Thursday, December 31, 2015

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

மழை பற்றி சூட்டோடு சூடாக இன்னொரு பதிவு போடலாம் என நினைத்தால், அதற்குள் ஸ்டிக்கர் பாய்ஸ், பீப் பாட்டு, இளையராஜா கோபம், விஜயகாந்தின் 'த்தூ', கொடும்பாவியை எரிக்கிறேன் என வேட்டியில் தீ வைத்துக் கொள்வது என நான் எழுத வந்த விஷயமே பழங்கஞ்சி ஆகி விட்டது. இருந்தாலும் கடமைன்னு ஒன்னு இருக்கே.

சென்னை இனி என்ன ஆகும்:

ஒன்றும் ஆகாது. மக்கள் வழக்கம் போல தங்களது வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டனர். வீடில்லாமல் கரையோரம் வாழ்ந்தவர்கள் வீடுகள் இடிக்கப்படுகின்றன. ஏரிகளில் கட்டியோர் "இன்னும் எத்தன வருஷம் கழிச்சு அடுத்த மழை வருமோ, அப்ப பாத்துக்கலாம்" என விட்டு விட்டனர். முன்பு வேளச்சேரியில் வாடகைக்கு இருந்த வீட்டில் எல்லாம் தண்ணீர் வந்து விட்டது. அங்கு பெரும்பாலானோர் வெறும் சான்றிதழ்களை மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பி உள்ளனர். மீண்டும் திரும்பி வந்து, வழக்கம் போல தங்களது வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

பாய்ந்து பாய்ந்து வேலை செய்த இளம் தன்னார்வலர்கள் "அடுத்த மழை எப்ப வரும்னு காத்திருக்கோம்" என நாஞ்சில் சம்பத் போல உள்ளனர். மழைக்காலத்தில் எல்லா இடங்களிலும் நின்று சென்ற மாநகர பேருந்துகள், தற்போது வழக்கம் போல நிற்க வேண்டிய நிறுத்தங்களில் கூட நிற்காமல் செல்கின்றன. சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் பாலங்களில், 10 அடிக்கும் கீழ் தண்ணீர் செல்கிறது.

மழை முடிந்த பின் சென்னை வந்த எனக்கு "இங்கயா இப்படி" என அதிர்ச்சி தரும் அளவிற்கு எந்த மாற்றமும் இல்லாமல்தான் சென்னை இருக்கிறது.

ஆனாலும், முகநூலில் படித்த தகவல்களைக் காட்டிலும், என் அலுவலக நண்பருக்கு நடந்த உதவிதான் மந்தை நெகிழ வைத்தது. ஒரு வயது குழந்தைக்கு பால் கூட கிடைக்காததால் எப்படியாவது, மனைவியையும், குழந்தையும் சொந்த ஊரான பொள்ளாச்சியில் விட்டு விடலாம் என, மடிப்பாக்கம் வீட்டிலிருந்து வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு கிளம்பி இருக்கிறார்.

இடுப்பளவு நீரில் நடந்து போகும்போது, வண்டியில் வந்த ஒருவர் "என்னங்க குழந்தைய வச்சிக்கிட்டு நடந்து போறீங்க. வாங்க நான் வேணா கொண்டு போய் விடறேன்" என்றிருக்கிறார். நம்மாளோ "பரவால்லீங்க, அதெல்லாம் ஒண்ணுமில்ல, இந்தா பக்கத்துலதான் என்றிருக்கிறார். அடுத்து அவர் சொன்னதுதான் உண்மையில் ஒரு நிமிடம் நெகிழ வைத்தது. "சரீங்க. நீங்க வேணா வண்டியை எடுத்துகிட்டு போய், மனைவி, கொழந்தைய விட்டுட்டு வந்து, திரும்ப என்ன வந்து கூட்டீட்டு போங்க, உங்களை விட்டுட்டு நான் கெளம்பறேன்".

இத்தனை வருட சென்னை அனுபவத்தில் சத்தியமாக இதை நான் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. ஒரு வேலை நான் இருந்திருந்தால் கூட, இதை செய்திருக்க மாட்டேன். சென்னையை நினைத்து நான் கர்வப்பட்ட சமயம் அதுதான்.

பீப் சாங்:

நான் இன்னும் கேட்கவில்லை. வீட்டில் கேட்கும் நிலையில் பாட்டு இல்லை. ஆனால், இந்த பாட்டை எப்படியாவது கேட்டே ஆக வேண்டும் என எல்லா ஊடகங்களும் கங்கணம் கட்டிக்கொண்டு அலைகின்றன. உண்மையில் அது தவறுதலாக வெளிவந்த பாடல், எந்தப் படத்திலும் வெளி வராத பாடல். அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் விட்டிருக்கலாம், அல்லது சிம்பு ஒரு மன்னிப்பு கேட்டிருக்கலாம்.

ஒரு கவிதை வெறும் வரிகளாக இருக்கும் போது, யாரும் அதை அவ்வளவாக நினைவில் வைத்துக் கொள்வதில்லை. ஆனால், இந்தப் பாடல் அப்படி இல்லை. "நேத்து ராத்திரி யம்மா, கட்டிப்புடி, கட்டிப்புடிடா" பாடல்களுக்கு, இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என அனைவருமே பொறுப்பு. ஆனால், இது டம்மி வரிகள் போட்டு பாடியது, அதற்கு முழு முதற் காரணம் சிம்பு மட்டும்தான். அவர் அதை வெளியிடவில்லை (என்று நம்புவோமாக) என்பதாலும், விளையாட்டுத்தனமாக செய்தததாலும் "யார் மனதாவது புண்பட்டிருந்தால்" என வழக்கமான பல்லவியில் ஒரு அறிக்கை விட்டிருந்தாலே முடிந்திருக்கும். அதை விட்டு விட்டு சிம்பு ஒரு பக்கம் முறுக்கிக் கொண்டு போனால், இந்த ஊடகங்கள் எல்லாப் பக்கமும் முறுக்கிக் கொண்டு இருக்கின்றன.

சும்மா இல்லாமல் எல்லோரிடமும் எதற்கு கருத்து என்று தெரியவில்லை. கங்கை அமரன், வைரமுத்து கருத்து சொன்னால், "நீங்க எழுதாத பாட்டா" என்று அவர்கள் மேல் பாய்கிறார்கள். கருத்து சொல்லவில்லை என்றால் "ஏன் சொல்லவில்லை?" என்று பாய்கிறார்கள். என்னாங்கடா உங்க நியாயம்.

ராஜாவின் வாய் எப்படி என எல்லோருக்கும் தெரியும். முடிந்தால் இதைப் படியுங்கள். இதில் பல விஷயங்கள் மிகைப் படுத்தி சொல்லி இருந்தாலும், பல விஷயங்கள் உண்மைதான். அந்த ஹங்கேரி கலைஞர்கள் பற்றிய கேள்விக்கு ராஜா அளித்த பதில் "நான் சொன்னா புரிஞ்சுக்குற அளவுக்கு உங்களுக்கு ஞானம் இருக்கான்னு தெரியலே" என்றுதான். அதே போல மிஷ்கின் பற்றிய கேள்விக்கு சொல்லியது "அதை நீங்கள் இயக்குநரிடம்தான் கேட்க வேண்டும்" என்றுதான். மற்ற சம்பவங்கள் பற்றி நான் கேள்விப்பட்டதுமில்லை, படித்ததுமில்லை.

ஆனாலும், இடம், பொருள், ஏவல் என்பது மிக முக்கியம். ஏனென்றால், அந்த நிகழ்ச்சியில் எனது நண்பர் ஒருவரும் கலந்து கொண்டார். நிறைய புகைப்படங்கள் அவரும் எடுத்தார். அவர் சொன்னது " ரொம்ப நேரம் நின்னு, பொறுமையா கையெழுத்து போட்டு, ஒவ்வொருத்தருக்கும் கொடுத்தார்" என்றார்.

இன்னும் நிறைய சொல்ல தோன்றுகிறது. ஆனால், இப்போதைக்கு போதும். சென்னை போல மீண்டு(ம்) வருவோம். என்ன ஸ்டிக்கர் பாய்ஸ், விஜயகாந்த் பற்றி எல்லாம் சொல்லாமலே போறேனே என்கிறீர்களா? தேர்தல் வரட்டும்னு காத்திருக்கோம்.

2 comments:

  1. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
    இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா. உங்களுக்கும், அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

      Delete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..