Thursday, December 31, 2015

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

மழை பற்றி சூட்டோடு சூடாக இன்னொரு பதிவு போடலாம் என நினைத்தால், அதற்குள் ஸ்டிக்கர் பாய்ஸ், பீப் பாட்டு, இளையராஜா கோபம், விஜயகாந்தின் 'த்தூ', கொடும்பாவியை எரிக்கிறேன் என வேட்டியில் தீ வைத்துக் கொள்வது என நான் எழுத வந்த விஷயமே பழங்கஞ்சி ஆகி விட்டது. இருந்தாலும் கடமைன்னு ஒன்னு இருக்கே.

சென்னை இனி என்ன ஆகும்:

ஒன்றும் ஆகாது. மக்கள் வழக்கம் போல தங்களது வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டனர். வீடில்லாமல் கரையோரம் வாழ்ந்தவர்கள் வீடுகள் இடிக்கப்படுகின்றன. ஏரிகளில் கட்டியோர் "இன்னும் எத்தன வருஷம் கழிச்சு அடுத்த மழை வருமோ, அப்ப பாத்துக்கலாம்" என விட்டு விட்டனர். முன்பு வேளச்சேரியில் வாடகைக்கு இருந்த வீட்டில் எல்லாம் தண்ணீர் வந்து விட்டது. அங்கு பெரும்பாலானோர் வெறும் சான்றிதழ்களை மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பி உள்ளனர். மீண்டும் திரும்பி வந்து, வழக்கம் போல தங்களது வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

பாய்ந்து பாய்ந்து வேலை செய்த இளம் தன்னார்வலர்கள் "அடுத்த மழை எப்ப வரும்னு காத்திருக்கோம்" என நாஞ்சில் சம்பத் போல உள்ளனர். மழைக்காலத்தில் எல்லா இடங்களிலும் நின்று சென்ற மாநகர பேருந்துகள், தற்போது வழக்கம் போல நிற்க வேண்டிய நிறுத்தங்களில் கூட நிற்காமல் செல்கின்றன. சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் பாலங்களில், 10 அடிக்கும் கீழ் தண்ணீர் செல்கிறது.

மழை முடிந்த பின் சென்னை வந்த எனக்கு "இங்கயா இப்படி" என அதிர்ச்சி தரும் அளவிற்கு எந்த மாற்றமும் இல்லாமல்தான் சென்னை இருக்கிறது.

ஆனாலும், முகநூலில் படித்த தகவல்களைக் காட்டிலும், என் அலுவலக நண்பருக்கு நடந்த உதவிதான் மந்தை நெகிழ வைத்தது. ஒரு வயது குழந்தைக்கு பால் கூட கிடைக்காததால் எப்படியாவது, மனைவியையும், குழந்தையும் சொந்த ஊரான பொள்ளாச்சியில் விட்டு விடலாம் என, மடிப்பாக்கம் வீட்டிலிருந்து வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு கிளம்பி இருக்கிறார்.

இடுப்பளவு நீரில் நடந்து போகும்போது, வண்டியில் வந்த ஒருவர் "என்னங்க குழந்தைய வச்சிக்கிட்டு நடந்து போறீங்க. வாங்க நான் வேணா கொண்டு போய் விடறேன்" என்றிருக்கிறார். நம்மாளோ "பரவால்லீங்க, அதெல்லாம் ஒண்ணுமில்ல, இந்தா பக்கத்துலதான் என்றிருக்கிறார். அடுத்து அவர் சொன்னதுதான் உண்மையில் ஒரு நிமிடம் நெகிழ வைத்தது. "சரீங்க. நீங்க வேணா வண்டியை எடுத்துகிட்டு போய், மனைவி, கொழந்தைய விட்டுட்டு வந்து, திரும்ப என்ன வந்து கூட்டீட்டு போங்க, உங்களை விட்டுட்டு நான் கெளம்பறேன்".

இத்தனை வருட சென்னை அனுபவத்தில் சத்தியமாக இதை நான் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. ஒரு வேலை நான் இருந்திருந்தால் கூட, இதை செய்திருக்க மாட்டேன். சென்னையை நினைத்து நான் கர்வப்பட்ட சமயம் அதுதான்.

பீப் சாங்:

நான் இன்னும் கேட்கவில்லை. வீட்டில் கேட்கும் நிலையில் பாட்டு இல்லை. ஆனால், இந்த பாட்டை எப்படியாவது கேட்டே ஆக வேண்டும் என எல்லா ஊடகங்களும் கங்கணம் கட்டிக்கொண்டு அலைகின்றன. உண்மையில் அது தவறுதலாக வெளிவந்த பாடல், எந்தப் படத்திலும் வெளி வராத பாடல். அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் விட்டிருக்கலாம், அல்லது சிம்பு ஒரு மன்னிப்பு கேட்டிருக்கலாம்.

ஒரு கவிதை வெறும் வரிகளாக இருக்கும் போது, யாரும் அதை அவ்வளவாக நினைவில் வைத்துக் கொள்வதில்லை. ஆனால், இந்தப் பாடல் அப்படி இல்லை. "நேத்து ராத்திரி யம்மா, கட்டிப்புடி, கட்டிப்புடிடா" பாடல்களுக்கு, இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என அனைவருமே பொறுப்பு. ஆனால், இது டம்மி வரிகள் போட்டு பாடியது, அதற்கு முழு முதற் காரணம் சிம்பு மட்டும்தான். அவர் அதை வெளியிடவில்லை (என்று நம்புவோமாக) என்பதாலும், விளையாட்டுத்தனமாக செய்தததாலும் "யார் மனதாவது புண்பட்டிருந்தால்" என வழக்கமான பல்லவியில் ஒரு அறிக்கை விட்டிருந்தாலே முடிந்திருக்கும். அதை விட்டு விட்டு சிம்பு ஒரு பக்கம் முறுக்கிக் கொண்டு போனால், இந்த ஊடகங்கள் எல்லாப் பக்கமும் முறுக்கிக் கொண்டு இருக்கின்றன.

சும்மா இல்லாமல் எல்லோரிடமும் எதற்கு கருத்து என்று தெரியவில்லை. கங்கை அமரன், வைரமுத்து கருத்து சொன்னால், "நீங்க எழுதாத பாட்டா" என்று அவர்கள் மேல் பாய்கிறார்கள். கருத்து சொல்லவில்லை என்றால் "ஏன் சொல்லவில்லை?" என்று பாய்கிறார்கள். என்னாங்கடா உங்க நியாயம்.

ராஜாவின் வாய் எப்படி என எல்லோருக்கும் தெரியும். முடிந்தால் இதைப் படியுங்கள். இதில் பல விஷயங்கள் மிகைப் படுத்தி சொல்லி இருந்தாலும், பல விஷயங்கள் உண்மைதான். அந்த ஹங்கேரி கலைஞர்கள் பற்றிய கேள்விக்கு ராஜா அளித்த பதில் "நான் சொன்னா புரிஞ்சுக்குற அளவுக்கு உங்களுக்கு ஞானம் இருக்கான்னு தெரியலே" என்றுதான். அதே போல மிஷ்கின் பற்றிய கேள்விக்கு சொல்லியது "அதை நீங்கள் இயக்குநரிடம்தான் கேட்க வேண்டும்" என்றுதான். மற்ற சம்பவங்கள் பற்றி நான் கேள்விப்பட்டதுமில்லை, படித்ததுமில்லை.

ஆனாலும், இடம், பொருள், ஏவல் என்பது மிக முக்கியம். ஏனென்றால், அந்த நிகழ்ச்சியில் எனது நண்பர் ஒருவரும் கலந்து கொண்டார். நிறைய புகைப்படங்கள் அவரும் எடுத்தார். அவர் சொன்னது " ரொம்ப நேரம் நின்னு, பொறுமையா கையெழுத்து போட்டு, ஒவ்வொருத்தருக்கும் கொடுத்தார்" என்றார்.

இன்னும் நிறைய சொல்ல தோன்றுகிறது. ஆனால், இப்போதைக்கு போதும். சென்னை போல மீண்டு(ம்) வருவோம். என்ன ஸ்டிக்கர் பாய்ஸ், விஜயகாந்த் பற்றி எல்லாம் சொல்லாமலே போறேனே என்கிறீர்களா? தேர்தல் வரட்டும்னு காத்திருக்கோம்.

Monday, December 7, 2015

தமிழகம் - மழையகம்

முன் குறிப்பு: நான் இப்போது சென்னையில் இல்லை. எனது மனைவியும், குழந்தையும் சென்னையில்தான் உள்ளனர். எனது வீடோ, பகுதியோ வெள்ளத்தால் பாதிக்கப்படவில்லை.

சென்னையில் எப்போது மழை பெய்தாலும் குறிப்பிட்ட சில இடங்களில், ஆள் அளவிற்கு தண்ணீர் நிற்கும், அந்த பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு பள்ளிகளில் தங்க வைக்கப்படுவார்கள். நான்கு நாட்கள் கழித்து வழக்கம் போல அவரவர் இடத்திற்கு சென்று விடுவார்கள். அவர்கள் விளிம்பு நிலை மனிதர்கள். ஒவ்வொரு வருடமும் அரசு அவர்களுக்கு நிவாரண முகாம்கள் அமைக்கும், நிவாரண நிதி கொடுக்கும். அதைத்தாண்டி அடுத்த வருடம் மழை அவர்களை பாதிக்கக்கூடாது என எந்த முயற்சியும் எடுத்ததில்லை. அவர்களும் கேட்பதில்லை.

ஆனால், மற்றபடி நடுத்தர வர்க்க இடங்களான வேளச்சேரி, மடிப்பாக்கம் போன்ற இடங்களில் முழங்கால் அளவிற்கு நீர் நிற்கும். மழையும் பொதுவாக இரவு பெய்யும். பகலில் வெயில் வாட்டும். நான்கு நாட்களில் அதுவும் வடிந்து விடும். இந்த ஆண்டு அப்படி இல்லாமல், மழையும் நிற்கவில்லை. அது மட்டுமின்றி வெள்ளத்தின் அளவு இரு மடங்காகி விட்டது. 

அந்த விளிம்பு நிலை மனிதர்கள் வழக்கம் போல வெளியேறி விட்டனர். ஆனால், அவர்களது உடைமைகள் அனைத்தும் இழந்து விட்டனர். அதைத் தாண்டி இந்த முறை பாதிக்கப்பட்டது நடுத்தர வர்க்க, யார் வம்பு தும்புக்கும் போகாத, தான் உண்டு தன் வேலை உண்டு என பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்று கூட தெரியாத நல்லவர்கள்தான்.

எப்படியாவது சென்னையில் ஒரு வீடு வாங்கி விட வேண்டும் என மாத சம்பளத்தில் பாதியை வட்டியாக கட்டும் மக்கள்தான். நாங்களும் யாருக்கும் எதுவும் செய்ய மாட்டோம், யாரும் எங்களுக்கும் எதுவும் செய்ய வேண்டாம் என வாழ்ந்த மக்கள் இந்த முறை பாதிக்கப்பட்டு விட்டனர். அந்த நடுத்தர வர்க்க பயம் இருந்ததால்தான், வீடு கிடைத்தால் போதும் என, எங்கே என்று கூட தெரியாமல் வீடு வாங்கினார்கள். "சென்னையில் வெள்ளமா, என்ன காமெடியா?" என்று கேட்டார்கள்.

இன்னும் அந்த பயம் இருந்ததால்தான் முதலில் வெள்ளம் வந்து வடிந்த பின்னும், வீட்டை விட்டு வெளியேறாமல், அடுத்த வெள்ளத்தில் மாட்டிக் கொண்டார்கள். ஒன்றுமே கிடைக்காமல் இருந்தபோதும், மற்றவர்கள் கொண்டு வந்து கொடுத்த உணவை வாங்க மறுத்தார்கள். ஆனால், மழை எல்லோரையும் மாற்றி விட்டது. யாரென்றே தெரியாதவர்களின் வீட்டில் தங்க வைத்து, தெரியாதவர்களை வீட்டில் கொண்டு வந்து தங்க வைத்தது. "வெளையாட்டுப் பசங்க" என்றெல்லாம் திட்டப்பட்டவர்கள் தண்ணீருக்குள் சென்று மற்றவர்களுக்கு உதவி செய்கிறார்கள்.

இவை எல்லாம் முகப்புத்தம் மூலம் அறிந்து கொண்டது. அதையும் தாண்டி, இந்த நேரத்திலும் கொள்ளையடிக்கும் 'நல்ல' உள்ளங்கள் பற்றியும் தெரிய வருகிறது. என் மனைவியே பால் 60 ரூபாய்க்கு ஒரு நாள் வாங்க நேரிட்டது. ஆனாலும், வரும் உதவிகள் அனைத்துமே, இந்த நடுத்தர வர்க்கத்தினருக்கே கேட்டு வருகின்றது. மிகவும் பாதிக்கப்பட்ட வட சென்னை, அடையாறு, கூவம் கரையோரப் பகுதிகள், கடலூர் மற்றும் கரையோர மாவட்ட மக்களுக்கு யார் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. வெளியே தெரியாமல் உதவி கிடைத்திருந்தால், மிகவும் சந்தோஷம்.

என்னுடைய ஒரே ஆசை என்ன என்றால், கீழே வரும் என்னுடைய கற்பனைக் கதை, நிஜத்தில் நடக்கக்கூடாது.

நிலத்தரகர்: வேளச்சேரியில ஒரு வீடு வெலைக்கு வருதுங்க, சதுர அடி 6000தான். முடிச்சிடலாமா? கம்மி வெலைங்க.

நான்: ஐயய்யோ, அங்க தண்ணி பயங்கரமா நிக்குமே, இந்த மழைக்கு பாத்திருப்பீங்களே.

நிலத்தரகர்: அட அதனாலதாங்க கம்மியா கெடைக்குது. மழை என்ன இதே மாதியா வருஷா வருஷம் பெய்யும். மறுபடியும் எத்தன வருஷம் கழிச்சு இப்படி பெய்யுமோ. அது மட்டும் இல்லாம, இனி என்ன இப்படியே விட்டுடுவாங்களா? பாதாள சாக்கட வந்துரும். அப்புறம், எவ்ளோ மழை பெஞ்சாலும் அஞ்சு நிமிஷம் கூட தண்ணி நிக்காது. அப்படியே இருந்தாலும், ஒரு ரெண்டு நாளு. அவ்ளோதான்.

நான்: கொஞ்சம் யோசிக்கணுமே.

நிலத்தரகர்: இதப் பாருங்க. இந்த வெல இப்பத்தான் கெடைக்கும். மழைக்கு முன்னாடி சதுர அடி 7500. ஏதோ மழையால இவ்ளோ கம்மி ஆயிருக்கு. இப்ப உட்டா கெடைக்காது. பார்ட்டி வித்துட்டு ஊர்ப்பக்கம் போகலாமுன்னு பாக்குது. ஏதோ நீங்க தெரிஞ்சவங்கன்னு சொன்னேன். நீங்க இல்லேன்னா பின்னாடி இன்னும் பத்து பேரு இருக்காங்க. பாத்துக்குங்க. வருஷத்துல ஒரு நாலு நாளுக்கு பயந்துக்கிட்டு இப்படி ஒரு வாய்ப்பை விட்டுடாதீங்க. சொல்லிப்புட்டேன்.

நான்: பின்னூட்டத்துல என்ன சொல்றாங்கன்னு பாத்துட்டு சொல்றேன்.