Sunday, April 29, 2018

தேடல்

பொழுது போகாத ஒரு நாளில், திடீரென நீயா நானா - இளையராஜா ரேடியோ ரசிகர்கள் என்ற காணொளியைப் பார்க்க நேர்ந்தது. 80களில் இளையராஜா பற்றிய கலந்துரையாடல். 50 வயதுக்கு மேற்பட்ட பலர் கலந்து கொண்டு அவர்களது வாழ்வில் இளையாராஜா எப்படி தாக்கத்தை உண்டாக்கினார் என்பது பற்றிய விவாதம். நன்றாகவே இருந்தது. மொத்தமாக பார்த்ததில் தோன்றிய சில விஷயங்கள். 

பல பேருக்கு அவர்கள் சொன்ன பாடலுக்கு ராஜா இசை இல்லை என்பதே தெரியவில்லை. 80களின் இசை என்று தலைப்பு வைத்திருக்கலாம். 

கலந்து கொண்டவர்கள் அனைவருமே "கேட்டுண்டே இருக்கச்சே" வகையினர். அது மட்டுமில்லாமல் அனைவரும் படித்து, உயர் பதவியில் உள்ள மேல்குடி மக்கள். அந்த காலத்திலேயே "நாங்களே ரெக்கார்ட் பண்ணி பாடிந்திருந்தோம்" என்றனர். 

உண்மையில் ராஜாவின் பாதிப்பை மிகச்சரியாக சொன்னது சிறப்பு விருந்தினராக வந்த தாமிரா. கீழக்கரையில் பீடி சுற்றும் பெண்கள் எப்படி கேட்ட மாத்திரத்தில் அந்த பாடலை பாடுவார்கள் என்று சொன்னார்.

எல்லாவற்றையும் விட முக்கியம். தேடல். முன்பெல்லாம் ஒரு பாடலை நினைத்தவுடன் கேட்டு விட முடியாது. அதில் ஒருவர் சொன்னது போல ஒரு பாடல் ஒலிபரப்பாகும், அது என்ன படம் என்று தெரியாமல் தேடுவோம் என்றார். அது போன்ற பாடல்கள் நம் மனதை விட்டு மறக்காது. 

எனக்கெல்லாம் 2001ல் சென்னை வரும்வரை அந்த பிரச்சினை இருந்தது. மேல்நிலைப்பள்ளியில் படிக்கும்போது(?) தனி வகுப்பு எல்லாம் முடித்து விட்டு கடைசி பேருந்தில் ஊருக்கு செல்ல கிட்டத்தட்ட 30 நிமிடம் பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டியிருக்கும். அப்போது வரிசையாக உள்ள கேசட் கடைகளில் பாடல்கள் ஓடிக் கொண்டிருக்கும். எங்கே நமக்கு பிடித்த பாடல் ஓடுகிறதோ அங்கே சென்று கேட்க வேண்டியது. 


ஏதாவது பாடல் கேட்க நன்றாக இருந்து, என்ன படம் என்று தெரியவில்லை எனில், அவர்களிடமே கேட்டுக்கொள்வேன். பின், கையில் கொஞ்சம் காசும் (T60 கேசட் என்றால் 45 ரூபாய், மொத்தம் ஒரு மணி நேர பாடல்கள் கிடைக்கும். T90 என்றால் 60 ரூபாய், 90 நிமிடம்), 10 பாடல்களும் சேர்ந்த பின், அவற்றை பதிவு செய்து கொள்வேன். அல்லது, மொத்தமாக ஒரு கலவையான படங்கள் உள்ள கேசட். அது 25 அல்லது 30 ரூபாய் மட்டுமே. அப்போது எல்லோரும் படிப்பு படிப்பு என்று தொந்தரவு செய்து தொலைக்காட்சியை பார்க்கவே விட மாட்டார்கள். இது மட்டும்தான் ஒரே பொழுதுபோக்கு. 


ஒரு கலவையான படங்கள் உள்ள கேசட்


அதே போல ஒரு படம் பார்க்கவும், அதாவது பழைய படங்கள், நிறைய காத்திருக்க வேண்டும். அப்போது சன் மூவீஸ் என்றொரு சேனல் இருந்தது. 24 மணி நேரமும் படம்தான். நமக்கு படித்த படம் அதிகாலை 3 மணிக்கு கூட போடுவார்கள். வீட்டில் உதைப்பார்களே என்ற காரணத்தில், அதை பார்ப்பதில்லை.

ரஹ்மான் கூட இந்த தேடல் குறைகிறது என்றபொழுது அவர் தேடலை உருவாக்கினார். அதைப்பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். இன்றைய தலைமுறையிடம் அந்த தேடல் என்பதே கிடையாது. எதுவாயினும் உடனே கூகுளாண்டவர்.

25 வயதிற்கு மேல் உள்ளவர்களிடம் அந்த காலத்தில் ஒரு படம் பார்க்க திரையரங்கம் செல்வது எப்படி என்று கேட்டுப் பாருங்கள் தெரியும். இப்போதெல்லாம், படம் வந்த அடுத்த நிமிடம் மொபைலில் வந்து விடுகிறது. அடுத்தடுத்து, பழையதை மறந்து விட்டு, புதியதை தேடி ஓடுகிறார்கள். 

உங்களுடைய முதல் மொபைல் எதுவென்று உங்களுக்கு நினைவிருக்கும். ஆனால், அதன் பின் எத்தனை மாற்றி இருப்பீர்கள் என்று தெரியாது. தேடல் தொலைவதற்கு இன்னொரு காரணம் பெற்றோர். அதைப் பற்றி சொல்ல ஒரு பதிவு போதாது. என்ன சொல்ல. வழக்கம் போல பெரு மூச்சு விட்டு கொண்டு, "அந்த காலத்துல எல்லாம்" என்று ஒரு பதிவிட்டு விட்டு போக வேண்டியதுதான்.

No comments:

Post a Comment

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..