Saturday, December 13, 2014

லிங்கா: அந்த அளவுக்கு எல்லாம் வொர்த் இல்ல

முன் குறிப்பு, முக்கிய குறிப்பு: நான் ரஜினி ரசிகன் அல்ல. கொஞ்சம் சொந்தக்கதையும் உள்ளது. மொக்கையான பதிவு.



அஞ்சான் பார்த்து நோஞ்சான் ஆனதால், இந்த முறை முன் பதிவு செய்யவில்லை. வெள்ளியன்று படம் பார்த்து விட்டு, சமூக வலைத்தளங்களும், நமது பதிவர்களும் கொடுத்த விமர்சனங்களில் இருந்து முதலுக்கு மோசமில்லை என்று முடிவு செய்து காலைக்காட்சிக்கு முன் பதிவு செய்தேன். 

நான் மட்டும் என்பதால், ஒரே ஒரு டிக்கட், வேளச்சேரி லுக்சில் கிடைத்தது. காலை 7:45க்கு படம். எனவே, 6 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். சீக்கிரம் கிளம்பி, நண்பன் வீட்டில் வண்டியை விட வேண்டும் (இல்லேன்னா 100 ரூவா அழனும்) என்றெல்லாம் எண்ணிக்கொண்டே, அலாரம் வைக்காமல் தூங்கி விட்டேன். எழுந்து பார்த்தால் மணி 6:45. அவசர அவசரமாக ஹீட்டர் போட்டு காத்திருந்தால், அது என்ன பிரச்சினையோ சுடு தண்ணீர் வரவில்லை. அவசர அவசரமாக அடுப்பில் வைத்து, குளித்து கீழே வந்தால், பேய் மழை. என்னடா இது சோதனை என்று கவசங்களை அணிந்து, கிளம்பி, வேறு வழியில்லாமல் நேராக தியேட்டருக்கே வந்து விட்டேன். 

150, அதோட இன்னொரு 100. கவுண்டமணி போல 'என் பணத்துக்கு வொர்த்தா இருக்கும்' என்று நம்பி உள்ளே போனேன். நான் உள்ளே போகும்போதே கால்மணி நேரம் தாமதம். ரஜினி அறிமுகப் பாடல் முடிந்து, அனுஷ்காவே வந்து விட்டார். அப்படி ஒன்னும் முக்கியமான காட்சி முடிந்திருக்காது என்று தெரியும் என்பதால், பொறுமையாய் போய் அமர்ந்தேன்.

கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். எல்லா ரஜினி படம் போலவே, பெரிய ரஜினி மக்களுக்கு அணை கட்டி நல்லது செய்து சொத்துக்களை இழந்து, ஊர் மக்களால் அனாதையாக்கி துரத்தப்படுகிறார். பொதுவாக மகன் ரஜினி வந்து அவப்பெயரை துடைப்பார். ஆனால், இதில் பேரனின் பெயர் உள்ளதால், பேரனாக வந்து தாத்தாவின் களங்கத்தைத் துடைக்கிறார். 

பொதுவான ரஜினி படங்களின் எல்லா மசாலாக்களும் இதில் உள்ளது. ஆனால், இந்தப் படத்தில் ரஜினிக்கு சரியான எதிரியே இல்லை. தாத்தா ரஜினிக்கு எதிரியாக வரும் ஆங்கிலேயரை, அவரது மனைவியே திருத்துகிறார். பேரன் ரஜினிக்கு "யாரையாவது வில்லனாக்கனுமே?" என்று யோசித்து, வழக்கம் போல ஊரில் உள்ள ஒரு அரசியல்வாதியை வில்லன் ஆக்கி விட்டார்கள். 

முதலில் பாராட்டப்பட வேண்டியது இயக்குனர்தான். இந்த குறைந்த காலத்தில், இத்தனை நடிகர்களைக் கொண்டு பிரம்மாண்டமான காட்சிகளை எடுத்துள்ளார். அதிலும் அந்த அணை கட்டும் காட்சிகள், பிரமாதம். என்னதான் பணம் நிறையக் கொடுத்தாலும், அதற்கேற்றார்போல வேளை நடக்க வேண்டுமே. ரவிக்குமார் நடத்தியிருக்கிறார். அதே போல, ஓரளவு நல்ல கதை, திரைக்கதையை பக்காவாக தயார் செய்யவெல்லாம் நேரமில்லை, அதான் ரஜினி இருக்காரே என்று துணிந்து இறங்கி உள்ளனர். அதனால்தான், முதலில் அவரை திட்டவும் வேண்டி உள்ளது. 

படத்தின் இடைவேளை வரும்போதுதான் "என்னாது, இப்போதான் இடைவேளையா?" என்று தோன்றியது. அதன் பின் ஓரளவு பரவாயில்லாமல் போனாலும், மீண்டும் இறுதியில் சலிக்க ஆரம்பித்து விட்டது. அதுவும் இறுதி சண்டைக்காட்சிகளில் ரஜினி ரசிகர்களே நக்கலாக சிரிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு அபாரம். இசை பரவாயில்லை. பொதுவாக ரஹ்மான் ரஜினிக்காக கொடுக்கும் பின்னணி இசை எப்போதுமே எனக்கு மிகவும் பிடிக்கும். எந்திரனில் கெட்ட சிட்டிக்கு வரும் இசை, சிவாஜியில் சிங்கப்பாதையை தேர்ந்து எடுத்தவுடன் வரும் இசை, மொட்டை ரஜினிக்கு வரும் இசை, முத்துவில் ராதாரவி வரும்போது வரும் பின்னணி என நான் தேர்ந்தெடுத்து கேட்பவை நிறைய. இதில் அப்படி சொல்வது போல, இப்போது தெரியவில்லை. ஆனாலும், டிரைலரில் வரும் இசையும், ரயில் சண்டைக்காட்சியில் வரும் இசையும் அபாரம்.



1939ம் ஆண்டு காட்சிகளுக்காக ரொம்பவெல்லாம் கஷ்டப்படாமல் எடுத்திருக்கிறார்கள். மொபைல் போன் காண்பிக்கவில்லை, நாயகிக்கு ரவிக்கை இல்லை. ஒரு பழைய கார். கொஞ்சம் வெள்ளைக்காரங்க. ரஜினி எப்பவும் கோட்டு சூட்டு. சுதந்திரத்திற்கு முன்னால், என்பதால், சுதந்திரத்திற்காக போராடுகிறோம் என்று ஒரு சண்டை, அவ்ளோதான். ஆனால், அந்தக் கதையை மட்டுமே, இன்னுமொரு வலுவான வில்லன் பாத்திரம் சேர்த்து படமாக எடுத்திருக்கலாம். படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

மற்றபடி, நான் செலவு செய்த 250ரூபாய்க்கு, இந்தப் படம் எனக்கு திருப்தியைத் தரவில்லை. படத்தில், தாத்தா ரஜினி வரும் வரை கூக்குரல் இட்ட ரசிகர்கள் கூட, இடைவேளைக்கு பிறகு அடங்கி விட்டனர். நான் புக் செய்யும்போது, நாந்தான் கடைசி இடம். ஆனால், படம் பார்க்க வந்த பொது பாதிக்கு மேல் காலியாகத்தான் இருந்தது. இதற்கு கண்டிப்பாக மழை மட்டுமே காரணம் இல்லை என்று நான் நினைக்கிறேன். .

தமிழில் சூப்பர் ஹீரோ படங்களே இல்லை. ரஜினி நடிக்கும் (வரும்?) எல்லாப் படங்களுமே சூப்பர் ஹீரோ படம்தான். அதில் என்ன லாஜிக் மீறல் இருந்தாலும், ரஜினியால் அதை செய்ய முடியும் என்று மறந்து விடுவோம். அதே போலத்தான் இந்தப் படமும் எனலாம், இன்னும் சற்று பட்டை தீட்டி இருந்தால்.

படம் முடிந்த உடனே மனதில் தோன்றியவை: 

பென்னி குயிக் தனது சொத்துக்களை விற்று அணை கட்டினார். இவர்களோ, அவர்கள் சம்பாதிக்க அதைப்பற்றி படம் எடுத்து, அவருக்கும் கெட்டப் பெயரை உண்டாக்கி, பணம் சம்பாதிக்கிறார்களே? (பக்கத்தில் உட்கார்திருந்த ஒருவர் பேசியது, "ஏ மச்சி, ஒரு வேளை அந்த முல்லை பெரியாறு அணையையும் நம்மாளுதான் எவனாவது கட்டியிருப்பானோ?", அதற்கு பதில் "ச்சே ச்சே, அப்படி இருந்தா அது இன்னும் இவ்ளோ நல்லா இருக்குமா").

ரஜினி படம் பார்ப்பதற்கு பதிலாக 'ர' படம் பார்க்க போயிருக்கலாமோ?

சில கேள்விகள்:

"எங்களுக்கு எதுவும் தேவையில்லை. ரஜினி வந்தால் மட்டும் போதும்" என்றுதானே ரசிகர்கள் நினைக்கிறார்கள். அப்புறம் ஏன் தேவையில்லாமல் இரண்டு நாயகிகள், தேவையில்லாத பாடல்கள். என்னதான் படம் என்றாலும், ரஜினி நாயகிகளுடன் கொஞ்சும்போது, எனக்கே ஒரு மாதிரி இருக்கிறது. ஏன், திரைக்கதையில் அவர்களை திணித்து உள்ளீர்கள்? தாத்தா ரஜினி ஏற்கனேவே திருமணம் ஆகியுள்ளவர் போலவும், அனுஷ்கா பாத்திரத்தை ஆண் பாத்திரமாகவும் வைத்திருக்கலாமே? என்னுடைய கேள்விக்குக் காரணம், ரஜினி கொடுத்த பேட்டிதான்.

மக்களுக்கு தேவை ரஜினி திரையில் ஆட வேண்டும், அடிக்க வேண்டும். ஆனால், கண்டிப்பாக இருபது வயது பெண்ணுடனும், ஐஸ்வர்யா ராயுடனும்தான் ஆட வேண்டும் என்று யாரும் எதிர் பார்ப்பதில்லை. (இது கமலுக்கும்தான்)

ரஜினியைப் பிடிக்காதவர்கள் ரஜினி அமிதாப் போல நடிக்க வேண்டும் என்று கூறுவது மேற்கூறிய காரணத்திற்காக மட்டுமே. ரஜினி மட்டும் ஜோடி இல்லாமல், ஒரு முழு நீள அதிரடிப் படத்தில் நடிக்கட்டுமே, கண்டிப்பாக இப்படி சொல்லியவர்கள் வாயை மூடுவார்கள். நானும்தான்.

4 comments:

  1. நேர்மையான மிகையில்லாத அலசல்.ரஜனி தன் வயதை நினைத்து படம் பண்ண வேண்டும்

    ReplyDelete
  2. அடுத்த பதிவை எழுதி உள்ளீர்கள் (படித்து விட்டேன்...!) ஏன் வெளியிடவில்லை...?

    ReplyDelete
  3. இன்னும் கொஞ்சம் கதையை எழுதாம விட்டுட்டேன். அது மட்டுமில்லாம அடுத்த வாரம் போடலாம்னுதான். ஆனாலும் நீங்க இம்புட்டு வேகமா இருக்க கூடாதுண்ணே.

    ReplyDelete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..