Sunday, November 4, 2018

தென்றல் வந்து தீண்டும்போது...

முதலில் பாடலைக் கேட்போம்.


தோணி பட விழாவில் நாசர் இந்த பாடல் உருவான கதையை சொல்லி இருந்தார். நகைச்சுவையாக இருந்தாலும், அவருடைய உண்மையான உணர்வுகளை சொல்லி இருப்பார். 


இதே பாடல் தெலுங்கில் சில வருடங்களுக்கு முன் 'எவடே சுப்பிரமணியம்' படத்தில் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. அதை அவரே இன்னும் நன்றாக மெருகூட்டினார் என்று படித்தேன்.


சில நாட்களுக்கு முன் MOP வைஷ்ணவா கல்லூரியிலும், பின் எம்ஜிஆர் சத்யா பெண்கள் கல்லூரியிலும் இளையராஜாவின் 75ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இந்த இரண்டு இடங்களிலும் கண்டிப்பாக மாணவிகள் 2000களின் ஆரம்பத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். ஆனாலும், இரண்டு இடங்களிலும் தானத்தந்த தானத்தந்த என்ற ஆரம்பித்தவுடன் அவர்களின் ஆரவாரத்தைக் கேட்டால் ஆச்சரியமாக இருந்தது. கிட்டத்தட்ட அதே போலவே கோயமுத்தூர் PSG கல்லூரியிலும். அதே ஜனனி ஜனனி முதல், தென்றல் வந்து தீண்டும்போது வரை.


இந்த பாடல் அந்த அளவிற்கு மக்களின், குறிப்பாக இளைஞர்களின் மனதில் இருப்பது ஆச்சரியம். அங்கு அவரின் பேச்சும், மாணவிகளின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களும் காணொளியாக. நீங்களும் பாருங்கள், பொறுமை அவசியம்.




மூன்றிலும் நிறைய முறை தற்பெருமை பற்றி நிறைய பேசினாலும் ஒரு சில விஷயங்கள் நன்றாக பேசினார். குறிப்பாக, வாழ்க்கையில் வெற்றி பெறுவது பற்றிய கேள்விக்கு, வெற்றி என்பது நீங்கள் செய்யும் செயல்களுக்கு மட்டுமே. வாழ்க்கைக்கு இல்லை. அடுத்து மன நிம்மதிக்கு என்ன மாதிரி இசை என்ற கேள்விக்கு உன் மனதிற்கு என்ன பிடிக்குமோ அதைக்கேள். நான் எதையாவது சொல்லி, அது இன்னும் பிரச்சினை அதிகரித்து விடப் போகிறது என்றார். இது இரண்டும் கொஞ்சம் கூட தற்பெருமை இன்றி வயதுக்கேற்ற மாதிரியான பதில்கள். அதே போல உங்களது குடும்ப உறவுகள் இல்லாமல் உங்களுக்கு பிடித்த 3 பேர் என்ற கேள்விக்கு முதலில் மூகாம்பிகை என்றார். பிறகு தன்ராஜ் மாஸ்டர் மற்றும் GK வெங்கடேஷ் என்றார். அந்த வகையில் மகிழ்ச்சி.

ஆனால், MOPயில் கொஞ்சம் அதிகமாகவே 'நான், என்' விகுதி இருந்தது. அதிலும் ஒரு ஆட்டோ ஓட்டுனர் தன்னிடம் "ஸார், நீங்க மட்டும் இல்லேன்னா, நான் என் பொண்டாட்டிய கழுத்தை நெரிச்சிருப்பேன்" என்றதெல்லாம் கொஞ்சம் அதிகமாக தெரிந்தது. ஆனாலும், என்ன செய்ய. அது உண்மைதான். 

ஏன் நிறைய பேர் இளையராஜா என்று உருகிறார்கள் தெரியுமா. ஒவ்வொருவருக்குமே வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான நிகழ்வுகளும் சோக நிகழ்வுகளும் கலந்திருக்கும். அல்லது மறக்க முடியாத கணங்களும் இருக்கும். 1970களிலிருந்து 90கள் வரை பிறந்தவர்களுக்கு இப்போது இருப்பது போல நினைத்த நேரத்தில் நினைத்த பாடல்களை கேட்க முடியாது. ஆனால், அந்த குறிப்பிட்ட சமயத்தில் கேட்கும் பாடல் நம்மை கதறி அழ வைத்திருக்கும், கவலையை மறக்க வைத்திருக்கும். எத்தனையோ வருடங்கள் கடந்திருந்தாலும், இன்னும் அந்த பாடல் எங்காவது நமக்கு கேட்டால், நம்மை அறியாமல் பின்னோக்கி செல்வோம். இது பல பேருக்கு, ராஜாவின் பாடலாக அமைந்து விட்டது. இது பற்றிய பதிவு. இது 96 படம் வருவதற்கு முன்பே நான் எழுதியது.  

அதே போல ஜனவரி முதல் டிசம்பர் வரை, நாம் கொண்டாடும் அனைத்து பண்டிகைகள், தினங்கள் அனைத்திற்கும் ராஜாவின் ஏதாவதொரு பாடல் பொருந்தியிருக்கும் அல்லது நாமே பொருத்திக் கொண்டு இருப்போம். சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் மட்டும் விதி விலக்கு. அதை மொத்தக் குத்தகைக்கு ரஹ்மான் எடுத்துள்ளார்.

ஜனவரி:
புத்தாண்டு - இளமை இதோ இதோ (சகலகலா வல்லவன்)
போகி - மார்கழிதான் ஓடிப் போச்சு (தளபதி)
பொங்கல் - தைப்பொங்கலும் பொங்குது (மகாநதி)
ஜல்லிக்கட்டு - தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறலாம்.

பிப்ரவரி:
காதலர் தினம் - நிறைய பாடல்கள்.

மார்ச்:
மகளிர் தினம் - மகளிர் மட்டும் (மகளிர் மட்டும்)

ஏப்ரல்: 
சித்திரை 1 - தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறலாம்.

மே:
உழைப்பாளர் தினம் - உழைப்பாளி இல்லாத (உழைப்பாளி)
அன்னையர் தினம் - அம்மா என்றழைக்காத (மன்னன்)

ஜூன்:
ரம்ஜான் - எங்குமுள்ள அல்லா (தர்மசீலன்)

செப்டம்பர்:
விநாயக சதுர்த்தி - அட சாமி வருது (உடன் பிறப்பு)

அக்டோபர்: ஆயுத பூஜை - தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறலாம்.
தீபாவளி - பட்டாச சுட்டு சுட்டு (பூவே பூச்சூடவா)

டிசம்பர்:
கிறிஸ்துமஸ் - தேவனே (வெள்ளை ரோஜா) 

இது தவிர இன்னும் தாய்ப்பாசம், சகோதர பாசம், அதிலும் அண்ணன் தங்கைக்கு தனியாக, அண்ணன் தம்பிக்கு தனியாக, பிரியும்போது ஒரு பாடல், சேரும்போது ஒரு பாடல் என, அது கேட்க நன்றாக இருக்கிறதோ இல்லையோ, நம் நிலையை அப்படியே உணர்த்துவது போல இருக்கும், நம் வாழ்வோடு இணைந்து விடும். இது பற்றி ஏற்கனவே ஒரு நீயா நானா விவாதம் கூட நடந்தது. அதைப்பற்றிய பதிவு. 

இல்லை இல்லை. ராஜா 1000 படங்கள் இசையமைத்திருந்தாலும் அதில் பாதிதான் வெற்றி. மற்றவைகளை ஒரு முறை கூட கேட்க முடியாது. ஆனால், மற்றவர்கள் அப்படி இல்லை. வெற்றி சதவிகிதத்தை பாருங்கள், ஹிந்தியில ஒன்னும் பண்ண முடியலல்ல, ஹாலிவுட் தெரியுமா, எங்க சிம்பொனியை விட சொல்லுங்க, முகவரி படம் பார்த்தீர்களா, இசை படம் பார்த்தீர்களா, என்னவோ ராஜாதான் எல்லாத்தையும் பண்ணுனாரா, அவருக்கு முன்னால எத்தனையோ ஜாம்பவான்கள் இருந்திருக்காங்க, 2010க்கு அப்புறம் ஒரு நல்ல பாட்டு சொல்லுங்க பாப்போம், என்றெல்லாம் ஒரு கும்பல் வரும். 

அவர்கள் சொல்வதிலும் மிகச்சில விஷயங்கள் சரியாக இருக்கலாம். ஆனாலும், புத்திக்கு தெரியுது, மனசுக்கு தெரியல. மற்ற இசையமைப்பாளர்கள் கும்பலுக்கு. ராஜா எங்களுக்கு.

Wednesday, October 17, 2018

The Purge Series! ஆனா இது அதுல்ல??

எப்போது செய்திகள் பார்த்தாலும், கொலை, கொள்ளை. தினமும் நாம் பார்க்கும் நிகழ்வுகள் எல்லாமே, நமக்கு எதிர்மறை எண்ணங்களையே தூண்டுகின்றன. அப்படிப்பட்ட சமயங்களில் இந்தியன், அந்நியன் போன்ற ஷங்கர் படங்கள், பழைய SA சந்திரசேகர் படங்கள் பார்த்து ஆறுதல் அடைய வேண்டியதுதான். 

நிஜத்தில், யாராவது தவறு செய்யும்போது "அட ஏம்பா இப்படி பண்ற" என்று கேட்கக்கூட நமக்கு (எனக்கு) பயம். நமக்கெதுக்கு வம்பு, யார்க்குதானே நடக்குது என்று போய் விடுகிறேன். அதே போல ராட்ஷசன் படத்தில் வரும் கொலைகாரன் போல ஆட்களைப் பார்க்கும்போது "எப்படித்தான் இந்த பண்றதுக்கு மனசு வந்துச்சோ தெரியல" என்கிறோம். 

உண்மையில் நாம் ஒவ்வொருவருக்கும் குரூரமான, வக்கிரமான எண்ணங்களும் ஆசைகளும் இருக்கும். ஆனால் நம் ஆழ் மனதில் உள்ள பயம் அதை செய்ய விடாது. அதை தாண்டி ஒரு முறை எதையாவது செய்து விட்டால் அவ்வளவுதான். ருசி கண்ட பூனையாக மாறி விடுவோம். தற்கொலை எண்ணம் கூட அப்படிதான். எனக்கென்னவோ நிறைய படங்களில் வரும் கொடூரமான காட்சிகளை பார்க்கும்போது அது அந்த இயக்குனரின் ஆழ் மனதின் ஆசைகளாக இருக்குமோ என்று தோன்றும். சரி விடுங்க. 

"உங்களுக்கு ஒரு வாய்ப்பு. ஒரு நாள் ராத்திரி, நீங்க யாரை வேணும்னாலும் கொல்லலாம். யாரும் இந்தக் கேள்வியும் கேக்க மாட்டோம்" என்று அரசு சொல்கிறது எனில், என்ன செய்வீர்கள். சிறு வயதில் நம்மை அடித்த பள்ளி வாத்தியார் முதல், அலுவலகத்தில் உள்ள மேலாளர் வரை எல்லோரையும் கொல்ல தோன்றும் அல்லவா. அதே போல, நம்மையும் கொல்ல வேண்டும் என்று சிலருக்கு தோன்றும் அல்லவா. இப்போது நம் நிலை வாழ்வா, சாவா என்றாகி விட்டது. குறிப்பாக சொன்னால், புதுப்பேட்டை படத்தில் வருவது போல "இன்னைக்கி ராத்திரி தாண்டுவியான்னு பார்ப்போம்" என்றாகி விடும். 

இப்படி ஒரு எண்ணம்தான் ஒருவருக்கு தோன்றியது. அதன் விளைவுதான் The Purge series. இதுவரை 4 பாகங்கள் வந்துள்ளன. ஒரு சிறு பார்வை. 

The Purge (2013):


அமெரிக்காவில், 2014ல் புதியதாக ஆட்சிக்கு வரும் ஒரு கட்சி, பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் சமுதாய ஏற்றத்தாழ்வுகள் என்பதால், அதைக் குறைக்க ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21ம் தேதி இரவு 7 மணி முதல், அடுத்த நாள் காலை 7 மணி வரை, கொலை உட்பட எந்த குற்றங்கள் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். தண்டனை கிடையாது என்று சட்டம் கொண்டு வருகிறது. இதற்கு Purge Day (களையெடுப்பு நாள்) என்று பெயர். இதன் விளைவாக அடுத்த ஏழெட்டு வருடங்களில் வேலை வாய்ப்பின்மை, வறுமை, சட்ட விரோத நடவடிக்கைகள் எல்லாமே கட்டுக்குள் வருகிறது. 

2022ல், ஜேம்ஸ், பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனர், மனைவி கல்லூரியில் படிக்கும் மகள், பள்ளியில் படிக்கும் மகன் என வாழ்ந்து வருகிறார். மகள் தன்னை வயது மிக மிக அதிகமான ஒருவனைக் காதலிப்பது அப்பாவுக்கு பிடிக்கவில்லை. இவர்கள் தயாரிக்கும் பாதுகாப்பு உபகரணங்களைத்தான் நிறைய பேர் பயன்படுத்துகிறார்கள். அதனாலேயே குறுகிய காலத்தில் பெரிய பணக்காரன் ஆனதால், அண்டை வீட்டாரும் பொறாமை வேறு. 

2022 மார்ச் 21 இரவு வீட்டிற்கு வந்து எல்லா பாதுகாப்பையும் உறுதி செய்து மனைவி மக்களோடு சாப்பிட்டு விட்டு இருக்கும்போது, மகளின் காதலன், ஏற்கனவே வீட்டிற்கு வந்து ஒளிந்து கொண்டிருந்தவன், ஜேம்ஸை கொல்ல நினைக்கிறான். அதே நேரம், சாலையோரம் இருக்கும் ஏழை ஒருவனை ஒரு கும்பல் சும்மா கொலை செய்ய முயற்சிக்க, ஜேம்ஸின் மகன் வீட்டின் பாதுகாப்பை விலக்கி, அவனை வீட்டிற்கு வரவைத்து காப்பாற்றுகிறான். அதே நேரம் காதலன் ஜேம்ஸை சுட, அவன் தப்பித்து, மகளின் காதலனை சுட்டு விடுகிறான். உள்ளே வந்த வெளியாள், அவ்வளவு பெரிய வீட்டில் போய் ஒளிந்து கொள்கிறான். 

அவனை தேடி வந்த கும்பல், அவனை வெளியே விடவில்லை என்றால், ஜேம்ஸ் மற்றும் குடும்பத்தினரை கொள்ள வேண்டி இருக்கும் என மிரட்டுகிறது. எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே படம். 

The Purge: Anarchy (2014):


2023 மார்ச் 21. வருடாந்திர களையெடுப்பு (purge) நிகழ்வு இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆரம்பிக்க இருக்கிறது. ஒரு உணவகத்தில் வேலை பார்க்கும் பெண், வயதுக்கு வந்த மகள், உடல் நிலை சரியில்லாத தந்தையுடன் இருக்கிறார். ஒரு இளம் கணவன், மனைவி. தங்களுக்கு கருத்து வேற்றுமை இருப்பதால், விவாகரத்து பற்றி சகோதரியுடன் பேச செல்கிறார்கள். தனியாக ஒரு காவல் அதிகாரி. போதையில் வண்டி ஓட்டி, தனது மகனை கொன்று விட்டு எப்படியோ வெளியில் வந்து விட்ட பணக்காரனை இன்று கொல்ல வேண்டும் என்று துடிக்கிறான். இவர்களுக்குள் நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டமே இந்தப்படம். 

போன படத்திற்கும் இதற்கும் பெரியதாக தொடர்பு இருக்காது. அதில் வெளியாளாக வருபவர், இதில் போராளியாக வருவார். இதில் பணக்காரர்கள் எப்படி இந்த களையெடுப்பு நாளை கொண்டாடுகிறார்கள் என்றெல்லாம் வரும். பணம் கொடுத்து, ஆளை கூட்டி வந்து கொலை செய்வது, எங்கெங்கு எல்லாம் வீடில்லாத ஏழைகள் இருப்பார்களோ அவர்களை தேடிப்போய் கொள்வது என்றெல்லாம் வரும். 

இந்தப் படம் பார்க்கும் போதுதான் தோன்றியது இப்படியெல்லாமாடா யோசிப்பீங்க? 

The Purge: Election Year (2016):


இந்த களையெடுப்பு நிகழ்வால் தனது குடும்பத்தை இழந்த ரோன் என்ற பெண், அதற்காக போராடி, ஜனாதிபதி தேர்தலில் நிற்கிறார். தான் வென்றால், இந்த நிகழ்வு ஒழிக்கப்படும் என்கிறார். அவரது பாதுகாப்பிற்க்கு போன படத்தில் வநத காவல் அதிகாரிதான் இருக்கிறார். முதல் இரண்டு படங்களில் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளைக் கொல்லக்கூடாது என்ற விதி இருக்கும். ஆனால், இதில் அந்த விதி நீக்கப்பட்டு விடும், ரோனைக் கொல்வதற்காக. 

இதற்கு நடுவில் எப்படியாவது தனது கடையைக் காப்பாற்ற வேண்டி துடிக்கும் ஒரு மளிகை கடைக்காரர்(?) அவரின் உதவியாளர், தோழி மற்றும் புரட்சியாளாரான முதல் பாகத்தில் வந்த அந்நியர். ரோன் கடத்தப்படுகிறார். கடைசியில் என்ன நடக்கிறது என்று நீங்களே பாருங்கள். இதில் மருத்துவ சுற்றுலா போல களையெடுப்பு சுற்றுலா என கொலை செய்வதற்காகவே அமெரிக்கா வருவார்கள். ஆத்தி என்று தோன்றியது. 

The First Purge (2018):


இது முந்தைய கதை. எப்படி இந்த களையெடுப்பு நிகழ்வு தோன்றியது. முதன் முதலில் நியூயார்க் நகரில் ஒரு குறிப்பிட்ட, ஏழைகள் நிறைந்த இடத்தில் ஒரு முன் மாதிரி நிகழ்வாக அறிமுகப்படுத்துகிறார்கள். பல பேர் அதை எதிர்க்கின்றனர். இருந்தாலும் பணம் கொடுத்து மக்களைத் தூண்டுகின்றனர். 

ஒரு போதைப்பொருள் வியாபாரி, அவனுடைய முன்னாள் காதலி, அவளது தம்பி, இரு தோழிகள், தம்பியை சீண்டிக்கொண்டே இருக்கும் ஒருவன் என வழக்கம் போல ஆட்கள். மக்களுக்கு சரியாக புரியாமல் எல்லோரும் இந்த நிகழ்வை சந்தோசமாக கொண்டாட, அதை மாற்ற அரசே ஆட்களை இறக்கி நிறைய பேரைக் கொல்கிறது. பிறகுதான் மக்களுக்கு விளைவுகள் புரிகிறது. இருந்தாலும், இதே வெற்றி என்று சொல்லி அரசு அதை நடைமுறைப்படுத்துகிறது. அவ்வளவுதான் நான்கு பாகங்களும். 

பொதுவாகவே அமெரிக்க மக்கள் கொஞ்சம் பயந்தவர்கள். "இந்த உலகம் சீக்கிரம் அழியப்போகுது, நம்மள காப்பாத்த யாராவது இருந்தா நல்ல இருக்கும்" என்ற எண்ணங்களே அங்கு சூப்பர் ஹீரோ படங்கள் வெற்றி பெற காரணம் என்று எங்கோ, எப்போதோ படித்துள்ளேன். இதுவும் அதே போல "ஒருவேளை இப்படி இருந்தா நல்லா இருக்குமோ" என்று எண்ணும் அளவிற்கு இருக்கும். ஆனால்,இதை வைத்து எப்படி ஏழைகள் கொல்லப்படுகிறார்கள், பணக்காரர்கள் எப்படி இந்த விளையாட்டை விளையாடுகிறார்கள் என்றெல்லாம் காண்பித்திருப்பார்கள். 

"சரி, இதைப்பத்தி இவ்ளோ சொல்ற அளவுக்கு என்ன இருக்கு" என்று நினைப்பவர்களுக்கு, படத்தில் வரும் சில காட்சிகள்/வசனங்கள். ஏழ்மையை ஒழிக்கிறேன் என்று சொல்லி ஏழைகளைக் கொல்வார்கள். அடிக்கடி புதிய அமெரிக்கா பிறக்கிறது என்பார்கள். ஒரு நாடு நன்றாக இருக்க நீ உன் உயிரை தியாகம் செய்கிறாய் என்று சொல்லி சொல்லி கொலை செய்வார்கள். நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கெல்லாம் முந்தைய அரசே காரணம் என்பார்கள். நாடு சுத்தமாக இது போன்ற அறுவை சிகிச்சை அவசியம் என்பார்கள். இது எல்லாவற்றையும் எங்கோ கேட்டது போல இருக்கிறதா. அதுதான் அதேதான்.

Friday, September 21, 2018

திரை விமர்சனம்

நேரடியாக போய் விடலாம். 

கடைக்குட்டி சிங்கம்:


அருமையான குடும்பப் படம். சில இடங்களில் நாடகத்தனம் இருந்தாலும், கண்டிப்பாக ரசிக்கக்கூடிய படம்தான். கதை அனைவருக்கும் தெரிந்ததுதான். 5 பெண்களுக்கு பிறகு பிறக்கும் ஆண், அவனுக்காகவே வளர்ந்து நிற்கும் இரு அக்கா மகள்கள், பையனுக்கோ வெளியிலே காதல், இதனால் ஏற்படும் குடும்ப சிக்கல்கள், நடுவே ஒரு ஆணவக்கொலை வேறு. கடைசியில் எப்படி சுபமாக முடிக்கிறார் நாயகன் என்பதே கதை. 

நான் ஒரே பையன்தான். ஆனால், மிக நெருங்கிய சொந்தக்காரர் ஒருவருக்கு கிட்டத்தட்ட இந்த படத்தில் வந்த நிலைதான். தனது மகளைக் கட்ட வேண்டும், சொந்தம் விட்டுப் போக கூடாது என அக்காவும், அம்மாவும் இருக்க, இவரோ மறுக்க, பெரிய பஞ்சாயத்து. ஒரு வழியாக சமாதானம் ஆகி, வேறு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து முடித்திருந்தாலும், இன்னும் சுபம் ஆகவில்லை. யாரையாவது பலிகடா ஆக வேண்டும் என்ற நிலையில் என் தலை கூட வெட்டப்பட இருந்தது. அந்த ஒரு காரணமே என்னால் படத்துடன் ஒன்ற முடிந்தது. 

அது ஏன் தேவையே இல்லாமல் நிறைய படங்களில் இரு மனைவிகளை படத்தில் கொண்டு வருகிறார்கள் என்றே தெரியவில்லை. இதில் கூட ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் போகும் பாத்திரம் என்பதால் ஒத்துக் கொண்டாலும், சுந்தர பாண்டியன், கோலி சோடா படத்திலும் தேவையே இல்லாத இரு மனைவிகள் பாத்திரம். குடும்பத்துடன் முகம் சுழிக்க வைக்காமல் ரசித்து பார்க்கலாம். 

விஸ்வரூபம் 2:


விஸ்வரூபம் முதல் பாகத்திலேயே, அடுத்தது நட்டுக்கொள்ளும் என்று தெரிந்து விட்டது. அடுத்த ஒரு வருடத்திற்குள் வந்திருந்தால் கூட ஓரளவு வெற்றி பெற்றிருக்கும். இப்போது அரசியலில் வேறு இறங்க போவதால் மக்கள் நிறைய எதிர் பார்த்திருப்பார்கள். பொறுத்திருந்து இந்தியன் 2 வந்த பிறகு வெளி விட்டிருக்கலாம். படம் பார்த்த பிறகு தோன்றியது 'விஸ்வரூபம் 1 பார்த்து விட்டு சிலிர்த்து போய் சில்லையெல்லாம் வீசி எறிஞ்சேன், பெரிய பதிவெல்லாம் வேற போட்டேன். 

பாதிக்கு மேல் பழைய படத்தில் வந்த காட்சிகள். மீதி கூட படத்தொகுப்பின் மிச்சம் மீதி இருந்த காட்சிகள் என்று தெளிவாக தெரிகிறது. கடைசி சண்டை கூட போன படத்தின் இறுதியில் சும்மா காண்பிப்பார்கள். அம்மா, ராணுவம், கொஞ்சம் லண்டன் காட்சிகள் மட்டும் புதிது. பேசாமல் கமல் இணையத்திலேயே விட்டுருக்கலாம். கோவணமும், கொஞ்ச நஞ்ச மானமுமாவது மிஞ்சியிருக்கும். குறைந்தது புதுமை (போன முறை சொன்ன D2H போல) என்றாவது சொல்லி இருக்கலாம். இந்தியனுக்காகவும், நாயுடுக்காகவும் காத்திருக்கிறேன்.' 

மேற்கு தொடர்ச்சி மலை:


எந்த பொருளுமே கொஞ்சமாவது கலப்படம் இருந்தால்தான் நன்றாக இருக்கும். தங்கத்தில் செம்பு போல. அப்படியே இருந்தால் கொஞ்சம் கஷ்டம். இந்தப் படத்தில் அதுதான் நடந்துள்ளது. நம்முடைய வாழ்க்கையை படமாக எடுத்தால் நன்றாக இருக்குமா? நாமே பார்க்க மாட்டோம். 

முதல் 30 நிமிடங்கள் ஊர் சுற்றிக் காண்பிக்கிறார்கள். படத்தில் எல்லோரும் நாயகனுக்கு நன்மையே செய்கிறார்கள். இயற்கையான மனிதர்கள் என்பதால் நடிப்பு இயல்பாக இல்லை. நிறைய நாடகத்தன்மை அதனாலேயே வந்து விட்டது. குறிப்பாக ஒரு காட்சி, முதலாளியிடம் ஏலக்காய் மூட்டை கணக்குப்பிள்ளை கேட்கும் காட்சி. என்னதான் இருந்தாலும், இப்படியும் இன்னும் இது போல மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதை சொன்ன விதத்தில் படம் வெற்றி பெற்றுள்ளது. 

வர வர இளையராஜாவும் இசையை சுருக்கி விட்டார். பாடல்களும் படத்துடன் பார்க்க, கேட்க நன்றாக உள்ளது. சில சமயங்களில், மேற்கு தொடர்ச்சி மலை படங்களில் மொத்த பின்னணி இசை 15 நிமிடங்கள் கூட இருக்காது. ஆனாலும், அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. இயல்பான பின்னணி இசையை நிறைய கொடுத்து விட்டார். மற்ற காதல் படங்களில் எல்லாம் (திருவாசகம் உட்பட) ஸிம்போனி இசை போல மாதா கோயில் மணி ஓசையும், 'ஓஓஓஓஓ' என்று வெளிநாட்டுக்காரர்கள் பாடுவதும் வேறு நிறைய வரும். மிஷ்கினின் சைக்கோவை எதிர்பார்க்கிறேன். மீண்டும் ஒரு நூறாவது நாள், 24 மணி நேரம் போல இருக்க வேண்டும். 

Memoir of a Murderer (கொரியன்):


முன்பெல்லாம் நிறைய உலகப்பட விமர்சகர்கள் இருந்தார்கள். ஆங்கிலம் தவிர கொரியா, ஜப்பான், மொழிப்படங்கள் பற்றி நிறைய பதிவுகள் வரும். நாமும் அதில் கொஞ்சம் பொறுக்கி எடுத்துக் பார்ப்போம். இப்போதெல்லாம் யாரும் கொரியப் படங்கள் பற்றி எழுதுவதில்லை. நாமும் சரி எதையாவது பார்த்து சொல்லலாம் என்றால், நமக்கென்று சரியாக அமையவேயில்லை. கடைசியாக தேறியது இதுதான். 

சிறு வயதில் தந்தையின் கொடுமையால் பாதிக்கப்பட்டு, அவரை முதல்கோலை செய்யும் ஒருவன், அதன் பிறகு அந்நியன் போல சமூகத்தில் இருக்கும் தவறான மனிதர்களை தொடர்ச்சியாக கொலை செய்கிறான். ஒரு முறை ஒரு விபத்து நடக்க, அதன் பின் தன மகளுக்காக சாதாரண மனிதனாக வாழ்கிறான். 15 வருடங்கள் கழித்து மறதி நோய் பாதிக்கிறது. அடிக்கடி தான் யார், எங்கே இருக்கிறேன் என்பதையே மறந்து, எங்கேயாவது போய் விடுகிறான். 

அதே நேரம் மீண்டும் தொடர்ச்சியாக கொலைகள் மீண்டும் நடக்கின்றன. அவனுக்கே, தான்தான் அந்தக் கொலைகளை செய்கிறோமோ என்ற குழப்பம், மகளின் காதலனான ஒரு காவலனின் மீது சந்தேகம், கடைசியாக இதில் தன் மகளே கொல்லப்பட போகிறாள் என்பதையும் உணர்கிறான். யார் உண்மையான கொலைகாரன், மகளை காப்பாற்ற முடிந்ததா இல்லையா என்பதே படம். 

உண்மையில் அட்டகாசமான உருவாக்கம். ஒரு காட்சி கூட தேவையின்றி இல்லை. முதல் காட்சியில் குனிந்து தனது வெள்ளைக் காலணியை பார்ப்பது கூட ஒரு காரணம் உண்டு. 

தமிழிலும் கூட மறதியை வைத்து படங்கள் வருகிறதே.

கஜினிகாந்த் - யப்பா முடியலடா சாமி.

60 வயது மாநிறம் - கன்னடத்தில் (கோதி பண்ணா சாதாரண மைக்கட்டு) ஏற்கனவே பார்த்து விட்டேன். முடிந்தவரை அதன் அசலை பார்த்து விடுவது. பிற்பாடு நேரம் போகவில்லை என்றால் நகலை பார்ப்பது. அதனால் தமிழில் பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை.

இத்தனைக்கும் ராதாமோகன் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர், இளையராஜாவும் கூட இருக்கிறார். ஆனாலும் மொழி மாற்றுப் படங்களின் மீது அவ்வளவு ஈர்ப்பு இல்லை. கஜினிகாந்த் கூட தெலுங்கில் பார்த்தேன். தமிழில் நகைச்சுவை நன்றாக இருக்குமோ (வானம் படம் போல) என்று நினைத்தேன். ஆனால் இல்லை.

U-Turn கூட ஏற்கனவே கன்னடத்தில் பார்த்து விட்டேன். 

பியார் பிரேமா காதல், ஒன்றும் சொல்வதற்கில்லை. 90களில் பிறந்தவர்களுக்கே அந்தப் படம் பார்க்க தகுதி இல்லையாம். நானெல்லாம் 80களின் ஆரம்பம். அப்புறம் எப்படி. 

RX 100 (தெலுங்கு):


மறுபடியும் ஒரு மொக்கை காதல் கதையா (ஊர் சுற்றும் நாயகன், பண்ணையார் வீட்டு நாயகி, காதலுக்கு எதிர்ப்பு) என்று சலிப்படைந்து தருணத்தில், படத்தில் வந்த அந்த திருப்பம். நாடோடிகள் படத்திலும் அதுதான் நினைத்தேன், அதற்கு மாறாக நடந்தது. இருந்தாலும், தலைப்பிற்கும் படத்திற்கும் சம்பந்தமே இல்லை. ஒரே ஒரு இடத்தில, நீ இல்லாமல் நான் என் பைக்குடன் பேசிக்கொண்டு நாட்களை கடத்தினேன் என்கிறான் நாயகன். அவ்வளவுதான். அதை எரித்ததற்கு கூட ஒரு எதிர் வினையும் இல்லை. நம்ம செந்தூரப்பூவே ராம்கி கூட உள்ளார். 

இப்போதெல்லாம் பாலிவுட், ஹாலிவுட் அளவிற்கு போய் விட்டது. தெலுங்கு மற்றும் தமிழ்ப்படங்கள் பாலிவுட் அளவிற்கு வந்துள்ளன. எப்படி என்றால், ஹிந்திப்படங்களில் தேவையற்ற நிர்வாண, பாலுறவு காட்சிகள். நம்மூரில் முத்தம், முத்தம் முத்தம். அப்படி என்ன கதைக்கு தேவை என்று இதுவரை எனக்கு புரியவில்லை. அர்ஜுன் ரெட்டி, RX100 படங்களை என்ன தைரியத்தில் நம்மூரில் எடுக்கிறார்கள் என்று புரியவில்லை. சரி கலைக்கண்ணோடு பார்ப்போம்.

அர்ஜுன் ரெட்டி படத்தில், நாயகியின் தம்பியிடம் நாயகன், "நான் அர்ஜுன்" என்பான். அவன் உடனே " அர்ஜுன் what?" என்று கேட்பான். நம்மூரில் அப்படியா? "அப்புறம் தம்பி அப்பா அம்மா என்ன செய்யுறாங்க, எந்த கோயிலுக்கு போறீங்க" என்று போகும். பாலா எப்படி எடுத்திருக்கிறார் என்று பார்ப்போம். அவருக்கு பரோட்டாவிலேயே கொத்து பரோட்டாதான் பிடிக்கும். இதில் எப்படி கொத்தி இருக்கிறார் என்று பார்ப்போம். 

ஷூட்டர் - Shooter (ஆங்கிலம்):


உரிமை கீதம் என்றொரு படம். பிரபு, கார்த்திக் நடித்தது. RV உதயகுமாரின் முதல் படம். அதில் ஏழையான பிரபுவிடம் பணம் கொடுத்து ஒரு அரசியல்வாதியை பொதுக்கூட்டத்தில் கொல்வது போல நடிக்க சொல்வார்கள். கேட்டால், அப்போதுதான் அவர் மீது பரிதாபம் வரும், உனக்கும் எதுவும் ஆகாது என்பார்கள். பார்த்தால் நிஜமாகவே அவரை யாரோ சுட்டு விட, பழி பிரபு மீது விழும்.அந்த அரசியல்வாதியின் மகனாக கார்த்திக். இருவரும் எப்படி கெட்டவர்களை பழி வாங்குகிறார்கள் என்பதுதான் கதை. 


இந்தப் படத்தில் நண்பன் இறந்ததால், ராணுவத்தில் இருந்து வெளியேறும் நாயகன் (எவ்வளவு தூரத்திலும் சரியாக குறி பார்த்து சூடுபவன் - Sniper/Shooter). அவனிடம் அமெரிக்க ஜனாதிபதியை கொல்ல போவதாக தகவல் வந்துள்ளது எனவும், என்னென்ன வழிகள் இருக்கும் என கண்ணுட் பிடித்தும் சொல்ல சொல்வார்கள். அதே போல செய்தால், அதை வைத்து ஒரு கொலை செய்து பழியை நாயகன் மேலே போட்டு விடுவார்கள். இதை ஒரு அப்பிராணி FBI கண்டு பிடித்து விட, அவரையும் கொல்ல துரத்துகிறார்கள். எப்படி தப்பிக்கிறார்கள், பழி வாங்கினார்கள் என்பதுதான் படம். பரவாயில்லை. பார்க்கலாம். 

The Jackal (ஆங்கிலம்):


இதுவும் ஒரு வகை எலி பூனை கதைதான். எனக்கென்னவோ எலி பூனை என்பதை விட பாம்பு கீரி என்று சொல்லலாம் என நினைக்கிறேன். ரஷ்யாவில் ஒரு தீவிரவாதி தலைவனின் தம்பியை அமெரிக்கா, ரஷ்யா அதிகாரிகள் இணைந்து கொன்று விட, அதற்கு பதிலாக அமெரிக்காவின் ஒரு பெரிய மனிதரைக் கொல்ல சொல்லி அந்த தீவிரவாத தலைவன் ஒரு கூலிப்படை ஆளை அமர்த்துகிறான். இதை மோப்பம் பிடிக்கும் அரசு, அவனை பிடிக்க சிறையில் உள்ள ஒரு குற்றவாளியின் உதவியை நாடுகிறது. அவர்கள் இருவருக்கும் இடையே வேறு ஒரு பழைய கணக்கு உள்ளது. இறுதியில் யார் வெல்கிறார்கள் என்பதே படம்.

அவ்வளவுதாங்க.    

Thursday, September 6, 2018

கலைஞர் கருணாநிதி முதல் கருணாநிதி வரை!

கருணாநிதி மறைவு செய்தி வந்தவுடனே, இணையத்தில் இரு பிரிவுகளின் மோதல் ஆரம்பித்து விட்டது. தமிழ்நாட்டை பிடித்த சாபம் போய் விட்டது என ஒரு பிரிவு, இனி தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என இன்னொரு பிரிவு. கருணாநிதி அவ்வளவு முக்கியமாக தமிழகத்துக்கு இருந்தாரா, என்னுடைய பார்வையில் இந்த பதிவு. என்னுடைய கேள்வி அறிவை வைத்தே இந்த பதிவு. ஏதேனும் தவறு இருந்தால், கருத்திடவும். திருத்திக்கொள்கிறேன். 


பொதுவாக, ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது, மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறதா என்றால், முதலிடம் என்று சொல்ல முடியா விட்டாலும், முதல் 5 இடங்களுக்குள் கண்டிப்பாக இருக்கும். இதற்கு அடித்தளம் இட்டவர்கள் இரண்டு பேர். பெரியார் மற்றும் காமராஜர். 

முதலாமர், எல்லோருக்கும் கல்வி வேண்டும், அனைவரும் சமமாக கல்வி கற்க வேண்டும் என்று சொன்னவர். இரண்டாமவர், நிறைய பள்ளிகளைத் திறந்தவர், மதிய உணவு போட்டவர். இன்றைய 30 வயதிற்குள் உள்ள இளைய தலைமுறையினரே, உங்களது பெற்றோரின் ஆசிரியர்கள் அல்லது உங்களது தாத்தா படித்தவராக இருந்தால் அவர்களிடம் கேளுங்கள், அதிலும் பெண்கள் இருந்தால் கண்டிப்பாக கேளுங்கள். இவர்களது அருமையை சொல்வார்கள். எனக்கு இவர்கள் பற்றி முழுமையாக தெரிய வைத்தது என் அம்மாவும், என் அத்தையும்

காமராஜருக்குப் பிறகு அண்ணா. அவர் எதையும் பெரியதாக செய்வதற்கு முன்பே இறந்து விட்டார். அதன் பிறகு தமிழகத்தை ஆண்டது 3 பேர்தான். அதில் தமிழகம் இந்த அளவிற்கு முன்னேறி உள்ளது. அதற்கு முதல் காரணம் கருணாநிதி, காரணம், பெரியாரும் காமராஜரும் இட்ட அடித்தளத்தில், சரியான முறையில் கட்டடம் கட்டியவர் அவர்தான். பிறகுதான் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா. 

இன்று பொறியியல் படிப்பு இந்த அளவுக்கு நாறிப்போய் கிடைப்பதற்கு முக்கிய காரணம் எம்ஜிஆர். தனியார் பொறியியல் கல்லூரிகள் ஆரம்பிக்க அனுமதி அளித்து, அதிலும் தனக்கு வேண்டப்பட்ட அனைவருக்கும் அனுமதி கொடுத்துள்ளார். சத்யராஜ் கூட ஒரு பேட்டியில் எம்ஜிஆர் தன்னை ஒரு பொறியியல் கல்லூரி வேண்டுமானால் ஆரம்பித்துக்கொள் என்று சொன்னதாகவும், தான் அதை மறுத்து விட்டதாகவும் கூறினார். அதற்காக இருவரும் எந்த நன்மையும் செய்யவில்லை என்று அர்த்தமில்லை. ஆனால், அதனைத் தொடர்ந்து இன்று வரை அதை நிறுத்தாமல் தொடர்ந்ததன் விளைவு, எல்லா திமுக,அதிமுக மாவாட்டும் செயலாளர்களும் ஆளுக்கு இரண்டு பள்ளிகள், நான்கு கல்லூரிகளும் வைத்துள்ளனர். 

பொதுவான வரலாறு என்னவென்றால், அண்ணா இறந்த பிறகு, 'அரசியல்' செய்து கருணாநிதி முதல்வராகிறார். அப்போது 'எமர்ஜன்சி' காலம். அதை எதிர்த்தார். 5 ஆண்டுகள் முடியும் முன்பே ஆட்சி கலைக்கப்படுகிறது. அந்த நேரத்தில் அவர் என்ன சாதனைகள் செய்தார் என எனக்கு தெரியவில்லை. அதன் பிறகு, 13 ஆண்டுகள் வனவாசம். மீண்டும் ஆட்சி கிடைத்தாலும், 2 ஆண்டுகளில் கலைக்கப்படுகிறது. ராஜீவ் காந்தி கொலை வேறு நடக்க, படு தோல்வி அடைகிறது கட்சி, ஆனாலும் அவருக்கு வெற்றி. 5 ஆண்டுகள் கழித்து வெற்றி பெறுகிறார். 5 ஆண்டுகள் முழுமையாக ஆளுகிறார், மீண்டும் தோற்கிறார். 5 ஆண்டுகள் கழித்து அரைகுறையாக வெற்றி பெற்று, எப்படியோ 5 ஆண்டுகளை ஓட்டுகிறார். அவ்வளவுதான், முற்றும்.

கருணாநிதி என்னென்ன நன்மைகள் செய்தார் என்பது இருக்கட்டும். ஆனாலும் எனக்கு என்ன சந்தேகம் என்றால், அரசியல் ஆளுமை உள்ள ராஜாஜி, காமராஜர், எம்ஜிஆர் என பல ஆளுமைகளுடன் போட்டி போட்டு வென்ற கருணாநிதியால், கடைசி 15 ஆண்டுகளில் ஏன் ஜெயலிதாவை முழுமையாக தோற்கடிக்க முடியவில்லை. அது ஜெயலலிதாவின் வெற்றியா? கண்டிப்பாக இல்லை. கருணாநிதியின் தோல்வி. அது ஏன்? பிறகு பார்ப்போம். 

கருணாநிதி நமக்கு (சரி எனக்கு) என்னென்ன செய்தார் என்று பார்ப்போம். பள்ளி மாணாக்கர்களுக்கு இலவச பேருந்து பயணச்சீட்டு, முதலில் 8ம் வகுப்பு வரை இருந்தது, பிறகு 12ம் வகுப்பு வரை கொடுக்கப்பட்டது. இரண்டுமே கருணாநிதி ஆட்சியில்தான். கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் 15 சதவீத இட ஒதுக்கீடு. இது ஜெயலலிதா அரசால், சாமர்த்தியமாக ஒழிக்கப்பட்டது, மீண்டும் கொண்டு வரப்படவில்லை. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்று பல உள்ளன. மறுக்கவோ, மறைக்கவோ முடியாதது இட ஒதுக்கீடு. பல குடும்பங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகள் வெளிவந்து, நல்ல வேலையில் உள்ளனர் என்றால், அது கருணாநிதி கொண்டு வந்த பல திட்டங்களால்தான். 

சரி, மற்றவர்கள் கருணாநிதி ஏன் கெட்டவர் என்று சொல்கிறார்கள் என்று பார்ப்போம். அவர்தான் மதுக்கடைகளை திறந்தார். சரி, அதற்கு பிறகுதானே எம்ஜிஆர் வந்தார், அவர் மூடி இருக்கலாமே? ஜெயலலிதா வந்தார், அவைகளை அரசுடைமையாக்கி விட்டார். ஹிந்தி படிக்க விடாமல் செய்து விட்டார். இதற்கு எதை சொன்னாலும் அவர்களுக்கு புரியாது. ஹிந்தி கட்டாயம் என்பதைத்தான் எதிர்த்தார்கள். இன்னொன்றும் சொல்கிறேனே. ராஜாஜி குலக்கல்வி முறையை கொண்டு வந்தார். "சரி, இதிலென்ன தப்பு, படிக்கும்போதே ஒரு வேலைய தெரிஞ்சுக்கலாமே" என்றார்கள். ஆனால் அவர் சொன்னது தந்தையின் தொழிலைத்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று. அதைத்தான் எதிர்த்தார்கள். 

சரி, ஏன் வீழ்ந்தார். முதலாவது, குடும்ப ஆதிக்கம். ஸ்டாலின் உறுப்பினராகி, பிறகு படிப்படியாக தலைவர் ஆனார் என்பார்கள். சரிதான், ஆனால், ஸ்டாலினைத் தவிர வேறு யாருமே ஏன் அப்படி வரவில்லை, வந்த வைகோவையும் அனுப்பி விட்டீர்கள். அது அவரிடம் மட்டும் இல்லை. எல்லா திமுக ஆட்களிடமும் இருக்கிறது. 

அதே போல ஆரம்ப கட்டத்தில் வேலை வாய்ப்பு பதிவின் முதிர்வு அடிப்படையில் வேலை என்றாலும் கூட, அரசு வேலைகள் அனைத்தும் திமுகவை சார்ந்த நபர்களுக்கே தரப்பட்டன. தகுதியான நபர் என்பதை விட கட்சிக்காரர் என்பதற்குத்தான் முக்கியத்துவம். நடராசன் (சசிகலாவின் கணவர்) கூட ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர் என்றுதான் அவருக்கு அரசு வேலை தரப்பட்டது, இதை அவரே சொல்லி இருக்கிறார். நெல்லுக்கு பாயும்போது, புல்லுக்கு பாய்வது போல சில சரியானவர்களுக்கும் வேலை கிடைத்தது. அதனாலேயே பொதுவாக வயதான பல அரசு ஊழியர்கள் கருணாநிதியின் விசுவாசிகளாக இன்னும் இருக்கிறார்கள். 

எல்லோரும் ஊழல் செய்கின்றனர். அதனாலேயே மாறி மாறி ஆட்சி நடந்தது. 2015 வெள்ளத்தின்போது அதிமுக அரசு காட்டிய அலட்சியம், அது முடிந்தவுடனே ஆளும் கட்சி விழாவிற்காக நடந்த அட்டகாசம், இவையனைத்தையும் தாண்டியும் ஏன் 2016ல் திமுக தோற்றது? ஏனென்றால், திமுக நேரடியாக மக்களின் வயிற்றில் அடித்தது. ஒரு பாலம் காட்டியதில் ஊழல், குட்கா ஊழல் எல்லாம் எந்த தனி மனிதனையும் பாதிக்கவில்லை, சமூகத்தை பாதித்தது (அதற்காக அதை நான் நியாயப்படுத்தவில்லை). 

2006-11 வரையிலான திமுக ஆட்சியில் மக்களின் நிலங்கள் மிரட்டியும், விரட்டியும் பிடுங்கப்பட்டன. அது மட்டுமே மிக முக்கிய காரணம். இன்னமும் பலர் வயிறெரிந்து சொல்வார்கள். பலர் இன்னும் கண்ணீருடன் அதை மீட்க அலைந்து கொண்டிருக்கின்றனர். இன்னும் குறிப்பாக சொன்னால், எங்கெங்கெல்லாம் பணம் வரும் என்பதை திமுக கண்டு பிடிக்கும், அதிமுக அதை தொடரும். 

2006 வரை கலைஞராக இருந்த அவர், பிறகு கருணாநிதியாக மாறியதற்கு காரணம் அவர் மட்டுமே. இலவசங்கள், பல விளம்பரங்கள், தேவையில்லாத பாராட்டு விழாக்கள், மதுரையில் தினகரன் அலுவலக தீ விபத்து, (அழகிரியின் மதுரை சாதனைகள் பற்றி தனியாக எதுவும் சொல்ல வேண்டியதில்லை), 3 பேர் இறப்பிற்கு பின் இவர்களது குடும்பம் இணைய 'கண்கள் பனிக்க, இதயம் இனிக்க' என்று கூறியது, செம்மொழி மாநாடு என்ற பெயரில் கோயமுத்தூரில் நடந்த குடும்ப விழா என்று இன்னும் சில சம்பவங்கள் உள்ளன, அவற்றை நான் குறிப்பிட விரும்பவில்லை, எல்லோருக்கும் தெரியும். 

கடைசியாக சொல்வது என்னவென்றால், 2001 வரை இருந்த கலைஞர் கருணாநிதியை எனக்கு பிடிக்கும். அது வரை மக்களுக்காக உழைத்தார், அதன் பிறகும் மக்களுக்காகவே உழைத்தார், சொந்த மக்களுக்காக. அவர் ஒரு சில பேர் மீது கட்சி சார்பாக நடவடிக்கை எடுத்திருந்தால் கூட, 2016ல் ஆட்சியைப் பிடித்திருக்க முடியும். எல்லாவற்றையும் தாண்டி ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பிடியில் இருந்து கல்வி, அரசு, பதவிகளை கடைக்கோடி ஏழை வரை கொண்டு சென்றது கருணாநிதிதான் என்பதை மறுக்க இயலாது. 

பின் குறிப்பு: "சூப்பருங்க. இந்த திராவிட ஆட்சியாலதான் நாம் இப்படி இருக்கோம், இதுக்குதான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும்கிறது" என்று யாரும் வரவேண்டாம்.    

Monday, August 6, 2018

யார்ரா நீ!!

ஆடி மாத வணக்கம். சில திரைப்படங்கள் பற்றிய விமர்சனங்கள். இவையாவும் வந்து மாமாங்கம் ஆயிருக்கலாம். ஆனால், நான் இப்போதுதானே பார்த்தேன். 

காலா:

முதலில் ரஜினியை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். தன வயதிற்கு ஏற்ற பாத்திரம். டூயட் இல்லை. பறந்து பறந்து அடிக்கும் சண்டை இல்லை. ஆனால், ரஜினி ரசிகர்களுக்கு கொஞ்சம் கூட மகிழ்ச்சி அளிக்காத மொக்கைப் படம். "அதெல்லாம் ஒண்ணுமில்ல, நான் நாலு வாட்டி பாத்தேன். அதுவும் தியேட்டர்ல" என்று சொன்னால், இருக்கலாம். படம் பிடித்ததா என்றால், "பிடிக்காமையா நாலு வாட்டி பாத்தேன்" என்பார்கள். படம் "நல்லாருக்கா, புடிச்சிருக்கா இல்லையா" என்றால், நெளிந்து கொண்டே "கொஞ்சம் மொக்கைதான்" என்பார்கள்.எனக்கென்னவோ, படத்தில் வந்த இளமைப்பருவ கதையை மட்டும் தனிப்படமாக எடுத்திருக்கலாம் என்று தோன்றியது. 

கபாலியில் திருமணம் முடிந்தபிறகு தகராறு நடக்கும், கணவன் மனைவி பிரிந்து விட்டு பல வருடம் கழித்து இணைவார்கள். இதில் திருமணத்திற்கு முன்பே நடக்கிறது. எது நடந்தாலும் திடீரென நான்கு பேர் வந்து "காலா, துவைக்க வேணும் ஆலா, கால் டாக்ஸினா ஓலா" என்று பாடுகிறார்கள். நல்ல வேளை, ஆட்களை மாற்றினார், இல்லையென்றால் "காலாவா, இல்ல கபாலியா" என்று குழம்பி இருப்போம். 

நிஜ வாழ்க்கையில் உள்ள ரஜினிக்கு எதிரான ரஜினியை காட்டியதுதான் தோல்வி என்று சிலர் சொன்னார்கள். மொத்தத்தில் ரஞ்சித் எதை செய்ய வேண்டுமோ அதை நாரதராக, மன்னிக்கவும் நன்றாக செய்து விட்டார். ரஜினியை வைத்து சொல்ல வேண்டிய கருத்துக்களைத்தான் கபாலியில் சொல்லியாயிற்றே, இதைக் கொஞ்சம் மசாலா படமாக எடுத்திருக்கலாம். பார்ப்போம். 

அசுரவதம்:

என் மகள் இந்தப்படம் பார்த்து விட்டு "யார்ரா நீ, யார்ரா நீ" என்று 2 நாட்களாக கத்திக்கொண்டே இருந்தால் (அந்த சில முக்கிய காட்சிகளை நாங்கள் ஓட்டி விட்டோம், என்ன நடக்கிறது என்று எங்களுக்கு புரிந்ததால்). பழி வாங்கும் கதை, தேவையே இல்லாத படம். ஒரு வேளை, சசிகுமார் வேடத்தில் வில்லனும், அந்த பாத்திரத்தில் சசியும் நடித்திருந்தால் நமக்கு ஒரு ஆர்வம் வந்திருக்கும். 

சசி கொல்ல போகிறார் என்று கதை ஆரம்பித்ததும், எல்லோருக்கும் "அவன் நல்லவனாத்தான் இருப்பான்" என்று தோன்றியது. அதே போல வில்லன் பெண் பித்தன் என்பதும், பெண்களை அடைய எந்த அளவிற்கும் போவான் என்பது சொல்லப்பட்டு விட்டது. பிறகு அப்படி ஒரு முன்கதை தேவையா? அதுவே பெரிய சறுக்கல். 

'உன்னைப்போல் ஒருவன்' படத்தில் வந்தது போல யாராக வேண்டுமானாலும் இருக்கலாமே என்றோ, அல்லது முடிந்தவுடன், ஓரிரு காட்சிகளில் காண்பித்திருந்தாலே போதும். அய்யய்யோ, என் மகள் ஆரம்பித்து விட்டாள் "யார்ரா நீ, உன்ன கொல்லாம விட மாட்டேண்டா". 

டிக் டிக் டிக்:

மாற்றான் படம் வருவதற்கு முன்பு 'துருவன்' என்றொரு படம் வந்தது. அதில் 'தமிழின் முதல் ஓட்டிப் பிறந்த இரட்டையர் படம்' என்று விளம்பரம் செய்தார்கள். அதே போலத்தான் இந்த இயக்குனரும். மொக்கைப்படங்களாக எடுத்து விட்டு, தமிழின் முதல் ஜோம்பி திரைப்படம், தமிழின் முதல் விண்வெளி திரைப்படம் என்று விளம்பரம் செய்தால் ஓடி விடும் என்று நினைக்கிறார் போல. முதலில் நீங்கள் சொந்தமாக ஒரு கதையை யோசித்து படம் எடுங்கள். 

இனி எப்படி படம் எடுப்பது என நான் பாடம் எடுக்கப் போவதில்லை. ஒரே ஒரு வேண்டுகோள்தான் ஜெயம் ரவி அவர்களே. தயவு செய்து இனி பழைய படங்களின் தலைப்பில் படம் எடுக்காதீர்கள் (சகலகலா வல்லவன், டிக் டிக் டிக்), எடுத்தாலும் நடிக்காதீர்கள். என்னாது ஜெயம் ரவி நடிக்கிறாரா என்று கேட்காதீர்கள். 

தமிழ்ப்படம் 2:

2010ல் 'தமிழ்ப்படம்' வந்தபோது அது புதிதாக தெரிந்தது. என்னதான் லொள்ளு சபா இருந்தாலும், முழு நேர 'கலாய்' படமாக இருந்ததால் வெற்றி பெற்றது. அதிலும் 2ம் பாதி மொக்கைதான். இப்போது இரண்டாம் பாகமும் அதே போல கொஞ்சம் மொக்கைதான். நிறைய சிறு சிறு விஷயங்களில் (HBO, Star Movies, NGC செய்திகள், போகிற போக்கில் வரும் சில வசனங்கள்) நன்றாக இருந்தாலும், மொத்தமாக சற்று குறைதான். ஒரு முழுமையான கதை, திரைக்கதையில் காட்சிகளை நக்கல் செய்வது போல வைத்திருந்தால் பரவாயில்லை. வெறும் காட்சிகள் மட்டுமே என்பதால் இழுவையாகி விட்டது. 

Mr. சந்திரமௌலி: 

பார்த்ததிலேயே கொஞ்சம் நன்றாக இருந்த தமிழ் படம். ஒரு வேளை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்தால் இருக்கும். நிறைய சிறு சிறு விஷயங்களில் கவனம் செலுத்தி இருந்தனர் (வில்லன் குத்து சண்டை போடுவது, உண்மையில் நடந்த பரிட்சையில் காப்பி அடிப்பதை பயன்படுத்திய விதம், முதலில் வரும் சம்பந்தமில்லாத காட்சிகள், பிற்பாதியில் இணைக்கப்படுவது). இருந்தாலும் இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம். அதே போல இனி மக்கள் கால் டாக்சி எடுக்கவே யோசிக்கும் அளவிற்கு 'செய்து' விட்டார்கள். கண்டிப்பாக நம்பி பார்க்கலாம். 

102 Not Out: 

என்னுடைய முந்தைய ஒரு பதிவில் சொன்ன ஒரு விஷயம்தான் இந்தப் படத்தின் கரு. இரு நண்பர்கள். இருவரின் பரம்பரையிலும் சர்க்கரை வியாதி உண்டு. முதலாமவன் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எல்லாம் சாப்பிடுவான். கேட்டால் "எப்படியும் எனக்கு சுகர் வரத்தான் போவுது, அது வரைக்கும் அனுபவிக்கிறனே". இரண்டாமவன் பயங்கர பத்தியம். "எப்படியும் எனக்கு சுகர் வரத்தான் போவுது, இப்பவே கண்ட்ரோல் பண்ணிக்கிட்டா பின்னாடி பிரச்சினை இருக்காது". இதுதான் கரு. 

102 வயது கொள்ளுத்தாத்தாவுக்கும் (மனதின் வயது 16) எப்போதும் மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், வயதே ஆகாது என்ற எண்ணத்தில் உள்ள அமிதாப், 75 வயது தாத்தாவுக்கும் (மனதின் வயது 75), நமக்கு வயசாயிடுச்சி, அதுக்கேத்த மாதிரி நடந்துக்கனும் எனும் சசி கபூர் இடையே நடக்கும் போராட்டம். இவர்களுக்கு நடுவே ஒரு அப்பாவி இளைஞன். அட்டகாசமான படம். 

உண்மையில் ரஜினி இது போன்ற படங்களை முயற்சிக்கலாம். தில்லு முல்லு போல நல்ல நகைச்சுவை படமாக கண்டிப்பாக வெற்றி அடையும். 

Secret Superstar:

PK படம் வெற்றி பெற்ற உடனே, பல இந்து அமைப்புகள் அமீர்கான் முஸ்லிம்தானே, முடிந்தால் அவரது மதத்தை கிண்டல் செய்யட்டும் என்றனர். அவர்களுக்காகவே எடுத்திருப்பார் போல. மிகவும் கட்டுக்கோப்பான முஸ்லீம் குடும்பத்தின் பெண் வாரிசு, பாடகியாக வேண்டும் என்று ஆசை. பெண் என்பதால், கருவிலேயே கொல்ல முயன்ற குடும்பம் அது. எப்படி சாதிக்கிறார் என்பதுதான் கதை. 

ஹீரோயிஸம் எதுவுமின்றி, அழகான ஒரு துணைக்கு கதாபாத்திரத்தில் அமீர்கான். அவரும் பெரிய நல்லவர் என்றெல்லாம் கூட காண்பிக்க மாட்டார்கள். தம்பி, தோழன் என்று சிறு சிறு பாத்திரங்களும் நன்றாக நடித்துள்ளனர். உண்மையில் எப்படியெல்லாம் மற்ற மொழிகளில் நாயகர்கள் (முதலில் மலையாளம், பின் ஹிந்தி) இப்படி நடிக்கிறார்களோ தெரியவில்லை. தமிழில் விஜய் சேதுபதி இது போல முயற்சிக்கிறார். தெலுங்கில் எல்லாம் வாய்ப்பே இல்லை. தவற விடாதீர்கள். 

சில எண்ணங்கள்: 

இதில் காலா, 102 Not அவுட் இவை இரண்டு படங்களும் அமேசான் பிரைமில் உள்ளது. தமிழ்ப்படம் 2 திரையரங்கில். மற்றவை வழக்கம் போலத்தான். நம் தயாரிப்பாளர்கள் எதற்கு யோசிக்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஒரு சில ஆட்டோ ஓட்டுனர்கள் "வந்தா கொறஞ்சது 200 ரூபா கொடுக்கணும்" என்பார்கள். "நான் சொன்ன எடம் கொஞ்ச தூரம்தாங்க" என்றால் "முடியாது போ" என்பார்கள். அதே போல திரையரங்குகளில்தான் விடுவேன், அதன் பின் என் படத்தை எங்கும் பார்க்க முடியாது, பார்க்கவும் கூடாது என்று நினைக்கிறார்கள் போல. 

ஹிந்திப்படங்கள் எல்லாம் 15 நாட்கள் ஓடிய பின் அமேசானில் வந்து விடுகிறது. காலா 50 நாட்களுக்கு பிறகு வந்து விட்டது. தமிழின் பல பழைய படங்கள் இன்னும் எதிலும் வரவில்லை. "ஏன் அப்படி பாக்கணும், கம்முனு உக்காரு" என்றும் சொல்வார்கள் போல. 

என்னவோ போடா மாதவா. தமிழ் ராக்கர்ஸ் என்னவோ முழு நேர பணியாக, ஒரு 11 பேர் கொண்ட குழுவாக பனி புரிகிறார்கள் போல. பழைய ஆங்கில படங்களை அவர்களே தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் மாற்றி, அவர்களே பேசி வெளியிடுகிறார்கள். 

மக்கள் யாருக்கும், படம் வெளிவந்த உடனே, திருட்டுத்தனமாக பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவதில்லை. குடும்பத்துடன் திரையரங்கம் செல்ல முடியாது, கையைக்கடிக்கும் செலவு என்பதுதான். அதில் பாதி பேருக்கு மேல் இணையத்தில் பணம் கட்டிப் பார்க்க தயாராக இருந்தாலும், வாய்ப்பை பயன்படுத்த திரையுலகினர் மறுக்கிறார்கள் என்பதுதான் உண்மை. 

எனக்குத் தெரிந்து இதை நான்கைந்து முறை சொல்லி விட்டேன் என்று நினைக்கிறேன். சங்கை ஊதிக்கொண்டே இருப்போம்.

Thursday, July 26, 2018

பணம் கேட்கும் பள்ளிகள்!

பொதுவாகவே ஊடகங்களிலும், இணையத்திலும் வெளிவரும் செய்திகளை வைத்து நான் பதிவு இடுவது இல்லை. ஏனெனில் அவை அனைத்துமே பொய் என்று அர்த்தமல்ல. ஆனால், இன்னும் பல உண்மைகள் இருக்கும், அவர்கள் கூறவில்லை அல்லது கூற விரும்பவில்லை. அதே போல உண்மை என்ன என்றும் தெரியாமல் அதைப்பற்றி கன்னாபின்னா என்று கருத்துக்களும் வரும். திடீரென அது இல்லை, இதுதான் உண்மை என செய்தி வரும், உடனே "நாந்தான் அப்பவே சொன்னேன்ல" என்றும் கருத்திடுவார்கள். இப்போது அதை கண்கூடாக கண்டதால், அதனைப்பற்றி ஒரு பதிவு. 

கடந்த ஒரு வாரமாக குரோம்பேட்டை மற்றும் பெருங்களத்தூரில் ஒரு பிரபல பள்ளி, அதுதான் போட்டு கிழிச்சுட்டாங்களே, ஸ்ரீமதி சுந்தரவள்ளி நினைவு பள்ளி (சுருக்கமாக SSM School) பள்ளியில் நடந்த கட்டணக்கொள்ளை, பெற்றோர்களை பணம் கேட்டு மிரட்டிய அந்த தாளாளர் சந்தானம் பற்றிய ஒரு பதிவு. 

"இப்போ மட்டும் என்ன ___க்கு பதிவு" என்பவர்களுக்கு, அந்த பாதிக்கப்பட்ட பெற்றோர்களில் நானும் ஒருவன். எனது மகளும் அங்கேதான் ஆரம்பம் முதல் படிக்கிறாள். இந்தப் பள்ளியின் STD எல்லாம் நீங்கள் இணையத்தில் படித்து தெரிந்து கொள்ளவும். முதலில் செய்திகளில் வந்துள்ள உண்மைகளைப் பற்றி பார்ப்போம். 

1. 2 லட்சம் கட்டவில்லை என்றால் பள்ளியை விட்டு வெளியேறவும். 
2. பெற்றோர்களைப் பற்றி திட்டி பள்ளியில் திட்டியது. 
3. முதலில் 2 லட்சம் கேட்டவுடன், அதைப்பற்றி கேட்க சென்ற பெற்றோர்களிடம் "ஆமா, அப்படிதான் கேப்பேன்" என்றது. 
4. பள்ளிகளை உடனே மூடி விடுவேன், வேறு யாருக்காவது விற்று விடுவேன் என்றது, 
5. பள்ளிகளின் வசதிகளை குறைத்து விடுவேன் என்றது 

எல்லாமே உண்மைதான். அதற்கு இரு வாரங்களுக்கு முன்புதான் எல்லா மாணவர்களின் பெற்றோர்களுடன் உரையாடினார். அப்போது கூட எதுவும் சொல்லவில்லை. அந்தப் பள்ளியில் உள்ள பிரச்சினையே அதுதான். எந்த விஷயமும் பெற்றோர்களுடன் நேருக்கு நேர் விவாதிப்பதே இல்லை. எந்த சந்திப்பாக இருந்தாலும், அவர் பேசுவார், மற்றவர்கள் கேட்க வேண்டும். 

திடீரென பள்ளியில் இருந்து குழந்தைகள் மூலமாக அறிவிப்பு வரும். அடுத்த ஓரிரு தினங்களில் அதை ஆதரிக்கிறேன் அல்லது இல்லை என்று திருப்பி கொடுத்தனுப்பி விட வேண்டும். கேட்கலாம் என்று இதுவரை நான் போனதில்லை. போனாலும் ஒன்றும் நடக்காது என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். அப்படிதான் இருக்கும். 

30 வருடங்களுக்கு முன்பு பெற்றோர்கள் எப்படி இருந்தார்களோ, அப்படியே இப்போதும் இருப்பார்கள் என்று நினைத்து விட்டார் போல. அப்போதெல்லாம் பெற்றோர் பள்ளிக்கு வந்து "நீங்க எங்க வேணும்னாலும் அடிச்சிக்கோங்க, மூஞ்சுல மட்டும் வேணாம்", "நல்லா வெளுத்து விடுங்க சார்" என்றெல்லாம் சொல்லி விட்டு போவார்கள். இப்போதெல்லாம் அப்படியா, ஆசிரியர் கையை ஓங்கினாலே, மாணவன் கண்ணை மூடிக்கொள்கிறான், உடனே "ஆசிரியர் அராஜகம், மாணவன் மயக்கம்" என்று செய்தி வந்து விடுகிறது. 

அடுத்து இன்னொரு முக்கியமான செய்தி, தனது தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க, பெற்றோரிடம் இப்படி பணம் கேட்கிறார். இதில் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. அவர் ஏற்கனவே நிறைய பெற்றோரிடம் கடன் வாங்கி, அதையும் முறையாக வட்டியுடன் திருப்பியும் கொடுத்துள்ளார். 

முதன் முதலில் பிரச்சினை ஆன சுற்றறிக்கையில் சொல்லப்பட்டது என்னவென்றால், "திருப்பி தரப்படக்கூடிய காப்புத் தொகை அனைத்து மாணவர்களுக்கும் 2 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இது பள்ளியின் முன்னேற்றத்திற்காக. அதை அடுத்த கல்வி ஆண்டு ஆரம்பத்தில் செலுத்த வேண்டும். இதற்கு சம்மதமா இல்லையா என்பதை இந்த மாத இறுதிக்குள் சொல்லி விட வேண்டும். இப்போது சரி என்று சொல்லி விட்டு, பின்னர் இல்லை என்றால், ஏற்கனவே உள்ள காப்புத்தொகை திருப்பி தரப்பட மாட்டாது" என்பதுதான். 

எனக்கும் கோபம் வந்தது. இன்னும் 9 மாதம் கழித்து நிலைமை எப்படியிருக்கும் என்று சொல்ல முடியாது. அதே போல இன்னும் எதை முன்னேற்றப் போகிறாராம், சும்மா காசு காசு என்று அலைகிறார் என்று தோன்றியது. கிட்டத்தட்ட 80 சதவிகித பெற்றோர்களுக்கு இதுதான் தோன்றியது. "இன்னும் 3 வருஷம் கழிச்சு மறுபடியும் 2 லட்சம் கொடுங்கன்னு கேட்டா என்ன செய்யுறது" என்றுதான் எல்லோருக்கும் தோன்றியது. அதைக் கேட்க சென்ற போதுதான் "நான் சொல்ல வேண்டியதை எல்லாம் அந்த சர்க்குலர்ல சொல்லிட்டேன். போலீஸ் நீங்கதான் இங்க என்ன நடந்தாலும் பொறுப்பு" என்று சொல்லிவிட்டு போனவுடன் நிறைய பேருக்கு இன்னும் கோவம். 

அன்றைய தினம் அவருக்கு ஆதரவு என்று யாருமே இல்லை. அப்போதே கையெழுத்து போட்டுக் கொடுத்த பெற்றோர்கள் கூட அவருக்கு ஆதரவாக பேசவில்லை. "இத்தன வருஷம் இங்கேயே படிச்சாச்சு. அதுக்கப்புறம் எல்லாம் போய் ஸ்கூல தேட முடியாது. திருப்பிதான் கொடுத்திடுவார்ல, அதான். அந்த நேரத்துல காலேஜுக்கு கூட தேவைப்படும்" என்று அவர்களை அவர்களே சமாதானம் செய்து கொண்டார்கள். 

அதன் பின் பள்ளி இணைய தளத்தில் கொடுக்கும் பணத்தை வைத்து என்னென்ன செய்ய போகிறோம் என்று சொல்லி இருந்தார்கள். "இத அப்பவே சொல்லி கேட்ருக்கலாமே" என்றுதான் பாதி பேருக்கு தோன்றியது. சரி அதுதான் 31 வரை அவகாசம் உள்ளதே, பொறுமையாக கொடுக்கலாம் என்றுதான் காத்திருந்தார்கள். ஆனால், அவரோ அவசரப்பட்டு மாணவர்கள் மத்தியில் தேவையின்றி வார்த்தைகளை விட, பிரச்சினை வேறு விதமாக மாறிப்போய் விட்டது. 

பெரிய பிரச்சினையே அவர் சொன்னால் எல்லோரும் கேட்க வேண்டும் என்று அவர் எண்ணுவதுதான். இப்போதைய சுற்றறிக்கையின்படி, அரசு 3% மட்டுமே கல்விக்கு ஒதுக்குவதால் , மாதம் ஒரு லட்சம் வாங்கும் பெற்றோர்கள் வருடத்திற்கு 36,000 மட்டுமே கல்விக்கு செலவிடலாம். எனவே இனி, அதற்கேற்றார் போல வசதிகள் குறைக்கப்படும், ஒரு சாதாரண பள்ளி எப்படி இருக்குமோ அப்படிதான் இருக்கும், SSM பள்ளி என்ற தனித்துவம் இருக்காது என்று வந்துள்ளது. "முடியலடா சாமி, கொஞ்சம் எங்களை கூப்பிட்டுதான் பேசுங்களேன்" என்றுதான் தோன்றியது. 

சரி, இதுவரை நடந்தது எல்லாமே வீட்டில் பெரியவர்களுக்கும், இளைஞர்களுக்கும் இடையே நடக்கும் சண்டைதான். "நீங்க பாட்டுக்கு உங்க இஷ்டத்துக்கு பண்ணிக்கிட்டிருக்கீங்க" என்று சண்டை போட தோன்றியதே தவிர, "புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்" அளவுக்கு எல்லாம் இல்லை. ஏனென்றால், 

SSM பள்ளியில், கட்டண விவரங்கள் அனைத்தும் பள்ளியின் இணையத்தில் இருக்கும். கட்டணம் 
இதுவரை ஒரு முறை கூட நான் பணமாக செலுத்தியதில்லை. எல்லாமே மின்னணு பரிவத்தனை அல்லது வரைவோலைதான். எனவே எப்படி இருந்தாலும், என் பணம் கறுப்புப் பணமாக இல்லை என்பது நிச்சயம். 
அதே போல, நாம் கொடுக்கும் கட்டண அளவிற்கு ஏற்றாற்போல போல பள்ளியில் வசதிகள் உண்டு. குரோம்பேட்டையில் இல்லை என்றால், மாணவர்களை பேருந்தில் ஏற்றி பெருங்களத்தூர் கூட்டிக் கொண்டு போவார்கள். 
மாணவர்கள்: பணியாளர்கள் விகிதம் இந்தப் பள்ளியிலும் பார்க்க முடியாது. காலையில் பள்ளியில் இறக்கி விடும் இடத்தில இருந்து, பள்ளிக்கு உள்ளே செல்லும் வரை, பத்தடிக்கு ஒரு பணியாளரோ, ஆசிரியையோ இருப்பார்கள். 
பெற்றோரை மதிக்கிறாரோ இல்லையோ, குழந்தைகளை இதுவரை எந்தக் குறையும் இல்லாமல் கவனித்துக் கொண்டனர். 
பேருந்தில், ஓட்டுநர் இல்லாமல் குறைந்தது 3 பேராவது குழந்தைகளை பார்த்துக்கொள்ள இருப்பார்கள். 
"சார், தினம் என்ன நடக்குதுன்னு கொஞ்சம் சொல்லுங்க" என்று கேட்டால், "உங்கள விட உங்க குழந்தைங்க எங்களுக்கு முக்கியம், 30 வருஷமா பாத்துக்கிட்டு இருக்கோம். நாங்க இருக்கோம்" என்றுதான் சொல்வார். 
10 வயது சிறார்கள் வகுப்பறையில் இருந்து கழிவறைக்கு செல்லும் போது கூட ஒரு பணியாளர் உடன் பாதுகாப்பிற்கு வருவார். 
நேற்று தெரிந்து கொண்டது, ஒரு மாற்று திறனாளிக்காக தனி கழிவறை கட்டி, அந்த ஒரு மாணவருக்காக தனி பணியாளரையும் நியமித்திருக்கிறார். 
அதே போல நன்கொடை, அரசியல்வாதிகளின் பரிந்துரை எதுவுமே செல்லாது. 
அரசு கூறிய விதிகளின்படி, வசதிகளுக்கேற்ப கட்டணம் உள்ளது. மறைமுக கட்டணம் இதுவரை வாங்கியதே இல்லை. 
ஆறாம் வகுப்பிற்கு மேல், சுற்றுலா உண்டு. அதுவும் இதே கட்டணத்தில் அடங்கும், அதிலும் 12ம் வகுப்பில் சிங்கப்பூருக்கு கூட்டி செல்வார்கள். 

நிறைய முறை அரசியல்வாதிகளால் பாதிக்கப்பட்டும் "நான் சரியா இருக்கேன், எவனாலயும் என்னை ஒன்னும் செய்ய முடியல" என்றே தைரியமாக சொல்வார். எங்கேயாவது தவறும் என்று காத்திருந்தார்கள். மாட்டி விட்டார். 

கடந்த இரண்டு வருடங்களாக உள்ள வதந்தி, இந்த பள்ளிகளை வாங்க நிறைய அரசியல்வாதிகள் முயற்சி செய்கிறார்கள் என்று. கூட்டிக், கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாக வருகிறது. தினகரனில், இந்த பள்ளி பற்றி உடனே உடனே செய்தி வருகிறது. சந்தானம் அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் பற்றி செய்தி வரவில்லை. " தப்பி ஓடினார், துரத்திப் பிடித்தது காவல்துறை" என்றெல்லாம் செய்தி வருகிறது. அதைப் பற்றி 7 நிமிட செய்தி, அதில் 100 பொய்கள். 4 லட்சம் நன்கொடை என்பதெல்லாம் கட்டுக்கதை. 

வெளியூரில் உள்ளவர்கள் "இந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் தூக்குல போடணும், இந்த பள்ளியை விட்டால் வேறு பள்ளியே இல்லையா, நீங்க ஏன் அரசு பள்ளியில சேக்க மாட்டேன்கிறீங்க, அதான் இப்படி" என்றெல்லாம் கருத்து சொல்கிறார்கள். உங்கள் அனைவருக்கும் இன்னும் இரண்டொரு நாட்களில் வேறொரு பிரச்சினை வரும். எல்லா கருத்து கந்தசாமிகளும் இதை விட்டு விட்டு அங்கு ஓடி விடுவார்கள். தலைவலியும் திருகுவலியும் தனக்கும் வருமல்லவா.

பள்ளிப் பேருந்தில் இருந்து மாணவி தவறி விழுந்து இறந்து 6 வருடம் ஆகிறது, இதுவரை அந்த பெற்றோர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. பேருந்து எங்களுடையதே இல்லை என்று பள்ளி சொல்கிறது. தினமும் தாம்பரம் MEPZ சந்திப்பில், அந்தப் அந்த மக்களால் எரிக்கப்பட்ட, சாலையோரம் கிடைக்கும் அந்த பேருந்தை பார்க்கும்போதெல்லாம் மனது ஏதோ செய்யும். இன்று தாம்பரம் அருகே பள்ளியில், பள்ளி பேருந்தில் ஒரு பணியாளர் குழந்தைகளை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அதைப்பற்றி ஒரு செய்தியும் இல்லை. கும்பகோணம் தீ விபத்து நடந்து 14 வருடங்கள் ஆகிறது. இன்னும் பெற்றோர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவில்லை. தண்டனை பெற்றவர்கள் வெளியே வந்து விட்டார்கள். 

எல்லா தொலைக்காட்சிகளும் 'மிக கவனமாக' செய்திகளை திரித்து சொல்கின்றன. மிகக்குறிப்பாக சன், பாலிமர். மற்ற நாளிதழ்கள், செய்திகளில், மிகச்சிலர்(?) அவருக்கு ஆதரவாக போராடுகிறார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளதாம். சன் நியூஸ் விவாத மேடையில் பணம் பார்க்கும் பள்ளிகள் என்று விவாதம். அதில் மீண்டும் மீண்டும் அவரை கைது செய்வதையும், இந்தப் பள்ளியையும் மீண்டும் மீண்டும் காண்பிக்கின்றனர்.

எதிராக போராடுபவர்கள் மிரட்டப்படுகிறார்கள். உண்மையில் குரோம்பேட்டை பள்ளியில், ஆதரவாக போராடிய பெற்றோர்களிடம், காவல்துறை முதலில் மிரட்டியது, பிறகு "எல்லாம் கை மீறிப் போயிடுச்சுங்க, சொன்னா புரிஞ்சுக்குங்க, மேலிடத்திலிருந்து உத்தரவு, தயவு செஞ்சு கூட்டம் போடாதீங்க" என்று சொன்னது. பள்ளியை சுற்றி கிட்டத்தட்ட 144 போல உள்ளது. 3 பேர் நின்று பேசிக்கொண்டிருந்தாலே, "இங்கெல்லாம் நிக்காதீங்க, கிளம்புங்க" என்று சொல்கிறார்கள். 

ஒரு வேளை பள்ளி கை மாறுகிறது அல்லது முன்பு போல இல்லை என்ற நிலை வந்தால் என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஏனென்றால், வீட்டிற்கு மிக அருகில் உள்ளது. என்ன நடக்கும் என்று தெரியவில்லை. பார்ப்போம்.  

பின் குறிப்பு: அவர் 2 லட்சம் கேட்டதை நான் ஆதரிக்கவில்லை. ஆனால், அரசு விதிகளின்படி, அவர் சொன்ன வசதிகளை கொடுத்து விட்டு, கட்டணத்தை ஒரு லட்சம் கூட ஆக்கலாம். சட்டம் அதனை எதுவும் செய்ய முடியாது. ஏனென்றால், வருடம் 1 லட்சம் வாங்கும் பள்ளிகளின் தரம், எல்லோருக்கும் தெரியும். 

இனி ஏதாவது செய்திகளில் கருத்து சொல்ல வேண்டும் என்று நினைத்தால், தயவு செய்து தீர விசாரித்து விட்டு கருத்து சொல்லவும்.

Friday, June 29, 2018

திரைப்பட (விமர்சனம் அல்ல) அலசல்!

எல்லோரும் நல்லா இருக்கீங்களா? வாங்க படிப்போம். இந்த முறை மொத்தமாக திரைப்படங்கள் மட்டுமே. 

இன்னும் 'காலா' பார்க்கவில்லை. குடும்பத்துடன் போகலாம் என்றால் அவர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே, காத்திருக்கிறேன். மற்றபடி பார்த்ததில் (போன பிட்டுக்கும் இந்த பிட்டுக்கும் நடுவில்) அவ்வளவு ஒன்றும் பெரிதாக கவரவில்லை. 

மெர்க்குரி படம் திரையரங்கில் சென்று பார்த்து நொந்தே விட்டேன். 'சில சமயங்களில்' படம் இணையத்தில் (Netflix) பார்த்தேன். வித்தியாசமான முயற்சி. ஆனால், சற்றே இழுவை. 'பக்கா' என்று ஒரு படம். சத்தியமாக முடியவில்லை. தமிழ் படம் போல மற்ற படங்களை கிண்டல் அடிக்கிறார்களா அல்லது சீரியஸாகவே எடுத்துள்ளார்களா என்றே புரியவில்லை.  தியா, இரவுக்கு ஆயிரம் கண்கள் செம, காளி, பாஸ்கர் ஒரு ராஸ்கல் போன்றவை ஒரு முறை பொழுது போக்கிற்கு பார்க்கலாம். 

இரும்புத்திரை: பார்க்க பார்க்க பயமுறுத்துகிறார்கள். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக ஒரே தொலைபேசி எண்ணை பயன்படுத்துகிறேன். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, எங்கே சென்றாலும், அங்கே அலை பேசி எண்ணை கேட்டால் கொடுத்து விடுவேன். திருமணம் ஆன புதிதில் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு மனைவி முன் 'கெத்தாக' பணம் கொடுத்தேன். அலைபேசி எண்ணையும்தான். 

அதன் பிறகு ஆரம்பித்தது தொல்லை, 'சார் எங்களுக்கும் உதவி பண்ணுங்க சார்" என்று தினமும் அழைப்புகள், தொலைபேசி எண்ணையே மாற்றி விடலாமா என்று கூட தோன்றியது. பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக எங்கே போனாலும் கொடுக்காமல் உள்ளேன். "சார், நம்பர் கொடுத்தா 15% டிஸ்கவுண்ட்" என்பார்கள். அடித்தாலும் கொடுக்க மாட்டேன். ஆனால், எப்போதோ கொடுத்ததன் விளைவை இன்று வரை அனுபவிக்கிறேன். இன்றும் கூட தினமும் 2,3 அழைப்புகள் கடன் அட்டை, லோன் என்று வந்து கொண்டே இருக்கிறது. 

கொஞ்சம் ஜாக்கிரதையாக உபயோகிப்பதால் பெரிய தொந்தரவு இல்லை. ஆனால், என் மனைவிக்கு ஸ்டேட் பேங்கில் கணக்கு உள்ளது. 3 மாதங்களுக்கு ஒரு முறையாவது "மேடம் உங்க கார்டு எக்ஸ்பைரி ஆக போகுது" என்று உடைந்த தமிழில் அழைப்பு வரும். என் மனைவியோ "எல்லாம் என்ற வூட்டுக்காரனுக்குத்தானுங்க தெரியும்" என்று சொல்லி வைத்து விடுவார். 

இந்த படத்தில் வருவது போல ஒரே ஆள் எல்லாவற்றையும் செய்வதில்லை. மற்றபடி எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதில் பாதி உண்மைதான். எளிமையாக சொன்னால், அதிகம் ஆசைப்படாமல் இருந்தாலே போதும். 

நடிகையர் திலகம்: இரண்டு வருடங்களுக்கு முன் தினமலர்-வாரமலரில் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு தொடர் வந்தது. அப்போதே "ச்சே எப்படி வாழ்ந்து கெட்டிருக்காங்க" என்று தோன்றியது. படத்தில் அதில் படித்ததில் பாதி கூட வரவில்லை. ஜெமினியை கெட்டவனாக காட்டி, சமந்தா-விஜய் காதல் கதை வேறு குறுக்கே குறுக்கே. இன்னும் அவரது சிறப்புகளையும், அந்த பிடிவாத குணம் பற்றியும் நன்றாக சொல்லி இருக்கலாம். சந்திரபாபு வரவேயில்லை. 

இந்த படத்தை அமேசான் பிரேமில் தான் பார்த்தேன். ரொம்ப நாளாக எந்த தமிழ் படமும் அதில் வரவே இல்லை. நிறைய வாய்ப்புகள் இருந்தாலும் தமிழ் திரையுலகம் அதை வீணடிக்கிறது என்று நினைக்கிறேன். 

தினமும் அலுவலகத்திற்கு அலுவலக வாகனத்தில் பயணிப்பதால் நிறைய படங்களை பார்ப்பதுண்டு. மொழி பேதம் கிடையாது. அந்த வகையில் பார்த்த ஒரு நல்ல திரைப்படம் (Feel Good) ராணி முகர்ஜீ நடித்த Hichki, ஹிந்தி திரைப்படம். 

நரம்பு குறைபாட்டால் (திடீரென தலையாட்டி, ஒரு வினோதமான சப்தம் எழுப்புவார். என் அத்தை ஒருவருக்கு இதே போல உள்ளது. அவர் சப்தம் எழுப்ப மாட்டார். ஆனால், தலை தன்னை அறியாமல் ஆடும்) பாதிக்கப்பட்ட ராணி முகர்ஜீ பள்ளி ஆசிரியராக ஆசைப்படுவார். அவரை, அவர் படித்த பணக்கார பள்ளியில், கல்வி உரிமையின் கீழ் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு ஆசிரியராக சேர்க்கிறார்கள். யாரையும் மதிக்காத, யாராலும் மதிக்கப்படாத அந்த மாணவர்களை பள்ளியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். எப்படி ராணி சமாளிக்கிறார் என்பதே படம். 

பொதுவாக விளையாட்டு (இறுதி சுற்று, கேக் தி இந்தியா, தங்கல், இன்னும் பல) மற்றும் கல்வி (ஹிந்தி மீடியம், தாரே ஜமீன் பர், சாட்டை, பசங்க 2 இன்னும் சில) எல்லவற்றிலும் பார்த்தால், நாயகன்/நாயகி வருவார். அவர் கண்டிப்பாக தோல்வி அடைந்தவராக இருப்பார். அவரிடம் இருப்பதிலேயே மோசமான குழுவோ, தனியாளோ வருவார்கள். அவர்களிடம் உள்ள தனித்திறமையை கண்டறிந்து வெற்றி பெற வைப்பார்கள். இதுதான் கதை. ஆனால், திரைக்கதையில் உள்ள வித்தியாசம்தான் படங்களை வெற்றி அடைய வைக்கும். அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்று நமக்கு தெரியும். இருந்தாலும் அதை சலிப்பு தட்டாமல் கொண்டு போகிறார்கள். கண்டிப்பாக பார்க்கலாம். 

அட்லீ சுட்ட இட்லி: 

The Frighteners, Judgement Night என்று இரண்டு படங்கள் பார்த்தேன். "ஏற்கனவே எங்கேயோ பாத்திருக்கமே, அதுவும் ஒரே ஆளோடதாச்சே" என்று பார்த்தல், நம்ம வெங்கட் பிரபு. மாஸ் என்கிற மாசிலாமணி, சரோஜா படங்களின் மூலம். அடச்சே என்று தலையிலடித்துக் கொண்டேன். 

அதே போல 'தெறி' என்ற மட்டமான படம். இருந்தாலும் அதில் ஒரு சில காட்சிகள் கொஞ்சம் பிடிக்கும். பாரிஸ் கார்னரில், குழந்தைகளை பிச்சை எடுக்க வைப்பவர்களை அடிப்பது. அதில் சண்டை ஆரம்பிப்பதற்கு முன், ரவுடி "பாத்தல்ல, நாங்க எத்தனை பேருன்னு" என்பார். உடனே விஜய் "என்ன, 5 பேரு" என்றவுடன், "கணக்குல பெயிலா நீ. நாங்க 11 பேர்" என்றவுடன், விஜய் " நான் மொதல்ல இவன அடிப்பேன். அப்ப 2 பேர் ஓடிருவானுங்க" என்றெல்லாம் கணக்கு சொல்வார். "படம் மொக்கையா ஈ அடிச்சான் காப்பியா இருந்தாலும், நல்ல சீன்லாம் வச்சிருக்காம்பா" என்றெல்லாம் எண்ணினேன். (காணொளியை 02:20ல் இருந்து காணவும். அதே வசனம்)  


Jack Reacher என்றொரு படம். அதில் இதே காட்சி அப்படியே இருந்தது. அடேய் அட்லீ, அடுத்தவன் மாவு எடுத்து இட்லி சுட்டா பரவாயில்லடா, ஆனா, அடுத்தவன் இட்லியையே ஏண்டா சுடர. (காணொளியை 02:50ல் இருந்து காணவும். அதே வசனம்)


மீண்டும் சந்திப்போம். மற்றபடி மிக மிக ஆவலாக பார்க்க வேண்டும் என்று காத்திருப்பது தமிழ் படம் 2.O தான்.



Thursday, May 10, 2018

நுழைவுத் தேர்வு கட்டாயம் தேவை!

தமிழகத்தின் தற்போதைய பிரச்சினை நீட் (NEET) எனப்படும் நுழைவுத் தேர்வுதான். அதைப்பற்றி என்னுடைய சிறு பார்வை. என்னுடைய சொந்த அனுபவத்தையே சொல்கிறேன். 

2006 வரை இந்த நுழைவுத்தேர்வு இருந்தது. அப்போதைய மாநில அரசின் மருத்துவம் மற்றும் பொறியியலுக்கான நுழைவுத்தேர்வு, அண்ணா பல்கலைக்கழகம் நடத்துவது, இப்படித்தான் இருக்கும். 

சனி காலை - தாவரவியல் மற்றும் விலங்கியல் - 90 வினாக்கள் - 50 மதிப்பெண்கள். 
சனி மதியம் - இயற்பியல் மற்றும் வேதியியல் - 90 வினாக்கள் - 50 மதிப்பெண்கள். 
ஞாயிறு காலை - கணிதம் - 90 வினாக்கள் - 50 மதிப்பெண்கள். 

மருத்துவம் படிக்க, முதலிரண்டு தேர்வுகளும், பொறியியல் படிக்க கடைசி இரண்டு தேர்வுகளும் எழுத வேண்டும். நுழைவுத் தேர்வு 'சரியான விடையை தேர்ந்தெடுக்கும் முறை (4 பதில்களில் சரியான விடையை தேர்ந்துதெடுப்பது). இந்த கேள்விகள் அனைத்தும் மாநில பாட திட்டத்தில் இருந்தே கேட்கப்படும். மொத்தம் 4 வகையில் கேள்வித்தாள்கள் இருக்கும், வெவ்வேறு வண்ணங்களில் இருக்கும். மொத்த கேள்விகள் ஒன்றுதான், ஆனால், வரிசை மாறி இருக்கும். தவறாக விடையளித்தால் மதிப்பெண் குறைக்கப்படாது.  

மற்றபடி எல்லோருக்கும் தெரிந்ததுதான், எப்படி மதிப்பெண்கள் கணக்கிடுவது என்பது. நாம் பொறியியலை எடுத்துக் கொள்வோம். 
கணக்கு மதிப்பெண்கள் - 100க்கு. 
இயற்பியலின் மதிப்பெண்கள் - 50க்கு, 
வேதியியலின் மதிப்பெண்கள் 50க்கு, 
கணித நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் - 50க்கு, 
இயற்பியல் மற்றும் வேதியியல் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் - 50க்கு. 
மொத்தம் 300க்கு எவ்வளவு என்று கணக்கிடப்படும். 

கீழே ஒரு உதாரணம் 


அப்போது ஒவ்வொருவரும் கட் ஆப் (cut-off) மதிப்பெண்கள் இரு தசமத்தில் இருக்கும். .0.01 வித்தியாசமெல்லாம் சாதாரணம் (90 வினாக்கள், 50 மதிப்பெண்கள்தான் காரணம்). அந்த நுழைவுத் தேர்வு ஒன்றும் சிம்ம சொப்பனம் கிடையாது.

சந்தித்த பிரச்சினைகள்: 

எப்போதும் உள்ள பொதுவான பிரச்சினைகளைத்தான் சந்தித்தோம். தவறான கேள்விகள், நான்குமே தவறான விடைகள், ஆங்கிலத்தில் ஒன்றும், தமிழில் வேறு மாதிரியும் இருப்பது, கேள்வி முன்னரே வெளிவருவது, விடைகளை பென்சிலால் கருமையாக வேண்டும். சரியாக, முழுமையாக செய்யாவிட்டால் அவ்வளவுதான் என நிறைய பஞ்சாயத்துகள் நடந்தன. 

இவை பொதுவானவை. தனிப்பட்ட முறையில் மாணவர்களுக்கு பெரிய பிரச்சினை எனக்கு தெரிந்து எதுவும் இல்லை. அப்போது பொதுத் தேர்வுகள் முடிந்து எப்படியும் 45 நாட்கள் கழித்து நுழைவுத்தேர்வு இருக்கும். அதற்காக தனி வகுப்புகள் நடக்கும். 

அந்தியூர், ராசிபுரம், திருச்செங்கோடு எல்லாம் உண்டு, உறைவிடத்தோடு வகுப்புகள் நடக்கும். பல ரகசிய வழிமுறைகள் எல்லாம் சொல்லித் தந்து "வெளிய யார்கிட்டயும் சொல்லக்கூடாது" என்று சத்தியம் வாங்குவார்கள். இறுதி தேர்வில் 10 மதிப்பெண்ணிற்கு வரும் வினா இங்கே இருக்கும், அதற்காக அரை மணி நேரம் செலவு செய்ய முடியாது. அதை ஒரு நிமிடத்தில் தீர்க்கும் வழிமுறைகள் எல்லாம் அப்போதுதான் சொல்லுவார்கள். வீட்டிலேயே படிக்கும் மாணவர்களுக்கு அது மிகவும் கஷ்டம். புரிந்து படிப்பவர்களுக்கு சுலபம்.

நுழைவுத் தேர்வில் ஒரு கேள்வி தவறானாலும் 0.56 மதிப்பெண்கள் அவ்வளவுதான். தலையெழுத்தே மாறி விடும். ஆனால், முடிவில், ஒரே மாதிரி மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்கள் குறைவு. அப்படியே இருந்தாலும், முதலில் கணிதம், பின் மற்ற பாடங்களை பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும். முதல் மதிப்பெண் எப்போதுமே 299.xx என்று வரும். அதுவும் ஓரிருவரே. 298.75க்கும் 299.00க்கும் நடுவில் ஒவ்வொரு 0.01 வித்தியாசத்தில் நிறைய பேர் இருப்பார்கள். 

அப்போது திருச்சியில் உள்ள REC (தற்போதைய NITயில் கூட 50 சதவீதம் சேர்த்தார்கள்). மற்ற மாநிலங்களில் உள்ள RECல் சேர அகில இந்திய அளவல் நடக்கும் தேர்வு எழுத வேண்டும். இதே நீட் போல அதற்கும் தமிழ்நாட்டில் மொத்தம் 10 மையங்கள்தான், ஆங்கில மற்றும் ஹிந்தியில்தான் எழுத முடியும் என்றெல்லாம் இருந்தது, அதனாலேயே எழுதவில்லை. 

ஆனால், CBSE மாணவர்களுக்கு "இதெல்லாம் சப்ப" என்றுதான் சொல்வார்கள். அவர்களால், பொதுத்தேர்வில் அவ்வளவு மதிப்பெண்கள் பெற முடியாது. நிறைய பேர் (என்னுடைய நண்பர்கள்) 10ம் வகுப்பு வரை CBSEல் படித்துவிட்டு, பின் மாநில பாடத்திட்டத்திற்கு மாறினார்கள். 

நுழைவுத் தேர்வு நீக்கப்பட்டவுடன் என்ன நடக்கிறது. 

2001க்கு பின், நாமக்கல்லில் புற்றீசல் போல நிறைய பள்ளிகள் முளைத்தன (தமிழகம் முழுவதும்தான்). நுழைவுத் தேர்வு இல்லை என்றவுடனே, எல்லா பள்ளிகளுக்கு மாணவர்களுக்கு மனப்பாடம் செய்வதை ஊக்குவித்தன. புத்தகத்தை அப்படியே முழுங்கி, தேர்வில் போய் வாந்தி எடுக்க வேண்டியதுதான். அது மட்டுமில்லாமல் 11ம் வகுப்பில் இரண்டாம் மாதத்திலேயே 12ம் வகுப்பை ஆரம்பித்து விடுவார்கள். "கேள்வியைப் படி. 5 முறை பார்த்து எழுது. பிறகு, 10 முறை பார்க்காமல் எழுது". இதுதான் நடக்கும். இனி 11ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு என்பதால், இந்த தொந்தரவு குறையலாம்.  

பொதுவாக நிறைய தவறுகள் நடப்பது ஒரு மதிப்பெண் கேள்விகளில்தான் (சரியான விடையை தேர்ந்தெடுப்பது, கோடிட்ட இடங்களை நிரப்புவது, பொருத்துக என ) மதிப்பெண்கள் இப்படித்தான் இருக்கும். எல்லா தனியார் பள்ளிகளும் எப்போதும், அவர்களுடைய பள்ளிகளே தேர்வு மையங்களாக இருக்கும்படி பார்த்துக்கொள்வார்கள். எனவே, எல்லா மாணவர்களுக்கும் இந்த 30 மதிப்பெண்கள் கிடைக்குமாறு பார்த்துக்கொள்வார்கள். இன்று வரை இதுதான் நடக்கிறது. மற்ற 2, 5 மற்றும் 10 மதிப்பெண் கேள்விகள் அதே வாந்தி, பேதிதான்.

பொதுவாக இறுதி தேர்வுகள் பாடங்களின் முடிவில் இருக்கும் கேள்விகளையே மீண்டும் கேட்டிருப்பார்கள். அதிலும், இயற்பியலில் மின்னணுவியல் (Electronics) என்ற பாடம் உண்டு, அதிலிருந்து கேள்வியே வராது என்று எல்லோரும் சொல்வார்கள், அதை படிக்க தேவையில்லை என்று ஆசிரியரும் சொல்வார். ஒரு 10 மதிப்பெண் கேள்வி கட்டாயம் எழுத வேண்டும். அதற்கும், குறிப்பிட்ட 10 கேள்விகளே மீண்டும் மீண்டும் வரும். எனவே, நன்கு மனப்பாடம் செய்ய தெரிந்தாலே போதும் என்ற நிலைதான். 

கட் ஆப் இப்போது 200க்கு மட்டுமே. இதன் விளைவாக 200க்கு 200 மதிப்பெண்களே ஒரு 30, 40 பேர் வாங்குகிறார்கள். அடுத்தது 199.75, அதில் ஒரு 100 பேர். இவர்கள் அனைவருக்கும் கணிதம், மற்ற பாடங்கள், மொத்த மதிப்பெண்கள் என பார்த்து தரவரிசை அளிக்கப்படும். இவை எல்லாமே ஒரே மாதிரி இருந்தால், பிறந்த தேதியைப் பொறுத்து முன்னுரிமை. கொடுமையோ கொடுமை. 

2006க்கு முன் மருத்துவம், அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்தவர்களில் அரசு பள்ளிகளிலும், தமிழ் வழியிலும் படித்த மாணவர்களின் சதவிகிதமும், நுழைவுத் தேர்வு நீக்கப்பட்ட பின் படிப்பவர்களின் சதவீதத்தையும் பாருங்கள், பயங்கரமாக குறைந்திருக்கும். நான் படிக்கும்போது ஒவ்வொரு வருடமும் குறைந்தது 30 சதவீதமாவது தமிழ் வழிக்கல்வியில் படித்திருப்பார்கள். அதன் பின் படிக்க போன என்னுடைய தெரிந்த, சொந்தக்காரர்களிடம் (அவர்கள் தனியார் பள்ளி, ஆங்கில வழி கல்வி) விசாரித்தால், 10 சதவீதம் கூட தமிழ் வழி படித்தவர்கள் இல்லை. அரசு பள்ளிகளில் படித்தவர்கள் இன்னும் குறைவு. 

2001 வரை இந்த மக்கள் அதிகம் இருப்பார்கள். காரணம் கருணாநிதி 1998ல், கிராமப்புற பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 15 சதவிகித இட ஒதுக்கீடு அளித்தார். 2001ல் ஆட்சி மாறி ஜெயலலிதா வந்தவுடன், அதாவது மே மாதம் ஆட்சிக்கு வந்த உடனே, அதை 25 சதவிகிதமாக மாற்றினார். நான் உள்பட பல பேர் இதனால் பாதிக்கப்பட்டோம். (ஏனென்றால் 11,12ம் வகுப்பை நாமக்கல்லில் படித்தேன்), ஆனால் பல கிராமப்புற மாணவர்கள் பயன் பெற்றனர். 

ஆனால், எதற்காக ஜெயலலிதா அதை மாற்றினாரோ அதுதான் நடந்தது. சில பேர் வழக்கு போட்டனர். நீதிமன்றம் 25 சதவிகிதத்தை நீக்கியது. மேல் முறையீடு செய்யப்படவில்லை. மீண்டும் கருணாநிதி ஆட்சிக்கு வந்தாலும், இது கொண்டுவரப்படவில்லை. ஏனென்றால் முக்கால்வாசி அரசியல்வாதிகள் பள்ளி, கல்லூரி முதலாளிகள் ஆகி விட்டிருந்தனர். 

சரி இனி என்ன செய்யலாம்: 

இந்தியா முழுவதும் ஒரே நுழைத்த தேர்வு என்றால், ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டு வரப்பட வேண்டும். 
இல்லையா, அந்தந்த மாநிலங்களே நுழைவுத் தேர்வு நடத்தி, அந்த மாநிலத்தில் உள்ள 90 அல்லது 95 சதவிகித இடங்களை நிரப்பிக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
கண்டிப்பாக அரசுப்பள்ளிகளுக்கு, தமிழ் வழிக்கல்வி பயின்றவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். முன்னர் இருந்த மாநில அளவிலான நுழைவுத் தேர்வில் இருந்த குழப்பங்களை களைந்து, இப்போதுள்ள சமச்சீர் பாடதிதிட்டத்தில் கீழ் உருப்படியான ஒரு நுழைவுத்தேர்வை கொண்டு வரலாம்.

மீண்டும் சொல்கிறேன். நுழைவுத் தேர்வு கட்டாயம் தேவை. ஆனால், நீட் (NEET) சரியான தேர்வு அல்ல. 

இதற்கெல்லாம் நான் சர்வாதிகாரி ஆனால்தான் முடியும்.