Wednesday, November 5, 2014

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

சில பல காரணங்களால் கடந்த இரண்டு மாதங்களாக பதிவு போட முடியவில்லை. அது மட்டுமில்லாமல் அஞ்சானின் பாதிப்பில் இருந்தே இன்னும் மீளவில்லை. எனவே சில பல பிட்டுக்கள் மட்டும்.

புது வீடு:

8 வருடங்களாக இருந்த வாடகை வீட்டிலிருந்து, சொந்த வீட்டிற்கு மாறியாகி விட்டது. வேளச்சேரியில் இருந்து மீண்டும் குரோம்பேட்டை. கல்லூரிக் காலம் கிழக்கு குரோம்பேட்டை, தற்போது மேற்கு குரோம்பேட்டை.

என்னதான் இருந்தாலும், 8 வருடங்கள் ஒரே இடத்தில் இருந்து விட்டு மாறும்போது சொந்த வீடு என்றாலும், இன்னும் செட் ஆகவே இல்லை. நண்பர்களுடன் 5 வருடங்கள், சரியாக எனக்கு திருமணம் ஆகும்போது நண்பர்கள் ஆன் சைட், சொந்த வீடு என கலைய, நானே வீட்டுக்காரருடன் பேசி, வாடகை சற்றே குறைத்து, குடியேறி 3 வருடங்களும் முடிந்து விட்டது. சொந்த வீட்டை வாடகைக்கு விடலாம் என்றால் "அதெப்புடி, சொந்த வீட்டை விட்டுட்டு வாடகை வீட்டுல இருக்கிறது" என்று எல்லோரும் பொங்க, மாறியாகி விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக நிறைய வேலைகள். எல்லாம் முடித்து இணையத்தை இணைக்க இவ்வளவு நாட்களாகி விட்டது.

பயணம்:

முன்பு அலுவலகம் செல்ல தூரம் குறைவு. அதற்கே 'உயிர் பயம்'. இப்போதோ, பயண தூரம் இரு மடங்கு, அதுவும் GST சாலை. நள்ளிரவில் திரும்பும்போது எந்த சிக்னலிலும் நிற்பதில்லை. நின்றால் காலிதான். அதுவும் இல்லாமல் மெட்ரோ வேலை வேறு நடப்பதால், திடீரென குறுகிய சாலைகள் வந்து விடும். நம் பாடு திண்டாட்டம்தான். எதிர் திசையில் நம்மை நோக்கி (அவ்வளவாக) வர மாட்டார்கள் என்றாலும், சற்று கவனக் குறைவாக இருந்தால், நம்மை அரைத்து கூழாக்கி விடுவார்கள். கவனம்.

விமர்சனம்:

அஞ்சானுக்குப் பிறகு நன்றாக டியூன் ஆகி இருந்ததால், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் மட்டும் பார்த்தேன். அதன் பிறகு தினமும் வேலை நிறைய வந்ததால், தியேட்டருக்கே போகவில்லை. நீண்ட நாட்களுக்குப் பின் 'கத்தி' பார்த்தேன். படத்திலும், படத்தைப் பற்றியும் 1000 சர்ச்சைகள் இருந்தாலும், கூறப்பட்டுள்ள கருத்து மிக முக்கியம். மற்றபடி அரண்மனை, சலீம், ஜீவா, மெட்ராஸ் போன்ற படங்களை தரவிறக்கம் செய்தே பார்த்தேன். எல்லாமே நேரத்தைக் கடத்த உதவும். மற்றபடி ஒன்றுமில்லை. 

அரசியல்:

மக்களின் முதல்வரின் ஆணைக்கிணங்க, மாக்களின் முதல்வர் நாடாள, வாயில் கை சூப்பிக் கொண்டு நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டும், பதிவிட்டுக் கொண்டும், மக்களா அல்லது மாக்களா என்று தெரியாமல் இருக்கிறோம். இப்படியே போனால், "வெளங்கிரும்". 

நிகழ்வுகள்:

பாலியல் பலாத்காரம். முன்பெல்லாம் ஒரு கிளுகிளுப்பான செய்தியாக படித்து விட்டு போய் விடுவேன். இப்போது 2 வயது பெண்ணுக்கு தகப்பன் என்று ஆனவுடன், குழந்தையை யார் தூக்கினாலும் மனது 'பகீர்' என்கிறது. இதற்கு முன் இப்படியெல்லாம் நடக்கவில்லையா, அல்லது இப்போதுதான் இந்த செய்திகளை வெளியிடுகிறார்களா? என்றே தெரியவில்லை.

நமது செய்திகளை எப்போதும் நம்பக்கூடாது என்பதற்கான மிகச் சிறந்த உதாரணம், காவல் நிலையத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட ஒரு இளைஞனின் செய்திகள். ஆறு வேறு வேறு தமிழ் இணையங்களில் இருந்து எடுத்துள்ளவை.

தினமலர்
தினத்தந்தி
தமிழ் ஹிந்து
விகடன்
ஒன் இந்தியா
தினமணி

இவர்களில் சிறந்த திரைக்கதைக்கான முதல் பரிசு 'தின மலர்'. இரண்டாம் பரிசு 'தின தந்தி'. ஏன் தினமலருக்கு என்றால், அந்த SI கொல்லப்பட்ட நபரை தம்பி போல பார்த்துக் கொண்டார் என்றும், கொல்லப்பட்ட நபரும் அந்த SIயை அண்ணா என்றுதான் அழைப்பார் என்றும் ஒரு செய்தி இருந்தது. அந்த செய்தியை இப்போது காணவில்லை.

அதற்குள் மாக்களின் அடச்சே, மக்களின் முதல்வருக்கு குழம்பிய குட்டையில் இருந்து மீன் கிடைத்து விட்டதால், இந்த செய்திகள் இத்தோடு நிறுத்தப்படுகின்றன.

மற்றபடி உருப்படியான ஒரு செய்தி என்றால் தமிழ் ஹிந்துவில் வரும் 'மெல்லத் தமிழன் இனி..!' என்ற தொடர். குடியினால் நிகழும் எதிர் வினைகளை, உண்மை நிகழ்வுகளைப் பற்றிய தொடர். படியுங்கள்..