Sunday, January 1, 2012

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

அனைவருக்கும் வணக்கம்.. நீண்ட நாட்களுக்குப் பின் சந்திக்கிறேன். இதுவரை சாதாரண மணியாக இருந்த நான், இப்போது ரங்கமணியாகிப் போனதுதான் கடந்த சில மாதங்களாக பதிவிட முடியாததற்குக் காரணம். அனைவரும் மகிழ்ச்சியோடு இருந்திருப்பீர்கள் என நம்புகிறேன். நான் இப்போது மீண்டு(ம்) வந்து விட்டேன். இனி பின்னிப் பெடலெடுக்க வேண்டியதுதான் (முடியாது என்றாலும். நாங்க நேத்து ஒரு பேச்சு இன்னைக்கி ஒரு பேச்சு கிடையாது).சாதா மணியாக இருந்த போது சுதந்திரமாக இருந்தேன் என்று இப்போதுதான் புரிகிறது. அப்போது, "எப்ப பாத்தாலும் பசங்களோட சுத்திக்கிட்டே இருக்கமே, நமக்கு ஒன்னு கெடக்காதா?" என்று திரிந்தது நினைவுக்கு வருகிறது.என்ன செய்ய. அக்கரைப் பச்சை.

கடந்த வருடம், மிக நன்றாகவே போனது. வழக்கம் போல மேடு பள்ளமாக இருந்தாலும், வாழ்க்கையின் அடுத்த படிக்கு போய் விட்டபடியால், மிக மிக சந்தோசமான வருடம்தான். புது வேலை, புது பைக், புது பொண்டாட்டி.., கலக்குறே அரவிந்த். சரி. தங்கமணி அவரசமாக அழைப்பதால், நானும் என்னைக் கவர்ந்த, கவலைப்பட வைத்த சில விஷயங்களைப் பற்றி மட்டும் சொல்லி விடுகிறேன்.

வருட ஆரம்பம் அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்றாலும், போக போக நன்றாகவே இருந்தது. கடைசியில் சூடு பிடித்து, 'தானே' வந்து சரி செய்யும் நிலை ஆகிவிட்டது. குறிப்பாக இந்த வருடம் மக்கள் எழுச்சி அதிகமாக உள்ளது. தேவைப்பட்டால் நாங்களும் போராடுவோம் என்று மக்கள், தங்களுக்காக மட்டுமல்ல, மற்றவர்களுக்காகவும் போராடுகின்றனர். அந்த கோடான கோடியில் நானும் ஒருவன் என்பதை, சற்றே தாழ்ந்த பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவான பாத்திரத்தில், முழுதும் தண்ணீரை ஊற்றாமல், கொஞ்சம் பாலும் சேர்த்து அனைவரும் ஊற்றுவதால், மொத்தமாக பால் போல தெரிகிறது. அதுவும் நல்லதுக்குத்தான். நாம் ஒற்றுமையாவது நமது சகோதரர்களுடன் சண்டை போடவா என்று சலனப்பட்டாலும், நம்மை ஒற்றுமையாக்கியதற்கு அவர்களுக்கு நன்றி. எப்போதும், மனிதம், தேசியம், இனம் என்றுதான் மனிதனுக்கு உணர்வு இருக்க வேண்டும். அப்போதுதான் சமுதாயம் கட்டுக்குலையாமல் இருக்கும். ஒன்றே ஒன்று மட்டும் எப்போதும் மாறாமல் இருப்பது.தமிழன் எப்போதும் அடுத்தவன் அழிந்து தான் வாழ வேண்டும் என்று நினைக்க மாட்டான், இதுவரை தான் அழிந்துதான் மற்றவர்களை வாழ வைத்துள்ளான்.இங்கு யாரும் யாருக்கும் இளைத்தவர்கள் அல்ல. இதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். நல்லாருப்போம் நல்லாருப்போம் எல்லோரும் நல்லாருப்போம். சரி, கொஞ்சம் வேறு மாதிரி போய் விட்டோமோ? விடுங்க, விடுங்க.. என்னைக் கவர்ந்த சில படங்கள் பற்றி மட்டும் சொல்லி விட்டு 'எஸ்' ஆகிறேன்.

பார்த்து ரசித்த படங்கள்:

காவலன்
சிறுத்தை, வானம் (ஒரிஜினல் பார்த்திருந்தாலும், சந்தானத்துக்காக)
பயணம்
குள்ள நரிக்கூட்டம்
கோ
காஞ்சனா
மங்காத்தா
முரண்

பார்த்து நொந்த படங்கள்:

நடுநிசி நாய்கள்
அவன் இவன்
180
வந்தான் கொன்றான், மன்னிக்க வென்றான்
ஏழாம் அறிவு (தங்கமணியுடன் முதல் படம்)
வேலாயுதம் (இரண்டாவது)
ராஜ பாட்டை(மூன்றாவது)
விதி என் வாழ்வில் எப்படியெல்லாம் விளையாடுகிறது பார்த்தீர்களா??

தவற விட்டதாலேயே தப்பித்தவை:

இளைஞன்
எங்கேயும் காதல்
வேங்கை
ரௌத்திரம்
வெடி
வித்தகன்
ஒஸ்தி

தவற விட்டு தவறாக ரசித்தவை (வீட்டுலதான்) / ரசிக்க வேண்டியவை:

நர்த்தகி
உயர்திரு 420
வெங்காயம்
வாகை சூட வா
சதுரங்கம்
வர்ணம்
தம்பி வேட்டோத்தி சுந்தரம்
மம்பட்டியான்
உச்சிதனை முகர்ந்தால்
பாலை
மயக்கம் என்ன
போராளி

பார்த்த பின் அனுபவித்தவை / அனுபவித்துப் பார்த்தவை:

ஆடுகளம்
யுத்தம் செய்
ஆரண்ய காண்டம்
அழகர்சாமியின் குதிரை
தெய்வத் திருமகள் (சாராவுக்காக)
எங்கேயும் எப்போதும் (சாதா மணியாக கடைசி படம். இயக்குனர் நாமக்கல்காரர் என்பதில் எச்சகச்ச, மன்னிக்க, எக்கச்சக்க பெருமை :-) )
வாகை சூட வா
மௌன குரு (என் தங்கமணி கூறியது, "இந்த ஒரு படத்துக்காக, மத்த மூணு படத்துக்கு கூட்டிட்டு போனத மன்னிச்சு விடுறேன்".)

மக்களே.. அனைவருக்கும் இந்த வருடம் போன வருடத்தை விட நன்றாக அமையும். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...