Wednesday, June 3, 2009

வாசிப்பனுபவம் (உயர்நிலைக்கல்வி)

என்னுடைய ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி அனுபவங்கள் பற்றி படிக்க...

என்னதான் அரும்பு மீசை முளைத்து, நான்கு புத்தகங்கள் படித்துவிட்டு பீலா விட்டாலும், ஊருக்குள் நம்மை இன்னும் சின்ன பசங்க போலவே பார்க்கிறார்களே? ஏன் என்று வீட்டில், தனியறையில் யோசித்தோம். அப்போதுதான் மாத நாவல்களை விட, வார இதழ்கள் படித்து, நம் அறிவை சீக்கிரம் வளர்த்துக்கொள்ள வேண்டும். எனவே 'பல்சுவை வார இதழ்களை' படிக்க ஆரம்பித்தோம்.

குமுதம், ஆனந்த விகடன், கல்கி, கல்கண்டு, குங்குமம் (ஓசிதான்.. வாரா வாரம் நான்கு, ஐந்து ரூபாய்க்கு எங்கே போவது?). அதுவரை படித்த புத்தகங்களில் எல்லாம், மீறிப்போனால் பத்து நகைச்சுவைத் துணுக்குகளுக்கு மேல் இருக்காது. ஆனால், இவற்றில் உள்ள துணுக்குகளுக்காகவே விரும்பிப் படித்தேன்.

அதே நேரம், ஊரில், முழு நேர நூலகத்தை திறந்து விட்டார்கள். புத்தகங்களும் நூறிலிருந்து கிட்டத்தட்ட ஐநூறுக்கு மேல் ஆகி விட்டது. நூலகரும் புது நூலகர். ஆனாலும், என்னுடைய அருமை பெருமை எல்லாம் சொல்லி, ஓரளவு பெரியாளாக காட்டிக் கொண்டேன். சந்தாதாரராக நானும், பினாமியாக என் அம்மாவையும் சேர்த்து விட்டேன். அங்கேயே குமுதம், விகடன் எல்லாம் வரும். என்னுடைய 'பவர் ஆப் அட்டர்னியை' பயன்படுத்தி வீட்டுக்கு எடுத்து வந்து விடுவேன்.

அப்போதுதான் சிறுகதைகளின் பெருமைகளைப் பற்றி அறிந்தேன். சுஜாதா அப்போதுதான் அறிமுகம் (யாரந்த பிகர்னு தெரியலையே). அதன் பின் கேள்வி-பதில் பகுதி. மதன் பதில்கள், அரசு பதில்கள், அல்லி பதில்கள் முதல் சுண்டெலியார் பதில்கள் வரை அனைத்தும் பரிட்சயம்.

ஆனாலும், நூலகத்தில் நீதிக்கதைகளும், நாவல்களுமே பொழுதுபோக்கு. அவ்வப்போது கட்டுரைகளும் படிப்பதுண்டு. பத்தாவது அரையாண்டுக்குப் பின் வீட்டில் சொல்லி, என்னை நூலகத்தில் சேர்க்கக்கூடாது என்று தடையுத்தரவு போட்டு விட்டதால், படிப்பது கொஞ்சம் (கொஞ்சமே) குறைந்தது. என் வீட்டில் இல்லாமல், நண்பர்கள் வீட்டில் வைத்து படிப்பேன். என் வீட்டிலோ, 475க்கு மேல் எடுத்தால் சைக்கிள் என்றெல்லாம் ஆசை காட்டினார்கள். எனவே, சரி என்று சிறு நிறுத்தம் இட்டு வைத்தேன்.

மேல்நிலைக்கல்வியும், கல்லூரிக்கல்வியும் விரைவில்..

பத்தாம் வகுப்பு முடிவுதானே? வீட்டிற்கு வீண் செலவு வைக்கவில்லை.