Friday, August 15, 2014

அஞ்சான் - நோஞ்சான்


நான் பதிவெழுத ஆரம்பித்த பின், இது முறை கூட முதல் நாள் முதல் ஷோ பார்த்ததில்லை. அதற்கு முன் நான் முதல் நாள் முதல் ஷோ பார்த்த எந்த எந்தப் படமும் ஓடியதில்லை (கண்ணுக்குள் நிலவு, ஷாக், பீமா, அருள் இன்னும் சில). அதை விட முக்கியம் எனக்கு பிடித்ததேயில்லை. (நிறைய ஓடாத படங்கள்தான் நமக்குப் பிடிக்குமே, அன்பே சிவம் போல)  ஆனால், தவிர்க்க இயலாத காரணங்களால்(?) இன்று முதல் நாள் முதல் ஷோ அஞ்சான் பார்த்து விட்டேன்.

இந்தப் படம் ஓடினால் "எப்படி ஓடியது?" என்றெல்லாம் கேள்வி தேவையில்லை. ஏழாம் அறிவு, வேலாயுதம், ஆரம்பம், ஜில்லா, வீரம் எல்லாம் எப்படி ஓடியதோ, அதே போல இதுவும் ஓடியிருக்கும் என்று நினைக்க வேண்டியதுதான். அஞ்சானும் அந்தப் பட்டியலில் சேர்ந்து விட்டது. இப்படியொரு படத்திற்கு என்னுடைய மாதமொரு பதிவு என்ற சபதத்தை உடைத்து, 75ஆவது பதிவையும் (விளம்பரம்) போடுவது மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும், மக்களின் நலன் கருதி வெளியிடுகிறேன். 

கதை என்று பார்த்தால், தன் சகோதரன் ராஜுவைத் தேடி மும்பை வருகிறார் கிருஷ்ணா எனும் சூர்யா. இங்கு வந்தால்தான் தெரிகிறது ராஜூ ஒரு பெரிய ரவுடி, அவனையும் அவனது உயிர் நண்பனையும் எதிரிகளும் துரோகிகளும் சேர்ந்து கொன்று விட்டனர் என்று. இவனையும் கொல்ல வேண்டும் என்று அந்த கும்பல் துரத்த, சில பல திருப்பங்களுடன் இனிதே படம் முடிகிறது.

இப்படி எல்லாம் சொல்ல வேண்டும் என்று ஆசைதான். ஆனால், 'டிவிஸ்ட்' என்று லிங்குசாமி எதெல்லாம் நினைக்கிறாரோ, அது எல்லாம் குழந்தை கூட சொல்லும். படம் பார்க்கும்போது, எனக்கு கேபிள் சங்கர் எழுதிய அலெக்ஸ் பாண்டியன் விமர்சனம்தான் நினைவுக்கு வந்தது.

லிங்கு சார், கே(G)ட்ட அடைக்கிறது எல்லாம் ஒரு படத்துல சரி. இன்னும் பத்து படத்துக்கு அதே சீன வக்கினும்னு நெனச்சா எப்படி. இப்பல்லாம் ரெண்டு வயசு கொழந்தையே, ஒரு தடவ பார்த்த பாட்ட, அடுத்த வாட்டி போட்டா மாத்த சொல்லுது (அனுபவம்). இது சூர்யாவுக்காக பண்ணுன மூணாவது கதையாம். மீதி இருந்த ரெண்டு கதைல ஒன்னத்தான் கார்த்தி அடுத்து நடிக்கப் போற படமாம். மூணாவது கதையே கேவலமா இருக்குன்னா, மீதி ரெண்டு இன்னும் எவ்ளோ கேவலமா இருக்கும்? ப்பா, முடியல.

படத்துல, கிருஷ்ணாகிட்ட ஒருத்தர் கதை சொல்லுவார் "இந்த எடத்துக்கு வர ராஜுவும், சந்துருவும் என்ன வெல கொடுத்தாங்க தெரியுமா?" என்பார். உடனே, பிளாஷ்பேக் வரும். சரி ஏதோ அழுத்தமான காட்சிகள் வரும் என்றால், ஐட்டம் சாங் வருகிறது. அது முடிந்தவுடன் மீண்டும் அதே காட்சி வருகிறது. என்ன எழவோ? இந்த கண்றாவி போதாதென்று காதல் வேறு.

"நிதானமா நின்னு யோசி, உனக்கானவன் உன் கண்ணுல படுவான்" என்று நாயகிக்கு நாயகனே சொல்லுவார் (பிச்சக்காரனுக்கு செக்யுரிட்டி பிச்சக்காரனே, இதுதான் எனக்கும் தோணியது). அப்படி நாயகி யோசிக்கும்போது, நாயகன் அந்தப் பக்கம் போய், துப்பாகியால் ஒருவனை சுடுவார். உடனே நாயகிக்கு காதல் வருகிறது. (இந்த வகையில் எனக்கு இயக்குனர் விஷ்ணுவர்தன் பரவாயில்லை. பில்லா படத்திலும் சரி, ஆரம்பம் படத்திலும் சரி, தேவையில்லாத காதல் காட்சிகள் நாயகன் அஜித்துக்கு இல்லை. அவரக்கு அஜித்தின் மேல் என்ன எரிச்சலோ) 

படத்தில் நகைச்சுவைக்கு குறையே இல்லை. சூரி இருப்பதால் சொல்லவில்லை. அது மொக்கை. நாயகன் ஒரு பெரிய தாதா. நாயகியைக் கடத்தி விட்டதாக போலிஸ் அவரை இரண்டு முறை துரத்துகிறது. நாயகி காதலில் விழுந்து, நாயகனுடன் சுற்றுபோது மீண்டும் நாயகியைக் காணாமல் காவல்துறை தேடுகிறது. அப்போது நாயகனுக்கு போன் பண்ணி "இந்த முறையும் அந்தப் பெண்ணைக் காணவில்லை, ஆனால் நாங்கள் உங்களை சந்தேகப்படவில்லை. இது பார் யுவர் இன்பார்மேசன்" என்பார்கள். உடனே நாயகன் "இல்ல அவ என்னோடத்தான் இருக்கா, நாங்க லவ் பண்றோம். திஸ் இஸ் பார் யுவர் இன்பார்மேசன்" என்பார். இந்த லட்சணத்தில் பெண்ணின் அப்பா, காவல் துறை உயர் அதிகாரி வேறு. இனிமே நான் ஆபிஸ்ல மெயில் அனுப்பும்போது எப்படி FYI போடுவேன்? கன்றாவிடா.

அதே போல உயிருக்கு பயந்து ஓடி ஒளிபவன், ஜாலியாக குதிரைப் பந்தயம் பார்த்துகொண்டிருப்பான். திருடும் ஏழை சிறுவன், ஆப்பிள் லாப்டாப்பை திறந்து உள்ளே உள்ள போட்டோவை பார்க்கிறான். ராஜு பாயை, ஊரில் உள்ள அனைவரும் பார்க்கும் இடங்களில்தான் சுற்றுகிறார், ஆனால் பாருங்கள் வில்லன்களுக்கு மட்டும் எங்கே என்று தெரிய மாட்டேன்கிறது.


படத்தில் பரட்டை தாடி மீசை எல்லாம் வைத்து பக்கி மாதிரி ஒரு பாத்திரம் உள்ளது. "ராஜூ பாய்" என்று கத்துமே, அதேதான். அது எதற்கு இந்தப் படத்தில் என்றே தெரியவில்லை. அதே போல போலிஸ். நீங்கள் இந்த ட்ரைலரில் பார்க்கும் அனைத்துக் காட்சிகளுமே, படத்தின் கதையோட்டத்தில் மொக்கையாகவே இருக்கும்.

படத்தில் நாயகியைக் கடத்துவார்கள். சரி ரொம்ப சீரியசான சீன் என்று பார்த்தால், "நீங்க என்ன கடத்தல, நானாத்தான் வந்தேன், அதனால, இது உங்க கணக்குல வராது" என்பார். அப்போதே உஷாராகி கிளம்பியிருக்க வேண்டும். படத்தில் சூர்யா வேறு அடிக்கடி "நீ சாவுரதையும் நாந்தான் முடிவு பண்ணனும்" என்பார். அது படம் பார்ப்பவர்களைக் குறிக்கும் போல.

இந்தப் படம் பார்க்கும்போது, உங்களுக்கு கண்டிப்பாக லிங்குசாமியின் எல்லா படங்களும் நினைவுக்கு வரும். காட்சிகள் அது போல உள்ளது. பீமா படத்தில், திடீரென ரகுவனைக் கடத்தி வைத்திருப்பார்கள் எப்படி என்றெல்லாம் தெரியாது. அதே போல இதிலும் வரும். ஆனால், கொஞ்சம் உஷாராக, எப்படி என்று இரு காட்சிகள் வைத்து விட்டார்கள். கடைசி சண்டையில் ஒரு மிகப்பெரிய டிவிஸ்ட் உள்ளது. ரொம்பவும் எதிர்பார்க்க வேண்டாம். அது ஏற்கனவே ஜனா என்ற மொக்கைப் படத்தில் வந்து விட்டது.

படத்தில் நல்லதே இல்லையா? இரண்டு பாடல்களும், சில இடங்களில் பின்னணி இசையும் பரவாயில்லை. ஒளிப்பதிவும் பரவாயில்லை. மற்றபடி சமந்தா வரும் பாடல்களில் ஏன் ஒரு பட்டனை மட்டும் போட்டிருந்தாரோ? ஒரு வேளை அதையும் கழட்டி விட்டிருந்தால் இன்னும், ம்ம்.

படத்தில் என்னைக் கவர்ந்த காட்சி, நாணயம் சுண்டி விட்டு விழுவதற்குள் அனைவரையும் வீழ்த்துவது. இது இரண்டு இடங்களில் இரு வேறு பாத்திரங்களுக்கு வரும். அது அவர்களின் நட்பின் புரிதலையும் காட்டும்.

படம் பார்க்கவே முடியாதா என்றால், என்னால் முடியவில்லை. உங்களுக்கு சூர்யா பிடிக்கும் என்றால் சரி (சமந்தாவென்றாலும் சரி). மற்றபடி, கொஞ்சம் கஷ்டம்தான்.

மாற்றான் - தோற்றான். அஞ்சான் - நோஞ்சான். சூர்யா, நீ வேற வேலை இருந்தா போய் பார்யா.

எனக்கென்னவோ சிவகுமார் குடும்பத்திற்கே யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டனர் என்று நினைக்கிறேன். எதற்கும் ஒரு பரிகாரம் செய்வது நல்லது. லிங்குசாமி சார், நீங்கள் படங்களை வெளியிடுவதோடு மற்றும் நிறுத்திக்கொள்ளலாம். முடியாது இப்படித்தான் என்று படம் எடுத்து எங்களைக் கொல்லலாம் என்று என்ன வேண்டாம். முடியல சார், சத்தியமா.

கடைசியாக ஒன்று. படத்தில், எல்லோரும் ராஜூ பாய், ராஜூ பாய் என்று கத்துவார்கள், பக்கத்தில் இருந்தவர் மெதுவாக சொன்னார் "ராஜூ பாய்தாங்க, ராஜி, ராஜாத்தில்லாம் தாங்க கேர்ள்".

அஞ்சான் பார்க்க தேவை, கொஞ்சம் அம்ருதாஞ்சன். அம்புட்டுதேன்.

"நீ என்ன பெரிய இவனா? முடிஞ்சா நீ ஒரு நல்ல படமா எடேன்" என்பவர்களின் கவனத்திற்கு மட்டும். நீங்கள் சரவணபவன் போய் சாப்பிடுகிறீர்கள். சாப்பாட்டில் ஏதோ ஒரு குறை. உடனே நீங்கள் உங்கள் முகப்புத்தகத்திலோ, கீச்சுகளிலோ இட்டு விடுகிறீர்கள். உடனே அந்த மேலாளர், "சார், சும்மா கொற சொல்லாதீங்க. நீங்க வேணும்னா வந்து இந்த ஹோட்டல நடத்திப் பாருங்க" என்றால் என்ன சொல்வீர்களோ அதே பதிலை எடுத்துக் கொள்ளலாம்.

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!!!

Thursday, August 7, 2014

வேலையில்லா பட்டதாரி ஜிகர்தண்டாவுடன் ஆடும் சதுரங்க வேட்டை

இந்த முறை, நிஜமாகவே சுட சுட விமர்சனம், இல்ல இல்ல என்னுடைய கருத்துக்கள்தான். தங்கமணி வேறு ஊரில் இல்லை. வந்த இரண்டு படங்களும் சரி, ஏற்கனவே வந்த இரண்டு படங்களும் சரி, எல்லாமே நன்றாக உள்ளது என்று சொல்லும் போது எப்படி பார்க்காமல் இருக்க முடியும்?

அது மட்டும் இல்லாமல் வேளச்சேரியில் இருப்பதால் உள்ள வசதி என்னவென்றால், நடந்து போய், பீனிக்ஸ் மாலில் படம் பார்க்கலாம். அப்படி இல்லையா, 'விடுறா S2க்கு' என போகலாம். அப்படியும் இல்லையா, 'துணையிருப்பாள் ராஜலக்ஷ்மி'.

ஜிகர்தண்டா:


ஞாயிறு மாலை ஆறு மணியளவில், திடீரென மின்சாரம் தடை, ஆனால், சம்சாரம் தடை இல்லை. வீட்டில் உட்கார்ந்து என்ன செய்ய? உடனே கிளம்பி ராஜலக்ஷ்மி வந்து "பாத்துட்டோம்ல, நாங்கள்லாம் யாரு?".

ஒரு இளம் இயக்குனர் ரவுடிகள் பற்றி படம் எடுக்க, மதுரைக்கு வந்து ஒரு ரவுடியை தொடர முயற்சிக்க, ஒரு கட்டத்தில் அவனிடம் மாட்டிக்கொள்ள, என் கதையில் நானே நடிக்கிறேன் என்று ரவுடி சொல்ல, அதன் பின் நடக்கும் சம்பவங்களே இந்த படம்.

உண்மையில் இந்தப் படம் எனக்கு பிடித்ததா இல்லையா என்றே சொல்லத் தெரியவில்லை. உண்மையிலேயே ஒளிப்பதிவும், இசையும் ஆங்கிலப்படங்களுக்கு இணையாகவே இருந்தன. ஆனால், எனக்குத்தான் என்னவோ போலிருந்தது. (சன் டிவியில் வரும் மஹாபாரதம் ஏன் நமக்கு பிடிக்கவில்லை, நாம் பக்கத்து வீட்டுக்காரர்கள் போல உள்ளவர்கள் அதில் நடிப்பதால். அதுவே விஜய் டிவியில் வரும் டப்பிங் நன்றாக இருப்பது போல தோன்றும். இதுவும் அது போலத்தான் இருந்தது.) படத்தின் முற்பாதியில் அதிரடியாக பாயும் கதை, இரண்டாம் பாதியில் அப்படியே காமெடியாக (வடிவேலுக்கு வரும் அறிமுக காட்சி போல) மாறிவிட்டது.

துரோகம் செய்யும் அடியாளைக் கண்டு பிடிக்க திட்டங்களை சொல்லி, கையும் களவுமாகப் பிடிப்பது நன்றாக இருந்தாலும், காமிரா முன் உட்கார்ந்து தாங்கள் செய்த கொலைகளை விலாவாரியாக சொல்வது என்ன லாஜிக்கோ? வசூல் ராஜா படத்தில், பிரபு கமலிடம் சொல்லுவார் "நீ பாட்டுக்கு இங்க வந்துட்ட, அதனால, உன்ன டொக்கு ஆயிட்டன்னு சொல்றாங்க' என்பார். உடனே, கமல் கோவமாக "அப்டியா, யாரு" என்று கேட்டு விட்டு "சரி, நாம படிக்க வந்துட்டோம், படிக்கிற வேலயைப் பாப்போம்" என்பார். அதுதான் இரண்டாம் பாதியில் நினைவுக்கு வந்தது.

கண்டிப்பாக, வித்தியாசமான படம், (கொஞ்சம் கூட பிட்சா படம் நினைவுக்கு வந்து விடக்கூடாது என்று மெனக்கெட்டுள்ளார்.) அதனாலேயே அனைவருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. முதல் பாதியில், அளவோடு வரும் நகைச்சுவை, இரண்டாம் பாதியில் மிஞ்சியது போல தோன்றியது. அதிலும் குறிப்பாக இறுதிக்காட்சிகள். (சொன்னால் சுவாரஸ்யம் போய் விடும்.)

இந்தப் படத்தில் காதல் என்ற ஒன்று தேவையே இல்லை. அப்படி ஒன்றும் உண்மைக் காதலாகவும் அது இல்லை. அதை நீக்கி விட்டு, நீளத்தை குறைக்கலாம். மற்றபடி பல காட்சிகள் அட்டகாசம். ஒரே ஷாட்டில் வரும், தியேட்டரில் நடக்கும் கொலை முயற்சி, அடியாளின் துரோகத்தைக் கண்டுபிடிப்பது, நடிக்க முயற்சி செய்யும் காட்சிகள், இன்னும் பல.

ராஜலக்ஷ்மியில் கொடுத்த 80 ரூவாய்க்கு, இதுக்கு மேல நான் கூவக் கூடாது.

சதுரங்க வேட்டை:

வாயையும் மூளையும் மட்டும் மூலதனமாக வைத்து, மற்றவர்களின் ஆசையை பணமாக மாற்றி வாழும் ஆள், திருந்தி வாழ நினைக்கும்போது முன் செய்த பாவங்கள் தொடர்ந்து வர, என்ன ஆயிற்று என்பதே கதை.

மைசூரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, ஒரு நாள், போன் பேசிக்கொண்டே நடந்து போய்க் கொண்டிருந்தேன். திடீரென ஒரு 40 வயதுள்ள ஒரு ஆள் வந்து "ஸார், நீங்க தமிழா, தயவு செஞ்சு உதவி பண்ணுங்க ஸார், ஊர்ல இருந்து இங்க சொந்தக்காரன் ஒருத்தன பாக்கவந்தேன், எல்லாத்தையும் திருடிட்டாங்க, போன் நம்பரும் ஞாபகம் இல்ல, 100 ரூபா கொடுத்தா நான் ஏன் சொந்த ஊருக்கே திரும்பி போயிடுவேன் ஸார், உங்க போன் நம்பர் மட்டும் கொடுங்க. போய் போன் பண்ணி, உங்க அட்ரஸ் வாங்கி காச அனுப்பறேன்" என்றான்.

நான் புத்திசாலித்தனமாக "நானே வந்து டிக்கட் எடுத்து தரேன், வாங்க" என்றேன். அவனும் "சாமி, சாமி, கோடி புண்ணியம் வாங்க" என்றான். நான் சற்றே குழம்பி, "சரி, இந்தாங்க பணம், என் போன் நம்பர். இங்கிருந்து டவுன் பஸ் புடிச்சு, சிட்டி பஸ் ஸ்டாண்ட் போய், உங்க ஊர் போங்க" என்று அனுப்பினேன். 9 வருடங்கள் ஆகி விட்டது, இன்னும் போன் வரவில்லை. இது பரிதாபத்தில் நான் ஏமாந்த கதை. ஆனால், படத்தில் இது போல காட்சிகள் இல்லை. ஆனால் ஒரு வசனம் உண்டு. "கருணை காட்டுறது முக்கியம் இல்லை, ஆனா, அந்த கருணையை எப்படி காசாக்குறதுன்னு யோசி"

சென்னையில் ஒரு நாள், திடீரென ஒரு நண்பன் அழைத்தான். "டேய், நல்லா இருக்கியா, உன்ன பாக்கனும்போல இருக்கு, திருவான்மியூர் வாயேன். ஜெயந்தி தியேட்டர் கிட்ட நில்லு, நானே உன்ன வந்து கூட்டிப் போறேன்" என்றான். நானும்,எங்களுக்கு பொதுவான இன்னொரு நண்பனுடன் வந்து நின்றேன். இருவருமே பயங்கரமாக யோசித்தோம். "இம்புட்டு பாசத்தோட கூப்பிடுறான்? என்னவா இருக்கும்?". வந்து ஒரு சந்துக்குள் உள்ள பெரிய வீட்டுக்கு கூட்டிப் போனான். "ஒண்ணுமில்ல, ஒரு சின்ன டிஸ்கஸன்" என்றான்.

திடீரென, ஒரு டிப் டாப் வாலிபர் வந்து, ஒண்ணுக்கு ரெண்டுக்கு என்று ஆத்தோ ஆத்தென்று ஆத்தி விட்டு "நான் என்னோட சாஃப்ட்வேர் வேலய, விட்டுட்டு, இதுக்காக ஆள் பிடிச்சு, ஹோண்டா சிட்டி கார வாங்கியிருக்கேன். நீங்களும் சேருங்க" என்றான். இது என் நண்பன் ஆசையில் ஏமாந்த கதை. இதுதான் படந்தின் முக்கிய அம்சம். அடுத்தவன் பேராசையைத் தூண்டி பணம் பறிப்பது. அதற்கான வசனம் "நான் யாரையும் போய் ஏமாத்துல. ஏமாற தயாரா இருந்தவங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்தேன்" அதன் பின் நாங்கள் என் நண்பனிடம் பேசியது எல்லாம் சென்சாரில் கட் ஆகிவிடும். அந்த டிப் டாப் வாலிபரின் பேச்சு அப்படியே அச்சு அசலாக இந்தப் படத்தில் வந்தது. என்ன, கார்தான் ஹோண்டா சிட்டியில் இருந்து BMW ஆக மாறி விட்டது.

நாம் பல முறை வாழ்க்கையில் ஏமாற்றப்படுகிறோம் என்பதையே உணர்வதில்லை. அப்படியே தெரிந்தாலும், அதை அப்படியே துடைத்து விட்டு அடுத்த முறை ஏமாற தயாராகிறோம். கேட்டால் "எல்லோரையும் ஒரே மாதிரி நெனக்கலாமா" என்கிறோம். படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது, நகைக்கடை காட்சிதான், அதன் பின் MLM மற்ற அனைத்திலும் அவர்கள் குறிப்பிட்ட ஒருவரை மட்டுமே ஏமாறுகின்றனர். (சரி ஈமு மேட்டர் ஓகே).

அதிலும் குறிப்பாக எங்கெங்கு மக்கள் ஏமாந்தனரோ, அதே இடங்களைத் தேர்வு செய்தது அருமை. இந்தப் படத்தில் எனக்குப் பிடிக்காத காட்சிகள் என்றால், அந்த பிளாஷ்பேக் மற்றும் திருந்தி வாழும் காட்சிகள். நம் மக்களுக்கு அதுதான் தேவை என்பதால் வைத்து விட்டார்கள் போல. முடிந்தால் இதே போல வேறு வேறு ஏமாற்று வேலைகளை வைத்து இன்னும் நான்கைந்து பாகங்கள் கூட எடுக்கலாம். ஆனால் ஒன்று, இதைப்போல ஆயிரம் படங்கள் வந்தாலும் நம் மக்கள் திருந்த மாட்டார்கள் (நான் உட்பட).

வேலையில்லாப் பட்டதாரி:

தனுஷோட பொல்லாதவன், படிக்காதவன் ரெண்டோட கதைய லேசா எடுங்க. மிஸ்டர் பாரத் படத்துல இருந்து கொஞ்சம் கொஞ்சம் எடுத்துப் போட்டு கலக்குங்க. கொஞ்சம் அம்மா செண்டிமெண்ட், அப்புறம் முந்திரிப் பருப்பு தூவற மாதிரி காமெடி வசனம். எல்லாத்தையும் நல்லா கலந்தா, சுட சுட VIP தயார். படத்துல எதுவுமே கூட குறைய இல்ல. சரியான கலவை.

ன் சகலைய நக்கல் பண்ண எடுத்திருந்தாலும், நல்லாவே அதை பண்ணியிருக்காங்க. (ஏன் இதை அடிச்சு சொல்றேன்னா, கடைசியா வர்ற மன்னிப்பு சீன வச்சித்தான்). ஆனாலும் இந்தப் படம் எனக்கு கொஞ்சம் அதிகமாவே பிடிச்சிது. அதுக்குக் காரணம் தனி பதிவாவே வரும்.

சரபம்:

படம் பார்க்க வேண்டும் என்று முயற்சித்தேன். சற்றே அலைச்சல் அதிகமாக இருந்ததால், பார்க்கவில்லை. நன்றாக உள்ளது என்று கேள்வி. நன்றாக இருந்தால், இன்னொரு பதிவு போட வேண்டியதுதான். பார்த்த இன்னொரு நல்ல படத்தை விமர்சிக்கிறேன்.

பூவரசம் பீப்பீ:

துப்பாக்கி படத்தோட அட்டக் காப்பி. அதுல விஜய் லீவுல நாட்டக் காப்பாத்துறாரு. இது பட்ஜெட் கம்மிங்கறதால, சின்னப் பசங்க, குட்டி ஊர காப்பாத்துறதா மாத்திட்டாங்க.

அருமையான இயக்கம். நிறைய காட்சிகள் மிகை என்று தோன்றினாலும், இந்த காலத்தில் கண்டிப்பாக நடக்கலாம். என்ன, இது போல அதிக பிரசங்கித்தனமாக ஒரு 10 பேர் இருந்தால், படம் பார்த்து விட்டு, இன்னும் 10 பேர் அதே போல நடக்க முயற்சி செய்வார்கள். அதுதான் பிரச்சினை. எனவே, காதல் (போன்ற) காட்சிகளை குறைத்திருக்கலாம். மற்றபடி தரமான படம். அதனால்தான் வெற்றி பெறவில்லை போல. 

பதிவின் தலைப்பிற்காக யாரும் தனியாக பின்னூட்டத்தில் பாராட்ட வேண்டாம். எனக்கு புகழ்ச்சி பிடிக்காது.