Monday, December 28, 2020

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்!

குளிக்கும்போது நெறைய எழுதணும்னு தோணுது, ஆனா எழுதணும்னு ஒக்காந்தா, அந்த எழுத்துதான், வார்த்தை வர மாட்டேங்குது. "குளித்து முடிக்கையில் பதிவு கொட்டுது, அதை அடிக்க நினைக்கையில் மனைவி திட்டுது" (அதே இசையில் பாடிக் கொள்ளவும்). 

ஒரு வேளை, அவர்கள் ஊரிலும், நான் இங்கேயும் மாட்டி இருந்தால், நிலைமை வேறு மாதிரி ஆகி இருக்கும். பதிவுகளாக போட்டு தள்ளி இருப்பேன். ஆனால் நடந்ததே வேறு. 'சாதா குமார்' இப்போது 'கொரோனா குமார்' ஆகி விட்டதாலும், வேலையும், வீட்டு வேலையாக, மன்னிக்கவும் வீட்டிலிருந்து வேலை என்று மாறிவிட்டதாலும், ஊருக்கே வந்து விட்டோம். 

இதுவும் ஒரு வகையில் நன்றாகவே இருக்கிறது. ஊரில் சரியாக சிக்னல் வேறு கிடைக்கவில்லை. இருந்தாலும் அப்படி இப்படி என்று சமாளித்து 3 மாதங்களும் ஓடி விட்டது. இதோ தீபாவளி முடிந்து, சொந்தக்காரன் கல்யாணம் முடிந்து, கார்த்திகை தீபம் முடிந்து, இப்போது பொங்கல் முடிந்து என்று போய்க் கொண்டிருக்கிறது. அதன் பிறகு தைப்பூசம், பங்குனி உத்திரம், சித்திரை 1 என்று போகப்போகிறதோ என்னவோ. பார்ப்போம். 

சென்னையில் இருந்தவரை முகப்புத்தகத்திலேயே மூழ்கி இருப்பேன். அதுவும் மருத்துவமனையில் இருந்த சமயத்தில் எல்லாம் மிக அதிகம். சாதாரணமாக யோசித்தால் கூட சங்கி, ஆன்டி இந்தியன், கிருப கிருப என்றுதான் தோன்றும். சில பதிவுகளைப் பார்த்தால் எரிச்சல் வரும். உடனே எதிர் வினையாற்ற தோன்றும். பல நண்பர்கள் எதிரிகள் போல தோன்ற ஆரம்பித்து விட்டார்கள். நிறைய நண்பர்கள் இருப்பதால் நீக்கவும் மனம் வரவில்லை. 

முதலில் அலைபேசியில் இருந்து செயலியை நீக்கினேன். பின் உலவியில் சென்று கடவுச்சொல்லை மாற்றி விட்டேன். 10 நாள் பல்லைக் கடித்துக் கொண்டு ஓட்டி விட்டேன். பின் தோன்றும் போதெல்லாம் உல் நுழைய நினைத்தால், கடவுச்சொல் மறந்து விட்டேன் என்று போவேன், பிறகு வேண்டாம் என்று விடுவேன். இப்போதெல்லாம் தோன்றுவதே இல்லை. தேவைப்பட்டால் செய்திகள் மட்டும் படிப்பேன். 

விமர்சனம்: 

இங்கு வந்தபிறகு படம் பார்ப்பதையே நிறுத்தி விட்டாயிற்று. தினமும் நெடுந்தொடர்தான். ஓடவும் முடியவில்லை, ஒளியவும் முடியவில்லை. (நல்லவேளையாக இங்கு யாரும் அதை பார்ப்பதில்லை). முன்பு ஒரு காலத்தில் சன் டிவி பார்க்காமல் இருந்ததே கிடையாது. ஆனால், இப்போது சன் டிவி பார்த்தே பல வருடங்கள் ஓடி விட்டன. இங்கோ சன், விஜய், ஜீ தமிழ் என்று எதை எடுத்தாலும், அடுத்தவனை எப்படி அழிப்பது என்ற நாடகம்தான்.


"அதுல பாருங்க. எம் பொண்டாட்டி இருக்காளே, அவ கிட்ட இந்த மாதிரி நாடகம் எல்லாம் பாக்காதடி அப்டின்னா,படத்திலயும் அப்டித்தான் இருக்குன்னு சொல்றா. அடியேய். படம் 3 மணி நேரத்துல முடிஞ்சுறும், ஆனா, இந்த கருமத்துல தெனம் தெனம் நீங்க அடுத்து என்னவாகும்னு நீங்க பாக்கணும்னு உங்கள உசுப்பேத்துறாங்க அப்டினா, நம்பவே மாட்டேங்குறா. அதிலயும் இந்த வயசான பெருசுங்க தொல்லையத்தான் தாங்க முடியல. கண்ணு, கொஞ்ச நேரம் வைப்பா. அந்த கடன்காரிக்கு என்னதான் ஆச்சுன்னு பாக்கணும். அந்தப்புள்ளய பாவம் இவ்வளவு கொடுமைப்படுத்தறாங்க" என்றெல்லாம் புலம்பல். 

இதில் இன்னும் கொடுமை என்னவென்றால், நமக்கு பிடித்த பாடல்களை எல்லாம் கொலை செய்கிறார்கள். படங்களில் இருந்து பின்னணி இசையை அப்படியே அடித்து விடுவது, அட அது கூட பரவாயில்லை. இப்போதெல்லாம், காட்சிகளை எல்லாம் கூட சுடுகிறார்கள். முன்பே அப்படித்தானே என்பவர்களுக்கு, அப்போது கூட நிறைய பேருக்கு தெரியாது. இப்போது எல்லாம் ஒரு சந்தேகம் வந்தால், இரண்டு நிமிடங்களில் அது என்ன, எங்கே வந்தது என்று தெரிந்து விடும். இருந்து எப்படி இப்படி செய்கிறார்கள். ஏன் யாருமே கண்டு கொள்வதில்லை என்றும் தெரியவில்லை. இதில் தலைப்பு வேறு. சரி அந்தக் கொடுமையை விடுங்க.

அந்தகாரம்: கொஞ்சம் இழுவையாக இருந்தாலும் ஒரு நல்ல பேய்ப் படம். யாவரும் நலம், டிமாண்டி காலனி போல தேவையில்லாமல் எல்லாம் பயமுறுத்தாமல், அதே போல கேவலமாக பேய் என்று யாரையும் காண்பிக்காமல், ஆனாலும் ஒரு வித பயமுறுத்தலுடனே சென்றது.


சூரரைப் போற்று: பரவாயில்லை. உண்மையில் சுய சரிதை படம் என்பதால் மொக்கையாகத்தான் இருக்கும் என நினைத்தேன். ஆனால், அதற்கு மாறாக நன்றாகவே இருந்தது. என்னடா தோத்துக்கிட்டே இருக்கானே என்று கொஞ்சம் கடுப்படித்தாலும் பரவாயில்லை ரகம்.


புத்தம் புது காலை & பாவக்கதைகள்:
நீ மட்டும்தான் மொக்கை பண்ணுவியா, நானும்தாண்டா என்று அமேசானும், நெட்பிளிக்ஸ்ம் சேர்ந்து பாடு படுத்திய படங்கள். ஊரில், செல்பேசியில் அளந்து அளந்து டேட்டாவை சேர்த்து படத்தை தரவிறக்கினால், இப்படி செய்தால் அப்புறம் கடுப்பாகுமா ஆகாதா. 

மற்றபடி லாக்கப், மூக்குத்தி அம்மன், க/பெ ரணசிங்கம் எல்லாம் ஒரு முறை பார்க்கலாம். 

எப்படியோ 2020 முடிந்து விட்டது. 2021 நல்லபடியாக இருக்கும் என்று எண்ணுவோம். கண்டிப்பாக அடுத்த வருடம் மாதமொரு பதிவு என்று மீண்டும் சபதம்..அய்யய்யோ விட்ருங்க. 

Sunday, August 2, 2020

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்!

குளிக்கும்போது நெறைய எழுதணும்னு தோணுது, ஆனா எழுதணும்னு ஒக்காந்தா, அந்த எழுத்துதான், வார்த்தை வர மாட்டேங்குது. "குளித்து முடிக்கையில் பதிவு கொட்டுது, அதை அடிக்க நினைக்கையில் மனைவி திட்டுது" (அதே இசையில் பாடிக் கொள்ளவும்). ஒரு வேளை, அவர்கள் ஊரிலும், நான் இங்கேயும் மாட்டி இருந்தால், நிலைமை வேறு மாதிரி ஆகி இருக்கும். பதிவுகளாக போட்டு தள்ளி இருப்பேன். 

இங்கேயே இருப்பதால், "எப்ப பாரு, வீட்டுல இருந்து வேலை பாக்கறேன்னு லேப் டாப், அப்புறம் எதுக்கு பிளாக் எழுதறேன்னு தனியா, கண்ணு வலிக்காது" என்று பிடுங்கி வைத்து விடுகின்றனர். பார்க்க வேண்டிய படங்கள், தொடர்கள் நீண்டு கொண்டே போகின்றன, குட்டி இளவரசி வேறு இருப்பதால், அவளும் பார்ப்பது போன்ற படங்களை தேர்வு செய்ய வேண்டி உள்ளது. அப்படி எதுவுமே இப்போது வருவதில்லை என்பது வேறு விஷயம். 

மகள் வேறு இப்போது பேய்ப் படங்களுக்கு பயப்படுவதால், அவற்றை பார்ப்பதையும் நிறுத்தி விட்டோம். அவள் வேறு அவளுக்கு பிடித்த கார்ட்டூன் படங்களை பார்க்க ஆரம்பித்து விட்டதால், நமக்கான நேரம் குறைந்து விட்டது. அதே போல நல்ல படங்கள் என்பதையெல்லாம் பார்த்தாகவே உள்ளது. OTTயில் வந்த பெண்குயின், பொன்மகள் வந்தாள், டேனி, காக்டைல் எல்லாமே மொக்கை. அவ்வளவுதான். 

கொரோனா:

அங்கே சுற்றி, இங்கே சுற்றி கடைசியாக எனக்கே வந்து விட்டது. எங்கே போனாலும், முகமூடி அணிந்துதான் சென்றேன். எங்கே போனாலும், கையை கழுவி விட்டு சென்றும் வந்து விட்டது. காய்ச்சல் வந்தது. மாத்திரை போட்டால் சரியானது, ஆனால், மீண்டும் மீண்டும் வந்தது. 4 நாட்கள் பார்த்து விட்டு, எதற்கு வம்பு என்று போய் சோதித்துப் பார்த்ததில் கொரோனா என்று உறுதி ஆகி விட்டது.

எங்களது அடுக்கு மாடி குடியிருப்பில் நான் மூன்றாவது ஆள். அதன் பிறகு சடசடவென ஏறி 10 பேருக்கு மேல் வந்து விட்டது. இப்போது யாருக்கும் இல்லை. மருத்துவமனை சென்ற எல்லோருமே மீண்டு வந்து விட்டனர். உள்ளேயும் நிறைய நடவடிக்கைகள் எடுத்து (முகமூடி கட்டாயம். மக்களோ, குழந்தைகளோ விளையாட தடை. உள்ளேயே உள்ள மாளிகைக்கு கடையில் ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கு மேல் இருக்கக் கூடாது. கடையிலும் முடிந்த அளவு வீட்டுக்கு பொருட்களை அனுப்ப சொல்லி விட்டனர்) பரவுவதை தடுத்து விட்டனர். அதே போல எந்தெந்த வீடுகளில் வைத்ததோ அந்த தளங்களை தினமும் இரு முறை சுத்தம் செய்தனர்.  

முதலில் எல்லோரும் சொல்கிறார்களே என்று பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சேர்ந்து விட்டேன். அப்போதுதான் சொன்னார்கள், ஒரு நாளைக்கு குறைந்தது ஐம்பதாயிரம் என்று. இருந்தாலும் பரவாயில்லை என்று வீட்டில் சொன்னதால், 4 நாட்கள் இருந்தேன். ஒன்றும் தேறவில்லை. 

பிறகு தெரிந்த மருத்துவர் "தயவு செய்து அரசு மருத்துவமனைக்கு சென்று விடுங்கள்" என்றார். அவரே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பேசி ஏற்பாடுகள் செய்து, 4 நாட்களுக்கு பிறகு அங்கே சென்று சேர்ந்தேன். உண்மையில் ஒரு சில குறைகள் இருந்தாலும் (சாப்பாடு சரியில்லை, கீழ்நிலை பணியாளர்கள் பணம் கொடுத்தால் மட்டுமே வேலை செய்கிறார்கள், அதே போல உடன் ஒருவர் இருந்தால் மட்டுமே நம்மால் ஓய்வு எடுக்க முடிகிறது) உண்மையில் நல்ல கவனிப்பு. ஒரு சில தாமதங்கள் இருந்தாலும், இறுதியாக 'இல்லை' என்று முடிவு வந்த பிறகே அனுப்பினார்கள். 

இரண்டு வாரங்கள் ஆகிறது வீட்டிற்கு வந்து. நுரையீரலில் பாதிப்பு உள்ளதால், கண்டிப்பாக ஒரு மாதமாவது ஓய்வு எடுத்தாக வேண்டும் என்று சொல்லி விட்டனர். வேலையும் வீட்டில் இருந்தே என்பதால், வெளியே போக வேண்டிய பிரச்சினை இல்லை. வீட்டில் மனைவிக்கும், மக்களுக்கும் சோதித்ததில் அவர்களுக்கு இல்லை என்று உறுதி ஆகி விட்டது. அவர்களும் நான் இல்லாத நேரத்தில் எல்லா பொருட்களும் வீட்டிற்கே வருமாறு செய்தாகி விட்டது. இப்போதும் அதே தொடர்கிறது. என்ன வீட்டில் எந்த சிறு வேலையும் செய்ய விட மாட்டேன் என்கிறார்கள். சும்மாவே இருப்பது மிகவும் கடினம் என்று வடிவேலு சொன்னதன் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது. 

மக்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அரசு மருத்துவமனையில் நன்றாக வந்த ஆட்கள் மரணத்தை தழுவியதை நேரில் பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன். வேறு பல உடல் பிரச்சினைகள் இருப்பவர்கள் என்றால், மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எனக்கே நடுவில் பயம் வந்து விட்டது. 30 முதல் 40 வயதிற்குள் இருப்பவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு அதிகமாக வருகிறது என்று அங்கிருந்த மருத்துவர்கள் சொன்னார்கள். நானும் அதில் ஒருவன். நல்லதோ கெட்டதோ அனைவரும் மிக கவனமாக இருக்கவும். 

இனியாவது மாதம் ஒரு பதிவு போடுவேன் என்று 391645ஆவது முறையாக சபதம் எடுத்துக் கொண்டு, மீண்டும் சந்திப்போம்.  

Sunday, April 26, 2020

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்!

அனைவருக்கும் வணக்கம். வழக்கம் போல சோம்பேறித்தனம்தான். அதுவும் இந்த வீட்டு சிறை ஆரம்பித்த பிறகு, வீட்டம்மாவும், குட்டி இளவரசியும் கூடவே இருப்பதால், "எங்களை விட இதுதான் முக்கியமா". என்று எப்போது எடுத்தாலும் கேள்வி கேட்பதால், இந்த நேரத்தில் கூட பதிவு போட முடியவில்லை. இருந்தாலும், அப்படியெல்லாம் விட முடியாதுல்ல. அதான். 

கொரோனா:

2 மாதங்களுக்கு முன்பு, அலுவலகத்தில் இருந்து "எப்படி முன்னேத்தலாம், முன்னேறலாம்" என்று கிழக்கு கடற்கரை சாலையில் 4 நாட்கள் ரூம் போட்டு யோசித்தோம். அப்போது "ஏதோ இந்த சீனாவுல கொரோனான்னு நோய் வந்துருக்காம். அதனால, அங்க இருந்து யாரும் இங்க வரல. பயப்படாதீங்க. நமக்கு அதனால எதுவும் லாபம் இருக்குமா" என்றெல்லாம் பேசினார்கள். கடைசியாக "நமக்கெல்லாம் வராதுப்பா" என்று சொன்னார்கள். 

எண்ணி ஒரு மண்டலத்தில் (48 நாட்கள்), வீட்டில் உட்கார வைத்து விட்டது. இந்த வீட்டில் இருந்து வேலை செய்வது (WFH - Work From Home) என்பது மிகவும் சந்தோசமான விஷயம் என்று எண்ணிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம், இப்போது தங்களின் கருத்தை மாற்றிக்கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன், நான் உட்பட. 

"முன்னாடி கூட, வீட்டுக்கு வந்துட்டா ஏதோ கொஞ்ச நேரம் போன் மட்டும்தான் பேசுவீங்க. இப்ப என்னடான்னா, எப்ப பாத்தாலும், போன், லேப்டாப், என்னைய கண்டுக்கவே மாட்டேங்கிறீங்க. வீட்டுல இருந்து வேல பாக்க சொன்னா, எப்ப பாத்தாலும் வேல மட்டும்தானா" என்றெல்லாம் வீட்டில் திட்டு. திட்டுவது வீட்டம்மா இல்லை, குட்டி இளவரசி. அவளை சமாளிப்பது ஒரு பெரிய வேலையாக உள்ளது. அதிலும் நான் பேசுவதையெல்லாம் கேட்டு விட்டு, "இதுதான் உங்க வேலையா" என்று கிண்டல் வேறு. அதை சமாளிப்பதுதான் பெரும் பிரச்சினையாக உள்ளது. 

எங்களுக்கு முதன்மையான பணி வருவது இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளில் இருந்து. அங்கேயே நிலைமை படு மோசம். எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும், அதை அப்படியே நிறுத்தவும் என்று சொல்லி விட்டார்கள். எனவே கொஞ்சம் வேலை, கொஞ்சம் விளையாட்டு என்று சமாளிக்கிறோம். 

மளிகை, காய்கறிகள் பிரச்சினை இல்லை. அதே போல ரொம்பவெல்லாம் அலையாமல் இருப்பதை வைத்து சமாளித்துக் கொள்கிறோம். நாக்கைக் கட்டுப்படுத்திக்கொண்டு இருந்தாலே, இன்னும் 2 மாதம் கூட சமாளிக்கலாம் போல. 

ஒரே பிரச்சினை என்னவென்றால், மக்கள் ஒன்று மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். அல்லது மிகவும் பயப்படுகிறார்கள். கொஞ்ச வருடங்களுக்கு முன், இந்தோனேஷியாவில் பூகம்பம் வந்தது, உடனே நம்மூரில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. நம்மூரில் கூட அந்த அதிர்வு இருந்தது. நம்மாட்கள் என்ன செய்தார்கள். உடனே கும்பல் கும்பலாக கிளம்பி கடற்கரைக்கு போய் விட்டார்கள். அதிலும் ஒரு ஆள், "சார், சுனாமி வருதுன்னு சொன்னாங்க, நானும் குடும்பத்தோடு பாக்கலாம்னு வந்தேன். ஆனா சுனாமி வரல" என்று சோகமாக சொல்கிறார். 

இப்போது கூட தெரிந்த ஆட்கள் எல்லாம் வெளியே சுற்றுகிறார்கள். கேட்டால், யார் யார் வெளியே சுற்றுகிறார்கள் என்று பார்த்தார்களாம். "அவர்களும் உங்களை மாதிரியே வந்திருக்கலாமே" என்றால், "இல்லீங்க, அவங்க வேணும்னே வந்து சுத்துறாங்க" என்கிறார். சரிதான் என்று எண்ணிக்கொண்டேன். 

எங்களது அடுக்குமாடி குடியிருப்பில் நிறைய பஞ்சாயத்துகள். "எனக்கு சமைக்க ஆள் வரணும், என் குழந்தைய பாத்துக்க ஆயாவை விடணும், என் மாமா வீடு இங்க பக்கத்துல இருக்கு. நான் அங்கேயும் போவேன், இங்கேயும் வருவேன்" என்றெல்லாம் நிறைய விதமான கோரிக்கைகள். அடப்போங்கய்யா என்றாகி விட்டது. 

அதிலும், இந்த 4 நாட்கள் முழு ஊரடங்கிற்கு, எதற்காக சொன்னார்களோ, அதுவே ஆப்பாகி விட்டது. விளைவுகள் இன்னும் 4 முதல் 14 நாட்களில் தெரியும் என்று நினைக்கிறேன். நானும்தான் வெளியே போய் வாங்கினேன். அந்த எல்லாரும் என்ன செய்யறாங்க அப்படின்னு பாத்த ஆளு. ம்ம். 

திரை விமர்சனம்:

போன பதிவிற்கு பின் திரையரங்கம் எதுவும் செல்லவில்லை. எல்லாமே வீட்டில்தான். தர்பார், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஓ மை கடவுளே என்று எல்லாமே OTTயில்தான். Netflix கூட 4 நண்பர்கள் சேர்ந்து சந்தா கட்டி பயன்படுத்துகிறோம். மாதம் 200 ருபாய் மட்டும்தான். இப்போது ஹாட்ஸ்டார் உடன் டிஸ்னி வேறு வருவதால் மக்களுக்கும் ஓகே. அதில் VIP. sunNXT தேவைப்படும்போது மட்டும். மொத்தத்தில் மாதம் அதிகபட்சம் 400 மட்டுமே ஆகிறது. எப்போதோ DTH எல்லாம் எப்போதோ தூக்கி பரணில் போட்டு விட்டோம். ஆனாலும், எந்த படமும் அவ்வளவாக மனதை ஈர்க்கவில்லை. 

ரமணி vs ரமணி சீசன் 2:

ரொம்ப நாள் முன்பு ரமணி vs ரமணி சீசன் 1 பற்றி எழுதி இருந்தேன். அது ஒளிபரப்படும்போது முழுவதும் பார்த்த நினைவு இருந்தது. மீண்டும் 8 வருடம் முன்பு பார்த்தபோது, அப்போது புதிதாக திருமணம் ஆயிருந்ததால், நன்றாக இருந்தது. சீசன் 2 அப்போது ஏனோ பிடிக்கவில்லை. அது மட்டுமின்றி அது ராஜ் டிவியில் ஒளிபரப்பப்பட்டது.


அப்போது நாமக்கல் பள்ளிக்கு சென்று விட்டதால், அவ்வளவாக பார்த்த நினைவும் இல்லை. ஆனால், இப்போது 7 வயது பெண் குழந்தையுடன் அதைப் பார்க்கும்போது, சீசன் 2 தான் ரொம்ப நன்றாக இருக்கிறது. ஏனென்றால், அனுபவம்தான். 

நாகாவின் தொடர்கள் மிக அருமையாக இருக்கும். மர்ம தேசம் தொடர்களில் நடித்தவர்களை அப்படியே வேறு பரிமாணத்தில் இந்த தொடர்களில் காட்டி இருப்பார். சீசன் 1ல், வாசுகி. மர்ம தேசம் தொடரில் கிராமத்துப் பெண்ணாக வந்தவர் இதில் விளம்பர நிறுவனம் நடத்துபவர். சீசன் 2ல், தேவதர்ஷினி. விடாது கருப்பு தொடரில் மருத்துவம் படித்த, நவ நாகரிக பெண், இதில், குடும்ப தலைவி. அப்போது பார்க்கும்போது கூட, குழப்பம் வரவில்லை. 

என்ன, பழைய வேலைக்காரிகள் ஜோக், கீழ்த்தட்டு மக்களை (மட்டும்) கொஞ்சம் கேவலமாக காட்டி இருப்பது என சில குறைகள். இருந்தாலும், எந்த காலத்திற்கும் பொருந்தும் வகையில் இருப்பதே வெற்றிதான். இப்போது கவிதாலயா மீண்டும் யூடியூபில் ஏற்றி உள்ளார்கள். பார்த்து ரசியுங்கள். 

ரமணி vs ரமணி சீசன் 1 
ரமணி vs ரமணி சீசன் 2 

Sunday, December 22, 2019

வருடக் கடைசி விமர்சனங்கள்!

அப்பப்பா.. ஒரு பதிவு போடலாம் என்பதற்குள், முடியவில்லை. சரி. சட்டு புட்டென்று பதிவிற்கு போய் விடுவோம். 

மகளுக்காக The Lion King, Frozen 2 என்று அடிக்கடி திரையரங்கம் செல்வதால், பெரியவர்களுக்கான படங்களை இப்போதெல்லாம் வீட்டிலேயே பார்த்து விடுகிறோம். அதுதான் புதுப் படங்கள் அனைத்தும் அதிகபட்சம் 30 நாட்களில் OTTயில் வந்து விடுகிறதே. நாங்கள் எப்போதோ கேபிள் இணைப்பை துண்டித்து விட்டோம். இன்னும் குறிப்பாக சொன்னால், எப்போது உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்யுங்கள் என்று சொன்னார்களோ, அப்போதே அதை தலை முழுகி விட்டோம். 

Amazon Prime, ஹாட்ஸ்டார், Zee5 இவை போதும் போதும் எனும் அளவிற்கு படங்களைக் கொடுக்கின்றன. Netflix மட்டும் இன்னும் கொஞ்சம் விலையைக் குறைத்தால் பரவாயில்லை. 199 ரூபாயில், நம்மால் TVயில் பார்க்க முடியாது என்பது பெரும் குறை. கொஞ்சம் மனது வைக்கவும். 

தம்பி: 

மகளுக்காக அல்லாமல், எங்களுக்காகவும் போய்ப் பார்த்தோம். அருமையான family thriller படம். 15 வருடங்களுக்கு முன் காணாமல் போன மகன், திடீரென கிடைக்கிறான், ஆனால், அவனாலும், அவனுக்கும் ஏற்படும் பிரச்சினைகள், யாரால் ஏற்படுகின்றன, எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் படம். 


முதல் பாதி கொஞ்சம் மொக்கையாகஇருந்தாலும், இரண்டாம் பாதியில் அதை சமாளித்து விடுகிறார்கள். படத்தில் நகைச்சுவை குறைவென்றாலும், கடைசி காட்சியில் கார்த்தி சொல்லும் வசனத்திற்கு திரையரங்கமே விழுந்து விழுந்து சிரித்தது. கிட்டத்தட்ட த்ரிஷ்யம் போலவே, குடும்பத்தை காப்பாற்ற என்ன வேண்டுமென்றாலும் செய்வதுதான் ஒரு வரி கதை. 

அசுரன்:


இதிலும் அதே போலத்தான். குடும்பத்தைக் காப்பாற்ற என்ன வேண்டுமானாலும் செய்யும் நாயகன். ஆனாலும் அதில் பஞ்சமி நிலம், சாதி வெறி, நிலம் என்று கலந்து செவிட்டில் அடித்தாற் போல சொல்லி உள்ளார்கள். பூமணியின் வெக்கை கதையை பல வருடங்களுக்கு முன்னாள், எங்கேயோ நூலகத்தில் படித்த ஞாபகம். படம் பார்க்கும்போது எதுவும் நினைவுக்கு வரவில்லை. தவற விடக்கூடாத படம். 

கைதி:


நம்பவே முடியாத ஒரு வரி கதையை (எல்லா பெரிய அதிகாரிகளும் ஓரிடத்தில் கூடுவது, கமிஷனர் அலுவலகத்தில் எந்த காவலரும் இல்லாமல் இருப்பது) எடுத்து, அதை வெற்றிக்கரமாக படமாக்கி உள்ளார்கள். அதிரடிக்காட்சிகள், பாடல்களோ, நாயகியோ இல்லாதது மிகப்பெரும் பலம். அடுத்து பின்னணி இசை. இதுவும் தவற விடக்கூடாது படம்தான். 

Badhaai Ho (ஹிந்தி): 

ஒரு ஜெயகாந்தனின் சிறுகதை. தலைப்பு நினைவில் இல்லை. காதல் பிரச்சினையில் (என்றுதான் நினைக்கிறேன்) வீட்டை விட்டு வெளியே போன மகன், மீண்டும் வீட்டிற்கு வருகிறான். எல்லோரும் அவனையும் அவன் அம்மாவையும் சேர்த்து திட்டுகிறார்கள். என்னவென்று பார்த்தல், அவனது அம்மா கர்ப்பமாக இருக்கிறார். "மருமகளும் மாமியாரும் ஒண்ணா புள்ள பெத்துக்க போறாங்க" என்றெல்லாம் பேசுவார்கள். அந்த மகன் அம்மாவை தன்னுடன் அழைத்துக் கொண்டு செல்வார். 


இதே போல மலையாளத்திலும் ஒரு படம் வந்ததாக நினைவு. இதில் அதை அப்படியே நகைச்சுவையாக மாற்றி உள்ளனர். கல்யாண மகத்தில் மகன்கள் இருக்கும்போது, அம்மா கர்ப்பம் ஆகிறார். அதை மாமியார், மகன்கள், மகனின் காதலி, அவளது அம்மா, நண்பர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதுதான் படம். 

Article 15 (ஹிந்தி): 

அந்தாதுன் படம் பார்த்ததில் இருந்தே ஆயுஷ்மானின் விசிறி ஆகி விட்டேன். அதன் பிறகு பதாய் ஹோ. பிறகு இந்தப் படம். மூன்றும் மூன்று விதம். 


உத்தர பிரதேசத்தில் ஏதோ ஒரு கிராமத்தில், 2 சிறுமிகள் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கி இறந்து கிடக்கிறார்கள். அவர்கள் ஓரின சேர்க்கையாளர்கள் என்பதால், அவர்களின் பெற்றோர்களே அவர்களை கொன்று விட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. வெளிநாட்டில் படித்து, தந்தைக்காக காவல் துறையில் வேலை செய்யும் நாயகன், அதன் பின்புலத்தை ஆராய்கிறான். அதில் வரும் சாதி வெறி, வன்மம் எல்லாம், அசுரன் படம் போலவே முகத்தில் அறைகின்றன. 

இதை தமிழில் எடுக்கிறார்களாம். ஒரு காட்சியில், தனக்குக்கீழ் உள்ள காவலர்களிடம், "நீங்களும் அதே சாதிதான்" என்பான் நாயகன். "நாங்களும் கீழ் சாதிதான், ஆனா, அவங்களுக்கு மேல" என்பார் ஒருவர். அதிலும் ஒவ்வொருவரும் தான் இன்னின்ன சாதி என்பதை சொல்லும் காட்சி வேறு இருக்கும். தமிழில் "ஆண்ட சாதி" என்ற வார்த்தையையே வர விடாத ஆட்கள் நம்மாட்கள். பார்ப்போம். 

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.

Sunday, October 20, 2019

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்!

கடந்த சில மாதங்களாக அலுவலகத்தில் வேலை அதிகம், வீட்டிலும் வேலை என்று இருந்ததால் பதிவு போட முடியவில்லை என்று சொல்ல ஆசைதான். ஆனால், உண்மையில் பதிவு போட விருப்பம் இல்லை என்பதுதான் உண்மை. அப்பாடா என்கிறீர்களா.

இப்போதெல்லாம் படிப்பது மிகவும் குறைந்து விட்டது. நானே யோசித்துப் பார்க்கிறேன். கடைசியாக எப்போது புத்தகமாக வாங்கிப் படித்தேன் என்பதே எனக்கு நினைவில்லை. விகடன் கூட இணையத்தில்தான். இப்போது இணையத்தில் கூட எல்லாமே காணொளிக் காட்சிகளாக மட்டுமே மக்கள் ரசிக்கிறார்கள். நண்பர்கள் கூட விமர்சகராக மாற சொன்னார்கள். சரி சரி விடுங்கள்.

நான் விமர்சிக்கும் படங்கள் எல்லாம் அதற்குள் youtubeலேயே வந்து விடும். மற்ற எதையாவது படித்தாலே எரிச்சல் வரும். அதை இன்னும் பேசி காணொளிக் காட்சியாக இட்டால், யார் பார்ப்பார்கள். இப்போதுதான் மகளை கொஞ்சம் கொஞ்சம் படிக்க வைத்துக்கொண்டு இருக்கிறேன்.

அவ்வப்போது புத்தக கண்காட்சிக்கு (ஆங்காங்கே நடக்கிறதே) சென்றாலும் இந்தப் புத்தகமும் எனக்காக வாங்குவதில்லை. மகளுக்காகவே. எல்லா இடங்களிலும் குழந்தைக்களுக்கான புத்தகங்களும், இல்லையெனில் சமையல், ஜோதிடம் பற்றிய புத்தகங்களுக்கே மக்கள் செல்கிறார்கள். இது எல்லாக்காலங்களிலும் இருப்பதுதான். வீட்டில் படிப்பதற்கு நாளிதழ் வாங்கினாலும் அது எடைக்கு போட மட்டுமே உபயோகம் ஆகிறது. இன்னும் 10 வருடம் கழித்து எப்படி இருக்குமோ தெரியவில்லை.  

சரி. சில படங்கள் பற்றி பார்ப்போம். 

கோமாளி: ஒரு படத்துடன் நாம் ஒன்ற வேண்டுமானால், ஏதாவது ஒரு நிகழ்வு நம் வாழ்க்கையில் நடந்திருக்க வேண்டும். இந்தப்படத்தில் நாயகன் 1999ல் புதிய வகுப்பிற்கு செல்வான். அது பதினொன்றா அல்லது பனிரெண்டா என்பதை தெளிவாக சொல்லா விட்டாலும், மேல்நிலைக்கல்வி என்று எடுத்துக்கொள்ளலாம். நானும் அதே வருடம் படித்ததால், சட்டென்று ஒரு மின்னல். மற்றபடி, படத்தின் முதல் பார்வையே கதையை தெளிவாக சொல்லி விட்டதால் இன்னும் கொஞ்சம் ஆர்வம் கூடி விட்டது. கடைசியாக, கல்லூரி நண்பர்கள் 4 பேர் சந்தித்து, ஒன்றாக சேர்ந்து பார்த்ததில் படம் மறக்க முடியாததாக மாறி விட்டது. 



தோழர் வெங்கடேசன்: முன்னொரு காலத்தில், தினத்தந்தியில் அடிக்கடி பார்க்கும் ஒரு செய்தி, விபத்திற்கான நஷ்ட ஈடு தராததால், பேருந்து ஜப்தி. இன்று வரை அந்த செய்திகள் வந்து கொண்டே உள்ளன. அதன் பின்னால் இருக்கும் நடப்பு, அந்தப் பேருந்தை வைத்திக்கொண்டு அவர்கள் என்ன செய்வார்கள் என்றெல்லாம் தெளிவாக காட்டும் படம். அருமையா சிறு முதலீட்டில் வந்த படம். நானே தரவிறக்கம் செய்துதான் பார்த்தேன். இணையத்தில் எங்குமே வெளியாகவில்லை. கண்டிப்பாக பார்க்கவும். 



தொரட்டி: இன்னொரு சிறு முதலீட்டுப் படம். 80களின் இன்னொரு படம். அதற்காக இளையராஜா, பழைய போஸ்டர் என்றெல்லாம் இல்லை. பணத்திற்காக திருடும் மூவர், கிடை போட்டு பிழைக்கும் நாயகன் நாயகி, காட்டிக்கொடுத்தல், பழி வாங்கல் என்று சற்றே அரைத்த மாவுதான் என்றாலும், பார்க்க நன்றாக உள்ளது. 



சாஹூ: தற்போது அமேசான் பிரைமில் வந்துள்ளது. இந்த 3 படங்கள் தந்த தாக்கத்தைக் கூட இது தரவில்லை. நிறைய பேர் வருகிறார்கள். யுத்தம் செய் படத்திலும் இதே போல. நிறைய ஆட்களைப்பற்றி சொல்லிக்கொண்டே இருப்பார்கள். என்ன நடக்கிறது என்றே புரியாது. இதிலும் அதே போலத்தான். திடீரென KGF போல ஒரு கதை சொல்கிறார்கள். என்னவோ போடா மாதவா. 



சிகப்பு மஞ்சள் பச்சை: அக்னி நட்சத்திரம், நேருக்கு நேர் வரிசையில் மாமன் மச்சான் படம். மூன்று படங்களிலும் அந்த உறவுமுறை பிரச்சினையை மட்டும் பேசாமல், அவர்கள் சேர வேண்டும் என்று சம்பந்தமே இல்லாமல், ஒரு கெட்டவன் வருவான். நடுவில் பெண்கள் மாட்டிக்கொண்டு விழிப்பார்கள். ஆனாலும் நம்மை யோசிக்க விடாமல் படத்தோடு ஒன்றி விடுமாறு திரைக்கதை அமைத்துள்ளார் சசி. பார்க்கலாம். 



இன்னும் ஒத்த செருப்பு, அசுரன், மகாமுனி என்று பார்க்க வேண்டிய பட்டியல் நிறைய உள்ளது. 

முன்பு சொன்னது போல, பதிவு எழுத வேண்டுமா என்று பல முறை தோன்றினாலும், கடமையை செய், பலனை எதிர்பாராதே என்ற கீதையின் வார்த்தைக்கிணங்க, பதிவிடுவது நம் கடமை. அதை செவ்வனே செய்வோம். படிக்காதவர்கள் ரத்தம் கக்கி, சீச்சீ வேண்டாம், இணைய வேகம் குறையாக கிடைக்க வேண்டுகிறேன்.  

Sunday, June 30, 2019

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்!

முந்தைய பதிவு கொஞ்சம் சோகமாகவும், சமுதாய நோக்கத்தோடும் (?) இருந்ததால், இந்த முறை ஜாலிலோ ஜிம்கானா பதிவு. 

தண்ணீர் தண்ணீர்:

தண்ணீர் பிரச்சினை மிக கொடூரணமான நிலைக்கு போய்க் கொண்டிருக்கிறது. ஒரு நாளைக்கு காலையில் 4 மணி நேரம், மாலையில் 4 நேரம் இன்றி இருத்தது, காலையில் மட்டும் என்று மாறியது. பிறகு 2 மணி நேரமானது. தற்போது ஒரு மணி நேரமாக உள்ளது. 

கொடுமை என்னவென்றால், அந்த ஒரு மணி நேரத்திலும் கிட்டத்தட்ட 80 ஆயிரம் லிட்டர் தண்ணீர் செலவாகிறது. தற்போது ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீரை அளக்கும் மீட்டர் பொறுத்தி விட்டோம். இனி சற்றே குறையும் என்று எதிர் பார்க்கிறோம். 

படித்தவர்கள், பண்பானவர்கள், அடுத்தவர்களுக்கு கஷ்டம் கொடுக்காமல் நடந்து கொள்பவர்கள், மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவர்கள்தான் இது போன்ற அடுக்கு மாடி குடியிருப்புகளில் இருப்பார்கள் என்று நினைத்தால், தயவு செய்து உங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்ளுங்கள். எவன் எப்படிப்போனால் எனக்கென்ன, எனக்கு வேண்டியது நடந்தால் போதும் என்பவர்கள்தான் நிறைய. இப்படிப்பட்ட தண்ணீர் பஞ்சத்திலும், "நாந்தான் காசு கொடுக்கிறேன்ல, எனக்கு ஏன் தண்ணி தர மாட்டேன்னு சொல்ற" என்று சண்டை போடும் ஆட்கள்தான் நிறைய உள்ளனர்.  

அஞ்சலி:

அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க ஆரம்பித்த பிறகு, அடிக்கடி நான் எழுத நினைத்த திரைப்படம் அஞ்சலி. அந்தப் படம் பார்க்கும் போது 8 வயது இருக்கும் என்று நினைக்கிறேன். 

மூக்கு ஒழுக, அரைஞாண் கயிற்றால் இடுப்பில் டிராயர் விழாமல் பிடித்துக் கொண்டு, காலில் செருப்பு கூட போடாமல் சுற்றும்போது, நம்மைப் போன்ற ஒரு பையன் ஜீன்ஸ், டீ சர்ட், ஷூ போட்டுக்கொண்டு, நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியே போய், போட்டுக்கொண்டு மொட்டை மாடி மொட்டை மாடி, இரவு நிலவு என்று பாட்டு பாடியதைப் பார்க்கும்போது, வாயைப்பிளந்து கொண்டு பார்த்தேன். நாமும் அதே போல சுற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டு, வீட்டில் போய் அந்தப் படத்தில் வருவது எல்லாம் வேண்டும் என்று கேட்டு, அடி வாங்கியதுதான் மிச்சம். 

அதன் பிறகு, 10ஆவது படிக்கும் பொது என் அத்தை வீட்டிற்காக முதல் முறை சென்னை வந்தேன். அதுவும் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பே. ஆனால், அங்கு பக்கத்துக்கு வீட்டில் யாரென்று தெரியாது, பார்த்தால் சிரிப்பார்கள், அங்கேயெல்லாம் போகக்கூடாது, சிறுவர்கள் இருந்தாலும், வெளியே வந்தால்தான் விளையாட வேண்டும் என்றெல்லாம் சொன்னவுடன், அடப்போங்கப்பா என்றாகி விட்டது. இப்போது நானும் அதே குட்டையில் ஊறிக்கொண்டிருக்கிறேன்.

ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்: 

எங்கள் அடுக்குமாடி குடியிருப்பின் நல சங்கத்தில், முக்கிய உறுப்பினர்கள் எல்லோருமே ஓய்வு பெற்ற ஆட்கள். அவர்கள் தாங்கள் செய்வதுதான் சரி என்பார்கள், நான் ஏற்கனவே நான்கைந்து இடங்களில் இதே போல இருந்திருக்கிறேன், நிறைய செய்திருக்கிறேன் என்பார்கள். ஐயா, இப்போதைக்கு, இங்கே என்ன தேவை என்று பாருங்கள், அதற்கேற்றாற்போல செய்யுங்கள் என்றால், உடனே கோபப்படுவார்கள். 

அதே போலத்தான் இப்போது இளையராஜாவும். அவர் நிறைய செய்திருக்கிறார். ஆனால், இப்போதைய மக்களின் மன நிலை என்ன, அவர்களின் தேவை என்ன என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை. தான் என்ன கொடுக்கிறோமோ அதை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார். என்னத்த சொல்ல. 

இதில் கொடுமை என்னவென்றால், இளையராஜாவை விமர்சிக்கும் (ஆதரித்தோ, எதிர்த்தோ) முக்கால்வாசிப் பேர், அவரது பாடல்களை இணையத்தில் தரவிறக்கம் செய்து கேட்பவர்கள். இதில் நானும் அடக்கம். 


இளையராஜாவின் பாடல்கள் என்பது ஒரு பொருள். நமக்கு பொருள் பிடிக்கிறதா இல்லையா என்பதுதான் முக்கியம். ஆனால், நாம் அதை தயாரிப்பவரை ஏன் விமர்சிக்கிறோம் என்று புரியவில்லை. இது எப்போதும் திரைத்துறையில் மட்டுமே நடக்கிறது. என்னவோ போடா மாதவா. 

"ஏண்டா இதையா ஜாலியாத பதிவுன்னு சொன்ன" என்று சண்டை போட வேண்டாம், ஏதோ புலம்ப வேண்டும் என்று தோன்றியது. அவ்வளவுதான். 


Sunday, June 16, 2019

தமிழகம் - பாலைவனம்

மூன்றரை வருடங்களுக்கு முன்பு, தமிழகம் - மழையகம் என்று ஒரு பதிவு போட்டிருந்தேன். அதற்குள், இப்படி ஒரு பதிவு இட வேண்டி வரும் என்று எதிர் பார்க்கவே இல்லை. 

ஒவ்வொரு வருடமும் எங்களது அடுக்கு மாடி குடியிருப்பில் பிப்ரவரி முதல் ஜூன் அல்லது ஜூலை மாதம் வரை தண்ணீர் விலை கொடுத்து வாங்குவோம். ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு லட்சத்து இருபதாயிரம் லிட்டர் வரை வரை தேவைப்படும். கிட்டத்தட்ட 11 ஆழ்துளை கிணறுகள் உள்ளன. அதில் இரண்டு மட்டுமே உயிருடன் உள்ளன. மழைக்காலங்களில் இன்னும் நான்கைந்து கிணறுகள் ஆதரிக்கும். 

ஒரு நான்கு மாதங்கள் வெளியில் தண்ணீர் வாங்காமல் சமாளிப்போம். கடந்த வருடங்களில் 80 ஆயிரம் லிட்டர் வரை வாங்குவோம். ஆனால், இந்த வருடம் முழுக்க முழுக்க வெளியே வாங்குகிறோம். ஏன் இப்படி என்று யோசித்தால், குடியிருப்பில் மழை நீர் சேகரிப்பு செய்திருக்கிறோம். கழிவறைகளுக்கு கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து பயன்படுத்துகிறோம். 

இருந்தாலும் ஏன்? 2011ல் இருந்து, இந்த ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் எங்களது குடியிருப்பு உட்பட மொத்தமாக (எனக்கு தெரிந்து மட்டும்) குறைந்தது 500 வீடுகள் அதிகரித்திருக்கின்றன. எல்லா அடுக்கு மாடி குடியிருப்புகளும் இதே போல செய்கின்றனவா என்று தெரியாது. அவ்வளவு ஏன், எங்களது குடியிருப்பில் நிறைய பேர் தேவையின்றி தண்ணீரை செலவு செய்வார்கள். கேட்டால், "அதான் காசு கொடுக்குறேன்ல" என்பார்கள். மொத்தமாக எடுத்துக்கொண்டால், 2010ல் இருந்து வீடுகளும் மக்கள் தொகையும் இரு மடங்கு அல்லது மும்மடங்கு அதிகரித்துள்ளது. அதனால் தண்ணீரின் தேவையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. 

சரி. இனி என்ன செய்யப் போகிறோம். நம் மக்கள் எதை தோலை நோக்கு பார்வையில் பார்க்க வேண்டும், எதை குறுகிய கால கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்பதே தெரியாது. 25 வருடங்கள் கழித்து வருவதற்காக ஆயுள் காப்பீடு எடுப்பார்கள், ஆனால், சிக்னலில் 5 நொடிகள் காத்திருக்க மாட்டார்கள். 

அதே போல இப்போது நாம் செய்யும் பல விஷயங்கள் பிற்காலத்தில் நமக்கு பயன்படும் என்றால், "இப்பத்தான் காசு கொடுத்தா தண்ணி கிடைக்குது. மழ வந்தா தானா தண்ணி வரப்போகுது. இப்ப பாத்தீங்கன்னா ஒரு வருஷம் பஞ்சம் வந்துச்சுன்னா அடுத்த வாட்டி மழை நல்லா வரும். நீங்க வேணும்னா பாருங்களேன். இந்த வருஷம் மழை எப்படி பிச்சு எடுக்கும் பாருங்களேன்." என்பார்கள். சரி, மழை வந்தால், மீண்டும் பஞ்சம் வருமே, அதற்கு என்ன செய்வது என்றால், அது நம்ம விதி என்பார்கள். 

தற்போதுள்ள தண்ணீர் பற்றாக்குறை பற்றி பேச ஆரம்பித்தால், ஒவ்வொருவரும் தங்களுக்கு எவ்வளவு அறிவு உள்ளது என்று காண்பிப்பதற்காக அந்த ஊரில் அப்படி, இந்த ஊரில் இப்படி தண்ணீரை சேமிக்கிறார்கள் என்று வருவார்கள். இந்த வளாகத்தில் அதற்காக வசதி இருக்கிறதா, இதற்கு முன் ஏதாவது செய்திருக்கிறார்களா என்றெல்லாம் பார்ப்பதே இல்லை. மீறி சொன்னால், என் யோசனையை ஏற்பதில்லை என்று பிரச்சினை. அதை தனியாக பார்ப்போம். 

இன்னொன்றும் சொல்கிறேன். பல்லாவரம் துரைப்பாக்கம் சாலையில்தான் 2015ல் மிகப்பெரிய பிரச்சினையை சந்தித்தது. ஈச்சங்காடு சந்திப்பில் இருவர் இறந்தும் விட்டனர். ஆனால், இப்போது அந்த சாலையில்தான் அதிகளவு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஓரளவு ஏரிகளையும், சாக்கடைகளையும் தூர் வாரியுள்ளார்கள். ஆனாலும் மழை வந்தால் தாங்குமா என்று தெரியவில்லை. 

சரி, அடுத்த தலைமுறைக்கு நாம் என்ன விட்டு செல்லப் போகிறோம் என்றே தெரியவில்லை. நான்கு வீடு, கொஞ்சம் நிலம், நிறைய நகை, வங்கிக் கணக்கில் பணம் என்று மட்டுமே இருக்கும். ஏதோ நான் கூட சிறு வயதில் ஓரிரு மரங்களை நட்டுள்ளேன். அப்போது என்ன செய்வோம் என்றால், ஆளுக்கு கொஞ்சம் புளியங்கொட்டை, வேப்பங்கொட்டை, மாங்ககொட்டை என்று எல்லாவற்றையும் ஓரிடத்தில் புதைத்து தினமும் தண்ணீர் ஊற்றுவோம். யாருடைய விதை சீக்கிரம் முளைக்கிறது, வேகமாக வளர்கிறது என்று பார்ப்போம். அதில் பாதிக்கு மேற்பட்டவை இப்போது இல்லை என்றாலும், இன்னும் பல மரங்கள் உள்ளன. 

என் மகள் பிறந்த போது, என்னுடைய தாத்தா வீட்டில் மூன்று தென்னை மரங்களை நட்டார். இப்போது அதிலிருந்து எங்களுக்கு தேங்காயும், நிழலும் கிடைக்கிறது. என் மகள் எப்போது ஊருக்குப் போனாலும், அதற்கு அவள்தான் தண்ணீர் ஊற்றுவாள். சென்னையிலோ, மரங்களை வெட்டி விட்டு, வீடுகளை கட்டுகிறார்கள். நான் உட்பட எல்லோரும் அங்கேயே வீடு வாங்கி, குடியேறி, தண்ணீர் இல்லை, வெயில் அதிகம் என்று புலம்புகிறோம். மரங்களை வெட்டி, சாலைகளை அகலமாக்கி சீக்கிரம் வீட்டுக்கு போய் என்ன சாதிக்கிறோம்? 

நாமக்கல்லில் இருந்து கரூர், சேலம் சாலைகளில் முன்பெல்லாம் புளியமரமாக இருக்கும். அதை ஏலத்திற்கு விட்டு புளிகளை உலுக்கி, அதை பொறுக்குவதற்கென்றே போவோம். அப்பொடுகு இரு வழி சாலையாக இருந்தது. இப்போது, எல்லா மரங்களும் வெட்டப்பட்டு நான்கு வழி சாலையாக மாற்றப்பட்டு விட்டன. எந்த மரங்களும் புதிதாக நடப்படவில்லை. இப்போது வெயில் அதிகம் என்று புலம்புகிறார்கள். 

நாம் கேரளாவிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. எல்லோரும் வாய் கிழிய பேசுவார்களே தவிர எல்லோருக்கும் அன்றைய பொழுது பிரச்சினை இன்றி போனால் போதும், அப்போதைக்கு ஏதாவது தேறினால் போதும் என்று உள்ளார்கள். இன்னும் கொஞ்ச நாளில் மழை வரும். பிறகு ஆளாளுக்கு அவரவர் வேலையைப் பார்க்க போய் விடுவார்கள். நானும் அடுத்து சினிமா பிட்டு என்று பதிவுகள் போடுவேன். ஒரு வருடம் கழித்து மீண்டும் இதே போல ஒரு பதிவு போடுவேன். அவ்ளோதான். போங்க போங்க.