Sunday, August 15, 2010

பட்டுக்கோட்டை பிரபாகர்-பாலகுமாரன்-இந்திரா சௌந்திரராஜன்

இதற்கு முன் இட்ட ராஜேஷ் குமார், சுபா பற்றிய பதிவுகள்.

பட்டுக்கோட்டை பிரபாகர்:

இவரின் பரத் சுசீலா பாத்திரங்களுக்கும், சுசீலாவின் டி சர்ட் வாசகங்களுக்கும் நான் ரசிகன் என்றால், அது அறை குறையாக அவரின் கதைகளைப் படித்தவன் என்று அர்த்தம். அவரின் துப்பறியும் நாவல்கள் மட்டுமல்ல, சமூக நாவல்களும் எனக்குப் பிடிக்கும். அவரது திரைப்பட வசனங்களும் வசன நடையும் நன்றாகவே இருக்கும். குறிப்பாக 'சாமுராய்' படத்தின் வசனங்கள். "எரிமலை வெடிக்கும்போது, அடியில் சில பூக்களும் கருகத்தான் செய்யும்", "காரும் காரும் மோதுனா அது incident. FIR போட்டாதான் அது accident". மற்றபடி கதைகளின் பெயர்கள்தான் நினைவில் இல்லை.'

திரு திரு துரு துரு' படத்தில், மருத்துவமனைக்கு நாயகன் நாயகி விசாரிக்க வரும்போது, நாயகி 'நாங்கதான் பரத் சுசீலா, மாறு வேஷத்துல வந்துருக்கோம்' என்றபோது அங்கங்கே கேட்ட சிரிப்புக் குரல்களே பாத்திரங்களின் வெற்றிக்கு சாட்சி. என்ன, எனக்குத் தெரிந்து இதுவரை இந்த பாத்திரங்களை வைத்து எந்தப் படமும் வரவில்லை.

பாலகுமாரன்:

எனக்கு சிறு வயதில் பாலகுமாரனின் கதைகள் அவ்வளவாக பிடிக்காது. ஏனென்றே தெரியவில்லை. சமீப காலங்களில் படித்த பின்தான் அவரது அருமையே தெரிகிறது. அதுவும் 'இரும்பு குதிரை' (க்கன்னா வராதாமே. எட்டெழுத்து என்பதாலா??) படித்த பின் அவர் மேலிருந்த மதிப்பு அதிகமாகிவிட்டது. இவரின் திரை வசனங்களும் எனக்குப் பிடிக்கும். பாட்ஷா', 'ஜென்டில்மேன்' பற்றி தனியாக சொல்ல வேண்டுமா?? இவருடைய கதைகளும் எனக்கு தெரிந்து திரையில் வந்ததில்லை.

இந்திரா சௌந்திரராஜன்:

இது வரை இவரைப் பற்றி என்னால் சரியாக கணிக்கவே முடியவில்லை. அதுவும் 'விடாது கருப்பு'க்குப் பின் அந்தக் குழப்பம் அதிகமாகி விட்டது. அவரின் மற்ற கதைகள் சரியான விகிதத்தில் விஞ்ஞானத்தையும் புராணத்தையும் கலந்து கட்டி அடித்திருப்பார். அதே போல சமூக நாவல்களும் நன்றாகவே இருக்கும்.
சேலம் நெசவாளர்களை மையமாக வைத்து எழுதிய கதை ஒன்று. தலைப்பு வழக்கம் போல நினைவில் இல்லை. அருமையாக இருக்கும்.

'விடாது கருப்பு' தொடராக வந்த காலத்தில் எங்களூரில் கேபிளும் இல்லை, எங்கள் வீட்டில் டிவியும் இல்லை. இப்போதுதான் யுடியுபில் பார்த்தேன். நிஜமாகவே பயமாக இருந்தது. பொதுவாக புதினங்கள் படமாக்கப்படும்போது, என்னைப் பொறுத்தவரை சரியாகவே இருந்ததில்லை. ஆனால், படித்ததை விட பல மடங்கு நன்றாக இருந்தது அந்த தொடர். அந்த நம்பிக்கையில்தான் 'ஆனந்தபுரத்து வீடு' படம் பார்க்கப் போனோம். சரி அத விடுங்க.. இவரின் மற்ற நாவல்கள் ஒரு முறை படித்ததுண்டு. இவரின் 'ஐந்து வழி மூன்று வாசல்' படித்தால் 'மஹதீரா' நினைவுக்கு வரலாம். ஆனால் கதை வந்து பல வருடங்களாகி விட்டன.

இப்போதைக்கு அவ்வளவுதான்.எப்பா பாத்துக்கோங்க.. நானும் பதிவர்தான், பதிவர்தான், பதிவர்தான். ஒரு பதிவு போட்ருக்கேன்..