Sunday, April 2, 2023

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

அனைவருக்கும் வணக்கம். 2023 சிறப்பாக போய்க்கொண்டிருக்கும் என்று நம்புகிறேன். வழக்கம் போல ஊறுகாய் போல எல்லா விஷயங்களையும் தொட்டு செல்கிறேன். 

ஆஸ்கார் மரகதமணி: எப்போதுமே ராஜா, ரஹ்மான் என்றுதான் பதிவுகளும், சண்டைகளும் நடக்கும். எப்போதாவது ஹாரிஸ், யுவன். திடீரென எங்கிருந்து வந்தார் என்றே தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன்பு, 2020ல் தான் இசை அமைப்பதில் இருந்து ஓய்வு பெறப்போவதாக படித்தேன். இதையேதான் ரஹ்மானும் அவருடைய வாழ்த்தில் சொல்லி இருந்தார்.


பணம் கொடுத்து வாங்கினார்கள், இதை விட நல்ல பாடல்களை மரகதமணி கொடுத்துள்ளார் என்று என்னதான் சொன்னாலும் இது ஒரு புதுவித தொடக்கம். கண்டிப்பாக என்னுடைய முந்தைய பதிவில் சொன்னபடி இனி வரும் காலங்களில் கண்டிப்பாக இந்தியாவிற்கும் தமிழுக்கும் நிறைய ஆஸ்கார்கள் கண்டிப்பாக கிடைக்கும். 

எப்போதுமே, ஒரு சில இயக்குனர் - இசையமைப்பாளர் இணை ஒரு போதும் சோடை போகும் பாடல்களை கொடுத்ததே இல்லை. மணிரத்னம் இளையராஜா, மணிரத்னம் ரஹ்மான், சங்கர் ரஹ்மான், பாசில் இளையராஜா, சரண் பரத்வாஜ் என்று நிறைய. அதில் ராஜமௌலி மரகதமணியும் ஒன்று. அவர்களின் ஆரம்பகால பாடல்கள் முற்றிலும் தெலுங்கு வாடை அடித்தாலும், நான் ஈ படத்தில் இருந்து மரகதமணி இசை உலகத்தரம். 

ஆரம்பகால கட்டங்களில் ஜாதி மல்லி, நீ பாதி நான் பாதி, வானமே எல்லை, அழகன் என்று பாலச்சந்தர் மற்றும் அவர்களது சீடர்களுக்கும் நல்ல பாடல்களை கொடுத்துள்ளார். இன்னும் அடுத்தடுத்த படங்களில் நிறைய விருதுகளை வெல்லவும், வெளிநாட்டுப் படங்களுக்கு இசை அமைக்கவும் வாழ்த்துக்கள். 

எனக்கு புரியாத ஒரு விஷயம் என்னவென்றால், இதை வைத்து ரஹ்மான் ரசிகர்களும், மரகதமணி ரசிகர்களும்தானே சண்டை போட வேண்டும். ராஜா ரசிகர்கள் ஏன் குறுக்கே மறுக்கே விழுந்து சண்டை போடுகிறார்கள் என்றுதான் தெரியவில்லை திடீரென ஜேம்ஸ் வசந்தன் வேறு ராஜா 2 வருடங்களுக்கு முன்னால் உளறியதை மீண்டும் தூண்டி விட்டுள்ளார். ஐயோ ஐயோ.

விமர்சனம்: உண்மையில், தமிழில் டாடா படம் தவிர வேறு எதுவும் பார்க்கிற மாதிரியே இல்லை. வாரிசு, துணிவு, வாத்தி எல்லாம் உண்மையில் மரண மொக்கை. தெலுங்கு இயக்குனர்கள் தமிழில் படம் எடுக்கும் பொது மாற்றுகின்ற ஒரே விஷயம், அங்கு எப்போதுமே இரண்டு நாயகிகள். தமிழில் ஒரே ஒரு நாயகி. அதைத் தவிர மற்ற எல்லாமே அப்படியே தெலுங்கு வாடைதான். அதிலும் தெலுங்கில் வீரசிம்ஹா, வால்டர் வீரய்யா படங்களை பார்த்து நொந்து விட்டேன். 


முன்பெல்லாம் ஆங்கிலப் படங்களின் கதைக்களம் தெரிந்தாலும் தொழில் நுட்பத்தோடு (நெசமாத்தான்) பார்ப்போம். இப்போதெல்லாம், பார்க்கவே தோன்றுவதில்லை. Horror வகையறாவில் உள்ள முக்கால்வாசி படங்கள் ஒரே மாதிரியான களம், காட்சிகள். இன்னும் கொஞ்ச வருடங்களில் படம் பார்ப்பதையே விட்டு விடுவேன் என்று நினைக்கிறேன்.

இணையத் தொடர்கள் இன்னும் மோசம். ராணா நாயுடுவை தெரியாமல் பார்த்து தொலைத்து விட்டேன். 20 வருடங்களுக்கு முன்பே மறந்து போயிருந்த கெட்ட வார்த்தைகளை மீண்டும் ஞாபகப்படுத்தி விட்டார்கள். இந்த தொடர்களில் பிரச்சினை என்னவென்றால், நிறைய நாமே அனுமானித்துக் கொள்ள வேண்டும். அடுத்த பாகத்துக்கு என்று பாதி விஷயங்களை தொங்கலில் விடுவது என்று ஒரு திருப்தியே இருக்காது. என்னவோ போங்க. 

அரசியல்: திமுகவினர் ஆட்டம் அதிகமாகி விட்டது. இவர்களே பாஜக வர வழி வகுத்து விடுவார்கள் போல. ஒரு சில சங்கி நண்பர்கள் கூட "ஏன், பாஜக வந்தா என்ன. ஏற்கனவே தமிழ்நாடு முன்னேறி இருக்கு. எங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்தா, இதே வழியிலதான் நாங்களும் போவோம். அப்புறம் என்ன" என்று கேட்டனர். 

என்னுடைய பதில் இதுதான். திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் கொள்கை என்பதில் சமத்துவம், சமூக நீதி போன்றவை உள்ளன. அவை அதனை செயல்படுத்துகிறதா என்பது வேறு. ஆனால், உங்களுடைய கொள்கையில் இது எதுவும் இல்லை. அதனால்தான் எனக்கு நீங்கள் வேண்டாம் என்றேன். அதற்கு வழவழ கொழகொழ என்று பதில் வந்தது. நாங்கள் இந்த வரலாற்றை மாற்றுவோம். உண்மையான கலாச்சாரம் பற்றி மக்களுக்கு சொல்லுவோம் என்று. இதிலும் நன்மைகள் உள்ளன என்றெல்லாம் சொன்னார்கள். 

உலகத்தில் எந்த செயலுமே தீமை கிடையாது. ஆனால், அது எத்தனை பேருக்கும் நன்மை என்பதில்தான் விஷயமே உள்ளது. சரி திமுக விஷயத்திற்கு வருவோம். நம்மை விட்டால் வேறு நாதி இல்லை என்ற எண்ணம் அவர்களுக்கு வந்து விட்டது. இதுவே அழிவிற்கு முதல் காரணமாக அமையக்கூடும். திருந்துங்கள், இல்லையேல் உங்களுடன் சேர்ந்து மக்களும் பிற்காலத்தில் வருத்தப்படும்படி ஆகி விடும். 

அவ்வளவுதான். மீண்டும் சந்திப்போம். 

Sunday, November 20, 2022

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

இன்னும் பதிவுகளைத் தேடிவரும் பதிவர்களுக்கு வணக்கம். மாதத்திற்கு ஒன்று என்று எண்ணியது வருடத்திற்கு ஒரு முறை என்று மாறி விடும் போல. இருந்தாலும் பரவாயில்லை, தோன்றும்போது எழுத வேண்டியதுதான். 

இளையராஜா:

கமல் எப்போது கட்சி ஆரம்பித்தாரோ, அப்போதே அவர் மீது இருந்த மதிப்பு போய் விட்டது. இப்போது ராஜா மீதும்தான். வெற்றிமாறன் ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார். நடு நிலை என்று கிடையாது. அது மறைமுகமாக ஒரு நிலைக்கு ஆதரவாக இருப்பதுதான் என்றான். யோசித்துப் பார்த்தால் அது உண்மைதான். இன்னொரு உண்மையும் என்னவென்றால், நாம் ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு செல்லும்போது நம்முடைய கருத்தும், அரசியல் நிலைப்பாடும் மாறுகிறது. 


இட ஒதுக்கீட்டில் படித்த நானே, வீடு, நல்ல வேலை வந்தவுடன் இப்போது இட ஒதுக்கீடு தேவையில்லை என்று எண்ண ஆரம்பித்து விட்டேன். கல்லூரி திரைப்படத்தில், மிக அழகாக இதனைக் காட்சிப்படுத்தி இருப்பார்கள். எத்தனை தலைமுறைகளாக மறுக்கப்பட்ட கல்வி, வேலை ஒரு தலைமுறையில் கிடைத்தவுடன் நமக்கு எல்லாமே கிடைத்து விட்டது போல எண்ணம் வந்து விட்டது. சரி வழி தவறி வந்து விட்டேன். இதைப்பற்றி பின்னர் விரிவாக பார்க்கலாம். 


எனக்கு பொழுது போகாத போது விக்கிப்பீடியாவில் பழைய படங்கள் பற்றி படித்துக்கொண்டிருப்பேன். அதில் பல படங்களில், ராஜாவின் இசையைப் பற்றி சொல்லி இருக்கவே மாட்டார்கள். அப்படியே இருந்தாலும், நன்றாகவே இல்லை, கேவலமாக உள்ளது, என்றுதான் இருக்கும். அனைவருக்கும் தெரியும், ஒரு மனிதனுக்கு பாராட்டு எவ்வளவு முக்கியம் என்று. ஆனால், ஊரே உங்களை பாராட்டும்போது பெரிய ஆட்கள் எல்லாம் உங்களை அழுத்தும்போது கண்டிப்பாக நீங்களே உங்களை பற்றி பெருமையாக பேச ஆரம்பிப்பீர்கள். அதுதான் ராஜாவுக்கும் நடக்கிறது. 

"உன் பின்னாடி எல்லாம் வர வேண்டி இருக்கு, எல்லாம் என் தலையெழுத்து" என்று வந்தால், "அப்படியா, உன்ன கொஞ்சம் வச்சு செஞ்சாதான் திருந்துவ" என்ற கண்டிப்பாக எண்ணி இருப்பார். அதன் விளைவே ரஹ்மான். எனக்கு தெரிந்து ரஹ்மான் ராஜாவை நேரில் பார்த்துப் பழகியதால் தான் இன்னும் அடக்கி வாசிக்கிறார் என்று நினைக்கிறேன். 

ராஜா இதற்கு மேல் சாதிக்க வேண்டும் என்று கிடையாது. ஆனால், இப்போது ஒரு சார்பு நிலை எடுத்ததால், இனி அவருக்கு எந்த விருது கிடைத்தாலும் அது அவருக்கு பெருமையாக இருக்காது. அந்த வகையில் எனக்கு வருத்தம்தான். 

விமர்சனம்:

இப்போதெல்லாம் வீட்டிலிருந்து வேலை செய்யும்போதும், சனி ஞாயிறு என எல்லா நாளும் குறைந்தது 3 படங்களாவது பார்த்து விடுகிறேன். இந்த வருடம், இதுவரை எந்த விமர்சனமும் போடவே இல்லை. யாரும் இப்போது படிப்பதற்கு ஆர்வம் காட்டுவது இல்லை. யூடியூபில் கூட ஷார்ட்ஸ் தான் நிறைய பார்க்கிறார்கள். ஒரு மனிதனின் கவனம் இப்போது 8 நொடிகள் மட்டுமே. அதற்குள் அவர்களை கவர வேண்டும். அடச்சே. மறுபடியும் மாறி மாறி போகிறேன். 

சரி, இந்த வருடம் இதுவரை வந்த படங்களில், மிகவும் பிடித்தது என்று எதுவும் இல்லை. தமிழில் டைரி, சர்தார், திருச்சிற்றம்பலம் படங்கள் எனக்கு கொஞ்சம் பிடித்திருந்தன. ஆனால், மலையாளத்தில் நிறைய படங்கள். ஒவ்வொன்றும் அட்டகாசமாக உள்ளன. ஒரு வரி கதையை வைத்துக்கொண்டு எப்படி எடுக்க முடிகிறது என்பதுதான் ஆச்சரியம். மற்ற மொழிகளில் இப்படி எடுத்தாலும், மலையாளத்தில் மிக அதிகம். 

தள்ளுமாலா (பல்ப் பிக்சன் பாதிப்பு), ஜன கன மன, Rorschach, நீதான் கேஸ் கொடு, சல்யூட், புழு, தீர்ப்பு என நிறைய படங்கள். அதிலும் மம்முட்டி இந்த வருடம் இறங்கி அடித்துள்ளார். அதன் பிறகு பிரித்விராஜும், துல்கரும். அதிலும் புழு மற்றும் Rorschach படங்களில் மம்முட்டி ஏற்றுள்ள வேடங்கள், உண்மையில் கமல் கூட நடிப்பாரா என்பது சந்தேகம். முடிந்தால் பார்க்கவும். இப்போதைக்கு அவ்வளவுதான். 

கொஞ்சம் விரிவான விமர்சனங்களோடு மீண்டும் பதிவிடுகிறேன். 

Friday, April 15, 2022

இணைய தொடர் விமர்சனங்கள்..!

90களின் இறுதியில் என்று நினைக்கிறேன். அப்போது, தமிழ் தொலைக்காட்சிகளில் ஒரு நாளில் மட்டும் 750 மணி நேரத்திற்கும் அதிகமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகிறது என்று. இப்போது அது கிட்டத்தட்ட 3 மடங்காக மாறி இருக்கும் என நினைக்கிறேன். 

அதே போல இப்போது இணையத் தொடர்கள். கன்னா பின்னாவென ஒவ்வொரு OTTயிலும் நிறைய தொடர்கள். முன்னொரு காலத்தில் நிறைய குறும்படங்கள் பார்ப்பேன். 10 பார்த்தால் ஒன்றுதான் தேறும். அதே போலத்தான் இவையும். பார்த்தவற்றில் தேறிய, அல்லது எனக்குப் பிடித்த சிலவற்றைப் பார்ப்போம். 

விலங்கு (Zee5):


பார்த்தவரையில், தமிழில் தேறிய ஒரே ஒரு தொடர் இதுதான். எல்லா இணைய தொடர்களிலும் இருக்கும் பெரிய பிரச்சினை, அதை முழுவதுமாக முடிக்காமல் நம்முடைய அனுமானத்திற்கு விட்டு விடுவது. அதே போல பல பிரச்சினைகளை ஆரம்பித்து, கோர்த்து, கடைசியாக எல்லாவற்றையும் கோர்த்து பாதியை முடித்து விடுவர். 

இதிலும் அதே போலவே ஒரு வீட்டில் நடக்கும் கொள்ளையைப் பற்றி காண்பித்து விட்டு, அப்படியே விட்டு விட்டார் இயக்குனர். ஒரு வேளை, காவல்துறை எப்படியெல்லாம் செய்யும் என்பதற்காக காண்பித்தார்களோ என்னவோ. மற்றபடி ஓரிரு வார்த்தை பிரயோகங்கள் தவிர, கண்டிப்பாக வீட்டில் பார்க்கும் அளவிற்கு உள்ளது. 

தொடர்ச்சியாக காணாமல் போகும் சிலர், சில மரணங்கள், அதில் காணாமல் போகும் ஒரு தலை, இவற்றை விசாரிக்கும் அதிகாரி, அவரின் நிறைமாத கர்ப்பிணி மனைவி, ஒரு அப்பாவி, சில கள்ளத்தொடர்புகள் என்று விரியும் கதை. திரில்லர் வகை. 

ஒரு சின்ன குடும்ப கதை:


ஒரு இணைய தொடர் என்றால், இப்படித்தான் இருக்க வேண்டும், அதாவது கெட்ட வார்த்தைகள், முத்தம், அரை நிர்வாணம் என்று எல்லாமோ, அல்லது ஏதாவது ஒன்றோ இருக்க வேண்டும் என்று. ஆனால், நெடுந்தொடர் போலவும் இல்லாமல், இணைய தொடர் போலவும் இல்லாமல் முழுக்க முழுக்க நகைச்சுவையான தொடர். கண்டிப்பாக குடும்பத்துடன் அமர்ந்து, ரசித்து பார்க்கலாம். 

ஒரு குடும்ப தலைவர் திடீரென இறந்து விட, அவர் 25 லட்சம் கடன் வாங்கியதாக வங்கியில் இருந்து வர, அதை என்ன செய்தார் என்று தெரியாமல் அம்மாவும், படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கும் மகனும் மண்டை காய, அதைத் தொடர்ந்து நடக்கும் கூத்துதான் கதை.

இரை (ஆஹா):


நம்ம சரத் நடித்தது. 1990களுக்கும், தற்போதைக்கு மாறி மாறி நடக்கும் கதை. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை பற்றிய கதை. அவ்வளவு மோசமில்லை, என்றாலும் கண்டிப்பாக குடும்பத்துடன் பார்க்க முடியாது. 

The Familyman I & II (Prime):


ஒரு உளவுத்துறை அதிகாரியாக உள்ள, குடும்பத்தின் கஷ்டங்களையும், வேலையின் கொடுமையையும் அனுபவிக்கும் மனிதனின் கதை. கதையில் பல சர்ச்சைகள் இருந்தாலும், அதில் வரும் ஒரு வசனம் எனக்கு மிகவும் பிடித்தது. "பிரதமரோடு நமக்கு கொள்கையில் மாறுபாடு இருக்கலாம், ஆனால், நம்முடைய கடமை பிரதமரைக் காப்பது மட்டும்தான்". இதே வசனத்தை என்னால், என்னுடைய அலுவலுக்கும் பொருத்திக்கொள்ள முடிந்தது. 

இவை தவிர, உலகமே அறிந்த மணி ஹெய்ஸ்ட், Squid Game, தற்போது வந்துள்ள All of us are Dead பற்றி எல்லாம் இப்போது கூறி, உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

இவை தவிர, நேரடியாக OTTயில் வந்த படங்களில் டாணாக்காரன் மட்டுமே தேறியது. மாறன், அன்பறிவு, Clap எல்லாம் தயவு செய்து நேரமிருந்தால் கூட பார்க்க வேண்டாம். 

இப்போது ஓரளவிற்கு நிலைமை சரியாகி விட்டதால், RRR மற்றும் Beast திரையரங்கம் சென்றே பார்த்தோம். RRR 3D யில் பார்க்க நன்றாகவே இருந்தது. Beast மகளுக்காக. இரண்டுமே சாதாரண தெலுங்கு பட உணர்வையே கொடுத்தன. ஆனாலும் மக்களை கண்டிப்பாக திரையரங்கம் கூட்டி வந்ததில் முக்கிய பங்கு இவை இரண்டிற்கும் உண்டு. பார்ப்போம். 

Saturday, December 25, 2021

OTT விமர்சனங்கள்:..!

எப்போதும் திரையரங்கம் சென்று படம் பார்த்து விமர்சனம் எழுதுவேன். ஆனால், இப்போது எல்லாமே OTTதான். முதலில் இருந்தே Amazon Prime வைத்துளேன். அது 499/- இருந்த காலத்திலேயே பார்க்க ஆரம்பித்தேன். நடுவில் கொஞ்ச நாள் விட்டு விட்டேன். பிறகு Airtel மூலமாக Disney ஹாட்ஸ்டார். இன்னும் 3 நண்பர்களுடன் சேர்ந்து Netflixம் வாங்கி விட்டேன். கடையாக Times Prime மூலமாக SonyLIV, Zee இரண்டும் வந்து விட்டது. இவையே போதும், போதும் என்னும் அளவிற்கு படங்கள் வருகின்றன. இந்த முறை வித்தியாசமாக, OTT தளங்கள் பற்றி பார்ப்போம். 

Netflix : 

Netflix தமிழுக்கு எவனோ ஒருவன் பில்லி சூன்யம் வைத்து விட்டான் என்று நினைக்கிறேன். மண்டேலா படம் தவிர வேறு எதுவும் தமிழில் உருப்படியாக அதில் வரவில்லை. அதிலும் 'ஜகமே தந்திரம்', தயாரிப்பாளரின் தந்திரமா, அல்லது தனுஷின் தந்திரமா என்று தெரியவில்லை. திரையரங்குகளில் வெளியாகி இருந்தால், அதோகதிதான். இப்போது இதே நிலைதான் பொன்னியின் செல்வனுக்கு நிகழப் போகிறது. 

ஒரு வேளை நவரசா வெளி வராமல் இருந்திருந்தால் கூட, அந்த படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்திருக்கும். இப்போதோ. அதை சுக்கு நூறாக உடைத்து விட்டனர். அனைத்து ரசங்களிலும் துருத்திக்கொண்டு தெரியும் முந்திரி. பாதாம் பருப்புகள் போல நடிகர்கள். கதைக்குள் நாம் நுழைவதற்குள் படம் முடிவது போல தோன்றுகிறது. ஆனால், 10 நிமிட குறும்படங்களிலேயே, நம்மை பாதிக்கும் அளவிற்கு நிறைய படங்கள் உள்ளன. ஏன், கார்த்திக் சுப்பாராஜின் ஆரம்ப கால குறும்படங்கள் அட்டகாசமாக இருக்கும். ஆனால் இப்போதோ? 

போன பதிவில்தான் 'படத்தை எல்லாம் பாத்துட்டு தானே ரிலீஸ் பண்ணுவீங்க' என்று கேட்டேன். இதில், ஒரு படத்தை மீதி 8 இயக்குநர்களோ அல்லது தயாரிப்பாளரோ கூடவா பார்க்கவில்லை. அவளது பார்த்து விட்டு 'அப்பாடா, நம்மளை விட மோசமாத்தான் எடுத்திருக்கான்' என்று உள்ளூர மகிழ்ந்தார்களோ என்னமோ. 'நவரசம்' என்பதற்கு பதில் 'நவ விஷம்' என்று வைத்திருக்கலாம். 

அதன் பிறகும் வந்த தமிழ்ப்படங்கள் எல்லாமே மரண மொக்கை. துக்ளக் தர்பார், முகிழ், லாபம் என்று விஜய் சேதுபதியும் சேர்ந்து சதி செய்கிறார் போல. கடைசியாக 'அண்ணாத்தே' வேறு, முடியல. டாக்டர் மட்டும் பரவாயில்லை. 

Amazon Prime:

Netflix அளவிற்கு மோசமில்லை என்றாலும், இதிலும் மொக்கை திரைப்படங்கள்தான். கோடியில் ஒருவன், Friendship, தலைவி, சிண்ட்ரெல்லா என தமிழ் கொஞ்சம் மோசம்தான். ஜெய் பீம் மட்டும்தான் உருப்படியான படம். வரும் காலங்களில் பார்ப்போம். 

Diesney + Hotstar:

இதில் ஓரளவு பரவாயில்லை. நிறைய தெலுங்கு டப்பிங் படங்கள், 'ஓ மணப்பெண்ணே' போல சில குடும்ப படங்கள் உள்ளன. இருந்தாலும் இதிலும் நெற்றிக்கண், எம் ஜி ஆர் மகன், சிவகுமாரின் சபதம் என்று பல மொக்கைகளும், சுல்தான், லிப்ட் என்று ஒரு முறை பார்க்கும் திரைப்படங்களும் உள்ளன. 

Zee5:

இதுவும் ஓரளவு பரவாயில்லை. இதுவும் ஓரளவு பரவாயில்லை. பல நல்ல படங்களும் உள்ளன. வினோதய சித்தம், அரண்மனை 3, டிக்கிலோனா என்று ஒரு முறை ரசிக்கக்கூடிய பல படங்கள் உள்ளன. 

SonyLIV:

இதுவும் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது. தற்போது மாநாடு, இதற்கு முன் திட்டம் இரண்டு, வாழ் போன்ற படங்கள். ஆனால், மற்ற தளங்களோடு ஒப்பிடும்போது தமிழில், மிக மிக குறைவான படங்களே உள்ளன.  

SunNXT:

முன்னொரு காலத்தில் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். இப்போது அதிலுள்ள படங்கள் அனைத்தும் மற்ற தளங்களில் உள்ளதால் பயன்படுத்துவதில்லை. 

சரி. இப்போது மொத்தத்தில் எது பரவாயில்லை என்று பார்ப்போம். நீங்கள் நிறைய சீரியல் பார்ப்பீர்கள், வீட்டிலும் குழந்தைகள் உள்ளனர் என்றால் உங்களுக்கு Disney பரவாயில்லை. எனக்கு நெடுந்தொடர் முக்கியம் இல்லை, படங்களும் முக்கியம், குழந்தைகளும் உள்ளனர் என்றால், Amazon Primeக்கு போகலாம். 

எனக்கு இன்னும் ஆங்கிலத் தொடர்களும் வேண்டும் என்றால் Netflix போகலாம். இப்போது எல்லா OTT தளங்களும் விலையை ஏற்றி விட்டனர், ஆனால், Netflix மட்டும் குறைத்துள்ளது. அப்படி பார்த்தாலும், அதுதான் இப்போதைக்கு அதிகம். இவை அனைத்தும் அலசி ஆராய இங்கே செல்லவும். மற்றபடி, அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.  

Sunday, July 4, 2021

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

அனைவருக்கும் வணக்கம். இப்போதெல்லாம், பதிவுகள் Orkut போல கடந்த காலம் ஆகி விட்டது. Spaces, Clubhouse என அடுத்தடுத்து மக்கள் சென்று கொண்டே உள்ளனர். நம்மைப்போல், (சரி சரி) என்னைப்போல வயதானவர்கள்தான் "என்ன இருந்தாலும் அந்த காலம் போல வருமா" என்று புலம்பிக்கொண்டு இருக்கிறோம். சரி. நமக்கு என்ன வருகிறதோ, அதையே செய்வோம். போகிறவரை போகட்டும். 

குறு விமரிசனங்கள்:

'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தில் ஒரு காட்சி வரும். "படத்தை எடுத்து முடிச்ச அப்புறம், போட்டு பாத்துட்டு ரிலீஸ் பண்ணுவீங்களா, இல்ல அப்படியே பண்ணுவீங்களா?" என்று ஒரு திரைக்கதை விவாதம் நடக்கும் இடத்தில கூட்டி பெருக்கும் பெண் கேட்பார். "எல்லோரும் பாத்துதான், தேவைன்னா மாத்திதான் ரிலீஸ் பண்ணுவோம்" என்பார்கள். "அப்புறம் ஏன் இவ்வளவு கேவலமான படங்கள் வருது" என்பார். எனக்கும் இதே போல சந்தேகம் நிறைய படங்களுக்கு வந்துள்ளது.

'மமகிகி' என்றொரு zee5 படம். ஏதோ கல்லூரி கதை என்று பார்த்தால், கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாமல், காட்சிகளாக எடுத்து வைத்து கடுப்பேற்றி விட்டனர். அதன் பின் அதே போல யோசிக்க வைத்த திரைப்படம்தான் 'ஈஸ்வரன்'. அதே போல 'ஜகமே தந்திரம்'. எப்பா டேய் முடியலடா சாமி. தயவு செய்து கலாய்ப்பதற்கு கூட இந்த படங்களைப் பார்க்க வேண்டாம். மற்றபடி, அவ்வளவாக படங்கள் பார்ப்பதற்கும் நேரம் இருப்பதில்லை.

Work from Home: 

முதல் 6 மாதங்கள் கொஞ்சம் நன்றாக இருந்தது. அதன் பிறகு என்னவோ எப்போது பார்த்தாலும் வேலையே செய்து கொண்டிருப்பது போலவே தோன்றுகிறது. ஊரில்தான் இருக்கிறோம். நடுவில் ஒரு சில வீட்டு வேலைகளையும் செய்து வெளியே போய் வந்தாலும், ஒரு தனிமையோ, சுதந்திரமோ அல்லது 'அப்பாடா' என்கிற இடைவேளையோ கிடைப்பதில்லை. 

மகளுக்கும் online வகுப்புகள். இரண்டு நாட்களுக்கு பிறகு அவளுக்கும் பிடிக்கவில்லை. ஒரு மாறுதலுக்காக சென்னை சென்று இருக்கலாம் என யோசிக்கிறோம். பார்ப்போம். ஊருக்கு வந்ததில் நடந்த நன்மை என்னவென்றால், மகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்ததுதான். கொஞ்ச நாள் சிலம்பமும் கூட. 

அரசியல்: 

எங்களது அடுக்கு மாடி குடியிருப்பில், யாருமே பொறுப்பிற்கு வர விரும்ப மாட்டார்கள். ஆனால், அது நொள்ளை, இது நொட்டை, இப்படி செய்யலாமே இதை ஏன் செய்கிறீர்கள் என்றெல்லாம் கேட்பார்கள். ஒரு சில விதிமுறைகள் உள்ளன என்றாலும் கேட்க மாட்டார்கள். அதை மீறி ஒரு வேளை பொறுப்பிற்கு வந்தாலும், அதைப்பற்றி பேச மாட்டார்கள். 

அதே நிலைமைதான் இப்போது திமுகவிற்கும். பாஜகவோ அதைப்பற்றி கவலைப்படவேயில்லை. மக்களையே திசை திருப்பக்குவதற்காக, உண்மை நிலை தெரிந்தாலும், அதைப்பற்றி சொல்லாமல், மக்களை குழப்புவது. பிரச்சினையை மட்டுமே முன்னெடுப்பது. பாதிக்கப்பட்டது என்னவோ நாம்தான். 

கொரோனா தடுப்பூசி: 

45+ வயதிற்கு போட்டபோதெல்லாம் எல்லோரும் தெறித்து ஓடினார்கள். ஆனால், இப்போது எல்லோரும் எனக்கு வேண்டும், உனக்கு வேண்டும் என்று போட்டி போட, ஊசி கிடைப்பதே கஷ்டமாக உள்ளது. அல்லது தினமும் 3 அல்லது 4 மணி நேரம் நின்று ஊசி போட வேண்டி உள்ளது. இங்கு தனியார் மருத்துவமனைகளிலும் கிடைப்பதில்லை. எனவே இன்னும் ஊசி போடவில்லை. குறைந்தது ஒரு ஊசி போட்டு விட்டு, சென்னை போகலாம் என்று யோசிக்கிறோம். அங்கேயும் வீட்டிற்குள்தான் இருக்க வேண்டும். இருந்தாலும், பார்ப்போமே. 

முதலாவது அலையில் சற்றே தப்பித்தோம் பிழைத்தோம் என்றாகி விட்டது. இரண்டாவது அலையில், நிறைய தெரிந்த ஆட்கள் எல்லோரையும் வாரி சுருட்டி சென்று விட்டது. விளையாட்டாக எடுத்துக்கொள்ளாதீர்கள். 

Sunday, April 25, 2021

அரசியல் விளையாட்டு!

தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே அரசியல் பதிவு ஒன்று போட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், மடிக்கணினியில் சில பல பிரச்சினைகள், ஊரில் வேறு அலைபேசியின் இணையம் மிகவும் மெதுவாக இருந்ததால், அலுவலக வேலைக்கே நேரம் சரியாக இருந்தது. அது சரி, நாம சொன்ன மாதிரியா எல்லோரும் ஓட்டு போட போறாங்க? 


அப்போது இருந்த கட்சிகளும் மாறவில்லை, ஆனால், அப்போது இருந்த இரு பெரும் ஆளுமைகள் இப்போது இல்லை. ஆளுமை என்றே யாரும் இல்லை இப்போது. எனவே கருத்துக்கள் கொஞ்சம் மாறி உள்ளன. . 

திமுக: 

2006-11ல் ஆடிய ஆட்டத்தினால், 2011ல் அடி விழுந்தது. 2014ல் அது படு தோல்விக்கு வழி வகுத்தது. ஆனால், அப்போது இருந்த அதிமுகவும், தேமுதிகவும், பாமகவும் அதை சரியான முறையில் பயன்படுத்தி இருந்தால், 2016ல் திமுக என்ற கட்சியே இல்லாமல் போயிருக்கலாம். ஆனால், ஆட்சியைப் பிடிக்கும் போல என்ற அளவிற்கு வந்த திமுக, 2019ல் 38 பாராளுமன்ற தொகுதிகளைக் கைப்பற்றி உள்ளது, அதுவும் கருணாநிதி இல்லாமல். இப்போது பாஜாகவிற்கு தாங்களே மாற்று என்ற பலம் அவர்களின் உள்ளது. அதனாலேயே அவர்கள் வெற்றி பெரும் வாய்ப்பு அதிகம் என்பது என் கணிப்பு. 

அதிமுக: 

ஜெயலலிதா மறைவு, பன்னீரின் தர்ம யுத்தத்திற்கு பின் எடப்பாடி ஆட்சிக்கு வந்தவுடன், இன்னும் எத்தனை நாளோ என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், எல்லா எண்ணங்களையும் தவிடு பொடியாக்கி 4 வருடங்களை கடந்து விட்டார். 2019ல், முடிந்த அளவு சம்பாதித்து விட்டு ஓடி விடலாம் என்ற எண்ணத்தில்தான் இருந்திருப்பார்கள் போல. ஆனால், அப்போது நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி நம்பிக்கையை கூட்டி, இப்போது தைரியமாக, எப்படியும் 40+ வாங்கி எதிர்க்கட்சியாகி விடுவார்கள் போல. 

ஆனால், அடுத்த தேர்தல் வரை இந்த கட்சி இருக்குமா, அப்படி இருந்தாலும் இதே போல கூட்டணிக்கும் தலைமை தாங்கும் அளவிற்கு இருக்குமா என்பது சந்தேகம்தான். ஆட்சியில் இருக்கும்போதே பயப்படுவார்கள். அடுத்த முறை, பாண்டிச்சேரி போல ஒரு 20 இடங்கள் வாங்கிக்கொண்டு யாருக்காவது ஆதரவு அளிப்பார்கள் என நினைக்கிறேன். அது திமுகவிற்காக கூட இருக்கலாம். கட்சி உடையலாம், அல்லது உடைக்கப்பட்டு சாதி கட்சியாக கூட மாற வாய்ப்பு உள்ளது.

இந்த கட்சிகள், இந்த தேர்தலில் எல்லாம் நாங்களும் இருக்கிறோம் என்று காண்பித்தால் மட்டும் போதும். அடுத்த 5 வருடங்களில் ஸ்டாலின் தான் ஒரு நல்ல தலைவர் என்று நிரூபிக்க வேண்டும். எடப்பாடி தான் ஒரு நல்ல எதிர்க்கட்சி தலைவர் என்று காட்ட வேண்டும். மிரட்டலுக்கு பதுங்கலாம் ஆனால், அடி பணிய மாட்டோம். எங்களுக்கு மாற்று நாங்களே என்று நிரூபிக்க வேண்டும். 

அதை விட்டு விட்டு உதயநிதியை முன்னிறுத்துவது, முடிந்தவரை சம்பாதிக்கலாம் என்று நினைத்தால், பொன் முட்டையிட்ட கோழி கதைதான். பல நல்ல ஆளுமைகள் இரு கட்சிகளிலும் இருக்கிறார்கள். அவர்களை அடுத்து முன் நிறுத்தினால் மட்டுமே உருப்படும் 

பாமக: 

'எங்களுக்கும் குடும்பம், குழந்தை இருக்குல்ல, பசிக்கும்ல' என்று அடக்கி வாசிக்கிறார்கள். நமக்குன்னு அடிமைங்க இருக்காங்க. அவங்கள வச்சி அப்பப்ப காசு பார்த்துக்கலாம் என்று எண்ணுவார்கள் போல. சாதி இருக்கும் வரை, அவர்களுக்கு கவலை இல்லை. 

மக்கள் நீதி மையம்: 

எனக்கு கமலின் நடிப்பு மிகவும் பிடிக்கும். அதற்காக அரசியலிலும் நடித்தால் எப்படி. முன்பொரு காலத்தில் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு, ஏன் என்று கேட்டார். மக்களுக்கு நல்லது செய்ய என்றார்கள். நான் இப்போதே நல்லது செய்து கொண்டுதான் இருக்கிறேன். நல்லது செய்ய அரசியலுக்கு வர வேண்டும் என்று தேவையில்லை என்றெல்லாம் கதை விட்டார்.

இப்போதோ நடிச்சா ஹீரோதான் எனப்து போல, ஜெயிச்சா CMதான் என்கிறார். இட ஒதுக்கீடு பற்றி கேட்டால் பதுங்குகிறார், 100 நாள் வேலை திட்டம் மக்களை சோம்பேறி ஆக்குகிறது என்கிறார். திட்டத்தின் குறைகளை களைவது பற்றி பேச மாட்டேன் என்கிறார். கோவை தெற்கு தொகுதிக்கு என் செய்கிறார் என்று பார்ப்போம்.  

மதிமுக, விசி: 

ஒட்டுண்ணி போல பழகி விட்டார்கள். திருமாவின் தொலை நோக்கு பார்வை மீது நம்பிக்கை உள்ளது. ஆனாலும் சாதிக்கட்சி, மற்ற சாதிகளின் மீதான பார்வை மட்டுமே பிரச்சினை. நல்ல ஆளுமையாக வளர்வது தமிழகத்திற்கு நல்லது. வைகோ, என்ன சொல்ல. அவ்வளவுதான். 

நாம் தமிழர் பற்றி எல்லாம் கூற ஒன்றுமில்லை. 

பாஜக: 

கண்டிப்பாக இவர்களது குறிக்கோள் 2031 அல்லது 2036ல், கண்டிப்பாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதுதான். நீ முன்னாடி போட்ட பதிவுல எல்லாம், இந்த திமுக, அதிமுக எல்லாம் நெறைய கொள்ளை அடிச்சுது, அது எல்லாத்தையும் ஒழிக்கணும்னு சொன்ன. அப்ப அதுக்கு சரியானது பாஜக தானே என்று கேட்பது புரிகிறது. 

நிறைய தமிழ்ப்படங்களில் நாயகன் சிறு சிறு திருட்டுகள் செய்வார், மக்களுக்கு கோபம் இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. திடீரென ஒரு பெரிய வில்லன் வருவான். அவனால் எல்லாமே அழியும் என்று தெரிந்தவுடன் அவனை எதிர்த்து நாயகியுடன் இணைவார்கள். அதேதான் இங்கேயும். இப்போது கூட இரு திராவிட கட்சிகளும் ஓட்டிற்கு பணம் கொடுத்துள்ளனர். எனவே கண்டிப்பாக திருடுவார்கள். 

ஆனால் பாஜக விஷம். வட இந்தியாவில் பார்த்தீர்கள் என்றால், இவர்கள் எதிரிகளை அழிக்கிறார்கள். அதாவது ஒரு ஆள் மட்டும் ஓடி ஜெயிப்பது போல. அது மிகவும் ஆபத்தானது. நம்மூரில் இரண்டு கட்சிகள் இருந்ததாலேயே நம்மால் இவ்வளவு முன்னேற முடிந்தது.  

அடுத்து ஒரு தலைவர் தன்னை நிரூபிக்கும் வரை நமக்கு வேறு வழி இல்லை. காத்திருப்போம். 

Monday, December 28, 2020

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்!

குளிக்கும்போது நெறைய எழுதணும்னு தோணுது, ஆனா எழுதணும்னு ஒக்காந்தா, அந்த எழுத்துதான், வார்த்தை வர மாட்டேங்குது. "குளித்து முடிக்கையில் பதிவு கொட்டுது, அதை அடிக்க நினைக்கையில் மனைவி திட்டுது" (அதே இசையில் பாடிக் கொள்ளவும்). 

ஒரு வேளை, அவர்கள் ஊரிலும், நான் இங்கேயும் மாட்டி இருந்தால், நிலைமை வேறு மாதிரி ஆகி இருக்கும். பதிவுகளாக போட்டு தள்ளி இருப்பேன். ஆனால் நடந்ததே வேறு. 'சாதா குமார்' இப்போது 'கொரோனா குமார்' ஆகி விட்டதாலும், வேலையும், வீட்டு வேலையாக, மன்னிக்கவும் வீட்டிலிருந்து வேலை என்று மாறிவிட்டதாலும், ஊருக்கே வந்து விட்டோம். 

இதுவும் ஒரு வகையில் நன்றாகவே இருக்கிறது. ஊரில் சரியாக சிக்னல் வேறு கிடைக்கவில்லை. இருந்தாலும் அப்படி இப்படி என்று சமாளித்து 3 மாதங்களும் ஓடி விட்டது. இதோ தீபாவளி முடிந்து, சொந்தக்காரன் கல்யாணம் முடிந்து, கார்த்திகை தீபம் முடிந்து, இப்போது பொங்கல் முடிந்து என்று போய்க் கொண்டிருக்கிறது. அதன் பிறகு தைப்பூசம், பங்குனி உத்திரம், சித்திரை 1 என்று போகப்போகிறதோ என்னவோ. பார்ப்போம். 

சென்னையில் இருந்தவரை முகப்புத்தகத்திலேயே மூழ்கி இருப்பேன். அதுவும் மருத்துவமனையில் இருந்த சமயத்தில் எல்லாம் மிக அதிகம். சாதாரணமாக யோசித்தால் கூட சங்கி, ஆன்டி இந்தியன், கிருப கிருப என்றுதான் தோன்றும். சில பதிவுகளைப் பார்த்தால் எரிச்சல் வரும். உடனே எதிர் வினையாற்ற தோன்றும். பல நண்பர்கள் எதிரிகள் போல தோன்ற ஆரம்பித்து விட்டார்கள். நிறைய நண்பர்கள் இருப்பதால் நீக்கவும் மனம் வரவில்லை. 

முதலில் அலைபேசியில் இருந்து செயலியை நீக்கினேன். பின் உலவியில் சென்று கடவுச்சொல்லை மாற்றி விட்டேன். 10 நாள் பல்லைக் கடித்துக் கொண்டு ஓட்டி விட்டேன். பின் தோன்றும் போதெல்லாம் உல் நுழைய நினைத்தால், கடவுச்சொல் மறந்து விட்டேன் என்று போவேன், பிறகு வேண்டாம் என்று விடுவேன். இப்போதெல்லாம் தோன்றுவதே இல்லை. தேவைப்பட்டால் செய்திகள் மட்டும் படிப்பேன். 

விமர்சனம்: 

இங்கு வந்தபிறகு படம் பார்ப்பதையே நிறுத்தி விட்டாயிற்று. தினமும் நெடுந்தொடர்தான். ஓடவும் முடியவில்லை, ஒளியவும் முடியவில்லை. (நல்லவேளையாக இங்கு யாரும் அதை பார்ப்பதில்லை). முன்பு ஒரு காலத்தில் சன் டிவி பார்க்காமல் இருந்ததே கிடையாது. ஆனால், இப்போது சன் டிவி பார்த்தே பல வருடங்கள் ஓடி விட்டன. இங்கோ சன், விஜய், ஜீ தமிழ் என்று எதை எடுத்தாலும், அடுத்தவனை எப்படி அழிப்பது என்ற நாடகம்தான்.


"அதுல பாருங்க. எம் பொண்டாட்டி இருக்காளே, அவ கிட்ட இந்த மாதிரி நாடகம் எல்லாம் பாக்காதடி அப்டின்னா,படத்திலயும் அப்டித்தான் இருக்குன்னு சொல்றா. அடியேய். படம் 3 மணி நேரத்துல முடிஞ்சுறும், ஆனா, இந்த கருமத்துல தெனம் தெனம் நீங்க அடுத்து என்னவாகும்னு நீங்க பாக்கணும்னு உங்கள உசுப்பேத்துறாங்க அப்டினா, நம்பவே மாட்டேங்குறா. அதிலயும் இந்த வயசான பெருசுங்க தொல்லையத்தான் தாங்க முடியல. கண்ணு, கொஞ்ச நேரம் வைப்பா. அந்த கடன்காரிக்கு என்னதான் ஆச்சுன்னு பாக்கணும். அந்தப்புள்ளய பாவம் இவ்வளவு கொடுமைப்படுத்தறாங்க" என்றெல்லாம் புலம்பல். 

இதில் இன்னும் கொடுமை என்னவென்றால், நமக்கு பிடித்த பாடல்களை எல்லாம் கொலை செய்கிறார்கள். படங்களில் இருந்து பின்னணி இசையை அப்படியே அடித்து விடுவது, அட அது கூட பரவாயில்லை. இப்போதெல்லாம், காட்சிகளை எல்லாம் கூட சுடுகிறார்கள். முன்பே அப்படித்தானே என்பவர்களுக்கு, அப்போது கூட நிறைய பேருக்கு தெரியாது. இப்போது எல்லாம் ஒரு சந்தேகம் வந்தால், இரண்டு நிமிடங்களில் அது என்ன, எங்கே வந்தது என்று தெரிந்து விடும். இருந்து எப்படி இப்படி செய்கிறார்கள். ஏன் யாருமே கண்டு கொள்வதில்லை என்றும் தெரியவில்லை. இதில் தலைப்பு வேறு. சரி அந்தக் கொடுமையை விடுங்க.

அந்தகாரம்: கொஞ்சம் இழுவையாக இருந்தாலும் ஒரு நல்ல பேய்ப் படம். யாவரும் நலம், டிமாண்டி காலனி போல தேவையில்லாமல் எல்லாம் பயமுறுத்தாமல், அதே போல கேவலமாக பேய் என்று யாரையும் காண்பிக்காமல், ஆனாலும் ஒரு வித பயமுறுத்தலுடனே சென்றது.


சூரரைப் போற்று: பரவாயில்லை. உண்மையில் சுய சரிதை படம் என்பதால் மொக்கையாகத்தான் இருக்கும் என நினைத்தேன். ஆனால், அதற்கு மாறாக நன்றாகவே இருந்தது. என்னடா தோத்துக்கிட்டே இருக்கானே என்று கொஞ்சம் கடுப்படித்தாலும் பரவாயில்லை ரகம்.


புத்தம் புது காலை & பாவக்கதைகள்:
நீ மட்டும்தான் மொக்கை பண்ணுவியா, நானும்தாண்டா என்று அமேசானும், நெட்பிளிக்ஸ்ம் சேர்ந்து பாடு படுத்திய படங்கள். ஊரில், செல்பேசியில் அளந்து அளந்து டேட்டாவை சேர்த்து படத்தை தரவிறக்கினால், இப்படி செய்தால் அப்புறம் கடுப்பாகுமா ஆகாதா. 

மற்றபடி லாக்கப், மூக்குத்தி அம்மன், க/பெ ரணசிங்கம் எல்லாம் ஒரு முறை பார்க்கலாம். 

எப்படியோ 2020 முடிந்து விட்டது. 2021 நல்லபடியாக இருக்கும் என்று எண்ணுவோம். கண்டிப்பாக அடுத்த வருடம் மாதமொரு பதிவு என்று மீண்டும் சபதம்..அய்யய்யோ விட்ருங்க.