். கோகுலம் கோடை இதழில் வரும் லேபில்கள்தான் என் பாட புத்தகங்களை அலங்கரிக்கும். நடுநடுவே 'அம்புலிமாமா' வேறு. விக்கிரமாதித்யனும் பேசிக்கொண்டேதான் இருக்கிறான். வேதாளமும் முருங்கை மரத்திற்கு தாவிக்கொண்டுதான் உள்ளது. அதிலுள்ள ஓவியங்களும் அருமையாக இருக்கும்.

இவையெல்லாம் 'சைடில்' போய்க்கொண்டிருந்தபோது, ஊரில் ஒரு பகுதி நேர நூலகம் ஆரம்பித்தார்கள். மாலை ஐந்து முதல் ஏழு வரை. என் அம்மாதான் நூலகர். இங்கே திரைக்கதையில் சிறு திருப்பம். நாந்தான் அம்மா. என் அம்மா ஒ. பன்னீர் செல்வம். அங்கே நூலகத்தில், 'மலரும் மாலையும், குழந்தைகளுக்கு நீதிக்கதைகள், 101 நீதிக்கதைகள், மரியாதை ராமன், முல்லா, தெனாலி ராமன் மற்றும் பீர்பால் கதைகள், தலைவர்களின் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்' என்று படித்து தீர்த்தேன். இது போன்ற புத்தகங்கள் அலமாரியில் எங்கு இருக்குமென்று எனக்கு மட்டுமே தெரியும்.

நூலகம் இரண்டு வருடங்கள் மட்டுமே (நான் ஏழாவது முடிக்கும் வரை) இருந்தது. அதன் பின், முழு நேர நூலகம் கட்டப் போவதாக சொல்லி, இதை மூடி விட்டார்கள். எனக்குதான் ரொம்ப கஷ்டமாக போய் விட்டது. இந்த காலகட்டங்களில் புத்தகமின்றி ஒரு வேளை கூட சோறு இறங்காது. ஏனென்றால் நிறைய புத்தகங்கள். எல்லாவற்றையும் படிக்க வேண்டுமென்ற வெறி. சாப்பாடு கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கும் மேல் சாப்பிடுவேன். அதுவும் புத்தகம் படித்துக்கொண்டுதான். வீட்டில் என் மீது வன்முறை கட்டவிழ்த்து விடும்போதுதான், புத்தகத்தை சற்றே நகர்த்தி விட்டு சாப்பிட்டு முடிப்பேன்.

நூலகத்தை மூடியபின், புத்தகங்களின் வரவு குறைந்து விட்டதால், கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்து விட்டது. எதையாவது படித்துக்கொண்டே இருக்க வேண்டும். எனவே, அடுத்த கட்ட நடவடிக்கையாக, ஊரில் யார யார் எது போன்ற புத்தகங்கள் வாங்குகிறார்கள்/படிக்கிறார்கள் என்ற தகவலை திரட்டினோம். அப்போதுதான் ஊரில் உலாவும் சில முக்கிய புத்தகங்கள் பற்றி தகவல் தெரிந்தது. அவை!?!?

ஒன்னுமில்லீங்க.. நான் சொன்னது க்ரைம் நாவல், சூப்பர் நாவல், பாக்கெட் நாவல் போன்றவைதான். எட்டாவதில்தான் அவற்றின் அறிமுகமே கிடைத்தது. அப்போது என் அண்ணன் (பெரியம்மா பையன்) பதினொன்றாவது நாமக்கல்லில் சேர்ந்திருந்தான். அங்கே பழைய புத்தக கடைகளிலிருந்து பாதி விலைக்கு நாவல்களை வாங்கி வருவான். ஒரு கட்டத்தில் வாடகைக்கு வாங்கியே படிக்க ஆரம்பித்து விட்டோம். [அந்த கடையில் பாதி விலைக்கு வாங்கி, படித்த பின், மீண்டும் மூன்றில் ஒரு பாதி விலைக்கு அங்கேயே விற்போம். பின், டீல் பேசி, வாடகை ஆக்கி விட்டோம்].

ராஜேஷ் குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேந்திர குமார் (ஙே!), இந்திரா சௌந்திரராஜன், பால குமாரன் என்று பெரும்படையே எங்களை ஆக்கிரமித்தது. கிட்டத்தட்ட இதே வரிசைதான் எங்களின் விருப்பமும். இப்படியாக எனது புத்தக அனுபவம், இடைநிலைக்கல்வி (எட்டாவது) வரை தொடந்தது.

"நீ என்ன கருமத்த படிச்சா எங்களுக்கென்ன, முடிஞ்சா அதப் பத்தி நீ என்ன நெனச்ச/நெனக்கிறேன்னு சொல்லுடா" அப்டின்னு நீங்க நெனக்கிறது தெரியுது.. வரும்.. அதுவும் வரும்..

Sunday, April 19, 2009

வாசிப்பனுபவம் (ஆரம்பக்கல்வி)

சுவாசிப்பு போல வாசிப்பு என்பதும் எனது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத செயல். எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் அதேதான். இந்த அனுபவங்களை ஒரே பதிவில் இட முடியாது என்பதாலும், பின்னால் பல பதிவுகள் இட வேண்டும் என்பதாலும் சில பல பாகங்களாக இடுகிறேன்.

அந்த காலத்தில்(?), என்னை LKG, UKG படிக்க வைக்க வேண்டுமென்று என் வீட்டில் ஆசைப்பட்டனர். பிற்காலத்தில் எப்படியும் PG பண்ண மாட்டேன் என்று அப்போதே தெரியுமோ என்னவோ. ஆனால் எங்கள் ஊரில் அப்போது அந்தளவு வசதி இல்லாததால், அங்கன்வாடியில்தான் (எங்களூரில் பால்வாடி என்று பெயர்) சேர்ந்தேன். வீட்டிலிருந்து பத்தடி தள்ளித்தான் அது. அங்கே அணில், ஆடு என்று சித்திரம் மூலம் படிப்பு தொடங்கியது. வீட்டிலும் அ, ஆ, என படிப்பு தொடங்கியது.

அங்கன்வாடி முடிந்ததும், அடுத்து பத்தடி தள்ளியிருந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆரம்பக் கல்வி தொடங்கியது. இரண்டாவது முடியும்போது ஓரளவு எழுத்துக்கள் தெரிய ஆரம்பித்தவுடனே, எனது திறமையை யாருக்காவது காண்பிக்க வேண்டுமென்று தோன்றியது. அப்போது (இப்போதும்) எங்கள் பெட்டிக் கடைக்கு தினத்தந்திதான் வாங்குவோம். அதில் நம் கண்ணை உடனே கவர்வது 'கன்னித் தீவுதான்'. தினமும் அதை படித்து படித்து என் அம்மாவிடம் சொல்வதுதான் என் பணி. யோசித்துப் பார்க்கும்போது, பொறுமை என்பதை அம்மாவிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என தோன்றுகிறது.

கன்னித்தீவு அதன் பின் நான் ஊரில் இருந்த தொடர்ந்து இருந்தவரை (கல்லூரியில் சேரும் நாள் வரை.. கிட்டத்தட்ட பதினொரு வருடங்கள்) தவற விட்டதேயில்லை. எங்கேயாவது ஊருக்கு போனால் கூட, வந்து ஊரில் இல்லாத நாட்களில் வந்த செய்தித்தாள்களை எடுத்து படிப்பேன். நான் செல்லும் ஊரில் தினத்தந்தி வந்தாலும், எங்கள் கடையில் படித்தால்தான் எனக்கு சந்தோஷம். நானே அதன் பின் கதையை தொடர முடியும் என்று நம்பிக்கை வந்து விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

முதலில் கப்பல் பயணம். கப்பல் கவிழ வேண்டும். கடலுக்குள் ஒரு ஆபத்து.. அங்கே ஒரு இளவரசியை காப்பாற்ற வேண்டும். அவளை தாய் நாட்டில் சேர்த்து விட்டு, லைலா சிறியவளான கதை சொல்ல வேண்டும். மீண்டும் ஒரு கப்பலை வாங்கி, பயணத்தை தொடர வேண்டும். சில சமயம் இளவரசன் வர வேண்டும். முக்கியமான விஷயம், அடிக்கடி 'அப்போது' என்று தொடரும் போட வேண்டும்.

இது தவிர தினத்தந்தியில் கவர்ந்தது, 'சிரிப்பு' மற்றும் 'ஆண்டியார் பாடுகிறார்'. ரொம்ப நாளாக, எனக்கு புரியாத விஷயமாக இருந்தது, 'இந்த படத்திற்கு வசனம் தேவையில்லை.' இது என்னடா சிரிப்பு, அடிக்கடி வேறு வேறு படங்களுடன் வருகிறதே? புரிய வெகு நாளாயிற்று.

'இங்கு வெளியான இரண்டு சிரிப்பிற்கும் ரூ. 15 பரிசு. இங்கே படைப்பு இடம் பெற, 15 பைசா அஞ்சலட்டையில் இந்தியன் இங்கினால் வரைந்து அனுப்பவும்.' நானும் இங்க்கை சட்டையில் கொட்டி, வீட்டில் உதை வாங்கியதுதான் மிச்சம்.

ஆண்டியார் பாடுகிறார்.. 'ஒளியும் ஒலியும்' நிகழ்ச்சியில் வந்த பாடலின் வரிகள் வந்தால், உரு தட்டிக்கொண்டு போய், திறமையைக் காண்பிப்பேன்.

அப்போதெல்லாம், தொலைக்காட்சியில் வரும் (அட, நம்ம தூர்தர்ஷன் தாங்க) வாராந்திர தொடர்களின் கதையும், ஞாயிறு போடும் திரைப்படங்களின் கதையும் அன்றைய இதழில் வரும். அதையும், படித்து விட்டு போய், "டேய், இன்னைக்கு என்ன ஆகும் தெரியுமா?" என்று சொல்வேன். அப்போது எங்கள் வீட்டில் தொலைகாட்சி இல்லை. எனவே, ஏதாவது நண்பன் வீட்டில், அவர்களுடன் சேர்ந்துதான் பார்ப்பேன். அப்போது "பாத்தியா.. நாந்தான் அப்பவே சொன்னேன்ல" என்பேன். [இதைப் பற்றி பின்னால் ஒரு தனி பதிவே இடுகிறேன்.]

இவை தவிர, நான் மற்றபடி படிப்பது, கொலை, கொள்ளை பற்றிய செய்திகள்தான். (நாங்கெல்லாம் அப்பவே ஊர்ல பெரிய ரவுடிங்க..). அவற்றை என் சொந்த சரக்கோடு, பள்ளியில் கதை கட்டுவதுதான் அப்போதைய குலத் தொழிலே. [அப்போது ஊரிலேயே, எங்கள் கடைக்கு மட்டும்தான் செய்தித்தாள் வரும். எனவே, என் நண்பர்களுக்கு நான் சொல்வதுதான். மற்ற யாரும் அங்கே வந்து படிக்க மாட்டார்கள். அவர்கள் வீட்டில் யாரும் பார்த்தால் உதைதான். "ஒழுங்கா மொதல்ல பாடத்த படி.. அப்புறமா இத பாக்கலாம்.."].

இப்படியாக, என் ஆரம்பக் கல்வியின் பெரும்பகுதி சிரிப்பு, சிந்துபாத், ஆண்டியார், கொலை, கொள்ளை என்று தினத்தந்தியுடன் வளர்ந்தது. உயர்நிலைக் கல்வி அடுத்த பதிவில்....


Wednesday, February 25, 2009

ராஜா ரசிகனும், ரஹ்மானும்!!!

நான் இளையராஜா மற்றும் கமலின் பரம ரசிகன். கல்லூரி நாட்களில், விடுதியில், இரவு உணவு முடிந்த பின், படுக்கப் போகும் வரை தினமும் சண்டைதான் நடக்கும். நான்கு நாட்கள் இளையராஜா ரஹ்மான். மூன்று நாட்கள் கமல் ரஜினி. இப்போது யோசித்துப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. இந்த சண்டைக்காகவே ரஹ்மான் பற்றியும் ரஜினி பற்றியும் நிறைய தெரிந்து கொண்டேன்.

கொஞ்ச நாட்களுக்கு முன் கமலை ஒரு விழாவில் ஆஸ்கார் நாயகனே என்று புகழ, டென்சனான கமல், ஆஸ்கார் என்பது அமெரிக்க படங்களுக்கு, அமெரிக்கர்களால் கொடுக்கப்படுவது. அதற்காக நாம் ஒன்றும் அலைய வேண்டியதில்லை என்றார். சரிதான் என்று எண்ணிக் கொண்டேன். [இப்போது கூட அவர் ரஹ்மானை பாராட்டும்போது கவனமாக வார்த்தைகளை உபயோகப்படுத்தியுள்ளார்]

ரஹ்மானுக்கு ஆஸ்கார் என்றவுடன் கூட சாதாரணமாகத்தான் ஒ! அப்படியா? என்றேன். சற்றே யோசித்துப் பார்த்தால், நான் சற்று பொறாமைப்படுவது எனக்கே தெரிந்தது. ராஜாவுக்கு கிடைக்கவில்லையே என்று சற்று அபத்தமாகக் கூட யோசித்தேன். ராஜாவின் தீவிர ரசிகனாகி விட்டபின், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்தான் மற்றவர்களை அணுகுகிறேன். ஆனாலும், ஏதாவது நான்கு நல்ல வார்த்தை சொல்ல வேண்டுமல்லவா? அதுதான் இந்த பதிவு.

ரஹ்மானிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம், அவர் படங்களை தேர்வு செய்வதுதான். அவர் இசையமைத்த படங்களை கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம். இசையைத் தவிர மற்றவையும் ஓரளவு ரசிக்கும்படி இருக்கும். இருந்தாலும் அவ்வப்போது தவறுவது சகஜம்தான். 'வண்டிச்சோலை சின்ராசு' முதல் 'சக்கரக்கட்டி' வரை அது நடந்துள்ளது. இருந்தாலும் இது ரஹ்மானின் மிகப் பெரிய பலம்.

அது மட்டுமன்றி அவரின் பெருவாரியான படங்கள் தேசப் பற்றை மையமாகக் கொண்டவை. தனது பங்கை ரஹ்மான் அவற்றில் சரியாக செய்திருப்பார். ராஜாவுக்கு அது போல கிடைத்தவை குறைவுதான். 'சிறைச்சாலை' போன்றவற்றில் நன்றாக செய்திருந்தாலும், இன்னும் செய்திருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.

ராஜாவின் பலம், பலவீனம் இரண்டுமே அவர் தேர்வு செய்யும் படங்கள்தான். அவரின் ஆரம்ப காலம் முதல், 2000த்தின் இறுதி வரை, அவர் இசையமைத்த பாடங்களில் பாதிக்கு மேல் அவரின் இசைக்காக மட்டுமே அறியப்படுபவை. அவரின் பல நல்ல பாடல்கள் இது போல அறியப்படாத பாடங்களில் உள்ளன. 'புதுப்பாட்டு' என்ற ராமராஜன் படத்தில், 'நேத்து ஒருத்த ஒருத்தர் பாத்தோம்' என்ற ஒரு அட்டகாசமான பாடல். எனது நண்பன், [ரஹ்மானின் வெறியன்] அவனுக்கும் பிடித்த பாடல். அந்த பாடலை ஒரே ஒரு முறை பார்த்தோம். நானே கலங்கிப் போய் விட்டேன். இதே போல நிறைய பாடல்கள். ராஜா இசைதான். ஆனால், என்ன படம், யார் நடித்தது என்று தெரியாது. ராஜா மட்டும்தான் தெரிவார். அதுதான் ராஜா.

நேரம். வருடத்திற்கு ஓரிரு படங்கள் மட்டும் வரும்போது, எதிர் பார்ப்புகள் கூடும். ரஹ்மான் அதை சரியாக செய்தார். இன்னும் சொல்ல வேண்டுமானால், அந்த எதிர் பார்ப்புகளை சரியாக பூர்த்தி செய்தார். ஆரம்ப வருடங்களில் சறுக்கினாலும், பின் சுதாரித்து விட்டார்.

ராஜாவோ, எதை எடுப்பது, எதை விடுப்பது என்று தெரியாத அளவுக்கு அள்ளிக் கொடுத்து விடுகிறார். ஒருவேளை, ராஜாவுக்கு 34 வயதில் கிடைத்த முதல் வாய்ப்பு, ரஹ்மான் போல 25 வயதிலேயே கிடைத்திருந்தால், இன்னும் பல அருமையான பாடல்கள் கிடைத்திருக்கும். அவற்றில் பாதிக்கு மேல், ஒரு குறிப்பிட்ட மக்களுக்குள்ளேயே அடங்கியிருக்கும். அதாவது ராஜாவின் தீவிர ரசிகர்கள். ராஜாவின் சமீப கால பாடங்களில் கூட, தனம், அஜந்தா மற்றும் மது போன்றவை தீவிர ரசிகர்களால் மட்டுமே ரசிக்கப்பட்டன.

இப்போது கூட, பாடல்களை ரி-மிக்ஸ் செய்வதற்கு பதில், 'சுப்ரமணியபுரம்' போல நேரடியாக பயன்படுத்தலாம். படமும் வெற்றியடையும். பாடல்களும் அனைவரையும் சென்றடையும். முன்பெல்லாம், சன் மியுசிக்கில், குறிப்பாக இசையருவி ஆரம்பிக்கப்பட்ட புதிதில், 'தனிக்காட்டு ராஜா' படத்தில் வரும் 'நான்தான் டாப்பு' பாடல் அடிக்கடி வரும். எனது நண்பர்கள், அதை தேடி எடுத்து, இன்னும் ரிங் டோனாக வைத்துள்ளனர்.

பின்னணி இசை. ராஜாவின் சிறப்பு, நாம் கண்ணை மூடிக்கொண்டாலும், காட்சிகள் கண் முன் விரியும். பெரும்பாலும், படத்திற்கான தீம் ஒன்று, மற்றபடி காட்சிகளுக்கேத்தான் அவர் இசை இருக்கும். பாத்திரத்துக்கென்று தனி இசை எனக்கு தெரிந்து குறைவுதான். அவரிம் பின்னணி இசைத் தொகுப்பை நிறைய வைத்துள்ளவன்/கேட்டுள்ளவன் என்ற முறையில் சொல்கிறேன்.

ரஹ்மானின் பின்னணி இசையில், படத்திற்கென்று ஒரு தீம் இருக்கும், அந்த கதாநாயகனுக்கும் ஒரு தீம் இருக்கும். அவை தனியே கேட்டாலும் அருமையாக இருக்கும். ஜென்டில்மேன் முதல் சிவாஜி வரை தொடர்கிறது. இவையாவும் எனது நண்பர்களுக்கான ரிங் டோன்.

இயக்குனர்களை இயக்கம் விதம். ரொம்ப நாள் முன் படித்த செய்தி. ரஹ்மானைப் பற்றி. மணி ரத்னம், ஷங்கர் மற்றும் ஹிந்தியில் சுபாஷ் கை போன்றோர்க்கு மட்டும் ரஹ்மானே உடன் அமர்ந்து, மெட்டமைத்து, திருப்தி இல்லையெனில் புது மெட்டு அமைப்பாராம். கதிர், பிரவீன் காந்த் போன்றோர்க்கு, தான் போட்டு வைத்துள்ள மெட்டுக்கள் அமைந்த குறுந்தகடை கொடுப்பாராம். அவர்கள் தேர்ந்தெடுக்கும் மெட்டுக்களுக்கு, இசையமைப்பாராம். எப்போதாவது வருபவர்களுக்கு, ஹிந்தி பாடல்கள். 'தெனாலி' படத்திற்கு முதலில் ஹிந்தி பாடல்களைத்தான் கொடுத்தாராம். கமலே நேரடியாக வந்து, பேசி புது மெட்டுக்கள் வாங்கியதாக வதந்தி. இவை உண்மையா, இல்லையா என்பது தேவையில்லை. ஆனால், ரஹ்மான் தனது திறமையை வெளிக்காட்டுவது மணி, ஷங்கர் படங்களில்தான் என்பது என் எண்ணம்.

ராஜாவும் கிட்டத்தட்ட அப்படித்தான் என நினைக்கிறேன். புது இயக்குனர்கள் கதை சொல்லும்போது, அவரே இந்தந்த இடங்களில் பாடல்கள் வைக்கலாம் என்பாராம். அவர் என்ன செய்வார்? சரியென்று சொல்ல வேண்டியதுதான். அவர் நினைத்தது எப்படியோ? வசந்த், கதிர் போன்றோர் அதனால்தான் தமது முதல் படங்களுக்குப் பின் ராஜாவை பயன்படுத்திக்கொள்ளவில்லை என நான் நினைக்கிறேன்.

நவீன தொழில் நுட்பங்கள். அவரின் ஆரம்பகால படங்கள் வெளிவந்த போது, என் வீட்டில் இருந்ததோ ஒரு ஓட்டை ரேடியோ. அதில் பாட்டு ஓடுகிறது என்பதை கண்டு பிடிப்பதே பெரிய விஷயம். அதனால், இசை நுட்பங்கள் புரியவில்லை. ஆனால், ராஜாவின் பாடல்களுக்கு, அந்த நுட்பம் தேவைப்படவில்லை. ஆனால், தெரிந்த பின், துல்லியமான இசையை சேர்த்து அனுபவிக்க முடிந்தது.

மெல்லிசை மன்னர் காலத்துப் பாடல்களில், வரிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ராஜாவின் காலத்தில், இசையாக மட்டுமே பெரும்பாலும் ரசிக்கப்பட்டது. அவரின் நிறைய பாடல்களுக்கு அர்த்தம் அறிந்தால், 'சீச்சீ' என்றாகி விடும். 'மன்றம் வந்த தென்றலுக்கு' பாடலின் அர்த்தம் புரிந்த நண்பன், கடைசியா 'அங்கதான்' வராங்களா என்றான். அதே போல 'சிந்திய வெண்மணி' பாடல். இவை யாவும் 'இல்லை மறை காய் மறை' போல. இனிய இசையில் மறைந்துவிட்டன. ரஹ்மான் இசையில், பெரும்பாலும் இசையே ஆக்கிரமித்தது போல தோன்றும். விதி விலக்கும் உண்டு. வித்தியாசமான பாடகர்களும் பாடுவது நன்றாக இருக்கும். ஆனாலும், ஒரு சில பாடல்கள்.. குறிப்பாக 'ரட்சகன்' படத்தில் வரும் 'லக்கி லக்கி' பாடலை சுக்விந்தர் சிங்கும், பாலுவும் பாடியிருப்பார். படத்தில், பாடல் காட்சியில் நடித்தவர்கள் நாகார்ஜுனாவும், பாலுவும். சுக்விந்தர் குரலுக்கு பாலுவும், பாலு குரலுக்கு நாகார்ஜுனாவும் நடித்திருப்பார். அது சற்றே ஒரு மாதிரி இருக்கும். ஆனால், சமீபத்தில் பாலு அதைப் பற்றி புகழ்ந்து பேசினார். ஆனாலும், பாடல் அருமை.

என்னதான், சால்ஜாப்பு சொன்னாலும், இதுவரை நம்மவர்கள் செய்யாததை, முதல் முறையாக அடைந்ததில் நாம் அனைவரும் கண்டிப்பாக பெருமை கொள்ள வேண்டும். இது வெறும் ஆரம்பம்தான். இனி வரும் கால கட்டங்களில், ரஹ்மானும் நிறைய விருதுகளை வாங்க வேண்டும். நம்மவர்களில் திரையுள்ள மற்றவர்களும் ரஹ்மான் சொன்னது போல, நிறைய வாய்ப்புகள் பெற்று ஆஸ்கார் விருதை, நம்ம ஊர் கலைமாமணி போல ஆக்க வேண்டும் என்று கூறி, இத்துடன் எனது பதிவை முடித்துக் கொள்கிறேன்.

                                                      "ஜெய் ஹோ ரஹ்மான்"

டிஸ்கி : எனக்கு ரஹ்மானை பற்றி பேசும்போது எப்படியாவது ராஜாவைப் பற்றி பேசுவேன். முடிந்த அளவு நன்றாக எழுதியுள்ளதாகவே எண்ணுகிறேன். தவறென்றால் சுட்டிக்காட்டவும். தயவு செய்து சண்டை வேண்டாம். ஏனென்றால், 'நான் அந்தளவுக்கெல்லாம் வொர்த் இல்லப்பா!'