Monday, November 13, 2017

பதிவுலகில் பத்து வருடங்கள்!!

இன்றோடு பதிவு எழுத ஆரம்பித்து 10 வருடங்கள் ஆகி விட்டது. 120 மாதங்கள், 120 பதிவுகள். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. விளையாட்டாக ஆரம்பித்தது, இன்னும் விளையாட்டாகவே போய்க் கொண்டிருக்கிறது. கொஞ்சம் பின்னே சென்று வருவோம்.

2005லேயே தமிழ் பதிவுகள் பிரபலமாக ஆரம்பித்து விட்டாலும், இணையம் சென்றால் படம் தரவிறக்கம், இளையராஜாவின் யாஹூ குழுமம், செய்திகள் என்றே என் பிழைப்பு ஓடியது. அதிலும், ரஹ்மானின் யாஹூ குழுமம் மற்றும் மற்ற குழுமம்(Forum)களில் ராஜா மற்றும் ரஹ்மானின் சண்டைகள் பற்றி படிப்பேன்.

இந்த நிலையில்தான் குமுதம், ஆனந்த விகடனில் தமிழ் பதிவுகள் பற்றி எழுத ஆரம்பித்தனர். முதல் வாரமே இட்லிவடை பற்றிதான். அதன் பிறகு கேபிள்சங்கர் என நிறைய பேர் பற்றி வாராவாரம் வர ஆரம்பிக்கவும், அது என்னடா பதிவர் என்று தேட ஆரம்பித்தால், ஒரு முறை மிக தெளிவாக பதிவு என்றால் என்ன, அப்படி என செய்முறை விளக்கம் எல்லாம் போட்டிருந்தார்கள். நமக்குத்தான் கூகுளாண்டவர் அருள் ஏற்கனவே இருந்ததால், உடனே பதிவு ஆரம்பித்தாகி விட்டது. ஆனால், பெயர் வைக்கவே ஒரு மாதம் ஆகி விட்டது.

முதலில் என்ன எழுதுவது என்றே தெரியவில்லை. சும்மா, இளையராஜா, கமல் என ஜல்லி அடித்துவிட்டு, மீண்டும் ஆறு மாதம் என்ன எழுதுவது என்றே தெரியவில்லை. அதன் பின் ஆரம்பித்தது, அவ்வப்போது 3 மாதம், 4 மாதம் என இடைவெளி விழுந்தாலும், பின் எழுந்து சென்று கொண்டே உள்ளேன். நமக்கு கணக்கு பிடிக்கும் என்பதால், ஒரு சில புள்ளி விவரங்கள் அங்கங்கே வரும்.

ஏற்கனவே வேலை பற்றிய பதிவில் சொன்னது போல எனது இரண்டாவது நிறுவனத்தில் (2008-2011) செய்த சித்ரவதையால் அந்த வருடங்களில் பதிவுகள் குறைந்து விட்டன. அதன் பின் அவ்வப்போது வெளிநாட்டுப் பயணங்கள் போகும்போதெல்லாம், நிறைய பதிவுகள் போட ஆரம்பித்துவிட்டேன். அதனால்தான் முதல் 5 வருடங்களில் 50 பதிவுகள் என்பது அடுத்த 5 வருடங்களில் 70ஆக அதிகரித்துள்ளது. எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், எப்படி சிலர் ஒரு மாதத்திற்கே 50 பதிவுகள் எழுதுகின்றனர் என்பதுதான்.

நான் பதிவு எழுத ஆரம்பித்த உடன், என் நண்பர்கள் சிலரும் பதிவு எழுத ஆரம்பித்தனர். ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் நிறுத்தி விட்டனர். அப்போது பிரபலமாக இருந்த பாதிக்கு மேலான பதிவர்கள், இப்போது பதிவே எழுதுவதில்லை, அப்படியே எழுதினாலும் மிகக் குறைவு. இனி ஒரு சில மலரும் நினைவுகள்.

லிங்குசாமி: என்னுடைய பதிவுலக வரலாற்றில், இரண்டு பதிவுகள் மிக அதிகமாக படிக்கப்பட்டன. அஞ்சான், உத்தம வில்லன். இரண்டுக்குமே காரணம் லிங்குசாமி. அப்போது பாதிக்கப்பட்டவரை இன்று வரை மீட்க இயலவில்லை. சண்டைக்கோழி 2ல் கண்டிப்பாக மீது வர வாழ்த்துக்கள்.

என் அத்தை: எனது தந்தையின் தங்கை பற்றிய எனது பதிவு திடீரென நிறைய பேர் படிக்கும் பதிவாக உள்ளது. என் அத்தை என்றவுடன் ஏதாவது கில்மா பதிவு என்று நினைத்து விட்டார்களா என்று தெரியவில்லை. பகுதி 1, பகுதி 2 என இரண்டு இருந்தாலும், முதல் பகுதி மட்டும் அதிகம் படிக்கப்படுகிறது.

புகழ்: ஆரம்ப காலங்களில் நமது பதிவுகள் மற்றவர்களுக்கு தெரிய வேண்டுமெனில் மற்றவர்களின் பதிவுகளுக்கு போய், பின்னூட்டங்கள் இட்டு, பின் எனது பதிவிற்கும் வாருங்களேன் என்று அழைப்பு விடுக்க வேண்டும். அதை செய்தாலும், பின் ஏதோ ஒரு மாதிரி இருந்ததால், அதன் பிறகு அதை விட்டு விட்டேன். சில பதிவர்கள், தாங்கள் ரசித்த புது பதிவர்கள் என்று அறிமுகப்படுத்தினார்கள். அதன் மூலம் இன்னும் கொஞ்சம். ஒரு கட்டத்தில் யார் படித்தால் என்ன, நாம் பாட்டுக்கு எழுதுவோம் என்று எழுதிக்கொண்டிருந்தேன்.

திடீரென யாராவது இளையராஜா பற்றியோ, கமல் பற்றியோ கேவலமாக ஒரு பதிவு போட்டால், உடனே அதை எதிர்த்து ஒரு பதிவு போட்டால்தான் மனது அடைக்கும். அந்தப் பதிவில் ஏதாவது கருத்துக்கள் இட்டு, அது வேறு பஞ்சாயத்து ஆகி, அது தனிக்கதை. இருந்தாலும், வயது ஆகிறது அல்லவா. இப்போது கொஞ்சம், கொஞ்சம்தான் பக்குவம் வந்துள்ளது. அது போல ஏதாவது பதிவு படித்தால், முதலில் சிரிப்பு வரும். பின், அதைத் தவிர வேறு எதையாவது நினைக்க ஆரம்பித்தால், அது மறந்து விடும். பின் ஆற அமர ஏதாவது பதிவு எழுதுவேன்.

அதன் பிறகு திடீரென தமிழ் ஹிந்துவில் எனது பதிவு பற்றி வந்தது. என் வாழ்க்கையிலேயே மிகவும் பெருமையா தருணம் அது. நமது படைப்புகளுக்கு கிடைக்கிற அங்கீகாரம், அந்த போதையே தனி சுகம். இது போல அவ்வப்போது கிடைக்கும் பாராட்டுகளே இன்னும் என்னை எழுத வைக்கிறது.

சில நல்ல பதிவுகள்:

இந்தியாவின் சாலை விதிகள்

நாமக்கல் கல்விப் பண்ணைகள்

தவறுக்குக் காரணம் பெற்றோர்களே!! மாணவர்களே!!

சென்னையின் வாகன ஓட்டிகள்

திரைப்படங்கள்/திரையிசை பதிவுகளில் சில நல்ல பதிவுகள்:

நான் ரீமேக் செய்ய விரும்பும் படங்கள்!!! 

ராஜா ரசிகனும், ரஹ்மானும்!!!

விஸ்வரூபம் - தவறு கமல் மீதுதான்


தங்களின் ஆதரவிற்கு நன்றி!!

Monday, November 6, 2017

ஞாபக மறதி

முன் குறிப்பு: இது மிகவும் சோகமான பதிவு.

நமக்கு உள்ள சக்திகளிலே மிகவும் நல்லது என்னவென்றால் ஞாபக மறதிதான். அனால், அதை சரியாக நாம் பயன்படுத்தாததால்தான் நிறைய பிரச்சினைகள். எதை மறக்க வேண்டுமோ அதை நினைவில் வைத்துக் கொள்வது, எதை நினைவில் வைக்க வேண்டுமோ அதை மறந்து விடுவது, இவையே நிறைய பிரச்சினைகளுக்கு காரணம்.

சமீபத்தில் உங்களை மிகவும் பாதித்த சம்பவம் என்னவென்று கேட்டால், மழை பெய்தது, அதன் பாதிப்புகள் பற்றி சொல்லலாம், சரி அதற்கு முன் என்று கேட்டால், நெல்லையில் கந்து வட்டி கொடுமையால் 4 பேர் இறந்தது என்போம், சரி அதற்கும் முன்னால் என்றால், அனிதா தற்கொலை என்போம். சரி ஒரு பத்து வருடம் முன்னால் என்று கேட்டால், சற்றே யோசிப்போம், கும்பகோணம் தீ விபத்து எனலாம். (அது நடந்து 16 வருடங்கள் ஆகி விட்டது),

சரி அதற்கு காரணமானவர்கள் என்ன ஆனார்கள் என்று பார்த்தால், எனக்குத் தெரிந்து அந்தப் பள்ளியின் தாளாளர் விடுதலை ஆகி விட்டார். இப்படி அந்தந்த நேரங்களில் அதைப் பற்றி பொங்கி குமுறுவோம், அதன் பின் அதற்கு காரணமானவர்கள் பற்றி மறந்து விடுவோம், நமக்கும் அடுத்து வேலை வருகிறது அல்லவா. அதை விட முக்கியம், எதுவாக இருந்தாலும், எங்கேயோ நடப்பதற்கும், நமக்கு தெரிந்தவர்களுக்கு நடப்பதற்கும், நமக்கு நடப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

இருந்தாலும், எங்கோ நடந்த சில நிகழ்வுகள், இன்னமும் என் மனதில் ஏதோ ஒரு ஓரத்தில் அரித்துக்கொண்டே இருக்கின்றன. இதில் சில நிகழ்வுகள் "அட ஆமால்ல", சில நிகழ்வுகள் "இப்படி நடந்ததா?" என்பதாக கூட இருக்கலாம். 

அருணா ராமச்சந்திரா:

அப்போதைய பம்பாயில் ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நர்ஸ் அருணா, அதே மருத்துவமனையில் உள்ள ஒரு மருத்துவருடன் நிச்சயிக்கப்பட்டிருந்தார். அதே மருத்துவமனையில் இருந்த ஒரு உதவியாளரான சோஹன்லால் என்பவருடன் ஏற்கனவே சில பல பிரச்சினைகள். அதனால் 1973 நவம்பர் 27ல் சங்கிலியால் கட்டப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார். அதன் விளைவாக கோமாவிற்கு சென்று விடுகிறார். கிட்டத்தட்ட 42 வருடங்கள், நினைவு திரும்பாமலே 18 மே 2015ல் இறந்தும் விடுகிறார்.

அவர் இறந்த பிறகு வந்த செய்திகளில்தான் எனக்கே இது தெரியும். கிட்டத்தட்ட காய்கறி போல 42 வருடங்களாக இருந்த பெண்ணை, அந்த நிலைக்கு ஆளாக்கிய கயவன், 7 வருடங்கள் சிறையில் இருந்து விட்டு, திரும்பி வந்து, திருமணம் செய்து ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்ந்து(ம்) வருகிறான். அருணாவைக் கருணைக்கொலை செய்ய அனுமதி கேட்டும் கொடுக்கப்படவில்லை.

யோசித்துப் பாருங்களேன். குற்றம் செய்தவன் 7 வருடம் தண்டனை முடிந்து, மீண்டும் சாதாரண வாழ்க்கைக்கு திரும்பி விட்டான். ஆனால், பாதிக்கப்பட்ட நபர், 42 வருடங்கள், யோசிக்க முடிகிறதா, 42 வருடங்கள் ஒன்றும் செய்ய முடியாமல் நடைப்பிணமாக இருந்து இறக்கிறார். இதேதான் நிர்பயா வழக்கிலும் நடக்கும்.

மெட்ரோ ரயில் விபத்துக்கள்:

6 வருடங்களுக்கு முன்னால், இன்னும் குறிப்பாக சொன்னால், குழந்தை பிறப்பதற்கு முன், பொதுவாக ஒரு விபத்து பற்றி படித்தால் "தண்ணி போட்டுட்டு ஓட்டி இருப்பான், இல்லேன்னா, கன்னா பின்னான்னு போயிருப்பான்" என்று எண்ணுவேன். ஆனால், வாழ்க்கை பற்றிய பயம் வந்த பின், அப்படி எண்ணுவதில்லை.

2015 ஜூன் 17, அன்றுதான் என் மகளுக்கு இரண்டாவது நாள் பள்ளிக்கு சென்றாள். முதல் 3 நாட்கள், பெற்றோரும் உடன் செல்லலாம் என்பதால், அந்த 3 நாள் மட்டும் அலுவலகம் மதியம்தான் வருவேன் என்றும் சொல்லியிருந்தேன். அன்று மகளை பள்ளியில் இருந்து 12 மணிக்கு அழைத்து வந்த பின், செய்தி பார்த்தால், பரங்கிமலை அருகே பில்லர் கீழே விழுந்து கிரிதரன் என்பவர் பலி என்று செய்தி. அடுத்து அவரைப் பற்றி வந்த செய்திதான் பகீர் என்றது, தலைக்கவசம் அணிந்திருந்தார், அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணி என்பதுதான் அது.

அதே போல கார்த்திகேயன் என்ற பொறியாளர், நந்தனம் அருகே இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது, கிரேன் தவறான திசையில் வந்து தாக்கியதில் உயிரிழந்தார். அவருக்கு அப்போது 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. இதைப்போல இன்னும் நிறைய விபத்துக்கள் நடந்திருக்கலாம். ஆனால், இந்த இரண்டு மட்டும் என்னால் ஏனோ மறக்கவே முடியவில்லை. எல்லோரும் மெட்ரோ ரயில் பற்றி பெருமையாக பேசும்போது இவர்களது குடும்பத்தில் என்ன நினைப்பார்கள், அந்த குழந்தைகள் எப்படி இருப்பார்கள் என்று அடிக்கடி தோன்றுகிறது.

இந்த செய்திகள் எல்லாம், கூகிளிலேயே தேடினால் கிடைக்கிறது, ஆனால், விடைதான் இல்லை. இன்னும் சில செய்திகள் உள்ளன. எப்போதோ வந்த செய்திகள்தான். ஆனாலும் இன்னும் கண்ணில் ஈரம் வரச்செய்பவை அவை.

இரண்டு குழந்தைகள் உள்ள பெண், இன்னொருவனுடன் கள்ள தொடர்பு. இருவரும் சேர்ந்து கணவனை கொலை செய்து விடுகிறார்கள். அதன் பின் அவர்கள் இருவருக்குள்ளும் சண்டை. அதில் அந்த பெண் கொலை செய்யப்பட்டாள். பிறகு அந்த கள்ளக்காதலன் அந்த இரு குழந்தைகளையும் (6 வயது சிறுவன், 4 வயது சிறுமி என்று நினைக்கிறேன்), சென்னையில் இருந்து மும்பை செல்லும் தொடர்வண்டியில் தனியே ஏற்றி அனுப்பி விடுகிறான். காவல்துறை, கொலையாளிகளை அடையாளம் கண்டு பிடித்தபின்தான் இந்த தகவல் தெரிகிறது. உடனே சென்னை மும்பை இடையே அனைத்து ரயில் நிலையங்களிலும் அந்த இரு குழந்தைகள் புகைப்படம் அனுப்பி தேடுகிறார்கள், ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.

அந்த இருவரும் என்ன ஆனார்கள் என இரண்டு மூன்று தினங்கள் தொடர்ந்து செய்திகள் பார்த்தேன், ஆனால், அதன் பிறகு அதைப்பற்றிய செய்திகள் எதுவும் வரவில்லை. அவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என யோசிக்கவே முடியவில்லை. இந்த நிகழ்வுகள் யாவும் மீண்டும் நான் இணையத்தில் தேடி, கொஞ்சம் விவரமாக கொடுத்துள்ளேன்.

ஆனாலும், இவை யாவும் அவ்வப்போது, இன்னும் குறிப்பாக சொன்னால், ஏதாவது சோக செய்திகள் வரும்போது, இவையும் என் மனதில் நிழலாடும். ஏதோ பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. "நீங்க வேணும்னா புளூ டூத்த ஆன் பண்ணுங்களேன், சோகத்தை ஷேர் பண்ணிக்கலாம்."