Wednesday, August 17, 2016

கபாலி - இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருக்கலாம்!

கபாலி படம் அறிவிக்கப்பட்ட உடனே, எல்லோரையும் போல எனக்கும் எதிர்பார்ப்பு எகிறியது. ஏனென்றால், ரஜினியின் வெற்றிக்கு மற்றவர்களும், பெரிய பின்னணி பட்டாளமுமே காரணம் என்றுதான் நான் சண்டை போடுவேன். ஆனால், இதில் ரஜினி தவிர மற்றவர்கள் எல்லோருமே கிட்டத்தட்ட புதியவர்கள், (நாசர் உள்ளார் என்பது கூட படம் வந்த பிறகே எனக்கு தெரியும்), ரஜினி வயதான வேடத்தில் நடிக்கிறார் என்றதும், இன்னமும் எதிர் பார்ப்பு கூடியது.

பாடல்கள் வெளிவந்த பிறகு எல்லோரும் "நெருப்புடா, நெருங்குடா" என்று கூவிக் கொண்டிருந்ததை வெறுப்புடா என்று பார்த்தாலும், அந்தப் பாடல் பிடிக்கவே செய்தது. அதே போல சங்கர் (அய்யய்யோ கோச்சுக்குவாரோ) ஷங்கர் போல ரகசியம் எல்லாம் வைக்காமல், இன்னார் இன்னார் இந்த இந்த வேடங்களில்தான் நடிக்கிறார்கள், இவர்களுக்குள் என்ன சம்பந்தம் என்பதுதான் கதை என்றே தைரியமாக ரஞ்சித் ரொம்ப நாள் முன்பு கொடுத்த பேட்டி. அட என்று எண்ண தோன்றியது.

படம் வெளிவருவதற்கு முன் தாணு செய்த அலப்பரைகளைப் பார்க்கும்போது எரிச்சல் வந்தாலும், அவர் ஒரு வியாபாரி, அப்படிதான் செய்வார் என்று தெரியும். எனவே விட்டு விடலாம். என் முதல் நாள் முதல் காட்சி மற்றும் லிங்கா பட பாதிப்புகளால், படம் ஓரளவு ஓடிய பிறகு, கட்டணமும் சாதாரண நிலைக்கு வந்த பிறகே நான் பார்த்தேன்.

படத்தின் பலம் முதலில் ரஜினிதான். தேவையில்லாத துவக்கக் காட்சி இல்லை, தலையை திருப்பும்போதெல்லாம் "விஷ்க், விஷ்க்" என்ற இசை இல்லை. ஆடிப் பாடும் காட்சிகள் இல்லை. இன்னும் சொல்லப் போனால், அடக்கி வாசித்துள்ளார் எனலாம்.

சிலர் சொல்கிறார்கள், நிறைய நாள் கழித்து ரஜினிக்கு நடிப்பதற்கான வாய்ப்பு அதிகம் என. இன்னும் முத்துசிவா போன்றோர், அப்படி எல்லாம் இல்லை, அவர் எல்லாப் படங்களிலுமே தனது தேர்ந்த நடிப்பைக் காட்டியுள்ளார் என்கிறார்கள். ஆனால், அவையெல்லாம் ஊறுகாய் போல, இதில் கிடைத்த வாய்ப்புகள் நிறைய. குறிப்பாக மனைவி, மக்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள், மாயநதி பாடல் உள்பட.


பலவீனம் முதலில் திரைக்கதை. முதல் பாதி முடியும்போதே படம் முடியப்போகிறதோ என்று என்னும் அளவிற்கு இருந்தது. வெறும் 75 நிமிடங்கள்தான் முதல் பாதி, ஆனால், ரொம்ப நேரம் போல தோன்றியது. அந்த துப்பாக்கி சண்டையின் போது, ஒரு வேளை அந்த வெளிநாட்டு வில்லனும், கிஷோரும் இருந்திருந்தால், படம் அங்கேயே முடிந்திருக்கும். அப்பாடா என்றிருக்கும். சரி பரவாயில்லை என இடைவேளை முடிந்து வந்தால், ரஜினி சவால் விடுகிறார். "அட, இப்போ இடைவேளை விட்டிருந்தா நல்லா இருக்குமே" என்று எனக்கு மட்டும்தான் தோன்றியதா என தெரியவில்லை.

அதே போல முதல் பாதியில் நிறைய பாத்திரங்கள். யார் யார் என்றே புரியவில்லை. நான் ரொம்ப நேரம் கலையரசன் நாசரின் பையன் என்று நினைத்தேன், பின்னர்தான் தெரிந்தது அது பேரன் என்று. அட்டக்கத்தி தினேஷின் பாத்திரமே தேவையில்லை. இது போல பல குழப்பங்கள். அதே போல முதல் பாதியில் மனைவியை தேடுவது வந்திருந்தால் ஒரு வேளை இரண்டாம் பாதி வேகமாக முடிந்திருக்குமோ என்னவோ. ஒரே நாளில் கெட்டவர்களை அழிப்பதை, முன்னமே செய்திருக்கலாமே என்றெல்லாம் தோன்றியது.

ஆனாலும், எல்லாவற்றையும் தாண்டி, ரஜினி என்றால் இப்படித்தான் என்று எண்ணுபவர்கள் கண்டிப்பாக இந்தப் படத்தைப் பார்த்தால், தங்களது எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். படத்தில் இன்னொரு ஆச்சரியம், 'டைகர்' வேடத்தில் வருபவர், மெட்றாஸ் படத்தில் வரும் 'ஜானி' வேடத்தில் நடித்தவர் என்பதுதான். "நடிகன்டா, நீ நடிகன்டா".

படத்தைப் பற்றிய அரசியல் எதுவும் நான் பேசவில்லை. இருந்தாலும் சிலவற்றை மட்டும் கூற விரும்புகிறேன். பொதுவாக மலேசிய வாழ் தமிழர்கள், இங்கிருந்து குடிபெயர்ந்து சென்ற தமிழர்களை மதிப்பதில்லை, 'ஊர்நாட்டான்' என்றெல்லாம் அழைப்பார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன். படத்தில் அது போன்ற அரசியல் எதுவும் காட்டப்படவில்லை. சரி கதை மலேசிய வாழ் தமிழர்கள் பற்றி மட்டும் வருவது, விட்டு விடலாம். மலேசிய வாழ் தமிழர்கள் என்ன கஷ்டப்படுகிறார்கள் என்றும் தெரியவில்லை. ஒரே காட்சியில் வந்து, போய் விடுகிறது.

ஒரு வேளை நன்றாகவே காண்பித்திருந்தாலும், நம் மண்டைக்கு அது உரைக்காது. அனேகன் படத்தில், பர்மாவில் வாழ்நத தமிழர்கள் எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தப்பட்டு, நம்மூருக்கு திருப்பி அனுப்பப்பட்டார்கள் என்று காட்டுவார்கள். நாம் யாரும் அதைப்பற்றி மதிக்கவேயில்லை. அதே போல இதையும் கடந்திருப்போம்.

படத்தின் இறுதிக்காட்சியில் இது நாயகன் போல போல இருக்குமா அல்லது தேவர் மகன் மகன் போல இருக்குமா என்ற குழப்பம் எனக்கு வந்தது. உண்மையில் அப்படி ஒரு முடிவு வைத்ததில் மக்கள் மற்ற குறைகளை மறந்து "என்ன நடந்திருக்கும்" என்ற குழப்பத்திலேயே இருப்பார்கள் என்றுதான் வைத்துள்ளார்கள் போல.

இந்தக் கருத்துகள் யாவும் என்னுடைய ஆதங்கமே. எத்தனை பேர் முதலில் வந்த அந்த திருட்டு விசிடி காணொளியைப் பார்த்தார்கள் என்று தெரியவில்லை. நான் ஒரு 45 நிமிடங்கள் பார்த்திருப்பேன். அதில் நன்றாக கவனித்தீர்கள் என்றால், முதல் 10 நிமிடங்கள் திரையரங்கில் ஒரே ஆரவாரமாக இருக்கும். அதற்குள்ளாகவே, டீசரில் வந்த காட்சிகள் எல்லாம் வந்திருக்கும். அதன் பின், அனைவரும் மிக அமைதியாக பார்ப்பார்கள். ஒரு சப்தமும் இருக்காது. 10 நாட்கள் கழித்து நான் திரையரங்கில் பார்க்கும்போதும் அதே நிலைதான்.

ரஜினி அவர்களே. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையாவது, இதே போல நடியுங்கள். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், ரஜினியை ரொம்பவும் கஷ்டப்பட வைக்காமல், அதே சமயம் வணிக நோக்கிலும் எடுக்க சரியான ஆள் ஹரிதான். ஒரு முறை முயன்று பாருங்கள். 

ரஜினியின் தற்போதைய மதிப்பிற்கு, அந்தளவிற்கு கனமான கதாபாத்திரமும் மிகவும் முக்கியம். அதே போல ரஜினி முழுவதும் கெட்டவனாக ஒரு படத்தில் , (நாயகனாக அவரே நடிக்காமல்) வர வேண்டும், ஏனென்றால், வில்லனுக்கு என ரசிகர் பட்டாளத்தை, முதலில் உருவானது அவருக்குத்தான்.

சந்திரமுகி படத்தில், 'ரா ரா' பாடலில் அவர் வரும்போது, 'ஜோதிகா எப்படி?' என ஒரு ராஜகுரு போன்ற ஒருவரிடம் கேட்பார். அதற்கு அவர் சைகையில் சொல்லும் பதிலும், அதற்கு ரஜினி கொடுக்கும் எதிர்வினையும் செம. எந்திரன் படத்தில், அது ஓரளவிற்கு திருப்தி அடைந்தாலும், ரஜினியால் இன்னும் முடியும். காத்திருப்போம்.