Wednesday, April 29, 2015

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

கடைசி 2 பதிவுகளும் கொஞ்சம் 'சீரியஸாக' போனதால், மக்களை மகிழ்விக்க கொஞ்சம் பிட்டு. "இதுக்கு அந்த மொக்கையே பரவாயில்ல" என்று எண்ணுபவர்களை விட்டு விடலாம்.

விமர்சனம்:

கடைசியாக 'ராஜ தந்திரம்'தான் காசு கொடுத்து பார்த்தது. அதன் பின் எந்தப் படத்தையும் பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை. படித்த விமர்சனங்களும் எந்தப் படத்தையும் பார்க்க வேண்டும் என தோன்ற வைக்கவில்லை. ஆனாலும் என்னுடைய சில கருத்துகள் மட்டும்.

கொம்பன்: இந்த இயக்குனரின் முந்தைய படமான ஒண்டிப்புலி, ச்சே குட்டிபுலி அவ்வளவாக பிடிக்கவில்லை. இந்தப் படமும் அதே போல தென் மாவட்ட கதைக்களம் என்பதால் பார்க்க தோன்றவில்லை.

வலியவன்: நல்ல கதைதான், மொக்கை திரைக்கதை. ஆனாலும் இயக்குனரின் ஊர்ப்பாசம் ("நாமக்கல் மாமா போன் பண்ணாரு") மட்டும் ரசிக்க வைத்தது. 40 நிமிடங்களில் இந்தப் படத்தை பார்த்து முடித்து விட்டேன்.

நன்பேண்டா: தரவிறக்கம் செய்து கொஞ்ச நேரம் பார்த்ததிலேயே நிறுத்தி விட்டு, படத்தை அழித்து விட்டேன்.

ஓ காதல் கண்மணி: எனக்கு எப்போதுமே மணி மேல் நம்பிக்கை இல்லை. அவரின் எந்தப் படமும் எனக்கு அவ்வளவாக பிடிக்காது. அவரின் படங்களிலேயே நான் மிக ரசித்தது 'அஞ்சலி' மட்டும்தான். என் நண்பன் அவரின் வெறித்தனமான ரசிகன். ராவணன் படம் வந்தபோது முதல் நாள் தமிழிலும், அடுத்த நாள் ஹிந்தியிலும் என்னை இழுத்துக் கூட்டிக்கொண்டு போனான். அதன் விளைவு, நான் இன்னமும் கடல் படம் பார்க்கவில்லை. அதே போல, இது எனக்கு பிடிக்காத, காதல் பற்றிய படம் என்பதால் பார்க்க வேண்டும் என தோன்றவில்லை.

அவரது படங்களில் அவரை விட மற்ற அனைவரது வேலையையும் நன்கு வாங்கி இருப்பார். அதிலும் குறிப்பாக இசை. ராஜாவும் சரி, ரஹ்மானும் சரி மணி ரத்னத்திற்கு மட்டும் குறை வைத்ததே இல்லை. எனவே, கேட்பதோடு சரி.

காஞ்சனா 2: அதே டைலர், அதே வாடகை என்பதால், நகைச்சுவை காட்சிகளை டிவியில் மட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணம்.

ஆனால், சில மற்ற மொழிப்படங்கள் மனதைக் கவர்ந்தன. பிக்கெட் 43, NH 10, பத்லபூர், போன்றவை. இவை யாவும் ஒரு முறை பார்க்கலாம். சமீப காலங்களில், மற்ற மொழிப் படங்களில் ஏதாவது ஒரு தமிழ் பேசும் பாத்திரம் (NH 10, பத்லபூர் படங்களில் நாயகி தமிழ் பெண்ணாகவோ அல்லது தமிழ் தெரிந்த பெண்ணாகவோ) வருகிறது. 2 ஸ்டேட்ஸ் படத்தின் கதை அப்படி. பொதுவாக மலையாளப் படங்களில் தமிழ் பேசும் பாத்திரங்கள் கெட்டவர்களாகவே வரும். ஆனால், பிக்கெட் 43 படத்தில் அப்படி இல்லை. வீர மரணம் அடைந்த மதுரையை சேர்ந்த சரவணன், மேஜர் முகுந்தன் பற்றி கூட வரும்.

இது எதனால்? இந்திய அளவில் ஹிந்திப் படங்களுக்கு அடுத்து தமிழில்தான் அதிக படங்கள் நூறு கோடிக்கு மேல் வசூல் செய்கின்றன. அதிக திறமையானவர்கள் உள்ளனர். ஆனாலும், நம்மூரில் மற்ற மொழிப் படங்கள் ஓடுவது என்பது கொஞ்சம் இல்லை, ரொம்பவும் கஷ்டம். எனவே, எப்படியாவது கவர வேண்டும் என்று எண்ணி இப்படி செய்கின்றனர் என நினைக்கிறேன். ஆனாலும் கஷ்டம்தான்.

அனேகமாக அடுத்து உத்தம வில்லன், மாஸ் இரண்டும் பார்த்து விட்டுத்தான் விமர்சனம். நான் ஏற்கனவே 21 படம் பார்த்து விட்டதால் வை ராஜா வை பார்க்க தோன்றவில்லை. கமலும், வெங்கட் பிரபுவும் இதுவரை எனக்கு குறை வைத்ததில்லை. (பிரியாணி சற்று ஊசிப் போயிருந்தாலும்) I'm waiting.

ஏதோ தோணுச்சு:

நடிப்பு என்றால் என்ன என்பதை யாரும் வரையறுக்க இயலாது. மூச்சு விடாமல் மூன்று பக்க வசனம் பேசுவதும் நடிப்புதான், பேச்சே இல்லாமல் பார்க்கும் ஒரு பார்வை கூட நடிப்புதான். அதே போல என்னைக் குழப்பும் இன்னொரு நகைமுரண் 'இயல்பாக நடிப்பது'. அது எப்படி இயல்பாக நடிக்க முடியும்? நன்றாக சைக்கிள் ஓட்டும் ஒருவனை சைக்கிள் ஓட்டத் தெரியாதது போல நடி என்று சொல்லும்போது, அவன் எப்படி நடித்தாலும் அது இயல்பானது இல்லை. அதுவே சைக்கிள் ஓட்டத் தெரியாதவன் என்றால், அதுதான் அவன் இயல்பு, அவன் நடிக்கவே இல்லை எனலாம்.

"இப்ப உனக்கு என்ன வேணும்" என்கிறீர்களா? ஒன்றுமில்லை. 'ஆடும் கூத்து' என்று ஒரு படம். நிறைய பேருக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. அந்தப் படத்தில், ஒரு படம் எடுப்பார்கள். ஆசிரியராக இருக்கும் பிரகாஷ்ராஜ் ஒரு கொடூரமான ஜமீன்தாராக நடிக்க வேண்டும். ஒழுங்காக நடிக்க வராது. பின் எப்படியோ சமாளித்து நடிப்பார். அந்தக் காட்சி முடிந்ததும், இயக்குனராக நடிக்கும் சேரன் கை தட்ட, உடனே, அவரது உடல் மொழி அந்த ஆசிரியராக மாறி விடும். உண்மையில், பிரகாஷ்ராஜ் மீது இருந்த மதிப்பு இன்னும் கூடியது.


என் கேள்விக்கென்ன பதில்?

ஒன்றுமில்லை. விகடனில் முன்பு வந்த 'நானே கேள்வி நானே பதில்' போல. என்ன, நமக்கு கொஞ்சம் வளவள கொழகொழ என்று நிறைய எழுதினால்தான் பிடிக்கும். எனவே, இனிதே ஆரம்பம்.

ஏன் நம் மக்களுக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கிறது?


அது ஒரு ஜென்டில் மேன் விளையாட்டு. அது மட்டுமில்லாமல் நாம் அதில்தான் முதலில் உலகக் கோப்பையை வென்றோம் என்பதெல்லாம் பொய். முதலில் அது நம்மூரின் கில்லி தாண்டு விளையாட்டு போல என்பது தெரியும். அது ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரி விளையாடுவார்கள். எனது ஊரில் எப்படி என்றால், நாம் அந்த கில்லியை எவ்வளவு தூரம் அடிக்கிறோமோ, அங்கிருந்து நாம் விளையாடும் இடம் வரை அளக்க வேண்டும். அதே நேரம், கில்லியை நாம் காற்றில் எத்தனை முறை அடித்தோமோ, அதற்கேற்றாற்போல் அளக்க வேண்டிய பொருள் மாறும். என்னுடைய நினைவு சரி என்றால், ஒரு அடிக்கு பேட், இரண்டு அடிக்கு கில்லி, மூன்று அடிக்கு ஊக்கு, நான்கு அடிக்கு கடுகு, அதற்கு மேல், தண்ணீர், காற்று என்றெல்லாம் இருக்கும். எனவே, பொதுவாக தூரமாக அடிப்பதற்கு பதில் கில்லியை காற்றிலே நிறைய முறை அடிக்க பார்ப்போம்.

சரி விடுங்க. நாம நம்ம விஷயத்திற்கு வருவோம். நம் மக்களுக்கு பொதுவாக பேராசை அதிகம். விரைவாக பணம் சேர்க்க வேண்டும், கஷ்டப்படாமல் சம்பாதிக்க வேண்டும், மற்றவர்கள் வேலை செய்ய, நாம் சுகமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுவார்கள். "சரி அதுக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்" என்கிறீர்களா? பொதுவாக கால் பந்து, கைப்பந்து, ஹாக்கி எனக் குழும விளையாட்டில் அனைவருமே ஆட்டம் முழுதும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். கவனம் முழுதும் பந்தின் மீதும், எதிராளிகள் மீதும் இருக்க வேண்டும். ஒரு ஆள், ஓரிடத்தில் தவறி பந்தை விட்டால் அது எதிராளியிடம் சென்று விட்டால், திரும்ப அனைவருமே முயற்சி செய்துதான் ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்ப வேண்டும்.

ஆனால், கிரிக்கெட்டில் அப்படி இல்லை. எந்த நேரத்திலும் பந்து போடுபவர், அடிப்பவர் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். அதன் பின் பந்து எந்த திசையில் போகிறதோ, அங்குள்ள ஓரிருவர் மட்டும் கவனமாக இருந்தால் போதும். எனவே, மூன்று மணி நேர ஆட்டத்தில், ஒரு வீரர் பாதி நேரம் ஓடினாலே மிக அதிகம்.

அடுத்து, மட்டையாளர்கள். ஓடவே தேவை இல்லை. நின்ற இடத்தில் இருந்தே 4, 6 என எடுக்க முடியும். அதே போல ஒரு நேரத்தில் இரண்டு பேருக்குத்தான் வேலை. இன்னும் குறிப்பாக சொன்னால், ஒருவருக்குத்தான் வேலை. அதே போல, அணியில் உள்ள 11 பேரும் மட்டையை பிடிக்க வேண்டிய தேவையும் இல்லை. பந்து வீசுபவர் தவறு செய்தாலும், நமக்கு ரன். இன்னும் குறிப்பாக சொன்னால், ஒரு ஆள் இரண்டு கிலோ மீட்டர் தூரம் ஓடி வந்து பந்து வீசும்போது, அப்படியே சும்மா பேட்டை தூக்கி பந்தை தவற விட்டு அவனைக் கடுப்பேத்துவது என்பது 'என்ன சுகம்'.

மற்ற விளையாட்டுகளில், கோல், புள்ளிகள் என எதுவாக இருந்தாலும் அதிகபட்சம் 100க்குள் அடங்கி விடும். ஆனால், கிரிக்கெட்டில் குறைந்த பட்சம் 200க்கு மேல் போகலாம். அது மனதளவில் நமக்கு 'அதிகம்' என்ற மனப்பாங்கைக் கொடுக்கும். அதே போல மற்ற விளையாட்டுகள் அனைத்தும் கண்டிப்பாக அந்த குறிப்பிட்ட நேரம் விளையாண்டே ஆக வேண்டும். கிரிக்கெட்டில் அதுவும் தேவை இல்லை. இதே போல தடகளம் போன்றவையாக இருந்தாலும், ஒருவரை ஒருவர் எதிர்த்து ஆடும் டென்னிஸ் போன்றவையாக இருந்தாலும், அது குறிப்பிட்ட ஒருவர் மட்டுமே விளையாட முடியும். அதுவும் அவரின் திறமையைப் பொறுத்துதான் எல்லாம்.

கடைசியாக சொல்வது ஒன்றுதான். 'நோகாமல் நோம்பி கும்பிடுவது' கிரிக்கெட்டில் சுலபம். அதனால்தான் நம் மக்களுக்கு இதன் மேல் ஈர்ப்பு வந்திருக்கும்.

அவ்வளவுதாங்க.

Thursday, April 9, 2015

இளையராஜாவைத் திட்டினால் இணையராஜா!

தலைப்பே எதைப்பற்றி சொல்லப்போகிறேன் என்று விளங்கி விடும். ஒரு சாரார், இளையராஜா என் உயிருக்கு மேல் என்க, இன்னொரு தரப்போ, அந்த அளவுக்கு எல்லாம் வொர்த் இல்ல என்கிறது, இரு தரப்பிலும் எது சரி, எது தவறு என்றெல்லாம் நான் சொல்லவில்லை. "தூத்து, ச்சீ ச்சீ, போ போ, நீயெல்லாம் சின்னப்பய பேசப்படாது, உனக்கென்ன தெரியும்னு சொல்ல வந்துட்ட" என்று சண்டைக்கு வர வேண்டாம். முதலில் முழுதாகப் படிக்கவும்.


பள்ளியில் படிக்கும்போதெல்லாம், இளையராஜா ரசிகன் என்றாலும், யாரிடமும் விவாதிக்க நேரமோ, விஷயமோ இருந்ததில்லை. பொதுவாக எல்லோருடைய பாடல்களைக் கேட்டாலும், ராஜாவின் பாடல்கள் அதில் அதிகம். கல்லூரி வந்தபிறகுதான் ராஜாவா, ரஹ்மானா என்ற பிரச்சினை ஆரம்பித்தது. தினமும் இரவு சாப்பிட்டு விட்டு வந்த பிறகு பேச ஆரம்பித்தால், இரண்டு மணிநேரம் சண்டை போட்டு விட்டுத்தான் தூங்குவோம். "சரி வேணும்னா எல்லார்கிட்டயும் கேக்கலாமா?" என்று சும்மா விசாரித்தால், "ஏய், ஓரமா போயி வெளையாடுங்கப்பா" என்ற மாதிரி பார்ப்பார்கள். அதையும் தாண்டி ரஹ்மான்தான் அதிகம் சொன்னார்கள். உடனே நானோ "இல்லல்ல இது போங்காட்டம்" என்றேன்.

அதே நேரத்தில் டும் டும் டும், துள்ளுவதோ இளமை என 'இளைய'ராஜாக்கள் வேறு வர, நானும் அந்தப் பாடல்களையே அடிக்கடி கேட்பேன். "ஏண்டா, நீ ராஜா குடும்பத்துப் பாட்ட தவிர வேற எதுவும் கேக்க மாட்டியா" என்று என்னைக் கேட்கும் அளவிற்கு இருந்தேன். எனது வகுப்பில் ஒரு வடக்கிந்திய பையன். அவனிடம் நான் தனியாக கேட்டேன். வழக்கம் போல 'ரஹ்மான்' என்றான். உனக்கு இளையராஜா தெரியுமா என்றால், யார் அது என்றான். நான் சத்மா படத்தின் இசையமைப்பாளர் என்றேன். அப்படி ஒரு படமா என்றான். பிறகு சொன்னான் "நான் அவ்வளவாக படம் பார்க்க மாட்டேன், என்னுடைய பொழுதுபோக்கே வேறு. நீ கேட்டவுடன் என் மனதில் வந்த பெயர் ரஹ்மான். அதுதான் சொன்னேன்" என்றான். எப்படியோ, அப்போது எனக்கு ரஹ்மான் மீது வெறுப்பு வந்து, எப்படி எல்லாம் குற்றம் கண்டு பிடிக்க முடியும் என்ற எண்ணம்தான் வந்தது.

கல்லூரி முடிந்து வேலைக்குப் போக ஆரம்பித்த உடனே, யாஹூ ராஜா மற்றும் ரஹ்மான் குழு இரண்டிலும் இணைந்தேன். அதில் ஏதாவது தகவல் கிடைக்கும்(?). ஆனால், அவை இரண்டு குழுமும் மிக மிக கட்டுக் கோப்பாக, அவரவர்களின் பெருமைகளை மட்டும் பேசுமே தவிர, மற்றவர்களை கேவலப்படுத்தாது. அதே நேரம் ஆர்குட் வந்தது. அதில் தினமும் போய் ரஹ்மானுடைய குழுமத்தில் எத்தனை பேர், ராஜாவின் குழுமத்தில் எத்தனை பேர் என தினமும் பார்ப்பேன். நான் எந்தக் கருத்துமே இட மாட்டேன். மற்றவர்களின் கருத்தை அறிந்து, அறிவை(?) மட்டும் வளர்த்துக் கொள்வேன். இங்கும் ரஹ்மானே ஜெயித்தார். அதன் பின்னர்தான் நானும் வலையுலகில் நுழைந்தேன். இதற்கு முன்பே இதே மொக்கையை நான் பதிவாக இட்டுள்ளேன். தைரியம் உள்ளவர்கள் மட்டும் படிக்கவும்.
- இடைவேளை - 

"தம்பி, நீ ரொம்ப ஓவரா போயிட்டு இருக்கே" என்கிறீர்களா. சும்மா. வலையுலகில்தான் முதல் முறையாக இளையராஜாவிற்காக அளவு கடந்த ஆதரவைப் பார்த்தேன். அல்லது நான் பார்த்தவை எல்லாம் அப்படி இருந்திருக்கலாம். அதிலும் ராஜாவை உடல், உயிர் என்றெல்லாம் படித்தவுடன் "தாய்ப்பாசத்துல நம்மள மிஞ்சிறுவான் போல இருக்கே" என்றெல்லாம் எண்ணினேன். ஏனென்றால் அப்போது தினத்தந்தியில் வந்த இளையராஜாவின் வரலாற்றை படித்து முடித்திருந்தேன். அதே போல, பள்ளிக் காலத்தில், நூலகத்தில் தமிழ் சினிமா பற்றிய புத்தகங்களைப் படித்து, ராஜா பற்றிய பொது அறிவை வளர்த்து வைத்திருந்தேன். அதன் பின் போக போக இசையைத்தான் ரசிக்க வேண்டும் என்ற புத்தி வந்து, திருந்தி அடங்கி உள்ளேன். 

"சரி, தலைப்புக்கும், இவ்ளோ நேரம் நீ போட்ட மொக்கைக்கும் சம்பந்தமே இல்லையே" என்கிறீர்களா? தலைப்பைப் பார்த்தவுடன் நிறைய பேர் சூடாகி இருப்பார்கள். அவர்களை குளிர்விக்கவே இது. இனி விஷயத்திற்கு வருவோம். கிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகி விட்டது பதிவுலகிற்கு வந்து. ராஜாவைப் பற்றி மிகையான கருத்துகளும் படித்துள்ளேன். நிறைய பதிவுகள் ராஜாவைப் பற்றி கேவலமாகப் படித்து விட்டேன். நிறைய முறை உடனே ஏதாவது செய்ய வேண்டும் எனத் தோன்றும். ஆனால், என்ன செய்ய, மீறி மீறிப் போனால் ஒரு பதிவுதான் போட முடியும். பல முறை சிரிப்பு வரும். சில பின்னூட்டங்கள் கூட போட்டு, திட்டு வாங்கி உள்ளேன்.

இளையராஜா பக்தர்களுக்கு (சரி ரசிகர்களுக்கு) ஏன் அவரை அவ்வளவு பிடிக்கிறது? இது பற்றி நிறைய பேர் அலசி விட்டாலும், நானும் ஒரு பதிவர் என்ற முறையில் ஏதாவது சொல்ல வேண்டுமல்லாவா. அதனாலதான்.

பொதுவாக 30 வயதிற்கு மேல், 50 வயதிற்கு உட்பட்ட நபர்களே (அனைவரும் அல்ல. ஆனால், இந்த பக்தர்கள் கண்டிப்பாக இந்த வகையாகத்தான் இருக்கும்) ரசிகர்கள், இல்லை வெறியர்கள், இல்லை இல்லை பக்தர்கள் என்பார்கள். ஏனென்றால் இவர்கள் (நானும்) அனைவரும் தங்கள் பதிமன் பருவத்தில் (80களின் இறுதி, 90களின் ஆரம்பம்) ராஜாவையும், அந்த கால ரஹ்மான், தேவாவையும் கேட்டு வளர்ந்தவர்களாக இருப்பார்கள். சில பேர் இது இது மிகையான கருத்து, லொட்டு லொசுக்கு என்றாலும், ஒரு நாளைக்கு 10 பாடல்கள் கேட்டால், அதில் குறைந்தது 6ஆவது இளையராஜாவாகவே இருக்கும்.

அதை விட முக்கியம் காத்திருப்பு. பாடல் நாம் நினைத்த நேரத்தில், நினைத்த பாடலை கேட்க முடியாது. ஒரு பாடல் நன்றாக உள்ளது என யாராவது சொன்னால், எங்கேயாவது முதலில் போய் அதைக் கேட்டு, நமக்குப் பிடித்தால் அந்த ஒலி நாடாவை வாங்கி (அல்லது அந்தப் பாடலை பதிவு செய்து), அதில் அந்தப் பாடலை தேடிக் கண்டு பிடித்துக் கேட்கும்போது வரும் சுகம் இருக்கிறதே. அப்படி அலாதியானது. இப்போது அந்தப் பாடலை நினைத்த நேரம் கேட்க முடிந்தாலும், கேட்கும்போதெல்லாம் நம் மனம் பின்னோக்கிப் பறக்கும்.



இது நமக்குப் பிடித்த பெண்ணைப் பார்க்கும்போது ஒலித்த பாடல், நாம் மிக சந்தோசமாகவோ/சோகமாகவோ இருக்கும்போது நாம் கேட்ட பாடல் என இவர்களின் வாழ்வில் தெரிந்தோ, தெரியாமலோ ராஜா வந்து விடுகிறார். ஏன் இது 70களுக்கு முன்னால் கிடையாதா என்றால், என் சிற்றறிவுக்கு எட்டியவரை அப்போதெல்லாம் மக்கள் நிறைய வேலைக்குத்தான் செல்வார்கள். இரவானால், இரண்டாம் ஆட்டம், ஊரில் கூத்து, அவ்வப்போது திருவிழா, அதில் ஒலிப்பெருக்கியில் பாடல், ஊரில் உள்ள ஒன்றிரண்டு வானொலியில் தினமும் செய்தி, அவ்வப்போது பாடல்கள் என இருந்திருக்கலாம். அப்போது காதல் என்ற உணர்வு அவ்வளவாக மக்களிடம் இல்லை. படங்களும் குடும்பம், அரசியல் என்றே இருந்தன. அதை விட முக்கியம், அவர்களில் அதிகம் இப்போது பதிவர்கள் கிடையாது.



80களில், ஓரளவு மக்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல ஆரம்பித்து விட்டனர். காதல் படங்கள் நிறைய வர ஆரம்பித்தன. இனக்கவர்ச்சி/காதல் போன்ற உணர்வுகளைத் தூண்டும் வகையில் பாடல்கள். இங்குதான் ராஜாவின் ராஜாங்கம் ஆரம்பித்தது. அதே போல, காத்திருந்து நாம் ஒரு பாடலைக் கேட்பதற்குள், அடுத்து ஒரு படம் வந்து, அதன் பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்திருக்கும். அதே போல, இந்த கால கட்ட ஆசாமிகள்தான் நிறைய பதிவர்களாக உள்ளனர்.

90களுக்கு மேல், ஓரளவு இந்தக் காத்திருப்பு குறைய ஆரம்பித்து விட்டது. பாடல் வந்தால், அதிகபட்சம் அன்று மாலைக்குள் ஒலி நாடா. அனைவரது வீட்டிலும் 2-இன்-1. இன்னும் 2000க்கு மேல் ஒலித்தகடு வந்த பின் கேட்கவே வேண்டாம். எனவே, ரஹ்மான் செய்த புத்திசாலித்தனமான வேலை, காத்திருப்பை உருவாக்கினார். வருடத்திற்கு ஒரு படம் அல்லது இரண்டு படம். இப்போது பாருங்கள். பாடல் பதிவு செய்த உடனே வந்து விடுகிறது. நினைத்த நேரம், நினைத்த பாடல். காத்திருக்கவே தேவை இல்லை. மக்களும் அனிருத் என் உயிர், இமான் தான் உயிர் என்றெல்லாம் இல்லாமல் கேட்டுக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள். அதை விட முக்கியம் இவர்கள் யாருக்கும் பதிவிட நேரம் இல்லை. கேட்டால் "அவன் அவன் டிவிட்டர்ல 140 எழுத்தே போட கஷ்டப்படுறான், இதுல, பதிவு வேற ஒரு கேடா" என்கிறார்கள்.

பதிவுகள் என்பதே "ஊர்ல ஒரு பய கொஞ்ச நேரம் நாம சொல்றத கேக்க மாட்டேங்குறான், எவனாவது நாலு முகம் தெரியாத ஆட்களாவது வந்து படிச்சு ஏதாவது சொல்லட்டும்" என்ற ஆதங்கத்தில்தான் நிறைய பேர் (குறிப்பாக நான்) எழுதுவது. அதில் வந்து ராஜாதான் என் உயிர் என்று சொல்லுங்கள் தப்பில்லை. ஆனால், மத்தவங்க எல்லாம் ​​_ யிர் என்று சொல்ல வேண்டாம். அதே போல "ராஜாவெல்லாம் ஒண்ணுமேயில்ல, அதுக்கு 1500 வருஷத்துக்கு முன்னாடியே இந்த இசை வந்திருச்சு" என்று சொல்லாமல், "இந்த பழைய இசையையும் கேளுங்கள்" என்று சொல்லுங்கள்.

எனக்குத் தெரிந்து நிறைய பேர் பாடகர்களுக்காக வெறித்தனமான ரசிகர்களாக உள்ளனர். என் நண்பன் SPBயின் வெறித்தனமான ரசிகன். அவனுக்கு இசை யார் என்பதெல்லாம் முக்கியமில்லை. அதே போல நிறைய பேர் TMS, ஜானகி, யேசுதாஸ், சுசீலா போன்றோருக்கு வெறித்தனமான ரசிகர்களாக உள்ளனர். பதிவுலகிலும் சில பேரைப் பார்த்ததுண்டு. ஆனால், அவர்களுக்கு வராத எதிர்ப்பு ராஜா ரசிகர்களின் பதிவிற்கு வருகிறது என்றால், அந்த பதிவர்களும் சற்றே யோசித்து, தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

இந்த மொத்தப் பதிவுமே செவிடன் (மன்னிக்கவும் இந்த வார்த்தைக்கு) காதில் ஊதிய சங்கு என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும், என்ன செய்ய.சொல்ல வேண்டியது என் கடமை. சொல்லிட்டேன். "அதெல்லாம் சரி, கடைசி வரைக்கும் தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமே இல்லையே" என்கிறீர்களா? சும்மா. வெவ்வெவ்வே. நல்லதே பதிவில் எழுதுவோம், கெட்டதே தலைப்பில் வைப்போம்.

Thursday, April 2, 2015

சென்னையின் வாகன ஓட்டிகள்

வாகனங்களின் வகைகள் (இரு சக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள்) மற்றும் ஓட்டுனர்கள் (பாவப்பட்டவர்கள், ஆபத்தானவர்கள், மிக ஆபத்தானவர்கள்) இரண்டைப் பொறுத்து, என்னுடைய அனுபவத்தில் வகைப்படுத்தி உள்ளேன். இது என்னுடைய முந்தைய பதிவின் தொடர்ச்சி ஆகும். இன்னொரு முக்கிய குறிப்பு. இது சென்னைக்கு மட்டுமே பொருந்தும். நெடுஞ்சாலைகள், மற்ற ஊர்களுக்கு இது பொருந்தாது.

மாநரக பேருந்துகள் - ஆபத்தானவர்கள்:
 
இவர்களை உண்மையில் 'பாவப்பட்டவர்கள்' என்ற வகையில்தான் சேர்க்க வேண்டும். இவர்கள் முட்கள் போல. சேலை இதன் மீது விழுந்தாலும், இதன் மீது சேலை விழுந்தாலும், ஆபத்து என்னவோ சேலைக்குத்தான். அதனால்தான் ஆபத்தானவர்கள் என்று சொல்கிறேன். தினமும் அதிகபட்சம் இரண்டு மணி நேரம் அலுவலகம் சென்று திரும்ப பயணம் செய்யும் நமக்கு எவ்வளவு பிரச்சினை என்றால், 10 மணி நேரம் அவ்வளவு பெரிய வண்டியை இந்த சென்னை சாலையில் ஓட்டுவது என்பது எவ்வளவு பெரிய கொடுமை. அதுவும் எந்தப் பக்கம் எவன் வருவான் என்றும் தெரியாது. படியில் தொங்கி எவனாவது விழுந்தாலும் தொல்லை. திட்டுகளையும் ஏற்க வேண்டும். ஒரே குஷ்டமப்பா. பொதுவாக இவர்களுக்கு வழி விட்டு விடுவது நல்லது.

பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகள் - மிக ஆபத்தானவர்கள்: 
பீக் அவர்' எனப்படும் நெரிசலான நேர நெருக்கடிக்கு முக்கிய காரணம். இவர்களாக ஒரு இடத்தை 'நிறுத்தம்' என வைத்துக் கொண்டு, அனைவரையும் படுத்துவார்கள். எங்கேயாவது, ஏதாவது நெருக்கடி, நேரமாகி விட்டது என்றால், யாரையும் இடித்துத் தள்ளக் கூட தயங்க மாட்டார்கள். சென்னையின் கல்வித் தந்தையின் கல்லூரி வாகனங்கள் ஏற்படுத்திய விபத்துகளும், அவற்றின் ஓட்டுனர்களின் நடத்தையையும், ராஜீவ் காந்தி சாலையில் செல்லும் அனைவரும் அறிவார்கள். வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்று எழுதி இருக்குமே தவிர, உள்ளே இருக்குமா என்று தெரியாது. மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ஆட்கள்.

தண்ணீர் மற்றும் குப்பை லாரிகள் - மிக மிக ஆபத்தானவர்கள்: 
உண்மையிலேயே வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட வேண்டிய வாகனங்கள். சென்னை போன்ற ஓர் நகரத்தில், தண்ணீர் கொண்டு செல்லும் லாரி அவ்வளவு வேகமாக செல்ல வேண்டிய அவசியமே இல்லை. இன்னொரு முக்கிய காரணம், இந்த வேலை செய்பவர்களை பொதுவாக அனைவரும் சற்று இளக்காரமாகவே பார்ப்பார்கள். எனவே, "நீ என்ன மதிக்கிறதில்லை, நானும் உன்ன மதிக்க மாட்டேன். நான் இப்படித்தான்" என்று வண்டி ஓட்டுவார்கள்.

பாதசாரிகள் - ஆபத்தானவர்கள்:
"ஹல்லோ, இருக்கிறதிலேயே பாவமானவங்க நாங்கதான்" என்று சொல்கிறீர்களா? நானும் பாதசாரிதான் சார். எப்பவுமேவா வண்டில போக முடியும்? ஏன் ஆபத்தானவர்கள் என்றால், அவர்கள் சாலையைக் கடக்க சிக்னல் இருந்தாலும், வாகன ஓட்டிகள் மதிப்பதில்லை. எனவே, சாலையில் சற்றே வாகனங்கள் குறைவாக இருக்கும்போது கடப்பது, அப்போது திடீரென முன்னால் வரும் வண்டி நிற்கும், அதை எதிர் பாராமல் பின்னால் வருபவன் இடிக்க, அவர்கள் இருவரும் சண்டை போட ஆரம்பிப்பார்கள், பாதசாரி ஜாலியாக அந்தப் பக்கம் போயிருப்பார்.

அதே போல போன் பேசிக்கொண்டே கடப்பது, பாட்டு கேட்டுக் கொண்டு கடப்பது, ஒரு கையைத் தூக்கிக் கொண்டு மெதுவாக நடப்பது என சில தொல்லைகள். அது மட்டுமில்லாமல் சுரங்கப்பாதை, நடை மேம்பாலம் இருந்தாலும், "நாங்க ரோட்டுக்கு நடுவுலதான் நடப்போம்" என்று நடப்பது. அதை விட முக்கியம், சாலையின் எந்தப் பக்கம் நடப்பது என்பது இதுவரை யாருக்கும் தெளிவாக தெரியாது. நடப்பதற்கு பாதையும் கிடையாது.

சாலையில் அப்படியே ஆட்டோவையோ, ஷேர் ஆட்டோவையோ நிறுத்தி பேரம் பேசுவது,மெதுவாக செல்லும் பேருந்தில் இருந்து திடீரென குதிப்பது, வெளியே குப்பை போடுவது, எச்சில் துப்புதுவது என கொஞ்சம் அக்கப்போரான ஆட்கள்தான். அதிலும் எங்கேயாவது சிறிய அல்லது சேரி போன்ற இடம் என்றால், அவர்கள் நடந்து போகும் வரை நாம் பொறுமையாக பின்னால் போய்த்தான் ஆக வேண்டும். அவர்களையும் குறை சொல்ல முடியாது. ஐந்தாறு வருடங்களுக்கு முன், அந்த சாலையில் தினமும் ஒரு வண்டி வந்தாலே அதிசயம். ஆனால், இன்று அப்படியா? அவர்கள் அப்படியே வாழ்ந்து பழகி இருப்பார்கள்.

ஆட்டோ, ஷேர் ஆட்டோ - மிக மிக ஆபத்தானவர்கள்:
ஒரு 'மிக' போடவா, இல்லை இரண்டு போடவா என சின்ன குழப்பம். ஒரு காலி ஆட்டோ வேகமாக போய்க் கொண்டிருக்கும். திடீரென ஒரு பாதசாரி 'ஆட்டோ' என்று கூப்பிடுவார். பின்னால் யார் வருகிறார்கள் என்று கூட பார்க்காமல், திடீரென நடு ரோட்டில் இருந்து இடது புறம் ஆட்டோ ஒதுங்கும். பின்னால் வருபவன் ஆட்டோவை இடித்து விட்டால், அவன் பரம்பரையே காலி. அதே போல ஷேர் ஆட்டோவில், உள்ளே உட்கார்ந்திருப்பவர் திடீரென "அண்ணே, அப்படியே லெப்ட்ல நிறுத்துங்க" என்பார். அதே பிரச்சினை. அதே கெட்ட வார்த்தை. போகும் பாதையில் சிக்னல் அல்லது ட்ராபிக், உடனே வண்டி மெதுவாக கூட போகாமல் உடனே வலதோ, இடதோ திரும்பும். அதே டெய்லர், அதே வாடகை.

இதுவரை மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டியவர்களைக் கூட பார்த்துள்ளேன். ஆனால், விதிகளை மதித்து, யாரையும் திட்டாமல் இருந்த ஒரு ஆட்டோ ஓட்டுனரைக் கூட நான் கண்டதில்லை.

மகிழ்வுந்துகள் - மிக ஆபத்தானவர்கள்:
இவர்களும் ஆட்டோ போலத்தான். என்ன, திடீரென நடு ரோட்டில் நிற்க மாட்டார்கள், அது மட்டுமல்ல எங்குமே நிற்க மாட்டார்கள். திடீரென தங்கள் பாதையில் இருந்து விலகி பின்னால் வருபவர்களை பதறடிப்பார்கள். பொதுவாக எந்த வகையாக இருந்தாலும் சில விதி விலக்கானவர்கள் இருப்பார்கள். ஆனால், இந்த 'டெம்போ' வகை வண்டிகள் இதுவரை ஒன்று கூட ஒழுங்காக ஓடி நான் பார்த்ததே இல்லை. அவை கார் போல மிக எளிதாக ஓட்டவும், பேருந்து போல மிக பெரியதாக இருப்பதும்தான் பிரச்சினை என நினைக்கிறேன். "நீ எம்மேல வந்து இடி, சாவு, நான் பாட்டுக்கு போய்க்கிட்டே இருப்பேன்" என்ற தொனியில் செல்வார்கள். அதையும் மீறி, ஏதாவது சொன்னால், போகிற போக்கில் நம்மை 'ஒதுக்கி' விட்டு செல்வார்கள்.

மகிழ்வுந்துகள்-பாவப்பட்டவர்கள்:
இவர்கள் பொதுவாக இந்த சோப்பு டப்பா கார் வாங்கியவர்கள். இவர்கள்தான் சாலையில் ஒரே கோட்டில் செல்வார்கள். பொறுமையாக உள்ளே பண்பலை கேட்டுக்கொண்டு, சிக்னலை மதித்து பொறுமையாக போவார்கள். இருபுறமும் இரு சக்கர வாகனங்கள் வந்து உரசி, டொக்கு ஆக்கினாலும், பொறுமையாக சகித்துக் கொண்டு, அவர்களின் திட்டுகளையும் வாங்கிக் கொண்டு போவார்கள். (முக்கிய குறிப்பு. நான் இன்னும் மகிழ்வுந்து வாங்கவில்லை)

மகிழ்வுந்துகள் - மிக ஆபத்தானவர்கள்:

பொதுவாக பெரிய கார்கள். அல்லக்கைகள் அலப்பரை செய்யும் டாடா சுமோ, ஸ்கார்பியோ போன்றவை. இவை தவிர ரொம்ப நாளாக இரு சக்கர வாகனங்கள் ஓட்டி விட்டு, புதிதாக மகிழ்வுந்து வாங்கியவர்கள் எல்லாமே கொஞ்சம் ஆபத்தானவர்கள்தான். இவர்களை அடையாளம் கண்டு கொள்வதும் சுலபம். கண்டிப்பாக பக்கவாட்டு கண்ணாடிகள் உடைந்திருக்கும் அல்லது மடக்கப்பட்டிருக்கும். காரில் டொக்கு விழுந்திருக்கும். பேன்சி எண்ணாக இருக்கும்.

இரு சக்கர வாகனங்கள் - மோசமானவர்கள்:

"என்ன, மிக, மிக மிக ஆபத்தானவங்க அப்டிதான சொல்லுவா, அதென்ன மோசமாவனங்க" என்கிறீர்களா? பொதுவாக நம் வண்டியை யாராவது இடித்தாலோ, அல்லது இடிப்பது போல போனாலோ, திட்டுவோம் அல்லது அப்படியே விட்டு விடுவோம். அப்படி இல்லாமல், யாரென்றே தெரியாத ஒருவனை "இவன்லாம் சாகத்தான் போறான்" என்று நினைப்போம் அல்லவா, அந்த வகையினர். சாலையில் போகும் அனைவரையும் பயமுறுத்துவோர். இவர்களை அடையாளம் கண்டு கொள்வது மிக சுலபம். பார்த்தாலே போதும். "என்னப்பா, இப்படி சொல்ற. அப்படி நீ யாரைத்தான் சொல்ற" என்கிறீர்களா? 

ஹெல்மட்டை தலைக்குப் போடாமல் பெட்ரோல் டேங்குக்கு போட்டிருப்பார்கள்.


இண்டிகேட்டர் கண்டிப்பாக உடைந்திருக்கும்.


காதில் பாட்டு கேட்டுக்கொண்டு அல்லது போன் பேசிக்கொண்டு செல்பவர்கள்.


150cc அல்லது அதற்கு மேல் உள்ள வண்டி எனில், கண்டிப்பாக இந்த சாதிதான். ("அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல" என்பவர்களுக்காக. "சொம்மா உர்ர் உர்ருன்னு உருட்டறத்துக்கா இந்த வண்டி வாங்கி இருக்கோம்" என்றுதான் இதுவரை நான் வாங்கிக் கட்டியுள்ளேன்). அதிலும் பின்னால் ஒரு பெண் கட்டிப் பிடித்து உட்கார்ந்திருந்தால், ____(கெட்ட வார்த்தைங்க)


ஸ்கூட்டர் வண்டிகள் ஓட்டுபவர்கள், பெரும்பாலும். (நானும் ஒரு காலத்தில் கல்யாணத்திற்கு முன் ஆக்டிவாதான் ஓட்டினேன். என்னைத் தாண்டிபோய் நிறுத்தி எல்லாம் திட்டி வீடு போயிருக்கிறார்கள். அதன் பிறகுதான் திருந்தினேன்.) இந்த வண்டி பிக் அப் அதிகம் என்பதால் மற்ற வண்டிகள் கியர் மாற்றுவதற்குள் போய் விட வேண்டும் என்று பறப்பார்கள். பின்னால் ஆள் இல்லாவிட்டாலும், கால் வைப்பதற்கான பிளேட்டை மடக்காமல் அடுத்த வண்டியை கீறுவார்கள்.


டேங்கில் ஒரு குழந்தை, நடுவில் ஒரு குழந்தை, பின்னால் மனைவி.யாராவது இடித்தால் கூட குழந்தை செண்டிமெண்ட் கை கொடுக்கும்.


எல்லாவற்றையும் மூடிக்கொண்டு ஓட்டும் பெண்கள். என்னதான் இவர்கள் தவறு செய்தாலும், யாரும் அவர்களை எதுவும் சொல்ல மாட்டார்கள்.


வண்டி ஓட்டும் வயதானவர்கள். இவர்கள் மேல் மோதவே இல்லை என்றாலும் "அய்யய்யோ" என்று கத்தினால், கதை காலி.


வண்டியில் காவல், வழக்கறிஞர், பத்திரிகை என்று எழுதி இருந்தால் (புடிச்சா கேஸ் போட முடியாதுல்ல).


சும்மா சிம்ரன், இலியானாவிற்கு போட்டியாக இடுப்பை வளைத்து, வண்டியை சைடு வாங்கி, மற்றவர்களை பதறடிப்பார்கள்.

இரு சக்கர வாகனங்கள் - மிக மோசமானவர்கள்:

"காலை 8:30க்கு தாம்பரத்தில் இருந்து நான் கிளம்புவேன். 9 மணிக்கெல்லாம் பாரிஸ் கார்னரில் உள்ள ஆபீஸில் நான் இருக்க வேண்டும், டாட்" என்பார்கள். இவர்கள் மிக மோசமான வகையினர். தாங்கள் சாலையில் செல்வதற்காக எந்த அளவிற்கும் போவார்கள். மேலே கூறிய ஆட்கள் இதுலும் வருவார்கள். ஆனாலும், இவர்களை அவர்கள் செய்யும் செயலை வைத்துதான் அறிய முடியும்.

நீங்கள் சிக்னலில் நிற்கும்போது, உங்கள் வண்டிக்கும், முன்னால் ஒரு அங்குல இடைவெளி இருந்தாலும், தங்கள் வண்டி முன் சக்கரத்தை அதில் விட்டு, "சார், கொஞ்சம் வழி விடுங்க" என்பார்கள்.


ஒலிப்பானை திருப்பங்கள், சந்துகளில் எல்லாம் பயன்படுத்த மாட்டார்கள். சிக்னலில் சிகப்பு இருந்தாலும், அழுத்திக் கொண்டே இருப்பார்கள்.


இண்டிகேட்டர், லைட் போடவே மாட்டார்கள், எந்த நேரமாக இருந்தாலும். அல்லது வீட்டிலிருந்து கிளம்பி அலுவலகம் போகும் வரை ஏதாவது ஒரு பக்கம் மட்டும் எரிந்து கொண்டே இருக்கும். எண்பதாயிரம் போட்டு வண்டி வாங்கியவர்கள், எண்பது ரூபாய் போட்டு ஒரு இண்டிகேட்டர் சைரன் வாங்கி வைத்திருக்க மாட்டார்கள்.


கொஞ்சம் கூட கூச்சமே இன்றி தவறான திசையில் வருவது, அவர்களுக்கு சிகப்பு போட்டிருந்தாலும் மீறுவது.


திடீரென பாதையில் இருந்து விலகி, அடுத்த சாலைக்கு செல்வது (இதில் பின்னால் வரும் இரண்டு வாகனங்கள் இடித்துக் கொண்டு, சண்டை போடுவார்கள். நம்மாள் அது தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் போயே போயிருப்பார்)


உலக அமைதி பேச்சு வார்த்தை நடத்துவது போல இரண்டு வண்டிகளில் பேசிக் கொண்டே செல்பவர்கள்.


ஏதாவது திருப்பத்தில் வந்து சாலையில் இணையும்போதும், அல்லது வண்டியை எடுக்கும்போதும், ஒரு கடமைக்குக் கூட திரும்பி ஏதாவது வண்டி வருகிறதா என்று பார்க்க மாட்டார்கள்.


நடைமேடையில் வண்டியை ஒட்டிக்கொண்டு போய், அதில் நடப்பவர்களைத் திட்டுவார்கள்.


எங்கேயாவது கும்பல் இருந்தால், வண்டியை ஓரமாகவும் இருத்த மாட்டார்கள், வண்டியை விட்டு இறங்கவும் மாட்டார்கள். "என்னவாம்" என்று யாரிடமாவது கதை கேட்பார்கள்.


ஒரு சிறிய சாலையில், எதிரில் வரும் வண்டி செல்வதற்காக வழி விட்டு நிற்போம். நேராக வந்து அந்த வழியை அடைத்து விட்டு, பின் நம்மைப் பார்த்து "ஏன் இந்தப் பக்கம் வர்ர, அந்தப் பக்கம் போ" என்று எகிறுவார்கள்.


பள்ளி செல்லும் குழந்தைகளை உட்கார வைத்து, எல்லா விதிகளையும் மீறி பள்ளியில் கொண்டு போய் விடுவார்கள். "சாலை விதிகளை மதிக்க வேண்டும்" என பாடம் படித்ததை அது பின்பற்றுமா அல்லது தன் தந்தை என்ன செய்வாரோ அதை செய்யுமா?

இரு சக்கர வாகனங்கள் - பாவப்பட்டவர்கள்:

இவர்களும் கிட்டத்தட்ட மேற்கூறிய வகை ஆட்கள்தான். இவர்களும், அந்த இரு சக்கர மிக மோசமான வாகன ஓட்டிகளும் ஒரே மாதிரிதான் இருப்பர். இருந்தாலும், இன்னும் இவர்களை இனம் கண்டு கொள்வது எப்படி?

சிக்னலில் நிற்கும்போது, நேரம் நிறைய இருந்தால் வண்டியை நிறுத்தி விடுவார்கள்.


சாலையில் போய்க் கொண்டிருக்கும்போது, முடிந்தவரை ஒரே கோட்டில் செல்வார்கள்.


சிகப்பு எந்த நேரத்திலும், எந்த இடத்தில் போட்டிருந்தாலும் நின்று விடுவார்கள்.
பின்னால் இருந்து யாராவது ஒலிப்பானை அழுத்திக் கொண்டிருந்தாலும், என்ன திட்டினாலும் கண்டு கொள்ளவே மாட்டார்கள்.


சற்றே இடதோ, வலதோ திரும்பினாலும் இண்டிகேட்டர் போடுவார்கள். 
தேவையில்லாமல் ஒலிப்பானை பயன்படுத்த மாட்டார்கள்.

சில சமயம் இவர்களும் மோசமானவர்களாக மாற வாய்ப்பு உள்ளது, அவர்கள் அறியாமலேயே. ஆனால், மோசமானவர்கள் இவர்களாக தெரியாமல் கூட ஆக முடியாது. இன்னொரு கசப்பான உண்மை என்னவென்றால், அந்த மிக மோசமானவர்களிடம் இதில் ஏதாவது ஒரு குணம் இருக்கும்.

இவை எல்லாவற்றிலும் விதி விலக்குகள் உண்டு. ஆனால், மோசமானவர்கள் -ஆபத்தானவர்கள் - பாவப்பட்டவர்கள் என்பதை நீங்கள் லேசாக இடித்து விட்டாலே தெரிந்து விடும். உடனே இறங்கி என்ன, ஏது, யார் மீது என்றெல்லாம் பார்க்காமல் எந்த அளவிற்கு திட்டுகிறார்களோ அதைப் பொறுத்து நீங்கள் ஆபத்தானவர்கள், மிக மிக என்று மோசமானவர்கள் வரை போகலாம்.


இவை தவிர இன்னும், இரவு நேர அட்டூழியம் செய்யும் ஆம்னி பேருந்துகள், கன ரக வாகனங்கள், 'குடி' வண்டிகள், உள்ளே ஆட்கள் இருக்கிறார்களா இல்லையா என்று கூட தெரியாமல் செல்லும் ஆம்புலன்ஸ் வண்டிகள், சைக்கிள் மற்றும் பாரம் ஏற்றிக் கொண்டு செல்லும் மூன்று சக்கர வண்டிகள் என நிறைய உள்ளன. என்ன, எல்லோரும் ஒரு 'புரிந்துணர்வு' ஒப்பந்தத்துடன் வண்டி ஓட்டுவதால் விபத்துகள் அதிகரிக்காமல் உள்ளது என நினைக்கிறேன்.

வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலார் கூட இங்கு வந்து வண்டி ஓட்டினால், "இவன்லாம் எங்கயாவது விழுந்து சாகத்தான் போறான்" என்று என்னும் அளவிற்கு நம்மாட்கள் வைத்து விடுவார்கள்.

ஓர் ஆள் 'எப்படியாவது' 10 நிமிடத்தில் வீடு வந்து சேருகிறார் என்றால், கொஞ்சம் பொறுமையாக, எல்லா விதிகளையும் மதித்து சென்றால், அவர் உட்பட அனைவருமே 15 நிமிடங்களில் வீட்டிற்கு போகலாம். "விடுவமா, நாங்க .எங்களுக்கு ரெண்டு கண்ணு போனாலும் பரவால்ல. உனக்கு ஒரு கண்ணாவது போகணும்" என்றல்லவா உள்ளோம்.

Thursday, March 26, 2015

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

என்னடா மறுபடியும் பிட்டு போடறானே அப்டின்னு யோசிக்கிறீங்களா? வேற ஒன்னும் இல்ல. கடைசி ரெண்டு பதிவுமே ரொம்ப அழுகாச்சியா போயிடுச்சு. மகளிர் தினத்துக்காக இன்னொரு பதிவு போடலாம்னுதான் பாத்தேன். ஆனா மக்கள் ரொம்பவும் கண்ணீர் சிந்தக் கூடாதேன்னு இந்த பிட்டு.

விமர்சனம்:

ராஜ தந்திரம்: மீண்டும் ஒரு திருட்டுக் கதை (கதைத் திருட்டு அல்ல). முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பது போல, ஏமாற்றியவர்களை நாமும் ஏமாற்ற வேண்டும் என்று சொல்லும் படம். மற்றபடி கருத்தை எதிர் பார்க்காமல் சென்றாமல், உண்மையிலேயே அட்டகாசமான படம். முதல் பாதி சற்றே மெதுவாக சென்றாலும், இரண்டாம் பாதி பறக்கிறது.

ஆங்கிலப் படங்கள் நிறைய பார்த்திருந்தால், இந்தப் படம் உங்களுக்கு Oceans படங்களை நினைவூட்டலாம். காட்சிகள் காப்பி அடிக்கப்படவில்லை. ஆனால், படமாக்கப்பட்ட விதம் அப்படி. இந்தப் படத்துடன் நிறைய சிறிய படங்கள் வந்ததால், நேரம் கிடைக்காமல் இருந்தது. பின், சத்யமில் இரவு நேரக் காட்சி இருந்ததால் போய் பார்க்க முடிந்தது. கொடுத்த காசுக்கு திருப்தி.

அனேகன்: பொதுவாக எந்த புதுப்படமாக இருந்தாலும் முதல் வார இறுதி நாட்கள் மட்டுமே டிக்கெட் கிடைக்காது. அதன் பிறகு வார நாட்களில் எப்படியாக இருப்பினும் ஒரு டிக்கெட்டாவது கிடைக்கும். ஆனால், இந்தப் படத்திற்கு ஒரு வாரம் முழுதும் இரவுக்காட்சிக்கு டிக்கெட்டே இல்லை. நான் இணையத்தில் 'டிக்கெட் இருக்கா' என்று பார்த்து விட்டு, நேரில் போய்தான் வாங்குவேன். இரண்டு நாட்கள் சத்யம், பின் S2 எல்லாம் போயும் டிக்கெட் இல்லை. எல்லாம் 'டங்கா மாரியின்' காரணமாக கூட இருக்கலாம்.

படம் எனக்கு மிகவும் பிடித்தது. காரணம் சமீப கால படங்களில் எனக்கு மிக விரைவாக முடிந்தது போல தோன்றிய படம் இதுதான். வழக்கம் போல பாடல்கள் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். கொஞ்சம் தசாவதாரம் போல உண்மையா அல்லது கற்பனையா என்றெல்லாம் மக்கள் குழம்பட்டும் என்று நினைத்திருப்பார்கள் போல. விமர்சகர்கள் கிழித்துத் திங்க விட்டாலும், படம் நன்றாகவே இருந்தது.

காக்கி சட்டை: படம் ஆரம்பித்த உடனே ஒரு பயங்கர ஆரவாரத்தோடு பில்டப் காட்சி. அப்போதே சின்ன சந்தேகம். பிறகு அது கனவாம். 'சாரே, இது கொஞ்சம், இல்லல்ல ரொம்பவே பழைய டெக்னிக்'. இன்னும் கொஞ்சம் யோசிங்க. மற்றபடி ஒரு முறை பார்க்கலாம். சிவகார்த்திகேயனை நாம் எதற்காக நம்பி போகிறோமோ, அதை நன்றாகவே கொடுத்துள்ளார். படத்தை சீரியஸாக எடுப்பதா இல்லை காமெடியாக எடுப்பதா என்று தெரியாமல் எடுத்திருக்கிறார்கள். அது நமக்கு இன்னும் காமெடியாக இருக்கிறது. 

இப்போதெல்லாம் அடிக்கடி மூளை சாவு, உடல் உறுப்பு தானம், 20 நிமிடங்களில், போக்குவரத்தை நிறுத்தி 'இதயம்' பயணம் செய்தது என்றெல்லாம் படிக்கும்போது பொதுவாகவே எல்லோருக்கும் சில சந்தேகங்கள் வரும்.

"அது எப்படி திடீர்னு கடந்த நாலஞ்சு வருஷமா மட்டும் மூளைச்சாவு நடக்குது?"

"ஹல்லோ. இப்பதான் அது வெளியே தெரியுது. அதனால எல்லோரும் உடல் உறுப்பு தானம் செய்யறாங்க."

"சரிங்க. சந்தோஷம். ஆனா, அது எல்லாமே ஏன் பணக்கரங்களுக்கே மாத்தறாங்க. ஏழைங்களுக்கு எதுவும் மாத்த வேண்டியது இல்லையா?"

"அதுவும் செய்யறாங்க. ஆனா, வெளிய அவ்வளவா தெரியறது இல்ல"

"அப்படி நடந்தா நல்லதுதான். ஆனா, சுஜாதா அவரோட ஒரு நாவல்ல என்ன சொல்றாருன்னா?"

"இப்ப நீ போறியா, இல்ல உன் உறுப்புகளையும் தானம் செய்யவா?"

எனக்குள் ஒருவன்: எனக்கு 'லூசியா'வே அவ்வளவாக பிடிக்கவில்லை. புரியவில்லை என்று கூட வைத்துக் கொள்ளலாம். அதனால் இதை நான் பார்க்கவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதி. 'லூசியா' பார்த்தவர்களுக்கு கண்டிப்பாக இந்தப் படம் பிடிக்காது என்பது என் எண்ணம்.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்: இதுவும் ஒரு நல்ல டைம் பாஸ் படம். ஒரு முறை பார்க்கலாம். நகைச்சுவையாக இருந்தாலும் 'ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது' என்பதை அட்டகாசமாக விளக்கி உள்ளார்கள். அதிலும் ஊர்வசி சொல்லும் "இந்த காலத்துப் பசங்க என்னதான் படிச்சாலும், கொஞ்சம் கூட பிராக்டிகல் அறிவே இல்ல" என்பது 110% உண்மை. இது கடந்த 15 வருடங்களுக்கு முன் படித்து முடித்தவர்களுக்குக் கூட பொருந்தும். (நானும்தான்).

மற்ற படங்கள் பார்க்கவில்லை. இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சீக்கிரம் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். ' ரொம்ப நல்லவன்டா நீ', 'இவனுக்கு தண்ணில கண்டம்' இரண்டு படங்களின் மூலப்படம் என்ன என்று யாராவது சொன்னால் அதை முதலில் பார்க்கலாம் என்று இருக்கிறேன். மற்றவை எதையாவது பார்த்தால், அடுத்த பிட்டில் எழுதுகிறேன்.

சில எண்ணங்கள்:

வர வர ஹாரிஸ் ஜெயராஜ் தேவா போலவே ஆகி விட்டார். எல்லா விஷயங்களிலும்தான். ஹாரிஸின் சமீப கால படங்கள் அனைத்திலுமே ஒரு பயங்கரமான கானா அல்லது குத்துப் பாட்டு வருகிறது. இந்த மாதிரி பாட்டு கேட்டார் என்றுதான் சாமி, அருள் படங்களுக்குப் பின் ஹரியை ஒதுக்கி விட்டார் என ஒரு கிசுகிசு படித்திருக்கிறேன். காலம் எல்லாவற்றையும் மாற்றி விடும் அல்லவா.

அதே போலத்தான் அஜித் கவுதம் மேனன் கூட. முன்பு ஒரு முறை அஜித்துடன் படம் என்று கூறி பின் அது நின்று விட, அப்போது ஒரு கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராக சென்றிருந்தபோது, "எங்க தல கூட எப்ப படம் பண்ணுவீங்க" என்று கத்த, இவரோ "யாரு தல" என்று நக்கலாக கேட்டார். எல்லாம் நேரம்.

'என்னை அறிந்தால்' படத்தில் இளம் அஜித்தாக வரும் சிறுவனைப் பார்த்தால், எனக்கு ஹாரிஸ் ஜெயராஜின் முகம் போல தோன்றியது. ஏனென்று தெரியவில்லை. ஒரு வேளை ஹாரிஸின் சொந்தக்காரப் பையனோ என்னவோ. உங்களுக்கு எப்படி தோன்றுகிறது?


ரசித்தது:

ஒரே நேர்க்கோட்டில் அமையாமல் மாறி செல்லும் நான்-லீனியர் திரைக்கதையை க்வெண்டின் டாரண்டினோ, நோலன், ஷங்கர் எல்லாம்தான் நன்றாக செய்வார்கள் என்று நானும் நம்பினேன். ஆனால், இந்தப் படமும் அப்படித்தான். பாருங்களேன்.


இந்த காணொளியை கண்டு அழுதேன், துடித்தேன் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். எனக்கு அந்த தந்தையைப் பற்றிக் கூட தோன்றவில்லை. நிறைய அப்பாக்கள் இதே போல தான் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, தன் குழந்தை அந்த கஷ்டம் தெரியாமல் வளர வேண்டும் என்று எண்ணுகின்றனர். ஆனால், அந்த சிறு குழந்தை தன் தந்தை எப்படி கஷ்டப்படுகிறார் என்பதை உணர்ந்துள்ளது. அதுதான் எனக்கு இதில் மிகவும் பிடித்தது. உண்மையில் இதற்கான வாய்ப்பு மிக மிக குறைவே. நான் அதற்காக கண் கலங்கினேன்.

இதுவும் மிகப் பழையதுதான். ஆனாலும், இப்போது பார்த்தவுடன் பகிர வேண்டும் என் தோன்றியது. குறிப்பாக அந்த சிறுவனின் கற்பனைகள் மற்றும் கடைசியில் கம்பீரமாக நடப்பது. நீங்களும் ரசியுங்களேன்.


இன்னும் சில குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு காணொளிகள் உள்ளன. அவற்றின் சுட்டிகள் கீழே. பார்க்க விரும்புவர்களுக்காக மட்டும்.

தெலுங்கானா விழிப்புணர்வு காணொளி

கோமல் - தமிழ்.

வற்றைப் பார்த்தால், நாம் நம் குழந்தைகளை யாரிடமும் பழகவே விடக் கூடாது போலவே என்று தோன்றும். ஆனாலும், நடந்த பின் 'குய்யோ முய்யோ' என்று அலறக் கூடாதே. எனது மகள் ஓரளவு நடக்க, பேச ஆரம்பித்த புதிதில் சென்னையிலேயே இருந்ததால், வீட்டிலேயே இருந்து பழக்கம். எங்கள் இருவரைத் தவிர வேறு யாரிடமும் செல்ல மாட்டாள். படிப்பிற்காக மனைவி ஊரிலேயே இந்த வருடம் தங்கி இருப்பதால், மகளும் அங்கேயே. ஆனாலும் சென்னைப் பழக்கம் போகவில்லை. எங்கள் இருவரின் பெற்றோருடன் இருந்தாலும், மாலையில் அம்மா கண்டிப்பாக வேண்டும். அதே போல என்னதான் பக்கத்து வீடு, எதிர்த்த வீடு என்று சென்று விளையாண்டாலும், யாரும் தூக்க வந்தால் ஓடி வந்து விடுவாள், இல்லையென்றால் கத்துவாள்.

ஆனால், யாராவது மிட்டாய் கொடுத்தால் தூக்கலாம். இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அதையும் தவிர்க்க பழக்கி உள்ளோம். யாரவது மிட்டாய் கொடுத்தால் "அப்பா அம்மா வாங்கித் தருவாங்க, எனக்கு வேண்டாம்" என்று சொல்லப் பழக்கி உள்ளோம். அதே போல அவள் எங்களிடம் கேட்டால், "சளி பிடிக்கும்" என்றெல்லாம் ஏமாற்றாமல் வாங்கித் தருவோம். ஒரு வேளை ஜலதோஷம் பிடித்திருந்தாலும், "சரியானப்புறம் கண்டிப்பா வாங்கித் தரோம்" என்று சொல்லி விடுவோம். இது ஓரளவுக்கு வேலை செய்கிறது.

இதோ, இன்னும் இரண்டு மாதம்தான். மீண்டும் சென்னை. பள்ளி வேறு செல்ல வேண்டும். சொல்லித் தர வேண்டியது நிறைய உள்ளது. "என்ன ரைம்ஸா?, லெட்டர்ஸா?, நம்பர்ஸா?" என்று கேட்காதீர்கள். இது வேறு. சரி, மறுபடியும் கொஞ்சம் சீரியசான விஷயங்கள் வந்துடுச்சு. மன்னிச்சு. .

Thursday, March 5, 2015

என் அத்தை !!

"சரி. இப்ப என்ன சொல்ல வர. உங்க அத்த இறந்து 3 வருஷம் ஆயிடுச்சுன்னு சொல்ற. மறந்துட்டேன்னு சொல்ற. திடீர்னு ஏன் அவங்க புகழ்" என்று உங்களுக்கு தோணலாம். ஒன்றுமில்லை. வேலையில்லா பட்டதாரி படம் பார்த்தவுடன் எனக்கு அவர்கள் நினைவு வந்து விட்டது. அதில் அம்மாவாக வரும் சரண்யா போட்டிருந்த கண்ணாடியா, அல்லது தன் மூத்த மகன் மீது வைத்திருந்த பாசமா இல்லை கூட இருக்க சொல்லியும் கிளம்பிப் போய் விட்டதாலா, ஏன் என்று தெரியவில்லை.

'அம்மா அம்மா' என்று ஜானகி பாடும்போது அம்மா நினைப்பில் எல்லோரும் கண் கலங்கினார்கள். எனக்கு என் அத்தை நினைவுதான் வந்தது. அப்போதே பதிவை எழுதி விட்டேன். ஆனால், வெளியிட தோன்றவில்லை. அவர் இருக்கும்போது ஒரு முறை "பின்னாடி நான் என்னோட சுய சரிதையை எழுதும்போது, உங்களைப் பத்தி நெறைய எழுதுவேன்" என்றேன். "கண்டிப்பா அந்த மாதிரி நீ வருவ கண்ணு" என்று மனதார சொன்னார். என்னால் அப்படி எழுத முடியுமா என்று தெரியவில்லை. அதனால், குறைந்தது பதிவாவது இருக்க வேண்டும் என்று பிரசுரித்து விட்டேன்.

நான் பதிவு எழுதுகிறேன் என்று என் நெருங்கிய நண்பர்களிடம் கூட நான் சொன்னது கிடையாது. கூச்சம் என்று எண்ணினாலும் சரி, திமிர் என்றாலும் சரி. ஆனால், அத்தையிடம் மட்டும் சொன்னேன். ஒவ்வொரு பதிவு இடும்போதும் அவரிடம் சொல்வேன். கருத்துக்கள் சொல்வார். "இதையெல்லாம் படிக்கும்போது, கண்டிப்பா பின்னாடி ஒரு புத்தகமாவது எழுதுவ" என்று வேறு உசுப்பேத்துவார்.

கணினியைக் கற்றுக் கொள்ள வேண்டும், பதிவு எழுத வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டார். அவருக்காக நாந்தான் மின்னஞ்சல், முகப்புத்தம், ஏன் ஒரு வலைப்பதிவு கூட ஆரம்பித்தாயிற்று. அந்தப் பதிவு இடவே அவருக்கு ஒரு நாள் ஆனது. ஆனால், ஒரு தாயாக, மாமியாராக, பாட்டியாக அவருக்கு இருந்த கடமைகளால் அதற்கு மேல் அவரால் எழுத முடியவில்லை. நானும் எவ்வளவோ சொன்னேன். நீங்கள் ஒரு நோட்டிலாவது எழுதுங்கள். நான் உங்களுக்கு கணினியில் அடித்துத் தருகிறேன் என்று. "எங்க போயிட போறேன். பாப்பா (மகனின் மகள்) கொஞ்சம் பெருசாகட்டும். அப்புறம் பாத்துக்கலாம்" என்றார்.

எப்போதுமே கொஞ்சம் நிதர்சனமாக பேசுவார். ஆனால், தன் மகன்கள் விஷயத்தில் (என்னையும் சேர்த்து) மட்டும் விட்டுக் கொடுக்கவே மாட்டார். கல்லூரி இறுதி ஆண்டில், நேர்முகத் தேர்வுகளில் கணிப்பொறி நிறுவனங்கள் மாணவர்களை அள்ளி எடுக்க, நானோ தேர்வாகவில்லை. "அவன் மெக்கானிகல் படிக்கறதால, அந்த பீல்டுலதான் போவேன்னு நிக்கிறான்" என்று யார் கேட்டாலும் எனக்காக பதில் சொல்லுவார். ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் கால் சென்டர் நிறுவனங்கள் எல்லாவற்றிற்கும் போனேன். "பொறுமையா இரு. எல்லாம் நல்லதுக்குத்தான்" என்றார். கடைசியில் அவர் ஆசைப்பட்ட மாதிரியே என்னுடைய துறையில் சேர்ந்து, இதுவரை அப்படியே உள்ளேன். (என்னுடைய இப்போதைய நிறுவனம் மென்பொருள்தான், ஆனால் நான் வேலை செய்வது மெக்கானிகல் சார்ந்ததுதான்).

அவர் அமெரிக்கா போன புதிதில், "ஊர்ல மாதிரி இங்க தெனமும் எல்லோருக்கும் போன் பேசாதீங்க" என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். இவரும் எல்லோருக்கும் எதற்கு என்று எனக்கு மட்டும் தினம் இரு முறை பேசுவார். ஆனால், அழைப்பு அட்டை (கால்லிங் கார்டு) மூலம் எப்படி பேசுவதென்று தெரியாமல் எப்படியோ ஏனோதானோவென்று போன் செய்து இரண்டே நாளில் எல்லா காசையையும் அழித்து விட்டார். அவர் மகன் பயங்கரமாக திட்டி, எப்படி டயல் செய்தால் குறைவான காசு என்றெல்லாம் தெரிந்து கொண்டு, மீண்டும் எனக்கு போன் பண்ணி சிரி சிரி என்று சிரித்தார்.

அவரின் இரண்டு மகன்களும் வெளிநாடு போய் விட்டு வந்ததால், நானும் போக வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதனால், திருமணத்திற்கு முன் நிறுவனம் மாறலாம் என்று எண்ணியபோது "கண்ணு, சாப்ட்வேர் கம்பெனியா பாத்துப் போ" என்றார். அவர் ஆசைப்படி எல்லாமே நடந்தது. என்ன, எனக்கு அவர் இறந்து மூன்று நாள் கழித்து விசா நேர்முகத்தேர்வு. முடிந்தவுடன் அவரிடம் சொல்லி ஆச்சரிப்படுத்த வேண்டும் என்றிருந்தேன். அதே போல சென்னையில் நானும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டார். நடக்கும்போது அவர் இல்லை.

அவர், அவரது அண்ணன்கள் என அனைவருக்குமே பையன்கள் என்பதால் (ஒரு தலைமுறைக்கே பெண்கள் இல்லை) அவருக்கு பேத்திதான் வேண்டும் என மிகவும் ஆசைப்பட்டார். அதே போலவே பெண். எனக்கும் பெண்தான் பிறக்கும் என தமிழ்நாடு முதல் சீனா ஜோதிடம் வரை எல்லாம் பார்த்துக் கணித்தார். அதே போலவே பெண்தான் பிறந்தது. அப்போது அவர் இல்லை. சரி விடுங்க.

பெரியாரை பிடிக்கும். ஆனாலும் கடவுள் நம்பிக்கையும் உண்டு. கேட்டதற்கு பெண் விடுதலைக்காகவும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் அவர் உழைத்ததை சொல்லுவார். "பெரியார் மட்டும் இல்லேன்னா, என்ன படிக்க வச்சிருக்க மாட்டாங்க. அது மட்டுமில்லாம, நாம அதிகபட்சம் கணக்கு எழுதத்தான் போயிருக்க முடியும்" என்பார்.

அவரின் இரு மகன்களுக்கும் கிரிக்கெட் மட்டும்தான் பொழுதுபோக்கு. இல்லையென்றால் டிவி. புத்தகம் படிப்பதோ, வெளியில் படம் பார்ப்பதோ கிடையாது. எனவே நானும் அவரும்தான் படம் பார்க்க போவோம். படத்தைப் பற்றி நான் சொன்ன கருத்துகள் ஏதாவது குமுதம், விகடனில் வந்தால் "பாத்தியா கண்ணு, நீ சொன்ன மாதிரியே இவனும் போட்டிருக்கான்" என்பார்.

புத்தக கண்காட்சி காயிதே மில்லத் கல்லூரியில் நடக்கும்போது அவருடன் ஓரிரு முறையே சென்றுள்ளேன். அப்போது நானும் படித்துக் கொண்டிருந்ததால் சும்மா சுற்றிப் பார்ப்பேன், எதுவும் வாங்க மாட்டேன். பின் வேலைக்குப் போக ஆரம்பித்த பின், மைசூரில் இருந்த திரும்பிய போது, பச்சையப்பன் கல்லூரி அருகே மாற்றினார்கள். அது மிகவும் அருகாமையில் என்பதால் இன்னும் வசதியாகி விட்டது. 2007ம் ஆண்டு முதல் 2012 வரை, ஆறு வருடங்களில் நாங்கள் இருவரும் சேர்ந்து கண்டிப்பாக குறைந்தது 20,000 ரூபாய்க்காவது புத்தகங்கள் வாங்கி இருப்போம். நான் பொதுவாக கதைகளாக வாங்குவேன். அவர் வித்தியாச வித்தியாசமான புத்தகங்கள் வாங்குவார். லா. சா. ரா, அசோகமித்திரன், தி. ஜா. என நிறைய வாங்குவார். நான் அவர்களைப் பற்றி கேள்விப்பட்டிருந்தாலும், ஏனோ படிக்க தோன்றியதில்லை.

அவருக்கு டான் பிரௌன், சேத்தன் பகத் புத்தகங்களை நாந்தான் சொன்னேன். அப்போது அவை கல்லூரியில் எல்லோரும் படித்ததால் நானும் படித்தேன். அதன் பின் எப்போது அவர்கள் கதை வந்தாலும், உடனே வாங்கி, எனக்கு முன் படித்து விடுவார். என்னிடம் தி. ஜாவின் 'மரப்பசு' மற்றும் 'அம்மா வந்தாள்' கதைகளைப் படிக்க சொல்லி சொன்னார். நானோ "அதெல்லாம் அழுகாச்சியா இருக்கும்" என்றேன். "நீ மொதல்ல படி, அப்புறம் சொல்லு" என்றார். முதலில் அம்மா வந்தாள் படித்து அரண்டு போய் விட்டேன். அப்படி ஒரு கருவை நான் எதிர் பார்க்கவே இல்லை. அதன் பிறகுதான் மற்றவர்களின் கதைகளையும் படித்தேன்.

இப்போதெல்லாம் மக்கள் தமிழ் இலக்கியம் என்றவுடன் 'பொன்னியின் செல்வன்', 'சிவகாமியின் சபதம்' என்று நினைக்கிறார்கள். புத்தக கண்காட்சியில் வருவோர் போவோர் எல்லாம் அதை வாங்கும்போது சொல்வார் "இவங்க யாரும் இத முழுசா படிக்க மாட்டாங்க. அப்படியே படிச்சாலும் அதுக்கப்புறம் வேறதுவும் வாங்க மாட்டாங்க. இத மட்டும் வீட்டு செல்புல, வர்றவங்க பாக்குற மாதிரி வச்சுக்குவாங்க" என்று சொல்வார். எனது பாட்டி (அவரது அம்மா) அது முதல் முறை கல்கியில் தொடராக வந்ததையே கோர்த்து (பைண்ட்??) ரொம்ப நாள் வைத்திருந்தார்.

2012ம் ஆண்டு கண்காட்சிதான் நாங்கள் (நானும்) கடைசியாக சென்றது. கிட்டத்தட்ட 6000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கினோம். அப்போது சாகித்ய அகாடமி விருது பெற்ற 'காவல் கோட்டம்' புத்தகமும் வாங்கினோம். "எனக்கு படிக்க நேரம் இல்ல. நீ மொதல்ல படி. நான் மத்ததெல்லாம் படிச்சிட்டு இதப் படிக்கிறேன்" என்றார். நானும் பாதி கூட படிக்கவில்லை. அதற்குள் இறந்து விட்டார். இன்று வரை அதை நான் படித்து முடிக்கவில்லை. அதன் பின் புத்தக கண்காட்சிக்கும் செல்லவில்லை. இத்தனைக்கும் இப்போது நடக்கும் நந்தனம், அலுவலகம் மிக அருகில். முன்பே கூறியது போல, இனி மகளுடன் தான் அங்கே செல்வது என்று உள்ளேன்.

கண் பார்வையற்ற, உயர் படிப்பு படிக்கும் மாணவர்களுக்காக பாடம் படிப்பது, தேர்வு எழுதுவது என உதவிகள் செய்வார். ஆனால், அவர் இப்படி செய்வது மிகச் சிலரைத் தவிர யாருக்கும் தெரியாது. பேத்தி பிறந்த பின், வேறு வழியே இல்லாமல் அதை நிறுத்த நேரிட்டது. அவர் மிகவும் வருத்தப்பட்ட விஷயம் அதுதான்.

காலில் வலி இருந்ததால் பொதுவாக ஆட்டோவில்தான் போவார். அவர் இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் அருகே இருந்த ஆட்டோ நிறுத்தத்தில் அவர் எப்போது வந்தாலும் ராஜ மரியாதைதான். ஏனென்றால் பேரம் பேச மாட்டார். எவ்வளவு கேட்டாலும் கொடுப்பார். "அவங்க சங்கத் தலைவியே நீங்கதான்" என்றெல்லாம் சொல்லுவேன். ஒரு முறை நான் அங்கே ஆட்டோ எடுத்தேன். இறங்கும்போது சில்லறை பிரச்சினை. அப்போது அந்த ஓட்டுனர் "நீங்க அங்கயா குடியிருக்கீங்க?" என்றார். நான் "இல்லை. என் அத்தை வீடு அங்கெ உள்ளது" என்று அடையாளம் சொன்னவுடனே "அட விடுங்க சார், நான் அவங்ககிட்ட அடுத்த வாட்டி வாங்கிக்கிறேன்" என்றார். அத்தை இறந்த போது அவர்கள் அனைவரும் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

எப்போதுமே என்னை "கண்ணு" என்று அழகான கொங்கு தமிழில் அழைப்பார். அவரது மகன் உட்பட மற்ற அனைவருமே நான் வந்தால் "உங்க கண்ணு வந்திருச்சு" என்று நக்கல் செய்வார்கள். ஏதாவது வித்தியாசமாக சமைத்தால், நான் எப்படி சாப்பிடுகிறேன் என்று பார்ப்பார். பொதுவாக எனக்கு உப்பு, காரம் எல்லாம் சரி பார்க்கத் தெரியாது. தெரிந்தாலும் அதை வெளியே சொல்ல மாட்டேன். நான் ஒரு வேளை நன்றாக சாப்பிட்டால், அதை அடிக்கடி செய்து தருவார். ஒரு சிலவை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று அவர் சொல்லித்தான் எனக்கே தெரியும். என் மனைவியிடம் அவர் என்னைப் பற்றி சொன்ன நிறைய விஷயங்கள்தான் இன்று வரை என்னை அடி வாங்காமல் காப்பாற்றிக் கொண்டு வருகிறது.

அவர் இருந்த வரை, எல்லோருக்கும் ஒரு உறவுப் பாலமாக இருந்தார். அவரது மகன்கள் அவ்வளவாக யாருடனும் பேச மாட்டார்கள். ஆனால், இவர் எப்படியாவது மாதம் ஒரு முறையாவது அனைத்து சொந்தக்காரர்களிடமும் பேச வைத்து விடுவார். (இன்னைக்கு அவங்க பொறந்த நாள், கல்யாண நாள், விஷ் பண்ணு). அவர் இறந்த பின் அவ்வளவுதான். நானே அங்கு போவதை குறைத்து விட்டேன்.

என்னிடம் உள்ள ஒரு கெட்ட பழக்கம், ஒரு விஷயம் முடிந்து விட்டால், அதை மறந்து விடுவேன், அல்லது நினைக்க மாட்டேன். பள்ளியில் இறுதித் தேர்வு முடிந்து விட்டால் அந்த பாடங்களைப் பற்றி நினைக்க மாட்டேன். அதுவே கல்லூரிக் காலங்களில் எனக்கு எதிராக முடிந்தது. அதே போலத்தான். அத்தை இறந்து விட்டார். இனி எங்களோடு இல்லை. அவரை நினைத்துக் கொண்டு என்ன ஆகப் போகிறது. திதி கொடுக்கக் கூட போகவில்லை. "இருக்கும்போது பச்சைத் தண்ணி கூட கொடுக்காம, செத்தப்புறம் விருந்து வச்சு என்ன செய்ய" என்று நானே அவரிடம் ஒரு முறை வேறொரு சம்பவத்தின் போது கூறி இருக்கிறேன்.

இன்றோடு அவர் இறந்து 3 வருடங்கள் முடிகிறது. வழக்கம் போல இந்த வருடமும் நான் போகவில்லை. ஆனால், அவரைப்பற்றி இன்று ஓரிருவராவது என்னுடைய பதிவைப் படித்து அவருக்காக மனதளவில் வருத்தப்பட்டால் கூட எனக்குப் போதும். என்னைப் பற்றி என் அத்தை புரிந்து கொண்டிருப்பார்.

தொடரலாம்.

Friday, February 20, 2015

என் அத்தை !

இது முந்தைய பதிவின் தொடர்ச்சி. என்னுடைய அனுபவங்களின் பதிவு என்பதால், படிப்பவர்களுக்கு சலிப்பு உண்டாகாமல் இருக்கும் என்று நம்புகிறேன்.

கொங்கு மாவட்டங்களில் உள்ள ஒரு நம்பிக்கை என்னவென்றால், ஆண்:பெண் என்ற குழந்தைகள் விகிதம் 1:3 அல்லது 3:1 என்று இருந்தால், அந்த குடும்பம் உருப்படாமல் போகும். அதே போலவே ஒரு குடும்பத்தில் , என் அப்பாவோடு சேர்த்து இரு அண்ணன்கள், ஒரு தம்பியோடு பிறந்தவர்தான் என் அத்தை.

15 வயது வரை ஒரு வேலை கூட செய்யாமல், சுகமாக பள்ளிக்கு மட்டும் சென்று வந்தவர். வீட்டில் தலை துவட்டக் கூட ஒரு ஆள் என்று சொகுசாக வாழ்ந்தவர். வசதியான குடும்பம். திடீரென தாத்தா இறந்து விட, அனைத்து சொத்துக்களும் கையை விட்டுப் போக, 15 வயதில் மாமா மகனுக்கு வாழ்க்கைப்பட்டு, டெல்லிக்கு சென்றார். அடுத்த வருடமே கையில் ஒரு மகன். எப்படியோ, தட்டித்தடவி, சமாளித்து, சில வருடங்கள் கழித்து சென்னை வந்தனர்.

பாதியில் விட்ட படிப்பை முடித்து விட்டு பட்டப் படிப்பும், பின் ஆசிரியர் பயிற்சி படிப்பும் படித்தார். சில வருடங்கள் கழித்து, சகோதரர்களுக்கு திருமணம் நடந்தது. இன்னொரு மகன் பிறந்தான். ஏற்கனவே 3 சகோதரர்கள், பிறந்த இரண்டுமே ஆண்கள் என்பதால், சகோதரர்களுக்காவது பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று வேண்டினார். 'ஆர்த்தி' என்ற பெயரும் தயார்.

முதல் அண்ணனுக்கு பையன். சரி, போனால் போகிறது, 'அரவிந்த்' (நானேதான்) என்று பெயர் அவரே எடுத்துத் தந்தார். இரண்டாவது அண்ணனுக்கும் பையன் .பொறுத்துக்கொண்டு 'அஷ்வின்' என்று பெயர் வைத்தார். மொத்தமாக மூன்று அண்ணன்களுக்கும் சேர்த்து நான்கு மருமகன்கள் தான் அவருக்கு வாய்த்தனர். கடைசியில், தனது கணவரின் தங்கைக்கு பிறந்த பெண் குழந்தைக்கு 'ஆர்த்தி' என்று பெயர் வைத்து தன் ஆசையைத் தீர்த்துக் கொண்டார்.

நாங்கள் நாமக்கல்லிலும், அவர் சென்னையிலும் என்றாலும், என்னுடைய வளர்ச்சியை கவனித்துக் கொண்டேதான் இருந்தார். அவர் எப்போதாவதுதான் ஊருக்கு வருவார், அது மட்டுமின்றி அவரின் மகன்களும் என்னை விட பெரியவர்கள், சென்னையில் வளர்பவர்கள் என்பதால் ஊரில் ரொம்ப நாட்கள் இருக்க மாட்டார்கள். எனக்கும் அப்போதெல்லாம் அவரிடம் அவ்வளவு பாசமாக இல்லை. பார்த்தால் கொஞ்ச நேரம் பேசி விட்டு ஓடி விடுவேன், என்றாலும், என் மேல் அவருக்கு கொஞ்சம் பாசம் அதிகம். மூத்த மருமகன் என்பதாலும் இருக்கலாம், அல்லது அடுத்த தலைமுறைகளில் நான் மட்டும் புத்தகம் படிப்பவன் என்பதாலும் இருக்கலாம்.

சொல்ல மறந்து விட்டேனே. அவர் ஆங்கில இலக்கியம் படித்தவர். சிறு வயதிலேயே ஆனந்த விகடன், குமுதம் மட்டுமின்றி கல்கி, சாண்டில்யன், தேவன், அசோகமித்திரன் என்று படித்தவர். ஆங்கில இலக்கியம் படிக்கும்போதே ஷேக்ஸ்பியர், பால் கோகேலோ எல்லாம் படித்தவர். அதே போலவே அவரின் சகோதரர்களும்தான். ஆனால், ஒரு வாரிசு கூட படிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. நானும் ஒன்றும் அவ்வளவு பெரிதாக படிப்பதில்லை. (என்னுடைய படிப்பு ஆர்வத்தை நீங்கள் இந்த ஆரம்பம், இடைநிலை, உயர்நிலை, மேல்நிலை, கல்லூரி பதிவுகளில் தெரிந்து கொள்ளலாம்). ஆனாலும், "இதாவது படிக்கிறானே" என்று சந்தோசப்பட்டவர்.

நன்கு விவரம் அறிந்த பதிமன் பருவங்களில், என் அம்மாவின் தொந்தரவு தாளாமல் அத்தைக்கு கடிதம் எழுத ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட நான்கு வருடங்கள், நிறைய கடிதங்கள் "இதைப்படி, அதைப்பற்றி தெரிந்து கொள்" என்று அன்பாகவும், என்னுடைய ஆர்வத்தைப் புரிந்து கொண்டும் என்ன செய்ய வேண்டும் என்று எழுதுவார். அப்போதுதான் கொஞ்சம் அத்தையின் மேல் பாசம் வந்தது. இன்னமும் அந்தக் கடிதங்கள் என்னிடம் பத்திரமாக உள்ளன.

இந்நிலையில் திடீரெனெ மாமா மாரடைப்பால் காலமானார். சென்னையில் சொந்த வீடு கொஞ்சம் சேமிப்பு என்று இருந்தாலும், இதனால் மிகவும் பாதிக்கப்பட்டார். பணம் இருந்தாலும், ஒரு மாறுதலுக்காகவும், தேவைகளை சமாளிக்கவும் ஆசிரியையாக வேலைக்குப் போனார். கிட்டத்தட்ட 5 வருடங்கள் ஆசிரியையாக வேலை பார்த்தார். ஒரு மாணவரைக் கூட அடித்ததோ, கடிந்து பேசியதோ கிடையாது. கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்தும் அவருடன் நிறைய மாணவர்கள் தொடர்பில் இருந்தது கண்டு நான் வியந்துள்ளேன்.

அதுவரை சென்னைக்கு மிகக் குறைவான முறையே நான் போயிருந்தேன். பத்தாம் வகுப்பு தேர்வுகள் முடிந்ததும், சென்னைக்கு அனுப்ப சொல்லி அத்தை கேட்க, என்னை அனுப்பினார்கள். கிட்டத்தட்ட ஒரு மாதம் சென்னையில். எனக்காக எல்லாம் பார்த்துப் பார்த்து செய்தார். திரும்பி வந்து மேல்நிலைக்கல்வியில் கொஞ்சம் 'பிசி' ஆகிவிட்டேன். அத்தையின் இரண்டாவது மகனும் (என்னைவிட ஒரு வருடம் மூத்தவர்) +2 என்பதால் கடிதத் தொடர்பும் சற்றே குறைந்து விட்டது.

அதன் பின் சென்னையில் கல்லூரி சேர்ந்தாலும், அவ்வளவாக அங்கே போகவில்லை. தோணவும் இல்லை. அவர்களும் கூப்பிட்டுக் கொண்டே இருந்தார். பேருந்தில் பயணம் செய்து, கொஞ்ச தூரம் நடந்து போக வேண்டும் என்பதால், ஓரிரு முறை மட்டுமே முதல் வருடத்தில் சென்றேன். மூத்த மகனுக்கு அதற்குள் வேலை கிடைக்க, அதன் பொருட்டு இடம் மாறினார்கள். புது இடம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகில். நான் குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகில். எனவே அதன் பின் எல்லா வாரமும் செல்ல ஆரம்பித்தேன்.

அதற்குக் காரணம் பாசம் என்று மட்டும் சொல்ல முடியாது. அங்கே இருந்த கணினி , இணையம் இணைப்பு, தொலைகாட்சி மற்றும் புத்தகங்கள். என் நண்பர்கள் அனைவருமே "உண்மைய சொல்லு, உங்க அத்த வீட்டுல பொண்ணு இருக்குதான?" என்று ஓட்டும் அளவிற்கு அடிக்கடி சென்றேன். அத்தை ஆங்கில ஆசிரியை என்பதால் அருகில் உள்ள அனைத்து சொந்தக்காரர்களும் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க இங்கே அனுப்புவார்கள். அவர்களும் ஆர்வத்துடன் வருவார்கள். காரணம் முதலில் அவர்களுக்கு (வீட்டில் அவர்களுக்கு கொடுக்காத, அவர்களுக்கு பிடித்தமானவற்றை) சாப்பிடக் கொடுப்பார். நிறைய விளையாட விடுவார். பாடத்தையும் சொல்லிக்குடுத்து விடுவார்.

நானும் தமிழ் வழிக்கல்வி என்றாலும், தட்டித்தடவி ஆங்கிலம் பேச உதவினார். கல்லூரி இறுதி வருடத்தில் ஒவ்வொரு நிறுவனத்தின் நேர்முகத் தேர்வில் தவறும்போதேல்லா "விடு கண்ணு, இத விட பெருசா நமக்கு கண்டிப்பா கெடைக்கும்" என்றெல்லாம் ஆறுதல் அளிப்பார். அதன் பின் வேலை கிடைத்து மைசூருக்கு சென்று விட்டேன். ஒரு வருடம் கழித்துதான் சென்னை வந்தேன். தினமும் ஒரு முறையாவது பேசி விடுவார்.

சென்னை வந்த பின் மீண்டும் விடுமுறைகளில் அங்கேதான். அப்போது அவரது மூத்த மகனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்தனர். பல்வேறு காரணங்களால் தடங்கல்கள். "நீ மட்டும் பொண்ணா பொறந்திருந்தா இவ்ளோ கஷ்டம் எனக்கு வந்திருக்குமா?" என்று செல்லாமாக கோவித்துக் கொண்டார். "மூணு பேர்ல ஒருத்தனாவது லவ் பண்ணுங்கடா" என்று செல்லமாக அலுத்துக் கொண்டார். கடைசியாக கல்யாணமும் நடந்தது.

ஒரு மாமியாராக இல்லாமல், ஒரு அன்பான தாயாக, தனது மகனின் அன்பை இன்னொரு புதிதாக வந்த பெண் பகிர்ந்துக் கொள்ளப் போகிறாள் என்பதால், எல்லாவற்றிற்கும் தயாராகவே இருந்தார். அப்படி எதுவும் நடக்கவில்லை. அதே நேரத்தில் அவரது இளைய மகன் அமெரிக்கா சென்றார். இவரையும் வர வேண்டும் என்று சொல்ல, ஒரு இரண்டு வருடங்கள் காடாறு மாதம் நாடாறு மாதம் என்று ஓட்டினார்.

இந்த நிலையில் எனக்கும் திருமணம் நிச்சயம் ஆனது. அந்த சமயம் அவர் இங்கு இல்லை. அவர் திரும்பி வந்த பின்தான் திருமணம் என்பதால் மூன்று மாதங்கள் தள்ளி தேதி வைக்கப்பட்டது. அதுவரை தினமும் இரண்டு முறை போன் செய்து பேசுபவர், அதன் பின் என்னை "எப்போ பிரீயா இருக்கியோ, அப்போ மிஸ்ஸிடு கால் கொடு, நான் பண்றேன்" என்றார். திருமணம் முடிந்த பின் அதிகமாக அங்கு செல்லவில்லை. வீட்டுக்கு போனாலும் சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் இருந்து விட்டு உடனே வந்து விடுவோம்.

அதற்குள் சில பல உட்கட்சிப் பூசல்களினால் எங்களுக்குள்ளேயே சில மனஸ்தாபங்கள். அதனால் அவர் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டார். அதன் பின் மனைவி கர்ப்பமாக இருந்த போது ஊருக்குப் போனதால் நானும் மீண்டும் அடிக்கடி அத்தை வீட்டிற்கு போனேன். ஊரில் ஒரு திருமணம். அதனால் அனைவரும் அங்கே வந்திருந்தனர். அங்கே சிலர் பேசிய பேச்சுக்கள், ஏற்கனவே வீட்டில் இருந்த குழப்பங்கள், திடீரென மகனுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு எல்லாம் அவர் மனதை பாதித்து விட்டன.

சென்னைக்கு வந்த பின் என்னிடம் மட்டும் நடுவில் ஒரு நாள் தூங்கும்போது நெஞ்சு வலித்தது என்றும், யாரிடமும் சொல்லவில்லை என்றும் கூறினார். அதனால் சண்டை போட்டு, ஏற்கனவே சர்க்கரை, ரத்த அழுத்தம் எல்லாம் இருந்ததால், ஒரு முழு உடல் பரிசோதனை செய்யலாம் என்று எல்லாம் புக் பண்ணி வைத்தார்.

வழக்கம் போல ஒரு சனியன்று வீட்டிற்கு போனேன். அன்று இரவு அங்கேயே தங்கி விட்டு, அடுத்த நாள் மாலை வீட்டிற்கு கிளம்பினேன். "இருந்துட்டு காலைல இங்கே இருந்தே ஆபிஸ் போயேன்? நாங்க வெளிய போறோம்." என்றார். நானோ "எனக்கு அங்க கொஞ்சம் வேல இருக்கு" என்று கிளம்பி விட்டேன். வந்து ஒன்றும் பெரிதாக கிழிக்கவில்லை. மனைவியுடன் போனில் கடலை போட்டு விட்டு தூங்கி விட்டேன்.

திடீரென நள்ளிரவு 2 மணிக்கு போன். அத்தை வீட்டுக்கு பக்கத்து வீட்டுகாரர் "அரவிந்த், உடனே கெளம்பி வா, அத்த இறந்துட்டாங்க" என்றார். அவரது கணவரைப் போலவே, அவரது 53ம் வயதில் மாரடைப்பால் காலமானார். எல்லோரும் வந்தார்கள். எல்லாமும் முடிந்தது. அதன் பின் என் அத்தையை நான் மறந்து விட்டேன். இன்னும் சில தினங்களில் மூன்று ஆண்டும் முடியப் போகிறது. என்ன வாழ்க்கடா இது.

தொடரும்..

Monday, February 16, 2015

சினிமா 2015 - 'ஐ' முதல் 'அனேகன்' வரை

மொக் 'ஐ':
 

இந்த சங்கருக்கு (என்னது, அப்படி சொல்லக்கூடாதா? அப்புறம், ஓ சரி சரி) ஷங்கருக்கு என்னதான் ஆச்சு? ஊர்ல ஒரே மாவ வச்சி வட, பஜ்ஜி, போண்டா சுடர மாதிரி, ஒரே கதைய வச்சி (நண்பன்/மகள்/தங்கை இறக்க வேண்டும். அதற்கு காரணமான சமுதாய பிரச்சினையைத் தீர்க்க கொலை செய்ய/கொள்ளை அடிக்க வேண்டும்), கொஞ்சம் கொஞ்சம் திரைக்கதைய மாத்தி (உபயம், சுஜாதா) கொஞ்சம் ஒப்பெத்திட்டாறு. அப்புறமா ரஜினிய வச்சி ரெண்டு படம். அப்புறம் என்ன செய்யறது? விஜய்தான் கெடச்சாரு. அவரு முடிய வெட்டவே ஒத்துக்க மாட்டாரே? சரி ஒப்பெத்துவோம்னு சொல்லி 'நண்பன்' ஆயிட்டாரு. அப்புறமா, நம்ம விக்ரம் சிக்குனாறு. அப்ப சந்தோசத்துல 'ஐ'ன்னு ச அடச்சே ஷங்கர் குதிச்சதுல, விக்ரம் 'ஐ' சூப்பர் டைட்டில்னு நெனைக்க, நமக்கு 'ஐ ஐ'ஓன்னு ஆயிடுச்சு.

நம்ம ஹாய் மதன், ஜெயா டிவியில 'அந்நியன்' படம் வரும்போது ஒன்னு சொன்னாரு. 'ஷங்கர் வெளிநாட்டுல இருக்குற மாதிரி வீடியோ ஆல்பம் எடுக்கலாம். கண்டிப்பா நல்லா வரும்' அப்டின்னாரு. அத மறுபடி யாராவது ஷங்கர்கிட்ட சொன்னா பரவால்ல. அதே போல, ரயிலுக்கு, வீட்டுக்கும் கலரடிச்ச நேரத்துல, கொஞ்சம் கதைய நல்லா யோசிச்சிருக்கலாம்னு சொன்னாரு. 'ஐ' பாக்கும்போது எனக்கும் அதே நெனப்புதான். 10 வெளம்பரம், 5 பாட்டு எடுக்க உக்காந்து யோசிச்சீங்களே, இன்னும் கொஞ்சம் திரைக்கதையை யோசிக்கக் கூடாதா?

தாங்கல-ஆம்பள:

சில படங்கள தரவிறக்கம் பண்ணி பாக்கும்போது, "அடடா, இத தியேட்டர்ல போயி பாத்திருக்கலாமே" அப்டீன்னு தோணும். இன்னும் ஒரு சில படங்கள அப்படி பாக்கும்போது, தேவையில்லாம இப்ப நேரத்த வீணடிச்சுட்டோம்னு வருத்தப்படுறதா, இல்ல காசு மிச்சம்னு சந்தோசப்படுறதா அப்டின்னு கொழப்பம் வரும். இது அந்த வகைய சேந்தது. பொதுவாவே சுந்தர் C மேல ஒரு மருவாதி இருந்தது. 'Soul Kitchen' படம் பாத்தப்ப கூட ஒன்னும் தோணல. ஆனா, அப்ப கொடுத்த ஒரு பேட்டிலதான் செம காண்டு. அதுக்கப்புறம் அரண்மனை படத்துல மொத சீனே கடுப்பாயிடுச்சு. ஏன்னு கேக்குறவுங்க 1408ன்னு ஒரு பேய்ப்படம் பாருங்க தெரியும். தம்பி விஷாலு, இப்படியே படம் எடுத்தேன்னா பாக்டரிய இழுத்து மூட வேண்டியதுதான்.

'டர்ர்'லிங்க்:

ஏற்கனவே இதன் மூலமான 'பிரேம கதா சித்திரம்' படத்தையும், அதை வைத்து காப்பியடிக்கப்பட்ட '1 பந்து 4 ரன் 1 விக்கட்' படத்தையும் ஏற்கனவே பார்த்திருந்ததால், அவ்வளவு பெரிய ஈர்ப்பில்லை. ஆனாலும், அதையும் தாண்டி சற்றே கவனத்தை ஈர்த்தது. நகைச்சுவை அளவுக்கு மீறாமல் நன்றாகவே எடுத்திருந்தனர். முதல் பாதியில் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம். கார் திருடுவது, மந்திரியை அடிப்பது எல்லாம் கொஞ்சம் மொக்கை. மற்றபடி, மற்ற இரண்டு படங்களுக்கு, எவ்வளவோ தேவலை.

என்னை அரிந்தால்:

தலைப்பில் எழுத்துப்பிழை எதுவும் இல்லை. சுப்ரமணியபுரம் படத்தில் வருவது போல அறுக்கவில்லை என்றாலும், கொஞ்சம் மொக்கைதான். எப்போதும் போல தமிழ், ஆங்கில கெட்ட வார்த்தை பேசும் நாயகன், விவாகரத்தான நாயகி (ஒரு படத்துல சரி, எல்லாப் படத்துலயுமா?) இறக்கின்ற ஒரு நாயகி, பழி வாங்கல் என 'முடியல'. கொஞ்சம் கோட்டுக்கு இந்தப் பக்கமும் வாங்க நாயரே. ஓ மன்னிக்கணும் மேனன் சார்.

இ'ச்சை':

ஆங்கிலத்திலும்,ஹிந்தியிலும் இப்போதெல்லாம் உயிரோடு உள்ள பெரிய ஆட்களின் வாழ்க்கை வரலாறை எடுக்கிறார்கள். படங்கள் சொதப்பலாக இருந்தாலும், அவர்களை யாரும் கேவலப்படுத்தவில்லை. தமிழில் முன்பொரு காலத்தில் நிறைய வந்தன. தற்போது ராஜசேகரன் மட்டும் பெரியார், பாரதி, ராமானுஜன் என்று இல்லாத சாதனையாளர்கள் பற்றி எடுக்கிறார்.

இந்தப் படம் பற்றி சூர்யா கூறும்போது, ஒருவரின் வளர்ச்சியினால் பாதிக்கப்படும் இன்னொருவரின் சூழ்ச்சிகளே இந்த கதை. அது இசைத்துறை. அவ்வளவுதான். என்றார். எல்லாம் சரிதான். ஆனால், அந்த பெரிய இசையமைப்பாளர் சொல்லும் வார்த்தைகளும் ("நான் துப்பறதுதான் இசை") நடந்து கொள்ளும் விதமும் (முகத்தில் தூக்கி விசிறி அடிப்பது - தளபதி சமயத்தில் நடந்தது என நான் கேள்விப்பட்டுள்ளேன், இந்தப்படம் வருவதற்கு முன்பே), இசைக்கடல், இசை வேந்தன் போன்றவை, சத்யராஜை சரஸ்வதியை கும்பிடுவராகவும், சூர்யா 'வேறு' மதத்தை சேர்ந்தவராக காட்டியதும், இயக்குனர் தன்னுடைய அடுத்த படத்திற்கு (அவமானப்படுத்தப்பட்ட படம் வேறு) இசையமைக்க கூப்பிடுவதும், அது மட்டுமின்றி, பிரகாஷ்ராஜ் நடிக்கவில்லை என்றவுடன் கங்கை அமரனை நடிக்க வைக்க முயற்சி செய்தது எல்லாம் வைத்துப் பார்த்தால், ஒன்று சூர்யாவுக்கு ரஹ்மானை ரொம்பப் பிடித்திருக்க வேண்டும் அல்லது இளையராஜாவால் ரொம்ப அவமானப்பட்டிருக்க வேண்டும் அல்லது இவை இரண்டுமேவாக கூட இருக்கலாம்.

பொதுவாக ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான ஆட்களின் எதிராளியை, எதிரியாக நினைத்து அவர்களை திட்டுவதும், கேவலமாக பேசுவதும் பரம்பரை பரம்பரையாக நடப்பதுதான். ஆனால், படமாகவே எடுப்பது இதுதான் முதல் முறை. இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும்.

இந்தப் படத்தின் இறுதிக் காட்சியை 'மிகப் பெரிய திருப்பம்' என்று சொல்லுபவர்கள் எல்லாம், இருபது வருடத்திற்கு முந்தைய குமுதத்தில் வந்த ஒரு பக்க கதை, சிறுகதைகளை படிக்க வேண்டுகிறேன். அதெல்லாம் முடியாது என்பவர்கள், சிவாஜி நடித்த 'முதல் தேதி' என்ற படத்தைப் பார்க்கவும்.

உலகத்தில் எல்லோருக்குமே, ஒரு முறையாவது வக்கிரமான எண்ணங்கள் தோன்றும். 99 சதவிகித மக்கள் தைரியமின்றி, அதைக் கற்பனையில் மட்டுமே நடத்தி கொள்வார்கள். வெகு சிலர் அதை செய்து பார்க்க வேண்டுமென்று எண்ணி, கொடூரமான சைக்கோவாக மாறுவார்கள். இன்னும் சில பேர், அதை கலை என்ற பெயரில் படமாக எடுத்து மற்றவர்களுக்கு அந்த எண்ணங்களை அதிகரிக்க செய்வார்கள். நிறைய ஆங்கிலப் படங்கள் இதற்கு உதாரணம். தமிழில் நடுநிசி நாய்கள், பாய்ஸ், மற்றும் சூர்யா படங்கள். இன்னும் நிறைய உள்ளன. நினைவுக்கு வந்தவை இவைதான்.

"ஒரு படத்த படமா பாக்கணும். இப்ப காந்தி படத்தப் பாத்தா நீ என்ன திருந்திருவியா?" என்று கேட்காதீர்கள். எப்போதுமே நல்ல விஷயங்களை விட கெட்ட விஷயங்கள் வேகமாக பரவும். ஒரு குடம் பாலில் ஒரு சொட்டு விஷம் விழுவது போலத்தான்.

மற்றவை:

இவை தவிர சென்ற ஆண்டு இறுதியில் வந்த மீகாமன், வெள்ளைக்கார துரை போன்றவற்றை பார்த்தேன். ஒரு முறை பார்க்கலாம். நடு நடுவே புலன் விசாரணை - 2, தொட்டால் தொடரும், தரணி என நிறைய பார்க்கவில்லை. தரணி நன்றாக உள்ளதாக கேள்வி. ஆனாலும் படம் ஓடும் நேரமும் நமது நேரமும் ஒன்றவில்லை. தரவிறக்கமும் செய்ய முடியவில்லை. இன்னமும் அனேகனும் பார்க்கவில்லை. ஓரிரு நாளில் பார்த்த பின், ஏதாவது (B)பிட்டு போடுகிறேன். இல்லையென்றால் நீங்கள் தப்பித்ததாக எண்ணிக் கொள்ளுங்கள்.