Sunday, October 25, 2009

நான் படமாக்க விரும்பும் கதைகள் - 1

இதுவரை நிறைய கதைகளை படித்திருந்தாலும் (கை மண் அளவில், ஒரு துகளின் கோடியில் ஒரு பங்கை விட குறைவாக படித்து விட்டு இந்த அலட்டு தேவையா என்று நினைப்பது புரிகிறது). ஒரு சில புதினங்களைப் படிக்கும்போதுதான் அந்த காட்சிகள் அனைத்தும் நம் கண் முன்னே அப்படியே விரியும். நமக்கு பிடித்த, பிடிக்காத உருவங்களை அந்த கதாபாத்திரங்களில் பொருத்திப் பார்ப்போம்.

இது பொதுவாக எந்தக் கதைகளைப் படித்தாலும் வரும். இருந்தாலும், ஒரே மூச்சில் படித்து முடிக்கும் அளவிற்கு சுவாரஸ்யமாய் இருந்தால்தான் படம் பார்ப்பது போல தோன்றும். எனக்கு அப்படி தோன்றிய கதைகள் பற்றி பகிர்ந்து கொள்கிறேன்.

மனித வேட்டை/மேனியெல்லாம் சிறகுகள்:

ஒரு நாவலையே கிட்டத்தட்ட திரைக்கதை வடிவில் எழுதி, கண் முன்னே கதைக் களத்தை கொண்டு வந்த நாவல். சுபாவின் கற்பனையில் உருவான இந்த நாவல், கிட்டத்தட்ட ஆங்கிலப் படங்களுக்கு இணையாக இருக்கும். (தழுவலா என்பது எனக்கு தெரியாது. மக்கள்தான் கூற வேண்டும்)

கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு முன், ஏதோ ஒரு பழைய புத்தக கடையில் வாங்கிய 'சூப்பர் நாவலில்' வந்த கதை. அதன் தலைப்பு 'மனித வேட்டை'.

கதையின் ஆரம்பமே,தலைப்பு அத்தியாயம் எதுவுமின்றி ஆரம்பிக்கும். ஒரு மலைப்பகுதியில், உயிருக்கு பயந்து ஓடும் ஒரு மனிதனை, நான்கு ஜோடிக் கால்கள் துரத்துகின்றன. அவர்களிடம் சிக்கி உயிரிழக்க விரும்பாமல் அருவியில் குதிக்க முயல, கீழே விழுவதற்கு முன்பே அவர்களின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாகிறான்.

முதல் அத்தியாயம். டென்னிஸ் பந்து வலையைத் தாண்டி போகிறது. ஒரு இளம் கணவன் மனைவி, நான்கு, தங்களின் தந்தை வயதையொத்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளுடன் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். சமீப காலத்தில் ஏற்பட்ட புதிய நட்பு.

அவர்களின் திருமண நாள் அன்று, கணவன் அலுவலக வேலைகள் காரணமாக வெளியில் சில வேலைகள் செய்து விட்டு, அலுவலகம் வர, மனைவியிடமிருந்து சில குழப்பமான தொலைபேசி அழைப்புகள். தான் தன் தாயின் வீட்டுக்கு செல்வதாகவும், திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் இருந்து தற்போது அழைப்பதாகவும் சொல்கிறாள். குழப்பமான நாயகன், வேலைகளை முடித்து விட்டு கிளம்ப நினைக்க, காவல் துறை அதிகாரிகள் வந்து, நாயகியின் பிணம் ஒரு கிணற்றில் கிடப்பதாக சொல்லி, சந்தேகத்தில் அவனைக் கைது செய்கிறார்கள்.

அனைத்து ஆதாரங்களும் அவனுக்கு எதிராகவே இருக்கிறது. அவனுடைய மூத்த நண்பர்கள் முடிந்த அளவு உதவி செய்கின்றனர். ஆனாலும், அனைத்து ஆதாரங்களும் எதிராகவே திரும்ப, வேறு வழியின்றி அவன் தப்பிக்க உதவி செய்கின்றனர். கொஞ்ச நாட்களுக்கு தலைமறைவாக இருக்க, இரண்டு பேர், அவனை ஒரு தீவிற்கு கூட்டிக் கொண்டு போகின்றனர். ஆளரவமற்ற அந்த தீவில், அவனுக்கு நல்ல உணவு, உடற்பயிற்சி கொடுக்கப்படுகிறது. துப்பாக்கி சுடுதல் போன்ற பயிற்சிகளும்.

ஒரு நாள், காலையில் கண் விழித்துப் பார்க்கும்போது, அந்த நான்கு பேரும் அவன் முன் உள்ளனர். அவனது கை கால்கள் கட்டப்பட்டுள்ளன. அவனுக்கு ஒரு வீடியோ காட்டப்படுகிறது. அவன் மனைவி அந்த நான்கு பேரால் மானபங்கப்படுத்தப்பட்டு, கொல்லப்படுகிறாள். அவர்களுக்குள் இருக்கும் அந்த மூர்க்கத்தனத்தையும் அவன் உணருகிறான். வேட்டையாடி பொழுதை கழிக்க, அவர்கள் வாங்கிய அந்த தீவில், மிருகங்களே இல்லாததால், மிருகங்களை கொண்டு வந்து, வேட்டையாடி, அதுவும் போரடித்ததால், மனிதர்களைக் கொண்டு வந்து வேட்டையாடுகின்றனர். அதுவும், சாதாரண மனிதர்கள் எதிர்த்துப் போராடாமல் தோற்பதும் பிடிக்கவில்லை. எனவே, மனிதனைத் தூண்டி விட்டு, உணர்ச்சிகளுடன் அவர்கள் ஆடுவது மனித வேட்டை.

---இடை வேளை---

அவனிடம் அனைத்து உண்மைகளையும் சொல்லி, அவனை முடிந்தால் அந்த ஆதாரங்களை எடுத்துக் கொண்டு, தப்பித்துப் போய், நிரபராதி என்று நிரூபித்து கொள்ள சொல்கிறார்கள். அவனுக்காக, ஒரு படகும் கடற்கரையில் தயாராக உள்ளது.

அவன் எப்படி அவர்கள் நால்வரையும் அழித்து, தப்பிச் செல்கிறான் என்பதை, இரண்டாம் பாதியில் அட்டகாசமான திரைக்கதையோடு அமைத்து சொல்லியிருக்கிறார்கள் சுபா.

நான் முன்பே கூறியது போல, இந்த நாவலின் சிறப்பே, திரைக்கதை வடிவில் எழுதியதுதான். அத்தியாயம் ஆரம்பிப்பதற்கு முன்பே, நடக்கும் முதல் கொலை. நாயகனிடம் உண்மைகளைக் கூறி, நன்றாக கோபம் வரும்படி செய்து விட்டு, பின் அவனை தப்பித்து ஓடச் சொல்லி விட்டு, அரைமணி நேரம் கழித்து கிளம்பும்போது முதல் பாதியை முடித்து விட்டு, பின் இரண்டாம் பாதி தொடங்கும்.

பழைய புத்தக கடையில், இரண்டு ரூபாய்க்கு வாங்கிய சூப்பர் நாவல். மீண்டும் தேடும்போது கிடைக்கவில்லை. ரொம்ப நாள் கழித்து, எதேச்சையாக நூலகத்தில், 'மேனியெல்லாம் சிறகுகள்' என்ற புத்தகத்தைப் படித்தால், அதே நாவல். உடனடியாக, அந்த பிரசுரம் சென்று புத்தகத்தை வாங்கி விட்டேன்.
சமீப காலமாக, சுபாவின் நாவல்கள் படமாக்கப் படுவது போல, இந்த நாவலையும் படமாக்கலாம். அருமையான மசாலா திரைக்கதை. நடுவில் வரும் காதல் கதையில் டூயட். ஒரு சோகப் பாடல். ஒரு க்ளைமாக்ஸ் பாட்டு (சிங்கம் போல).

ஆக்ஷ்ன் காட்சிகளுக்கு பஞ்சமேயில்லை. நால்வரையும் தனித் தனியாக, பிரித்து, ஒவ்வொருவராக கொல்லும் காட்சிகளும் வைக்கலாம். முதல் பாதியில் நகைச்சுவைக் காட்சிகளுக்கு வாய்ப்புள்ளது. இரண்டாம் பாதியில் தேவையில்லை.
நாவல் பற்றிய விவரங்கள்:
தலைப்பு : மேனியெல்லாம் சிறகுகள்
ஆசிரியர் : சுபா
வெளியிடுவோர் : மூவர் நிலையம், இராயப்பேட்டை, சென்னை.
விலை : ரூ.70/-

Sunday, October 4, 2009

ரஜினி vs கமல் / மம்முட்டி vs மோகன் லால்

ஒரு வருடத்திற்கு சற்றே முன்பு, தசாவதாரத்தைப் பற்றி எழுதாமல் ஒரு பதிவர் இருந்தால், ஏதோ அவர் பதிவுத் துரோக குற்றம் செய்தவர் போல அனைவரும் பார்த்தனர். இப்போது அதே போல 'உன்னைப் போல் ஒருவன்'. பதிவு போடவில்லை என்றால், நீ என்னைப் போல் ஒருவன் இல்லை என்று ஒதுக்கி விடுவார்கள் போல. எனவே, என்னுடைய பங்கு, பதிவு.

எல்லோரும் படத்தைப் பற்றி அனைத்து விதங்களிலும் அலசி விட்டார்கள். நீரஜ் பாண்டே மற்றும் கமல் கூட அதைப் பற்றி யோசித்து இருக்க மாட்டார்கள். சாண்ட்விச் சாப்பிடுகிறார், உயர்தர செருப்பு அணிந்திருக்கிறார், துப்பாக்கி வைத்திருக்கிறார், கண்ணாடி போட்டிருக்கிறார், சட்டை வேறு அணிந்திருக்கிறார் என்பது வரை சொல்லி விட்டார்கள்.

நானும் ஒரு பதிவிட வேண்டும் என்று எண்ணியபின், எல்லாமே வந்து விட்டதே, ஏதாவது ஒரு நல்ல பதிவை எடுத்து ரீமிக்ஸ் பண்ணலாமா என்றும் யோசித்தேன். பிறகுதான் இந்த தலைப்பு ஞாபகம் வந்தது. பதிவும் வந்து விட்டது.

பதிவின் தலைப்பிற்கேற்ப, தளபதி மற்றும் உன்னைப் போல் ஒருவன் ஆகிய இரு படங்களைப் பற்றி எனது கருத்துக்களை எழுதுகிறேன்.

ஒரு புதன்கிழமை (A Wednesday) நான் ஏற்கனவே பார்த்திருந்ததால், கமல் அதை எப்படி தமிழ்ப்படுத்தியிருப்பார் என்ற எதிர் பார்ப்பு மட்டுமே இருந்தது. அதுவும் பாடல் வெளியிட்ட பின், அது இன்னும் எகிறி விட்டது. அந்த படத்தில் பாடல்களா என்று. ஆனால், கமல் நம்மைப் போல ஒருவர் இல்லையே! கலக்கி விட்டார்.

தளபதி. ரஜினி, மம்முட்டி, மணி ரத்னம், இளையராஜா, சந்தோஷ் சிவன் என்று அனைத்து ஜாம்பவான்களும் இணைந்து, இசைந்து(?) பணியாற்றிய படம். பொதுவுடமையாக்கப்பட்ட ஒரு கதையின் நவீன காலத்து ரீமேக்.

இரு படங்களுக்கும், கடினப்பட்டு, நான் கண்டு பிடித்த ஒற்றுமைகளாவன. இரண்டுமே ரீமேக். இரு படங்களிலும் தலா ஒரு முன்னணி தமிழ் மற்றும் மலையாள நாயகர்கள் நடித்துள்ளனர். மம்முட்டி, கமல் இருவரும் முதலில் கெட்டவர்கள் போல சித்தரிக்கப்படுவார்கள். இரு படங்களிலும் அருமையான பாடல்கள் படமாக்கப்படவில்லை. ரஜினி, கமல் இருவருமே தனது உண்மையான பெயரை சொல்லிக்கொள்ள மாட்டார்கள். (ரஜினி 'தளபதி என்று சொல்லிக்கொள்வார்). இருவரும் தான் செய்யும் வன்முறை/தீவிரவாத செயல்களுக்கு, பெண்களுக்கு நிகழ்ந்த வன்செயல்களை முக்கிய, தங்கள் செயல்களை நியாயப் படுத்த காரணமாக சொல்வார்கள். வேறெதாவது இருப்பின் பின்னூட்டத்தில் சொல்லவும்.

நடிப்பைப் பொறுத்தவரை, ரஜினி தவிர மற்ற மூவரும், விருதுகளுக்கான போட்டியில் சற்று முன், பின்னேதான் இருக்கிறார்கள். ரஜினியோ விருது பெறவில்லையே தவிர, சற்றும் சளைத்தவரல்ல என்பதை பல படங்களில் நிரூபித்துள்ளார்.

தளபதி படத்தில் நடிப்பதற்கான இடங்கள் அதிகம். ஆனால், உன்னைப் போல் ஒருவனில், வெறும் பேச்சு மட்டும்தான். இந்த இரு பாடங்களில், என்னைப் பொறுத்தவரை முதலிடம் மோகன் லாலுக்குத்தான். அலட்டிக்கொள்ளாமல், நவரசத்தையும் முக பாவங்களிலேயே காட்டி, அசத்தி விட்டார்.

திரைக்கதை, வசனம் இரண்டிலும் என்னைப் பொறுத்தவரை உன்னைப் போல் ஒருவன் முந்துகிறது. (இன்னும் சொல்வதென்றால், A Wednesday இன்னும் நன்றாக இருந்தது என்பது என் கருத்து. ஆங்கில வசனங்கள் அதில் நன்றாக பொருந்தியது. குறிப்பாக அந்த ஹாக்கர் முதலில் சொல்லும் He is good, but not the best அதன் பின் He is not just good, he is the best என்பதும், எனக்கு மிகவும் பிடித்தது.) ஒரு பொது மனிதன் இப்படி மாறுவதற்கு சொல்லும் காரணங்கள் ஹிந்தி படத்தில் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும். பெயரே தெரியாத, தினசரி உடன் பயணிக்கும் பயணியின் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ளும் அந்த காட்சி. அதே போல உணர்ச்சியை தமிழில் கொடுக்கவே 'கருவறுத்தல்' போன்றவற்றை கமல் கொண்டு வந்திருக்க வேண்டும். அது நடந்தது யாருடைய மகளுக்கு என்பதை நம்முடைய அனுமானத்திற்கு விட்டிருப்பதும் அந்த உணர்ச்சிக்காகத்தான்.

தளபதியில் நிறைய விஷயங்களை காட்சிகளிலும், பின்னணி இசையிலும் புரிய வைத்து விடுவார்கள். ரஜினியும், மம்முட்டியும் அரவிந்தசாமியை சந்திக்கும் காட்சியில், "தேவா, சூர்யா ரெண்டு பேர்" என்ற வசனம் வரும்போது தேவா வரும் இடத்தில் ரஜினியையும், சூர்யா எனுமிடத்தில் மம்முட்டியையும் காட்டுவார்கள். நட்பின் ஆழத்தைக் காட்டும் இடம். பின்னணி இசைக்கு எதை சொல்ல, எதை விட? அந்த கோயில் காட்சி ஒன்று போதுமே.

A Wednesday படத்திற்கும், உன்னைப் போல் ஒருவனுக்கும் மேலோட்டமாக பார்த்தால், அந்த புதன் கிழமையைத் தவிர வேறு வித்தியாசமே இல்லை (வசனங்களை விட்டு விடுவோம்). நான் முதலில் போக்கிரி தெலுங்கு பார்த்தேன். பின் தமிழில் பார்த்த பின் நண்பர்களிடம், "எதுக்கு தேவையில்லாம திரும்ப எடுத்தாங்களோ? கிராபிக்ஸ்ல விஜய் முகத்த மட்டும் மகேஷ் பாபு முகத்துக்கு பதிலா மாத்தியிருக்கலாம், இலியானாவும் இருந்திருக்கும்" என்றேன். இப்போது உன்னைப் போல் ஒருவனை பார்த்த பின், எனக்குள் முதலில் எழுந்த எண்ணமும் கிட்டத்தட்ட அதேதான். கமலின் மற்ற ரீமேக் படங்களில், திரைக்கதையில் வித்தியாசங்கள் காட்டியிருப்பார். ஆனால், ஒரு நல்ல படத்தை அதன் சாரம் குறையாமல் மக்களிடம் கொண்டு சேர்க்க, கமல் செய்ததில் தவறில்லை என்றே தோன்றுகிறது.

மக்கள் கூறுவது போல, ஏதாவது ஒரு குப்பனோ, சுப்பனோ அந்த பாத்திரத்தில் நடித்திருந்தால், "அவர் குண்டு வைப்பதும், மோகன் லாலுக்கு சவால் விடுவது நம்பும்படியே இல்லை. வேறு யாராவது பெரிய ஆளை போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்று சொல்வார்கள். அக்கரைப் பச்சை. கமலும் காய்த்த மரமல்லவா!!

மொத்தத்தில் இரண்டுமே அருமையான படங்களே. இரண்டு படங்களும் இந்த ஒரு காரணத்தால்/நபரால் வெற்றி பெற்றது என்று சொல்ல முடியாது என்று கூறி, இடப் போகும் பின்னூட்டங்களுக்கு நன்றி கூறி, விடை பெறுகிறேன். நன்றி, வணக்கம்.

இந்த இரு படங்களையும் ஒப்பிடுவது போல, வேறு மடத்தனம் இல்லை என்று நீங்கள் நினைக்கலாம். நானும் அதைத்தான் நினைத்தேன். ஆனாலும் என்ன செய்ய. ஏதாவது செய்ய வேண்டுமே. உங்களது கருத்துக்களை இட வேண்டும்.