Thursday, June 9, 2016

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

சூடான செய்திகள் ஒன்றுமில்லை. ஆறிய பழங்கஞ்சிதான்.

தேர்தல் முடிவுகள்:

ஓரளவு எதிர்பார்த்ததுதான். எண்ணெய் சட்டியா, அடுப்பா என்பதுதான் சந்தேகமே. ஆனாலும் நம் மக்கள் மிக மோசம். என்ன செய்ய. தொங்கலில் விடுவார்கள் என்று பார்த்தேன். எனக்கென்னவோ புலியின் நகத்தைப் பிடுங்கி பல்லில்லா சிங்கத்திற்கு அதைக் கட்டியது போல உள்ளது. (புரிஞ்சுதா?).

அதிமுக 200ல் வென்று திமுக காணாமல் போயிருந்தால் கூட பரவாயில்லை. ஆனால், திமுக முன்னேறி வந்துள்ளது, அதிமுக சற்றே பின்னடவை சந்தித்துள்ளது. "நாங்கதான் ஆளுங்கட்சி" என்பவர்களைப் பார்த்தால் நினைவுக்கு வருவது "ஏழாவது பாசுன்னே, பத்தாப்பு பெயில்னே".

ஆனாலும், நான் சொன்னது போல பல இடங்களில் NOTA வெற்றி வாய்ப்பை மாற்றியுள்ளது. இன்னும் குறிப்பாக சொன்னால், 22 தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் நோட்டா வாக்குகளையும் விட குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். அதில் அதிமுக 14ல் வெற்றி, திமுக 8ல் வெற்றி. அதுவரை சந்தோஷம். இரு கட்சிகளும் அதை உணர்ந்து கொண்டால் நல்லது.

24 விமர்சனம்:

அப்படி ஒன்றும் ஆஹா ஓஹோ என்றெல்லாம் இல்லை. இதுவரை வந்த காலப் பயண படங்களை விட இதில் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும், கேவலமாக இருந்தது. இதைப் பற்றி பதிவர் முத்துசிவா தெளிவாக விளக்கியுள்ளார். இருந்தாலும் மாசு, அஞ்சான் படங்களுக்கு இது பரவாயில்லை. "என்னடா இப்படி சொல்ற" என்பவர்களுக்கு, "நான் ஒரு பிரபல பதிவர்ங்க, எனக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம்"

இளையராஜா:

தேசிய விருது சர்ச்சை பற்றி எனது கருத்து. பழசி ராஜா படத்திற்கு விருது கொடுத்த போதே ராஜா அதை வாங்கவில்லை. அப்போதும் கூட தனித்தனியாக கொடுப்பதை எதிர்த்தார். இப்போது ஏன் அதை பெரிய விஷயமாக்கினார்கள் என தெரியவில்லை. எனது சில கருத்துகள். கங்கை அமரன் முந்திக்கொண்டு ராஜாவை வம்புக்கிழுத்தது பொறாமையா என தெரியவில்லை. ஆனாலும், தீயை அணைக்க எதிர்ப்பக்கம் தீப்பற்ற வைப்பது போல எனக்குத் தோன்றியது.

பாடல்கள் முதலில் அது வரும் காட்சிகள் மட்டும் சொல்லப்பட்டு மெட்டு போடப்படுகிறது. ஆனால், பின்னணி இசை, படம் முடிந்த பிறகு போடுவது. எனவே, அதில் இன்னும் அதிக ஈடுபாட்டுடன் இசையமைக்க முடியும். எனவே, பின்னணி இசைக்கு தனியாக விருது கொடுப்பது தப்பில்லை.

இசைக்கு கட்டாயமாக இரண்டு விருதுகள் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. பாடல்கள் இல்லாத அல்லது நிஜமாகவே பின்னணி இசை நன்றாக இருந்தால், கண்டிப்பாக தனியாக கொடுக்கலாம்.

கமல்:

சபாஷ் நாயுடு படத்திற்கு எதிர்ப்பு. மக்களுக்கு திரையில் நல்லவர்களாக நடிப்பவர்களைப் பிடிக்கிறது. நிஜ வாழ்க்கையில் எப்படி இருந்தாலும் கவலை இல்லை போல. படத்தில் சிறு குழந்தைகளை பிச்சை எடுக்க வைப்பவர்களை ஓட ஓட அடிக்கும் நாயகன், சாலையில் அவர்களுக்கு ஐந்து பைசா கொடுத்தாரா என்று தெரியாது.

நிஜத்தில், மகள்களின் சான்றிதழ்களில் சாதி, மதம் என்ற இடங்களில் இல்லை என்ற சொன்னவர், திரையில் வரும் கற்பனைப் பாத்திரத்திற்கு சாதிப் பெயரை வைத்து விட்டார் என்று குதிக்கிறார்கள். தேவர் மகன் படத்தால் பெரிய பிரச்சினை வந்தது என நிறைய பேர் சொல்வார்கள். விவரம் தெரியாத நிறைய பேர் எண்ணுவது "அந்த படத்துல அப்படி ஒன்னும் இல்லையே" என்றுதான்.

ஆனால், அந்தப் படத்தில் வரும் பாடல், அதைப் பாடிய நபரின் சாதி, அதை வைத்து உயர் சாதியினர் தாழ்த்தப்பட்டோரை செய்த கிண்டல் கேலிகளும் ஒரு காரணம். உண்மையில் போராட வேண்டியது முத்தையா, பிரபாகரன் போன்ற இயக்குனர்களிடம்தான். கமலிடம் அல்ல.

ரொம்ப நாள் முன்பு "யாருடா மகேஷ்" என்ற படத்தின் டிரைலர் (மட்டும்) இணையத்தில் சக்கை போடு போட்டது. அதில் ஒரு வசனம் வரும் "ரத்னவேலுவை சுருக்கமா ரேண்டின்னு கூப்புட்டா, குழந்தைவேலுவை என்ன கு​​_டின்னு கூப்பிடுவீங்களா?" என்று.


உடனே, திரை உலகில் சில பேர் இது ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவை நக்கல் செய்வது போல உள்ளது எனக் குதிக்க, படத்தின் இயக்குனர் சொன்னார், "இந்த வசனத்திற்கு குழந்தவேலுதான் கோபப்படனும், ஏன் ரத்னவேலு குதிக்கிறார்?" அதே போல உண்மையில் நாயுடுக்கள் தான் போராட்டத்தில் இறங்க வேண்டும் கமல் தங்களை மட்டம் தட்டும் விதமாக படம் எடுக்கிறார் என.

அவ்வளவுதாங்க. மறுபடியும் ஏதாவதுன்னா ஒரு பதிவு போடுறேன்.