Wednesday, June 3, 2015

மாஸ் - தமாஸ், டிமாண்டி காலனி - பக்கா மாஸ்

டிமாண்டி காலனி:

படம் வந்து விட்டாலும், கொஞ்சம் பொறுமையாகவே இருந்தேன். வந்த விமர்சனங்கள் கொஞ்சம் நம்பிக்கை கொடுக்கவே, "விடுறா வண்டியை" என போய் பார்த்து விட்டு வந்து விட்டேன்.

முதலில் இந்தப் படம் எப்படி மற்ற பேய்ப் படங்களில் இருந்து வித்தியாசப்படுகிறது என்று பார்ப்போம். நீங்கள் நிறைய உலகப் பேய்ப் படங்கள் பார்த்திருந்தால், இந்தப் படமும் உங்களுக்குப் பிடிக்கும். பாதி விஷயங்களுக்கு விடை இருக்காது. படம் முழுதும் பயம் மட்டும்தான் இருக்க வேண்டுமென முடிவு செய்து விட்டார்கள்.

நான் சொன்னது போன்ற (?) கதைதான். நான்கு நண்பர்கள், ஒரு ஆர்வத்தில் பேய் வீடு என்று சொல்லப்படும் டிமாண்டி காலனியில் உள்ள வீட்டிற்கு போகிறார்கள். கூட உள்ள பயந்தாங்கொள்ளி நண்பனை பயமுறுத்துகிறார்கள். ஆனாலும் அமானுஷ்யத்தை உணர்ந்து, வெளியேறி விடுகிறார்கள். அதன் பின் அவர்கள் வீட்டில் அடுத்த நாள் ஆரம்பிக்கும் அதகளம், நம்மையும் மிரள வைக்கிறது.

இந்த படம் பற்றி ஒன்றுமே தெரியாத ஆள் பார்க்க ஆரம்பித்தால், முதல் அரை மணி நேரம் கதை எப்படி போகும் என்றே தெரியாது. நான்கு நண்பர்கள், வேறு வேறு வேலை, டாஸ்மாக் பாட்டு என போகும் படம், அப்படியே திசை மாறுகிறது. இந்தப் படத்தில் இன்னொரு குறிப்பிடப் பட வேண்டிய விஷயம், "இப்ப பேய் வருமா?" என நம்மை யோசிக்க வைக்கவே மாட்டார்கள். போகிற போக்கில் புளியைக் கரைப்பார்கள். (அருள்நிதி திரைச்சீலையை ஒதுக்க அதில் பேய் தெரிவது, மெழுகுவர்த்தி எடுத்துக் கொண்டு வர வர கண் வெண்மையாக மாறுவது, ஜோசியர் சொன்ன விஷயத்தை போனில் மீண்டும் கேட்பது)

நான் டிக்கெட் வாங்க போகும்போது ஒரு கல்லூரி கும்பலில் ஒரு ஆள் வரவில்லை என எனக்கு அந்த டிக்கெட்டைக் கொடுத்து விட்டனர். படத்தைக் கத்திக் கத்திக் கலாய்க்க வேண்டும் என்று எண்ணினார்கள் போல. அவர்களுக்கு இயக்குனர் அந்த வாய்ப்பே கொடுக்கவில்லை. படம் முடிந்த பொது, அந்த கும்பலில் சிலருக்கே பேய் அடித்தது போல இருந்தது. அதிலும் படம் முடியும் போது மணி இரவு சரியாக 12. சில குடும்பங்கள் "கும்பலா இருக்கே, ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு போலாமே" என தர்ம சங்கடத்துடன் காத்திருந்தனர். வார நாளின் இரவுக் காட்சியில் அந்த கும்பல் சற்று அதிகம்தான்.

பொதுவாக ஒரு வீட்டுக்குள் மட்டும் இருக்கும் பேய் அந்த வீட்டில் உள்ளவர்களை மட்டுமே பழி வாங்கும். இந்த பேய் கொஞ்சம் வித்தியாசமாக அந்த மனிதர்களின் வீட்டிற்கு போய் பழி வாங்குகிறது. கொஞ்சம் கொஞ்சம் உலகப்படங்கள் நினைவுக்கு வரலாம் (1408-அறை பனி போல உறைவது, பைனல் டெஸ்டிநேஷன்-போன் ஓவனுக்குள் விழுந்து ஷாக் அடிப்பது போன்றவை).

அதே போல முதலில் நாடி ஜோதிடத்தை நக்கல் செய்தும், பின் அதையே ரொம்ப முக்கியமானதாக காட்டியதுதான் ஏன் என தெரியவில்லை. அருள்நிதியின் அது போன்ற பாத்திர படைப்பிற்கான காரணமும் தெரியவில்லை, தேவையுமில்லை. ஏனென்றால் அந்த உதவி இயக்குனரின் பாத்திரம் தவிர மற்றவர்கள் செய்யும் வேலைகள் படத்தை முதல் அரை மணி நேரம் நகர்த்தவே உதவுகின்றன. அந்த டாஸ்மாக் பாடலும், இந்த காட்சிகளிலும் கத்திரி போட்டால், இன்னும் நன்றாக இருக்கும்.

உருவம் படம் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அந்தப் படத்தில், டைட்டிலில் எல்லோருடைய பெயரும் வந்த பிறகு, இயக்குனரின் பெயரும் வந்த பிறகு இறுதியாகத்தான் இளையராஜாவின் பெயர் வரும். அந்த இயக்குனர் ராஜாவின் மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார் போலும். ஒரு காலே அரைக்கால் பாட்டுதான் வரும். அந்த பின்னணி இசை என்னை பயமுறுத்தியதா என எனக்கு அவ்வளவு நினைவில்லை. மீண்டும் அதை சோதித்துப் பார்க்கும் பொறுமையும் இல்லை. (ஆனால் பிள்ளை நிலா அட்டகாசம்) இந்தப் படத்தில் பின்னணி இசை அபாரம், பயமுறுத்தியது. சற்றே காது வலி வந்தாலும்.

காஞ்சனா போன்ற காமெடி பேய்களைப் பார்த்து சலித்திருந்தால், டிமாண்டி காலனி வரை போய் விட்டு வாருங்கள். கண்டிப்பாக உங்களை ஏமாற்றாது.

மாசு (எ) மாசிலாமணி:


உண்மையில் நான் இந்த படம் பார்க்கவில்லை. தவிர்க்க இயலாத சந்தர்ப்பத்தில், அலுவலக நண்பர் ஒருவருடன் அரை மணி நேரம் திருட்டுத்தனமாக பார்க்க நேரிட்டது. பின் கண்டிப்பாக தியேட்டர் போக வேண்டும் என முடிவு செய்து விட்டேன். அப்படியே போனாலும் தனியாக விமர்சனம் எழுத வேண்டும் என தோன்றாது போல. எனக்கென்னவோ வெங்கட் பிரபுவிடம் சரக்கு தீர்ந்து விட்டதோ என தோன்றுகிறது. சென்னை 28ல் இருந்து பிரியாணி வரை தரம் குறைந்து கொண்டேதான் வருகிறது. 

நினைவு தெரிந்து ஒரு இயக்குனரின் அனைத்து படங்களையும் தியேட்டர் சென்று பார்த்தது வெங்கட் பிரபு படங்கள் மட்டும்தான். அதிலும் முதல் 4 படங்கள் நண்பர்களுடன் சென்றபோது மிக சந்தோசமாக இருந்தன. எனக்கும், முதலில் வெங்கட் இதே போலவே படங்களை (யுவன், பிரேம்ஜி என வழக்கமான கூட்டணி) எடுத்தால் நன்றாக இருக்குமே, எதற்காக மாற வேண்டும் என்றுதான் தோன்றியது. ஆனால், இப்படியே போனால், "கொஞ்சம் இல்ல, ரொம்ப கஷ்டம்".

2 comments:

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..