Monday, December 28, 2020

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்!

குளிக்கும்போது நெறைய எழுதணும்னு தோணுது, ஆனா எழுதணும்னு ஒக்காந்தா, அந்த எழுத்துதான், வார்த்தை வர மாட்டேங்குது. "குளித்து முடிக்கையில் பதிவு கொட்டுது, அதை அடிக்க நினைக்கையில் மனைவி திட்டுது" (அதே இசையில் பாடிக் கொள்ளவும்). 

ஒரு வேளை, அவர்கள் ஊரிலும், நான் இங்கேயும் மாட்டி இருந்தால், நிலைமை வேறு மாதிரி ஆகி இருக்கும். பதிவுகளாக போட்டு தள்ளி இருப்பேன். ஆனால் நடந்ததே வேறு. 'சாதா குமார்' இப்போது 'கொரோனா குமார்' ஆகி விட்டதாலும், வேலையும், வீட்டு வேலையாக, மன்னிக்கவும் வீட்டிலிருந்து வேலை என்று மாறிவிட்டதாலும், ஊருக்கே வந்து விட்டோம். 

இதுவும் ஒரு வகையில் நன்றாகவே இருக்கிறது. ஊரில் சரியாக சிக்னல் வேறு கிடைக்கவில்லை. இருந்தாலும் அப்படி இப்படி என்று சமாளித்து 3 மாதங்களும் ஓடி விட்டது. இதோ தீபாவளி முடிந்து, சொந்தக்காரன் கல்யாணம் முடிந்து, கார்த்திகை தீபம் முடிந்து, இப்போது பொங்கல் முடிந்து என்று போய்க் கொண்டிருக்கிறது. அதன் பிறகு தைப்பூசம், பங்குனி உத்திரம், சித்திரை 1 என்று போகப்போகிறதோ என்னவோ. பார்ப்போம். 

சென்னையில் இருந்தவரை முகப்புத்தகத்திலேயே மூழ்கி இருப்பேன். அதுவும் மருத்துவமனையில் இருந்த சமயத்தில் எல்லாம் மிக அதிகம். சாதாரணமாக யோசித்தால் கூட சங்கி, ஆன்டி இந்தியன், கிருப கிருப என்றுதான் தோன்றும். சில பதிவுகளைப் பார்த்தால் எரிச்சல் வரும். உடனே எதிர் வினையாற்ற தோன்றும். பல நண்பர்கள் எதிரிகள் போல தோன்ற ஆரம்பித்து விட்டார்கள். நிறைய நண்பர்கள் இருப்பதால் நீக்கவும் மனம் வரவில்லை. 

முதலில் அலைபேசியில் இருந்து செயலியை நீக்கினேன். பின் உலவியில் சென்று கடவுச்சொல்லை மாற்றி விட்டேன். 10 நாள் பல்லைக் கடித்துக் கொண்டு ஓட்டி விட்டேன். பின் தோன்றும் போதெல்லாம் உல் நுழைய நினைத்தால், கடவுச்சொல் மறந்து விட்டேன் என்று போவேன், பிறகு வேண்டாம் என்று விடுவேன். இப்போதெல்லாம் தோன்றுவதே இல்லை. தேவைப்பட்டால் செய்திகள் மட்டும் படிப்பேன். 

விமர்சனம்: 

இங்கு வந்தபிறகு படம் பார்ப்பதையே நிறுத்தி விட்டாயிற்று. தினமும் நெடுந்தொடர்தான். ஓடவும் முடியவில்லை, ஒளியவும் முடியவில்லை. (நல்லவேளையாக இங்கு யாரும் அதை பார்ப்பதில்லை). முன்பு ஒரு காலத்தில் சன் டிவி பார்க்காமல் இருந்ததே கிடையாது. ஆனால், இப்போது சன் டிவி பார்த்தே பல வருடங்கள் ஓடி விட்டன. இங்கோ சன், விஜய், ஜீ தமிழ் என்று எதை எடுத்தாலும், அடுத்தவனை எப்படி அழிப்பது என்ற நாடகம்தான்.


"அதுல பாருங்க. எம் பொண்டாட்டி இருக்காளே, அவ கிட்ட இந்த மாதிரி நாடகம் எல்லாம் பாக்காதடி அப்டின்னா,படத்திலயும் அப்டித்தான் இருக்குன்னு சொல்றா. அடியேய். படம் 3 மணி நேரத்துல முடிஞ்சுறும், ஆனா, இந்த கருமத்துல தெனம் தெனம் நீங்க அடுத்து என்னவாகும்னு நீங்க பாக்கணும்னு உங்கள உசுப்பேத்துறாங்க அப்டினா, நம்பவே மாட்டேங்குறா. அதிலயும் இந்த வயசான பெருசுங்க தொல்லையத்தான் தாங்க முடியல. கண்ணு, கொஞ்ச நேரம் வைப்பா. அந்த கடன்காரிக்கு என்னதான் ஆச்சுன்னு பாக்கணும். அந்தப்புள்ளய பாவம் இவ்வளவு கொடுமைப்படுத்தறாங்க" என்றெல்லாம் புலம்பல். 

இதில் இன்னும் கொடுமை என்னவென்றால், நமக்கு பிடித்த பாடல்களை எல்லாம் கொலை செய்கிறார்கள். படங்களில் இருந்து பின்னணி இசையை அப்படியே அடித்து விடுவது, அட அது கூட பரவாயில்லை. இப்போதெல்லாம், காட்சிகளை எல்லாம் கூட சுடுகிறார்கள். முன்பே அப்படித்தானே என்பவர்களுக்கு, அப்போது கூட நிறைய பேருக்கு தெரியாது. இப்போது எல்லாம் ஒரு சந்தேகம் வந்தால், இரண்டு நிமிடங்களில் அது என்ன, எங்கே வந்தது என்று தெரிந்து விடும். இருந்து எப்படி இப்படி செய்கிறார்கள். ஏன் யாருமே கண்டு கொள்வதில்லை என்றும் தெரியவில்லை. இதில் தலைப்பு வேறு. சரி அந்தக் கொடுமையை விடுங்க.

அந்தகாரம்: கொஞ்சம் இழுவையாக இருந்தாலும் ஒரு நல்ல பேய்ப் படம். யாவரும் நலம், டிமாண்டி காலனி போல தேவையில்லாமல் எல்லாம் பயமுறுத்தாமல், அதே போல கேவலமாக பேய் என்று யாரையும் காண்பிக்காமல், ஆனாலும் ஒரு வித பயமுறுத்தலுடனே சென்றது.


சூரரைப் போற்று: பரவாயில்லை. உண்மையில் சுய சரிதை படம் என்பதால் மொக்கையாகத்தான் இருக்கும் என நினைத்தேன். ஆனால், அதற்கு மாறாக நன்றாகவே இருந்தது. என்னடா தோத்துக்கிட்டே இருக்கானே என்று கொஞ்சம் கடுப்படித்தாலும் பரவாயில்லை ரகம்.


புத்தம் புது காலை & பாவக்கதைகள்:
நீ மட்டும்தான் மொக்கை பண்ணுவியா, நானும்தாண்டா என்று அமேசானும், நெட்பிளிக்ஸ்ம் சேர்ந்து பாடு படுத்திய படங்கள். ஊரில், செல்பேசியில் அளந்து அளந்து டேட்டாவை சேர்த்து படத்தை தரவிறக்கினால், இப்படி செய்தால் அப்புறம் கடுப்பாகுமா ஆகாதா. 

மற்றபடி லாக்கப், மூக்குத்தி அம்மன், க/பெ ரணசிங்கம் எல்லாம் ஒரு முறை பார்க்கலாம். 

எப்படியோ 2020 முடிந்து விட்டது. 2021 நல்லபடியாக இருக்கும் என்று எண்ணுவோம். கண்டிப்பாக அடுத்த வருடம் மாதமொரு பதிவு என்று மீண்டும் சபதம்..அய்யய்யோ விட்ருங்க. 

Sunday, August 2, 2020

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்!

குளிக்கும்போது நெறைய எழுதணும்னு தோணுது, ஆனா எழுதணும்னு ஒக்காந்தா, அந்த எழுத்துதான், வார்த்தை வர மாட்டேங்குது. "குளித்து முடிக்கையில் பதிவு கொட்டுது, அதை அடிக்க நினைக்கையில் மனைவி திட்டுது" (அதே இசையில் பாடிக் கொள்ளவும்). ஒரு வேளை, அவர்கள் ஊரிலும், நான் இங்கேயும் மாட்டி இருந்தால், நிலைமை வேறு மாதிரி ஆகி இருக்கும். பதிவுகளாக போட்டு தள்ளி இருப்பேன். 

இங்கேயே இருப்பதால், "எப்ப பாரு, வீட்டுல இருந்து வேலை பாக்கறேன்னு லேப் டாப், அப்புறம் எதுக்கு பிளாக் எழுதறேன்னு தனியா, கண்ணு வலிக்காது" என்று பிடுங்கி வைத்து விடுகின்றனர். பார்க்க வேண்டிய படங்கள், தொடர்கள் நீண்டு கொண்டே போகின்றன, குட்டி இளவரசி வேறு இருப்பதால், அவளும் பார்ப்பது போன்ற படங்களை தேர்வு செய்ய வேண்டி உள்ளது. அப்படி எதுவுமே இப்போது வருவதில்லை என்பது வேறு விஷயம். 

மகள் வேறு இப்போது பேய்ப் படங்களுக்கு பயப்படுவதால், அவற்றை பார்ப்பதையும் நிறுத்தி விட்டோம். அவள் வேறு அவளுக்கு பிடித்த கார்ட்டூன் படங்களை பார்க்க ஆரம்பித்து விட்டதால், நமக்கான நேரம் குறைந்து விட்டது. அதே போல நல்ல படங்கள் என்பதையெல்லாம் பார்த்தாகவே உள்ளது. OTTயில் வந்த பெண்குயின், பொன்மகள் வந்தாள், டேனி, காக்டைல் எல்லாமே மொக்கை. அவ்வளவுதான். 

கொரோனா:

அங்கே சுற்றி, இங்கே சுற்றி கடைசியாக எனக்கே வந்து விட்டது. எங்கே போனாலும், முகமூடி அணிந்துதான் சென்றேன். எங்கே போனாலும், கையை கழுவி விட்டு சென்றும் வந்து விட்டது. காய்ச்சல் வந்தது. மாத்திரை போட்டால் சரியானது, ஆனால், மீண்டும் மீண்டும் வந்தது. 4 நாட்கள் பார்த்து விட்டு, எதற்கு வம்பு என்று போய் சோதித்துப் பார்த்ததில் கொரோனா என்று உறுதி ஆகி விட்டது.

எங்களது அடுக்கு மாடி குடியிருப்பில் நான் மூன்றாவது ஆள். அதன் பிறகு சடசடவென ஏறி 10 பேருக்கு மேல் வந்து விட்டது. இப்போது யாருக்கும் இல்லை. மருத்துவமனை சென்ற எல்லோருமே மீண்டு வந்து விட்டனர். உள்ளேயும் நிறைய நடவடிக்கைகள் எடுத்து (முகமூடி கட்டாயம். மக்களோ, குழந்தைகளோ விளையாட தடை. உள்ளேயே உள்ள மாளிகைக்கு கடையில் ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கு மேல் இருக்கக் கூடாது. கடையிலும் முடிந்த அளவு வீட்டுக்கு பொருட்களை அனுப்ப சொல்லி விட்டனர்) பரவுவதை தடுத்து விட்டனர். அதே போல எந்தெந்த வீடுகளில் வைத்ததோ அந்த தளங்களை தினமும் இரு முறை சுத்தம் செய்தனர்.  

முதலில் எல்லோரும் சொல்கிறார்களே என்று பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சேர்ந்து விட்டேன். அப்போதுதான் சொன்னார்கள், ஒரு நாளைக்கு குறைந்தது ஐம்பதாயிரம் என்று. இருந்தாலும் பரவாயில்லை என்று வீட்டில் சொன்னதால், 4 நாட்கள் இருந்தேன். ஒன்றும் தேறவில்லை. 

பிறகு தெரிந்த மருத்துவர் "தயவு செய்து அரசு மருத்துவமனைக்கு சென்று விடுங்கள்" என்றார். அவரே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பேசி ஏற்பாடுகள் செய்து, 4 நாட்களுக்கு பிறகு அங்கே சென்று சேர்ந்தேன். உண்மையில் ஒரு சில குறைகள் இருந்தாலும் (சாப்பாடு சரியில்லை, கீழ்நிலை பணியாளர்கள் பணம் கொடுத்தால் மட்டுமே வேலை செய்கிறார்கள், அதே போல உடன் ஒருவர் இருந்தால் மட்டுமே நம்மால் ஓய்வு எடுக்க முடிகிறது) உண்மையில் நல்ல கவனிப்பு. ஒரு சில தாமதங்கள் இருந்தாலும், இறுதியாக 'இல்லை' என்று முடிவு வந்த பிறகே அனுப்பினார்கள். 

இரண்டு வாரங்கள் ஆகிறது வீட்டிற்கு வந்து. நுரையீரலில் பாதிப்பு உள்ளதால், கண்டிப்பாக ஒரு மாதமாவது ஓய்வு எடுத்தாக வேண்டும் என்று சொல்லி விட்டனர். வேலையும் வீட்டில் இருந்தே என்பதால், வெளியே போக வேண்டிய பிரச்சினை இல்லை. வீட்டில் மனைவிக்கும், மக்களுக்கும் சோதித்ததில் அவர்களுக்கு இல்லை என்று உறுதி ஆகி விட்டது. அவர்களும் நான் இல்லாத நேரத்தில் எல்லா பொருட்களும் வீட்டிற்கே வருமாறு செய்தாகி விட்டது. இப்போதும் அதே தொடர்கிறது. என்ன வீட்டில் எந்த சிறு வேலையும் செய்ய விட மாட்டேன் என்கிறார்கள். சும்மாவே இருப்பது மிகவும் கடினம் என்று வடிவேலு சொன்னதன் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது. 

மக்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அரசு மருத்துவமனையில் நன்றாக வந்த ஆட்கள் மரணத்தை தழுவியதை நேரில் பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன். வேறு பல உடல் பிரச்சினைகள் இருப்பவர்கள் என்றால், மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எனக்கே நடுவில் பயம் வந்து விட்டது. 30 முதல் 40 வயதிற்குள் இருப்பவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு அதிகமாக வருகிறது என்று அங்கிருந்த மருத்துவர்கள் சொன்னார்கள். நானும் அதில் ஒருவன். நல்லதோ கெட்டதோ அனைவரும் மிக கவனமாக இருக்கவும். 

இனியாவது மாதம் ஒரு பதிவு போடுவேன் என்று 391645ஆவது முறையாக சபதம் எடுத்துக் கொண்டு, மீண்டும் சந்திப்போம்.  

Sunday, April 26, 2020

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்!

அனைவருக்கும் வணக்கம். வழக்கம் போல சோம்பேறித்தனம்தான். அதுவும் இந்த வீட்டு சிறை ஆரம்பித்த பிறகு, வீட்டம்மாவும், குட்டி இளவரசியும் கூடவே இருப்பதால், "எங்களை விட இதுதான் முக்கியமா". என்று எப்போது எடுத்தாலும் கேள்வி கேட்பதால், இந்த நேரத்தில் கூட பதிவு போட முடியவில்லை. இருந்தாலும், அப்படியெல்லாம் விட முடியாதுல்ல. அதான். 

கொரோனா:

2 மாதங்களுக்கு முன்பு, அலுவலகத்தில் இருந்து "எப்படி முன்னேத்தலாம், முன்னேறலாம்" என்று கிழக்கு கடற்கரை சாலையில் 4 நாட்கள் ரூம் போட்டு யோசித்தோம். அப்போது "ஏதோ இந்த சீனாவுல கொரோனான்னு நோய் வந்துருக்காம். அதனால, அங்க இருந்து யாரும் இங்க வரல. பயப்படாதீங்க. நமக்கு அதனால எதுவும் லாபம் இருக்குமா" என்றெல்லாம் பேசினார்கள். கடைசியாக "நமக்கெல்லாம் வராதுப்பா" என்று சொன்னார்கள். 

எண்ணி ஒரு மண்டலத்தில் (48 நாட்கள்), வீட்டில் உட்கார வைத்து விட்டது. இந்த வீட்டில் இருந்து வேலை செய்வது (WFH - Work From Home) என்பது மிகவும் சந்தோசமான விஷயம் என்று எண்ணிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம், இப்போது தங்களின் கருத்தை மாற்றிக்கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன், நான் உட்பட. 

"முன்னாடி கூட, வீட்டுக்கு வந்துட்டா ஏதோ கொஞ்ச நேரம் போன் மட்டும்தான் பேசுவீங்க. இப்ப என்னடான்னா, எப்ப பாத்தாலும், போன், லேப்டாப், என்னைய கண்டுக்கவே மாட்டேங்கிறீங்க. வீட்டுல இருந்து வேல பாக்க சொன்னா, எப்ப பாத்தாலும் வேல மட்டும்தானா" என்றெல்லாம் வீட்டில் திட்டு. திட்டுவது வீட்டம்மா இல்லை, குட்டி இளவரசி. அவளை சமாளிப்பது ஒரு பெரிய வேலையாக உள்ளது. அதிலும் நான் பேசுவதையெல்லாம் கேட்டு விட்டு, "இதுதான் உங்க வேலையா" என்று கிண்டல் வேறு. அதை சமாளிப்பதுதான் பெரும் பிரச்சினையாக உள்ளது. 

எங்களுக்கு முதன்மையான பணி வருவது இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளில் இருந்து. அங்கேயே நிலைமை படு மோசம். எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும், அதை அப்படியே நிறுத்தவும் என்று சொல்லி விட்டார்கள். எனவே கொஞ்சம் வேலை, கொஞ்சம் விளையாட்டு என்று சமாளிக்கிறோம். 

மளிகை, காய்கறிகள் பிரச்சினை இல்லை. அதே போல ரொம்பவெல்லாம் அலையாமல் இருப்பதை வைத்து சமாளித்துக் கொள்கிறோம். நாக்கைக் கட்டுப்படுத்திக்கொண்டு இருந்தாலே, இன்னும் 2 மாதம் கூட சமாளிக்கலாம் போல. 

ஒரே பிரச்சினை என்னவென்றால், மக்கள் ஒன்று மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். அல்லது மிகவும் பயப்படுகிறார்கள். கொஞ்ச வருடங்களுக்கு முன், இந்தோனேஷியாவில் பூகம்பம் வந்தது, உடனே நம்மூரில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. நம்மூரில் கூட அந்த அதிர்வு இருந்தது. நம்மாட்கள் என்ன செய்தார்கள். உடனே கும்பல் கும்பலாக கிளம்பி கடற்கரைக்கு போய் விட்டார்கள். அதிலும் ஒரு ஆள், "சார், சுனாமி வருதுன்னு சொன்னாங்க, நானும் குடும்பத்தோடு பாக்கலாம்னு வந்தேன். ஆனா சுனாமி வரல" என்று சோகமாக சொல்கிறார். 

இப்போது கூட தெரிந்த ஆட்கள் எல்லாம் வெளியே சுற்றுகிறார்கள். கேட்டால், யார் யார் வெளியே சுற்றுகிறார்கள் என்று பார்த்தார்களாம். "அவர்களும் உங்களை மாதிரியே வந்திருக்கலாமே" என்றால், "இல்லீங்க, அவங்க வேணும்னே வந்து சுத்துறாங்க" என்கிறார். சரிதான் என்று எண்ணிக்கொண்டேன். 

எங்களது அடுக்குமாடி குடியிருப்பில் நிறைய பஞ்சாயத்துகள். "எனக்கு சமைக்க ஆள் வரணும், என் குழந்தைய பாத்துக்க ஆயாவை விடணும், என் மாமா வீடு இங்க பக்கத்துல இருக்கு. நான் அங்கேயும் போவேன், இங்கேயும் வருவேன்" என்றெல்லாம் நிறைய விதமான கோரிக்கைகள். அடப்போங்கய்யா என்றாகி விட்டது. 

அதிலும், இந்த 4 நாட்கள் முழு ஊரடங்கிற்கு, எதற்காக சொன்னார்களோ, அதுவே ஆப்பாகி விட்டது. விளைவுகள் இன்னும் 4 முதல் 14 நாட்களில் தெரியும் என்று நினைக்கிறேன். நானும்தான் வெளியே போய் வாங்கினேன். அந்த எல்லாரும் என்ன செய்யறாங்க அப்படின்னு பாத்த ஆளு. ம்ம். 

திரை விமர்சனம்:

போன பதிவிற்கு பின் திரையரங்கம் எதுவும் செல்லவில்லை. எல்லாமே வீட்டில்தான். தர்பார், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஓ மை கடவுளே என்று எல்லாமே OTTயில்தான். Netflix கூட 4 நண்பர்கள் சேர்ந்து சந்தா கட்டி பயன்படுத்துகிறோம். மாதம் 200 ருபாய் மட்டும்தான். இப்போது ஹாட்ஸ்டார் உடன் டிஸ்னி வேறு வருவதால் மக்களுக்கும் ஓகே. அதில் VIP. sunNXT தேவைப்படும்போது மட்டும். மொத்தத்தில் மாதம் அதிகபட்சம் 400 மட்டுமே ஆகிறது. எப்போதோ DTH எல்லாம் எப்போதோ தூக்கி பரணில் போட்டு விட்டோம். ஆனாலும், எந்த படமும் அவ்வளவாக மனதை ஈர்க்கவில்லை. 

ரமணி vs ரமணி சீசன் 2:

ரொம்ப நாள் முன்பு ரமணி vs ரமணி சீசன் 1 பற்றி எழுதி இருந்தேன். அது ஒளிபரப்படும்போது முழுவதும் பார்த்த நினைவு இருந்தது. மீண்டும் 8 வருடம் முன்பு பார்த்தபோது, அப்போது புதிதாக திருமணம் ஆயிருந்ததால், நன்றாக இருந்தது. சீசன் 2 அப்போது ஏனோ பிடிக்கவில்லை. அது மட்டுமின்றி அது ராஜ் டிவியில் ஒளிபரப்பப்பட்டது.


அப்போது நாமக்கல் பள்ளிக்கு சென்று விட்டதால், அவ்வளவாக பார்த்த நினைவும் இல்லை. ஆனால், இப்போது 7 வயது பெண் குழந்தையுடன் அதைப் பார்க்கும்போது, சீசன் 2 தான் ரொம்ப நன்றாக இருக்கிறது. ஏனென்றால், அனுபவம்தான். 

நாகாவின் தொடர்கள் மிக அருமையாக இருக்கும். மர்ம தேசம் தொடர்களில் நடித்தவர்களை அப்படியே வேறு பரிமாணத்தில் இந்த தொடர்களில் காட்டி இருப்பார். சீசன் 1ல், வாசுகி. மர்ம தேசம் தொடரில் கிராமத்துப் பெண்ணாக வந்தவர் இதில் விளம்பர நிறுவனம் நடத்துபவர். சீசன் 2ல், தேவதர்ஷினி. விடாது கருப்பு தொடரில் மருத்துவம் படித்த, நவ நாகரிக பெண், இதில், குடும்ப தலைவி. அப்போது பார்க்கும்போது கூட, குழப்பம் வரவில்லை. 

என்ன, பழைய வேலைக்காரிகள் ஜோக், கீழ்த்தட்டு மக்களை (மட்டும்) கொஞ்சம் கேவலமாக காட்டி இருப்பது என சில குறைகள். இருந்தாலும், எந்த காலத்திற்கும் பொருந்தும் வகையில் இருப்பதே வெற்றிதான். இப்போது கவிதாலயா மீண்டும் யூடியூபில் ஏற்றி உள்ளார்கள். பார்த்து ரசியுங்கள். 

ரமணி vs ரமணி சீசன் 1 
ரமணி vs ரமணி சீசன் 2