Monday, February 16, 2015

சினிமா 2015 - 'ஐ' முதல் 'அனேகன்' வரை

மொக் 'ஐ':
 

இந்த சங்கருக்கு (என்னது, அப்படி சொல்லக்கூடாதா? அப்புறம், ஓ சரி சரி) ஷங்கருக்கு என்னதான் ஆச்சு? ஊர்ல ஒரே மாவ வச்சி வட, பஜ்ஜி, போண்டா சுடர மாதிரி, ஒரே கதைய வச்சி (நண்பன்/மகள்/தங்கை இறக்க வேண்டும். அதற்கு காரணமான சமுதாய பிரச்சினையைத் தீர்க்க கொலை செய்ய/கொள்ளை அடிக்க வேண்டும்), கொஞ்சம் கொஞ்சம் திரைக்கதைய மாத்தி (உபயம், சுஜாதா) கொஞ்சம் ஒப்பெத்திட்டாறு. அப்புறமா ரஜினிய வச்சி ரெண்டு படம். அப்புறம் என்ன செய்யறது? விஜய்தான் கெடச்சாரு. அவரு முடிய வெட்டவே ஒத்துக்க மாட்டாரே? சரி ஒப்பெத்துவோம்னு சொல்லி 'நண்பன்' ஆயிட்டாரு. அப்புறமா, நம்ம விக்ரம் சிக்குனாறு. அப்ப சந்தோசத்துல 'ஐ'ன்னு ச அடச்சே ஷங்கர் குதிச்சதுல, விக்ரம் 'ஐ' சூப்பர் டைட்டில்னு நெனைக்க, நமக்கு 'ஐ ஐ'ஓன்னு ஆயிடுச்சு.

நம்ம ஹாய் மதன், ஜெயா டிவியில 'அந்நியன்' படம் வரும்போது ஒன்னு சொன்னாரு. 'ஷங்கர் வெளிநாட்டுல இருக்குற மாதிரி வீடியோ ஆல்பம் எடுக்கலாம். கண்டிப்பா நல்லா வரும்' அப்டின்னாரு. அத மறுபடி யாராவது ஷங்கர்கிட்ட சொன்னா பரவால்ல. அதே போல, ரயிலுக்கு, வீட்டுக்கும் கலரடிச்ச நேரத்துல, கொஞ்சம் கதைய நல்லா யோசிச்சிருக்கலாம்னு சொன்னாரு. 'ஐ' பாக்கும்போது எனக்கும் அதே நெனப்புதான். 10 வெளம்பரம், 5 பாட்டு எடுக்க உக்காந்து யோசிச்சீங்களே, இன்னும் கொஞ்சம் திரைக்கதையை யோசிக்கக் கூடாதா?

தாங்கல-ஆம்பள:

சில படங்கள தரவிறக்கம் பண்ணி பாக்கும்போது, "அடடா, இத தியேட்டர்ல போயி பாத்திருக்கலாமே" அப்டீன்னு தோணும். இன்னும் ஒரு சில படங்கள அப்படி பாக்கும்போது, தேவையில்லாம இப்ப நேரத்த வீணடிச்சுட்டோம்னு வருத்தப்படுறதா, இல்ல காசு மிச்சம்னு சந்தோசப்படுறதா அப்டின்னு கொழப்பம் வரும். இது அந்த வகைய சேந்தது. பொதுவாவே சுந்தர் C மேல ஒரு மருவாதி இருந்தது. 'Soul Kitchen' படம் பாத்தப்ப கூட ஒன்னும் தோணல. ஆனா, அப்ப கொடுத்த ஒரு பேட்டிலதான் செம காண்டு. அதுக்கப்புறம் அரண்மனை படத்துல மொத சீனே கடுப்பாயிடுச்சு. ஏன்னு கேக்குறவுங்க 1408ன்னு ஒரு பேய்ப்படம் பாருங்க தெரியும். தம்பி விஷாலு, இப்படியே படம் எடுத்தேன்னா பாக்டரிய இழுத்து மூட வேண்டியதுதான்.

'டர்ர்'லிங்க்:

ஏற்கனவே இதன் மூலமான 'பிரேம கதா சித்திரம்' படத்தையும், அதை வைத்து காப்பியடிக்கப்பட்ட '1 பந்து 4 ரன் 1 விக்கட்' படத்தையும் ஏற்கனவே பார்த்திருந்ததால், அவ்வளவு பெரிய ஈர்ப்பில்லை. ஆனாலும், அதையும் தாண்டி சற்றே கவனத்தை ஈர்த்தது. நகைச்சுவை அளவுக்கு மீறாமல் நன்றாகவே எடுத்திருந்தனர். முதல் பாதியில் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம். கார் திருடுவது, மந்திரியை அடிப்பது எல்லாம் கொஞ்சம் மொக்கை. மற்றபடி, மற்ற இரண்டு படங்களுக்கு, எவ்வளவோ தேவலை.

என்னை அரிந்தால்:

தலைப்பில் எழுத்துப்பிழை எதுவும் இல்லை. சுப்ரமணியபுரம் படத்தில் வருவது போல அறுக்கவில்லை என்றாலும், கொஞ்சம் மொக்கைதான். எப்போதும் போல தமிழ், ஆங்கில கெட்ட வார்த்தை பேசும் நாயகன், விவாகரத்தான நாயகி (ஒரு படத்துல சரி, எல்லாப் படத்துலயுமா?) இறக்கின்ற ஒரு நாயகி, பழி வாங்கல் என 'முடியல'. கொஞ்சம் கோட்டுக்கு இந்தப் பக்கமும் வாங்க நாயரே. ஓ மன்னிக்கணும் மேனன் சார்.

இ'ச்சை':

ஆங்கிலத்திலும்,ஹிந்தியிலும் இப்போதெல்லாம் உயிரோடு உள்ள பெரிய ஆட்களின் வாழ்க்கை வரலாறை எடுக்கிறார்கள். படங்கள் சொதப்பலாக இருந்தாலும், அவர்களை யாரும் கேவலப்படுத்தவில்லை. தமிழில் முன்பொரு காலத்தில் நிறைய வந்தன. தற்போது ராஜசேகரன் மட்டும் பெரியார், பாரதி, ராமானுஜன் என்று இல்லாத சாதனையாளர்கள் பற்றி எடுக்கிறார்.

இந்தப் படம் பற்றி சூர்யா கூறும்போது, ஒருவரின் வளர்ச்சியினால் பாதிக்கப்படும் இன்னொருவரின் சூழ்ச்சிகளே இந்த கதை. அது இசைத்துறை. அவ்வளவுதான். என்றார். எல்லாம் சரிதான். ஆனால், அந்த பெரிய இசையமைப்பாளர் சொல்லும் வார்த்தைகளும் ("நான் துப்பறதுதான் இசை") நடந்து கொள்ளும் விதமும் (முகத்தில் தூக்கி விசிறி அடிப்பது - தளபதி சமயத்தில் நடந்தது என நான் கேள்விப்பட்டுள்ளேன், இந்தப்படம் வருவதற்கு முன்பே), இசைக்கடல், இசை வேந்தன் போன்றவை, சத்யராஜை சரஸ்வதியை கும்பிடுவராகவும், சூர்யா 'வேறு' மதத்தை சேர்ந்தவராக காட்டியதும், இயக்குனர் தன்னுடைய அடுத்த படத்திற்கு (அவமானப்படுத்தப்பட்ட படம் வேறு) இசையமைக்க கூப்பிடுவதும், அது மட்டுமின்றி, பிரகாஷ்ராஜ் நடிக்கவில்லை என்றவுடன் கங்கை அமரனை நடிக்க வைக்க முயற்சி செய்தது எல்லாம் வைத்துப் பார்த்தால், ஒன்று சூர்யாவுக்கு ரஹ்மானை ரொம்பப் பிடித்திருக்க வேண்டும் அல்லது இளையராஜாவால் ரொம்ப அவமானப்பட்டிருக்க வேண்டும் அல்லது இவை இரண்டுமேவாக கூட இருக்கலாம்.

பொதுவாக ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான ஆட்களின் எதிராளியை, எதிரியாக நினைத்து அவர்களை திட்டுவதும், கேவலமாக பேசுவதும் பரம்பரை பரம்பரையாக நடப்பதுதான். ஆனால், படமாகவே எடுப்பது இதுதான் முதல் முறை. இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும்.

இந்தப் படத்தின் இறுதிக் காட்சியை 'மிகப் பெரிய திருப்பம்' என்று சொல்லுபவர்கள் எல்லாம், இருபது வருடத்திற்கு முந்தைய குமுதத்தில் வந்த ஒரு பக்க கதை, சிறுகதைகளை படிக்க வேண்டுகிறேன். அதெல்லாம் முடியாது என்பவர்கள், சிவாஜி நடித்த 'முதல் தேதி' என்ற படத்தைப் பார்க்கவும்.

உலகத்தில் எல்லோருக்குமே, ஒரு முறையாவது வக்கிரமான எண்ணங்கள் தோன்றும். 99 சதவிகித மக்கள் தைரியமின்றி, அதைக் கற்பனையில் மட்டுமே நடத்தி கொள்வார்கள். வெகு சிலர் அதை செய்து பார்க்க வேண்டுமென்று எண்ணி, கொடூரமான சைக்கோவாக மாறுவார்கள். இன்னும் சில பேர், அதை கலை என்ற பெயரில் படமாக எடுத்து மற்றவர்களுக்கு அந்த எண்ணங்களை அதிகரிக்க செய்வார்கள். நிறைய ஆங்கிலப் படங்கள் இதற்கு உதாரணம். தமிழில் நடுநிசி நாய்கள், பாய்ஸ், மற்றும் சூர்யா படங்கள். இன்னும் நிறைய உள்ளன. நினைவுக்கு வந்தவை இவைதான்.

"ஒரு படத்த படமா பாக்கணும். இப்ப காந்தி படத்தப் பாத்தா நீ என்ன திருந்திருவியா?" என்று கேட்காதீர்கள். எப்போதுமே நல்ல விஷயங்களை விட கெட்ட விஷயங்கள் வேகமாக பரவும். ஒரு குடம் பாலில் ஒரு சொட்டு விஷம் விழுவது போலத்தான்.

மற்றவை:

இவை தவிர சென்ற ஆண்டு இறுதியில் வந்த மீகாமன், வெள்ளைக்கார துரை போன்றவற்றை பார்த்தேன். ஒரு முறை பார்க்கலாம். நடு நடுவே புலன் விசாரணை - 2, தொட்டால் தொடரும், தரணி என நிறைய பார்க்கவில்லை. தரணி நன்றாக உள்ளதாக கேள்வி. ஆனாலும் படம் ஓடும் நேரமும் நமது நேரமும் ஒன்றவில்லை. தரவிறக்கமும் செய்ய முடியவில்லை. இன்னமும் அனேகனும் பார்க்கவில்லை. ஓரிரு நாளில் பார்த்த பின், ஏதாவது (B)பிட்டு போடுகிறேன். இல்லையென்றால் நீங்கள் தப்பித்ததாக எண்ணிக் கொள்ளுங்கள்.

3 comments:

  1. பால் கூட விஷமாகி பல நாளாச்சி...!

    ReplyDelete
  2. இது அறியாப்பயல் தெரியாமல் கிறுக்குவது..

    ReplyDelete
  3. Thanks for your comments திண்டுக்கல் தனபாலன் sir.. Also to Ganesh (yaaruppaa nee??)

    ReplyDelete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..