Sunday, January 8, 2017

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

கடைசியாக பணம் பற்றி எழுதிய பின்பு, 50 நாட்கள் கழித்து மீண்டும் எழுதலாம் என்று நினைத்தால் முடியவில்லை. அதற்குள் நிறைய நடந்து விட்டது. ஜெயலலிதா மரணம், புயல், புத்தாண்டு என காலம் ஓடிக் கொண்டே இருக்கிறது. 

சொல்ல மறந்து விட்டேனே. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். எழுதுவதற்கு நிறைய விஷயம் இருக்கிறது, ஆசையும் இருக்கிறது. ஆனால், நேரம்தான் இல்லை. சில விஷயங்கள் பற்றி மட்டும் சொல்கிறேன்.

ஜெயலலிதா:

நம்மூரில் எப்போதுமே ஒரு விஷயம் என்னவென்றால், ஒருவர் இறந்து விட்டால், அவரைப் பற்றி நல்ல விஷயங்கள் மட்டுமே பேச வேண்டும். கெட்ட விஷயங்களை மறந்து விட வேண்டும் என்பதுதான். நம் சட்டத்தில் கூட, ஒருவர் இறந்து விட்டால், அவர் பெயர் குற்றப் பத்திரிகையில் இருந்து நீக்கப்படும். இது சரியா என்று விவாதிக்கத் தேவையில்லை.

என்னைப் பொறுத்தவரை, கருணாநிதி, மன்மோகன்சிங், மோடி என யார் வந்தாலும், நான் என் வேலையை பார்த்துக் கொண்டுள்ளேன். இவர்களால் நேரடியாக பாதிக்கப்பட்டதில்லை. ஆனால், ஜெயலலிதா கொண்டு வந்த சட்டங்களால், நேரடியாக ஒரு முறை பாதிக்கப்பட்டு இருக்கிறேன்.

1999ல் கருணாநிதி ஒரு சட்டம் கொண்டு வந்தார். கிராமப்புற பள்ளிகளில் 12வது முடிக்கும் மாணவர்களுக்கு, பொறியியல் சேர்க்கையில் 15 சதவிகித இட ஒதுக்கீடு என்று. நான் அப்போதுதான் 10ஆவது முடித்திருந்தேன். ஆனால், நான் படித்த கிராமத்துப் பள்ளியில் அப்போதுதான் மேல்நிலைக்கல்வி ஆரம்பித்ததால், எதற்கு விபரீதம் என என்னை நாமக்கல் பள்ளியில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கே படித்த படிப்பைப் பற்றி ஏற்கனேவே சொல்லி இருக்கிறேன். சரி விடுங்கள்.

2001ல் 12ஆவது முடித்து, நுழைவுத் தேர்வும் முடிந்து விட்டது. தேர்தல் நடந்தது. அம்மா வந்தார்கள். கருணாநிதியைத் தூக்கி உள்ளே போட்டார்கள். அன்றுதான் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒற்றை சாளர முறைக்கான தரவரிசையை அறிவித்தார்கள். இந்த கொடுமையில் அதை ஒரு நாள் கழித்துதான் தெரிந்து கொள்ள முடிந்தது. அம்மா அறிவித்தார், இனி 15 சதவிகித ஒதுக்கீடு 25 சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது. அதுவும் இந்தக் கல்வியாண்டு முதலே என அறிவித்தார்.

கோயமுத்தூர் அரசு பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் கண்டிப்பாக கிடைக்கும் என நம்பிக்கையோடு இருந்த எனக்கு இடி. அதன் பின் எப்படியோ படித்து, இப்படி இருக்கிறேன். சரி இட ஒதுக்கீடு என்ன ஆனது என்கிறீர்களா? வழக்கம் போல சில பேர் வழக்கு போட்டார்கள். நீதிமன்றம், அந்த 25 சதவிகிதத்தை ரத்து செய்தது. அரசு மேல்முறையீடு செய்யவில்லை. அதன் பின் வந்த கருணாநிதி அரசும், அதைக் கண்டு கொள்ளவில்லை.

ஒருவேளை நான் கிராமத்துப் பள்ளியில் படித்து, அந்த இட ஒதுக்கீட்டில் இடம் கிடைத்திருந்தால், நான் வேறு மாதிரி பேசியிருக்கலாம். அம்மாவிற்கு நன்றி கூட சொல்லியிருக்கலாம். யாருக்குத் தெரியும். இப்போதும் நான் நன்றாகவே உள்ளேன். எங்கள் வீட்டில் அப்போது சொன்னது, "எங்கிருந்தாலும் நல்ல படிச்சா பிரச்சினையே இல்ல". படித்தால்தானே.

அது மட்டுமின்றி, என்னைப் பொறுத்தவரை, கடைசி வரை ஜெயலலிதா ஒரு பொம்மைதான். ஆட்டி வைத்தவர்கள் நிறைய. இப்போது சசிகலா வந்தாலும், அவரும் கைப்பாவைதான். எப்போதும் அமைச்சர்கள் கையில் அதிகாரம் இருந்தாலும், ஆட்சி செய்வது அதிகாரிகள்தான். நடராஜனும் ஒரு அரசு அதிகாரியாக இருந்தவர். ஆட்சியும் கையில் இருந்தால், ஒரு காட்டு காட்டுவார் என்றுதான் தெரியவில்லை. பார்ப்போம்.

வார்த் புயல்:

வார்தா, வரதா, வல்லையா என்றெல்லாம் சொன்னாலும், நான் புயல்டா என்று ஒரு காட்டு காட்டி விட்டது. அந்த திங்கள் காலைதான் ஊரில் இருந்து எல்லோரும் நனைந்து கொண்டே சென்னை வந்தோம். தாமதம் ஆனதால், அலுவலக வண்டி போய் விட்டது. மழை பெய்ததால், எதற்கு என்று வீட்டிலேயே உட்கார்ந்தேன்.

மதியத்திற்கு மேல், ஆடிய ஆட்டத்தில் "தப்பிச்சோண்டா சாமி" என்றுதான் தோன்றியது. அன்று மாலை 6 மணிக்கு அலுவலகத்தில் இருந்து கிளம்பியவர்கள், விடியற்காலை 3 மணி, 4 மணிக்கெல்லாம் வீட்டிற்கு போய் சேர்ந்திருக்கிறார்கள். புயல் என்றால் வழக்கம் போல ஆந்திரா, ஒரிசா பக்கம் போய் விடும் என்று எண்ணியவர்களுக்கெல்லாம் தண்ணி காட்டி விட்டது. சென்னையில் இத்தனை மரங்கள் இருந்தனவா என எண்ணியவர்களுக்கெல்லாம் யுவகிருஷ்ணா பதில் அளித்துள்ளார்.

பொழுதுபோக்கு:

இபோது தினமும் அலுவலக வண்டியில் காலையில் ஒரு மணி நேரம், மாலையில் ஒரு மணி நேரம் பயணம் என்பதால், தினமும் ஒரு படம் பார்த்து விடுகிறேன். வீட்டிலும், இப்போது ஏர்டெல் இணைப்பு வாங்கி, உள்ள டேட்டாவை காலி செய்ய படமாக இறக்கித் தள்ளியாகி விட்டது. கலைக்கு மொழி கிடையாது என்பதால் மானாவாரியாக படம் தரவிறக்கம் செய்தாகி விட்டது.

ஆண்டவன் கட்டளை படத்திற்கு பிறகு, திரையரங்கமும் செல்லவில்லை. அதன் பிறகு வந்த படங்களின் விமர்சனங்கள் எதையும் பார்க்க வேண்டும் என்றே தோன்றவில்லை. விமர்சனங்கள் நன்றாக இருந்ததால், துருவங்கள் 16 படம் திரையரங்கம் சென்று பார்த்தோம். உண்மையிலேயே அருமை.

எப்போதும், யாரோ செய்யும் தவறுகளால், சம்பந்தமே இல்லாத நபர் பாதிக்கப்படுவார். சாலையில் திடீரென ஒருவர் திரும்பும்போது, பின்னால் வருபவர் பதறி நிற்க, அதன் பின்னால் வருபவர் அவர் மேல் இடித்து இருவரும் சண்டை போட்டுக் கொள்வார்கள். உண்மையில் காரணமான நபர் வீட்டில் இருப்பார்.

அதே போல, ஒரு மழை பெய்யும் இரவில் நடக்கும் சில சம்பவங்கள், காவல்துறையின் விசாரணை என 16 மணி நேரத்தில் நடக்கும் கதை. முடிவுறா அந்த வழக்கு, 5 வருடம் கழித்து எப்படி முடித்து வைக்கப்படுகிறது என்பதே கதை. தவற விடக்கூடாத படம். இயக்குனரின் வயது 22 என்பது மிக ஆச்சரியமான விஷயம். தயாரிப்பு அவரது பெற்றோரே என்பது இன்னும் ஆச்சரியம்.

அச்சம் என்பது மடமையடா படம் பற்றி மட்டும் சொல்ல விரும்புகிறேன். உண்மையிலேயே இந்தப் படத்தை படக்குழுவினர் முடித்து விட்டு போட்டுப் பார்த்தார்களா, இல்லை இன்னும் தாமதம் ஆனால் என்ன செய்வது என அப்படியே வெளியிட்டு விட்டார்களா என்றே தெரியவில்லை. ஏன் துரத்துகிறார்கள் என்பதற்கு காரணம் சொல்கிறார்களே, முடியவில்லை. 3 வருடங்களாக சிம்புவைத் தேடுவதைத் தவிர வேறு வேலையே இல்லையா? மேனன் அவ்வளவுதானா? 'எனை நோக்கிப் பாயும் தோட்டா' தலைப்பே படத்தின் விமர்சனத்தைக் குறிக்கிறது என விமர்சனம் வராமல் இருந்தால் சரி.

மற்றபடி, பிறமொழிபடங்களில் நிறைய மனதைக் கவர்ந்தன. அவற்றைப் பற்றி தனியாக ஒரு பதிவில் சொல்கிறேன். எல்லாம் நீங்கள் பார்த்தவையாகத்தான் இருக்கும். இருந்தாலும், அண்ணன் ஒரு பதிவு போடணுமே.