Thursday, March 5, 2015

என் அத்தை !!

"சரி. இப்ப என்ன சொல்ல வர. உங்க அத்த இறந்து 3 வருஷம் ஆயிடுச்சுன்னு சொல்ற. மறந்துட்டேன்னு சொல்ற. திடீர்னு ஏன் அவங்க புகழ்" என்று உங்களுக்கு தோணலாம். ஒன்றுமில்லை. வேலையில்லா பட்டதாரி படம் பார்த்தவுடன் எனக்கு அவர்கள் நினைவு வந்து விட்டது. அதில் அம்மாவாக வரும் சரண்யா போட்டிருந்த கண்ணாடியா, அல்லது தன் மூத்த மகன் மீது வைத்திருந்த பாசமா இல்லை கூட இருக்க சொல்லியும் கிளம்பிப் போய் விட்டதாலா, ஏன் என்று தெரியவில்லை.

'அம்மா அம்மா' என்று ஜானகி பாடும்போது அம்மா நினைப்பில் எல்லோரும் கண் கலங்கினார்கள். எனக்கு என் அத்தை நினைவுதான் வந்தது. அப்போதே பதிவை எழுதி விட்டேன். ஆனால், வெளியிட தோன்றவில்லை. அவர் இருக்கும்போது ஒரு முறை "பின்னாடி நான் என்னோட சுய சரிதையை எழுதும்போது, உங்களைப் பத்தி நெறைய எழுதுவேன்" என்றேன். "கண்டிப்பா அந்த மாதிரி நீ வருவ கண்ணு" என்று மனதார சொன்னார். என்னால் அப்படி எழுத முடியுமா என்று தெரியவில்லை. அதனால், குறைந்தது பதிவாவது இருக்க வேண்டும் என்று பிரசுரித்து விட்டேன்.

நான் பதிவு எழுதுகிறேன் என்று என் நெருங்கிய நண்பர்களிடம் கூட நான் சொன்னது கிடையாது. கூச்சம் என்று எண்ணினாலும் சரி, திமிர் என்றாலும் சரி. ஆனால், அத்தையிடம் மட்டும் சொன்னேன். ஒவ்வொரு பதிவு இடும்போதும் அவரிடம் சொல்வேன். கருத்துக்கள் சொல்வார். "இதையெல்லாம் படிக்கும்போது, கண்டிப்பா பின்னாடி ஒரு புத்தகமாவது எழுதுவ" என்று வேறு உசுப்பேத்துவார்.

கணினியைக் கற்றுக் கொள்ள வேண்டும், பதிவு எழுத வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டார். அவருக்காக நாந்தான் மின்னஞ்சல், முகப்புத்தம், ஏன் ஒரு வலைப்பதிவு கூட ஆரம்பித்தாயிற்று. அந்தப் பதிவு இடவே அவருக்கு ஒரு நாள் ஆனது. ஆனால், ஒரு தாயாக, மாமியாராக, பாட்டியாக அவருக்கு இருந்த கடமைகளால் அதற்கு மேல் அவரால் எழுத முடியவில்லை. நானும் எவ்வளவோ சொன்னேன். நீங்கள் ஒரு நோட்டிலாவது எழுதுங்கள். நான் உங்களுக்கு கணினியில் அடித்துத் தருகிறேன் என்று. "எங்க போயிட போறேன். பாப்பா (மகனின் மகள்) கொஞ்சம் பெருசாகட்டும். அப்புறம் பாத்துக்கலாம்" என்றார்.

எப்போதுமே கொஞ்சம் நிதர்சனமாக பேசுவார். ஆனால், தன் மகன்கள் விஷயத்தில் (என்னையும் சேர்த்து) மட்டும் விட்டுக் கொடுக்கவே மாட்டார். கல்லூரி இறுதி ஆண்டில், நேர்முகத் தேர்வுகளில் கணிப்பொறி நிறுவனங்கள் மாணவர்களை அள்ளி எடுக்க, நானோ தேர்வாகவில்லை. "அவன் மெக்கானிகல் படிக்கறதால, அந்த பீல்டுலதான் போவேன்னு நிக்கிறான்" என்று யார் கேட்டாலும் எனக்காக பதில் சொல்லுவார். ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் கால் சென்டர் நிறுவனங்கள் எல்லாவற்றிற்கும் போனேன். "பொறுமையா இரு. எல்லாம் நல்லதுக்குத்தான்" என்றார். கடைசியில் அவர் ஆசைப்பட்ட மாதிரியே என்னுடைய துறையில் சேர்ந்து, இதுவரை அப்படியே உள்ளேன். (என்னுடைய இப்போதைய நிறுவனம் மென்பொருள்தான், ஆனால் நான் வேலை செய்வது மெக்கானிகல் சார்ந்ததுதான்).

அவர் அமெரிக்கா போன புதிதில், "ஊர்ல மாதிரி இங்க தெனமும் எல்லோருக்கும் போன் பேசாதீங்க" என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். இவரும் எல்லோருக்கும் எதற்கு என்று எனக்கு மட்டும் தினம் இரு முறை பேசுவார். ஆனால், அழைப்பு அட்டை (கால்லிங் கார்டு) மூலம் எப்படி பேசுவதென்று தெரியாமல் எப்படியோ ஏனோதானோவென்று போன் செய்து இரண்டே நாளில் எல்லா காசையையும் அழித்து விட்டார். அவர் மகன் பயங்கரமாக திட்டி, எப்படி டயல் செய்தால் குறைவான காசு என்றெல்லாம் தெரிந்து கொண்டு, மீண்டும் எனக்கு போன் பண்ணி சிரி சிரி என்று சிரித்தார்.

அவரின் இரண்டு மகன்களும் வெளிநாடு போய் விட்டு வந்ததால், நானும் போக வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதனால், திருமணத்திற்கு முன் நிறுவனம் மாறலாம் என்று எண்ணியபோது "கண்ணு, சாப்ட்வேர் கம்பெனியா பாத்துப் போ" என்றார். அவர் ஆசைப்படி எல்லாமே நடந்தது. என்ன, எனக்கு அவர் இறந்து மூன்று நாள் கழித்து விசா நேர்முகத்தேர்வு. முடிந்தவுடன் அவரிடம் சொல்லி ஆச்சரிப்படுத்த வேண்டும் என்றிருந்தேன். அதே போல சென்னையில் நானும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டார். நடக்கும்போது அவர் இல்லை.

அவர், அவரது அண்ணன்கள் என அனைவருக்குமே பையன்கள் என்பதால் (ஒரு தலைமுறைக்கே பெண்கள் இல்லை) அவருக்கு பேத்திதான் வேண்டும் என மிகவும் ஆசைப்பட்டார். அதே போலவே பெண். எனக்கும் பெண்தான் பிறக்கும் என தமிழ்நாடு முதல் சீனா ஜோதிடம் வரை எல்லாம் பார்த்துக் கணித்தார். அதே போலவே பெண்தான் பிறந்தது. அப்போது அவர் இல்லை. சரி விடுங்க.

பெரியாரை பிடிக்கும். ஆனாலும் கடவுள் நம்பிக்கையும் உண்டு. கேட்டதற்கு பெண் விடுதலைக்காகவும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் அவர் உழைத்ததை சொல்லுவார். "பெரியார் மட்டும் இல்லேன்னா, என்ன படிக்க வச்சிருக்க மாட்டாங்க. அது மட்டுமில்லாம, நாம அதிகபட்சம் கணக்கு எழுதத்தான் போயிருக்க முடியும்" என்பார்.

அவரின் இரு மகன்களுக்கும் கிரிக்கெட் மட்டும்தான் பொழுதுபோக்கு. இல்லையென்றால் டிவி. புத்தகம் படிப்பதோ, வெளியில் படம் பார்ப்பதோ கிடையாது. எனவே நானும் அவரும்தான் படம் பார்க்க போவோம். படத்தைப் பற்றி நான் சொன்ன கருத்துகள் ஏதாவது குமுதம், விகடனில் வந்தால் "பாத்தியா கண்ணு, நீ சொன்ன மாதிரியே இவனும் போட்டிருக்கான்" என்பார்.

புத்தக கண்காட்சி காயிதே மில்லத் கல்லூரியில் நடக்கும்போது அவருடன் ஓரிரு முறையே சென்றுள்ளேன். அப்போது நானும் படித்துக் கொண்டிருந்ததால் சும்மா சுற்றிப் பார்ப்பேன், எதுவும் வாங்க மாட்டேன். பின் வேலைக்குப் போக ஆரம்பித்த பின், மைசூரில் இருந்த திரும்பிய போது, பச்சையப்பன் கல்லூரி அருகே மாற்றினார்கள். அது மிகவும் அருகாமையில் என்பதால் இன்னும் வசதியாகி விட்டது. 2007ம் ஆண்டு முதல் 2012 வரை, ஆறு வருடங்களில் நாங்கள் இருவரும் சேர்ந்து கண்டிப்பாக குறைந்தது 20,000 ரூபாய்க்காவது புத்தகங்கள் வாங்கி இருப்போம். நான் பொதுவாக கதைகளாக வாங்குவேன். அவர் வித்தியாச வித்தியாசமான புத்தகங்கள் வாங்குவார். லா. சா. ரா, அசோகமித்திரன், தி. ஜா. என நிறைய வாங்குவார். நான் அவர்களைப் பற்றி கேள்விப்பட்டிருந்தாலும், ஏனோ படிக்க தோன்றியதில்லை.

அவருக்கு டான் பிரௌன், சேத்தன் பகத் புத்தகங்களை நாந்தான் சொன்னேன். அப்போது அவை கல்லூரியில் எல்லோரும் படித்ததால் நானும் படித்தேன். அதன் பின் எப்போது அவர்கள் கதை வந்தாலும், உடனே வாங்கி, எனக்கு முன் படித்து விடுவார். என்னிடம் தி. ஜாவின் 'மரப்பசு' மற்றும் 'அம்மா வந்தாள்' கதைகளைப் படிக்க சொல்லி சொன்னார். நானோ "அதெல்லாம் அழுகாச்சியா இருக்கும்" என்றேன். "நீ மொதல்ல படி, அப்புறம் சொல்லு" என்றார். முதலில் அம்மா வந்தாள் படித்து அரண்டு போய் விட்டேன். அப்படி ஒரு கருவை நான் எதிர் பார்க்கவே இல்லை. அதன் பிறகுதான் மற்றவர்களின் கதைகளையும் படித்தேன்.

இப்போதெல்லாம் மக்கள் தமிழ் இலக்கியம் என்றவுடன் 'பொன்னியின் செல்வன்', 'சிவகாமியின் சபதம்' என்று நினைக்கிறார்கள். புத்தக கண்காட்சியில் வருவோர் போவோர் எல்லாம் அதை வாங்கும்போது சொல்வார் "இவங்க யாரும் இத முழுசா படிக்க மாட்டாங்க. அப்படியே படிச்சாலும் அதுக்கப்புறம் வேறதுவும் வாங்க மாட்டாங்க. இத மட்டும் வீட்டு செல்புல, வர்றவங்க பாக்குற மாதிரி வச்சுக்குவாங்க" என்று சொல்வார். எனது பாட்டி (அவரது அம்மா) அது முதல் முறை கல்கியில் தொடராக வந்ததையே கோர்த்து (பைண்ட்??) ரொம்ப நாள் வைத்திருந்தார்.

2012ம் ஆண்டு கண்காட்சிதான் நாங்கள் (நானும்) கடைசியாக சென்றது. கிட்டத்தட்ட 6000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கினோம். அப்போது சாகித்ய அகாடமி விருது பெற்ற 'காவல் கோட்டம்' புத்தகமும் வாங்கினோம். "எனக்கு படிக்க நேரம் இல்ல. நீ மொதல்ல படி. நான் மத்ததெல்லாம் படிச்சிட்டு இதப் படிக்கிறேன்" என்றார். நானும் பாதி கூட படிக்கவில்லை. அதற்குள் இறந்து விட்டார். இன்று வரை அதை நான் படித்து முடிக்கவில்லை. அதன் பின் புத்தக கண்காட்சிக்கும் செல்லவில்லை. இத்தனைக்கும் இப்போது நடக்கும் நந்தனம், அலுவலகம் மிக அருகில். முன்பே கூறியது போல, இனி மகளுடன் தான் அங்கே செல்வது என்று உள்ளேன்.

கண் பார்வையற்ற, உயர் படிப்பு படிக்கும் மாணவர்களுக்காக பாடம் படிப்பது, தேர்வு எழுதுவது என உதவிகள் செய்வார். ஆனால், அவர் இப்படி செய்வது மிகச் சிலரைத் தவிர யாருக்கும் தெரியாது. பேத்தி பிறந்த பின், வேறு வழியே இல்லாமல் அதை நிறுத்த நேரிட்டது. அவர் மிகவும் வருத்தப்பட்ட விஷயம் அதுதான்.

காலில் வலி இருந்ததால் பொதுவாக ஆட்டோவில்தான் போவார். அவர் இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் அருகே இருந்த ஆட்டோ நிறுத்தத்தில் அவர் எப்போது வந்தாலும் ராஜ மரியாதைதான். ஏனென்றால் பேரம் பேச மாட்டார். எவ்வளவு கேட்டாலும் கொடுப்பார். "அவங்க சங்கத் தலைவியே நீங்கதான்" என்றெல்லாம் சொல்லுவேன். ஒரு முறை நான் அங்கே ஆட்டோ எடுத்தேன். இறங்கும்போது சில்லறை பிரச்சினை. அப்போது அந்த ஓட்டுனர் "நீங்க அங்கயா குடியிருக்கீங்க?" என்றார். நான் "இல்லை. என் அத்தை வீடு அங்கெ உள்ளது" என்று அடையாளம் சொன்னவுடனே "அட விடுங்க சார், நான் அவங்ககிட்ட அடுத்த வாட்டி வாங்கிக்கிறேன்" என்றார். அத்தை இறந்த போது அவர்கள் அனைவரும் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

எப்போதுமே என்னை "கண்ணு" என்று அழகான கொங்கு தமிழில் அழைப்பார். அவரது மகன் உட்பட மற்ற அனைவருமே நான் வந்தால் "உங்க கண்ணு வந்திருச்சு" என்று நக்கல் செய்வார்கள். ஏதாவது வித்தியாசமாக சமைத்தால், நான் எப்படி சாப்பிடுகிறேன் என்று பார்ப்பார். பொதுவாக எனக்கு உப்பு, காரம் எல்லாம் சரி பார்க்கத் தெரியாது. தெரிந்தாலும் அதை வெளியே சொல்ல மாட்டேன். நான் ஒரு வேளை நன்றாக சாப்பிட்டால், அதை அடிக்கடி செய்து தருவார். ஒரு சிலவை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று அவர் சொல்லித்தான் எனக்கே தெரியும். என் மனைவியிடம் அவர் என்னைப் பற்றி சொன்ன நிறைய விஷயங்கள்தான் இன்று வரை என்னை அடி வாங்காமல் காப்பாற்றிக் கொண்டு வருகிறது.

அவர் இருந்த வரை, எல்லோருக்கும் ஒரு உறவுப் பாலமாக இருந்தார். அவரது மகன்கள் அவ்வளவாக யாருடனும் பேச மாட்டார்கள். ஆனால், இவர் எப்படியாவது மாதம் ஒரு முறையாவது அனைத்து சொந்தக்காரர்களிடமும் பேச வைத்து விடுவார். (இன்னைக்கு அவங்க பொறந்த நாள், கல்யாண நாள், விஷ் பண்ணு). அவர் இறந்த பின் அவ்வளவுதான். நானே அங்கு போவதை குறைத்து விட்டேன்.

என்னிடம் உள்ள ஒரு கெட்ட பழக்கம், ஒரு விஷயம் முடிந்து விட்டால், அதை மறந்து விடுவேன், அல்லது நினைக்க மாட்டேன். பள்ளியில் இறுதித் தேர்வு முடிந்து விட்டால் அந்த பாடங்களைப் பற்றி நினைக்க மாட்டேன். அதுவே கல்லூரிக் காலங்களில் எனக்கு எதிராக முடிந்தது. அதே போலத்தான். அத்தை இறந்து விட்டார். இனி எங்களோடு இல்லை. அவரை நினைத்துக் கொண்டு என்ன ஆகப் போகிறது. திதி கொடுக்கக் கூட போகவில்லை. "இருக்கும்போது பச்சைத் தண்ணி கூட கொடுக்காம, செத்தப்புறம் விருந்து வச்சு என்ன செய்ய" என்று நானே அவரிடம் ஒரு முறை வேறொரு சம்பவத்தின் போது கூறி இருக்கிறேன்.

இன்றோடு அவர் இறந்து 3 வருடங்கள் முடிகிறது. வழக்கம் போல இந்த வருடமும் நான் போகவில்லை. ஆனால், அவரைப்பற்றி இன்று ஓரிருவராவது என்னுடைய பதிவைப் படித்து அவருக்காக மனதளவில் வருத்தப்பட்டால் கூட எனக்குப் போதும். என்னைப் பற்றி என் அத்தை புரிந்து கொண்டிருப்பார்.

தொடரலாம்.

Friday, February 20, 2015

என் அத்தை !

இது முந்தைய பதிவின் தொடர்ச்சி. என்னுடைய அனுபவங்களின் பதிவு என்பதால், படிப்பவர்களுக்கு சலிப்பு உண்டாகாமல் இருக்கும் என்று நம்புகிறேன்.

கொங்கு மாவட்டங்களில் உள்ள ஒரு நம்பிக்கை என்னவென்றால், ஆண்:பெண் என்ற குழந்தைகள் விகிதம் 1:3 அல்லது 3:1 என்று இருந்தால், அந்த குடும்பம் உருப்படாமல் போகும். அதே போலவே ஒரு குடும்பத்தில் , என் அப்பாவோடு சேர்த்து இரு அண்ணன்கள், ஒரு தம்பியோடு பிறந்தவர்தான் என் அத்தை.

15 வயது வரை ஒரு வேலை கூட செய்யாமல், சுகமாக பள்ளிக்கு மட்டும் சென்று வந்தவர். வீட்டில் தலை துவட்டக் கூட ஒரு ஆள் என்று சொகுசாக வாழ்ந்தவர். வசதியான குடும்பம். திடீரென தாத்தா இறந்து விட, அனைத்து சொத்துக்களும் கையை விட்டுப் போக, 15 வயதில் மாமா மகனுக்கு வாழ்க்கைப்பட்டு, டெல்லிக்கு சென்றார். அடுத்த வருடமே கையில் ஒரு மகன். எப்படியோ, தட்டித்தடவி, சமாளித்து, சில வருடங்கள் கழித்து சென்னை வந்தனர்.

பாதியில் விட்ட படிப்பை முடித்து விட்டு பட்டப் படிப்பும், பின் ஆசிரியர் பயிற்சி படிப்பும் படித்தார். சில வருடங்கள் கழித்து, சகோதரர்களுக்கு திருமணம் நடந்தது. இன்னொரு மகன் பிறந்தான். ஏற்கனவே 3 சகோதரர்கள், பிறந்த இரண்டுமே ஆண்கள் என்பதால், சகோதரர்களுக்காவது பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று வேண்டினார். 'ஆர்த்தி' என்ற பெயரும் தயார்.

முதல் அண்ணனுக்கு பையன். சரி, போனால் போகிறது, 'அரவிந்த்' (நானேதான்) என்று பெயர் அவரே எடுத்துத் தந்தார். இரண்டாவது அண்ணனுக்கும் பையன் .பொறுத்துக்கொண்டு 'அஷ்வின்' என்று பெயர் வைத்தார். மொத்தமாக மூன்று அண்ணன்களுக்கும் சேர்த்து நான்கு மருமகன்கள் தான் அவருக்கு வாய்த்தனர். கடைசியில், தனது கணவரின் தங்கைக்கு பிறந்த பெண் குழந்தைக்கு 'ஆர்த்தி' என்று பெயர் வைத்து தன் ஆசையைத் தீர்த்துக் கொண்டார்.

நாங்கள் நாமக்கல்லிலும், அவர் சென்னையிலும் என்றாலும், என்னுடைய வளர்ச்சியை கவனித்துக் கொண்டேதான் இருந்தார். அவர் எப்போதாவதுதான் ஊருக்கு வருவார், அது மட்டுமின்றி அவரின் மகன்களும் என்னை விட பெரியவர்கள், சென்னையில் வளர்பவர்கள் என்பதால் ஊரில் ரொம்ப நாட்கள் இருக்க மாட்டார்கள். எனக்கும் அப்போதெல்லாம் அவரிடம் அவ்வளவு பாசமாக இல்லை. பார்த்தால் கொஞ்ச நேரம் பேசி விட்டு ஓடி விடுவேன், என்றாலும், என் மேல் அவருக்கு கொஞ்சம் பாசம் அதிகம். மூத்த மருமகன் என்பதாலும் இருக்கலாம், அல்லது அடுத்த தலைமுறைகளில் நான் மட்டும் புத்தகம் படிப்பவன் என்பதாலும் இருக்கலாம்.

சொல்ல மறந்து விட்டேனே. அவர் ஆங்கில இலக்கியம் படித்தவர். சிறு வயதிலேயே ஆனந்த விகடன், குமுதம் மட்டுமின்றி கல்கி, சாண்டில்யன், தேவன், அசோகமித்திரன் என்று படித்தவர். ஆங்கில இலக்கியம் படிக்கும்போதே ஷேக்ஸ்பியர், பால் கோகேலோ எல்லாம் படித்தவர். அதே போலவே அவரின் சகோதரர்களும்தான். ஆனால், ஒரு வாரிசு கூட படிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. நானும் ஒன்றும் அவ்வளவு பெரிதாக படிப்பதில்லை. (என்னுடைய படிப்பு ஆர்வத்தை நீங்கள் இந்த ஆரம்பம், இடைநிலை, உயர்நிலை, மேல்நிலை, கல்லூரி பதிவுகளில் தெரிந்து கொள்ளலாம்). ஆனாலும், "இதாவது படிக்கிறானே" என்று சந்தோசப்பட்டவர்.

நன்கு விவரம் அறிந்த பதிமன் பருவங்களில், என் அம்மாவின் தொந்தரவு தாளாமல் அத்தைக்கு கடிதம் எழுத ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட நான்கு வருடங்கள், நிறைய கடிதங்கள் "இதைப்படி, அதைப்பற்றி தெரிந்து கொள்" என்று அன்பாகவும், என்னுடைய ஆர்வத்தைப் புரிந்து கொண்டும் என்ன செய்ய வேண்டும் என்று எழுதுவார். அப்போதுதான் கொஞ்சம் அத்தையின் மேல் பாசம் வந்தது. இன்னமும் அந்தக் கடிதங்கள் என்னிடம் பத்திரமாக உள்ளன.

இந்நிலையில் திடீரெனெ மாமா மாரடைப்பால் காலமானார். சென்னையில் சொந்த வீடு கொஞ்சம் சேமிப்பு என்று இருந்தாலும், இதனால் மிகவும் பாதிக்கப்பட்டார். பணம் இருந்தாலும், ஒரு மாறுதலுக்காகவும், தேவைகளை சமாளிக்கவும் ஆசிரியையாக வேலைக்குப் போனார். கிட்டத்தட்ட 5 வருடங்கள் ஆசிரியையாக வேலை பார்த்தார். ஒரு மாணவரைக் கூட அடித்ததோ, கடிந்து பேசியதோ கிடையாது. கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்தும் அவருடன் நிறைய மாணவர்கள் தொடர்பில் இருந்தது கண்டு நான் வியந்துள்ளேன்.

அதுவரை சென்னைக்கு மிகக் குறைவான முறையே நான் போயிருந்தேன். பத்தாம் வகுப்பு தேர்வுகள் முடிந்ததும், சென்னைக்கு அனுப்ப சொல்லி அத்தை கேட்க, என்னை அனுப்பினார்கள். கிட்டத்தட்ட ஒரு மாதம் சென்னையில். எனக்காக எல்லாம் பார்த்துப் பார்த்து செய்தார். திரும்பி வந்து மேல்நிலைக்கல்வியில் கொஞ்சம் 'பிசி' ஆகிவிட்டேன். அத்தையின் இரண்டாவது மகனும் (என்னைவிட ஒரு வருடம் மூத்தவர்) +2 என்பதால் கடிதத் தொடர்பும் சற்றே குறைந்து விட்டது.

அதன் பின் சென்னையில் கல்லூரி சேர்ந்தாலும், அவ்வளவாக அங்கே போகவில்லை. தோணவும் இல்லை. அவர்களும் கூப்பிட்டுக் கொண்டே இருந்தார். பேருந்தில் பயணம் செய்து, கொஞ்ச தூரம் நடந்து போக வேண்டும் என்பதால், ஓரிரு முறை மட்டுமே முதல் வருடத்தில் சென்றேன். மூத்த மகனுக்கு அதற்குள் வேலை கிடைக்க, அதன் பொருட்டு இடம் மாறினார்கள். புது இடம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகில். நான் குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகில். எனவே அதன் பின் எல்லா வாரமும் செல்ல ஆரம்பித்தேன்.

அதற்குக் காரணம் பாசம் என்று மட்டும் சொல்ல முடியாது. அங்கே இருந்த கணினி , இணையம் இணைப்பு, தொலைகாட்சி மற்றும் புத்தகங்கள். என் நண்பர்கள் அனைவருமே "உண்மைய சொல்லு, உங்க அத்த வீட்டுல பொண்ணு இருக்குதான?" என்று ஓட்டும் அளவிற்கு அடிக்கடி சென்றேன். அத்தை ஆங்கில ஆசிரியை என்பதால் அருகில் உள்ள அனைத்து சொந்தக்காரர்களும் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க இங்கே அனுப்புவார்கள். அவர்களும் ஆர்வத்துடன் வருவார்கள். காரணம் முதலில் அவர்களுக்கு (வீட்டில் அவர்களுக்கு கொடுக்காத, அவர்களுக்கு பிடித்தமானவற்றை) சாப்பிடக் கொடுப்பார். நிறைய விளையாட விடுவார். பாடத்தையும் சொல்லிக்குடுத்து விடுவார்.

நானும் தமிழ் வழிக்கல்வி என்றாலும், தட்டித்தடவி ஆங்கிலம் பேச உதவினார். கல்லூரி இறுதி வருடத்தில் ஒவ்வொரு நிறுவனத்தின் நேர்முகத் தேர்வில் தவறும்போதேல்லா "விடு கண்ணு, இத விட பெருசா நமக்கு கண்டிப்பா கெடைக்கும்" என்றெல்லாம் ஆறுதல் அளிப்பார். அதன் பின் வேலை கிடைத்து மைசூருக்கு சென்று விட்டேன். ஒரு வருடம் கழித்துதான் சென்னை வந்தேன். தினமும் ஒரு முறையாவது பேசி விடுவார்.

சென்னை வந்த பின் மீண்டும் விடுமுறைகளில் அங்கேதான். அப்போது அவரது மூத்த மகனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்தனர். பல்வேறு காரணங்களால் தடங்கல்கள். "நீ மட்டும் பொண்ணா பொறந்திருந்தா இவ்ளோ கஷ்டம் எனக்கு வந்திருக்குமா?" என்று செல்லாமாக கோவித்துக் கொண்டார். "மூணு பேர்ல ஒருத்தனாவது லவ் பண்ணுங்கடா" என்று செல்லமாக அலுத்துக் கொண்டார். கடைசியாக கல்யாணமும் நடந்தது.

ஒரு மாமியாராக இல்லாமல், ஒரு அன்பான தாயாக, தனது மகனின் அன்பை இன்னொரு புதிதாக வந்த பெண் பகிர்ந்துக் கொள்ளப் போகிறாள் என்பதால், எல்லாவற்றிற்கும் தயாராகவே இருந்தார். அப்படி எதுவும் நடக்கவில்லை. அதே நேரத்தில் அவரது இளைய மகன் அமெரிக்கா சென்றார். இவரையும் வர வேண்டும் என்று சொல்ல, ஒரு இரண்டு வருடங்கள் காடாறு மாதம் நாடாறு மாதம் என்று ஓட்டினார்.

இந்த நிலையில் எனக்கும் திருமணம் நிச்சயம் ஆனது. அந்த சமயம் அவர் இங்கு இல்லை. அவர் திரும்பி வந்த பின்தான் திருமணம் என்பதால் மூன்று மாதங்கள் தள்ளி தேதி வைக்கப்பட்டது. அதுவரை தினமும் இரண்டு முறை போன் செய்து பேசுபவர், அதன் பின் என்னை "எப்போ பிரீயா இருக்கியோ, அப்போ மிஸ்ஸிடு கால் கொடு, நான் பண்றேன்" என்றார். திருமணம் முடிந்த பின் அதிகமாக அங்கு செல்லவில்லை. வீட்டுக்கு போனாலும் சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் இருந்து விட்டு உடனே வந்து விடுவோம்.

அதற்குள் சில பல உட்கட்சிப் பூசல்களினால் எங்களுக்குள்ளேயே சில மனஸ்தாபங்கள். அதனால் அவர் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டார். அதன் பின் மனைவி கர்ப்பமாக இருந்த போது ஊருக்குப் போனதால் நானும் மீண்டும் அடிக்கடி அத்தை வீட்டிற்கு போனேன். ஊரில் ஒரு திருமணம். அதனால் அனைவரும் அங்கே வந்திருந்தனர். அங்கே சிலர் பேசிய பேச்சுக்கள், ஏற்கனவே வீட்டில் இருந்த குழப்பங்கள், திடீரென மகனுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு எல்லாம் அவர் மனதை பாதித்து விட்டன.

சென்னைக்கு வந்த பின் என்னிடம் மட்டும் நடுவில் ஒரு நாள் தூங்கும்போது நெஞ்சு வலித்தது என்றும், யாரிடமும் சொல்லவில்லை என்றும் கூறினார். அதனால் சண்டை போட்டு, ஏற்கனவே சர்க்கரை, ரத்த அழுத்தம் எல்லாம் இருந்ததால், ஒரு முழு உடல் பரிசோதனை செய்யலாம் என்று எல்லாம் புக் பண்ணி வைத்தார்.

வழக்கம் போல ஒரு சனியன்று வீட்டிற்கு போனேன். அன்று இரவு அங்கேயே தங்கி விட்டு, அடுத்த நாள் மாலை வீட்டிற்கு கிளம்பினேன். "இருந்துட்டு காலைல இங்கே இருந்தே ஆபிஸ் போயேன்? நாங்க வெளிய போறோம்." என்றார். நானோ "எனக்கு அங்க கொஞ்சம் வேல இருக்கு" என்று கிளம்பி விட்டேன். வந்து ஒன்றும் பெரிதாக கிழிக்கவில்லை. மனைவியுடன் போனில் கடலை போட்டு விட்டு தூங்கி விட்டேன்.

திடீரென நள்ளிரவு 2 மணிக்கு போன். அத்தை வீட்டுக்கு பக்கத்து வீட்டுகாரர் "அரவிந்த், உடனே கெளம்பி வா, அத்த இறந்துட்டாங்க" என்றார். அவரது கணவரைப் போலவே, அவரது 53ம் வயதில் மாரடைப்பால் காலமானார். எல்லோரும் வந்தார்கள். எல்லாமும் முடிந்தது. அதன் பின் என் அத்தையை நான் மறந்து விட்டேன். இன்னும் சில தினங்களில் மூன்று ஆண்டும் முடியப் போகிறது. என்ன வாழ்க்கடா இது.

தொடரும்..

Monday, February 16, 2015

சினிமா 2015 - 'ஐ' முதல் 'அனேகன்' வரை

மொக் 'ஐ':
 

இந்த சங்கருக்கு (என்னது, அப்படி சொல்லக்கூடாதா? அப்புறம், ஓ சரி சரி) ஷங்கருக்கு என்னதான் ஆச்சு? ஊர்ல ஒரே மாவ வச்சி வட, பஜ்ஜி, போண்டா சுடர மாதிரி, ஒரே கதைய வச்சி (நண்பன்/மகள்/தங்கை இறக்க வேண்டும். அதற்கு காரணமான சமுதாய பிரச்சினையைத் தீர்க்க கொலை செய்ய/கொள்ளை அடிக்க வேண்டும்), கொஞ்சம் கொஞ்சம் திரைக்கதைய மாத்தி (உபயம், சுஜாதா) கொஞ்சம் ஒப்பெத்திட்டாறு. அப்புறமா ரஜினிய வச்சி ரெண்டு படம். அப்புறம் என்ன செய்யறது? விஜய்தான் கெடச்சாரு. அவரு முடிய வெட்டவே ஒத்துக்க மாட்டாரே? சரி ஒப்பெத்துவோம்னு சொல்லி 'நண்பன்' ஆயிட்டாரு. அப்புறமா, நம்ம விக்ரம் சிக்குனாறு. அப்ப சந்தோசத்துல 'ஐ'ன்னு ச அடச்சே ஷங்கர் குதிச்சதுல, விக்ரம் 'ஐ' சூப்பர் டைட்டில்னு நெனைக்க, நமக்கு 'ஐ ஐ'ஓன்னு ஆயிடுச்சு.

நம்ம ஹாய் மதன், ஜெயா டிவியில 'அந்நியன்' படம் வரும்போது ஒன்னு சொன்னாரு. 'ஷங்கர் வெளிநாட்டுல இருக்குற மாதிரி வீடியோ ஆல்பம் எடுக்கலாம். கண்டிப்பா நல்லா வரும்' அப்டின்னாரு. அத மறுபடி யாராவது ஷங்கர்கிட்ட சொன்னா பரவால்ல. அதே போல, ரயிலுக்கு, வீட்டுக்கும் கலரடிச்ச நேரத்துல, கொஞ்சம் கதைய நல்லா யோசிச்சிருக்கலாம்னு சொன்னாரு. 'ஐ' பாக்கும்போது எனக்கும் அதே நெனப்புதான். 10 வெளம்பரம், 5 பாட்டு எடுக்க உக்காந்து யோசிச்சீங்களே, இன்னும் கொஞ்சம் திரைக்கதையை யோசிக்கக் கூடாதா?

தாங்கல-ஆம்பள:

சில படங்கள தரவிறக்கம் பண்ணி பாக்கும்போது, "அடடா, இத தியேட்டர்ல போயி பாத்திருக்கலாமே" அப்டீன்னு தோணும். இன்னும் ஒரு சில படங்கள அப்படி பாக்கும்போது, தேவையில்லாம இப்ப நேரத்த வீணடிச்சுட்டோம்னு வருத்தப்படுறதா, இல்ல காசு மிச்சம்னு சந்தோசப்படுறதா அப்டின்னு கொழப்பம் வரும். இது அந்த வகைய சேந்தது. பொதுவாவே சுந்தர் C மேல ஒரு மருவாதி இருந்தது. 'Soul Kitchen' படம் பாத்தப்ப கூட ஒன்னும் தோணல. ஆனா, அப்ப கொடுத்த ஒரு பேட்டிலதான் செம காண்டு. அதுக்கப்புறம் அரண்மனை படத்துல மொத சீனே கடுப்பாயிடுச்சு. ஏன்னு கேக்குறவுங்க 1408ன்னு ஒரு பேய்ப்படம் பாருங்க தெரியும். தம்பி விஷாலு, இப்படியே படம் எடுத்தேன்னா பாக்டரிய இழுத்து மூட வேண்டியதுதான்.

'டர்ர்'லிங்க்:

ஏற்கனவே இதன் மூலமான 'பிரேம கதா சித்திரம்' படத்தையும், அதை வைத்து காப்பியடிக்கப்பட்ட '1 பந்து 4 ரன் 1 விக்கட்' படத்தையும் ஏற்கனவே பார்த்திருந்ததால், அவ்வளவு பெரிய ஈர்ப்பில்லை. ஆனாலும், அதையும் தாண்டி சற்றே கவனத்தை ஈர்த்தது. நகைச்சுவை அளவுக்கு மீறாமல் நன்றாகவே எடுத்திருந்தனர். முதல் பாதியில் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம். கார் திருடுவது, மந்திரியை அடிப்பது எல்லாம் கொஞ்சம் மொக்கை. மற்றபடி, மற்ற இரண்டு படங்களுக்கு, எவ்வளவோ தேவலை.

என்னை அரிந்தால்:

தலைப்பில் எழுத்துப்பிழை எதுவும் இல்லை. சுப்ரமணியபுரம் படத்தில் வருவது போல அறுக்கவில்லை என்றாலும், கொஞ்சம் மொக்கைதான். எப்போதும் போல தமிழ், ஆங்கில கெட்ட வார்த்தை பேசும் நாயகன், விவாகரத்தான நாயகி (ஒரு படத்துல சரி, எல்லாப் படத்துலயுமா?) இறக்கின்ற ஒரு நாயகி, பழி வாங்கல் என 'முடியல'. கொஞ்சம் கோட்டுக்கு இந்தப் பக்கமும் வாங்க நாயரே. ஓ மன்னிக்கணும் மேனன் சார்.

இ'ச்சை':

ஆங்கிலத்திலும்,ஹிந்தியிலும் இப்போதெல்லாம் உயிரோடு உள்ள பெரிய ஆட்களின் வாழ்க்கை வரலாறை எடுக்கிறார்கள். படங்கள் சொதப்பலாக இருந்தாலும், அவர்களை யாரும் கேவலப்படுத்தவில்லை. தமிழில் முன்பொரு காலத்தில் நிறைய வந்தன. தற்போது ராஜசேகரன் மட்டும் பெரியார், பாரதி, ராமானுஜன் என்று இல்லாத சாதனையாளர்கள் பற்றி எடுக்கிறார்.

இந்தப் படம் பற்றி சூர்யா கூறும்போது, ஒருவரின் வளர்ச்சியினால் பாதிக்கப்படும் இன்னொருவரின் சூழ்ச்சிகளே இந்த கதை. அது இசைத்துறை. அவ்வளவுதான். என்றார். எல்லாம் சரிதான். ஆனால், அந்த பெரிய இசையமைப்பாளர் சொல்லும் வார்த்தைகளும் ("நான் துப்பறதுதான் இசை") நடந்து கொள்ளும் விதமும் (முகத்தில் தூக்கி விசிறி அடிப்பது - தளபதி சமயத்தில் நடந்தது என நான் கேள்விப்பட்டுள்ளேன், இந்தப்படம் வருவதற்கு முன்பே), இசைக்கடல், இசை வேந்தன் போன்றவை, சத்யராஜை சரஸ்வதியை கும்பிடுவராகவும், சூர்யா 'வேறு' மதத்தை சேர்ந்தவராக காட்டியதும், இயக்குனர் தன்னுடைய அடுத்த படத்திற்கு (அவமானப்படுத்தப்பட்ட படம் வேறு) இசையமைக்க கூப்பிடுவதும், அது மட்டுமின்றி, பிரகாஷ்ராஜ் நடிக்கவில்லை என்றவுடன் கங்கை அமரனை நடிக்க வைக்க முயற்சி செய்தது எல்லாம் வைத்துப் பார்த்தால், ஒன்று சூர்யாவுக்கு ரஹ்மானை ரொம்பப் பிடித்திருக்க வேண்டும் அல்லது இளையராஜாவால் ரொம்ப அவமானப்பட்டிருக்க வேண்டும் அல்லது இவை இரண்டுமேவாக கூட இருக்கலாம்.

பொதுவாக ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான ஆட்களின் எதிராளியை, எதிரியாக நினைத்து அவர்களை திட்டுவதும், கேவலமாக பேசுவதும் பரம்பரை பரம்பரையாக நடப்பதுதான். ஆனால், படமாகவே எடுப்பது இதுதான் முதல் முறை. இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும்.

இந்தப் படத்தின் இறுதிக் காட்சியை 'மிகப் பெரிய திருப்பம்' என்று சொல்லுபவர்கள் எல்லாம், இருபது வருடத்திற்கு முந்தைய குமுதத்தில் வந்த ஒரு பக்க கதை, சிறுகதைகளை படிக்க வேண்டுகிறேன். அதெல்லாம் முடியாது என்பவர்கள், சிவாஜி நடித்த 'முதல் தேதி' என்ற படத்தைப் பார்க்கவும்.

உலகத்தில் எல்லோருக்குமே, ஒரு முறையாவது வக்கிரமான எண்ணங்கள் தோன்றும். 99 சதவிகித மக்கள் தைரியமின்றி, அதைக் கற்பனையில் மட்டுமே நடத்தி கொள்வார்கள். வெகு சிலர் அதை செய்து பார்க்க வேண்டுமென்று எண்ணி, கொடூரமான சைக்கோவாக மாறுவார்கள். இன்னும் சில பேர், அதை கலை என்ற பெயரில் படமாக எடுத்து மற்றவர்களுக்கு அந்த எண்ணங்களை அதிகரிக்க செய்வார்கள். நிறைய ஆங்கிலப் படங்கள் இதற்கு உதாரணம். தமிழில் நடுநிசி நாய்கள், பாய்ஸ், மற்றும் சூர்யா படங்கள். இன்னும் நிறைய உள்ளன. நினைவுக்கு வந்தவை இவைதான்.

"ஒரு படத்த படமா பாக்கணும். இப்ப காந்தி படத்தப் பாத்தா நீ என்ன திருந்திருவியா?" என்று கேட்காதீர்கள். எப்போதுமே நல்ல விஷயங்களை விட கெட்ட விஷயங்கள் வேகமாக பரவும். ஒரு குடம் பாலில் ஒரு சொட்டு விஷம் விழுவது போலத்தான்.

மற்றவை:

இவை தவிர சென்ற ஆண்டு இறுதியில் வந்த மீகாமன், வெள்ளைக்கார துரை போன்றவற்றை பார்த்தேன். ஒரு முறை பார்க்கலாம். நடு நடுவே புலன் விசாரணை - 2, தொட்டால் தொடரும், தரணி என நிறைய பார்க்கவில்லை. தரணி நன்றாக உள்ளதாக கேள்வி. ஆனாலும் படம் ஓடும் நேரமும் நமது நேரமும் ஒன்றவில்லை. தரவிறக்கமும் செய்ய முடியவில்லை. இன்னமும் அனேகனும் பார்க்கவில்லை. ஓரிரு நாளில் பார்த்த பின், ஏதாவது (B)பிட்டு போடுகிறேன். இல்லையென்றால் நீங்கள் தப்பித்ததாக எண்ணிக் கொள்ளுங்கள்.

Tuesday, January 27, 2015

சொந்த பந்தம்

நரகத்தில் (மன்னிக்கவும்) நகரத்தில் பிறந்து, வாழ்ந்த எனது நண்பர்களுக்கு உறவுகளின் அர்த்தம் புரிந்ததில்லை. அவர்கள் பொதுவாக விடுமுறைகளில் மட்டும் ஊருக்கு போய் விட்டு வருகிறார்கள். பத்தாவது வந்தவுடன் அதுவும் நின்று விடுகிறது. அதன் பின் சுத்தம். "ஊர்லயெல்லாம் போனா ரெண்டு நாள் நல்லாருக்கும். அப்புறம் செம போர்" என்பார்கள். அது மட்டுமில்லாமல் அத்தை, சித்தி, பெரியம்மா, சின்னம்மா எல்லோரும் ஆண்ட்டி, ஆண்கள் எல்லாம் 'அங்கிள்', அம்மாயிக்கும் பாட்டிக்கும் வித்தியாசம் தெரியாது. வாரிசுகள் எல்லாம் மொத்தமாக 'கசின்ஸ்'. இது அத்தை பொண்ணா, இல்ல மாமா பொண்ணா என்றால் "ரெண்டு பேருக்கும்தான் பொண்ணு" என்று நம் மூக்கை உடைப்பார்கள்.

கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு போகவே மாட்டார்கள். கேட்டால், "எங்க வேல பாக்கிற, எவ்ளோ சம்பளம், ஒரு பொண்ணு இருக்கு, ஊருக்கே வர மாட்டேங்கிற, என்ன தெரியுதா யாருன்னு" என்றெல்லாம் கேள்வி கேட்டு படுத்துவார்கள். என்பார்கள். அதே போல, நிறைய படங்கள் பார்த்து விட்டு "நீ ஊர்ல இருக்க உன் மாமன் பொண்ணத்தான் கல்யாணம் பண்ணுவியா?" என்பார்கள். உண்மையை சொன்னால், ஊரில் உள்ள என் மாமாவிடம் யாராவது இதைக் கேட்டால், "சின்னப் பசங்க கிட்ட இப்படியா பேசுவ?" என்று துரத்தி அடிப்பார். அதே போல " நீ ஊருக்குப் போனா பொங்கல் வச்சி குலவை போட்டு, மேள தாளத்தோட, கூட்டிட்டு போவாங்களா, உங்க ஊர்ல பண்ணையாரு, ஜமீன்தாரு எல்லாம் இருக்காங்களா" என்றெல்லாம் படுத்துவார்கள்.

என் மகளுக்கும் இதுதான் நடக்கப் போகிறது. எப்படி தவிர்ப்பது என்ற யோசனையில் உள்ளேன். ஏன், ஊரை விட்டு சென்னை வந்து பத்து வருடங்களில் எனக்கே இப்போது அப்படி ஆகி விட்டது. இப்போதாவது அவ்வப்போது ஊருக்குப் போகிறேன். இன்னும் அடுத்த வருடம் குழந்தையை பள்ளியில் சேர்த்து விட்டால் அவ்வளவுதான். இதை நண்பனிடம் சொல்லும்போது அவன் சொன்னான். "இதுக்கு சென்னைல இருந்தா என்ன, இல்ல அமெரிக்காவுல இருந்தா என்ன" என்று பழைய பதிவுக்கு இப்போது பதிலடி கொடுத்தான். 



சென்னையில் அதிக பட்சம் மூன்று நான்கு வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே பழக்கமான நிலையில், ஒரு 500 பேர் வசிக்கும் எனது ஊரில் ஓரளவு எல்லோரையும் தெரியும், அப்படி எனக்குத் தெரியாவிட்டாலும், என்னை ஊரில் எல்லோருக்கும் தெரியும் என்றால் "அது எப்படி, எங்கே, அந்த 500 பேர் பெரும் வேண்டாம், ஒரு 200 பேர்த்தோட பேர் சொல்லு பார்க்கலாம்" என்பார்கள். அவர்களுக்கு அந்த கிராமத்தின் உறவுகளை சொல்லி புரிய வைக்க முடியவில்லை.

ஒரு முறை நண்பர்கள் அனைவரும், ஒவ்வொருவரின் ஊருக்கு சென்றோம். அப்போது, ஊரில் அனைவரும் பார்க்கும்போதெல்லாம் "கூட படிக்கிற பசங்களா? ஊர சுத்திப் பாக்க வந்திங்களா? கொல்லிமலை போனீங்களா? தோட்டத்துக்கு கூட்டிப் போனியா" என்றெல்லாம் விசாரிக்க, அப்போதுதான் கொஞ்சம் நம்பினார்கள். அப்போதும் "நீ ஆள் எதுவும் செட் பண்ணினியா" என்று கூட கேட்டார்கள்.

பொதுவாக ஊருக்குள், இரு வகையாக சொந்தங்கள் இருக்கும். சொந்த இடம், வந்த இடம். அதாவது என் தாத்தாவுக்கு இரு மகன்கள். அதில் ஒருவர் வெளியூரில் இருந்தாலும், இதுதான் அவருக்கு சொந்த ஊர். என் அம்மா, இதே ஊரிலேயே இருந்தாலும், என் தந்தையின் சொந்த ஊர் வேறு என்பதால், நாங்கள் வெளியூர் வாசிகள்தான். அதை வைத்தே விளையாட்டாக ஓட்டுவார்கள். 25 வருடங்களுக்கு முன் என்னிடம் கேட்ட அதே கேள்வி இந்து என் மகளிடமும் கேட்கப்படுகிறது "ஏய், நீ எந்த ஊரு". நாங்கள் "சிவியாம் பாளையம்" என்றால், "இது உங்க ஊர் இல்ல, உங்க ஊருக்குப் போங்க" என்பார்கள். எங்களுக்கு ஆதரவாக எங்களது பங்காளிக் கூட்டத்தில் இருந்து ஆதரவு வரும். "இது எங்க வீடு, எங்க ஊரு, அப்படித்தான் வருவோம்னு சொல்லு. என்ன பண்ணுவீங்கன்னு கேளு" என்பார்கள்.

அதே போல, ஊரிலேயே வளர்ந்து வரும் வாரிசுகளுக்கு, விடுமுறையில் வெளியூரில் இருந்து சொந்த பந்தங்கள் வருகின்றன என்றாலே, சந்தோசத்தோடு பயமும் வரும். ஏனென்றால், அவர்கள் வந்தால், நம்மை விட்டு விட்டு விட்டு அவர்களை கொஞ்ச ஆரம்பிப்பார்கள். எனவேதான், யாரும் என் வீட்டிற்கு வருவதை விட, நான் அவர்கள் வீட்டுக்குப் போவதை விரும்புவேன். ஏனென்றால், விருந்தாளிகள் தவறு செய்தாலும், பழியும், அடியும் அவர்கள் மீது விழாது. "அவன்தான் ஊர்ல இருந்து வந்திருக்கான். அவனுக்கு கொடுக்க வேண்டியதுதான, நீதான் ஏதாவது பண்ணியிருப்ப" என்று தன் பிள்ளைகளையே தாக்குவார்கள்.

"சரி, திடீர்னு என்ன சொந்த பந்தங்கள் மேல இவ்ளோ பாசம்" என்கிறீர்களா? ஒன்றுமில்லை. நம்முடைய வாழ்க்கையில் பல பெண்கள் வந்திருப்பார்கள். அம்மா, மனைவி, மகள் என வேறு வேறு வடிவங்கள். இந்த மூவரும் இல்லாமல் என் வாழ்க்கை இல்லை. உடன் பிரிவா சகோதரிகள் நிறைய உண்டு. சொந்தத்திலும், நட்பிலும் நிறைய பெண்கள் உண்டு. அனைவருமே, நான் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள்தான். அனைவருக்கும் என் வாழ்க்கையில் குறிப்பிட்ட இடம் உண்டு. ஆனால், என்னைப் பற்றி மிக சரியாக புரிந்து கொண்டு, எனக்கு என்ன வரும் என்று எனக்கே உணர வைத்த, இன்று என்னுடன் இல்லாத என் தந்தையின் தங்கை, என் அத்தை பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆரம்பித்து, அப்படியே உள்ளது. அதற்கான முன்னுரைதான் இது.

தொடரும்.

Tuesday, December 30, 2014

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

எப்படியோ இன்னொரு வருடமும் ஓடிப்போய் விட்டது. போன வருடத்தை விட இந்த வருடம் பதிவுகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இருந்தாலும், மாதம் ஒன்று என்ற கணக்கு வந்து விட்டது.

பதிவு ஆரம்பித்து 7 வருடங்கள் ஆகி விட்டது. 50 பதிவுகள் போட 5 வருடங்கள் ஆனது. அடுத்த இரண்டு வருடங்களில் ஓரளவு எண்ணிக்கையை கூட்டி விட்டேன். அடுத்த வருடத்தில் 100ஐ தொட லட்சியம். 90 நிச்சயம்.

வாழ்க்கையில் பெரிதாக மாற்றம் எதுவும் நிகழ்ந்து விடவில்லை. சொந்த வீட்டிற்கு மாறினேன். அவ்வளவுதான். "எவ்ளோ சந்தோசமான விஷயம், இவ்ளோ சோகமா சொல்றியே" என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

இந்த வருடம் என்னென்ன செய்ய வேண்டும். குழந்தைக்கு இரண்டரை வயது ஆகப்போகிறது. பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று விசாரிக்க ஆரம்பித்தால், கண்ணைக் கட்டுகிறது. அபியும் நானும், குங்குமப் போட்டு கவுண்டர் படங்களில் வருவதெல்லாம் வெறும் துளிகள்தான். உண்மையில் அது ஒரு கடல். நான் பதினாறு வருடங்கள் படித்த படிப்புக்கான செலவு, என் மகளின் ஒரு வருடத்திற்கு பத்தாது.

முன்பெல்லாம் குழந்தை என்பது ஒரு வரம். இப்போதெல்லாம் குழந்தை என்பது ஒரு பொருள். மற்றவர்கள் முன்பு "பாத்தியா என்னொடத, எவ்ளோ சூப்பரா இருக்கு. சூப்பர் சிங்கர், ஸ்கூல் டாப்பர், மெடிக்கல் சீட்டு புக் பண்ணியிருக்கேன்" என்று அளவில் உள்ளது. குழந்தையை நாம் குழந்தையாக பார்த்தாலும், நம்மை சுற்றியுள்ளவர்கள் அதை மாற்றி விடுகிறார்கள்.

சரி விடுங்கள். அனைவருக்கும் 2014 மங்களகரமாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன். வரும் ஆண்டு இன்னும் வளமாகவும், செழிப்பாகவும் இருக்கும் என வாழ்த்துகிறேன். போன ஆணைப் பற்றி என்ன கூறலாம்? போன வருடம் போட்டது போலவே விருதுகள் தரலாமா? இல்ல இப்படியே இழுத்து மூடலாமா? பதிவு சின்னதா இருக்கே? ஏதாவது மொக்கைய போடுவோம்.

பிடித்த படங்கள்:

ஆரம்பத்தில் ஜில்லா, வீரம் என்று மொக்கையாக ஆரம்பித்தாலும், வழக்கம் போல நாம் எதிர் பார்க்காத படங்களே நம் மனதைக் கவரும். அந்த வகையில் என்னைக் கவர்ந்த அந்த படங்கள்,

தெகிடி
யாமிருக்க பயமே
பூவரசம் பீப்பி
சதுரங்க வேட்டை
சலீம்
திருடன் போலிஸ்
வேலையில்லா பட்டதாரி (சிறப்பு இடம்)
செவன்த் டே (மலையாளம்)

இவைகளில் பாதிக்கு மேல், நான் திருட்டுத்தனமாக பார்த்தவைதான். சொல்ல வெட்கமாகத்தான் உள்ளது. உண்மையில் கத்தி, அஞ்சான், லிங்கா படங்களைப் போய் பார்த்ததற்கு பதில், இவைகளில் அனைத்தையும் பார்த்திருக்கலாம். ஆனால், நன்றாக உள்ளது என தெரிவதற்குள் படம் ஒரு காட்சியாக மாற்றப்படுகிறது. எப்படியாவது போக வேண்டும் என்று நினைப்பததற்குள் தூக்கப்படுகிறது. இது ஒரு நொண்டி சாக்குதான் என்றாலும், இதுதான் உண்மை. இனிமேல், இந்த தவறுகளை குறைத்துக்கொள்ள எண்ணியுள்ளேன். இந்த மாத கடைசியில் வந்த சில படங்கள் பார்க்கவில்லை.

இன்னொரு சொல்ல வெட்கப்பட வேண்டிய விஷயம், ஒரு உருப்படியான புத்தகத்தையும் படிக்கவில்லை. இதற்கு முன்பு மட்டும் ஒன்றும் கிழிக்கவில்லை என்றாலும், ஏதாவது ஒரு கதைப்புத்தமாவது படிப்பேன். இந்த வருடம் சுத்தம். அவ்வப்போது பயணங்களில் ஆனந்த விகடன் படித்ததோடு சரி. இந்த சேத்தன் பகத்தின் அனைத்து கதைகளையும் படித்துள்ளேன். இந்த சமீபத்திய கதை 'Half Girl Friend' இன்னும் படிக்கவில்லை.

அது கூட பரவாயில்லை. ஒரு முழுமையான தமிழ் புத்தகம் கூட படிக்கவில்லை. இத்தனைக்கும், ஊரில், என் வீட்டின் அருகேயே நூலகம் உள்ளது. ஒரு காலத்தில், அதே நூலகத்தில், எந்த புத்தம் எங்கே இருக்கும் என எனக்கு மட்டும்தான் தெரியும். நான்தான் அங்கே தொகுப்பு வாரியாகவும், ஆசிரியர் வாரியாகவும் அடுக்கியே வைப்பேன். எந்த புத்தகமாக இருந்தாலும், முதலில் நான்தான் படிப்பேன், குறைந்தது இரண்டு பக்கங்களாவது, அதை என்ன தொகுப்பில் வைப்பது என்று. சிறுகதைகளோ, நாவல்களோ முழுதும் படித்த பின்தான் அது நூலகமே போய்ச் சேரும். அது ஒரு காலம்.

ஒரு விளம்பரம்: நான் தமிழ் படிக்கும் வேகம் மிக அதிகம். எப்படி என்றெல்லாம் சொல்லத் தெரியவில்லை. நண்பர்களே "நீ படிக்கிறியா இல்ல சும்மா பாக்குறியா" என்றுதான் கேட்பார்கள். இன்னொரு காரணமும் உண்டு, ஒரு புத்தகம் ஒரே மூச்சில் படித்து விட்டு திரும்ப யாரிடமாவது கொடுத்தால் "என்னாச்சு, புடிக்கலையா, அதுக்குள்ள கொடுத்திட்ட" என்று (அனைவருமே) கேட்பார்கள்.

"சரி, இப்ப என்ன அடுத்த வருஷம் படிச்சு கிழிக்க போறியா" என்று கேட்டால், இல்லை. ஆனால் மகளுக்கு எப்படியாவது மடிக்கணினி, கைப்பேசியை விட மதிப்பு வாய்ந்தது புத்தகங்கள்தான் என உணர வைக்க வேண்டும். இரண்டு வயது குழந்தைதான். கொஞ்சம் கொஞ்சமாக புரிய வைப்பேன். கண்டிப்பாக அவளிடம் இருந்து, நான் மீண்டும் படிக்க கற்றுகொள்வேன் என நம்புகிறேன். நம்பிக்கைதான வாழ்க்கை.

அனைவருக்கும் அனைத்தும் சிறக்க வாழ்த்துக்கள்!

Saturday, December 13, 2014

லிங்கா: அந்த அளவுக்கு எல்லாம் வொர்த் இல்ல

முன் குறிப்பு, முக்கிய குறிப்பு: நான் ரஜினி ரசிகன் அல்ல. கொஞ்சம் சொந்தக்கதையும் உள்ளது. மொக்கையான பதிவு.



அஞ்சான் பார்த்து நோஞ்சான் ஆனதால், இந்த முறை முன் பதிவு செய்யவில்லை. வெள்ளியன்று படம் பார்த்து விட்டு, சமூக வலைத்தளங்களும், நமது பதிவர்களும் கொடுத்த விமர்சனங்களில் இருந்து முதலுக்கு மோசமில்லை என்று முடிவு செய்து காலைக்காட்சிக்கு முன் பதிவு செய்தேன். 

நான் மட்டும் என்பதால், ஒரே ஒரு டிக்கட், வேளச்சேரி லுக்சில் கிடைத்தது. காலை 7:45க்கு படம். எனவே, 6 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். சீக்கிரம் கிளம்பி, நண்பன் வீட்டில் வண்டியை விட வேண்டும் (இல்லேன்னா 100 ரூவா அழனும்) என்றெல்லாம் எண்ணிக்கொண்டே, அலாரம் வைக்காமல் தூங்கி விட்டேன். எழுந்து பார்த்தால் மணி 6:45. அவசர அவசரமாக ஹீட்டர் போட்டு காத்திருந்தால், அது என்ன பிரச்சினையோ சுடு தண்ணீர் வரவில்லை. அவசர அவசரமாக அடுப்பில் வைத்து, குளித்து கீழே வந்தால், பேய் மழை. என்னடா இது சோதனை என்று கவசங்களை அணிந்து, கிளம்பி, வேறு வழியில்லாமல் நேராக தியேட்டருக்கே வந்து விட்டேன். 

150, அதோட இன்னொரு 100. கவுண்டமணி போல 'என் பணத்துக்கு வொர்த்தா இருக்கும்' என்று நம்பி உள்ளே போனேன். நான் உள்ளே போகும்போதே கால்மணி நேரம் தாமதம். ரஜினி அறிமுகப் பாடல் முடிந்து, அனுஷ்காவே வந்து விட்டார். அப்படி ஒன்னும் முக்கியமான காட்சி முடிந்திருக்காது என்று தெரியும் என்பதால், பொறுமையாய் போய் அமர்ந்தேன்.

கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். எல்லா ரஜினி படம் போலவே, பெரிய ரஜினி மக்களுக்கு அணை கட்டி நல்லது செய்து சொத்துக்களை இழந்து, ஊர் மக்களால் அனாதையாக்கி துரத்தப்படுகிறார். பொதுவாக மகன் ரஜினி வந்து அவப்பெயரை துடைப்பார். ஆனால், இதில் பேரனின் பெயர் உள்ளதால், பேரனாக வந்து தாத்தாவின் களங்கத்தைத் துடைக்கிறார். 

பொதுவான ரஜினி படங்களின் எல்லா மசாலாக்களும் இதில் உள்ளது. ஆனால், இந்தப் படத்தில் ரஜினிக்கு சரியான எதிரியே இல்லை. தாத்தா ரஜினிக்கு எதிரியாக வரும் ஆங்கிலேயரை, அவரது மனைவியே திருத்துகிறார். பேரன் ரஜினிக்கு "யாரையாவது வில்லனாக்கனுமே?" என்று யோசித்து, வழக்கம் போல ஊரில் உள்ள ஒரு அரசியல்வாதியை வில்லன் ஆக்கி விட்டார்கள். 

முதலில் பாராட்டப்பட வேண்டியது இயக்குனர்தான். இந்த குறைந்த காலத்தில், இத்தனை நடிகர்களைக் கொண்டு பிரம்மாண்டமான காட்சிகளை எடுத்துள்ளார். அதிலும் அந்த அணை கட்டும் காட்சிகள், பிரமாதம். என்னதான் பணம் நிறையக் கொடுத்தாலும், அதற்கேற்றார்போல வேளை நடக்க வேண்டுமே. ரவிக்குமார் நடத்தியிருக்கிறார். அதே போல, ஓரளவு நல்ல கதை, திரைக்கதையை பக்காவாக தயார் செய்யவெல்லாம் நேரமில்லை, அதான் ரஜினி இருக்காரே என்று துணிந்து இறங்கி உள்ளனர். அதனால்தான், முதலில் அவரை திட்டவும் வேண்டி உள்ளது. 

படத்தின் இடைவேளை வரும்போதுதான் "என்னாது, இப்போதான் இடைவேளையா?" என்று தோன்றியது. அதன் பின் ஓரளவு பரவாயில்லாமல் போனாலும், மீண்டும் இறுதியில் சலிக்க ஆரம்பித்து விட்டது. அதுவும் இறுதி சண்டைக்காட்சிகளில் ரஜினி ரசிகர்களே நக்கலாக சிரிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு அபாரம். இசை பரவாயில்லை. பொதுவாக ரஹ்மான் ரஜினிக்காக கொடுக்கும் பின்னணி இசை எப்போதுமே எனக்கு மிகவும் பிடிக்கும். எந்திரனில் கெட்ட சிட்டிக்கு வரும் இசை, சிவாஜியில் சிங்கப்பாதையை தேர்ந்து எடுத்தவுடன் வரும் இசை, மொட்டை ரஜினிக்கு வரும் இசை, முத்துவில் ராதாரவி வரும்போது வரும் பின்னணி என நான் தேர்ந்தெடுத்து கேட்பவை நிறைய. இதில் அப்படி சொல்வது போல, இப்போது தெரியவில்லை. ஆனாலும், டிரைலரில் வரும் இசையும், ரயில் சண்டைக்காட்சியில் வரும் இசையும் அபாரம்.



1939ம் ஆண்டு காட்சிகளுக்காக ரொம்பவெல்லாம் கஷ்டப்படாமல் எடுத்திருக்கிறார்கள். மொபைல் போன் காண்பிக்கவில்லை, நாயகிக்கு ரவிக்கை இல்லை. ஒரு பழைய கார். கொஞ்சம் வெள்ளைக்காரங்க. ரஜினி எப்பவும் கோட்டு சூட்டு. சுதந்திரத்திற்கு முன்னால், என்பதால், சுதந்திரத்திற்காக போராடுகிறோம் என்று ஒரு சண்டை, அவ்ளோதான். ஆனால், அந்தக் கதையை மட்டுமே, இன்னுமொரு வலுவான வில்லன் பாத்திரம் சேர்த்து படமாக எடுத்திருக்கலாம். படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

மற்றபடி, நான் செலவு செய்த 250ரூபாய்க்கு, இந்தப் படம் எனக்கு திருப்தியைத் தரவில்லை. படத்தில், தாத்தா ரஜினி வரும் வரை கூக்குரல் இட்ட ரசிகர்கள் கூட, இடைவேளைக்கு பிறகு அடங்கி விட்டனர். நான் புக் செய்யும்போது, நாந்தான் கடைசி இடம். ஆனால், படம் பார்க்க வந்த பொது பாதிக்கு மேல் காலியாகத்தான் இருந்தது. இதற்கு கண்டிப்பாக மழை மட்டுமே காரணம் இல்லை என்று நான் நினைக்கிறேன். .

தமிழில் சூப்பர் ஹீரோ படங்களே இல்லை. ரஜினி நடிக்கும் (வரும்?) எல்லாப் படங்களுமே சூப்பர் ஹீரோ படம்தான். அதில் என்ன லாஜிக் மீறல் இருந்தாலும், ரஜினியால் அதை செய்ய முடியும் என்று மறந்து விடுவோம். அதே போலத்தான் இந்தப் படமும் எனலாம், இன்னும் சற்று பட்டை தீட்டி இருந்தால்.

படம் முடிந்த உடனே மனதில் தோன்றியவை: 

பென்னி குயிக் தனது சொத்துக்களை விற்று அணை கட்டினார். இவர்களோ, அவர்கள் சம்பாதிக்க அதைப்பற்றி படம் எடுத்து, அவருக்கும் கெட்டப் பெயரை உண்டாக்கி, பணம் சம்பாதிக்கிறார்களே? (பக்கத்தில் உட்கார்திருந்த ஒருவர் பேசியது, "ஏ மச்சி, ஒரு வேளை அந்த முல்லை பெரியாறு அணையையும் நம்மாளுதான் எவனாவது கட்டியிருப்பானோ?", அதற்கு பதில் "ச்சே ச்சே, அப்படி இருந்தா அது இன்னும் இவ்ளோ நல்லா இருக்குமா").

ரஜினி படம் பார்ப்பதற்கு பதிலாக 'ர' படம் பார்க்க போயிருக்கலாமோ?

சில கேள்விகள்:

"எங்களுக்கு எதுவும் தேவையில்லை. ரஜினி வந்தால் மட்டும் போதும்" என்றுதானே ரசிகர்கள் நினைக்கிறார்கள். அப்புறம் ஏன் தேவையில்லாமல் இரண்டு நாயகிகள், தேவையில்லாத பாடல்கள். என்னதான் படம் என்றாலும், ரஜினி நாயகிகளுடன் கொஞ்சும்போது, எனக்கே ஒரு மாதிரி இருக்கிறது. ஏன், திரைக்கதையில் அவர்களை திணித்து உள்ளீர்கள்? தாத்தா ரஜினி ஏற்கனேவே திருமணம் ஆகியுள்ளவர் போலவும், அனுஷ்கா பாத்திரத்தை ஆண் பாத்திரமாகவும் வைத்திருக்கலாமே? என்னுடைய கேள்விக்குக் காரணம், ரஜினி கொடுத்த பேட்டிதான்.

மக்களுக்கு தேவை ரஜினி திரையில் ஆட வேண்டும், அடிக்க வேண்டும். ஆனால், கண்டிப்பாக இருபது வயது பெண்ணுடனும், ஐஸ்வர்யா ராயுடனும்தான் ஆட வேண்டும் என்று யாரும் எதிர் பார்ப்பதில்லை. (இது கமலுக்கும்தான்)

ரஜினியைப் பிடிக்காதவர்கள் ரஜினி அமிதாப் போல நடிக்க வேண்டும் என்று கூறுவது மேற்கூறிய காரணத்திற்காக மட்டுமே. ரஜினி மட்டும் ஜோடி இல்லாமல், ஒரு முழு நீள அதிரடிப் படத்தில் நடிக்கட்டுமே, கண்டிப்பாக இப்படி சொல்லியவர்கள் வாயை மூடுவார்கள். நானும்தான்.

Wednesday, November 5, 2014

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

சில பல காரணங்களால் கடந்த இரண்டு மாதங்களாக பதிவு போட முடியவில்லை. அது மட்டுமில்லாமல் அஞ்சானின் பாதிப்பில் இருந்தே இன்னும் மீளவில்லை. எனவே சில பல பிட்டுக்கள் மட்டும்.

புது வீடு:

8 வருடங்களாக இருந்த வாடகை வீட்டிலிருந்து, சொந்த வீட்டிற்கு மாறியாகி விட்டது. வேளச்சேரியில் இருந்து மீண்டும் குரோம்பேட்டை. கல்லூரிக் காலம் கிழக்கு குரோம்பேட்டை, தற்போது மேற்கு குரோம்பேட்டை.

என்னதான் இருந்தாலும், 8 வருடங்கள் ஒரே இடத்தில் இருந்து விட்டு மாறும்போது சொந்த வீடு என்றாலும், இன்னும் செட் ஆகவே இல்லை. நண்பர்களுடன் 5 வருடங்கள், சரியாக எனக்கு திருமணம் ஆகும்போது நண்பர்கள் ஆன் சைட், சொந்த வீடு என கலைய, நானே வீட்டுக்காரருடன் பேசி, வாடகை சற்றே குறைத்து, குடியேறி 3 வருடங்களும் முடிந்து விட்டது. சொந்த வீட்டை வாடகைக்கு விடலாம் என்றால் "அதெப்புடி, சொந்த வீட்டை விட்டுட்டு வாடகை வீட்டுல இருக்கிறது" என்று எல்லோரும் பொங்க, மாறியாகி விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக நிறைய வேலைகள். எல்லாம் முடித்து இணையத்தை இணைக்க இவ்வளவு நாட்களாகி விட்டது.

பயணம்:

முன்பு அலுவலகம் செல்ல தூரம் குறைவு. அதற்கே 'உயிர் பயம்'. இப்போதோ, பயண தூரம் இரு மடங்கு, அதுவும் GST சாலை. நள்ளிரவில் திரும்பும்போது எந்த சிக்னலிலும் நிற்பதில்லை. நின்றால் காலிதான். அதுவும் இல்லாமல் மெட்ரோ வேலை வேறு நடப்பதால், திடீரென குறுகிய சாலைகள் வந்து விடும். நம் பாடு திண்டாட்டம்தான். எதிர் திசையில் நம்மை நோக்கி (அவ்வளவாக) வர மாட்டார்கள் என்றாலும், சற்று கவனக் குறைவாக இருந்தால், நம்மை அரைத்து கூழாக்கி விடுவார்கள். கவனம்.

விமர்சனம்:

அஞ்சானுக்குப் பிறகு நன்றாக டியூன் ஆகி இருந்ததால், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் மட்டும் பார்த்தேன். அதன் பிறகு தினமும் வேலை நிறைய வந்ததால், தியேட்டருக்கே போகவில்லை. நீண்ட நாட்களுக்குப் பின் 'கத்தி' பார்த்தேன். படத்திலும், படத்தைப் பற்றியும் 1000 சர்ச்சைகள் இருந்தாலும், கூறப்பட்டுள்ள கருத்து மிக முக்கியம். மற்றபடி அரண்மனை, சலீம், ஜீவா, மெட்ராஸ் போன்ற படங்களை தரவிறக்கம் செய்தே பார்த்தேன். எல்லாமே நேரத்தைக் கடத்த உதவும். மற்றபடி ஒன்றுமில்லை. 

அரசியல்:

மக்களின் முதல்வரின் ஆணைக்கிணங்க, மாக்களின் முதல்வர் நாடாள, வாயில் கை சூப்பிக் கொண்டு நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டும், பதிவிட்டுக் கொண்டும், மக்களா அல்லது மாக்களா என்று தெரியாமல் இருக்கிறோம். இப்படியே போனால், "வெளங்கிரும்". 

நிகழ்வுகள்:

பாலியல் பலாத்காரம். முன்பெல்லாம் ஒரு கிளுகிளுப்பான செய்தியாக படித்து விட்டு போய் விடுவேன். இப்போது 2 வயது பெண்ணுக்கு தகப்பன் என்று ஆனவுடன், குழந்தையை யார் தூக்கினாலும் மனது 'பகீர்' என்கிறது. இதற்கு முன் இப்படியெல்லாம் நடக்கவில்லையா, அல்லது இப்போதுதான் இந்த செய்திகளை வெளியிடுகிறார்களா? என்றே தெரியவில்லை.

நமது செய்திகளை எப்போதும் நம்பக்கூடாது என்பதற்கான மிகச் சிறந்த உதாரணம், காவல் நிலையத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட ஒரு இளைஞனின் செய்திகள். ஆறு வேறு வேறு தமிழ் இணையங்களில் இருந்து எடுத்துள்ளவை.

தினமலர்
தினத்தந்தி
தமிழ் ஹிந்து
விகடன்
ஒன் இந்தியா
தினமணி

இவர்களில் சிறந்த திரைக்கதைக்கான முதல் பரிசு 'தின மலர்'. இரண்டாம் பரிசு 'தின தந்தி'. ஏன் தினமலருக்கு என்றால், அந்த SI கொல்லப்பட்ட நபரை தம்பி போல பார்த்துக் கொண்டார் என்றும், கொல்லப்பட்ட நபரும் அந்த SIயை அண்ணா என்றுதான் அழைப்பார் என்றும் ஒரு செய்தி இருந்தது. அந்த செய்தியை இப்போது காணவில்லை.

அதற்குள் மாக்களின் அடச்சே, மக்களின் முதல்வருக்கு குழம்பிய குட்டையில் இருந்து மீன் கிடைத்து விட்டதால், இந்த செய்திகள் இத்தோடு நிறுத்தப்படுகின்றன.

மற்றபடி உருப்படியான ஒரு செய்தி என்றால் தமிழ் ஹிந்துவில் வரும் 'மெல்லத் தமிழன் இனி..!' என்ற தொடர். குடியினால் நிகழும் எதிர் வினைகளை, உண்மை நிகழ்வுகளைப் பற்றிய தொடர். படியுங்கள்..