Saturday, July 4, 2009

வாசிப்பனுபவம் (கல்லூரி)

ஒரு வழியாக, ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்நிலைக்கல்வி, மேல்நிலைக்கல்வி, பொதுத்தேர்வு, நுழைவுத்தேர்வு எல்லாவற்றையும் முடித்து விட்டு ஒரு வழியாக கல்லூரியில் சேர்ந்து விட்டேன். சென்னை என்னை வாடா வெண்ணை என்றது. முதன் முதலில் வீட்டைப் பிரிந்து விடுதியில். சுற்றிலும் நண்பர்கள் மட்டுமே. உலகத்திலேயே நாந்தான் நிறைய படிப்பேன் என்ற தலைக்கணத்திற்கு சம்மட்டியால் அடித்து போல, ஒவ்வொருவரும் தலையணை அளவில் புத்தகங்கள் வைத்திருந்தனர். சரிதான் என்று நினைத்தேன்.

கல்லூரியில்தான் மீண்டும் சுஜாதா (மச்சி, அது ஆம்பளைடா). பல கதைகள் புரியவேயில்லை. சென்னையில் உள்ள அத்தை வீட்டிற்கு அடிக்கடி போவேன். (சத்தியமாக அங்கு பெண்ணில்லை) அவர்களோ பயங்கரமாக படிப்பவர்கள். அங்குதான் கல்கி, சாவி, தேவன், சாண்டில்யன் போன்றோரின் புதினங்களைப் படித்தேன். ஊரில் நூலகத்தில் அவை இருந்தாலும், அவற்றை தேடும் அளவிற்கு ஞானம் வளரவில்லை.

சென்னையில் நடக்கும் புத்தக கண்காட்சிக்கு போவோம். (அப்போது நடந்தது காயிதே மில்லத் கல்லூரியில்.. கேர்ள்ஸ் காலேஜுடா.. ஏதாவது பிகர் இருக்குண்டா). ஆனாலும் எதுவும் வாங்குவதில்லை. வேலைக்கு போன பின் என்னென்ன வாங்க வேண்டுமென்று மட்டும் பார்ப்போம்.

ஒரு கால கட்டத்தில், ஆங்கில நாவல் ஒன்று விடுதி வட்டாரத்தில் சக்கை போடு போட்டது. The DaVinci Code. எல்லோரும் அதைப் படித்துவிட்டு, Last Supper Painting பாத்தியா என்றெல்லாம் கேட்க, என்னடா இது அரவிந்துக்கு வந்த சோதனை என்று, இ-புத்தகத்தை எடுத்து, அகராதிக்கென்று, இ-அகராதியையும் திறந்து படித்தேன், படித்தேன், படித்தேன். கிட்டத்தட்ட மூன்று வாரத்திற்கு மேல் ஆனது அதை முடிக்க. சற்றே பெருமையாகவும் இருந்தது. இனி நாளைய வரலாறு என் பேர் சொல்லும் என்ற பெருமை வேறு. என்னடா DaVinci Code தான் படிச்சியா, Angels & Demons படிக்கலியா என்று மீண்டும் கேட்க, கடுப்பாகி, டான் பிரௌனின் மீதி மூன்று நாவல்களையும் வாங்கி படித்து விட்டேன். சும்மா சொல்லக்கூடாது. நன்றாகவே இருந்தது.

அதன் பின் கொஞ்சம் கொஞ்சம் ஆங்கில நாவல்கள் படிக்க ஆரம்பித்தேன். இருந்தாலும், அவ்வளவாக பிடிக்கவில்லை. எனவே, தமிழாக்கம் செய்யப்பட்டதை படித்தேன். அதைப் படித்த பின்புதான், ஆங்கிலத்தில் படிப்பதே நல்லது என்று உணர்ந்தேன்.

கல்லூரி முடித்து, வேலைக்கு போக ஆரம்பித்த பின், வருடா வருடம் புத்தக கண்காட்சிக்குப் போய், ஒவ்வொரு வருடமும் கண்காட்சிக்குப் போய் குறைந்தது இரண்டாயிரதுக்குக் குறையாமல் அள்ளிக்கொண்டு வருவோம்.

பொதுவாக, போகும்போது 'இந்த புத்தகத்தை கண்டிப்பாக வாங்க வேண்டும்' என்று ஓரிரு புத்தகங்களைத்தான் நினைத்துக்கொண்டு போவோம். ஆனால், அதைத் தவிர மற்றவற்றை அள்ளிக்கொண்டு வருவோம். வேலைக்குப் போக ஆரம்பித்தவுடன், நான் வாங்க நினைத்த முதல் புத்தகம், விகடன் நிறுவனத்தாரின் 'கோல்'. அது தொடராக வந்தபோதே, என் துறை சம்பந்தப்பட்டது என்பதால், விரும்பிப் படிப்பேன். ஆனால், 'வந்தார்கள் வென்றார்கள்', 'வாவ் 2000', 'கற்றதும் பெற்றதும்' போன்றவற்றைத்தான் முதலில் வாங்கினேன்.

என் அத்தை வீட்டிலேயே மிகப்பெரிய நூலகம் இருப்பதால், நான் சற்று வித்தியாசனமான புத்தகங்களையே வாங்குவேன். மேலே சொன்ன 'கோல்' போன்றவை. அதே போல தேவனின் கதைகளையும் நான்தான் வாங்கினேன். முதலில் வாங்கியது, வேறென்ன, 'துப்பறியும் சாம்பு' தான்.

இந்த வருடம் 'சுஜாதா வருடம்'. 'குமரிப் பதிப்பகம்' ஸ்டாலில், எதேச்சையாக பார்த்தோம். பழைய புத்தகங்கள் போல இருந்தன. என்ன என்று பார்த்தல், எல்லாமே சுஜாதாவின் கதைகள், ஆனால் பழைய பதிப்பு. எனவே, விலையும் குறைவு. விக்ரம் 23 ரூபாய். 24 ரூபாய் தீவு 26 ரூபாய். முன்னமே எண்பது ரூபாய்க்கு வாங்கிய 21ம் விளிம்பு, வெறும் 40 ரூபாய். எனவே, இருந்த புத்தகங்கள் எல்லாவற்றிலும் ஒன்றை எடுத்து விட்டோம். இது மட்டுமின்றி, 'மேலாண்மை பொன்னுசாமி' புத்தகங்களும் அதே போல இருந்தன. கிட்டத்தட்ட, 32 புத்தகங்கள், 1200 ரூபாய்க்கு எடுத்தோம். பில் போடவே அரை மணிக்கு மேல் ஆனது.

தற்போது என்னுடைய வாசிப்பனுபவம் தொடருவது 'குமுதம்', 'விகடனில்' தான். அவ்வப்போது பழைய புத்தகங்கள் எடுத்து வாசிப்பதோடு சரி. அதுவும் அலுவலக பயண நேரங்களில்தான். வீட்டில் நமக்கு இணையத்தில் மேயவே நேரம் சரியாக உள்ளது. நிறைய இ-புத்தகங்கள் இருந்தும் படிப்பதில்லை.
இருந்தாலும் நாங்க விட மாட்டோமுல்ல!!!

இதோட இந்த தொடர் முடியுது..

அடுத்து வருவது,

என்னான்னு எனக்கே தெரியாது. உங்கள மாதிரியே நானும் செருப்போட (சீச்சீ) வெறுப்போட (அடங்க) ஆவலோட காத்திருக்கேன்.

வாசிப்பனுபவம் (மேல்நிலைக்கல்வி)

ஒரு வழியாக, ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்நிலைக்கல்வி எல்லாம் முடித்துவிட்டு, நாமக்கல் டவுனில் மேல்நிலைக்கல்விக்காக சேர்ந்தேன். படித்து முடித்த சந்தோசத்தை விட, இனி புத்தகங்கள் வாங்குவதில் பிரச்சினை இருக்காது என்பதில்தான் பெரும் சந்தோஷம்.

நாமக்கல்லிலேயே புகழ் பெற்ற அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (தெற்கு) தான் நான் சேர்ந்தது. சன் தொலைக்காட்சியில் ஏழெட்டு வருடங்களுக்கு முன், "உங்கள் மாவட்டத்தில் சிறந்த பள்ளி எது?" என்று முதலில் நடத்திய கருத்துக்கணிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் முதலாவதாக வந்தது. தமிழ் நாட்டிலேயே கருத்துக்கணிப்பில் அப்போது வந்த ஒரே அரசு பள்ளியும் எங்களுடையதுதான் என நினைக்கிறேன். அப்படிப்பட்ட 'தலை சிறந்த பள்ளி'.

சர்வ சாதாரணமாக 'A'ராளாமாக, Aனைத்து வகையான புத்தகங்களும் உலவிய இடம். டியுஷன் கட்டாயம் என்பதால், வகுப்பில் பெரும்பாலும் சும்மாவே இருப்போம். வீட்டிலிருந்து ஒவ்வொருவரும் புத்தகம் கொண்டு வந்து, மாற்றி மாற்றி படிப்போம். பல முறை அரிசியும், சில முறை உமியும். ஊதி ஊதி சாப்பிட வேண்டியதுதான்.

பத்தாவது வரையில், மதிப்பெண்கள் ஈரிலக்கமும், தரவரிசை ஓரிலக்கமும் இருக்கும். இங்கோ நிலைமை தலைகீழ் ஆகி விட்டது. வீட்டிலோ, எருமை மாடு வாங்க பணம் சேர்க்க ஆரம்பித்து விட்டனர். எனவே, சற்றே பாடங்களையும் படிக்க ஆரம்பித்து விட்டேன். புதியதாக எதுவும் ஆரம்பிக்கவில்லை. கல்லூரியில் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். அது அடுத்த பதிவில்.