Friday, May 22, 2015

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

விமர்சனம்:

நான் முந்தைய பதிவில் கூறியது போல, உத்தம வில்லன் மட்டுமே பார்த்தேன். அதன் பிறகு வேறு எதுவும் பார்க்கவில்லை. இந்தியா பாகிஸ்தான் படம் நன்றாக உள்ளது எனப் படித்தேன். விஜய் ஆண்டனியை நான், சலீம் படங்களில் பேசா மடந்தையாக ரசிக்க முடிந்தது. ஆனால், அவரது காமெடி நமக்கு பிடிக்குமா என்று தெரியாததால் பார்க்கவில்லை. 36 வயதினிலே படத்திற்கு ரொம்ப நாள் முன்பே How Old Are You? பார்த்து விட்டேன். முடிந்தால், மனைவியைக் கூட்டிக் கொண்டு போய் பார்க்கலாம் என்றுள்ளேன்.

சமீப காலங்களில் எல்லா படங்களும் நன்றாக உள்ளது, ஓரளவு ஓடுகிறது என்று படிக்கும்போது தமிழ் சினிமா பிழைத்து விடும் போல உள்ளது. கண்மணி - காஞ்சனா இரண்டுமே நல்ல வெற்றி, வை ராஜா வை - உத்தம வில்லன் இரண்டுமே சுமாரான வெற்றி, இந்தியா பாகிஸ்தான், புறம்போக்கு, 36 வயதினிலே, இவை யாவும் நன்றாக உள்ளன என்ற மக்கள் கருத்து. எந்த படமும் மொக்கை, ஊத்திக்கொண்டது எனக் கேட்கவில்லை. எனவே, தமிழ் சினிமா நல்ல திசையில் பயணிக்கிறது என நினைக்கிறேன். இதே போல 'மாஸ்' படமும் தொடர்ந்தால் நல்லது.

சொல்ல மறந்து விட்டேனே. அருள்நிதியின் 'டிமாண்டி காலனி' படத்திற்கும் காத்திருக்கிறேன். ஏனென்றால், சென்னையின் திகில் இடங்கள் பற்றி ஏற்கனவே தெரியும், அதே போல ஒரு இடம் பயமுறுத்துவது போல இருக்கும் என்றால், நான்கு இளைஞர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என தோன்றுமோ, அதே போன்ற கதை போல இருக்கும் போல. ஏமாற்றாமல் இருந்தால் சரி.

இவரா இப்படி (அ) இவர் இப்படியா?

நமக்கு முன் பின் தெரியாத, அல்லது பழகி இராத மனிதர் ஒரு தப்பான ஆள் என அப்போது நாம் நினைப்போம்?

1. அவரை முதலில் பார்த்தவுடன் நம் மனதில் தோன்றும் எண்ணம். ஆள் கருப்பாக, குண்டாக, பரட்டை தலை போல, லுங்கி அல்லது கசங்கிய உடை என்று இருந்தால், நம்மையும் அறியாமல் "மோசமான ஆளா இருப்பான் போல" என்று தோன்றும். 

2. அவர் பற்றிய செவி வழி தகவல்கள் அல்லது, நமக்கு தெரிந்த யாரோ ஒருவர் சொல்லும் எதிர்மறைக் கருத்துகள்.

3. இதுவே அவர் ஒரு பிரபலமாக இருப்பின், நமக்கு பிடித்தால் சரி, பிடிக்கவில்லை எனில், அவரைப் பற்றிய எதிர் மறையான செய்தி எதில் வந்தாலும், உடனே "ஓ அப்படியா" என நாமே இன்னும் சில கற்பனைகளை சேர்த்துக் கொள்வோம்.


விஜயகாந்த்: பொதுவாக இவரைப் பற்றி 'படித்தவர்கள்' யாரும் ஒழுங்காக சொல்வதே இல்லை. என்னைப் பொருத்தவரை இவர் ஒரு அப்பாவி. விவரம் தெரிந்தவர்கள் இவரை நன்கு பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர். 'பங்காளி' என்ற சத்தியராஜ் படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் அவரை மதுவுக்கு அடிமையாக்கி, தனது சொல்படி ஆட்டி வைத்துக் கொண்டிருப்பார்கள். இவரும் அதே போலத்தான்.

பழைய படங்களில், அதாவது 80களில், 'சூப்பர் டைட்டில்ஸ் - கரிசல் ராஜா' என்று வரும் பார்த்திருப்பீர்களா என்று தெரியாது. அவரின் பேட்டி ஒரு முறை பல ஆண்டுகளுக்கு முன், குமுதத்திலோ, விகடனிலோ வந்திருந்தது. அதில் அவர் சொன்ன ஒரு விஷயம் இன்னும் என் மனதில் உள்ளது. "எனக்கு எல்லா நடிகர்களையும் தெரியும். என் கல்யாணத்திற்கு எல்லாரையும் பாத்து பத்திரிகை கொடுத்திருந்தேன். ஆனா, என்னையும் ஒரு சக தொழிலாளியா மதிச்சு, என் கல்யாணத்துக்கு வந்த ஒரே ஆள், விஜயகாந்த் மட்டும்தான்" என்று சொல்லி இருந்தார்.

அதே போல, அவரது கட்சியில் ஜெயித்து, சட்டமன்ற உறுப்பினர் ஆகி, இப்போது அம்மா பக்கம் தாவி உள்ள அருண் பாண்டியன் அவர்கள் ஒரு பேட்டியில் சொன்னது. "நான் கஷ்டப்பட்ட காலத்துல எனக்கு உதவி செஞ்சது விஜயகாந்த் தான். அப்புறம் படத்துல நடிக்க ஆரம்பிச்ச பின்னாடி, நான் ஒரு முடிவு செஞ்சேன். என்னோட நூறாவது படம் நானே இயக்கணும், அதுல கண்டிப்பா விஜயகாந்த் நடிக்கணும். அதுக்காக காத்திருந்து நான் இந்தப் படத்த எடுக்கிறேன்" என்று தனது நூறாவது படமான 'தேவன்' பட வெளியீட்டின்போது கூறினார்.

இனி நான் சொல்லும் சம்பவங்கள் அனைத்தும் மக்களுக்குத் தெரியும். இருந்தாலும், விஜயகாந்த் தனக்கு முக்கிய திருப்பு முனையாக அமைந்த 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தின் இயக்குனர் சந்திரசேகர், தனது மகன் விஜயை தமிழ் சினிமாவில் ஒரு இடத்தைப் பிடிக்க கஷ்டப்பட்டபோது, விஜயுடன் கவுரவ தோற்றத்தில், சந்திரசேகர் இயக்கத்தில் செந்தூரப்பாண்டி படத்தில் நடித்தார். அதே போல சூர்யாவுக்காக 'பெரியண்ணா' படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்தார். நடிகர் சங்க தலைவராக இருந்தபோது, சிங்கப்பூர் மலேசியாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி, நடிகர் சங்க கடனை அடைத்தார். காவல் துறையினருக்கு ஒரு மதிப்பை தன் படங்கள் மூலம் அளித்தார். அதே போல, முடிந்தவரை, சண்டைக்காட்சிகளில் டூப் போடாமல் நடித்தார். தனது அலுவலகத்தில் எப்போதும் அன்னதானம் அளிப்பார்.

கொஞ்சம் சுயமாக யோசித்து, சொந்தமாக முடிவுகள் எடுப்பார், சொந்தக்காரர்களை விட்டுவிட்டு வேறு சிறந்த ஆட்களை தன்னை சுற்றி வைத்துக் கொள்வார் என்றால், என் ஓட்டு இவருக்குத்தான். ஆனால், நடக்குமா எனபது சந்தேகம்தான்.

ஒலகப்படம்:

கல்லூரி வந்து சேரும் வரை, தமிழ்ப்படங்களைத் தவிர வேறு எதுவும் பார்த்ததில்லை. ஆங்கிலப் படம் என்றாலே 'ச்சீ' என்று எல்லார் முன்னாலும் சொல்லி விட்டு, பின் சத்தம் இல்லாமலும், யாரும் இல்லாமலும் பார்த்தே பழக்கம். ஜாக்கிசானைத் தவிர வேறு எந்த வெளிநாட்டு நடிகரையும் தெரியாது. கல்லூரி வந்த பிறகுதான் ஓரளவு ஆங்கிலப் படங்களும், பிற திராவிட மற்றும் ஹிந்தி மொழிப் படங்கள் பார்க்க ஆரம்பித்தோம். அதுவும், ஏதாவது ஒரு படம் வேறு மொழியில் இருந்து ரீமேக் செய்யப்பட்டால், அதைப் பார்த்து விட்டு, பின் அந்த மொழியிலும் பார்ப்போம். போக போக, முதலில் அந்த மூலப்படத்தை பார்த்து விட்டு, தேவைப்பட்டால் நகலைப் பார்க்க ஆரம்பித்தோம்.

அதன் பின், பதிவுலகம் வந்த பின் பல பதிவர்கள் மூலமாக பல்வேறு மொழிப் படங்களைப் பற்றி தெரிந்தாலும், எல்லாமே பார்க்க மாட்டேன். துப்பறிவது, மர்மம், பேய், சண்டைப் படங்களையே பொதுவாக தேர்வு பார்ப்பேன். அவ்வப்போது காமெடி. அவ்வப்போது சில 'ஒலக படங்களைப்' பார்த்தாலும் அவை எனக்கு ஏனோ அவ்வளவாக பிடிக்கவில்லை. எந்த படமாக இருப்பினும், அதில் பல காட்சிகளை நம் அனுமானத்திற்கு விட்டு விடுவது ஏன் என எனக்குப் புரியவில்லை. எல்லாப் படங்களிலும் லாஜிக் நிறைய இடித்தது. ஆனாலும், நம்மை அதைப்பற்றி யோசிக்க விடாமல், "ஒரு வேளை இப்படித்தான் இருக்குமோ, இல்ல அப்படி இருக்குமோ" என்று வேறு வகையில் நம் கவனத்தை திருப்பி விடுகிறார்கள்.

விஸ்வரூபம், உத்தமவில்லன் படங்களும் கொஞ்சம் இப்படித்தான் சில விஷயங்களை நம் அனுமானத்திற்கு விட்டிருந்தன. கமல் ரசிகன் என்று சொல்லிக் கொல்லும் (சரியாகத்தான் டைப்பி உள்ளேன்) எனக்கே அது பிடிக்கவில்லை. அப்புறம் எப்படி இந்த உலகப் படங்களை நான் ரசிப்பது.

அதற்கும் வழி உள்ளது. நிறைய நேரம் இருக்க வேண்டும், தனியாக இருக்க வேண்டும். ஒரே படத்தை குறைந்த பட்சம் இரண்டு முறை பார்ப்பதற்கு பொறுமை வேண்டும். எல்லாவற்றையும் விட முக்கியம் "யார் யாரெல்லாம் உத்தமர்களோ, அவர்களுக்கு மட்டுமே இந்தப் படம் புரியும்" என்ற மனநிலை. கீழே வரும் காணொளியில் 2:01:24ல் இருந்து பார்க்கவும். அதன் பின் "நேக்கு புரிஞ்சிடுத்து" என்று சொல்லுவீர்கள்.


இவையெல்லாம் இருந்தாலும், "ஒரு லக்கினத்தில் ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவனாக" இருக்க வேண்டும். ஒலகப்பட விமர்சகராகப் போகும் எனக்கு, நானே இந்த காணொளியை சமர்ப்பித்துக் கொள்கிறேன்.


ஆமாங்க. நானும், இனி ஏதாவது ஒலகப்படம் பாத்து விமர்சனம் எழுதலாம்னு இருக்கேன். ஏன்னா, ஏற்கனவே நிறைய பேர், நெறைய எழுதி இருக்காங்க. அங்கங்கே கொஞ்சம் எடுத்து, பட்டி, டிங்கரிங் எல்லாம் பாத்து போட்டா, ஒரு பதிவு சூடா தயார்.

2 comments:

  1. அப்பாவி தந்திரம் பழக வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு புரியலண்ணே. நான் அப்பாவியா அல்லது அப்பாவி போல இருக்க தந்திரம் பழக வேண்டுமா?

      Delete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..