Tuesday, June 30, 2015

ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1993): புலம் பெயர்ந்தோரின் வலி

நான் பதிவு எழுதும் படங்கள் எல்லாம் நிறைய படம் பார்ப்பவர்கள் தேய்த்து எடுத்திருப்பார்கள். ஒரு வகையில் நான் பார்ப்பதே அந்த மாதிரி படங்கள்தான். ஏனென்றால், படம் பார்த்த பின், ஒவ்வொரு பதிவரும் அந்தப் படத்தைப் பற்றி என்ன சொல்லி இருக்கிறார்கள், நமக்கு தோன்றியதுதான் அவர்களுக்கும் தோன்றியதா என்பதற்காகவே.

ஏனென்றால் ஏற்கனவே குறும்படங்கள் பார்த்த அனுபவம். ஒரு 10 குறும்படங்கள் பார்த்தால்தான் ஒன்றாவது தேறும். அதே பெரிய படங்களுக்கு எல்லாம் நேரத்தை செலவு செய்ய முடியாது என்று, மற்றவர்கள் கூறும் படங்களையே பார்க்க ஆரம்பித்தேன். அதில் காமெடி என்னவென்றால், அதிலும் எனக்கு 10ல் ஒன்றுதான் பிடிக்கிறது.

அந்த படங்கள் பற்றிய எனது பார்வையே இந்த ஒலகப்பட பதிவுகள். என்னுடைய புரிதலையே நான் எழுதுகிறேன். தவறு ஏதேனும் இருப்பின், தயங்காமல் சுட்டிக்காட்டலாம்.


எல்லாம் சரிதான். ஏன் இந்தப்படம் முதலில்? அதற்கு நிறைய காரணங்கள் உண்டு. கல்லூரிக்காலங்களில் இந்தப் படத்தில் உள்ள 'அந்த ஒரு சில காட்சிகள்' மட்டுமே பார்த்துள்ளேன். படம் முழுதும் பார்த்ததில்லை. அதே போல படத்தின் நீளம், படம் முழுதும் கருப்பு வெள்ளை என சில தயக்கங்கள். போதாக்குறைக்கு இந்தியன் படத்தில் கமல் வேறு "நல்ல படம், தியேட்டர்ல யாருமே இருக்க மாட்டாங்க" என்று வேறு சொல்லுவாரா, சரிதான் மொக்கைப் படம் போல என்று விட்டு விட்டேன்.

அதன் பின் "என்ன, இது ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் படமா" என்று மட்டும் கேட்டு விட்டு மீண்டும் விட்டு விட்டேன். அதன் பின் ஒரு மிக கடினமான நாளில் இந்தப் படத்தைப் பார்த்து விட்டேன்.

என்னை மிகவும் பாதித்த விஷயங்கள். ஒரு நிர்வாணமாக ஓடும் பெண்களைப் பார்த்து பரிதாபமும், அழுகையும் வரும் என அதுவரை நான் எதிர் பார்த்ததில்லை. அவ்வளவு ஏன், 'அங்கே கை வைத்தார்கள், இங்கே துணி நழுவியது' என நம் கண்களை எங்கோ பார்க்க வைக்கும் காணொளிகள் அதிகம். ஆனால், அந்தக் காணொளியின் நோக்கம் அதுவாக இருக்காது. அதே போலத்தான் இந்தப் படமும்.

அதே போல, தமிழில் எவ்வளவு மொக்கையான படமாக இருந்தாலும், சில காட்சிகளில் உணர்சிவசப்படுவேன், காரணம் மொழி. மற்றபடி மற்ற மொழிப்படங்களில் அவ்வளவாக இல்லை, அப்படியே இருந்தாலும், இந்தப் படம் அளவிற்கு இல்லை என்பதே உண்மை.

இரண்டாம் உலகப்போர் சமயத்தில், யூதர்கள் தாங்கள் வாழ்ந்த இடங்களை விட்டு அகதிகளாக வெளியேற்றப்படுகின்றனர். அவர்களின் சொத்துகள் ஜெர்மானியர்களால் அபகரிக்கப்படுகிறது. அதில் ஷிண்ட்லர் என்பவர் எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என்பது போல, யூதர் ஒருவருக்கு சொந்தமான, பாத்திரங்கள் செய்யும் தொழிற்சாலையை வாங்கி, அதில் குறைந்த சம்பளத்திற்கு யூதர்களை வேலைக்கு சேர்த்து நிறைய சம்பாதிக்கிறார். அதற்காக ஜெர்மானிய அதிகாரிகளுக்கு லஞ்சத்தை வாரி இறைக்கிறார். குடித்து, கும்மாளமிடுகிறார்.

அந்த தொழிற்சாலையில் மேலாளர் போல இருக்கும் ஸ்டெர்ன் எனும் யூதர், தன்னால் முடிந்த அளவு யூதர்களை இந்த தொழிற்சாலைக்கு வேலைக்காக கூட்டி வந்து, ஜெர்மானியர்களின் கொடுமையில் இருந்து காப்பாற்றுகிறார். அதே நேரம் யூதர்கள் மீதான கொடுமைகள் அதிகரிக்கின்றன. அவற்றைப் பார்த்து ஜெர்மானியரான ஷிண்ட்லருக்கே மனம் மாறுகிறது. அதிலும் உச்சகட்ட கொடுமையாக யூதர்கள் செங்கல் சூளையில் உயிரோடு கொளுத்தப்படுகிறார்கள்.

இதனைப் பார்த்ததும், எப்படியாவது தன்னால் முடிந்தவரை யூதர்களை காப்பாற்ற வேண்டும் என எண்ணி, தன்னுடைய சொந்த ஊரில் உள்ள தொழிற்சாலைக்கு யூதர்கள் வேண்டும் என கேட்டு, ஒரு பெயர்ப்பட்டியலை தயாரிக்கிறார். ஒவ்வொரு ஆளுக்காகவும் லஞ்சம் கொடுக்க தன சொத்துக்களையே அளிக்கிறார். அப்படி அவரால் காப்பாற்ற முடிந்ததா என்பதே படம். இது ஒரு உண்மைக்கதை. இந்த ஷிண்ட்லர் பற்றிய மேலதிக விவரங்களை நீங்கள் கூகுளிடம் பெறலாம்.

"கொடுமை கொடுமை" என்பவற்றை கேட்பதை விட, படிப்பதை விட பார்ப்பது என்பது கொடுமையானது. அதிலும் அந்தக் காட்சிகள் அனைத்தும், உண்மையாக நடந்த இடங்களில் எடுக்கப்பட்டது என தெரியும்போது வரும் வலி இன்னும் அதிகம். சொல்ல வெட்கமாகத்தான் உள்ளது, இலங்கையில் நம் சகோதரர்களும் சகோதரிகளும் இப்படித்தானே துயரப்பட்டு இருப்பார்கள் என இந்தப் படம் பார்க்கும்போதுதான் இன்னும் அதிகமாக வலித்தது.

எனக்கு தோன்றியது என்னவென்றால், ஒருவேளை இலங்கையில் நடந்த இனக்கலவரம் பற்றி படம் எடுக்க சரியான ஆள், ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் தான். "அவர் யூதர், அதனால் இந்தப் படம் அவருக்கு நெருக்கமான படம்" என்று சொல்லலாம். ஆனால், நம்மூரில் முழக்கமிட்டுக் கொண்டு திரியும் எந்த சினிமாக்காரனும், அவர்களின் உணர்வுகளை நமக்கு காட்சிப்படுத்த இயலாது. அவர்களுக்கு அதை வைத்து பணம் பண்ணவும், அதில் காதலை மட்டும் சொல்லவும், அரசியல் ஆக்கவும்தான் தெரியும். அப்படியே புரிந்தாலும் அதை நம்மூரில் எடுக்க முடியாது.அப்படியே புரிந்தாலும் அதை நம்மூரில் எடுக்க முடியாது.

ஒரு அழிக்கப்பட்ட இனத்தின் வலி தெரிய வேண்டும் என்றால், நாம் எவ்வளவு சொகுசாக வாழ்கிறோம் என தெரிய வேண்டும் என்றால், இந்தப் படத்தை நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேணும். உண்மையில் நான் சொன்ன கதை சாதாரணமாக தெரியலாம். ஆனால், காட்சிகள் உங்களை கதற வைக்கும். அவற்றை எழுத்தில் சொல்ல இயலவில்லை.

இந்தப் படத்தில் குறிப்பிடத் தகுந்த காட்சிகள் என தனியாக எதுவும் இல்லை. படம் முழுதுமே குறிப்பிடத்தக்கதுதான். படத்தில் பல நிர்வாணக் காட்சிகள் உண்டு. அவை யாவும் பாலியல் உணர்வுகளை தூண்டாது. அதனால்தான், படம் பாருங்கள் என்கிறேன். இந்தப்படம் மட்டும் நீங்கள் பார்த்து விட்டீர்கள் என்றால், என்னைப் பொருத்தவரை நீங்கள் எந்த மொழி உலகப்படங்களும் பார்க்க தயாராகி விட்டீர்கள் என்று அர்த்தம்.

Wednesday, June 3, 2015

மாஸ் - தமாஸ், டிமாண்டி காலனி - பக்கா மாஸ்

டிமாண்டி காலனி:

படம் வந்து விட்டாலும், கொஞ்சம் பொறுமையாகவே இருந்தேன். வந்த விமர்சனங்கள் கொஞ்சம் நம்பிக்கை கொடுக்கவே, "விடுறா வண்டியை" என போய் பார்த்து விட்டு வந்து விட்டேன்.

முதலில் இந்தப் படம் எப்படி மற்ற பேய்ப் படங்களில் இருந்து வித்தியாசப்படுகிறது என்று பார்ப்போம். நீங்கள் நிறைய உலகப் பேய்ப் படங்கள் பார்த்திருந்தால், இந்தப் படமும் உங்களுக்குப் பிடிக்கும். பாதி விஷயங்களுக்கு விடை இருக்காது. படம் முழுதும் பயம் மட்டும்தான் இருக்க வேண்டுமென முடிவு செய்து விட்டார்கள்.

நான் சொன்னது போன்ற (?) கதைதான். நான்கு நண்பர்கள், ஒரு ஆர்வத்தில் பேய் வீடு என்று சொல்லப்படும் டிமாண்டி காலனியில் உள்ள வீட்டிற்கு போகிறார்கள். கூட உள்ள பயந்தாங்கொள்ளி நண்பனை பயமுறுத்துகிறார்கள். ஆனாலும் அமானுஷ்யத்தை உணர்ந்து, வெளியேறி விடுகிறார்கள். அதன் பின் அவர்கள் வீட்டில் அடுத்த நாள் ஆரம்பிக்கும் அதகளம், நம்மையும் மிரள வைக்கிறது.

இந்த படம் பற்றி ஒன்றுமே தெரியாத ஆள் பார்க்க ஆரம்பித்தால், முதல் அரை மணி நேரம் கதை எப்படி போகும் என்றே தெரியாது. நான்கு நண்பர்கள், வேறு வேறு வேலை, டாஸ்மாக் பாட்டு என போகும் படம், அப்படியே திசை மாறுகிறது. இந்தப் படத்தில் இன்னொரு குறிப்பிடப் பட வேண்டிய விஷயம், "இப்ப பேய் வருமா?" என நம்மை யோசிக்க வைக்கவே மாட்டார்கள். போகிற போக்கில் புளியைக் கரைப்பார்கள். (அருள்நிதி திரைச்சீலையை ஒதுக்க அதில் பேய் தெரிவது, மெழுகுவர்த்தி எடுத்துக் கொண்டு வர வர கண் வெண்மையாக மாறுவது, ஜோசியர் சொன்ன விஷயத்தை போனில் மீண்டும் கேட்பது)

நான் டிக்கெட் வாங்க போகும்போது ஒரு கல்லூரி கும்பலில் ஒரு ஆள் வரவில்லை என எனக்கு அந்த டிக்கெட்டைக் கொடுத்து விட்டனர். படத்தைக் கத்திக் கத்திக் கலாய்க்க வேண்டும் என்று எண்ணினார்கள் போல. அவர்களுக்கு இயக்குனர் அந்த வாய்ப்பே கொடுக்கவில்லை. படம் முடிந்த பொது, அந்த கும்பலில் சிலருக்கே பேய் அடித்தது போல இருந்தது. அதிலும் படம் முடியும் போது மணி இரவு சரியாக 12. சில குடும்பங்கள் "கும்பலா இருக்கே, ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு போலாமே" என தர்ம சங்கடத்துடன் காத்திருந்தனர். வார நாளின் இரவுக் காட்சியில் அந்த கும்பல் சற்று அதிகம்தான்.

பொதுவாக ஒரு வீட்டுக்குள் மட்டும் இருக்கும் பேய் அந்த வீட்டில் உள்ளவர்களை மட்டுமே பழி வாங்கும். இந்த பேய் கொஞ்சம் வித்தியாசமாக அந்த மனிதர்களின் வீட்டிற்கு போய் பழி வாங்குகிறது. கொஞ்சம் கொஞ்சம் உலகப்படங்கள் நினைவுக்கு வரலாம் (1408-அறை பனி போல உறைவது, பைனல் டெஸ்டிநேஷன்-போன் ஓவனுக்குள் விழுந்து ஷாக் அடிப்பது போன்றவை).

அதே போல முதலில் நாடி ஜோதிடத்தை நக்கல் செய்தும், பின் அதையே ரொம்ப முக்கியமானதாக காட்டியதுதான் ஏன் என தெரியவில்லை. அருள்நிதியின் அது போன்ற பாத்திர படைப்பிற்கான காரணமும் தெரியவில்லை, தேவையுமில்லை. ஏனென்றால் அந்த உதவி இயக்குனரின் பாத்திரம் தவிர மற்றவர்கள் செய்யும் வேலைகள் படத்தை முதல் அரை மணி நேரம் நகர்த்தவே உதவுகின்றன. அந்த டாஸ்மாக் பாடலும், இந்த காட்சிகளிலும் கத்திரி போட்டால், இன்னும் நன்றாக இருக்கும்.

உருவம் படம் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அந்தப் படத்தில், டைட்டிலில் எல்லோருடைய பெயரும் வந்த பிறகு, இயக்குனரின் பெயரும் வந்த பிறகு இறுதியாகத்தான் இளையராஜாவின் பெயர் வரும். அந்த இயக்குனர் ராஜாவின் மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார் போலும். ஒரு காலே அரைக்கால் பாட்டுதான் வரும். அந்த பின்னணி இசை என்னை பயமுறுத்தியதா என எனக்கு அவ்வளவு நினைவில்லை. மீண்டும் அதை சோதித்துப் பார்க்கும் பொறுமையும் இல்லை. (ஆனால் பிள்ளை நிலா அட்டகாசம்) இந்தப் படத்தில் பின்னணி இசை அபாரம், பயமுறுத்தியது. சற்றே காது வலி வந்தாலும்.

காஞ்சனா போன்ற காமெடி பேய்களைப் பார்த்து சலித்திருந்தால், டிமாண்டி காலனி வரை போய் விட்டு வாருங்கள். கண்டிப்பாக உங்களை ஏமாற்றாது.

மாசு (எ) மாசிலாமணி:


உண்மையில் நான் இந்த படம் பார்க்கவில்லை. தவிர்க்க இயலாத சந்தர்ப்பத்தில், அலுவலக நண்பர் ஒருவருடன் அரை மணி நேரம் திருட்டுத்தனமாக பார்க்க நேரிட்டது. பின் கண்டிப்பாக தியேட்டர் போக வேண்டும் என முடிவு செய்து விட்டேன். அப்படியே போனாலும் தனியாக விமர்சனம் எழுத வேண்டும் என தோன்றாது போல. எனக்கென்னவோ வெங்கட் பிரபுவிடம் சரக்கு தீர்ந்து விட்டதோ என தோன்றுகிறது. சென்னை 28ல் இருந்து பிரியாணி வரை தரம் குறைந்து கொண்டேதான் வருகிறது. 

நினைவு தெரிந்து ஒரு இயக்குனரின் அனைத்து படங்களையும் தியேட்டர் சென்று பார்த்தது வெங்கட் பிரபு படங்கள் மட்டும்தான். அதிலும் முதல் 4 படங்கள் நண்பர்களுடன் சென்றபோது மிக சந்தோசமாக இருந்தன. எனக்கும், முதலில் வெங்கட் இதே போலவே படங்களை (யுவன், பிரேம்ஜி என வழக்கமான கூட்டணி) எடுத்தால் நன்றாக இருக்குமே, எதற்காக மாற வேண்டும் என்றுதான் தோன்றியது. ஆனால், இப்படியே போனால், "கொஞ்சம் இல்ல, ரொம்ப கஷ்டம்".