Saturday, November 14, 2015

பதிவு எண் 96/8

அனைவருக்கும் வணக்கம். இன்றோடு பதிவு எழுத ஆரம்பித்து 8 வருடம் ஆகி விட்டது. அதைப்பற்றி ஒரு சிறிய பதிவு (என்னாது, மறுபடியுமா?). ஏற்கனவே உள்ள ஐம்பதாவது செல்பீ புகழ் பதிவு இங்கே.

பொதுவாக 50ஆவது, 75ஆவது, 100ஆவது பதிவு, அட 110 விதியின் கீழ் 110ஆவது பதிவு என்றால் கூட பரவாயில்லை. அது ஏன் 96ஆவது பதிவு சிறப்பு என்கிறீர்களா? சும்மாதான். இதுவரை மொத்தம் எழுதிய பதிவுகள் 96, இன்றோடு 8 வருடங்கள் முடிந்து விட்டன. ஒரு வருடத்திற்கு சராசரியாக 12 பதிவுகள். மாதம் சராசரியாக ஒரு பதிவு. கஷ்டப்பட்டு (கஷ்டப்படுத்தி?) இந்த சராசரியைக் கொண்டு வந்துள்ளேன்.

அதிக பதிவுகள் எழுதப்பட்ட வருடம் 2015. இதுவரை 17 பதிவுகள். இந்த வருடத்திற்குள் மொத்தம் 100 பதிவுகள் எழுதி விட ஆ! (ச்)சை உள்ளதால், கண்டிப்பாக எண்ணிக்கை கூடும். 50 பதிவுகள் எழுத 5 வருடங்கள், ஆனால் அடுத்த 50 பதிவுகளை 3 ஆண்டுகளில் எழுதியாகி விட்டது. என்னடா கணக்கு சரியா வரலியே என்கிறீர்களா? நம்பிக்கைதான் வாழ்க்கை.

மிக குறைந்த பதிவுகள் எழுதி (மக்கள் சந்தோஷமாக) இருந்த வருடம் 2007. இரண்டே பதிவுகள். அப்போதான் ஆரம்பித்தேன், அதனால்தான். அடுத்து 2010. ஆறு பதிவுகள்.

மிக அதிக பார்வையாளர்களை இழுத்த பதிவு உத்தம வில்லன்: லிங்குவிற்கு சங்கு? 3250+ வருகையாளர்கள், அடுத்து அஞ்சான் - நோஞ்சான், அதற்கு 2700+ வருகையாளர்கள். மிக மொக்கையான பதிவு சும்மா, வாழ்த்துக்கள் என்ற பதிவுகள்தான். ஒற்றை எண்ணிக்கைதான்.

பின்னூட்டங்கள் சராசரியாக பதிவிற்கு 3ல் இருந்து 4 என மாறி உள்ளது. இதுவரை 370 பின்னூட்டங்கள் வந்துள்ளன. (அதில் பாதிக்கு மேல் நானே போட்டது என நினைக்கிறேன்)

ஒரு அதிசயம் என்னவென்றால் அதிக பின்னூட்டமிடப்பட்ட பதிவு மட்டும் இன்னும் மாறாமலே உள்ளது. ராஜா ரசிகனும், ரஹ்மானும்!!! பதிவு 18 பின்னூட்டங்களுடன் உள்ளது. அதே நேரம் உத்தம வில்லன்: லிங்குவிற்கு சங்கு? மற்றும் சென்னையின் வாகன ஓட்டிகள் இரு பதிவுகளும் அதே 18 பின்னூட்டங்களுடன் உள்ளன. பின்னூட்டங்களே இல்லாத பதிவுகள் நிறைய உள்ளன. அதில் இந்தப் பதிவும் சேருமா?

Monday, October 12, 2015

மாயா, புலி, தூங்காவனம், தோழா - விமர்சனம்

புலி:

முதல் நாள் முதல் காட்சி பார்த்தால், அந்தப் படம் பப்படம் ஆகும், அது என்னுடைய ராசி. கடைசியாக அஞ்சான். இந்த ராசி நான் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காமல், புலி படம் பார்க்க கூட்டிப் போனார்கள். அதுவும் நம்மூரிலேயே நம்ம ராசி அப்படி. அமெரிக்காவில் சும்மாவா? பொட்டியே வரவில்லை.

அந்த வெள்ளியன்று இங்குள்ள நான்கு நண்பர்கள் சந்திக்கலாம் என்று திட்டம். அது சற்றே சொதப்பி விட, நான் கிளம்பிய நேரத்தில் அலுவலக நண்பர்களும், நான் போவதற்குள், மற்ற நண்பர்களும் புலி படம் பார்த்து விட்டனர். நான் மட்டும் தப்பித்து விட்டேன். "அவ்ளோ ஒன்னும் மோசமில்லடா, ஒரு வாட்டி பாக்கலாம், கொஞ்சம் வித்தியாசமாத்தான் இருந்தது." என்றெல்லாம் சமாதானம் சொன்னார்கள். எனக்கோ, சிம்புதேவன் மீதிருந்த நம்பிக்கையும் குறைந்து கொண்டே இருந்தது. விஜய் மீது நம்பிக்கையே இல்லை. எனவே விட்டு விட்டேன். இருந்தாலும் விதி வலியது, கடைசியாக பார்த்துத் தொலைத்து விட்டேன்.

ஒரு பாண்டஸி என்கிற மாயாஜாலப் படம் வருகிறது என்றால், அதில் லாஜிக் பார்க்கக்கூடாது. அதாவது, படம் பார்க்கும் போது நம்மை யோசிக்க வைக்கக் கூடாது. அப்படிதான் இருக்க வேண்டும். ஆனால், புலி அப்படியா இருக்கிறது? இப்போதெல்லாம் குழந்தைகளே நம்மை விட பயங்கரமாக யோசிக்கிறார்கள். ஏன், எப்படி எதற்கு என நாம் கேட்கிறோமோ இல்லையோ, அவர்கள் நன்கு கேட்கிறார்கள். அப்படி இருக்கையில் இது குழந்தைகளுக்கான படம் என வேறு சொல்கிறார்கள், எப்படி என்றுதான் தெரியவில்லை.

அதைவிட ஒரு கொடுமை என்னவென்றால் இசை. தசாவதாரம் படத்தில் வில்லன் பிளட்சர் பாத்திரத்திற்கு அருமையான பின்னணி இசையை தேவிஸ்ரீ பிரசாத் கொடுத்திருந்தார். அருமையாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காகவே, இந்த படத்திலும் போட்டு விட்டார் போலும்.

ஒன்று இது விஜய் படமாக இருக்க வேண்டும், அல்லது சிம்புதேவன் படமாக இருக்க வேண்டும், இரண்டுமில்லாமல் நடுவில் இரண்டுக்கெட்டானாகி, மொக்கையாகி விட்டது. கருஞ்சிறுத்தை, ஒற்றைக்கண் மனிதன், குள்ள மனிதர்கள், பேசும் ஆமை, மாந்தரீக ராணி, எல்லாம் சரிதான். ஆனால் எதுவுமே சரியில்லை (புரிகிறதா?).

சிம்புதேவனின் கிமுவில் சோமு படியுங்கள். படித்த பிறகுதான் தெரியும் எவ்வளவு மொக்கை என்று. ஆனால், படிக்கும்போது தெரியாது. பரபரப்பாக இருக்கும். அதைக்கூட எடுத்திருக்கலாம். அடப் போங்க சார். இதுக்கு மேல எழுதினா ராஜேந்தர் வந்து பிராண்டி வச்சிருவாரு. வர வர சிம்பு தேவன், விஷ்ணுவர்தன், வெங்கட் பிரபு ஆகியோரின் மேலிருந்த நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது. சீக்கிரம் திரும்பி வாங்க. காத்திருக்கோம்.

மாயா:

புலி முதல் நாளன்று, படம் வர தாமதம் ஆகும் என்று மாயா படம் திரையிட்டார்கள். ஏற்கனவே படம் பற்றி நல்ல விமர்சனங்கள், இணையத்தில் தரமான காணொளி இல்லை (பாக்கறது திருட்டு, இதுல நொள்ள பிரிண்டுதான் வேணுமோ) என்பதால் அதைப் பார்த்தோம். அட்டகாசமான படம். படம் பார்த்த அனைவருமே சற்றே அரண்ட முகத்துடன்தான் வெளியேறினர்.

டிமாண்டி காலனி படத்திற்கு பின், ஒரு தரமான, உண்மையான பேய்ப்படம். படத்திற்கும் படம், அதிலும் குழப்பமில்லாமல் திரைக்கதை என எளிமையாகவே இருந்தது. இதற்கு முன், 'புது முகங்கள் தேவை' என்றொரு படமுண்டு. அதிலும் படத்திற்கும் படம் என சற்றே குழப்பி, கடைசியில் தெளிய வைப்பார்கள். இதில் அந்த அளவு குழப்பம் இல்லை.

குற்றம் கடிதல்:

இதுவும் ஒரு தரமான படம். படம் சற்றே நீளம் போல தோன்றினாலும், படத்திற்கு இது தேவைதான். என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம் இது. ஏனென்றால் என் சொந்தக்காரர்கள் நிறைய பேர் ஆசிரியர்கள். என் தங்கமணியோ ஒரு தனியார பள்ளியில் கணித ஆசிரியையாக வேலை செய்தவர், அங்கு நடக்கும் அரசியல், நிகழ்வுகள் பற்றி நிறைய சொல்லுவார். எனக்குப் பிடித்த விஷயம், இந்தப் படத்தில் அனைவருமே நல்லவர்கள், அல்லது நல்ல பக்கங்களை மட்டுமே காட்டியது.

தனி ஒருவன், கிருமி போன்ற படங்களும் நன்றாக இருந்தன. ஒரு நகை முரண் என்னவென்றால் காக்கா முட்டை, குற்றம் கடிதல் படங்கள் ஊடகங்களை கற்பழித்தாலும், அதே ஊடகங்கள் அவற்றை கொண்டாடுகின்றன. இது தவிர்க்க இயலாததா இல்லை நிஜமாகவே பாராட்டுகின்றனவா என்றுதான் தெரியவில்லை. 

எப்போதுமே, கடந்து போன படங்கள் பற்றிய விமர்சனமே பார்க்கிறோமோ, ஒரு வித்தியாசத்திற்கு வரப்போகிற படங்களின் விமர்சங்கள் இங்கே.

தோழா (The Intouchables 2011 French):

கார்த்தி, நாகார்ஜுனா நடிப்பில் வெளி வர இருக்கும் படம். ஒரு விபத்தில் சிக்கி கழுத்துக்குக் கீழ் எதுவும் இயங்காமல் இருக்கும் பணக்காரன், எதையும் பற்றி கவலைப்படாமல் ஊர் சுற்றும் ஒருவன் இருவருக்கிடையேயான நட்பே படம். திரைக்கதையில் வரும் நிறைய காட்சிகள் ஏற்கனவே நிறைய படங்களில் வந்து விட்டது. ஒரே மாதிரி வாழும் பணக்காரனின் வீட்டில் வரும் நாயகன், தனது Don't Care சேட்டைகள் மூலம் அவர்களது வாழ்க்கையை மாற்றுவதுதான் படம். பிரெஞ்ச் நாட்டவரால் கொண்டாடப்படும் படமாம் இது. நம்மூரில் என்னவோ எனக்கு நம்பிக்கை இல்லை.

இது ஒரு உண்மைக் கதை. நம்மூரில் தாரை தாரையாய் கண்ணீர் விட வைக்கும் அளவிற்கு காட்சிகள் வைக்க வாய்ப்பு உண்டு. ஆனால், இது நகைச்சுவை திரைப்படம். நாடகம் பார்ப்பது, இசை நிகழ்ச்சியில் அட்டூழியம் செய்வது, காரியதரிசியிடம் வழிவது, இறுதியில் சவரம் செய்யும் காட்சிகள் எல்லாம் அட்டகாசம். கார்த்தி சரியாக பொருந்துவார். தெலுங்கில் ஆனால் நாகார்ஜுனாவை எப்படி ஒப்புக்கொள்வார்களோ தெரியவில்லை. கண்டிப்பாக அவருக்கு பிளாஷ்பேக் காட்சிகள் இருக்கும் என நினைக்கிறேன்.

இந்த படத்தைப் பற்றி ஒரு தெளிவான விமர்சனம் இங்கே.

தூங்காவனம் (Sleepless Night 2011 French):

ஒரு போதைப்பொருள் கடத்தும் கூட்டத்திடம் இருந்து இரண்டு பேர் போதைப்பொருளை திருடுகிறார்கள். அதன் பின், காவல்துறை அதிகாரி கமலின் மகன் கடத்தப்பட்டு, கமலிடம் இருந்து அந்த பொருள் திருப்பிக் கேட்கப்படுகிறது. ஒரு இரவில், கமல் என்ன செய்து தனது மகனை மீட்டார்? கமல் நல்லவரா இல்லை கெட்டவரா? என்பதுதான் கதை.



டிரைலர் பார்க்கும்போது, அப்படியே நகலெத்திருப்பது தெளிவாக தெரிகிறது. த்ரிஷாவின் உடை, பாவனைகள், பிரகாஷ்ராஜின் பாவனைகள், கிஷோர் மற்றும் சம்பத்தின் நடிப்பு, லூசுத்தனமான யூகி சேது என அந்தப் படம் பார்த்தவர்கள் அனைவருக்குமே, யார் யார் எந்த பாத்திரங்களில் வருவார்கள் என சுலபமாக கணிக்கும் அளவிற்கு டிரைலர் உள்ளது. கமலுக்கு படத்தில் முத்தக் காட்சிகள், அழும் காட்சிகள் என எல்லாம் உண்டு.

அது என்ன 2011ல் வந்த பிரெஞ்ச் படங்கள் மீது நம்மவர்களுக்கு என்ன ஆர்வம் என்று தெரியவில்லை. பார்ப்போம்.

Saturday, September 26, 2015

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

"என்னடா, வர வர ரொம்ப ஒலகப்பட விமர்சனமா போடறானே" என்றுதானே யோசிக்கிறீர்கள்.. வேற ஒன்னுமில்லீங்க.. "ஒடனே பாக்கணும், கெளம்பி வாங்க" அப்டின்னு ஒபாமா கூப்புட்டாரா, அதான் கெளம்ப வேண்டியதா போச்சு. இங்க வந்து என்ன செய்வோம்னுதான் தெரியும்ல. அதான். அது மட்டுமில்லாம கொஞ்சம், இல்லல்ல ரொம்பவே சோம்பேறியா வேற ஆயாச்சு. அதான் புதுசா எந்த பதிவும் போட முடியல. சந்தோசமா இருந்தீங்களா. அதான் வந்துட்டேன்ல.

கடைசியா என்ன பிட்டு போட்டேன்? ஆங், ஒலகப்பட விமர்சனமா போட்டுக் கொல்கிறேன் (சரிதான்) என்று சொல்லி இருந்தேன். செஞ்சுட்டேன். சரி சரி அத விடுங்க. தமிழ்ல கடைசியா ஒழுங்கா பாத்த படம் 'டிமாண்டி காலனி'. அதுக்கப்புறமே கெளம்பியாச்சு. பாகுபலி முதல் இப்போ மாயா வரை திருட்டுத்தனமாத்தான் பாத்தேன். என்ன செய்ய. இங்க பக்கத்துல இல்ல, தூரத்துல கூட தமிழ்ப்படம் வராது. என்ன செய்ய. என்னவோ புலி வருது புலி வருதுன்னு சொல்றாங்க. பாக்கலாம். இயக்குனர் என்னவோ எனக்கு புடிச்சிருந்தாலும், நாயகன நெனச்சாத்தான் கொஞ்சம் பயமா இருக்கு. பாப்போம்.

இங்க அமெரிக்கா எப்படி இருக்கா? அப்படியேத்தான் இருக்கு. இந்த ஊர்க்காரன் கூட நம்மளப் பாத்தா கொஞ்சம் சிரிக்கிறான், மதிக்கிறான். ஆனா நம்ம ஊர்க்காரங்க மொறக்கிறாங்க. "அட நம்ம ஊர்க்காரன் போல இருக்கான்பா" என்று சற்றே பார்த்து சிரித்தால், அப்படியே மொறைக்கிறாங்க.

கொஞ்சம் யோசிச்சுப் பாருங்களேன். நம்ம ஊர்ல ஒரு நாலு தெலுங்குக்காரன்களோ, இல்ல மலையாளிகளோ சேந்து சத்தம் போட்டு பேசி சிரிச்சாலோ, இல்ல ஏதாவது கூட்டம் போட்டாலோ நமக்கு எவ்ளோ காண்டாகும். ஆனா, நாம அவங்க ஊருக்கு வந்து இருந்தாலும், நம்மளையும் எவ்வளவோ மதிக்கிறாங்க. சில பல பிரச்சினைகளும் இருக்கு. ஆனா, நம்மூரோடு பாக்கும்போது, இங்க கொஞ்சம் பரவால்ல, அப்டின்னு எனக்கு தோணுது. ஆனா, என்ன இருந்தாலும், நம்ம ஊரு நம்ம ஊருதான். 

மத்தபடி, இங்கிருந்து ஏதாவது வேணும்னா சொல்லுங்க. நம்மாளு மோடி வராரு. வாங்கி அனுப்பறேன். அவ்வளவுதாங்க இந்த மாச பிட்டு. எம்எஸ்வி, அப்துல் கலாம் மரணங்கள், மோடி வெளிநாட்டு பயணங்கள், ஸ்டாலின் நடைப்பயணம், ஜெயலலிதா, அன்புமணி, கபாலி, தூங்காவனம் அப்டின்னு நெறைய சொல்லத் தோணுது. எனக்கெதுக்கு வம்பு. அதனால இத்தோட முடிச்சிக்குறேன். அடுத்த பதிவுல, ஆபத்து வராத மாறி வேணா போட்டுக்கலாம். நான் புள்ள குட்டிக்காரன்பா.

Saturday, August 29, 2015

எங்கடா பொணத்த காணோம்: Sleuth (1972), Diabolique (1955)

சில படங்களைப் பார்க்கும்போது, "எப்படிடா இப்படியெல்லாம் யோசிக்கிறாங்க, ஒரு வேளை இவனுங்க இந்த மாதிரி எதுவும் செஞ்சிருப்பாங்களோ" என்று தோணும். பல வருடங்களுக்கு முன் இப்படி எல்லாம் எடுத்திருப்பதுதான், எனக்கு ஆச்சரியமாக உள்ளது. நீங்கள் நிறைய உலகப்படங்கள் பார்க்கும் வழக்கம் உடையவராக இருந்தால், ஓரளவு இரு படங்களின் முடிவையும் கணிக்க முடியும். ஓரளவுதான், அதுவும் முதல் படத்திற்குதான்

Diabolique (1955):

ஒரு உறைவிடப் பள்ளியின் தலைமை முரட்டு தலைமை ஆசிரியர், அது அவரது மாமனாரின் பள்ளி, மனைவியும் ஆசிரியை, உடல் நலம் சரி இல்லாதவர். இன்னும் 2 ஆசிரியர்களும், இன்னொரு ஆசிரியையும் உள்ளனர். அந்த ஆசிரியைதான் துணைவி. இருவரையும் பாடாய்ப் படுத்துவதால் மனைவி, துணைவி இருவரும் சேர்ந்து அந்த தலைமை ஆசிரியரைக் கொலை செய்ய திட்டமிடுகின்றனர். ஒரு விடுமுறை நாளில், பக்காவாக திட்டமிட்டு, கொலையும் செய்து, பள்ளியில் உள்ள நீச்சல் குளத்தில் பிணத்தைத் தள்ளி விடுகின்றனர். குடி போதையில் தடுமாறி விழுந்தது போல இருக்கும் என நம்புகின்றனர்.

பிணம் வெளியே வருமென பார்த்தால் வரவில்லை. சரி என இன்னொரு திட்டம் போட்டு, நீச்சல் குளத்தில் உள்ள நீரை வெளியேற்றிப் பார்த்தால், பிணத்தைக் காணோம். இரண்டு பேரும் பீதியிலேயே அலைய, பள்ளியில் தலைமை ஆசிரியரைப் பார்த்ததாக ஒரு மாணவர் வேறு சொல்ல, நமக்கும் சேர்த்து தலை சுற்றுகிறது. பயத்தில் துணைவியோ ஊரை விட்டே ஓடுகிறார். இந்த நிலையில் எங்கே அனாதை பிணம் கிடைத்தாலும், மனைவி அங்கே சென்று பார்க்க, ஒரு ஓய்வு பெற்ற காவல் அதிகாரி, "நான் உன் புருஷனைக் கண்டு புடிக்கிறேன்" என்று உள்ளே வருகிறார். அவராவது பிணத்தைக் கண்டு பிடித்தாரா என்பதுதான் கதை.

Sleuth (1955):

ஒரு வயதான துப்பறியும் எழுத்தாளர், அவரது இளம் மனைவி. இல்லறமோ சரியில்லை. அவருக்கு ஒரு ரகசிய காதலி. மனைவிக்கு ஒரு காதலன். அந்த காதலன், அந்த வித்தியாசமான எழுத்தாளரை சந்திக்க, வினோதமான அவரது வீட்டிற்கு வருகிறான். அவர் விவாக ரத்து கொடுத்தால், அவரது மனைவியை மணந்து கொள்ளலாம் என பேச வருகிறான். அவரோ, "நான் விவாக ரத்து கொடுத்தால், நிறைய பணம் ஜீவனாம்சமாக கொடுக்க வேண்டும். அப்புறம் நான் என்ன செய்ய" என்கிறார். அது மட்டுமில்லாமல், அவளொரு ஆடம்பரப் பிரியை, உன்னால் அந்த யானையைக் கட்டி தீனி போட முடியாது என்கிறார். பின் அவரே ஒரு வழி சொல்லுகிறார்.

அவரது வீட்டில் உள்ள நகைகளை அவனைக் கொள்ளையடிக்க சொல்கிறார். தடயமில்லாமல் செய்யவும் அவரே வழி சொல்கிறார். "நகை உனக்கு, இன்ஸ்யுரன்ஸ் பணம் எனக்கு" என்கிறார். எல்லாம் முடியும் நேரத்தில், அவன் நெத்தியில் துப்பாக்கி வைத்து "ஏண்டா, நீ பாட்டுக்கு வருவ, என் பொண்டாட்டிய கூட்டிட்டு போவ, நான் வேடிக்கை பாக்கணுமா" என்கிறார். இதுவரை நான் நினைத்தபடிதான் படம் போனது.

அதன் பிறகு, காணாமல் போன அந்த காதலனைப் பற்றி விசாரிக்கிறேன் என ஒரு காவல்துறை அதிகாரி வருகிறார். கிடுக்குப் பிடி போட்டு கேட்கும் கேள்வியில், எழுத்தாளர் மாட்டுகிறார். "சரி, நீ அவன கொன்னுட்ட, பொணம் எங்க?" என்று கேட்கிறார். அதன் பின் என்ன என்பதும், மாறி மாறி வரும் திருப்பங்களும் படம் பார்த்தால் தெரியும். படம் முழுக்க ஒரே வீட்டுக்குள்தான். படம் முழுதும் ஒரே ஆளோ, அல்லது இரண்டு பேர் பேசுவதுதான் படமே.

இந்த இரண்டு படங்களிலும், எல்லோரும் பேசிக்கொண்டேதான் இருப்பார்கள். ஆனால், மிக சாதாரணமாக கதையில் திருப்பங்கள் நிகழும். இந்த இரண்டு படங்களையும் மறு ஆக்கம் கூட செய்திருக்கிறார்கள். ஆனால், மூலப் படம் பார்ப்பதே சிறந்தது என்பது என் எண்ணம். பொறுமை மிக முக்கியம் அமைச்சரே. அடுத்த பதிவில், இதே போல ஒரே அறையில் நடக்கும் சம்பவங்கள் பற்றிய (நான் பார்த்த) படங்கள் பற்றிப் பார்ப்போம்.

Thursday, July 30, 2015

கிறிஸ்டோபர் நோலன்

'கஜினி' படம் வந்தபோது 'மெமெண்டோ' படத்தின் காப்பி என நண்பர்கள் அதை தரவிறக்கம் செய்து பார்த்தனர். அனைவரும் இரண்டு நாள் முழுக்க தலைவலியோடு திரிந்தனர். எனவே, நான் அதை பார்க்கவில்லை. அதே போல 'பிரஸ்டீஜ்' படமும் ஒருவன் பார்த்து விட்டு பிதற்றிக்கொண்டு இருந்ததால், ஏதாவது பதிவர்கள் அந்தப் படத்தைப் பற்றி எழுதி இருந்தாலும், அப்படியே தள்ளிப் போய் விடுவேன்.

நாம இயக்குனர் வரிசையில் படம் பாப்போம் என நோலனின் படங்கள் அனைத்தையும் தரவிறக்கம் செய்தேன். அதன் விளைவே இந்தப் பதிவு. அது என்னவோ தெரியவில்லை, அவரின் படங்கள் எல்லாமே எனக்கு சுஜாதா கதைகளை நினைவூட்டுகிறது. அதாவது அந்த கதையின் முடிவுகள். அவரது படங்களைப் பற்றி நிறைய பதிவுகளை நீங்கள் படிக்கலாம். இதில் என்னுடைய கருத்துகள் மட்டுமே.

குறும்படங்கள்:

அவர் சில குறும்படங்களும் இயக்கி உள்ளார் போல. ஒன்று மட்டுமே காணக் கிடைத்தது. யாராவது இனி 'நானும் ஒலகப்படம் பாக்கணும்' என்று நினைத்தால், முதலில் இந்த குறும்படத்தைக் காணுங்கள். அதில் தெளிவாகி விட்டீர்கள் எனில், ம், ஆரம்பிக்கட்டும்.


FOLLOWING (1998):


ஒரே ஒரு முறை மட்டும் பார்த்து, நான் குழம்பாமல் எனக்கு புரிந்த படம் இதுதான். வெட்டியாக இருந்தால், பீச்சில் உட்கார்ந்து கடலை சாப்பிட்டுக் கொண்டு, கடலைப் பார்த்தக் கொண்டு இருக்க வேண்டும், அப்படி இல்லாமல் 'சும்மா எவன்/எவள் பின்னாடியாவது சும்மா போலாம்' என்றால் என்ன ஆகும் என்பதுதான் கதை. (இந்த பரோட்டவைக் கொத்தி, நடுவில் மானே, தேனே பொன்மானே என்றெல்லாம் போட்டு, கேவலமாக போன கொத்து பரோட்டா படம்தான் வாமனன்). "செய்யாத கொலைக்கு எனக்கு தண்டனை கொடுத்துட்டாங்க எசமான்" என்றெல்லாம் நம்மாட்கள் புலம்பி, அதைத் தீர்க்கும் கதை கிடையாது. அதுதான் படத்தின் முடிவே.

மெமெண்டோ (MEMENTO) (2000):


என்ன நடந்தாலும் அடுத்த 5 நிமிடங்களில் மறந்து விடும் ஆள், அவன் கண் முன்னே அவன் மனைவியைக் கொன்ற வில்லன், அவனுக்கு உதவி செய்யும் ஒரு பெண், எல்லாவற்றையும் மறந்து விடுவதால் உடம்பில் பச்சை குத்திக் கொண்டு, ஒரு போலராய்டு கேமரா வைத்து எல்லாவற்றையும் புகைப்படம் எடுப்பது, இவைதான் தேவையானவை. இதை வைத்து மண்டைக்குள் சுர்ரென்று காரம் ஏறும் அளவுக்கு படம் எடுத்த ஆள் நோலன். நம்மூருக்கு தேவையான மசாலா எல்லாம் சேர்த்து, காசு அள்ளியவர் முருகதாஸ்.


இந்தப் படம் பார்த்தவுடன் எனக்கு நினைவுக்கு வந்தது அமீர் கானின் ஒரு பேட்டி. "நான் மெமெண்டோ படம் பாத்தேன். எனக்கு அந்த படமே புரியல (அல்லது புடிக்கல). அப்புறமா அந்தப் படத்தோட கருவ(?) மட்டும் வச்சு வந்த கஜினி எனக்கு ரொம்ப புடிச்சிது. அதனாலதான் அத ரீமேக் பண்றேன்" என்றார். அமீர்கானுக்கே(??) புரியாத படம், நமக்கு அவ்வளவு சீக்கிரம் புரியுமா? ஒரு முறை பாருங்கள். இந்தப் படத்திற்கு நிறைய கோனார் உரைகளை நம் பதிவர்கள் எழுதி உள்ளார்கள். அதைப் படித்து விட்டு மீண்டும் பார்த்தால், இன்னும் சற்று பு(பி)ரிவது போல இருக்கும். மீண்டும் ஒரு முறை பாருங்கள்.

INSOMNIA (2002):


ஒரு மிகச் சிறந்த துப்பறியும் திரைப்படம். ஒரு கொலையை துப்பறிய வரும் அதிகாரி, கொலைகாரனைத் தேடும்போது, தவறுதலாக தன்னுடன் பணியாற்றும், சற்றே அவருடன் பிரச்சினை உள்ள சக அதிகாரியை தெரியாமல் சுட்டுக் கொன்று விட, அதை அந்த கொலைகாரன் பார்த்து விட, பிறகு ஆரம்பிக்கிறது ஆட்டம். அதன் பிறகு நடக்கும் ஒப்பந்தம் (பேக்கரியை நீ வச்சுக்க, உன் அக்காவ நான் வச்சுக்கிறேன்).

நோலனின் படங்களில் ஒரே நேர்க்கோட்டில், குழப்பாமல் செல்லும் ஒரே படம் இதுதான். கதை, திரைக்கதை அவரல்ல. இயக்கம் மட்டுமே. அத கூட காரணமாக இருக்கலாம். தவற விடக்கூடாத திரைப்படம். நாம் நிறைய படங்களில் காமெடியாக பார்த்து சிரித்த ராபின் வில்லியம்ஸ், இதில் கொடூரமான வில்லனாக கலக்கி இருப்பார்.

THE PRESTIGE (2000):


இந்தப் படத்திற்கும் நிறைய பேர் உரை எழுதி உள்ளனர். இரு மாய வித்தைக்காரர்கள் (மேஜிக் செய்பவர்கள்) இடையே உள்ள போட்டி, பொறாமைதான். இருவருக்கும்(?) அதனால் வாழ்க்கையே போகிறது. 1900க்கும் முந்தைய கால கட்ட கதை. இது இரண்டு முறை பார்த்தவுடன் ஓரளவு புரிந்து விட்டது. இதன் முக்கியக் கருவை மட்டும் வைத்து தமிழில் 'வில்லன்' படமும், ஹிந்தியில் தூம் 3 படமும் எடுத்துள்ளனர்.

THE DARK KNIGHT TRILOGY (2005, 2008, 2012):

இது முன்பே பார்த்து விட்டேன். ஒரு சூப்பர் ஹீரோ படம். எனக்கு பொதுவாக காமிக்ஸ் அவ்வளவாக பிடிக்காது. அதே போலத்தான் சூப்பர் ஹீரோக்களும். ஆனாலும், இதில் நோலன் வித்தியாசமாக எடுத்திருந்தாலும், எனக்கென்னவோ அவ்வளவாக பிடிக்கவில்லை. "என்னதான் இருந்தாலும் இப்படியா வில்லன்கிட்ட அடி வாங்குறது" என்றுதான் தோன்றியது. (அப்புறம் ஏன் நீ காமிக்ஸ் பத்தி பதிவு எழுதுற சிவாவை உன் பதிவுல வச்சிருக்க என்கிறீர்களா? நன்பேண்டா). எனவே ஒரு டைம் பாஸுக்காக நண்பர்களுடன் பார்த்தேன். ஆனாலும், நோலன் படம் என்று தெரியும் வகையிலும் சில (பல?) காட்சிகள் உண்டு.

INCEPTION (2010), INTERSTELLAR (2014):


நானும் முக்கி, முனகி எத்தனையோ கோனார் உரைகளைப் படித்துப் படித்துப் பார்க்கிறேன், இந்த இரண்டு படங்களும் சுத்தமாக புரியவேயில்லை. புரிவது போல இருந்தாலும், சில சமயங்களில் வேறு சந்தேகங்கள் வருகின்றன. அதற்கு இயற்பியல், வேதியியல், கணிதம் எல்லாம் மீண்டும் படிக்க வேண்டும் போல உள்ளது. கனவுக்குள் புகுந்து வருவது, கருந்துளைக்குள் நுழைவது, முடியல. கண்ணக் கட்டுது. தமிழில் வந்த 'இன்று நேற்று நாளை' படமே எனக்கு சில இடங்களில் புரியாதபோது, இந்தப்படம் அவ்வளவு சீக்கிரம் புரியும் என நினைத்தால், அது என் தவறுதான்.

நீங்கள் மிகவும் பொறுமைசாலி, அதே போல நேரம் போக வேண்டும், கொஞ்சம் வித்தியாசமாக ஏதாவது படம் பார்க்கலாம் என்று நினைத்தால் மட்டுமே, இவரது படங்கள் பார்க்கவும். இல்லையேல் ஏற்படும் பின் விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பேற்காது.

Tuesday, June 30, 2015

ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1993): புலம் பெயர்ந்தோரின் வலி

நான் பதிவு எழுதும் படங்கள் எல்லாம் நிறைய படம் பார்ப்பவர்கள் தேய்த்து எடுத்திருப்பார்கள். ஒரு வகையில் நான் பார்ப்பதே அந்த மாதிரி படங்கள்தான். ஏனென்றால், படம் பார்த்த பின், ஒவ்வொரு பதிவரும் அந்தப் படத்தைப் பற்றி என்ன சொல்லி இருக்கிறார்கள், நமக்கு தோன்றியதுதான் அவர்களுக்கும் தோன்றியதா என்பதற்காகவே.

ஏனென்றால் ஏற்கனவே குறும்படங்கள் பார்த்த அனுபவம். ஒரு 10 குறும்படங்கள் பார்த்தால்தான் ஒன்றாவது தேறும். அதே பெரிய படங்களுக்கு எல்லாம் நேரத்தை செலவு செய்ய முடியாது என்று, மற்றவர்கள் கூறும் படங்களையே பார்க்க ஆரம்பித்தேன். அதில் காமெடி என்னவென்றால், அதிலும் எனக்கு 10ல் ஒன்றுதான் பிடிக்கிறது.

அந்த படங்கள் பற்றிய எனது பார்வையே இந்த ஒலகப்பட பதிவுகள். என்னுடைய புரிதலையே நான் எழுதுகிறேன். தவறு ஏதேனும் இருப்பின், தயங்காமல் சுட்டிக்காட்டலாம்.


எல்லாம் சரிதான். ஏன் இந்தப்படம் முதலில்? அதற்கு நிறைய காரணங்கள் உண்டு. கல்லூரிக்காலங்களில் இந்தப் படத்தில் உள்ள 'அந்த ஒரு சில காட்சிகள்' மட்டுமே பார்த்துள்ளேன். படம் முழுதும் பார்த்ததில்லை. அதே போல படத்தின் நீளம், படம் முழுதும் கருப்பு வெள்ளை என சில தயக்கங்கள். போதாக்குறைக்கு இந்தியன் படத்தில் கமல் வேறு "நல்ல படம், தியேட்டர்ல யாருமே இருக்க மாட்டாங்க" என்று வேறு சொல்லுவாரா, சரிதான் மொக்கைப் படம் போல என்று விட்டு விட்டேன்.

அதன் பின் "என்ன, இது ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் படமா" என்று மட்டும் கேட்டு விட்டு மீண்டும் விட்டு விட்டேன். அதன் பின் ஒரு மிக கடினமான நாளில் இந்தப் படத்தைப் பார்த்து விட்டேன்.

என்னை மிகவும் பாதித்த விஷயங்கள். ஒரு நிர்வாணமாக ஓடும் பெண்களைப் பார்த்து பரிதாபமும், அழுகையும் வரும் என அதுவரை நான் எதிர் பார்த்ததில்லை. அவ்வளவு ஏன், 'அங்கே கை வைத்தார்கள், இங்கே துணி நழுவியது' என நம் கண்களை எங்கோ பார்க்க வைக்கும் காணொளிகள் அதிகம். ஆனால், அந்தக் காணொளியின் நோக்கம் அதுவாக இருக்காது. அதே போலத்தான் இந்தப் படமும்.

அதே போல, தமிழில் எவ்வளவு மொக்கையான படமாக இருந்தாலும், சில காட்சிகளில் உணர்சிவசப்படுவேன், காரணம் மொழி. மற்றபடி மற்ற மொழிப்படங்களில் அவ்வளவாக இல்லை, அப்படியே இருந்தாலும், இந்தப் படம் அளவிற்கு இல்லை என்பதே உண்மை.

இரண்டாம் உலகப்போர் சமயத்தில், யூதர்கள் தாங்கள் வாழ்ந்த இடங்களை விட்டு அகதிகளாக வெளியேற்றப்படுகின்றனர். அவர்களின் சொத்துகள் ஜெர்மானியர்களால் அபகரிக்கப்படுகிறது. அதில் ஷிண்ட்லர் என்பவர் எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என்பது போல, யூதர் ஒருவருக்கு சொந்தமான, பாத்திரங்கள் செய்யும் தொழிற்சாலையை வாங்கி, அதில் குறைந்த சம்பளத்திற்கு யூதர்களை வேலைக்கு சேர்த்து நிறைய சம்பாதிக்கிறார். அதற்காக ஜெர்மானிய அதிகாரிகளுக்கு லஞ்சத்தை வாரி இறைக்கிறார். குடித்து, கும்மாளமிடுகிறார்.

அந்த தொழிற்சாலையில் மேலாளர் போல இருக்கும் ஸ்டெர்ன் எனும் யூதர், தன்னால் முடிந்த அளவு யூதர்களை இந்த தொழிற்சாலைக்கு வேலைக்காக கூட்டி வந்து, ஜெர்மானியர்களின் கொடுமையில் இருந்து காப்பாற்றுகிறார். அதே நேரம் யூதர்கள் மீதான கொடுமைகள் அதிகரிக்கின்றன. அவற்றைப் பார்த்து ஜெர்மானியரான ஷிண்ட்லருக்கே மனம் மாறுகிறது. அதிலும் உச்சகட்ட கொடுமையாக யூதர்கள் செங்கல் சூளையில் உயிரோடு கொளுத்தப்படுகிறார்கள்.

இதனைப் பார்த்ததும், எப்படியாவது தன்னால் முடிந்தவரை யூதர்களை காப்பாற்ற வேண்டும் என எண்ணி, தன்னுடைய சொந்த ஊரில் உள்ள தொழிற்சாலைக்கு யூதர்கள் வேண்டும் என கேட்டு, ஒரு பெயர்ப்பட்டியலை தயாரிக்கிறார். ஒவ்வொரு ஆளுக்காகவும் லஞ்சம் கொடுக்க தன சொத்துக்களையே அளிக்கிறார். அப்படி அவரால் காப்பாற்ற முடிந்ததா என்பதே படம். இது ஒரு உண்மைக்கதை. இந்த ஷிண்ட்லர் பற்றிய மேலதிக விவரங்களை நீங்கள் கூகுளிடம் பெறலாம்.

"கொடுமை கொடுமை" என்பவற்றை கேட்பதை விட, படிப்பதை விட பார்ப்பது என்பது கொடுமையானது. அதிலும் அந்தக் காட்சிகள் அனைத்தும், உண்மையாக நடந்த இடங்களில் எடுக்கப்பட்டது என தெரியும்போது வரும் வலி இன்னும் அதிகம். சொல்ல வெட்கமாகத்தான் உள்ளது, இலங்கையில் நம் சகோதரர்களும் சகோதரிகளும் இப்படித்தானே துயரப்பட்டு இருப்பார்கள் என இந்தப் படம் பார்க்கும்போதுதான் இன்னும் அதிகமாக வலித்தது.

எனக்கு தோன்றியது என்னவென்றால், ஒருவேளை இலங்கையில் நடந்த இனக்கலவரம் பற்றி படம் எடுக்க சரியான ஆள், ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் தான். "அவர் யூதர், அதனால் இந்தப் படம் அவருக்கு நெருக்கமான படம்" என்று சொல்லலாம். ஆனால், நம்மூரில் முழக்கமிட்டுக் கொண்டு திரியும் எந்த சினிமாக்காரனும், அவர்களின் உணர்வுகளை நமக்கு காட்சிப்படுத்த இயலாது. அவர்களுக்கு அதை வைத்து பணம் பண்ணவும், அதில் காதலை மட்டும் சொல்லவும், அரசியல் ஆக்கவும்தான் தெரியும். அப்படியே புரிந்தாலும் அதை நம்மூரில் எடுக்க முடியாது.அப்படியே புரிந்தாலும் அதை நம்மூரில் எடுக்க முடியாது.

ஒரு அழிக்கப்பட்ட இனத்தின் வலி தெரிய வேண்டும் என்றால், நாம் எவ்வளவு சொகுசாக வாழ்கிறோம் என தெரிய வேண்டும் என்றால், இந்தப் படத்தை நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேணும். உண்மையில் நான் சொன்ன கதை சாதாரணமாக தெரியலாம். ஆனால், காட்சிகள் உங்களை கதற வைக்கும். அவற்றை எழுத்தில் சொல்ல இயலவில்லை.

இந்தப் படத்தில் குறிப்பிடத் தகுந்த காட்சிகள் என தனியாக எதுவும் இல்லை. படம் முழுதுமே குறிப்பிடத்தக்கதுதான். படத்தில் பல நிர்வாணக் காட்சிகள் உண்டு. அவை யாவும் பாலியல் உணர்வுகளை தூண்டாது. அதனால்தான், படம் பாருங்கள் என்கிறேன். இந்தப்படம் மட்டும் நீங்கள் பார்த்து விட்டீர்கள் என்றால், என்னைப் பொருத்தவரை நீங்கள் எந்த மொழி உலகப்படங்களும் பார்க்க தயாராகி விட்டீர்கள் என்று அர்த்தம்.

Wednesday, June 3, 2015

மாஸ் - தமாஸ், டிமாண்டி காலனி - பக்கா மாஸ்

டிமாண்டி காலனி:

படம் வந்து விட்டாலும், கொஞ்சம் பொறுமையாகவே இருந்தேன். வந்த விமர்சனங்கள் கொஞ்சம் நம்பிக்கை கொடுக்கவே, "விடுறா வண்டியை" என போய் பார்த்து விட்டு வந்து விட்டேன்.

முதலில் இந்தப் படம் எப்படி மற்ற பேய்ப் படங்களில் இருந்து வித்தியாசப்படுகிறது என்று பார்ப்போம். நீங்கள் நிறைய உலகப் பேய்ப் படங்கள் பார்த்திருந்தால், இந்தப் படமும் உங்களுக்குப் பிடிக்கும். பாதி விஷயங்களுக்கு விடை இருக்காது. படம் முழுதும் பயம் மட்டும்தான் இருக்க வேண்டுமென முடிவு செய்து விட்டார்கள்.

நான் சொன்னது போன்ற (?) கதைதான். நான்கு நண்பர்கள், ஒரு ஆர்வத்தில் பேய் வீடு என்று சொல்லப்படும் டிமாண்டி காலனியில் உள்ள வீட்டிற்கு போகிறார்கள். கூட உள்ள பயந்தாங்கொள்ளி நண்பனை பயமுறுத்துகிறார்கள். ஆனாலும் அமானுஷ்யத்தை உணர்ந்து, வெளியேறி விடுகிறார்கள். அதன் பின் அவர்கள் வீட்டில் அடுத்த நாள் ஆரம்பிக்கும் அதகளம், நம்மையும் மிரள வைக்கிறது.

இந்த படம் பற்றி ஒன்றுமே தெரியாத ஆள் பார்க்க ஆரம்பித்தால், முதல் அரை மணி நேரம் கதை எப்படி போகும் என்றே தெரியாது. நான்கு நண்பர்கள், வேறு வேறு வேலை, டாஸ்மாக் பாட்டு என போகும் படம், அப்படியே திசை மாறுகிறது. இந்தப் படத்தில் இன்னொரு குறிப்பிடப் பட வேண்டிய விஷயம், "இப்ப பேய் வருமா?" என நம்மை யோசிக்க வைக்கவே மாட்டார்கள். போகிற போக்கில் புளியைக் கரைப்பார்கள். (அருள்நிதி திரைச்சீலையை ஒதுக்க அதில் பேய் தெரிவது, மெழுகுவர்த்தி எடுத்துக் கொண்டு வர வர கண் வெண்மையாக மாறுவது, ஜோசியர் சொன்ன விஷயத்தை போனில் மீண்டும் கேட்பது)

நான் டிக்கெட் வாங்க போகும்போது ஒரு கல்லூரி கும்பலில் ஒரு ஆள் வரவில்லை என எனக்கு அந்த டிக்கெட்டைக் கொடுத்து விட்டனர். படத்தைக் கத்திக் கத்திக் கலாய்க்க வேண்டும் என்று எண்ணினார்கள் போல. அவர்களுக்கு இயக்குனர் அந்த வாய்ப்பே கொடுக்கவில்லை. படம் முடிந்த பொது, அந்த கும்பலில் சிலருக்கே பேய் அடித்தது போல இருந்தது. அதிலும் படம் முடியும் போது மணி இரவு சரியாக 12. சில குடும்பங்கள் "கும்பலா இருக்கே, ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு போலாமே" என தர்ம சங்கடத்துடன் காத்திருந்தனர். வார நாளின் இரவுக் காட்சியில் அந்த கும்பல் சற்று அதிகம்தான்.

பொதுவாக ஒரு வீட்டுக்குள் மட்டும் இருக்கும் பேய் அந்த வீட்டில் உள்ளவர்களை மட்டுமே பழி வாங்கும். இந்த பேய் கொஞ்சம் வித்தியாசமாக அந்த மனிதர்களின் வீட்டிற்கு போய் பழி வாங்குகிறது. கொஞ்சம் கொஞ்சம் உலகப்படங்கள் நினைவுக்கு வரலாம் (1408-அறை பனி போல உறைவது, பைனல் டெஸ்டிநேஷன்-போன் ஓவனுக்குள் விழுந்து ஷாக் அடிப்பது போன்றவை).

அதே போல முதலில் நாடி ஜோதிடத்தை நக்கல் செய்தும், பின் அதையே ரொம்ப முக்கியமானதாக காட்டியதுதான் ஏன் என தெரியவில்லை. அருள்நிதியின் அது போன்ற பாத்திர படைப்பிற்கான காரணமும் தெரியவில்லை, தேவையுமில்லை. ஏனென்றால் அந்த உதவி இயக்குனரின் பாத்திரம் தவிர மற்றவர்கள் செய்யும் வேலைகள் படத்தை முதல் அரை மணி நேரம் நகர்த்தவே உதவுகின்றன. அந்த டாஸ்மாக் பாடலும், இந்த காட்சிகளிலும் கத்திரி போட்டால், இன்னும் நன்றாக இருக்கும்.

உருவம் படம் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அந்தப் படத்தில், டைட்டிலில் எல்லோருடைய பெயரும் வந்த பிறகு, இயக்குனரின் பெயரும் வந்த பிறகு இறுதியாகத்தான் இளையராஜாவின் பெயர் வரும். அந்த இயக்குனர் ராஜாவின் மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார் போலும். ஒரு காலே அரைக்கால் பாட்டுதான் வரும். அந்த பின்னணி இசை என்னை பயமுறுத்தியதா என எனக்கு அவ்வளவு நினைவில்லை. மீண்டும் அதை சோதித்துப் பார்க்கும் பொறுமையும் இல்லை. (ஆனால் பிள்ளை நிலா அட்டகாசம்) இந்தப் படத்தில் பின்னணி இசை அபாரம், பயமுறுத்தியது. சற்றே காது வலி வந்தாலும்.

காஞ்சனா போன்ற காமெடி பேய்களைப் பார்த்து சலித்திருந்தால், டிமாண்டி காலனி வரை போய் விட்டு வாருங்கள். கண்டிப்பாக உங்களை ஏமாற்றாது.

மாசு (எ) மாசிலாமணி:


உண்மையில் நான் இந்த படம் பார்க்கவில்லை. தவிர்க்க இயலாத சந்தர்ப்பத்தில், அலுவலக நண்பர் ஒருவருடன் அரை மணி நேரம் திருட்டுத்தனமாக பார்க்க நேரிட்டது. பின் கண்டிப்பாக தியேட்டர் போக வேண்டும் என முடிவு செய்து விட்டேன். அப்படியே போனாலும் தனியாக விமர்சனம் எழுத வேண்டும் என தோன்றாது போல. எனக்கென்னவோ வெங்கட் பிரபுவிடம் சரக்கு தீர்ந்து விட்டதோ என தோன்றுகிறது. சென்னை 28ல் இருந்து பிரியாணி வரை தரம் குறைந்து கொண்டேதான் வருகிறது. 

நினைவு தெரிந்து ஒரு இயக்குனரின் அனைத்து படங்களையும் தியேட்டர் சென்று பார்த்தது வெங்கட் பிரபு படங்கள் மட்டும்தான். அதிலும் முதல் 4 படங்கள் நண்பர்களுடன் சென்றபோது மிக சந்தோசமாக இருந்தன. எனக்கும், முதலில் வெங்கட் இதே போலவே படங்களை (யுவன், பிரேம்ஜி என வழக்கமான கூட்டணி) எடுத்தால் நன்றாக இருக்குமே, எதற்காக மாற வேண்டும் என்றுதான் தோன்றியது. ஆனால், இப்படியே போனால், "கொஞ்சம் இல்ல, ரொம்ப கஷ்டம்".