Monday, February 8, 2016

நவீன தமிழனின் மூட நம்பிக்கைகள்

பார்த்தவுடன் பகிரவும்:

சுமார் 20 வருடங்களுக்கு முன் ஆடி மாதத்தில் சில பிரசுரங்கள் வரும். திருப்பதி கோயிலில் ஒரு பாம்பு வந்து அர்ச்சகர் முன் நின்று, நான் இப்படி வந்ததை உடனே 1000 துண்டு பிரசுரங்களாக அடித்து எல்லோருக்கும் கொடுக்க வேண்டும். யார் யாருக்கெல்லாம் கொடுக்கிறாயோ அவர்களும் அதே போல செய்ய வேண்டும். அப்படி செய்தால் என் அருள் கிடைக்கும் என்று சொல்லி மறைந்து விட்டது. இதை அவர் செய்தததால் அவர் வீட்டில் புதையல் கிடைத்தது. இதை மதிக்காமல் கிழித்துப் போட்டவர் பாம்பு கொத்தியது என்றெல்லாம் இருக்கும். அல்லது, இதுவே அஞ்சலட்டையில் வரும். இதே போல இன்னும் 15 பேருக்கு அனுப்ப வேண்டும்.

காலப்போக்கில், மரங்களின் அழிவை மனதில் கொண்டு மின்னஞ்சலிலும், குறும் செய்திகளாகவும் வந்தன. இப்போது முகப்புத்தம்தானே முக்கியம். எனவே, பார்த்தவுடன் 3 நொடிகளில் விரும்பி, உடனே பகிரவும் என்று சொல்கிறார்கள். இதில் இன்னும் கொடுமை, ஒரு பாம்பு படம் போட்டு, இதற்கு 'லைக்' போட்டு, 1 என கம்மெண்ட் போடுங்கள், உடனே பாம்பு உங்கள் முன்னே இந்திரன் படம் எடுக்கும் எனப் போட்டாலும், அதையும் நம் மக்கள் செய்வதுதான் கொடுமை.


அதே போல இந்த குழந்தையைப் பாருங்கள். இதன் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இந்த பதிவை அந்த குழந்தைக்கு 10 பைசா கிடைக்கும். அதே போல இந்தக் குழந்தை காணாமல் போய் விட்டது. பெற்றோரிடம் கிடைக்க நாம் உதவி செய்யலாமே என நிறைய. கொஞ்சம் கூட விசாரிக்காமல் அப்படியே பகிர்வது. இதில் கொடுமை என்னவென்றால், அந்த குழந்தைகளே வளர்ந்து பெரியவர்களே ஆயிருக்கும். 

சரி இது கூட பரவாயில்லை. லிங்கிடுஇன் (Linkedin) என்ற தளம் உண்டு. அது மெத்தப்படித்தவர்களுக்கான தளம். அதிலேயே, நான் வேலை வாய்ப்புக்கு ஆள் எடுக்கிறேன், எனது பக்கத்தை விரும்பவும், உங்களது எண்ணைப் பதியவும் என இருக்கும். என்ன மாதிரி வேலை, ஏற்கனவே நிறைய பேர் அந்தப் பக்கத்தை விரும்பி உள்ளனரே, அத்தனை பேரின் விவரங்களைப் பார்த்து, நம்முடையதை பார்க்க எத்தனை நாளாகும் என்றெல்லாம் கூட யோசிக்காமல் நம் மக்கள் செய்யும் அட்டூழியம் உள்ளதே. அட போங்கப்பா. 

அந்த தினம் இந்த தினம்:

முன்பெல்லாம் உருப்படியான, எல்லோருக்குமான கொண்டாட்டம் என்பது பொங்கல், பங்குனி உத்திரம், ஆடி 18, தைப்பூசம், ஊரில் நடக்கும் திருவிழா இவைகள்தான். தீபாவளி கூட பட்டாசுக்காக மட்டும். மற்ற அனைத்து பண்டிகையிலும் பெரியவர்களுடன் சேர்ந்து கொண்டாட்டத்துடன், அவற்றுக்கென ஒரு அர்த்தமும் இருந்தது. ஆனால், இப்போது பெண்கள் தினம், அம்மா தினம், அப்பா தினம், சகோதரி தினம், சகோதரர் தினம் (Cousins Day என்று கூட உள்ளதாம்) என்று வைத்துக் கொண்டு அட்டூழியம் செய்கிறார்கள். வெளிநாடுகளில் அதை எதற்காக கொண்டாடுகிறார்கள், நமக்கு அது ஒத்து வருமா என்று கூட தெரியாமல், "வாங்கோ எல்லோரும் கொண்டாடலாம்" என்று கூப்பிடுகிறார்கள். இணையத்துலதாங்க, நேர்ல கூப்டுட்டாலும்.

புத்தாண்டு:

நமது கலாசாரத்தின்படி ஒரு நாள் என்பது ஒரு பகல், ஒரு இரவு. முதல் நாள் காலை சூரியன் உதயத்தில் இருந்து, அடுத்த நாள் சூரியன் உதிப்பது வரை ஒரு நாள். அதை மறந்து விட்டு இரவு 12 மணிக்கு (சித்திரையோ, தையோ) Happy Tamil New Year என செய்தி அனுப்புவது, டிசம்பர் 31ம் தேதி இரவு 12 மணிக்கு கோயிலுக்குப் போவது என நம்மாட்கள் பண்ணும் அலும்புக்கு அளவே இல்லை.

சரி பரவாயில்லை. 'இளமை இதோ இதோ' தான் சிறந்த புத்தாண்டுப் பாடல் என இன்னும் நிறைய பேர் நம்புவது, சிரிப்புதான் வருகிறது. அதில் பாடலுக்கு முன் வரும் 'ஹேப்பி நியு இயர்' என்பதைத் தவிர, மற்றதெல்லாம் தனி மனித துதிப் பாடல். தமிழில் புத்தாண்டு பற்றிய சில பழைய பாடல்கள் உள்ளன, ஆனாலும் அவை யாவும் வெற்றி பெறாததால் இதையே பிடித்துத் தொங்குகிறோம்.

பிரியாவிடை பாடல்:

கல்லூரிகளில் இறுதியாண்டில் பிரியாவிடை கொண்டாட்டத்தில், முஸ்தபா முஸ்தபா என்று போட்டுவிட்டு, கட்டிப்பிடித்து அழுவது. அந்தப் பாடல், நட்பைப் பற்றிய பாடல் அதில் பிரியாவிடை ஒரு பகுதிதான். 'பசுமை நிறைந்த நினைவுகளே' பாடல்தான் ஒரு முழுமையான, அழகான பிரியாவிடை கொண்டாட்ட பாடல். இதை சொன்னால், "அதெல்லாம் எங்களுக்கு தெரியாது, எங்களுக்கு முஸ்தபா முஸ்தபா வேணும். ஆங்" என்பார்கள்.


தாய் பற்றிய பாடல்:

'காலையில் தினமும் கண் விழித்தால்' என ஒரு பாதி கும்பல் சொல்லும். அதுவும் ஒரு வகையில் உண்மைதான். ஆனால், அந்தப் பாடலின் ஒரு பாதிதான் தாய் பற்றியது. மீதி, பெண் பாடும் வரிகள் தாய்மையுடன் காதலன் பற்றி பாடுவது. ஒரு முழு தாய் பற்றிய பாடல் பற்றி நான் சொல்ல மாட்டேன். உங்களுக்கே தெரியும்.


போராட்டம்:

முன்பெல்லாம் போராட்டம்: முன்பெல்லாம் போராட்டம் என்றால் சாலையில் இறங்கி, கோஷமிட்டு போராடுவார்கள். இப்போதெல்லாம் ஆன்லைனில் DP படத்தை மாற்றி போராட்டம் நடத்துகிறார்கள். இதைப் பற்றி பேசினால் பதிவு மிகவும் சீரியஸாக போய் விடும். இது சிரிப்புப் பதிவு. எனவே, மக்களும் பின்னூட்டத்தில் தங்களுக்கு தோன்றுவதைப் பதியலாம். இதுவும் நவீன மூட நம்பிக்கையே.

Sunday, January 3, 2016

100


Thursday, December 31, 2015

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

மழை பற்றி சூட்டோடு சூடாக இன்னொரு பதிவு போடலாம் என நினைத்தால், அதற்குள் ஸ்டிக்கர் பாய்ஸ், பீப் பாட்டு, இளையராஜா கோபம், விஜயகாந்தின் 'த்தூ', கொடும்பாவியை எரிக்கிறேன் என வேட்டியில் தீ வைத்துக் கொள்வது என நான் எழுத வந்த விஷயமே பழங்கஞ்சி ஆகி விட்டது. இருந்தாலும் கடமைன்னு ஒன்னு இருக்கே.

சென்னை இனி என்ன ஆகும்:

ஒன்றும் ஆகாது. மக்கள் வழக்கம் போல தங்களது வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டனர். வீடில்லாமல் கரையோரம் வாழ்ந்தவர்கள் வீடுகள் இடிக்கப்படுகின்றன. ஏரிகளில் கட்டியோர் "இன்னும் எத்தன வருஷம் கழிச்சு அடுத்த மழை வருமோ, அப்ப பாத்துக்கலாம்" என விட்டு விட்டனர். முன்பு வேளச்சேரியில் வாடகைக்கு இருந்த வீட்டில் எல்லாம் தண்ணீர் வந்து விட்டது. அங்கு பெரும்பாலானோர் வெறும் சான்றிதழ்களை மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பி உள்ளனர். மீண்டும் திரும்பி வந்து, வழக்கம் போல தங்களது வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

பாய்ந்து பாய்ந்து வேலை செய்த இளம் தன்னார்வலர்கள் "அடுத்த மழை எப்ப வரும்னு காத்திருக்கோம்" என நாஞ்சில் சம்பத் போல உள்ளனர். மழைக்காலத்தில் எல்லா இடங்களிலும் நின்று சென்ற மாநகர பேருந்துகள், தற்போது வழக்கம் போல நிற்க வேண்டிய நிறுத்தங்களில் கூட நிற்காமல் செல்கின்றன. சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் பாலங்களில், 10 அடிக்கும் கீழ் தண்ணீர் செல்கிறது.

மழை முடிந்த பின் சென்னை வந்த எனக்கு "இங்கயா இப்படி" என அதிர்ச்சி தரும் அளவிற்கு எந்த மாற்றமும் இல்லாமல்தான் சென்னை இருக்கிறது.

ஆனாலும், முகநூலில் படித்த தகவல்களைக் காட்டிலும், என் அலுவலக நண்பருக்கு நடந்த உதவிதான் மந்தை நெகிழ வைத்தது. ஒரு வயது குழந்தைக்கு பால் கூட கிடைக்காததால் எப்படியாவது, மனைவியையும், குழந்தையும் சொந்த ஊரான பொள்ளாச்சியில் விட்டு விடலாம் என, மடிப்பாக்கம் வீட்டிலிருந்து வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு கிளம்பி இருக்கிறார்.

இடுப்பளவு நீரில் நடந்து போகும்போது, வண்டியில் வந்த ஒருவர் "என்னங்க குழந்தைய வச்சிக்கிட்டு நடந்து போறீங்க. வாங்க நான் வேணா கொண்டு போய் விடறேன்" என்றிருக்கிறார். நம்மாளோ "பரவால்லீங்க, அதெல்லாம் ஒண்ணுமில்ல, இந்தா பக்கத்துலதான் என்றிருக்கிறார். அடுத்து அவர் சொன்னதுதான் உண்மையில் ஒரு நிமிடம் நெகிழ வைத்தது. "சரீங்க. நீங்க வேணா வண்டியை எடுத்துகிட்டு போய், மனைவி, கொழந்தைய விட்டுட்டு வந்து, திரும்ப என்ன வந்து கூட்டீட்டு போங்க, உங்களை விட்டுட்டு நான் கெளம்பறேன்".

இத்தனை வருட சென்னை அனுபவத்தில் சத்தியமாக இதை நான் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. ஒரு வேலை நான் இருந்திருந்தால் கூட, இதை செய்திருக்க மாட்டேன். சென்னையை நினைத்து நான் கர்வப்பட்ட சமயம் அதுதான்.

பீப் சாங்:

நான் இன்னும் கேட்கவில்லை. வீட்டில் கேட்கும் நிலையில் பாட்டு இல்லை. ஆனால், இந்த பாட்டை எப்படியாவது கேட்டே ஆக வேண்டும் என எல்லா ஊடகங்களும் கங்கணம் கட்டிக்கொண்டு அலைகின்றன. உண்மையில் அது தவறுதலாக வெளிவந்த பாடல், எந்தப் படத்திலும் வெளி வராத பாடல். அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் விட்டிருக்கலாம், அல்லது சிம்பு ஒரு மன்னிப்பு கேட்டிருக்கலாம்.

ஒரு கவிதை வெறும் வரிகளாக இருக்கும் போது, யாரும் அதை அவ்வளவாக நினைவில் வைத்துக் கொள்வதில்லை. ஆனால், இந்தப் பாடல் அப்படி இல்லை. "நேத்து ராத்திரி யம்மா, கட்டிப்புடி, கட்டிப்புடிடா" பாடல்களுக்கு, இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என அனைவருமே பொறுப்பு. ஆனால், இது டம்மி வரிகள் போட்டு பாடியது, அதற்கு முழு முதற் காரணம் சிம்பு மட்டும்தான். அவர் அதை வெளியிடவில்லை (என்று நம்புவோமாக) என்பதாலும், விளையாட்டுத்தனமாக செய்தததாலும் "யார் மனதாவது புண்பட்டிருந்தால்" என வழக்கமான பல்லவியில் ஒரு அறிக்கை விட்டிருந்தாலே முடிந்திருக்கும். அதை விட்டு விட்டு சிம்பு ஒரு பக்கம் முறுக்கிக் கொண்டு போனால், இந்த ஊடகங்கள் எல்லாப் பக்கமும் முறுக்கிக் கொண்டு இருக்கின்றன.

சும்மா இல்லாமல் எல்லோரிடமும் எதற்கு கருத்து என்று தெரியவில்லை. கங்கை அமரன், வைரமுத்து கருத்து சொன்னால், "நீங்க எழுதாத பாட்டா" என்று அவர்கள் மேல் பாய்கிறார்கள். கருத்து சொல்லவில்லை என்றால் "ஏன் சொல்லவில்லை?" என்று பாய்கிறார்கள். என்னாங்கடா உங்க நியாயம்.

ராஜாவின் வாய் எப்படி என எல்லோருக்கும் தெரியும். முடிந்தால் இதைப் படியுங்கள். இதில் பல விஷயங்கள் மிகைப் படுத்தி சொல்லி இருந்தாலும், பல விஷயங்கள் உண்மைதான். அந்த ஹங்கேரி கலைஞர்கள் பற்றிய கேள்விக்கு ராஜா அளித்த பதில் "நான் சொன்னா புரிஞ்சுக்குற அளவுக்கு உங்களுக்கு ஞானம் இருக்கான்னு தெரியலே" என்றுதான். அதே போல மிஷ்கின் பற்றிய கேள்விக்கு சொல்லியது "அதை நீங்கள் இயக்குநரிடம்தான் கேட்க வேண்டும்" என்றுதான். மற்ற சம்பவங்கள் பற்றி நான் கேள்விப்பட்டதுமில்லை, படித்ததுமில்லை.

ஆனாலும், இடம், பொருள், ஏவல் என்பது மிக முக்கியம். ஏனென்றால், அந்த நிகழ்ச்சியில் எனது நண்பர் ஒருவரும் கலந்து கொண்டார். நிறைய புகைப்படங்கள் அவரும் எடுத்தார். அவர் சொன்னது " ரொம்ப நேரம் நின்னு, பொறுமையா கையெழுத்து போட்டு, ஒவ்வொருத்தருக்கும் கொடுத்தார்" என்றார்.

இன்னும் நிறைய சொல்ல தோன்றுகிறது. ஆனால், இப்போதைக்கு போதும். சென்னை போல மீண்டு(ம்) வருவோம். என்ன ஸ்டிக்கர் பாய்ஸ், விஜயகாந்த் பற்றி எல்லாம் சொல்லாமலே போறேனே என்கிறீர்களா? தேர்தல் வரட்டும்னு காத்திருக்கோம்.

Monday, December 7, 2015

தமிழகம் - மழையகம்

முன் குறிப்பு: நான் இப்போது சென்னையில் இல்லை. எனது மனைவியும், குழந்தையும் சென்னையில்தான் உள்ளனர். எனது வீடோ, பகுதியோ வெள்ளத்தால் பாதிக்கப்படவில்லை.

சென்னையில் எப்போது மழை பெய்தாலும் குறிப்பிட்ட சில இடங்களில், ஆள் அளவிற்கு தண்ணீர் நிற்கும், அந்த பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு பள்ளிகளில் தங்க வைக்கப்படுவார்கள். நான்கு நாட்கள் கழித்து வழக்கம் போல அவரவர் இடத்திற்கு சென்று விடுவார்கள். அவர்கள் விளிம்பு நிலை மனிதர்கள். ஒவ்வொரு வருடமும் அரசு அவர்களுக்கு நிவாரண முகாம்கள் அமைக்கும், நிவாரண நிதி கொடுக்கும். அதைத்தாண்டி அடுத்த வருடம் மழை அவர்களை பாதிக்கக்கூடாது என எந்த முயற்சியும் எடுத்ததில்லை. அவர்களும் கேட்பதில்லை.

ஆனால், மற்றபடி நடுத்தர வர்க்க இடங்களான வேளச்சேரி, மடிப்பாக்கம் போன்ற இடங்களில் முழங்கால் அளவிற்கு நீர் நிற்கும். மழையும் பொதுவாக இரவு பெய்யும். பகலில் வெயில் வாட்டும். நான்கு நாட்களில் அதுவும் வடிந்து விடும். இந்த ஆண்டு அப்படி இல்லாமல், மழையும் நிற்கவில்லை. அது மட்டுமின்றி வெள்ளத்தின் அளவு இரு மடங்காகி விட்டது. 

அந்த விளிம்பு நிலை மனிதர்கள் வழக்கம் போல வெளியேறி விட்டனர். ஆனால், அவர்களது உடைமைகள் அனைத்தும் இழந்து விட்டனர். அதைத் தாண்டி இந்த முறை பாதிக்கப்பட்டது நடுத்தர வர்க்க, யார் வம்பு தும்புக்கும் போகாத, தான் உண்டு தன் வேலை உண்டு என பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்று கூட தெரியாத நல்லவர்கள்தான்.

எப்படியாவது சென்னையில் ஒரு வீடு வாங்கி விட வேண்டும் என மாத சம்பளத்தில் பாதியை வட்டியாக கட்டும் மக்கள்தான். நாங்களும் யாருக்கும் எதுவும் செய்ய மாட்டோம், யாரும் எங்களுக்கும் எதுவும் செய்ய வேண்டாம் என வாழ்ந்த மக்கள் இந்த முறை பாதிக்கப்பட்டு விட்டனர். அந்த நடுத்தர வர்க்க பயம் இருந்ததால்தான், வீடு கிடைத்தால் போதும் என, எங்கே என்று கூட தெரியாமல் வீடு வாங்கினார்கள். "சென்னையில் வெள்ளமா, என்ன காமெடியா?" என்று கேட்டார்கள்.

இன்னும் அந்த பயம் இருந்ததால்தான் முதலில் வெள்ளம் வந்து வடிந்த பின்னும், வீட்டை விட்டு வெளியேறாமல், அடுத்த வெள்ளத்தில் மாட்டிக் கொண்டார்கள். ஒன்றுமே கிடைக்காமல் இருந்தபோதும், மற்றவர்கள் கொண்டு வந்து கொடுத்த உணவை வாங்க மறுத்தார்கள். ஆனால், மழை எல்லோரையும் மாற்றி விட்டது. யாரென்றே தெரியாதவர்களின் வீட்டில் தங்க வைத்து, தெரியாதவர்களை வீட்டில் கொண்டு வந்து தங்க வைத்தது. "வெளையாட்டுப் பசங்க" என்றெல்லாம் திட்டப்பட்டவர்கள் தண்ணீருக்குள் சென்று மற்றவர்களுக்கு உதவி செய்கிறார்கள்.

இவை எல்லாம் முகப்புத்தம் மூலம் அறிந்து கொண்டது. அதையும் தாண்டி, இந்த நேரத்திலும் கொள்ளையடிக்கும் 'நல்ல' உள்ளங்கள் பற்றியும் தெரிய வருகிறது. என் மனைவியே பால் 60 ரூபாய்க்கு ஒரு நாள் வாங்க நேரிட்டது. ஆனாலும், வரும் உதவிகள் அனைத்துமே, இந்த நடுத்தர வர்க்கத்தினருக்கே கேட்டு வருகின்றது. மிகவும் பாதிக்கப்பட்ட வட சென்னை, அடையாறு, கூவம் கரையோரப் பகுதிகள், கடலூர் மற்றும் கரையோர மாவட்ட மக்களுக்கு யார் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. வெளியே தெரியாமல் உதவி கிடைத்திருந்தால், மிகவும் சந்தோஷம்.

என்னுடைய ஒரே ஆசை என்ன என்றால், கீழே வரும் என்னுடைய கற்பனைக் கதை, நிஜத்தில் நடக்கக்கூடாது.

நிலத்தரகர்: வேளச்சேரியில ஒரு வீடு வெலைக்கு வருதுங்க, சதுர அடி 6000தான். முடிச்சிடலாமா? கம்மி வெலைங்க.

நான்: ஐயய்யோ, அங்க தண்ணி பயங்கரமா நிக்குமே, இந்த மழைக்கு பாத்திருப்பீங்களே.

நிலத்தரகர்: அட அதனாலதாங்க கம்மியா கெடைக்குது. மழை என்ன இதே மாதியா வருஷா வருஷம் பெய்யும். மறுபடியும் எத்தன வருஷம் கழிச்சு இப்படி பெய்யுமோ. அது மட்டும் இல்லாம, இனி என்ன இப்படியே விட்டுடுவாங்களா? பாதாள சாக்கட வந்துரும். அப்புறம், எவ்ளோ மழை பெஞ்சாலும் அஞ்சு நிமிஷம் கூட தண்ணி நிக்காது. அப்படியே இருந்தாலும், ஒரு ரெண்டு நாளு. அவ்ளோதான்.

நான்: கொஞ்சம் யோசிக்கணுமே.

நிலத்தரகர்: இதப் பாருங்க. இந்த வெல இப்பத்தான் கெடைக்கும். மழைக்கு முன்னாடி சதுர அடி 7500. ஏதோ மழையால இவ்ளோ கம்மி ஆயிருக்கு. இப்ப உட்டா கெடைக்காது. பார்ட்டி வித்துட்டு ஊர்ப்பக்கம் போகலாமுன்னு பாக்குது. ஏதோ நீங்க தெரிஞ்சவங்கன்னு சொன்னேன். நீங்க இல்லேன்னா பின்னாடி இன்னும் பத்து பேரு இருக்காங்க. பாத்துக்குங்க. வருஷத்துல ஒரு நாலு நாளுக்கு பயந்துக்கிட்டு இப்படி ஒரு வாய்ப்பை விட்டுடாதீங்க. சொல்லிப்புட்டேன்.

நான்: பின்னூட்டத்துல என்ன சொல்றாங்கன்னு பாத்துட்டு சொல்றேன்.

Monday, November 23, 2015

கமல் ரசிகனுக்குப் பிடித்த ரஜினி படங்கள்

'தலைப்பே உங்களுக்கு எல்லாம் விளக்கி விடும் என்பதால், நேரே விஷயத்திற்கு போய் விடுவோம். இன்னும் யாருக்காவது சந்தேகம் இருந்தால் கமல் பற்றிய பதிவுகளையும், ரஜினி படங்கள் (எந்திரன், லிங்கா) பற்றிய விமர்சனங்களையும் வேண்டுமானால் படித்து விடுங்கள் (விளம்பரம்!).

அது ஏனென்று தெரியவில்லை, சிறு வயதில் இருந்தே எனக்கு கமல்தான் பிடிக்கும். ஒரு வேளை எல்லோரும் ரஜினி பிடிக்கும் என்று சொன்னதால் எனக்கு கமல் பிடிக்க ஆரம்பித்ததா, இல்லை, ரஜினி போல என்னால் தலை முடி கோத முடியவில்லையே என்ற கோபத்தில் கமல் ரசிகன் ஆனேனா என எனக்கே தெரியவில்லை.

கல்லூரி வரும்வரை, எனக்கு ரஜினி பிடிக்காது என்றெல்லாம் கிடையாது. ரஜினியா கமலா என்றால், கமல் அவ்வளவுதான். கல்லூரிக் காலங்களில்தான் நண்பர்களிடம் ஆரம்பித்த விவாதங்கள், சரி அத விடுங்க. குறிப்பாக ஒரு முக்கிய விஷயம். இது எனக்குப் பிடித்த படங்களில் பட்டியல். அந்தப் படம் எங்கே, இது எங்கே என்றெல்லாம் கேட்க வேண்டாம். அது மட்டும் இல்லாமல் இந்தப் படங்கள் அனைத்தும், ரஜினிக்காக மட்டும் எனக்கு பிடித்தவை. உதாரணமாக, எனக்கு தளபதி மிகவும் பிடிக்கும். இதில் தளபதி இல்லை, ஏனென்றால் ரஜினியை விட இளையராஜாவிற்காகவே அந்த படம் எனக்கு பிடிக்கும்.

ராஜாதி ராஜா:



1970களின் இறுதியிலும், 80களின் ஆரம்பத்திலும் பிறந்த யாராக இருந்தாலும் சரி, சிறு வயதில் இந்தப் படத்தை ரசிக்காமல் இருந்திருக்கவே முடியாது. அது யாருடைய ரசிகராக இருந்தாலும் சரி. (போக்கிரி ராஜாவின் தழுவலாக இருந்தாலும்). அதிலும் குறிப்பாக "ஒரு மொட்ட, ஒரு மீச, நாலு ஸ்கூல் பசங்க, அதுக்கு ஒரு தலைவன்" இந்த ஒரு வசனத்தைக் கேட்டாலே எனக்கு பழைய நினைவுகள் வந்து விடும். என்னுடைய சிறு வயது நினைவுகளை கொண்டு வருவாதேலேயே எனக்கு இந்தப் படம் மிகவும் பிடிக்கும்.

இதே போல மனிதன், ராஜா சின்ன ரோஜா, வேலைக்காரன், குரு சிஷ்யன் போன்ற படங்கள். ம்ம், அது ஒரு அழகிய நிலாக்காலம். அந்த நிலாக்காலம் பற்றி தனியாக சொல்கிறேன். கமல் படங்களில் எனக்கு அபூர்வ சகோதரர்கள் மட்டுமே அப்படி நினைவில் உள்ளது என்பதுதான் கசப்பான உண்மை.

"என்னப்பா கொழப்பற, இந்த லாஜிக்படி பாத்தா நீ ரஜினி ரசிகனாத்தான இருக்கணும்" என்கிறீர்களா? பத்து வருடங்களுக்கு முன்புதான் நாங்கள் தொலைகாட்சி வாங்கினோம். அதற்கு முன் பக்கத்துக்கு வீட்டில் போய்தான் பார்க்க வேண்டும். 90களின் ஆரம்பத்தில் வெள்ளி இரவு 9 மணிக்கு தமிழ்ப்படம் போடுவார்கள். ஏதாவது ஒரு நாள் திடீரென ஹிந்தி படம் போட்டு விடுவார்கள்

என் அம்மா எனக்கு நினைவு தெரிந்து டிவியில் எதுவுமே பார்க்க மாட்டார்கள். இப்போது கதை வேறு. அப்படிப்பட்ட அவரே, 'மூன்றாம் பிறை' படம் டிவியில் போட்டபோது இரவு வந்து பார்த்தார்கள். அதிலும் அந்த வாரம் அதன் ஹிந்தி பதிப்பு (சத்மா) தான் திரையிடப்பட்டது. ஆனாலும், அது முழுதும் பார்த்தார்கள். ஆனாலும் வேறு எந்த கமல் படமும் அவர் பார்த்ததில்லை. ஆனால், எனக்கென்னவோ அப்போதுதான் கமல் பிடித்திருக்கும் என நினைக்கிறேன்.

தம்பிக்கு எந்த ஊரு:



பொதுவாக ரஜினியின் காமெடி படங்களில் எல்லோருக்கும் முதலில் சொல்லும் படம் தில்லு முல்லு. என்றாலும், எனக்கு அதையும் தாண்டி பிடித்த படம் இதுதான். படத்தின் ஆரம்பக் காட்சியில் ஒரு நட்சத்திர ஓட்டலில் நொண்டி அடித்துக்கொண்டே போவார். அப்போது ஆரம்பிக்கும் அந்தக் குறும்பு படம் முழுதுமே பரவி இருக்கும். கதிர் அறுப்பது, மாடு கழுவுவது, பால் கறப்பது, கூழ் சாப்பிடுவது என தூள் பறக்கும். ஆரம்பக்காட்சிகளில் பணத்தை தண்ணீராக செலவு செய்வார். பிற்பாடு, செந்தாமரை ரஜினிக்கு அவர் செய்த வேலைக்கு சம்பளம் கொடுப்பார். ரஜினி அந்தப் பணத்தை நெகிழ்ச்சியோடு பார்ப்பார். "என்னப்பா, இதுக்கு முன்னாடி பணத்தையே பாத்ததில்லையா" என்று கேட்டதற்கு ரஜினி "இந்த மாதிரி பணத்தை நான் இப்பத்தான் பாக்கறேன்" என்பார். நான் முதன் முதலில் சம்பளம் வாங்கியபோது எனக்கு இதுதான் நினைவுக்கு வந்தது.

புதுக்கவிதை:



பொதுவாக ரஜினி மிக இயல்பாக நடித்தது என ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல் போன்ற படங்களைத்தான் சொல்லுவார்கள். ஆனால், எனக்கு இந்தப் படம்தான் பிடிக்கும். அதே போல விதவை மறுமணம் பற்றிய படங்களில் நாயகி கன்னி கழியாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால் இதில் அப்படி எல்லாம் இல்லை (கணவர் ஒரு வாரம் கழித்து இறந்ததாக நாயகி சொல்வார்). அதே போல ரஜினி, சரிதா ஜோடியின் எதிர்பாராத திருப்பம் நன்றாக இருக்கும். ரஜினி கொஞ்சம் கூட ஒப்பனை போடாமல் நடித்த படம் என நினைக்கிறேன். படத்திலேயே அவரை கருப்பன் என சொல்வார்கள்.

நெற்றிக்கண்:



ரஜினியே நாயகனாகவும், வில்லனாகவும் நடித்த படங்கள் இரண்டுதான். அதில் எந்திரன் தான் எல்லோரும் முதலில் சொல்வார்கள். ஆனால், எனக்கு நெற்றிக்கண் தான் முதலில். எனக்கு தெரிந்து ரஜினி கல்லூரி மாணவனாக நடித்த ஒரே படம் இதுதான் என நினைக்கிறேன். மகன் ரஜினியிடம் ஒவ்வொரு முறையும் அவர் காட்டும் இயலாமை நடிப்பு, நக்கலாக 'ம்ஹும்' என்று ஒவ்வொரு முறையும் சொல்லி கையில் 'நன்றி' என்று எழுதியதைக் காட்டும் இடமும் அட்டகாசம். எந்திரன் எனக்கு பிடிக்க காரணம் ரஹ்மான், சிட்டி ரஜினி. இதில் ராஜாவும் அட்டகாசமான இசையைக் கொடுத்திருந்தாலும், அது கூடுதல் பலமே. ரஜினிக்காகவே கண்டிப்பாக படம் எனக்குப் பிடித்தது.

கழுகு:



கமல்தான் நடக்கப் போவதை முன் கூட்டியே படங்களில் காண்பிப்பார் என்பார்கள். ஆனால், ரஜினி அதற்கு முன்னரே போலி சாமியார்கள் பற்றி இந்தப் படத்தில் சொல்லி இருப்பார். ஏழாம் அறிவு படத்தில் வரும் 'நோக்கு வர்மம்' எல்லாம் முன்னரே இந்தப் படத்தில் வந்து விட்டது. அதே போல ஒரு சொகுசு பேருந்து என்றால் என்ன என்பது இந்தப் படத்தின் மூலம்தான் எனக்கு தெரியும். ஒரு அருமையான மர்ம திரைப்படம். ஆரம்பக் காட்சிகள் சற்றே இழுவையாக இருந்தாலும் போக போக அட்டகாசமாக இருக்கும்.

இவை தவிர இன்னும் நிறைய ரஜினி படங்கள் எனக்கு பிடித்தாலும், இவையே எனது பட்டியலில் முதலில் இருப்பவை.

Saturday, November 14, 2015

பதிவு எண் 96/8

அனைவருக்கும் வணக்கம். இன்றோடு பதிவு எழுத ஆரம்பித்து 8 வருடம் ஆகி விட்டது. அதைப்பற்றி ஒரு சிறிய பதிவு (என்னாது, மறுபடியுமா?). ஏற்கனவே உள்ள ஐம்பதாவது செல்பீ புகழ் பதிவு இங்கே.

பொதுவாக 50ஆவது, 75ஆவது, 100ஆவது பதிவு, அட 110 விதியின் கீழ் 110ஆவது பதிவு என்றால் கூட பரவாயில்லை. அது ஏன் 96ஆவது பதிவு சிறப்பு என்கிறீர்களா? சும்மாதான். இதுவரை மொத்தம் எழுதிய பதிவுகள் 96, இன்றோடு 8 வருடங்கள் முடிந்து விட்டன. ஒரு வருடத்திற்கு சராசரியாக 12 பதிவுகள். மாதம் சராசரியாக ஒரு பதிவு. கஷ்டப்பட்டு (கஷ்டப்படுத்தி?) இந்த சராசரியைக் கொண்டு வந்துள்ளேன்.

அதிக பதிவுகள் எழுதப்பட்ட வருடம் 2015. இதுவரை 17 பதிவுகள். இந்த வருடத்திற்குள் மொத்தம் 100 பதிவுகள் எழுதி விட ஆ! (ச்)சை உள்ளதால், கண்டிப்பாக எண்ணிக்கை கூடும். 50 பதிவுகள் எழுத 5 வருடங்கள், ஆனால் அடுத்த 50 பதிவுகளை 3 ஆண்டுகளில் எழுதியாகி விட்டது. என்னடா கணக்கு சரியா வரலியே என்கிறீர்களா? நம்பிக்கைதான் வாழ்க்கை.

மிக குறைந்த பதிவுகள் எழுதி (மக்கள் சந்தோஷமாக) இருந்த வருடம் 2007. இரண்டே பதிவுகள். அப்போதான் ஆரம்பித்தேன், அதனால்தான். அடுத்து 2010. ஆறு பதிவுகள்.

மிக அதிக பார்வையாளர்களை இழுத்த பதிவு உத்தம வில்லன்: லிங்குவிற்கு சங்கு? 3250+ வருகையாளர்கள், அடுத்து அஞ்சான் - நோஞ்சான், அதற்கு 2700+ வருகையாளர்கள். மிக மொக்கையான பதிவு சும்மா, வாழ்த்துக்கள் என்ற பதிவுகள்தான். ஒற்றை எண்ணிக்கைதான்.

பின்னூட்டங்கள் சராசரியாக பதிவிற்கு 3ல் இருந்து 4 என மாறி உள்ளது. இதுவரை 370 பின்னூட்டங்கள் வந்துள்ளன. (அதில் பாதிக்கு மேல் நானே போட்டது என நினைக்கிறேன்)

ஒரு அதிசயம் என்னவென்றால் அதிக பின்னூட்டமிடப்பட்ட பதிவு மட்டும் இன்னும் மாறாமலே உள்ளது. ராஜா ரசிகனும், ரஹ்மானும்!!! பதிவு 18 பின்னூட்டங்களுடன் உள்ளது. அதே நேரம் உத்தம வில்லன்: லிங்குவிற்கு சங்கு? மற்றும் சென்னையின் வாகன ஓட்டிகள் இரு பதிவுகளும் அதே 18 பின்னூட்டங்களுடன் உள்ளன. பின்னூட்டங்களே இல்லாத பதிவுகள் நிறைய உள்ளன. அதில் இந்தப் பதிவும் சேருமா?

Monday, October 12, 2015

மாயா, புலி, தூங்காவனம், தோழா - விமர்சனம்

புலி:

முதல் நாள் முதல் காட்சி பார்த்தால், அந்தப் படம் பப்படம் ஆகும், அது என்னுடைய ராசி. கடைசியாக அஞ்சான். இந்த ராசி நான் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காமல், புலி படம் பார்க்க கூட்டிப் போனார்கள். அதுவும் நம்மூரிலேயே நம்ம ராசி அப்படி. அமெரிக்காவில் சும்மாவா? பொட்டியே வரவில்லை.

அந்த வெள்ளியன்று இங்குள்ள நான்கு நண்பர்கள் சந்திக்கலாம் என்று திட்டம். அது சற்றே சொதப்பி விட, நான் கிளம்பிய நேரத்தில் அலுவலக நண்பர்களும், நான் போவதற்குள், மற்ற நண்பர்களும் புலி படம் பார்த்து விட்டனர். நான் மட்டும் தப்பித்து விட்டேன். "அவ்ளோ ஒன்னும் மோசமில்லடா, ஒரு வாட்டி பாக்கலாம், கொஞ்சம் வித்தியாசமாத்தான் இருந்தது." என்றெல்லாம் சமாதானம் சொன்னார்கள். எனக்கோ, சிம்புதேவன் மீதிருந்த நம்பிக்கையும் குறைந்து கொண்டே இருந்தது. விஜய் மீது நம்பிக்கையே இல்லை. எனவே விட்டு விட்டேன். இருந்தாலும் விதி வலியது, கடைசியாக பார்த்துத் தொலைத்து விட்டேன்.

ஒரு பாண்டஸி என்கிற மாயாஜாலப் படம் வருகிறது என்றால், அதில் லாஜிக் பார்க்கக்கூடாது. அதாவது, படம் பார்க்கும் போது நம்மை யோசிக்க வைக்கக் கூடாது. அப்படிதான் இருக்க வேண்டும். ஆனால், புலி அப்படியா இருக்கிறது? இப்போதெல்லாம் குழந்தைகளே நம்மை விட பயங்கரமாக யோசிக்கிறார்கள். ஏன், எப்படி எதற்கு என நாம் கேட்கிறோமோ இல்லையோ, அவர்கள் நன்கு கேட்கிறார்கள். அப்படி இருக்கையில் இது குழந்தைகளுக்கான படம் என வேறு சொல்கிறார்கள், எப்படி என்றுதான் தெரியவில்லை.

அதைவிட ஒரு கொடுமை என்னவென்றால் இசை. தசாவதாரம் படத்தில் வில்லன் பிளட்சர் பாத்திரத்திற்கு அருமையான பின்னணி இசையை தேவிஸ்ரீ பிரசாத் கொடுத்திருந்தார். அருமையாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காகவே, இந்த படத்திலும் போட்டு விட்டார் போலும்.

ஒன்று இது விஜய் படமாக இருக்க வேண்டும், அல்லது சிம்புதேவன் படமாக இருக்க வேண்டும், இரண்டுமில்லாமல் நடுவில் இரண்டுக்கெட்டானாகி, மொக்கையாகி விட்டது. கருஞ்சிறுத்தை, ஒற்றைக்கண் மனிதன், குள்ள மனிதர்கள், பேசும் ஆமை, மாந்தரீக ராணி, எல்லாம் சரிதான். ஆனால் எதுவுமே சரியில்லை (புரிகிறதா?).

சிம்புதேவனின் கிமுவில் சோமு படியுங்கள். படித்த பிறகுதான் தெரியும் எவ்வளவு மொக்கை என்று. ஆனால், படிக்கும்போது தெரியாது. பரபரப்பாக இருக்கும். அதைக்கூட எடுத்திருக்கலாம். அடப் போங்க சார். இதுக்கு மேல எழுதினா ராஜேந்தர் வந்து பிராண்டி வச்சிருவாரு. வர வர சிம்பு தேவன், விஷ்ணுவர்தன், வெங்கட் பிரபு ஆகியோரின் மேலிருந்த நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது. சீக்கிரம் திரும்பி வாங்க. காத்திருக்கோம்.

மாயா:

புலி முதல் நாளன்று, படம் வர தாமதம் ஆகும் என்று மாயா படம் திரையிட்டார்கள். ஏற்கனவே படம் பற்றி நல்ல விமர்சனங்கள், இணையத்தில் தரமான காணொளி இல்லை (பாக்கறது திருட்டு, இதுல நொள்ள பிரிண்டுதான் வேணுமோ) என்பதால் அதைப் பார்த்தோம். அட்டகாசமான படம். படம் பார்த்த அனைவருமே சற்றே அரண்ட முகத்துடன்தான் வெளியேறினர்.

டிமாண்டி காலனி படத்திற்கு பின், ஒரு தரமான, உண்மையான பேய்ப்படம். படத்திற்கும் படம், அதிலும் குழப்பமில்லாமல் திரைக்கதை என எளிமையாகவே இருந்தது. இதற்கு முன், 'புது முகங்கள் தேவை' என்றொரு படமுண்டு. அதிலும் படத்திற்கும் படம் என சற்றே குழப்பி, கடைசியில் தெளிய வைப்பார்கள். இதில் அந்த அளவு குழப்பம் இல்லை.

குற்றம் கடிதல்:

இதுவும் ஒரு தரமான படம். படம் சற்றே நீளம் போல தோன்றினாலும், படத்திற்கு இது தேவைதான். என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம் இது. ஏனென்றால் என் சொந்தக்காரர்கள் நிறைய பேர் ஆசிரியர்கள். என் தங்கமணியோ ஒரு தனியார பள்ளியில் கணித ஆசிரியையாக வேலை செய்தவர், அங்கு நடக்கும் அரசியல், நிகழ்வுகள் பற்றி நிறைய சொல்லுவார். எனக்குப் பிடித்த விஷயம், இந்தப் படத்தில் அனைவருமே நல்லவர்கள், அல்லது நல்ல பக்கங்களை மட்டுமே காட்டியது.

தனி ஒருவன், கிருமி போன்ற படங்களும் நன்றாக இருந்தன. ஒரு நகை முரண் என்னவென்றால் காக்கா முட்டை, குற்றம் கடிதல் படங்கள் ஊடகங்களை கற்பழித்தாலும், அதே ஊடகங்கள் அவற்றை கொண்டாடுகின்றன. இது தவிர்க்க இயலாததா இல்லை நிஜமாகவே பாராட்டுகின்றனவா என்றுதான் தெரியவில்லை. 

எப்போதுமே, கடந்து போன படங்கள் பற்றிய விமர்சனமே பார்க்கிறோமோ, ஒரு வித்தியாசத்திற்கு வரப்போகிற படங்களின் விமர்சங்கள் இங்கே.

தோழா (The Intouchables 2011 French):

கார்த்தி, நாகார்ஜுனா நடிப்பில் வெளி வர இருக்கும் படம். ஒரு விபத்தில் சிக்கி கழுத்துக்குக் கீழ் எதுவும் இயங்காமல் இருக்கும் பணக்காரன், எதையும் பற்றி கவலைப்படாமல் ஊர் சுற்றும் ஒருவன் இருவருக்கிடையேயான நட்பே படம். திரைக்கதையில் வரும் நிறைய காட்சிகள் ஏற்கனவே நிறைய படங்களில் வந்து விட்டது. ஒரே மாதிரி வாழும் பணக்காரனின் வீட்டில் வரும் நாயகன், தனது Don't Care சேட்டைகள் மூலம் அவர்களது வாழ்க்கையை மாற்றுவதுதான் படம். பிரெஞ்ச் நாட்டவரால் கொண்டாடப்படும் படமாம் இது. நம்மூரில் என்னவோ எனக்கு நம்பிக்கை இல்லை.

இது ஒரு உண்மைக் கதை. நம்மூரில் தாரை தாரையாய் கண்ணீர் விட வைக்கும் அளவிற்கு காட்சிகள் வைக்க வாய்ப்பு உண்டு. ஆனால், இது நகைச்சுவை திரைப்படம். நாடகம் பார்ப்பது, இசை நிகழ்ச்சியில் அட்டூழியம் செய்வது, காரியதரிசியிடம் வழிவது, இறுதியில் சவரம் செய்யும் காட்சிகள் எல்லாம் அட்டகாசம். கார்த்தி சரியாக பொருந்துவார். தெலுங்கில் ஆனால் நாகார்ஜுனாவை எப்படி ஒப்புக்கொள்வார்களோ தெரியவில்லை. கண்டிப்பாக அவருக்கு பிளாஷ்பேக் காட்சிகள் இருக்கும் என நினைக்கிறேன்.

இந்த படத்தைப் பற்றி ஒரு தெளிவான விமர்சனம் இங்கே.

தூங்காவனம் (Sleepless Night 2011 French):

ஒரு போதைப்பொருள் கடத்தும் கூட்டத்திடம் இருந்து இரண்டு பேர் போதைப்பொருளை திருடுகிறார்கள். அதன் பின், காவல்துறை அதிகாரி கமலின் மகன் கடத்தப்பட்டு, கமலிடம் இருந்து அந்த பொருள் திருப்பிக் கேட்கப்படுகிறது. ஒரு இரவில், கமல் என்ன செய்து தனது மகனை மீட்டார்? கமல் நல்லவரா இல்லை கெட்டவரா? என்பதுதான் கதை.



டிரைலர் பார்க்கும்போது, அப்படியே நகலெத்திருப்பது தெளிவாக தெரிகிறது. த்ரிஷாவின் உடை, பாவனைகள், பிரகாஷ்ராஜின் பாவனைகள், கிஷோர் மற்றும் சம்பத்தின் நடிப்பு, லூசுத்தனமான யூகி சேது என அந்தப் படம் பார்த்தவர்கள் அனைவருக்குமே, யார் யார் எந்த பாத்திரங்களில் வருவார்கள் என சுலபமாக கணிக்கும் அளவிற்கு டிரைலர் உள்ளது. கமலுக்கு படத்தில் முத்தக் காட்சிகள், அழும் காட்சிகள் என எல்லாம் உண்டு.

அது என்ன 2011ல் வந்த பிரெஞ்ச் படங்கள் மீது நம்மவர்களுக்கு என்ன ஆர்வம் என்று தெரியவில்லை. பார்ப்போம்.